Tuesday, September 25, 2018

திருக்குறள் - சிரிப்பும் மகிழ்ச்சியும்

திருக்குறள் - சிரிப்பும் மகிழ்ச்சியும் 


ஒரு நாளில் எத்தனை நிமிடம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் மகம் மலர்ந்து சிரிக்கிறீர்கள்? சிரிக்காவிட்டாலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்?

ஏன் நாள் முழுவதும் சந்தோஷமாக இல்லை ? எப்போதும் சிரித்த முகத்துடன் ஏன் இருக்க முடியவில்லை? நாம் மனதுக்குள் மகிழ்வதை யார் தடுக்க முடியும்? இருந்தும் நாம் எப்போதாவது சந்தோஷமாக இருக்கிறோம். பெரும்பாலும் சிரித்த முகத்துடன் இருப்பது இல்லை.

உங்களை விடுங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களில் எத்தனை பேர் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்? எத்தனை பேர் மகிழ்ச்சியை மனதில் தேக்கி இன்பமாக இருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லோருமே உங்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எப்போதாவது மகிழ்வது, எப்போதாவது சிரிப்பது என்று.

இந்த மகிழ்ச்சியையும், சிரிப்பையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பகைவன் யார் தெரியுமா ?

வேறு யாரும் அல்ல, நம் கோபம் தான்.

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற

பொருள்

நகையும் = முகத்தில் தோன்றும் புன்னகையும்

உவகையும் = மனதில் தோன்றும் சந்தோஷத்தையும்

கொல்லும் = கொல்லும்

சினத்தின் = சினத்தை விட

பகையும் = பகை

உளவோ பிற = வேறு ஏதாவது இருக்கிறதா ? (இல்லை என்பது பொருள்)

கோபம்தான் நம் புன்னகையையும், சந்தோஷத்தையும் கொல்கிறது.

அப்படியா, நான் அப்படி ஒன்றும் யார் மேலும் கோபப்  படுவதே இல்லையே. என் மனைவி/கணவனை கேட்டுப் பாருங்கள். சத்தம் போட்டு ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. இருந்தும் நான் சந்தோஷமாக இல்லையே. என்று சிலர் சொல்லலாம்.

கோபம் என்றால் தாம் தூம் என்று குதிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

சாலையில் போகிறோம், குண்டும் குழியுமாக இருக்கிறது. அரசாங்கத்தின் மேல் கோபம் வருகிறது.

சாலை ஒழுங்கை கடை பிடிக்காமல் குறுக்கும் நெடுக்கும் போகும் ஆட்டோக்காரர்களை  கண்டால் கடுப்பு வருகிறது.

சரியாக படிக்காத பிள்ளை, புரிந்து கொள்ளாத கணவன் / மனைவி, ஆட்டிப் படைக்கும்  மாமியார், ஊழல் நிறைந்த சமுதாயம், நமக்கு வர வேண்டிய வாய்ப்புகளை  தட்டிப் பறிக்கும் உடன் வேலை செய்பவர்கள், துரோகம், நிராகரிப்பு என்று பலப் பல காரணங்களுக்காக நாம் கோப படுகிறோம்.

பிள்ளைகள் சொன்னால் கேக்காது.

மாமியாரிடம் சொல்லவும் முடியாது.

கணவனுக்கு சொன்னால் பிடிக்காது.

மனைவியிடம் சொன்னால் அதில் ஒரு குற்றம் கண்டு பிடிப்பாள்.

அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால், பிடி வாரண்டு வரும்.

கோபத்தை மனதுக்குள்ளேயே போட்டு குமைகிறோம்.

சிந்தியுங்கள்.

கோபம் என்றால் சத்தம் போடுவது, சண்டை போடுவது மட்டும் அல்ல. கையாலாகாவிட்டாலும்  கோபம் வரும்.

அந்த கோபம் தான், நம் மகிழ்ச்சியை, புன்னகையை நம்மிடம் இருந்து பறித்துப் போட்டு விடுகிறது.

கோபத்தை விடுங்கள். மனம் அமைதியாகும். அமைதியான மனதில் இன்பம் , ஆனந்தம், புன்னகை எல்லாம் பிறக்கும்.

