Monday, April 29, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


பொருள் 

ஏற்றினை = ஏறு போல கம்பீரமானவனை 

இமயத்து = இமய மலையில் 

ளெம் மீசனை = எம் ஈசனை 

இம்மையை = இப்பிறவிக்கு 

மறுமைக்கு = மறு பிறவிக்கு 

மருந்தினை = மருந்து போன்றவனை 

ஆற்றலை = சக்தி வடிவானவனை 

அண்டத் தற்புறத் துய்த்திடும் = அண்டத்து அப்புறம் உயித்திடும் 

ஐ யனைக் = ஐயனை 

கையிலாழி யொன்றேந்திய = கையில் ஆழி ஒன்று ஏந்திய 

கூற்றினை = தீயவர்களுக்கு எமன் போன்றவனை 

குருமாமணிக் குன்றினை = நீல மாணிக்க மணி போன்ற குன்றினை 

நின்றவூர் = திரு நின்ற ஊரில் 

நின்ற = நின்ற 

நித்திலத் தொத்தினை = முத்தை போன்றவனை (நித்திலம் = முத்து) 

காற்றினைப் = காற்றினை 

புணலைச் = நீரை 

சென்று = சென்று 

நாடிக் = நாடி 

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் = திரு கண்ணமை என்ற ஊரில் கண்டு கொண்டேனே 

திருமால் இருந்த ஊர் திருநின்றவூர் என்கிறார். கண்டது திருக்கண்ணமையில் என்கிறார். என்ன குழப்பம் இது ?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் வழியாகச் சென்றாராம். சென்றவர், இந்த கோவிலை தரிசனம் செய்து விட்டு, மங்களாசாசனம் செய்யமால் சென்று விட்டாராம்.

அப்போது, இலக்குமி "சுவாமி, எல்லா ஊரிலும் மங்களாசாசனம் செய்யும்  திருமங்கை ஆழ்வார் நம்ம ஊரை மட்டும் விட்டு விட்டாரே, அவரிடம் சென்று ஒரு பாசுரம் வாங்கி வாருங்கள்" என்று சொன்னாளாம்.

"அதுவும் சரிதான். எப்படி இந்த ஊரை மட்டும் விட்டு விட முடியும். இப்பவே போய்  வாங்கி வருகிறேன் " என்று சுவாமி கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருமல்லை என்ற மாமல்லபுரத்துக்கு சென்று விட்டாராம். பெருமாள் விடவில்லை. மாமல்லபுரம் வரை தொடர்ந்து சென்று பாசுரம் வாங்கி வந்துவிட்டார்.

அந்தப் பாசுரம் ...

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
          நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
     காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
          கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே

இப்போது கூட, மனைவிமார்கள் கணவனிடம் ஏதாவது வாங்கி வரும் படி சொல்லுவார்கள். சொல்லும் போது முழுதாக சொல்லுவது கிடையாது. அரைகுறையாக சொல்லிவிட வேண்டியது. கணவன் வாங்கி வந்த பின், "அய்ய , இதையா வாங்கிட்டு வந்தீங்க...போய் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி திருப்பி அனுப்புவார்கள்.

பெருமாள், ஒரு பாசுரம் வாங்கி வந்து, இலக்குமியிடம் காட்டினார். உடனே இலக்குமி "என்ன எல்லா ஊருக்கும் பத்து பாட்டு பாடுகிறார். நமக்கு மட்டும் ஒரு பாட்டுத்தானா? போய்  இன்னொரு பாசுரம் வாங்கிட்டு வாங்க " என்று அனுப்பிவிட்டாள்.

வேற வழியில்லை. பெருமாள் மறுபடியும் கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணமை என்ற ஊருக்கு சென்று விட்டார். அங்கு வரை போய், பாடல் பெற்று வந்தாராம் பெருமாள்.

அந்தப் பாடல் தான் மேலே இருக்கும் "ஏற்றினை" என்று ஆரம்பிக்கும் மேலே சொன்ன பாடல்.

பக்தன் வாயால் பாடல் வேண்டும் என்பதால் ஆண்டவனுக்கு அவ்வளவு விருப்பம்.

இறைவனே வந்து எனக்கு ஒரு பாசுரம் கொடு என்று ஒன்றுக்கு இரண்டாக கேட்டு வாங்கிப் போன இடம் இது.


ஒரு முறை, இலக்குமி ஏதோ ஒரு காரணத்துக்காக சமுத்திர இராஜனிடம் கோபித்துக் கொண்டு பாற் கடலை விட்டு இங்கே வந்து விட்டாளாம்.

திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் அதற்கு "திரு நின்ற ஊர்" என்று பெயர் வந்தது.

சமுத்திர இராஜன் எவ்வளவோ சொல்லியும் தேவி சமாதானம் ஆகவில்லை.

கடைசியில், " நீ என்னை பெற்ற தாய் அல்லவா" என்று சொல்ல, தேவிக்கு மனம் குளிர்ந்து விட்டது. எந்தத் தாய்க்குத் தான் பிள்ளை மேல் தீராத கோபம் வரும்.

சமுத்திர இராஜன் "என்னை பெற்ற தாய்" என்று சொன்னதால், அம்பாளுக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.


இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தினை என்கிறார் திருமங்கை.

இந்த பிறவி இருக்கிறதே, அது ஒரு பிணி.

நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணம் ஆகிவிடும். பிணி அப்படி அல்ல.

உதாரணமாக பசி பிணி என்று சொல்லுவார்கள். எத்தனை உணவு சாப்பிட்டாலும், நாலு அஞ்சு மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும். அதுக்கு மருந்தே கிடையாது.

இந்தப் பிறவி இருக்கிறதே. அதுக்கும் மருந்தே கிடையாது. மருந்து கிடையாது என்றால் , கடையில், வைத்தியரிடம் கிடையாது.

ஆண்டவன் ஒருவன் தான் பிறவி நோய்க்கு மருந்து.

இராமாயணத்தில், இராமனையும் இலக்குவனையும் கண்ட அனுமன் சொல்லுவான், இவர்கள் "அரு மருந்து" என்று.

தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள்.

என்பது கம்ப வாக்கு.



அடுத்த முறை சென்னைப் பக்கம் போனால், பூந்தமல்லிக்கு பக்கத்தில் தான் இருக்கிறது இந்த இடம். ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_29.html

Saturday, April 27, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


தொடரும்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_27.html

Friday, April 26, 2019

திருக்குறள் - மெல்ல நகும்

திருக்குறள் - மெல்ல நகும் 



திருக்குறள் என்றால் ஏதோ எப்பப் பார்த்தாலும் அறிவுரை சொல்லும் நூல் என்று நினைக்கக் கூடாது. காதலை, வள்ளுவரைப் போல மென்மையாக, இனிமையாகச் சொன்னவர் இன்னொருவர் இல்லை.

காதல் பற்றி சொல்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. கொஞ்சம் பிசகினாலும் விரசமாகிவிடும். ஆண் பெண் நெருக்கத்தை மென்மையாக, இனிமையாகச் சொல்ல வேண்டும்.

காமத்துப் பாலை ஒரு தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு தகப்பனும் மகளும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு இடத்தில் கூட ஒரு இம்மி கூட தடம் மாறாமல் இருக்கும்.

உலக அறத்தை சொன்ன வள்ளுவரா இப்படியும் எழுதி இருக்கிறார் என்று வியக்கவைக்கும் பகுதி.

அதில் , குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள்.

காதலன் சொல்கிறான், "நான் அவளைப் பார்க்கும் போது, நாணத்தால் தலை குனிந்து தன் நிலத்தைப்  பார்ப்பாள். நான் அவளை பார்க்க்காதபோது  என்னைப் பார்த்து மெல்ல புன்னகை பூப்பாள்"



பாடல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும் 


பொருள்

யான்நோக்கும் காலை  = நான் அவளை பார்க்கும் போது

நிலன்நோக்கும் = நிலத்தைப் பார்ப்பாள்

நோக்காக்கால் = நான் அவளை பார்க்காத போது

தான்நோக்கி = அவள் என்னை நோக்கி

மெல்ல நகும் = மெல்ல நகும்

இதில் என்ன அப்படி ஒரு romance இருக்கிறது என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இந்த குறளில் ஒரு பிழை இருப்பது போலத் தெரிகிறது அல்லவா ?

நான் அவளை பார்க்கும் போது அவள் நிலத்தைப் பார்ப்பாள். அது சரி.

நான் அவளை பார்க்காத போது, அவள் என்னை பார்த்து, புன்முறுவல் செய்வாள்...என்று சொல்கிற போது எங்கேயோ இடிக்கிறதே.

நான் அவளைப் பார்க்காத போது, அவள் என்னை பார்த்தது எனக்கு எப்படி தெரியும்?

அதுவம் அவள் சிரித்தாள் என்பது எப்படி தெரியும் ?

வள்ளுவர் தவறி சொல்லி விட்டாரோ?

இல்லை.

அது ஒரு கல்லூரி வகுப்பறை என்று வைத்துக் கொள்வோம்.

அங்கே பையன்களும் பெண்களும் படிக்கிறார்கள்.

அவனுக்கு அவள் மேல் காதல். அவளுக்கும் தான். இருந்தும் இருவரும் வாய் விட்டு சொல்லிக் கொள்ளவில்லை. அப்பப்ப பேசிக் கொள்வார்கள். பட்டும் படாமல்  இருக்கும் அந்தப் பேச்சு.

இருந்தும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வகுப்பு நடக்கும் போது அவன் அவளை மெல்ல திரும்பிப் பார்ப்பான். அவள் அவனை பார்ப்பதே இல்லை. அவள் உண்டு, அவள் பாடம் உண்டு என்று இருப்பாள்.

அவனுக்கான மனதுக்குள் ஏக்கம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம்...ஒரு நாளாவது  தன்னை திரும்பிப் பார்க்க மாட்டாளா என்று ஏங்குவான்.

அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அவன் வகுப்பை கவனித்துக் கொண்டு இருந்தான். எதேச்சையாக அவள் பக்கம் திரும்பினான்.

அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே என்று அவளுக்குள் நாணம் ஒரு பக்கம். "சே...நான் பார்ப்பதை அவன் பார்த்து விட்டானே..." என்று வெட்கம் ஒரு பக்கம். நான் அவனை விரும்புகிறேன் என்றும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என்று ஒரு காதல் ஒரு பக்கம். இத்தனையும் மனதில் அலை மோதுகிறது அவளுக்கு.

தலையை குனிந்து கொண்டு லேசாக சிரிக்கிறாள். புன் முறுவல் பூத்தாள் என்கிறார் பரிமேல் அழகர்.

தான் அவனை இரசிப்பதை அவன் அறிந்து கொண்டான் என்றவுடன் அந்தப் பெண்ணின் மனதில் பிறக்கும் வெட்கம், நாணம், கொஞ்சம் பயம், ரொம்ப காதல்  எல்லாம் அவளை அலைக்கழிக்கிறது.

