Thursday, May 30, 2019

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன்

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன் 


உறவினர்களை பெரும்பாலும் நாம் தேர்ந்து எடுப்பதில்லை. அது அமைந்து விடுகிறது. திருமணம், அது சம்பந்தப்பட்ட உறவுகள் வேண்டுமானால் நாம் தேர்ந்து எடுக்கிறோம் என்று சொல்லலாம். அது தவிர ஏனைய உறவுகள், தானே அமைவதுதான்.

நண்பர்களும் அப்படித்தான். நாம் தேடிப் போய் தேர்ந்து எடுப்பது இல்லை. நம் வாழ்வில் எதிர்படுபவர்களில் , நமக்கு பிடித்தவர்களை நாம் நண்பர்களாகக் கொள்கிறோம். அலுவலகம், வேலை செய்யும் இடம், குடி இருக்கும் இடம் என்று பொதுவாக அனைத்து இடங்களிலும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் நம்மால் முடிவு செய்யப் படுபவை அல்ல. அவை அப்படி நிகழ்ந்து விடுகின்றன.

அப்படி நிகழ்ந்தவைகள், அந்த உறவுகள் நமக்கு நன்மை பயக்கும் என்று எப்படிச்  சொல்வது?

நம் நண்பர்களில், நம் உறவினர்களில் நம்மை விட மிக மிக அதிகம் படித்தவர்கள், அறிந்தவர்கள் எத்தனை பேர்? அப்படி ரொம்ப அறிந்தவர்கள் இருந்தாலும், நாம் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

நமக்குத் தேவை, அரட்டை அடிக்க ஆள், whatsapp போன்றவற்றில் வெட்டிப் பேச்சு பேச, துணுக்குகள் அனுப்ப, கதை பேச, அரசியல் நையாண்டிகள் வாசிக்க , பகிர ஆட்கள்.

சரி, எப்படியோ உறவும், நட்பும் அமைந்து விடுகிறது . அதில் சில நமக்கு நன்மை பயக்காவிட்டாலும் தீமை  பயப்பவை என்று அறிந்தும் அவற்றை விட முடிகிறதா?

இருந்து விட்டுப் போகட்டும். அந்த whatsapp குரூப் இல் இருந்து விலகினால் தப்பா நினைப்பாங்க,  அந்த association மீட்டிங்குக்கு போகாட்டி நல்லா இருக்காது,  என்று தேவை இல்லாத, தீமை பயக்கும் உறவுகளை தூக்கிச் சுமந்து திரிகிறோம்.

அந்த உறவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கணவன், மனைவி, உற்றார், உறவினர், ஆசிரியர், ஆச்சாரியார், என்று எந்த உறவும், தீமை பயப்பதாக இருந்தால்,  அது தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

விடுவது கடினம்.

"கல்யாணம் ஆயிருச்சு, இனிமே என்ன பண்றது...ஒண்ணா வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் " என்று உழலும் எத்தனை உறவுகள் நமக்குத் தெரியும்.

அபிராமி பட்டர் துணிந்து முடிவு எடுக்கிறார்.

"தீய வழியில் செல்லும், நரகத்துக்கு செல்லும் மனித உறவுகளை வெறுத்து, அவற்றில் இருந்து பிரிந்து  வந்து விட்டேன்"

என்கிறார்.

அது மட்டும் அல்ல, "தீயவர் தொடர்பை விட்டது மட்டும் அல்ல, நல்லவர்கள் நட்பை, உறவை தேடி கண்டு பிடித்து ஏற்றுக் கொண்டேன்" என்றும் சொல்கிறார்.

அற்புதமான பாடல்.

சறுக்குப் பலகையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல, கை பிடித்து அழைத்துச் செல்லும் பாடல்

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


பொருள்

அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன்.  எதை அறிந்து கொண்டேன் என்கிறார் ?

எவரும் அறியா மறையை = யாரும் அறியாத ஒரு மறைவான, இரகசியமான பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு.

செறிந்தேன் = நெருங்கி வந்தேன். நெருங்கி எங்கே வந்தார்?

உனது திருவடிக்கே = உன்னுடைய திருவடிக்கே. உன்னுடைய என்றால் யாருடைய என்ற கேள்வி வரும் அல்லவா?

திருவே! = திரு என்றால் சிறப்பு, செல்வம், உயர்வு, மதிப்பு என்று பல பொருள் உண்டு. சிறந்தவளே என்று பொருள் கொள்ளலாம்

வெருவிப் = வெறுத்துப் போய்

பிறிந்தேன் = பிரிந்தேன். பிரிந்து விட்டேன். எதை விட்டு பிரிந்தார்?

நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்

பெருமை எண்ணாத = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = வினைப் பயனால், அதை அறிய மாட்டாத என்னுடைய மனதால்

மறிந்தே = மறித்தல் என்றால் தடுத்தல். மறியல் என்றால் strike. தடுமாறி

விழும் = விழும்

நரகுக்குறவாய = நரகத்துக்கு உறவான

மனிதரையே! = மனிதர்களையே

ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்றால் ?


முதலாவது, "அறிந்தேன்" . அறிய வேண்டும். எது நல்லது, எது கெட்டது , நமக்கு எது நன்மை  பயக்கிறது, எது நமக்கு தீமை பயக்கிறது என்று அறிய வேண்டும்.

இரண்டாவது, "அறிந்து கொண்டு"...அறிந்தால் மட்டும் போதாது. நம்மிடம் உள்ள பெரிய  குறையே அது தான், அறிந்து கொண்ட பின் அதன் படி நடப்பதே இல்லை. சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்காது என்று அறிவோம். இருந்தாலும்  இனிப்பு பண்டங்கள், ஐஸ் கிரீம் என்று ஒன்று விடாமல் சாப்பிடுவோம். நொறுக்குத் தீனி கெடுதல் என்று அறிவோம். உடற் பயிற்சி நல்லது என்று அறிவோம்.  என்ன பலன். அறிந்து கொண்டு, ஒன்றும் செய்வது கிடையாது.

கற்ற பின் நிற்க அதற்கு தக 

என்பார் வள்ளுவப் பேராசான்.

கற்றால் மட்டும் போதாது. கற்பது மிக எளிது. அதன் படி நிற்பது மிகக் கடினம்.

மூன்றாவது "கரும நெஞ்சால்". நாம் நம் நண்பர்களை, நாம் சார்ந்த உறவினர்களை  எவ்வாறு தேர்ந்து எடுக்கிறோம்? இவர் நமக்கு பிடித்தமானவர் என்று எவ்வாறு  முடிவு செய்கிறோம்? நம் மனம் சொல்கிறது. நம் மனதுக்கு எப்படி தெரியும்?  அனுபவ வாசனை. நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்வது இல்லை. ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு, இயந்திர கதியில்  செய்கிறோம். அதை பட்டர் , வினைப் பயன் என்கிறார். நம் அறிவு, உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு எல்லாம் நாம் விரும்பி தேர்ந்து எடுப்பது இல்லை. அவை நம்முள் ஏற்கனவே இருக்கின்றன.

நான்காவது, "நின் அன்பர் பெருமை எண்ணாத". நல்லவர்களின் சிறப்பை அறியாமல். உலகில் எத்தனை நல்லவர்களை, உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும்?

ஐந்தாவது, "வெருவிப் பிரிந்தேன்". தீயவர்களின் உறவை வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். ஐயோ, இவர்களின் உறவை விட்டு விட்டுப் போகிறோமே என்று வருத்தம் அல்ல.  "இவ்வளவு நாளா இவர்களோடு இருந்து  எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டேன் " என்று வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். 


சிந்தியுங்கள்.

தேவை இல்லாத உறவுகளை உதறுங்கள்.

நன்மை தரும் உறவுகளை தேடிக் கண்டு பிடியுங்கள்.

இது யாரும் அறியாத இரகசியம் ("எவரும் அறியா மறை"). பட்டர்  நமக்குச் சொல்லித் தருகிறார்.

வினைப்பயன் இருந்தால் அறிந்து கொண்டு முன்னேறுவோம்.

இல்லை என்றால் , இருக்கவே இருக்கிறது "...இது எல்லாம் சரி தான்...நடை முறைக்கு  ஒத்து வருமா " என்று பெரிய ஞானி போல பேசி விட்டு, whatsapp , youtube , facebook, டிவி ல் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_30.html 

Wednesday, May 29, 2019

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே



தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை, இராமனை வேண்டுகிறாள். அவளோடு சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு, முடிவில் மணக்க முடியாது என்று இராமன் கூறி விடுகிறான். அப்போது அங்கே சீதை வருகிறாள். சீதையின் அழகை உள்ளுக்குள் வியந்தாலும், வெளிக்கு அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள்.

அது மட்டும் அல்ல, தன்னைத்தானே சூர்ப்பனகை புகழ்ந்து கொள்கிறாள்.

"மூவரும் தேவரும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள். நீ என்னடா என்றால் என்னை இகழ்வது மட்டும் அல்ல, இந்த பொறுமை இல்லாத கள்வியான சீதையை விரும்புகிறாய்"

என்று இராமனிடம் கூறுகிறாள்.