பிறக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_25.html



Friday, September 21, 2018

அறப்பளீசுரம் - எது அழகு

அறப்பளீசுரம் - எது அழகு 


ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு,  தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா?  பொருள் இல்லாமல் ஏழையாக இருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? கை கால் போய் முடமாக இருப்பது ஒரு அழகா ? ஒரு செயலை செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தால் அது அழகா ?


அழகுதான். அதிலும் ஒரு அழகு இருக்கு என்கிறது அறப்பளீசுரம்.


யார் செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது அழகு.


வகுப்பில், ஆசிரியர் நம்மைத் திட்டுகிறார்..."மண்டு மண்டு ...எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன்...இன்னும் உன் மர மண்டையில் ஏற வில்லையா...சரி இப்படி படி " என்று திட்டி சொல்லித் தருகிறார். வீட்டில் பெற்றோர் கண்டிக்கிறார்கள். இவர்களிடம் திட்டு வாங்குவது அவமானமா? இல்லை. பெரியவர்கள் பாராட்டினாலும், திட்டினாலும் அது ஒரு அழகுதான்.


கட்டிய மனைவி அன்போடு ஆசையோடு வந்து அணைத்தால் அது அசிங்கமா? சுகம்தானே ?


தன்னிடம் இருந்த செல்வங்களை மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கி ஒருவன் ஏழையாக போனால் அது பெருமை இல்லையா?


நாட்டை காக்க போராடி ஒருவன் கையையோ காலையோ இழந்து விட்டால், அவனை முடவன் என்றா ஊர் கேலி செய்யும்? அவனை பெருமையோடு பார்க்கும் அல்லவா?


பெரிய யானை மேல் ஏறும் போது தவறி விழுந்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதுவே ஒரு நாயின் மேல் ஏற முயன்று தவறி விழுந்தால், ஊரே கை கொட்டி சிரிக்கும் அல்லவா ?


செயலிலோ, செயலின் வெளிப்பாட்டிலோ அசிங்கம் இல்லை. யார் , எதற்காக செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது உயர்வும் தாழ்வும்.


தோல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை. இதில் தோல்வி அடைந்தோம் என்பதில் இருக்கிறது அது உயர்வா தாழ்வா என்பது.


பாடல்



வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓர்ஊனம் மானம்எது ஆகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும்அது ஓர ழகதாம்!
  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

பொருள்

வெகுமானம் ஆகிலும்  = பாராட்டு ஆனாலும்

அவமானம் ஆகிலும் = அவமானம் ஆனாலும்

மேன்மையோர் செய்யில் அழகாம்! = மேன்மை உடைய பெரியவர்கள் செய்தால் , அல்லது தந்தால் அது அழகு


விரகமே ஆகிலும்  = காம வயப்பட்டாலும்

சரசமே ஆகிலும் = சரசம் செய்ய வந்தாலும்

விழைமங்கை செய்யில் அழகாம்! = நமக்கு உரிய பெண் (மனைவி) செய்தால் அது அழகு.

தகுதாழ்வு = தகுதியான தாழ்வு (என்ன ஒரு வார்த்தை)

வாழ்வு = வாழக்கை

வெகு தருமங்க ளைச்செய்து = பெரிய தருமங்களைச் செய்து

சாரிலோ  = வந்தாலோ

பேர ழகதாம்! = அந்த ஏழ்மையும் ஒரு பெரிய அழகு

சரீரத்தில் ஓர்ஊனம் = உடம்பில் ஒரு ஊனம்

மானம் = அவமானம்

எது ஆகிலும் = எது என்றாலும்

சமர் செய்து வரில் அழகதாம்? = நாட்டை காக்க எதிரியோடு போராடி பெற்றால் அதுவும் ஒரு அழகுதான்

நகம் மேவு = மலை போன்ற

மதகரியில் = மதம் கொண்ட யானையின் மேல்

ஏறினும் தவறினும் = ஏறினாலும், தவறி ஏறும் போது தவறி விழுந்தாலும்

நாளும்அது ஓர ழகதாம்! = அதுவும் ஒரு அழகுதான்

நாய்மீதில் = நாயின் மேல்

ஏறினும் = ஏறினாலும்

வீழினும் = வீழ்ந்தாலும்

கண்டபேர்  = காண்போர்

நகைசெய்தழ கன்றென் பர்காண்! = கை கொட்டிச் சிரிப்பார்கள்

அகம்ஆயும் = தன்னை ஆராய்ச்சி செய்யும்

 நற்றவர்க் கருள் புரியும் = நல்லவர்களுக்கு அருள் புரியும்

ஐயனே! = ஐயனே

ஆதியே!  = மூலப் பொருளே

அருமை மதவேள் = அருமையான மதவேள் (அரசன்)