என்ன செய்வாள் பாவம். வந்த நாணத்தில் மெல்ல ஒரு புன்முறுவல் பூக்கிறாள்.

இப்போது கூட பல திரைப்படங்களில் பார்க்கலாம்.

கதாநாயகன் வேகமாக போய் விடுவான். கதாநாயகி தூணுக்கு பின்னால் இருந்து  லேசாக அவனை எட்டிப் பார்ப்பாள். அவன் சட்டென்று திரும்பிப் பார்ப்பான்.

கதாநாயகிக்கு வெட்கம் பிடுங்கி தின்னும். நாக்கை கடித்துக் கொண்டு , கண்ணை மூடிக் கொண்டு "சீ" என்று செல்லமாக சிணுங்குவாள். முகம் எல்லாம் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும். தன்னை அறியாமலேயே ஒரு புன்னகை பிறக்கும்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன . காதல் அப்படியேதான் இருக்கிறது.

மனித மனத்தின் உணர்ச்சிகள் ஈரம் மாறாமல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

இன்றும் பெண்கள், வெட்கத்தில் முகம் சிவந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காதல் உணர்ச்சியை இதை விட மென்மையாக சொல்ல முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_26.html

Thursday, April 25, 2019

கம்ப இராமாயணம் - இராமனின் காதல் திருமணம்

கம்ப இராமாயணம் - இராமனின் காதல் திருமணம் 


இராமாயணம் என்றால் இராமன் + அயனம் என்று அர்த்தம். அயனம் என்றால் வழி, பாதை என்று பொருள். தட்சிணாயனம், உத்தராயணம் என்று சொல்லுவதுப் போல.

இராமாயணம் என்றால் இராமன் காட்டிய வழி என்று பொருள்.

இராமனை தெய்வமாகத் தொழுபவர்கள், அவன் வழியில் நடக்க விரும்புபவர்கள், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது ஏன் என்றால் இராமன் காதல் திருமணம் தான் செய்து கொண்டான்.

இது என்ன புதுக் கதையாக இருக்கிறது. இதுவரை யாருமே சொல்லவில்லையே. எத்தனையோ முறை இராமாயணம் படித்து இருக்கிறோம், கேட்டு இருக்கிறோம், யாரும், இதுவரை இராமன் காதல் திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னதே இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

கம்பன் சொல்லியதை திரும்பிச் சொல்கிறேன். முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

காதல் எப்படி வரும் ? முதல் பார்வையிலேயே எங்கோ ஒரு மணி அடிக்கும். அடி வயிற்றில் இனம் புரியாத ஒரு சங்கடம். இவள் தானா  ? இவன் தானா என்று இதயம் ஒரு தடம் துடிப்பது மறக்கும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். கிட்ட போக வேண்டும். பேச வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும் என்று சொல்லுகிறார்கள்.  ஒரு கணம் கூட பிரிந்து இருக்க முடியாது. பிரிந்தாலும் மற்றவர் நினைவாகவே இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.

அப்படி எல்லாம் இராமாயணத்தில் இருந்ததாக சொல்லி இருக்கிறதா ? ஒரு வேளை அப்படி சொல்லி இருந்தால் அது காதல் என்று ஏற்றுக் கொள்வீர்களா? இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் விழுந்து விடுகிறது.

மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

அந்த ஒரு கணத்தை கம்பன் புகைப்படம் கிளிக் செய்வது போல படம் படிக்கிறான்.

"கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது. அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்"

என்கிறான் கம்பன்.

உலகில் எந்த மூலையில் தேடினாலும் இது போல ஒரு romantic பாடல் கிடைப்பது அரிது.


பாடல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.

பொருள்

எண்ண அரு  = எண்ணிப்பார்க்க அருமையான, கடினமான. எண்ணில் அடங்காத

நலத்தினாள் = நல்ல குணங்களை உடையவள்

இனையள் = இந்தத் தன்மை உடையவள்

நின்றுழி. = நின்ற பொழுது

கண்ணொடு கண் இணை கவ்வி  = இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி

ஒன்றை ஒன்று உண்ணவும் = ஒன்றை மற்றொன்று உண்ணவும்

 நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. = நிலை பெறாத உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் = அண்ணலும் நோக்கினான்

அவளும் நோன்கினாள் = அவளும் நோக்கினாள்

சரி. இந்தப் பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டு இருப்போம். இதில் என்ன பெரிய புதுமை இருக்கிறது. ஆனாலும், அதற்கு இவ்வளவு build up தேவையா என்று  நீங்கள் கேட்பது புரிகிறது.

பார்ப்போம்.

இருவரில் யார் முதலில் பார்த்தது ? சீதை முதலில் பார்த்தாளா? இராமன் முதலில் பார்த்தானா ?

அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன்  பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.

அவள் நோக்கினாள் . அண்ணலும் நோக்கினான் என்று சொல்லி இருந்தால் முதலில் சீதை  பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.

கம்பன் அப்படி சொல்லவில்லை.

அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.

இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பார்வைகள் ஒன்றை ஒன்று ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டன. இன்னும் சொல்லப் போனால், பார்வைகள் பார்த்துக் கொள்ள வில்லையாம்.

பார்வைகள் சந்தித்தன. அவர்களால் அந்த பார்வையை நகர்த்த முடியவில்லை. கண்ணை எடுக்க முடியவில்லை. அவளோ தோழிகளோடு மாடத்தில் நிற்கிறாள். அவனோ, வீதியில் பல வித மக்களோடு நடந்து போய் கொண்டிருக்கிறான். நின்று பார்க்க முடியாது. பார்வையை தவிர்த்தே ஆக வேண்டும். ஆனாலும் முடியவில்லை.

"கண்ணொடு கண் இணை கவ்வி"

கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டனவாம். கவ்விக் கொண்டது என்றால் அதை எளிதில் எடுக்க முடியாது. lock ஆகி விட்டது என்று சொல்வார்களே அது மாதிரி. இழுத்தாலும் வர மாட்டேன் என்கிறது. இருவருக்கும் சங்கடம்தான். பார்வையை மாற்ற விரும்புகிறார்கள். முடிந்தால்தானே. கண்கள் கவ்விக் பிடித்துக் கொண்டன. அறிவு சொல்கிறது, "ஏய் , எல்லோரும் பார்க்கிறார்கள். அப்படி பார்க்காதே, நாகரீகம் இல்லை " என்று. கண் விட்டால்தானே.

சரி, இப்படி ஒரு பெண் முன் பின் தெரியாத ஒரு ஆணை இப்படி பார்க்கலாமா? அது அவ்வளவு நல்ல செயலா. ஒரு பெண் பால்கனியில் நின்று  தெருவில் போகும் ஆணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்தால், நாம் அவளைப் பற்றி என்ன நினைப்போம்.

அப்படி எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்று முதலிலேயே கம்பன் சொல்லி விடுகிறான்


"எண்ண அரு நலத்தினாள்"

எண்ணில் அடங்கா நல்ல குணம் கொண்டவள் என்று.  பொறுமை, கருணை, அன்பு, பாசம், நேசம், அருள் என்று எத்தனை நல்ல குணங்கள் உன்டோ அதற்கெல்லாம் மேலும்  நல்ல குணங்கள் உள்ளவள் அவள். இருந்தும் என்னவோ  அவனைப் பார்த்ததும் காதல் வந்து விட்டது. 

சரி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மனதில் என்ன ஓடியது?

'அடடா, இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை திருமணம் செய்து கொண்டால்  எவ்வளவு நல்லா இருக்கும். அதுக்கு முன்னாடி அவளை கூட்டிக் கொண்டு  பார்க், பீச், சினிமா என்று ஜாலியா சுத்தலாம்" என்றெல்லாம் நினைத்திருப்பானோ?  அவள் என்ன நினைத்து இருப்பாள் ? "என்ன ஒரு கம்பீரமான  ஆள் இவன். இவனை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில்  ஆகி விடலாம் " என்று அவள் நினைத்து இருப்பாளோ . 

இரண்டுமே இல்லை. அதெல்லாம் நம்ம ஊரு லோக்கல் கதாநாயகன், கதாநாயகி நினைப்பது. 

பின் அவர்கள் என்னதான் நினைத்தார்கள். 

ஒன்றுமே நினைக்கவில்லை என்கிறான் கம்பன். 

"நிலைபெறாது உணர்வும் ஒன்றிட"

இந்த உணர்ச்சிகள் இருக்கிறதே ஒரு நிலையில் நிற்காது. அலைந்து கொண்டே இருக்கும். அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன.  வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது. 

இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில்.  அல்லது அதற்கும் குறைவான நேரத்தில். 

சரி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அதை வைத்துக் கொண்டு அவர்கள் ஒருவரை ஒருவர்   காதலித்தார்கள் என்று எப்படி சொல்லுவது ?

கம்பன் அதோடு நிற்கவில்லை. ....

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_25.html

Wednesday, April 24, 2019

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள்

கம்ப இராமாயணம் - நல்லளும் அல்லள் 


"மன்மதனிடம் இருந்து என்னைக் காப்பாற்று" என்று சூர்ப்பனகை இராமனிடம் வேண்டினாள்.

இதைக் கேட்ட இராமன், என்ன செய்திருக்க வேண்டும்.

சீ சீ இவள் கெட்டவள். தீய நோக்கத்தோடு வந்திருக்கிறாள் என்று அவளை போகச் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா. அது தான் இல்லை.

இராமன் அவளை எடை போடுகிறான்.

"இவள் நாணம் இல்லாதவள். விநோதமானவள். கீழான எண்ணங்கள் கொண்டவள். நல்லவள் அல்லள்" என்று நினைக்கிறான்.


பாடல்


சேண் உற நீண்டு, மீண்டு, செவ் 
     அரி சிதறி, வெவ்வேறு 
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, 
     இருண்ட வாள்-கண் 
பூண் இயல் கொங்கை அன்னாள் 
     அம் மொழி புகறலோடும், 
'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் 
     அல்லள்' என்றான்.

பொருள்

சேண் உற = நீண்ட தொலைவு சென்று

நீண்டு = நீளமாக சென்று

மீண்டு = மீண்டும் இங்கு வந்து

செவ் அரி சிதறி = கணங்கள் சிவந்து. கண்ணில் இரத்த நாளங்கள் சிவந்து இருக்க

வெவ்வேறு  = வெவ்வேறு

ஏண் உற மிளிர்ந்து = சிறப்பு கொண்டு பின் அதில் இருந்து பிறழ்ந்து

நானாவிதம் புரண்டு,  = நாலா பக்கங்களிலும் அலைந்து

இருண்ட = கரிய

வாள் = கூர்மையான கத்தி போன்ற

கண் = கண்களை உடையவள்

பூண் இயல் கொங்கை அன்னாள் = அணிகலன்களை அணிந்த மார்பகங்களை உடையவள்

அம் மொழி புகறலோடும்,  = அவ்வாறு சொன்னவுடன்

'நாண் இலள் = நாணம் இல்லாதவள்

ஐயள் = கீழான எண்ணம் கொண்டவள்

நொய்யள் = விநோதமானவள்

 நல்லளும்  அல்லள்' என்றான். = நல்லவள் அல்லள் என்று இராமன் முடிவு செய்கிறான்.


