Friday, June 8, 2018

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி 


ஒரு விவசாயி தன் நிலத்துக்கு நீர் வேண்டும் என்று கிணறு தோண்டினான். ஒரு 25 அடி தோண்டியிருப்பான், நீர் வரவில்லை . சரி, இங்கே நீர் இல்லை போல் இருக்கிறது என்று முடிவு செய்து , தோண்டிய கிணற்றை மூடி விட்டு, மற்றொரு மூலையில் சென்று தோண்டத் தொடங்கினான். அங்கு ஒரு 25 அடி தோண்டிய பின், அங்கும் நீர் வரவில்லை என்று அந்தக் கிணற்றையும் மூடி விட்டு இன்னொரு மூலையில் தோண்டினான். இப்படி நாலு இடத்தில் தோண்டிய பின்னும் நீர் வரவில்லை.

அப்போது அங்கே ஒரு துறவி வந்தார். அவர் அந்த விவசாயியிடம் , "ஏனப்பா இவ்வளவு கவலையாக இருக்கிறாய் " என்று கேட்டார்.

அதற்கு அவன் "ஐயா, நீர் வேண்டி நாலு இடத்தில் கிணறு தோண்டினேன். ஒரு இடத்திலும் நீர் கிடைக்கவில்லை ...என்ன செய்யவது என்று தெரியவில்லை...அதனால் கவலையாக இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அந்த துறவி சிரித்துக் கொண்டே சொன்னார், நீ ஒரே இடத்தில் தோண்டி இருந்தால் அம்பது அல்லது அறுபது அடியில் நீர் கிடைத்திருக்கும். நீ நாலு இடத்தில் 100 அடி தோண்டியும் நீர் கிடைக்காததன் காரணம் நீ உன் முயற்சியை சிதற அடித்ததனால் " என்றார்.

நாமும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நாள் தேவாரம், ஒரு நாள் திருவாசகம், இன்னொரு நாள் கீதை, மற்றொரு நாள்  திவ்ய பிரபந்தம், அப்புறம் அதற்கு உரை, சொற்பொழிவு என்று மரம் தாவும்  குரங்காய் அலைந்து கொண்டிருக்கிறோம்.

அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்று பட்டினத்தடிகள் சொன்னது போல அலைந்து கொண்டு இருக்கிறோம்.

எதிலும் ஒரு நம்பிக்கை இல்லை. விடா முயற்சி இல்லை.


அபிராமி பட்டர் உருகுகிறார்.

"அபிராமி, உன் பெயரைச் சொன்ன ஒரு நிமிடத்தில் என் மனம் உருகி விட்டது. உன் பாதத்தையே என் மனம் பற்றிக் கொண்டு இருக்கிறது. நீ என்னை உன் வழியில் கொண்டு செல்ல அடிமையாக ஏற்றுக் கொண்டு விட்டாய்.  நீயே வந்து என்னை ஏற்றுக் கொண்டபின் , நான் எதற்கு மற்றவர் கருத்தை கேட்டு குழம்பப் போகிறேன். கேட்க மாட்டேன்.  உன்னைத்தான் அனைத்து தேவர்களும் போற்றுகிறார்கள். உனக்கு மேலே ஒரு கடவுள் இல்லை "

என்று பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்.

பாடல்

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பொருள்

பதத்தே = ஒரு வார்த்தையில்

உருகி = உருகி. மனம் உருகி

நின் பாதத்திலே = உன் திருவடிகளில்

மனம் பற்றி = மனம் பற்றி

உந்தன் = உன்னுடைய


இதத்தே = திருவுளப் பாடிய

ஒழுக = நான் வாழ

அடிமை கொண்டாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்

இனி யான் = இனிமேல் நான்

ஒருவர் = மற்றவர்

மதத்தே மதி மயங்கேன் = மாதங்களில் மதி மயங்க மாட்டேன்

அவர் போன வழியும் செல்லேன் = அவர் போகின்ற வழியில் செல்லவும் மாட்டேன்

முதல் தேவர் = மூல தேவர்கள்

மூவரும் = மும் மூர்த்திகள்

யாவரும் = அனைவரும்

போற்றும் = போற்றும்

முகிழ்நகையே = மலரும் சிரிப்பை உடையவளே


பாட்டு வேண்டாம், பூஜை வேண்டாம், ஒன்றும் வேண்டாம்..."அபிராமி" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்...மனம் அப்படியே உருகி விடுகிறது.  ஒரே ஒரு பதம்  போதும்.

மனம் உருகி ஓடி , அவள் பாதங்களில் சென்று அடைந்து விடுகிறது. நதி நீர் கடலை செண்டு அடைவதைப் போல.

ஒரே கடவுள் - அபிராமி.  அவ்வளவுதான். வேறு எங்கும் மனம் செல்லாமல் அவளிடமே  தஞ்சம் அடைந்து விட்டார்.

எவ்வளவு சுகம்.  தாயின் தோளில் தூங்கும் குழந்தையைப் போல...ஒரு கவலையும் இல்லை. அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை.

ஒரு மானிடத் தாயின் மேல் அவள் குழந்தைக்கு அவ்வளவு நம்பிக்கை.

அபிராமியிடம் விட்டு விட வேண்டும். மதத்ததைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.

எனக்கு என் அபிராமி. அவ்வளவுதான்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_85.html

1 comment:

  1. என்ன ஒரு உணர்ச்சி ததும்பும் பாடல்! மனதுக்குள் இனிக்க வைக்கிறது.

    ReplyDelete