அனுதினமும் = தினமும்

மனதில்நினை = மனதில் வழிபடும்

தருசதுர கிரிவளர் = தருகின்ற சதுர கிரி என்ற மலையில் உறையும்

அறப்பளீ சுரதே வனே! = அறப்பளீசுர தேவனே

சின்ன காரியத்தை எடுத்து, அதில் வெற்றி பெற்றாலும் ஊரார் நகைப்பார்கள். பெரிய காரியத்தில் தோல்வி அடைந்தாலும் ஊர் பாராட்டும்.


விளைவுகள் மட்டுமே உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்வது இல்லை. யார் செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உயர்வும் தாழ்வும் அமைகிறது.


இந்தப் பட்டியல் ஒரு சில உதாரணம் மட்டுமே. அது சொல்ல வரும் கருத்தை மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_21.html









Thursday, September 20, 2018

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார்

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார் 


சில பாடல்களை ஒவ்வொரு தரம் படிக்கும் போதும் புது புது அர்த்தம் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பாடல் கம்ப இராமாயணத்தின் முதல் பாடல். கடவுள் வணக்கம்.

பாடல்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

பொருள்

உலகம் யாவையும் = அனைத்து உலகங்களையும்

தாம் = தான்

உளவாக்கலும் = உள்ளத்தால் ஆக்கி

நிலைபெறுத்தலும் = அவற்றை காத்து

நீக்கலும் = பின் அவற்றை நீக்கி (அழித்து)

நீங்கலா = இடை விடாத

அலகு இலா  = அளவற்ற

விளையாட்டு உடையார் = விளையாட்டை கொண்டவர்

அவர் தலைவர்; = அவர்தான் தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே. = நாங்கள் சரண் அடைந்தோம்


கோபம் எப்படி வருகிறது ? நமக்கு தேவையான ஒன்றை யாராவது அல்லது ஏதாவது  தடை செய்தால், நமக்கு அதன் மேல் அல்லது அவர் மேல் கோபம் வருகிறது.

அப்பாவிடம் பைக் வேண்டும் என்று கேட்டு அவர் வாங்கித் தர மறுத்தால், அவர் மேல் கோபம் வருகிறது.

நகை வேண்டும், புடவை வேண்டும், ஒரு நல்ல வீடு என்று கேட்டு கணவன் வாங்கித் தர மறுத்தால் கணவன் மேல் கோபம் வருகிறது.

பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று நாம் ஆசைப் படும்போது மேலதிகாரி தரவில்லை என்றால் , அவர் மேல் கோபம் வருகிறது.

எனவே, அனைத்து கோபத்துக்கும் காரணம் ஆசை. ஆசை மறுக்கப் படும்போது கோபம் வருகிறது.

அப்படி என்றால் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆசைப் படக் கூடாது. சரி தானே?

ஆம். சரிதான்..ஆனால் ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? ஆசைப் பட வேண்டும், அதற்காக முயற்சி செய்ய வேண்டும், உழைக்க வேண்டும்....அது தானே வாழ்க்கை. ஆசை அற்ற வாழ்க்கை உப்பு சப்பு அற்ற ஒரு வறண்ட வாழ்க்கையாக அல்லவா இருக்கும் ?

ஆசைப் பட வேண்டும். ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சி. வேறொன்றை தேடுவோம் என்று ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆசைப் பட்டது கிடைக்கவில்லை என்றால் மனம் ஒடிந்து, விரக்தி அடைந்து , சோர்ந்து இருந்து விடக் கூடாது. அது பலவிதமான மன நோய்க்கு வழி வகுக்கும்.

கம்பர் சொல்கிறார் "அலகிலா விளையாட்டு உடையான்".

ஆண்டவனுக்கு எல்லாம் விளையாட்டுதான். ஆக்குதல், காத்தல், அழித்தல் எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

ஆசைப் படுகிறீர்கள். கிடைக்கவில்லை, சந்தோஷம்.