எவ்வளவு தான் ஆடை அலங்காரம் பண்ணிக் கொண்டாலும், தேனொழுக பேசினாலும், உள்ளத்தில் உள்ளதை கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.

சூர்ப்பனகையின் கண்கள் அலை பாய்கின்றன.

தூரத்தில் உள்ளதை நோட்டம் விடுகிறது.

பின் பக்கத்தில் வருகிறது.

காமத்தால் சிவந்து இருக்கிறது.

நாலா பக்கமும் உருள்கிறது.

வள்ளுவர் சொல்லுவார்,

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம் 

என்று.

சேண் என்றால் தொலை தூரம் என்று பொருள்.

சேண் விளங்கு அவிர் ஒளி என்பார் நக்கீரர், திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .


தூரத்தில் இருக்கும் சூரிய ஒளி.

அவளின் சொல் மட்டும் கண்ணை வைத்து அவள் நல்லவள் இல்லை என்று அறிந்து கொள்கிறான்  இராமன். 

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_24.html

Monday, April 22, 2019

கம்ப இராமாயணம் - காமன் செய்யும் வன்மையை காத்தி

கம்ப இராமாயணம்  - காமன் செய்யும் வன்மையை காத்தி 


"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது" என்று சூர்ப்பனகை இராமனிடம் கூறினாள். அதற்கு இராமன்

"என்ன வேண்டும் என்று சொல். முடிந்தால் செய்து தருகிறேன்" என்று கூறுகிறான்.

முன் பின் தெரியாத ஒரு இளம் பெண் வந்து உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று சொன்னால், உடனே "சொல்லும், முடிந்தால் செய்து தருகிறேன்" என்று வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன.

"என்ன காரியம்" என்று கேட்டு விட்டு, பின் செய்யலாமா  வேண்டாமா என்று முடிவு செய்யலாமே.

வந்த சூர்ப்பனகை சொல்கிறாள்.

அராக்கிதான் என்றாலும் அவளும் ஒரு பெண் தானே. பெண்ணுக்கு தன் உணர்ச்சிகளை வெளியே சொல்லத் தயக்கம் இருக்கும்தானே. நீட்டி முழக்கி சொல்லுகிறாள்.

"தாங்கள் கொண்ட காமத்தை தாங்களே உரைப்பது என்பது குல மகளிருக்கு ஏற்றது அல்ல. இருந்தும் ஏக்கம் தரும் அந்த நோய்க்கு என்ன செய்வேன். எனக்கு என்று யாரும் இல்லை. காமன் என்ற ஒருவன் என்னை ரொம்ப துன்பப் படுத்துகிறான். அவனிடம் இருந்து என்னை நீ காப்பாற்று" என்கிறாள்.


பாடல்

தாம் உறு காமத் தன்மை தாங்களே 
     உரைப்பது என்பது 
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல 
     மகளிர்க்கு அம்மா! 
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? 
     யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக்
     காத்தி' என்றாள்.


பொருள்

தாம் உறு  = தாங்கள் உற்ற, தாங்கள் பெற்ற

காமத் தன்மை = காமத்தை

தாங்களே = அவர்களே

உரைப்பது என்பது = சொல்வது என்பது

ஆம் எனல்  ஆவது = சரி என்று ஆவது

அன்றால் = இல்லை.

அருங் குல மகளிர்க்கு அம்மா!  = சிறந்த குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு

ஏமுறும் = ஏக்கம் தரும்

உயிர்க்கு = உயிருக்கு

நோவேன் = துன்பப் படுகிறேன்

என் செய்கேன்?  = என்ன செய்வேன் ?

யாரும் இல்லேன்; = துணை யாரும் இல்லை

காமன் என்று ஒருவன் = காமன் என்ற ஒருவன்

செய்யும் வன்மையைக் = செய்யும் வன்மையில் இருந்து

காத்தி' என்றாள். = என்ன காப்பாற்று என்றாள்

அந்தக்  காலத்தில் மடலேறுதல் என்று ஒரு வழக்கம் இருந்தது.

ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல் காதல் வந்து விட்டால், அதை அந்தப் பெண்ணின் தகப்பனோ, குடும்பமோ எதிர்த்தால், அந்தப் பையன் பனை ஓலையில் குதிரை   மாதிரி செய்து, அதில் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பசங்களை கூப்பிட்டு அந்தக் குதிரையை இழுத்துக் கொண்டு போய் , தான் காதலித்த பெண்ணின்  வீட்டு வாசலில் நிறுத்தி விடுவான். அந்த குதிரை மேல் அவன் அமர்ந்து கொள்வான்.

ஊருக்கே தெரிந்து விடும். இந்தப் பையன், அந்த வீட்டுப் பெண்ணை விரும்புகிறான் என்று. வேறு யார் அந்தப் பெண்ணை மணந்து கொள்வார்கள்? ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாயத்து பண்ணி, பையனையும் பெண்ணையும் சேர்த்து வைப்பார்கள்.

அதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

இந்த மடல் ஏறுதல் என்பது ஆண்கள்தான் செய்து இருக்கிறார்கள். எந்தப் பெண்ணும் அப்படி செய்தது இல்லை.

பெண்ணுக்கு மட்டும் ஆசை இருக்காதா ? இருக்கும். இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்வது இல்லை.

இதைக் கண்டு வியக்கிறார் வள்ளுவர் ?

கடல் போல காமம் வந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்ணின் அடக்கம்  மிகப் பெரியது என்கிறார்.

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் 

பெண்ணின் பெருந்தக்கது இல் 


காமம் கடல் போன்றது என்கிறார் வள்ளுவர். மிகப் பெரியது. கடல் பொங்கி வந்தால் அதை கரை கட்டி தடுக்க முடியாது. இருந்தும் , இந்தப் பெண்கள் அந்த காமத்தை  வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெரிய சிறப்பை உடையவர்கள் என்று அவர்களை பாராட்டுகிறார்.

நல்ல குல பெண்கள், தாங்களே தங்கள் காமத்தை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது குறிப்பு.

இருந்தும், "நான் சொல்கிறேன். எனவே, நான் நல்ல குடியில் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ளாதே. என்ன செய்வது, காமன் என்னை வருந்துகிறான்" என்கிறாள்.

தீயவர்களை எப்படி இனம் கண்டு கொள்வது?

அவர்கள் பார்க்க நன்றாக இருப்பார்கள். தேனொழுகப் பேசுவார்கள்.

அந்தப் பேச்சில் இருந்து அவர்களை கண்டு கொள்ளலாம்.

நல்லவர்கள் வாயில் சில சொற்கள் வரவே வராது. அப்படி வந்தால், அவர்கள் நல்லவர்கள் இல்லை என்று அறிந்து கொள்ளலாம். மறந்தும் கூட தீய வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வராது.

ஆற்றில் வெள்ளம் வற்றி விட்டது. கால் வைக்க முடியவில்லை. சுட்டுக் பொசுக்கிறது. அந்த சமயத்தில் கூட, ஆற்று மண்ணை தோண்டினால் ஊற்று நீர் வரும். அது தாகம் தணிக்கும். அது போல, நல்லவர்கள் ஏழ்மை வயப் பட்டாலும், தங்களிடம் உதவி வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு "இல்லை" என்று சொல்ல மாட்டார்கள்.



ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.


உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்யாதவன் , நல்ல குடியில் பிறந்தவன் அல்ல. அவன் வாயில் "இல்லை" என்ற சொல் வராது. 

அது போல நல்ல குடியில் பிறந்த பெண்களுக்கு, தங்கள் காமத்தை வெளிப்படுத்தும் சொல் வராது. வந்தால், அவள் நல்ல குடியில் பிறந்தவள் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். 

பண்பாட்டு பாடம். 


தீயவர்களை , அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ளும் பாடம்.

மேலும் படிப்போம்.

Sunday, April 21, 2019

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல 


"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்" என்று சூர்ப்பனகை சொன்னாள். அதை கேட்டவுடன் இராமன், "பெண்கள் மனதை யாராலும் அறிய முடியாது. பெரும்பாலும் அது நல்ல வழியில் செல்வது அல்ல. போகப் போக இவள் எண்ணம் என்ன என்று தெரியும்" என்று மனதில் நினைத்துக் கொண்டு "அழகிய வளையல்களை அணிந்த பெண்ணே, நீ மனதில் நினைத்து வந்த காரியத்தை கூறு. முடிந்தால் செய்து தருகிறேன்" என்றான்.

பாடல்


அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 
     'அறிதற்கு ஒவ்வா 
நல் நுதல் மகளிர் சிந்தை நல் 
     நெறிப் பால அல்ல; 
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் 
     தோளி! என்பால் 
என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல் 
     இழைப்பல்' என்றான்.

பொருள்

அன்னவள் = அந்த சூர்ப்பனகை

உரைத்தலோடும் = சொன்னவுடன்

ஐயனும்,  = இராமனும்

'அறிதற்கு  ஒவ்வா = அறிந்து கொள்ள முடியாத

நல் நுதல் = சிறந்த  நெற்றியை உடைய

மகளிர் = பெண்கள்

சிந்தை = சிந்தனை

நல் நெறிப் பால அல்ல;  = நல்ல நெறியில் செல்பவை அல்ல

பின் இது தெரியும்' = பின்னால் இது தெரியும்

என்னா, = என்று

'பெய் வளைத் தோளி!  = வளையல்களை அணிந்த கைகளை உடையவளே

என்பால்  = என்னிடம்

என்ன காரியத்தை? = என்ன காரியம் வேண்டி வந்தாய்

சொல்; = சொல்

அஃது = அதை

இயையுமேல் = முடிந்தால்

இழைப்பல்' = செய்து தருகிறேன்

என்றான். = என்றான்


"அறிதற்கு ஒவ்வா  நல் நுதல் மகளிர் சிந்தை"


பெண்கள் மனதை அறிந்து கொள்ள முடியாது.

பெரிய பெரிய ஞானிகள், மேதாவிகள் எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.


ஆாழி என்ன அளவு படா வஞ்ச நெஞ்சப்
பாழான மாதர் மையல் பற்று ஒழிவது எந்நாளோ

கடல் போன்ற ஆழம் உள்ள வஞ்ச நெஞ்ச பாழான மாதர் என்று குறிப்பிடுகிறார்  தாயுமானவர் என்ற மிகப் பெரிய ஞானி.

அத்தி மலரும்  அருங்காக்கை வெண்ணிறமும் 
கத்துபுனல் மீன் பதமும் கண்டாலும் -பித்தரே 
கானார் தெரியற் கடவுளரும் காண்பாரோ 
மானார் விழியார் மனம் 

என்பது நீதி வெண்பா

பெண்ணின் மனம், கடவுளுக்கும் தெரியாது என்கிறது.


பெண் என படுவோ கேண்மோ ....ஓராயிரம் மனத்தவாகும் என்கிறது சீவக சிந்தாமணி.

ஒரு மனம் அல்ல, ஆயிரம் மனம் என்கிறது.

இராமன் ஒரு படி மேலே போகிறான்.

பெண் மனம் என்பது அறிய முடியாதது மட்டும் அல்ல, அது நல்ல வழியில் செல்வதும் அல்ல  என்கிறான்.

"மகளிர் சிந்தை நல்நெறிப் பால அல்ல"

சீதை உள்ளே இருக்கிறாள். அது இராமனுக்கும் தெரியும்.

இருந்தும் இராமன் சொல்கிறான்.

"....நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியின் மட மாதரை விட்டு உய்யடா உய்யடா உய்"

என்பார் பட்டினத்தடிகள்.


கணவன் தூங்கிய பின், அவன் கையை மெல்ல, அசையாமல்  எடுத்து தள்ளி வைத்து விட்டு , வெளியில் சென்று விட்டு வந்து உறங்குபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே என்று பாடுகிறார் பட்டினத்து ஸ்வாமிகள்

 கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே


கம்பன் பல பாடல்களை கவி கூற்றாக சொல்லி இருக்கிறான். அதாவது, இது என் கருத்து.  எந்த கதா பாத்திரத்தின் கருத்தும் அல்ல என்று கூறி இருக்கிறான்.  ஆனால், இந்தக் கருத்தை , இராமன் வாயிலாக சொல்ல வைக்கிறான் கம்பன்.

என்ன காரணமாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_21.html


Saturday, April 20, 2019

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன்

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன் 


நீ எப்படி தனியாக வந்தாய் என்று சூர்பனகையிடம் இராமன் கேட்டான்.

அதைக் கேட்டவுடன் சூர்ப்பனகை " ஐயோ...அதை ஏன் கேட்கிறீர்கள். அவங்க கூட எல்லாம் நான் சேர்வதில்லை. மாறாக, தேவர்களையும், முனிவர்களையும் நான் அடைய விரும்புகிறேன். மேலும், உன்னிடம் ஒரு காரியம் உள்ளது. எனவே உன்னைக் காண வந்தேன்" என்றாள்.


பாடல்


வீரன் அஃது உரைத்தலோடும், 
     மெய்இலாள், 'விமல! யான் அச் 
சீரியரல்லார் மாட்டுச் 
     சேர்கிலென்; தேவர்பாலும் 
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; 
     இறைவ! ஈண்டு ஓர் 
காரியம் உண்மை, நின்னைக் காணிய 
     வந்தேன்' என்றாள்.

பொருள்


வீரன் = இராமன்

அஃது உரைத்தலோடும், = அவ்வாறு கேட்ட பின் (நீ எப்படி தனியாக வந்தாய் என்று கேட்ட பின் )

மெய்இலாள், = உண்மை இல்லாதவளான சூர்ப்பனகை

'விமல! = மலம் என்றால் குற்றம். தவறு. வி என்றால் இல்லை என்று பொருள். விமலன், குற்றம் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்

யான்  = நான்

அச் சீரியரல்லார் = அந்த சீர்மை இல்லாதவர்கள்

மாட்டுச் = பால், பக்கம்

சேர்கிலென்; = சேர மாட்டேன்

தேவர்பாலும் = தேவர்கள் பக்கமும்

ஆரிய முனிவர்பாலும்  = தவ முனிவர்கள் பக்கமும்

அடைந்தனென் = அடைந்தேன்

இறைவ! = தலைவா

ஈண்டு ஓர் = இங்கு ஒரு

காரியம் உண்மை = காரியம் வேண்டி

நின்னைக் காணிய வந்தேன்' = உன்னை காண வந்தேன்

என்றாள். = என்றாள்


தீயவர்கள் எப்போதும் நமக்கு பிடித்த வார்த்தைகளையே பேசுவார்கள். கேட்க மிக இனிமையாக இருக்கும்.


நம் நலம் விரும்புவார்கள் நம்மை கண்டிப்பார்கள். நம்மை, நமது விருப்பத்துக்கு மாறாக செயல்களை செய்யச் சொல்லி திருந்துவார்கள்.


நமக்கு கோவம் வரும்.


படி படி என்று பெற்றோர் உயிரை வாங்கினால் எந்த பிள்ளைக்குத்தான் கோபம் வராது?


ஆசிரியரை கண்டால் பிடிக்காது.


"வாடா, வீடியோ கேம் விளையாடலாம், சினிமாவுக்கு போகலாம், ஊர் சுற்றலாம், அரட்டை அடிக்கலாம் " என்று நண்பர்கள் கூப்பிட்டால் அது மிக இனிமையாக இருக்கும்.


சிரித்துப் பேச அல்ல நட்பு என்பது. தவறு கண்ட இடத்தில், தவறு செய்யும் நண்பனை இடித்துப் பேசி திருத்துவதுதான் நட்பு என்பார் வள்ளுவர்.


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.



திருத்திச் சொல்ல ஆள் இல்லாத அரசன், எதிரி இன்றியும் கெட்டுப் போவான் என்பார் வள்ளுவர்.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பார் இலானும் கெடும். 

நம்மிடம் எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இராமனுக்கு எப்படியெல்லாம் சொன்னால் அவன் மனம் குளிரும் என்று அறிந்து கொண்டு  அப்படி எல்லாம் பேசுகிறாள்.



உருவம் - மிக அழகாக இருக்கிறது.


பேச்சு - அதை விட இனிமையாக இருக்கிறது


அது தானே சிக்கல். நாம் அதில் மயங்கி தவறானவர் பின் போய் விடுகிறோம்.


சூர்ப்பனகை நமக்கு ஒரு பாடம்.


படித்துக் கொள்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_20.html

Friday, April 19, 2019

கம்ப இராமாயணம் - தனியே வந்த காரணம் என்ன ?

கம்ப இராமாயணம் - தனியே வந்த காரணம் என்ன ?


தீயாரை காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே என்றெல்லாம் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

அவர்களோடு பேசினால் என்ன வந்து விடப் போகிறது? அவர்கள் சொல்வதை நாம் கேட்டு நடந்தால் தானே தவறு. சும்மா பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கேட்கலாம்.

இராமன் , சும்மா பேசிக் கொண்டிருந்தான் சூர்பனகையிடம். வினை வந்து சேர்ந்ததா இல்லையா ?

இராமன் மேலும் கேட்கிறான் சூர்பனகையிடம்

"தேவர்களின் தலைவனான இந்திரனைக் கூட ஆட்டி வைக்கும் ஆற்றல் பெட்ற இராவணனின் தங்கை நீ என்றால், உன்னைப் பார்த்தால் செல்வச் சீமாட்டி மாதிரியும் தெரியவில்லை, உன் கூட யாரும் வரவில்லை, தனியாக ஏன் வந்தாய் " என்று கேட்கிறான்.

அவள் தனியாக வருகிறாள், கூட யாருடனோ வருகிறாள். இராமனுக்கு என்ன கவலை அதில்? அவளோடு "சும்மா" பேசிக் கொண்டிருக்கிறான்.  தீயவர்களோடு சும்மா பேசிக் கொண்டிருந்த இராமனுக்கே அந்த கதி என்றால், நம் நிலைமை எப்படி ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ கோரைப் பல்லுடன் , கறுப்பா, குண்டா, கழுத்தில் மண்டை ஓடு மாலை போட்டுக் கொண்டு வர மாட்டார்கள்.

சூர்ப்பனகை எப்படி வந்தாள் ? தேவ லோக பெண் போல வந்தாள்.

"பஞ்சு ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க"...முத்துகள் சிணுங்கியதாம்.

இலக்குமி போல் இருந்தாள் என்று கம்பன் சொல்கிறான்.

கெட்டவர்கள் பார்ப்பதற்கு மிக நல்லவர்கள் போல இருப்பார்கள். மிக மிக இனிமையாகப் பேசுவார்கள். இனம் கண்டு கொள்வது மிகக் கடினம்.

அவர்கள் எந்த வடிவிலும் வரலாம்...உறவினர் வடிவில், நண்பர்கள் வடிவில், அக்கம் பக்கம் உள்ளவர்கள் போல, அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர் வடிவில் இருக்கலாம்.

நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யார் நல்லவர் , யார் கெட்டவர் என்று தெரியாது. எனவே, பேச்சைக் குறைப்பது நலம்.

சூர்ப்பணகை படலத்தில் கம்பன் நமக்குச் சொல்லும் பாடம் இது.

தோற்றம் கண்டு ஏமாறாதே

தீயவர்களோடு சகவாசம் வேண்டவே வேண்டாம்.

பாடல்

‘இமையவர் தலைவனேயும்
    எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும்
    ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமை உறு செல்வத்தோடும்
    தோன்றலை; துணையும் இன்றித்
தமியை நீ வருதற்கு ஒத்த
    தன்மை என்? தையல்! ‘என்றான்.

பொருள்

‘இமையவர் = கண் இமைக்காத தேவர்கள்

தலைவனேயும் = தலைவனான இந்திரனையும்

எளிமையின் = சாதாரண வேலைக்காரனைப் போல

ஏவல் செய்யும் = வேலை வாங்கும்

அமைதியின் = ஆற்றல் கொண்ட

உலகம் மூன்றும் = மூன்று உலகத்தையும்

ஆள்பவன் = ஆளக் கூடிய இராவணனின்

தங்கை ஆயின், = தங்கை என்றால்

சுமை உறு செல்வத்தோடும் = சுமை உள்ள செல்வத்தோடும்

தோன்றலை;  = நீ வரவில்லை

துணையும் இன்றித் = ஒரு துணையும் இல்லை

தமியை = தனியாக வந்து இருக்கிறாய்

நீ வருதற்கு  = நீ இப்படி வந்ததற்கு

ஒத்த தன்மை என்?  = சரியான காரணம் என்ன

தையல்!  = பெண்ணே

‘என்றான். = என்று கேட்டான் இராமன்

சுமை உறு செல்வம் என்கிறான் இராமன். சுமந்து வரும் செல்வம், நகை நட்டு. பட்டாடை,   என்று போட்டுக் கொண்டு வரும் செல்வம்.