கிடைத்தது. சநதோஷம்.

கிடைத்தது காணாமல் போய் விட்டது. சந்தோஷம்

விளையாட்டு என்றால் என்ன ? உண்மை போல இருக்கும். பந்து போடுவதும், அடிப்பதும், ஓடுவதும் எல்லாம் ஏதோ பெரிய முக்கியமான வேலை போல இருக்கும். ஒன்றும் கிடையாது. வெற்றி தோல்வி இரண்டையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்டத்தில் தோற்ற யாரும், உலகே இருண்டு விட்டது, முடிந்து விட்டது என்று இருப்பது இல்லை.  இன்னும் கொஞ்சம் பயிற்சி  எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் விளையாடுவார்கள்.

அது போல, வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல்வி வந்தால், தூசியை தட்டி விடுவது மாதிரி தட்டி விட்டு விட்டு நாளை மீண்டும்  களத்துக்கு வந்து விட வேண்டும்.

எல்லாமே விளையாட்டுதான் இங்கே.


உறவுகள், வேலை, நட்பு, சுற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, எல்லாமே விளையாட்டுதான்.

சந்தோஷமாக விளையாடுங்கள். இன்று தோல்வியா? பரவாயில்லை.  நாளை இன்னும் சிறப்பாக விளையாடலாம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து செய்யும் வேலைகளை விளையாட்டாக செய்ய முடியும் என்றால், நாம் செய்யும் வேலைகள் என்ன அதைவிட பெரியதா?

Seriousness is a sickness. 

கடு சிடு என்று முகத்தை வைத்து கொண்டு எப்போதும் சீரியசாக இருக்காதீர்கள். தளர விடுங்கள். மனமும், உடலும் தளர்ந்து இருக்கட்டும்.


Wednesday, September 19, 2018

திருக்குறள் - மரணம் பற்றிய பெருமை

திருக்குறள் - மரணம் பற்றிய பெருமை 


மரண பயம் இல்லாதவர் யார்? எவ்வளவு படித்தாலும், எவ்வளவு சிந்தித்தாலும் மரணம் என்னவோ பயமுறுத்தத்தான் செய்கிறது. அதன் வலியும் வேதனையும் போவது இல்லை.

ஏன் இந்த பயம் ?

மரணம் பயம் தானே ? மரணம் இல்லாமல் வாழத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள்? சரி, ஒரு ஆயிரம் ஆண்டு வாழுகிறாயா என்று யாரிடமாவது கேட்டால் என்ன சொல்லுவார்கள்? ஐயோ சாமி அவ்வளவு எல்லாம் வேண்டாம் என்று சொல்லுவார்கள். சரி ஒரு ஐநூறு ஆண்டு ? அதுவும் வேண்டாம், சரி ஒரு இருநூறு ஆண்டு ?

நீண்ட ஆயுளும் பயமாக இருக்கிறது அல்லவா ?

ஒரு அளவுக்கு மேல் முதுமை ஒரு சுமை. காது கேட்காது, கண் தெரியாது, முட்டி வலிக்கும், நடக்க முடியாது, நினைவு தவறும், நினைத்ததை சாப்பிட முடியாது...அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு மரணம் எவ்வளவோ மேல் அல்லவா ?

மரணம் பற்றிய இன்னொரு கோணம் இருக்கிறது. அதை வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் சொல்கிறார்...

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு



பொருள்


நெருநல் = நேற்று

உளனொருவன் = இருந்த ஒருவன்

இன்றில்லை = இன்று இல்லை

என்னும் = என்ற

பெருமை = பெருமை

உடைத்து = உடையது

இவ் வுலகு = இந்த உலகம்

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

சரி, இது என்ன பெரிய குறள். இது தான் எல்லோருக்கும் தெரியுமே. இதில் என்ன பெரிய கோணம் இருக்கிறது ?

வள்ளுவர் சொல்கிறார் என்றால் அதில் என்னவோ இருக்கும்.

"பெருமை உடைத்து" ....நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதில் இந்த உலகுக்கு என்ன பெரிய பெருமை ? அது சோகம் தானே.  நேத்து இருந்தாரு இன்னைக்கு பாவம் செத்து போய்ட்டாருனு சொன்னா அது பெருமையா ? ஏன்  அந்த சொல்லை போடுகிறார் வள்ளுவர் ? காரணம் இல்லாமல் போடுவாரா ?

மனிதன் மாறும் தன்மை கொண்டவன். ஒருவன் எப்போதுமே நல்லவனாக இருப்பது இல்லை. அதே போல் ஒருவன் எப்போதுமே தீயவனாக இருப்பது இல்லை.

எவ்வளவு மோசமானவனும் ஒரு நாள் திருந்தி நல்லவனாக மாறலாம்.

அதே போல் உலகம் போற்றும் உத்தமனும் ஒரு நாள் ஏதாவது தவறு செய்யலாம்.

எனவே யாரையும் இவன் நல்லவன், கெட்டவன் என்று முத்திரை குத்தாதீர்கள். நேற்று வரை அவன் அப்படி இருந்தான். இன்று அப்படி அல்ல. மாறி இருப்பான்.

அப்படி மாறலாம் என்பது தான் இந்த உலகின் பெருமை.

எல்லோருக்கும் மாறும் வாய்ப்பு இருக்கிறது.

நேற்று வரை நீங்கள் யாரோ.

சரியாக படிக்காமல் இருந்திருக்கலாம், கடினமாக உழைக்காமல் இருந்து இருக்கலாம், குடும்பத்தை சரியாக காப்பாற்றாமல் இருந்து இருக்கலாம், மற்றவர்கள் மேல் அன்பு  செலுத்தாமல் இருந்து இருக்கலாம், குடி, புகை, என்று தவறான வழியில் சென்று இருக்கலாம்...

இன்று நீங்கள் மாறலாம்...இன்றில் இருந்து புதிய மனிதராக மாறலாம்.

நேற்று இருந்தவன் இறந்தே போய் விட்டான். இன்று புதிய மனிதராய் நீங்கள் ஆகி விடலாம்.

மாற்றம் என்றால், என்னவோ இன்று புகை பிடிக்க மாட்டேன், என்று உடற் பயிற்சி செய்வேன், என்று செய்து விட்டு, நாலு நாளில் பழையபடி மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்தால் அது மாற்றம் இல்லை.

பழைய ஆள் "இன்று இல்லை"  என்று மாற வேண்டும். அந்த பழக்கம் உள்ள ஆள் நேற்று வரை இருந்தான், இன்று அவன் இல்லை. இல்லை என்றால் என்ன அர்த்தம். காணாமல் போய் விடவில்லை. காணாமல் போய் விட்டால், திருப்பி வந்து விடலாம். இறந்து போய் விட்டால் திருப்பி வரவே முடியாது அல்லவா ?

அப்படி சொல்கிறார் வள்ளுவர். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

இப்படி கெட்டவன் , நல்லவனாக மாறுவது மட்டும் அல்ல, நல்லவனும் கெட்டவனாக மாறலாம். பெரிய சாமியார், ஊரே அவரை வணங்குகிறது...ஒரு நாள் அவரின் தவறான செய்கை பற்றி ஒரு தகவல் வருகிறது...ஆதாரங்களுடன். அவரா அப்படி செய்தார் என்று நாம் திகைக்கிறோம்.  நேற்று இருந்த சாமியார் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

மரணம் என்பது என்ன, மாற்றம் தானே.

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அது இயற்கை. அது தான் அதன் பெருமை. மாற்றமே இல்லாத ஒன்று எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சகிக்க முடியாது.

இதுவரை நீங்கள் எப்படியோ. இன்றில் இருந்து ஒரு புதிய மனிதராய் நீங்கள்  மாறலாம்.

இப்படி நாளும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருந்தால், மரணம் ஒரு பெரிய பயமாய்  இருக்காது. இறந்த காலம் அப்படியே இருக்க வேண்டும் , ஒரு மாற்றமும் நிகழக் கூடாது என்று நீங்கள் ஆழமாக விரும்பினால், மரணம் பெரிய பயமாகத்தான் இருக்கும். நாளும் பழையவற்றில் இருந்து நீங்கள் இறந்து புதியதாய் பிறந்தால்,  இந்த உடல் இறப்பது பெரிய விஷயமாய் தெரியாது.

மாறுங்கள். மாற்றங்களை அனுமதியுங்கள். பழையவற்றை விடுங்கள். குப்பையில் பெருமை இல்லை. இன்று புதியதாய் பிறந்தோம் என்று பிறப்பெடுங்கள்.