இன்னொன்று,

ஒரு அளவுக்கு மேல் போனால், செல்வம் ஒரு சுமை தான். நாம் தான் அதை சுமந்து கொண்டு போக வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். எதில் கொண்டு போய் பணத்தைப் போடுவது, எங்கே போட்டால் நல்ல வட்டி வரும், முதலுக்கு மோசம் வந்து விடக் கூடாது என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்.

சுமை உறு செல்வம்.

குகப் படலத்தில், அரச உரிமையை , அரசை "துன்பத்தின் இருக்கை" என்பான் குகன்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_19.html

108 திவ்ய தேசம் - சிதம்பரம்

108 திவ்ய தேசம் - சிதம்பரம் 


நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல குணம் உண்டு. நல்லவற்றை படிக்க வேண்டும். பெரியவர்கள் சொன்னதை கேட்க வேண்டும். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முனைப்பு உண்டு. படித்து, கேட்டு, அறிந்த பின் அதன் படி நடக்க மாட்டேன், என் மனம் போனபடி தான் செய்வேன் என்ற நல்ல குணமும் உண்டு.

எவ்வளவு நல்ல நூல்கள், எவ்வளவு அறிவுரைகள், எத்தனை முறை படித்தும் கேட்டும் இருப்போம். அதில் ஒன்றையாவது கடைபிடித்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம்.

மாட்டோமே.

ஏதோ பொழுது போக்கு நாவல் படிப்பது மாதிரி படிக்க வேண்டியது. "நல்லாத்தான் சொல்லி இருக்காரு..." என்று சொல்லிவிட்டு, அதை தூக்கி அப்படியே குப்பையில் போட்டுவிட்டு மனம் போன போக்கில் செல்லும் உயரிய குணம் நமக்கு உண்டு.

"அவர் தான் எங்கள் குரு. ஆசாரியன். முழு முதல் கடவுள். கடவுளுக்கும் மேலே ஒரு படி...அவர் எழுதியதைப் படித்தால் அப்படியே கண்ணில் நீர் வரும்...மனம் இளகி விடும்" என்று கொண்டாடுவார்கள்.

சரி, அவர் சொல்கிறபடி செய்கிறீர்களா என்று கேட்டால் "...அது வந்து...அந்த மாதிரி காரியம் எல்லாம் நம்மால் செய்ய முடியாது. நமக்கு குடும்பம், குட்டிகள் என்று நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறேதே " என்று ஏதாவது சால்ஜாப்பு சொல்லிவிட்டு  நகர்ந்து விடுவோம்.

எதுக்கு அனாவசியமா படித்து நேரத்தை வீணாக்குவானேன்? அந்த நேரத்தில் நாலு டிவி சீரியல் பார்க்கலாம், கொஞ்சம் whatsapp இல் அரட்டை அடிக்கலாம். ஜோக், மீம்ஸ் forward பண்ணலாம். எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு.

போகாத ஊருக்கு வழி கேட்பதைப் போல, செய்ய விரும்பாத காரியத்தை படிப்பானேன்?

சரி. .அது புறம் இருக்கட்டும்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்

"இந்த வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக் கிழமை போன்ற விரதங்கள் எல்லாம் வேண்டாம். குளித்து, முழுகி, அக்கினி ஹோத்ரம் செய்வது போன்ற பூஜைகள் வேண்டாம்"

என்று சொல்கிறார்.

கேட்போமா நாம். அடடா என்ன அழகான பாசுரம். என்னமா அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, வழக்கப்படி நம் வேலைகளை தொடருவோம்.

பாடல்

 காயோடு நீடு கனியுண்டு வீசு
          கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
     தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
          திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
     வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
          மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
     தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே - (1159)
                              பெரிய திருமொழி 3-2-2

பொருள்

 காயோடு = பச்சை காய் கறிகளையும்

நீடு கனியுண்டு = நீண்ட நாள் உலர்ந்த பழங்களையும்

வீசு = வீசுகின்ற

கடுங்கால் = கடுமையான காற்று. வெப்பக் காற்று (தீக்கு நடுவில் நின்று தவம் செய்வது). கால் என்றால் காற்று. காற்று வரும் வழி என்பதால் ஜன்னலுக்கு காலதர் என்று பெயர்.

நுகர்ந்து = சுவாசித்து

நெடுங்காலம் = நெடுங்காலம்

ஐந்து தீயோடு = பஞ்சாக்கினி என்று சொல்லுவார்கள். அதனுடன்

நின்று தவஞ் செய்ய வேண்டா = நின்று தவம் செய்ய வேண்டாம்

 திருமார்பனைச் = திரு என்று சொல்லப்படும் இலக்குமியை தன் மார்பில் கொண்ட

சிந்தையுள் வைத்து = மனதில் வைத்து

மென்பீர் = அன்பீர்

வாயோது வேதம் = வாயாலே சொல்லுகின்ற வேதம்

மல்கின்ற = மலிந்து இருக்கின்ற. நிறைந்து இருக்கின்ற

தொல்சீர் = பழமையான, சீர்மையான

மறையாளர் = வேத விற்பன்னர்கள்

நாளும் = ஒவ்வொரு நாளும்

முறையால் = முறையாக

வளர்த்த = வளர்த்த

தீயோங்க வோங்கப் = தீயவர்கள் ஓங்கியதால், தான் ஓங்கிய

புகழோங்கு  = புகழ் ஓங்கிய

தில்லைத் = சிதம்பரம்

திருச்சித்ர கூடம் = சித்ர கூடம்

சென்றுசேர் மின்களே = சென்று அடையுங்கள்

இந்த பூஜை புனஸ்காரம் எல்லாம் விட்டு விடுங்கள். பேசாமல் சிதம்பரம் வந்து சேருங்கள் என்கிறார்.

பூஜையை விடுவதாவது, சிதம்பரம் போவதாவது, வேற வேலை இல்லை?  என்று சொல்லக் கூடியவர்கள் நாம்.

இந்த சிதம்பரம் எங்கே இருக்கிறது?

சீர்காழியில் இருந்து 30 நிமிடம்.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் இருந்து 1 மணி நேரம்.

நெய்வேலியில் இருந்து ஒரு மணி நேரம்.

சென்னையில் இருந்து செல்வதாக இருந்தால் 5 மணி நேரம்.

சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - கடலூர் - சிதம்பரம் என்று கடற்கரை ஒட்டியே சென்று விடலாம்.

பெங்களூரில் இருந்து செல்வதாக இருந்தால் ஏழு மணி நேரம் ஆகும்.

பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தருமபுரி - சேலம் - சின்ன சேலம் - நெய்வேலி - சிதம்பரம்

சரி, அப்படி என்னதான் இந்த சிதம்பரத்துக்கு சிறப்பு ?

நாளை சிந்திப்போமா ?

அதற்கு முன்னால் ஒரு முடிவு எடுங்கள்.

தேவையானதை மட்டுமே படிப்பது. படிப்பதில் உள்ளது போல நடப்பது. நடக்க மனம் இல்லை என்றால் அனாவசியமாக படித்து நேரத்தை வீணாக்குவது இல்லை என்று.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_19.html

Thursday, April 18, 2019

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்


காதலர்கள் எப்போதும் ஒருவர் விரும்புவதையே மற்றவர் செய்வர். அவனுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவள் செய்வாள்.அவளுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவன் செய்வான்.

அவனுக்கு எந்த நிறம் பிடிக்கும் என்று அறிந்து அந்த நிறத்தால் உடை அணிவாள். அவளுக்கு எந்த உணவு பிடிக்கும் என்று அறிந்து அங்கே அவளை கூட்டிச் செல்வான். இப்படி ஒருவருக்கு பிடித்ததை மட்டுமே மற்றவர் செய்வர். அதனால் காதல் செய்யும் காலம் மிகவும் இனிமையாக இருக்கும்.

நடை முறை வாழ்க்கை என்பது அப்படி அல்ல. ஒரு நாளில் ஒரு சில மணி நேரம் வேண்டுமானால் அப்படி ஒருவருக்கு பிடித்த மாதிரி இன்னொருவர் இருக்கலாம். அதுவே நாள் பூராவும் செய்ய வேண்டும் என்றால் முடியாது. சிக்கல் வரும். மனக் கசப்பு வரும். சண்டை வரும். நான் காதலித்த பெண்ணா இவள் என்று அவன் மனம் சலிப்பான். அவள் நிலையம் அதுவே.

காதலித்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொள்வது நல்லது என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒருவரை மற்றவர் அறிந்து கொள்ள முடியுமா ?

சூர்பனகையிடம் இராமன் கேட்டான் "இராவணனின் தங்கை என்கிறாய்,பார்த்தால் அப்படி இல்லையே " என்று.

சூர்ப்பனகை இராமனை பார்க்கிறாள். பார்த்தால் தர்மவான் போல் தெரிகிறது. நல்ல குடும்பத்தில் பிறந்தவன் போலத் தெரிகிறது. அவனுக்கு என்ன சொன்னால் பிடிக்கும்   என்று யோசிக்கிறாள். சரி, அறம் , தர்மம், தவம் எல்லாம் அவனுக்கு பிடிக்கும் போலத் தெரிகிறது. எனவே, அவனுக்கு பிடித்த மாதிரியே பேசி விடுவோம் என்று "அந்த அரக்கர்கள் வாழ்வை நான் மதிக்கவில்லை. அற வழியில் நிற்க முடிவு செய்து, தவம் செய்து இந்த வடிவைப் பெற்றேன் " என்றாள்.

பாடல்

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் 
மாயவல் அரக்க ரோடு வாழ்வின மதிக்க லாதேன் 
ஆய்வுறு மனத்தேன் ஆகி  அறந்தலை நிற்ப தானேன் தீவினை 
தேய நோற்றுத் தேவரின் பெற்றது என்றாள் 


பொருள்

தூயவன் = தூய்மையான இராமன்

பணியா முன்னம்  = நீ எப்படி இப்படி இருக்கிறாய் சொல் என்று பணித்த பின்

சொல்லுவாள் = சொல்லுவாள்

சோர்விலாள் = சோர்வு இல்லாதவள்

அம் = அந்த

மாய = மாயைகளில்

வல் = வல்லவர்களான

அரக்க ரோடு = அரக்கர்களோடு

வாழ்வின = சேர்ந்து வாழும் வாழ்வை

மதிக்க லாதேன்  = மதிக்க மாட்டேன், விரும்பவில்லை

ஆய்வுறு மனத்தேன் ஆகி = ஆராயும் மனதை உடையவள் நான்

அறந்தலை நிற்ப தானேன் = அறத்தினை தலையாய கடமையாக கொண்டு அந்த நெறியில் நிற்பதானேன்

தீவினை தேய = நான் செய்த தீவினைகள் தேய

நோற்றுத் = தவம் செய்து

தேவரின் = தேவர்களிடம் இருந்து

பெற்றது என்றாள்  = பெற்றது இந்த தெய்வ வடிவு என்றாள்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_18.html


Wednesday, April 17, 2019

108 திவ்ய தேசம் - திருமோகூர்

108 திவ்ய தேசம் - திருமோகூர் 


ஒரு முறை தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று அமுதம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுக்கென்ன, கொடுத்துட்டா போகுது னு, திருப்பாற்கடலை கடைய ஆணையிட்டார். தேவர்கள் ஒருபுறம் கடைந்தார்கள். மறுபுறம் அசுரர்கள். முதலில் ஆலகால விஷம் வந்தது. சிவன் அதை எடுத்து உண்டார். ஏதேதோ வந்தது. கடைசியில் அமுதம் வந்தது.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை வந்தது.