வாழ்க்கை இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_19.html







Thursday, September 13, 2018

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்

தாயுமானவர் பாடல் - இரவல் ஞானம்


நாம் பேசும் வார்த்தைகளை உற்று நோக்கினால் தெரியும்...நாம் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நாம் சொன்னதை மட்டும் அல்ல, மற்றவர்கள் சொன்னதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கீதையில் அப்படி சொல்லி இருக்கிறது, தேவாரத்தில் இப்படி சொல்லி இருக்கிறது, அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று மேற் கோள் காட்டிக் கொண்டே இருக்கிறோம்.

மற்றவர்கள் சொல்லாத எதையாவது நாம் சொல்லி இருக்கிறோமா ? நாமே அறிந்த உண்மை என்று ஏதாவது இருக்கிறதா ?

எல்லாம் இரவல் ஞானம்.

பாடல்

சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே.

பொருள்

சொன்னத்தைச் = ஏற்கனவே சொன்னதை

சொல்வதல்லாற் = சொல்வது அல்லால். சொல்வதைத் தவிர

சொல்லறவென் = சொல் + அற + என் = சொல் அறவே இல்லாமல்

சொல்லிறுதிக் = இறுதிச் சொல்லுக்கு

கென்னத்தைச் சொல்வேன்  = எதைச் சொல்வேன்

எளியேன் = நான் எளிமையானவன்

பராபரமே = உயர்ந்த கடவுளே

பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு கணம் யோசியுங்கள். நீங்கள் சொல்லப் போவது  புதிதான ஒன்றா ? நீங்கள் கண்டு பிடித்ததா ? அனுபவத்தில் கண்ட உண்மையா ? அல்லது யாராவது , எப்போவாவது சொன்னதா ?

சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காமல் சற்று மௌனமாக இருந்து பாருங்கள்.

சொல் நின்றால், எண்ண ஓட்டம் நிற்கும். மன ஓட்டம் நிற்கும்.

சொல்லை துறவுங்கள். மனதுக்குள் எப்போதும் ஓடும் எண்ண ஓட்டம் நிற்கும். மனம் ஓரிடத்தில் நிற்கும்.  மனம் வசப்படும்.

மௌனம் ஞான வரம்பு என்பது ஒளவை வாக்கு.

மௌனம் என்றால் வாய் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல. மனமும் பேசாமல் இருக்க வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_13.html

Sunday, September 9, 2018

தாயுமானவர் பாடல் - மன நிலை

தாயுமானவர் பாடல் - மன நிலை 


நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம்....செய்யத் தொடங்குவோம்...ஒரு whatsapp மெசேஜ் வரும், டிவி யில் நல்ல பாட்டோ, படமோ வரும், இல்லை என்றால் சீரியல், ஒரு போன் கால், இப்படி ஏதாவது வரும். நாமும் அதுதான் சாக்கு என்று தொடங்கிய வேலையை விட்டு விட்டு மற்றவற்றின் பின் சென்று விடுவோம்.

நல்ல புத்தகங்களை படிப்பது, நல்லவர்கள் சொல்வதை கேட்பது , அவர்களை சென்று பார்ப்பது எல்லாம் "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் " என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

தாயுமானவர் சொல்கிறார், நல்லவர்கள் எதிரில் வந்தால், ஒளிந்து கொள்வேன் என்று. எதுக்கு வம்பு, அவர் ஏதாவது சொல்வார், நமக்கு பிடிக்காது, என்று ஒளிந்து கொள்வாராம்.

பிள்ளைகளுக்கு எப்படி பெற்றோர் சொல்வது பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்கிறார்களோ, எப்படி ஆசிரியர் சொல்வது பிடிக்காமல் மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்களோ அப்படி....


பாடல்



இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
    இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
    கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ.


பொருள்


இரக்கமொடு = இரக்கத்தோடு

பொறை = பொறுமை

ஈதல் = மற்றவர்களுக்கு கொடுத்தல்

அறிவா சாரம் = அறிவு , ஆசாரம் (ஒழுக்கம்)

இல்லேன்நான் = இல்லேன் நான்

நல்லோர்கள் = நல்லவர்கள்

ஈட்டங் கண்டால் = வரவு கண்டால்


கரக்குமியல் புடையேன் = மறைந்து கொள்ளும் இயல்பு உடையவன் நான்

பாழ் நெஞ்சம் = பாழான என் நெஞ்சம்

எந்தாய் = என் தந்தை போன்றவனே

கருந்தாதோ  = கரிய தாதோ (இரும்பு)

வல்லுருக்கோ = வலிமையான உருக்கு உலோகமோ

கரிய கல்லோ = கரிய கல்லோ


நல்லது எது கெட்டது எது என்று தெரியும். இருந்தும் செய்வது கிடையாது. ஏன் ?

அவை மனதில் படிவது இல்லை.

மனம் இளகினால் அல்லவா அதில் எதுவும் பதியும்.

கல்லிலும், இரும்பிலும் என்ன பதியும்?

நெஞ்ச கனகல்லு நெகிழ்ந்து உருக வேண்டும்...

அதற்கு என்ன செய்ய வேண்டும்...நல்லவர்களை கண்டால் ஓடி ஒளியக் கூடாது.

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும்

விவேக சிந்தாமணி - உறவும் சுற்றமும் 


நாம் தனியாக வாழ முடியாது. உறவும், சுற்றமும், நட்பும், வேண்டும். இந்த உறவும், சுற்றமும், நட்பும் ஒரு பலம். இவை வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பவை. வாழுவுக்கு வளம் சேர்ப்பவை.

எப்படி இந்த உறவையும், நட்பையும் பெறுவது. எப்படி சிலருக்கு மட்டும் இது நன்றாக வாய்க்கிறது. சிலருக்கு  அவ்வளவாக வாய்ப்பதில்லை. ஏன் ?

ஒரு பெரிய ஏரி. நீர் நிறைந்து இருக்கிறது. கரை எல்லாம் பசுமை. மரங்கள் உயர்ந்து செழிப்பாக வளர்ந்து இருக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த மரங்களில் வந்து தங்கி இருக்கின்றன. கூடு கட்டி , குஞ்சு பொரித்து, இன்பமாக வாழ்கின்றன.

கோடை வந்தது. நீர் எல்லாம் வற்றிப் போனது. மரங்கள் இலைகளை உதிர்த்து கிளை விரல் நீட்டி வானம் பார்த்து நின்றன.

அங்கிருந்த பறவைகள் எல்லாம் வேறிடம் தேடிப் போய் விட்டன.

உறவும், நட்பும், சுற்றமும் அப்படித்தான். பறவைகளை வா வா என்று என்று அந்த ஏரி அழைக்கவில்லை. நீர் வற்றிய பின், போ போ என்றும் சொல்லவில்லை.

உங்களிடம் செல்வமும், இனிய சொல்லும், இருந்தால் நட்பும், சுற்றமும் தானே தேடி வரும். இல்லை என்றால், அவை தானே போய் விடும்.


பாடல்

ஏரிநீர் நிறைந்த போது அங்கு இருந்தன பட்சி எல்லாம்,
மாரிநீர் மறுத்த போது வந்து அதில் இருப்பது உண்டோ?
பாரினை ஆளும் வேந்தன் பட்சமும் மறந்தபோதே
யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே.       


பொருள்

ஏரிநீர் நிறைந்த போது  = ஏரியில் நீர் நிறைந்து இருக்கும் போது

அங்கு இருந்தன பட்சி எல்லாம் = அங்கு பறவைகள் எல்லாம் வந்து இருந்தன

மாரிநீர் மறுத்த போது = மழை நீர் பெய்வது நின்ற போது

வந்து அதில் இருப்பது உண்டோ? = அந்தப் பறவைகள் அங்கு இருக்குமா ? (இருக்காது)

பாரினை ஆளும் வேந்தன் = உலகை ஆளும் அரசனாக இருந்தாலும்

பட்சமும் = அன்பும்

மறந்தபோதே = இல்லாது போனால்

யாருமே நிலையில்லாமல் அவரவர் ஏகுவாரே = அவனோடு இருக்காமல் எல்லோரும் போய் விடுவார்கள்

அரசன் கதி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை.

நல்ல குணம், செல்வம், அன்பு, இனிய சொல்லால் உங்களை நிறைத்து வையுங்கள்.

உறவும் நட்பும் தானே உங்களைத் தேடி வரும்.