திருமால் மோகினி வடிவம் கொண்டு, அசுரர்களை மயக்கி, அமுதம் அனைத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.

அப்படி கொடுத்த இடம் தான் திருமோகூர்.

மோகினி வடிவில் வந்ததால் திரு மோகினி ஊர், திரு மோகியூர், திருமோகூர் என்று ஆகிவிட்டது.

அந்த இடம், எங்கே இருக்கிறது தெரியுமா ?

மதுரைக்கு ரொம்ப பக்கத்தில..மேலூர் போற வழியில, ஒத்தக்கடைக்கு பக்கத்தில இருக்கு.

மதுரையில் இருந்து சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் போய் விடலாம்.

டவுன் பஸ் வசதியும் இருக்கும். திருவாதவூர் போகும் பஸ் அந்த வழியாத்தான் போகும்.

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசம்.



பாடல்

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.


பொருள்

நாம டைந்த  = நாம் அடைந்த, நாம் பெற்ற

நல் லரண் = நல்ல அரண், நல்ல பாதுகாப்பு

தமக் கென்று = நம்முடையதென்று

நல் லமரர் = நல்ல தேவர்கள்

தீமை செய்யும் = தீமைகள் செய்யும்


வல் லசுரரை = வன்மையான அசுரர்களை

யஞ்சிச் = அஞ்சி

சென் றடைந்தால் = சென்று அடைந்தால்

காம ரூபம் = மோகினி உருவம்

கொண் டெழு = கொண்டு எழுந்து

அளிப் பான் = அருள் செய்வான்

திரு மோகூர் = திருமோகூர்

நாம மே = அவன் நாமமே

நவின்று = சொல்லி

றெண்ணுமின் = மனதில் எண்ணுங்கள்

ஏத்துமின் = போற்றுங்கள்

நமர்காள்  = நம்மவர்களே

அவன் நாமத்தை , பெயரை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் போதும் என்கிறார்.

நவிலுதல் என்றால் கற்றல் என்று பொருள்.

நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார் வள்ளுவர்.

நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு


உயர்ந்த புத்தகங்களை படிக்க படிக்க எப்படி இன்பம் உண்டாகிறதோ அது போல நல்ல பண்புடையவர்களின் தொடர்பும் இன்பம் தரும் என்கிறார்.

இறைவன் நாமத்தை நவில வேண்டும்.

சும்மா இராமா இராமா என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டும்.

"எண்ணுமின்" மனதுக்குள் எண்ண வேண்டும்.

"ஏத்துமின்" கையால் வணங்க வேண்டும் .


மனம் வாக்கு காயம் என்று சொல்லும் திரிகாரணத்தாலும் வணங்க வேண்டும்.

அடுத்த தடவை மதுரை பக்கம் போனால், மறக்காமல் திருமோகூர் போய்விட்டு வாருங்கள். அங்கே ப்ரம்ம தீர்த்தம் இருக்கிறது. இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108.html


கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்

கம்ப இராமாயணம் - ஐயுறு மனத்தான்


சூர்ப்பனகையார் என்று இராமன் கேட்க, அவள் நான் ப்ரம்மாவின் பேத்தி, குபேரனின் தங்கை, இராவணனின் தங்கை என்று கூறுகிறாள்.

இராவணனின் தங்கை என்றால், இவள் ஒரு அரக்கியாகத்தானே இருக்க வேண்டும். எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று இராமனுக்கு சந்தேகம். அவளிடமே கேட்டு விடுகிறான்.

பாடல்

அவ் உரை கேட்ட வீரன், 
     ஐயுறு மனத்தான், 'செய்கை 
செவ்விது அன்று; அறிதல் ஆகும் சிறிதின்' 
     என்று உணர, ' "செங்கண் 
வெவ் உரு அமைந்தோன் தங்கை" என்றது 
     மெய்ம்மை ஆயின் 
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி 
     இயல்பின்' என்றான்.

பொருள்

அவ் உரை கேட்ட வீரன்,  = சூர்ப்பனகை சொன்னதைக் கேட்ட இராமன்

ஐயுறு மனத்தான் = மனதில் சந்தேகம் வர

செய்கை செவ்விது அன்று = இவள் செய்கை சிறப்பாக இல்லை

அறிதல் ஆகும் சிறிதின் = கொஞ்சம் விசாரித்து அறிவோம்

என்று உணர = என்று உணர்ந்து கொள்ள

"செங்கண் = சிவந்த கண்கள். கோபத்தால் சிவந்த கண்கள்

வெவ் உரு = வெம்மையான உருவம்

அமைந்தோன் = அமைந்தோன், இராவணன்

தங்கை" என்றது = தங்கை நீ என்றால்

மெய்ம்மை ஆயின்  = அது உண்மை என்றால்

இவ் உரு = இந்த தெய்வ வடிவம்

இயைந்த = ஏற்பட்ட

தன்மை இயம்புதி  = தன்மை எப்படி என்று சொல்

இயல்பின்' என்றான். = எந்த வழியில் வந்தது என்றான்

இதெல்லாம் இராமனுக்குத் தேவையா என்பது என் கேள்வி. அவள் யாராக இருந்தால் என்ன. அவள் யாருடைய தங்கையாவும் இருந்து விட்டுப் போகட்டுமே.

இதை எல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது இராமனுக்கு?

இந்த வெட்டிப் பேச்சு எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு மாட்டி விட்டது இராமனையும், இலக்குவனையும், சீதையையும்.

இராமன் இதோடு விடவில்லை. மேலும் அரட்டை அடிக்கிறான் அவளுடன்.

இராமனுக்கும் சூர்பனகைக்கும் நடந்த உரையாடல் கம்ப காதையில் மிகவும் சுவையான பகுதி.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_17.html

Tuesday, April 16, 2019

கம்ப இராமாயணம் - காமவல்லி ஆம் கன்னி

கம்ப இராமாயணம் - காமவல்லி ஆம் கன்னி 


தீது இல் வரவு ஆகுக நின் வரவு என்று வந்த சூர்பனகையை இராமன் வரவேற்றான். அவளைப் பற்றி விசாரித்தான். நீ யார், உன் ஊர் எது, என்றெல்லாம் விசாரித்தான். அதற்கு சூர்ப்பனகை பதில் சொல்கிறாள் ....



பாடல்


பூவிலோன் புதல்வன் மைந்தன் 
     புதல்வி; முப்புரங்கள் செற்ற 
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன் 
     தங்கை; திக்கின் 
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை 
     எடுத்து, உலகம் மூன்றும் 
காவலோன் பின்னை; காமவல்லி ஆம் 
     கன்னி' என்றாள்.

பொருள்


பூவிலோன் = பூவில் தோன்றிய முதல்வன், பிரம்மா

புதல்வன் = அவனுடைய புதல்வன்

மைந்தன் = புதல்வனின் மைந்தன்

தல்வி; = மைந்தனின் புதல்வி. அதாவது, ப்ரம்மா எனக்கு தாத்தா முறை என்கிறாள்.

முப்புரங்கள் செற்ற = முப்புரங்களை எரித்த

சேவலோன் = காளை மீது ஏறியவன்

துணைவன்  = நண்பன், குபேரன்

ஆன = ஆகிய

செங்கையோன்  = கொடுத்து கொடுத்து சிவந்த கைகளை உடையவன்

தங்கை = தங்கை. குபேரனின் தங்கை

திக்கின் மா எலாம் = பெரிய திசைகள் எல்லாம்

தொலைத்து = வென்று

வெள்ளிமலை  = கைலை மலை

எடுத்து = கையால் எடுத்து

உலகம் மூன்றும் காவலோன் = மூன்று உலகங்களையும் காக்கும் வலிமை படைத்த இராவணனின்

பின்னை; = பின் பிறந்தவள்

காமவல்லி = என் பெயர் காமவல்லி

ஆம் கன்னி' என்றாள். = நான் ஒரு கன்னிப் பெண் என்றாள்

இன்று fake நியூஸ் என்று போடுகிறார்களே...எப்படி போடுகிறார்கள்? கொஞ்சம்  உண்மை கலந்து, அதோடு பொய் செய்தியையும் தள்ளி விடுவது.

வந்த செய்தியை முழுவதும் பொய் என்றும் சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சம் உண்மை இருக்கும். எதை விடுவது, எதை எடுத்துக் கொள்வது என்று உலகமே  தடுமாறிப் போய் நிற்கும் காலம் இது.

இங்கே, சூர்ப்பனகை அதையே செய்கிறாள்.

கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய் கலந்து பேசுகிறாள்.

எல்லாமே உண்மை. "பெயர் காமவல்லி, கன்னி" என்பது மட்டும் பொய்.

எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தால் என்ன? காமம் என்று வந்து விட்டால், அனைத்தும் பறந்து போய் விடுகிறது.


காமம் மட்டும் அல்ல, எல்லா ஆசையும் அப்படித்தான்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
இன்மை புகுத்தி விடும்


என்பது வள்ளுவம்.

சூர்ப்பனகையின் ஆசை வரம்பு மீறியது. மிகப் பெரிய துன்பத்தில் அவளையும் அவள் சார்ந்த குலத்தையும், நாட்டையும் பாதித்தது.

சூர்பனகையிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_16.html

Monday, April 15, 2019

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே


பையன்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி அது.  அவர்கள் முதன் முதலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதுக்குள் ஆயிரம் மின்னல். விட்ட குறை தொட்ட குறையாக எங்கேயோ எப்போதோ தொடங்கிய சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடர்கிறதோ என்று இருவர் மனத்திலும் ஒரு மெல்லிய உணர்வு.

பேச்சு எல்லாம் இல்லை. எல்லாம் கண் பார்வைதான். அதில் ஆயிரம் கவிதைகள்.

தொடாமல் பேசாமல் அவர்கள் காதல் நாளொரு வண்ணமாய் வளர்கிறது.

அவனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம்...."அவள் உண்மையிலேயே என்னை விருப்புகிறாளா அல்லது நான் தான் ஏதோ நினைத்துக் கொண்டு அலைகிறேனா " என்று. நேரே போய் கேட்டு விட்டால் என்ன? ஒரு வேளை "அப்படி எல்லாம் இல்லை " என்று சொல்லி விட்டால் ? அந்தப் பயத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது.

ஒவ்வொரு நாளும் அவள் வரும் வழி பார்த்து காத்திருப்பான். தூரத்தில் அவள் வருவது தெரிந்தால் அவன் மனதில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரு சேர மலரும். அவள் அருகில் வர வர அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.


கண்ணை மூடி அபிராமியை நினைக்கிறார் அபிராமி பட்டர்.

அவள் முகம், அவள் கண், அவள் உதடு, அவள் நெற்றி ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து போகிறது. அவளின் ஒவ்வொரு அவயவமும் அவ்வளவு அழகு. அவ்வளவு பிரகாசம்.

பாடல்

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழத்துணையே’’ 


பொருள்


‘‘உதிக்கின்ற செங்கதிர் = உதிக்கின்ற சூரியன்.

உதித்தல் என்றால் இதுவரை மறைந்து இருந்தது, தெரியாமல் இருந்தது, இப்போது தோன்றுவதற்கு உதித்தல் என்று பெயர்.

சூரியன் இன்று தோன்றவில்லை. அது என்றுமே உள்ளது. இரவில் தெரியாமல் இருந்தது, இப்போது உதித்தது.

"ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்பர் கந்த புராணத்தில்.


அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.

இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் முருகன் உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

சூரியன் ஒளி போல் பிரகாசமாய் இருந்தது...எது ?

 உச்சித் திலகம்  = அவளுடைய உச்சியில் வைத்த திலகம்

 உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = உணர்வு உடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.

அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லி இருக்கலாம் தானே. அறிவு, மேலும் மேலும் குழப்பத்தையே தரும். உணர்வு அப்படி அல்ல. அதில் ரொம்ப குழப்பம் இல்லை.


 மாதுளம் போது = மாதுளை மொட்டு

மலர்கமலை = தாமரை மலர்

துதிக்கின்ற மின் கொடி =   வணங்கத்தக்க மின்னல் போன்ற கொடி

எவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைப்பவள். மின்னல் அடிக்கும் நேரத்தில். எனவே மின் கொடி

மென்கடிக் = மென்மையான வாசனை கலந்த

குங்கும தோயமென்ன =குங்கும நீர் போல

விதிக்கின்ற மேனி = விளங்குகின்ற மேனி

அபிராமி  = அபிராமி

என்தன் = என்னுடைய

விழுத்துணையே’’ = சிறந்த  துணையே


உதிக்கின்ற செங்கதிர் 
உச்சித் திலகம் 
மதிக்கின்ற மாணிக்கம் 
மாதுளம் பூ 
குங்குமம் 

எல்லாம் சிவப்பு மயம். அவள் சிவந்த மேனியள். 

அம்பாளை பலர் பச்சை நிறம் என்று சொல்லுவார்கள், கறுப்பு நிறம் என்று சொல்லுவார்கள். 

பட்டர் சிவந்த மேனியாக பாக்கிறார். கண்ணை ஒரு நிமிடம் மூடிப் பாருங்கள். 

சிவப்பும், ரோஸ் கலரும் கண்ணுக்குள் குழைந்து ஓடுவதை காண்பீர்கள். 

அப்படிப்பட்ட அவள், என்னுடையவள். எனக்கு வழி காட்டுபவள் என்கிறார் பட்டர்.

"விதிக்கின்ற மேனி, அபிராமி, "எந்தன்" விழுத் துணையே"

என்னுடைய துணை அவள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். 

"விதிக்கின்ற மேனி , அபிராமி, "நமக்கு" விழுத் துணையே"

என்று சொல்லவில்லை. 

அவ்வளவு அன்யோன்யம்.



கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2


'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

வெறும் சொல்லுக்கு வலிமை உண்டா ? மந்திரங்கள் என்று சொல்கிறார்களே அதற்கெல்லாம் ஒரு வலிமை உண்டா ?

உண்டு என்று நம்பியது நம் தமிழ் இலக்கியம்.

மந்திரம் என்றால் என்ன?

மன் + ஸ்திரம் = மனதில் நினைப்பதை உறுதியாகச் செய்வது.

சொல்லுக்கு வலிமை உண்டு. அர்த்தம் உண்டு. சொல், செயலாகும் என்று நம்பினார்கள்.

சாபம் கொடுப்பது என்று கேட்டு இருக்கிறோம் அல்லவா. தவ சீலர்களின் சொல், உடனே நடக்கும். அவர்கள் சொல் , செயலாகும், பொருளாகும்.

சூர்ப்பனகை வருகிறாள். இராமன் என்ன சொல்லி இருக்க வேண்டும் "தங்கள் வரவு நல்வரவாகுக" என்று தானே சொல்லி இருக்க வேண்டும்?

மாறாக, "தீது இல் வரவு ஆக" நின் வரவு என்கிறான். 

தீது நடக்கப் போகிறது. இராமன் வாயில் அந்த "தீது" என்ற சொல் வந்து விழுகிறது.

கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம். எல்லாம் நல்லபடி நடக்கிறது. அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்.


காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்தி விட்டுப் போக வேண்டியதுதானே. 

"காதலர்கள் பிரியாமல், பற்றிய கை விட்டு விடாமல், தீமை எதுவும் இல்லாமல் " என்று மலர் தூவி வாழ்த்தினார்கள் என்கிறார் இளங்கோ அடிகள்.

அவர்கள் பின்னால் பிரிந்தார்கள், பற்றிய கை நெகிழ்ந்தது, தீமை வந்து சேர்ந்தது.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கிறது. 

எனவே தான், திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் கொட்டு மேளம், கொட்டு மேளம் என்று பெரிய சத்தமாக வாசிப்பார்கள். ஏன் என்றால், யாராவது, ஏதாவது அமங்கலச் சொல்லை சொல்லி விடலாம். பெரிதாக வாத்ய சத்தம் எழுந்தால் , அதையும் மீறி கத்தி பேச முடியாது அல்லவா. எனவே, எந்தவிதமான அமங்கலச் சொல்லும் நிகழாது என்பதற்காகத்தான் அப்படி ஒரு  பெரிய சத்தத்தை எழுப்புகிறார்கள். 

எனவே,  நமக்கு பாடம் என்ன என்றால்  எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். அமங்கல சொற்களை பேசக் கூடாது. எண்ணம் சொல்லாகும், சொல் செயலாகும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் "நீ மண்டு, நீ  மாடு மேய்க்கத்தான் இலாயக்கு" என்று சொல்லக் கூடாது. அதற்காக "நீ தான் உலகிலேயே பெரிய புத்திசாலி " என்று சொல்லியும் கெடுக்கக் கூடாது. 

தீய வார்த்தைகள் எப்படி நம் வாயில் வரும் ? தீயவற்றை பார்ப்பதால், படிப்பதால், கேட்பதால் நமக்கும் அந்த தீய வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்ளும். 

எனவேதான் சொல்லி வைத்தார்கள் , "தீயாரை காண்பதுவும் தீது" என்று. 



தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயார் சொல் கேட்பதுவும் தீது. 

டிவி சீரியல், whatsapp போன்றவற்றில் வெட்டி அரட்டை, அறிவற்ற மூடர்களோடு வெட்டிப் பேச்சு என்று இருந்தால் அது தான் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். 

நாம் தீயவர்களை காண்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த தீயவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள்.  அவர்கள் கண்ணில் படாமல் ஓடி விட வேண்டும் என்கிறது நம் இலக்கியம்.

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி

என்பது நீதி வெண்பா. 

"தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி"

அவன் அந்தப் பக்கம் இருந்தால், நான் பாட்டுக்கு இந்தப் பக்கம் போகிறேன் என்று சொல்லக் கூடாதாம். அவன் கண்ணில் படாத படி சென்று விடவேண்டும் என்கிறது நீதி வெண்பா. 

நம் வீடு தேடி, டிவியில் வருகிறதா இல்லையா சீரியல் என்ற பெயரில் குப்பைகள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான மெசேஜ் கள் வருகிறதா இல்லையா. அவற்றை விட்டு விலக வேண்டும். 

இல்லை என்றால், தீமை வந்தே தீரும். 

பின்னால் வரப் போகும் தீமைகளுக்கும் இவை முன்னால் வரும் சகுனங்கள்.

புரிந்து நடப்பதும், வாதம் செய்வதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/2.html


------------------- பாகம் 1 கீழே உள்ளது ------------------------------------------------------------------


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

Friday, April 12, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

Thursday, April 11, 2019

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல்

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல் 


தேவ மங்கை வடிவம் கொண்டு சூர்ப்பனகை வருகிறான்.

சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையாலும் தொட்டேன் என்ற உறுதி பூண்டவன் இராமன். சூர்ப்பனகை வரும் கொலுசு, மேகலை சப்தத்தை கேட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பி இருப்பான்...அது தானே நாம் எதிர் பார்ப்பது?

நடந்தது என்ன?

"வானத்தில் இருந்து வந்த அமுதம் போல, அழகிய மார்பகங்களையும், அதன் பாரம் தாங்காமல் துவளும் இடையையும் தன் இரு கண்களால் கண்டான் "

என்கிறான் கம்பன்.


பாடல்

விண் அருள வந்தது ஒரு 
     மெல் அமுதம் என்ன, 
வண்ண முலை கொண்டு, இடை 
     வணங்க வரு போழ்தத்து,- 
எண் அருளி, ஏழைமை துடைத்து, 
     எழு மெய்ஞ்ஞானக் 
கண் அருள்செய் கண்ணன் 
     இரு கண்ணின் எதிர் கண்டான்.

பொருள்

விண் அருள வந்தது = வானில் இருந்து மண் உயிர்களுக்கு அருள

ஒரு  மெல் அமுதம் என்ன = ஒரு மென்மையான அமுதம் போல

வண்ண முலை கொண்டு = வண்ண மயமான  மார்பகங்களை கொண்டு

இடை வணங்க = அதன் பாரத்தால் இடை துவண்டு விழ

வரு போழ்தத்து = அவள் வரும் போது

எண் அருளி = மனதில் எண்ணி, அருள் செய்து

ஏழைமை துடைத்து = அறியாமையை துடைத்து

எழு மெய்ஞ்ஞானக்  = எழுகின்ற மெய் ஞான

கண் = கண்களை

அருள்செய் = அருளிச் செய்கின்ற

கண்ணன்  = கண்களைக் கொண்ட இராமன்

இரு கண்ணின் எதிர் கண்டான். = தன்னுடைய இரு கண்களால் எதிரில் வரக் கண்டான்

இங்கே ஏழைமை என்பது பொருள் செல்வம் இல்லாத ஏழ்மை அல்ல, அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மை. அறிவு இல்லாவிட்டால் என்ன, பொருள் இருந்தால் போதும்  என்று நினைக்கிற உலகம்.

வயிற்றுப் பசி தெரிகிறது.

உடல் பசி தெரிகிறது.

அறிவுப் பசி தெரிவதில்லைல். பலருக்கு அந்தப் பசி எடுப்பதே இல்லை.

வயிற்றில் பசி இல்லை என்றால், மருத்துவரிடம் சென்று "டாக்டர் எனக்கு இரண்டு மூணு நாளா சரியா பசியே இல்ல. ஏதாவது மருந்து கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி மருந்து சாப்பிட்டு, அதன் மூலம் பசியைத் தூண்டி, உணவு உண்கிறார்கள்.

யாராவது, எங்காவது போய் "எனக்கு கடந்த 30 அல்லது 40 வருடமாக அறிவுப் பசியே இல்லை.  ஒண்ணுமே படிப்பது இல்லை. படிக்கணும்னு தோணவே மாட்டேங்குது. புத்தகத்தை கண்டாலே வெறுப்பா இருக்கு.  அதுக்கு எதாவது மருந்து இருக்கா...நல்லா படிக்க ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க " என்று கேட்டது உண்டா ?

அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மையை போக்குபவன் இராமன். நமக்கு அப்படி ஒரு செல்வம் இருப்பதே தெரியாது. அறிவு இல்லை என்பதே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா அதை அடைய முயற்சி செய்வது. அறியாமை என்ற ஏழ்மையில் மூழ்கிக் கிடக்கிறோம். அதை நீக்கி நமக்கு அறிவு என்ற செல்வத்தை  அருளுபவன் அவன். ஞானக் கண்ணைத் தருபவன்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை 
முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் "

என்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

அவன் அருள் இருந்தால் தான் அவன் தாளை வணங்க முடியும்.

நாம் கேட்காமலேயே அவன் நமக்குத் தருகிறான். நாம் கூப்பிடாமலேயே நம் உள்ளத்தை கவர்ந்து கொள்கிறான்.

"உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் "உள்ளங்கவர் கள்வன்"        
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.   



அப்படிப்பட்ட இராமன், சீதை குடிசைக்கு உள்ளே இருக்கிறாள்...இங்கே எதிரில் வரும் பெண்ணை  பார்க்கிறான்...

அவள் கண்ணை மட்டும் பார்த்தான் என்று சொல்லி இருந்தால் பெருமையாக இருந்திருக்கும்.

அவள் மார்பைப் பார்க்கிறான்.

தேவலோக அமுதம் போல் இருக்கிறதாம்.

அதன் எடையால், அவள் இடை தாங்கவில்லையாம்.

இது ஒரு சரியான பார்வையா என்ற முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_11.html


Wednesday, April 10, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல்

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல் 



இராமன் மேல் கொண்ட காதலால், சூர்ப்பனகை அவன் அழகை வியந்ததை இது வரி கண்டோம்.

இப்போது, அழகான தேவ மங்கை உருக் கொண்டு சூர்ப்பனகை வருகிறாள்.

இங்கே ஒரு கணம் நிறுத்தி, கொஞ்சம் யோசிப்போம்.

இராமன் என்ன செய்தான், என்ன செய்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் மறந்து விடுவோம்.

ஒரு பெண், ஒரு ஆணின் மேல் காதல் கொள்கிறாள். அவனிடம் நேரே வந்து, "நான் உன்னை விரும்புகிறேன்..என்னை ஏற்றுக் கொள் " என்கிறாள்.

அந்த ஆடவன் என்ன செய்ய வேண்டும் ?

ஒன்று, அவள் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது, அந்தக் காதலை மறுத்து இருக்கலாம்.

அவ்வளவுதானே? வேறு என்ன செய்ய முடியும்?

இல்லை என்றால், அவளை ஆசை காட்டி மோசம் செய்யலாம். அவள் காதலை கேலி செய்து, அவள் மனதை புண்ணாக்கலாம்.

அவளோடு பேச்சுக் கொடுத்து, அவள் மனதில் மேலும் ஆசையை வளர்த்து விட்டு, பின், "உனக்கு நான் சரியாக மாட்டேன், வேண்டுமானால் இன்னொரு ஆடவனை  தேடிக் கொள்" என்று அவள் பெண்மையை பரிகசிக்கலாம்.

இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்?

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் " தந்தவனாயிற்றே...சூர்பனகையை ஏறெடுத்தும் பார்த்து இருக்க மாட்டான் அல்லவா?

அவள் அழகை இரசித்து இருக்க மாட்டான் அல்லவா? குறிப்பாக, பெண்ணின் அங்க  அழகை உன்னிப்பாக கவனித்து இருக்கமாட்டான் அல்லவா? உன் குலம் என்ன, உன் கோத்திரம் என்ன என்று கேட்டு இருக்க மாட்டான் அல்லவா?

அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஒக்க மாட, ஒக்க பாண , ஒக்க பத்தினி விரதன் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?

சூர்ப்பனகை வருகிறாள்


பாடல்


“நூபுரமும், மேகலையும்,
    நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை,
    பூசலிடும் ஓசை
தாம், உரை செய்கின்றது; ‘ஒரு
    தையல் வரும் “ என்னாக்
கோமகனும், அத்திசை
    குறித்து எதிர் விழித்தான்.



பொருள்

“நூபுரமும் = கொலுசும்

மேகலையும் = சிறிய மணிகள் கோர்த்த இடுப்புச் சங்கிலி

நூலும் = நூல் போன்ற மெல்லிய சங்கிலியும்

அறல் = நுண்ணிய கரு மணல். ஆறு ஓடிய பாதையில், நீர் வற்றிய பின் பார்த்தால் சிறு சிறு கரிய மணல்கள் தெரியும். அதற்கு அறல் என்று பெயர்.

ஓதிப் = பெண்களின் கூந்தலுக்கு ஓதி என்று பெயர். ஆண்களின் கூந்தலுக்கு குடுமி அல்லது குஞ்சி என்று பெயர். அப்படி கரிய கூந்தல் இருந்ததாம். ஆற்றோட்டத்தில் ஏற்பட்ட கரிய துகள்கள் படிந்த பாதை போல அவள் கூந்தல் அலை பாய்ந்து கிடந்தது. அதில்



பூ முரலும் வண்டும் = பூவில் ஒலி எழுப்பும் வண்டும்

இவை, = இவை யாவும் (கொலுசு, மேகலை, அலை பாயும் கூந்தலில் உள்ள வண்டுகள்)

பூசலிடும் ஓசை = சப்தமிடும் ஓசை

தாம் = அந்த ஓசை

உரை செய்கின்றது = சொல்கின்றது

‘ஒரு தையல் வரும் “ = ஒரு பெண் வருகிறாள்

 என்னாக் = என்று

கோமகனும் = இராமனும்

அத்திசை = அந்தத் திசை

குறித்து = நோக்கி

எதிர் விழித்தான். = விழித்துப் பார்த்தான்


சூர்ப்பனகை நடக்கிறாள். அவள் நடையில் ஒரு தளுக்கு இருக்கிறது. அதனால், அவள் சூட்டியுள்ள பூக்களில் உள்ள தேனும், மகரந்தமும் கலந்து போய் ஒரு கலவையாகிப் போய் விட்டது. வண்டுகளால் தேனை உண்ண முடியவில்லை. அவை கோபித்து சப்தம் எழுப்புகிறதாம். 

ஆண்களின் கூந்தலுக்கு குஞ்சி என்று பெயர் என்று சொன்னேன்.

இராமன் மிதிலை நகருக்குள் வருகிறான். சீதை மேல் மாடத்தில் இருந்து பார்க்கிறாள். 

அவளுக்கு அவன் தலைதான் தெரிகிறது. இராமன் காட்டில் இருந்து வருகிறான். அவன் தலை முடி கலைந்து கிடக்கும். அதை காண்கிறாள் சீதை

இந்திர நீலம் போன்ற இருண்ட முடியும், சந்திர வதனமும், நீண்ட கைகளும், மலை போன்ற உயர்ந்த தோள்களும், அவன் புன்முறுவலும் என்னை உண்டு விட்டது என்கிறாள் சீதை. 
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.


கைகேயி "உனக்கு மகுடம் கிடையாது, காட்டுக்குப் போ " என்று சொல்லிவிட்டாள். இது கோசாலைக்குத் தெரியாது. கோசலை இருக்கும் மாளிகை நோக்கி இராமன் வருகிறான் அந்த சேதியை சொல்ல. மாடத்தில் இருந்து கோசலை பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருவது தெரிகிறது. 

அவன் முடியில் மஞ்சள் நீராட்டுக்கான அடையாளம் ஒன்றும் இல்லை 

‘புனைந்திலன் மௌலி! குஞ்சி மஞ்சனப்
    புனித நீரால்
நனைந்திலன்! என்கொல்? ‘என்னும் ஐயத்தாள்,
    நளின பாதம்,
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும்,
    குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி
    புனைதற்கு? ‘என்றாள்.


‘புனைந்திலன் மௌலி'

தலையில் மகுடம் இல்லை.

இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான் இராமன்.

"குஞ்சி மஞ்சனப்  புனித நீரால் நனைந்திலன்!"

தலை முடியில் மஞ்சன நீராட்டுக்கான அறிகுறி இல்லை

மேகலை என்று ஒரு ஆபரணம். பெண்கள் இடுப்பில் கட்டுவது. அதில் சிறு சிறு மணிகள் இருக்கும்.

இடுப்பில் இருந்து அது ஆடைக்கு உள்ளே செல்வது.

துரியோதனின் மனைவி பானுமதி. ஒரு நாள் அவளும் கர்ணனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனன் அங்கு வந்தான். வந்தவன் கர்ணனுக்கு பின் இருந்தான். கணவன் வரவை கண்ட பானுமதி எழுந்தாள். அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கவே எழுந்திருக்கிறாள் என்று எண்ணி கர்ணன் அவள் இடுப்பை பிடித்து , "எங்கே போகிறாய் உட்கார் " என்று இழுத்தான். அப்போது அவள் இடுப்பில் கட்டியிருந்த மேகலையில் இருந்து சிறு மணிகள் அறுந்து சிதறி ஓடியது. துரியோதனன் கேட்டான் "இந்த முத்துக்களை எடுக்கவோ, கோர்க்கவோ" என்று.



மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

"மேகலை மணி உகவே" .

இராமனுக்கு, சூர்ப்பனகையின் இடுப்பில் உள்ள மேகலையின் மணிச் சத்தம் கேட்கிறது.

யாரோ ஒரு பெண் வருகிறாள் என்று எண்ணி அந்த சத்தம் வரும் திசை நோக்குகிறான்.

அடுத்த என்ன நிகழ்ந்தது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_10.html