பாடல்

பொற்புடை அரக்கி, 'பூவில்,
     புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும்,
     அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை
     நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக்
     கள்வியை நச்சி?' என்றாள்.


பொருள்

பொற்புடை அரக்கி = அழகிய வடிவம் கொண்ட அரக்கி (சூர்ப்பனகை)

'பூவில் = தாமரை மலரில் (வாழும் பிரம்மாவும்)

புனலினில் = நீரில், அதாவது பாற்கடலில் வாழும் திருமாலும்

பொருப்பில் = மலையில், அதாவது கைலை மலையில் வாழும் சிவனும்

 வாழும் = வாழும் மும்மூர்த்திகளும்

அற்புடை = அன்பு உடைய

உள்ளத்தாரும் = உள்ளம் உடையவர்களும்

அனங்கனும்,  = மன்மதனும்

அமரர் மற்றும் = மற்றும் உள்ள தேவர்கள் யாவரும்

எற் பெறத் = என்னைப் பெற

தவம் செய்கின்றார்; = தவம் செய்கிறார்கள்

என்னை  நீ இகழ்வது என்னே = என்னை நீ ஏன் பழிக்கிறாய்

நல் = நல்ல

பொறை  = பொறுமை

நெஞ்சில் இல்லாக்  = மனதில் இல்லாத

கள்வியை  = கள்ளத்தனம் கொண்ட இந்த சீதையை

நச்சி?' = விரும்பி

என்றாள். = என்றாள்

இங்கே முக்கியமாக இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, சீதை மிக மோசமானவள் என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது?  சீதை பொறுமை இல்லாதவள் என்கிறாள் சூர்ப்பனகை. ஆகப் பெரிய  தீய குணம் பொறுமை இல்லாமை என்பது கம்பனின் வாக்கு.

பொறுமை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றால் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும்  நில மகளை போல தம்மை இகழ்பவர்களை பொறுத்துக் கொள்வது ஆகச் சிறந்தது என்கிறார்.

சாப்பிடாமல் விரதம் இருந்து செய்யும் தவத்தை விட, பிறர் சொன்ன கடும் சொற்களை பொறுத்துக் கொள்வது  பெரியது என்கிறார்.

யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருவர் ஏதாவது தவறாக சொல்லி விட்டால், நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. தவறு என்ன தவறு, உண்மையையே சொன்னாலும்,  அது நமக்கு பிடிக்கவில்லை என்றால், கோபம் வருகிறது அல்லவா?

அது மனைவியாக இருக்கட்டும், கணவனாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், வேலை பார்க்கும் இடத்தில் யாரவது  நமக்கு பிடிக்காத ஒன்றைச் சொன்னால் பொறுமையாக கேட்க முடியுமா நம்மால்?

கேட்க வேண்டும். உண்மையோ பொய்யோ. சரியோ தவறோ. பொறுமையை கை விடாமல்  கேட்க வேண்டும். அவர்கள் சொன்னது தவறாகவே இருந்தாலும், அவர்களை பொறுக்கும் (சகிக்கும்) குணம் வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த  குணம் என்கிறார் வள்ளுவர்.

அதையே கம்பனும் தன் காவியத்தில் கொண்டு வந்து சேர்கிறான்.

சூர்ப்பனகை வாயில் இருந்து பெரிய அறத்தை சொல்கிறான் கம்பன்.

அடுத்தது, தற்புகழ்ச்சி.

தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாள் சூர்ப்பனகை.

மூவரும் தேவரும், மன்மதனும் என்னை வேண்டி தவம் கிடக்கிறார்கள் என்கிறாள்.

அளவுக்கு மீறி தன்னை நினைத்துக் கொள்வதும் ஒரு அரக்க குணமே.

பணிவு வேண்டும்.

அடக்கம் வேண்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அடக்கம் என்பது ஒரு சொத்து மாதிரி என்கிறார். நிலம், வீடு, பணம், நகை, வண்டி, வாகனம் போல அடக்கமும் ஒரு சொத்து என்கிறார்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து

என்பார் வள்ளுவப் பேராசான்.

சிந்தித்துப் பாருங்கள்.

உங்களிடம் எவ்வளவு பொறுமை இருக்கிறது. எப்போது பொறுமை தவறுகிறது. ஏன் தவறுகிறது. எப்படி பொறுமையாக இருப்பது என்றும்...

உங்களை நீங்கள் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருந்தால் , அது பற்றியும் சிந்தியுங்கள்.

இராமாயணம் படிப்பது கதை படிப்பது போல அல்ல.

அதில் பொதிந்து கிடக்கும் நல்ல விஷயங்களை நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

வாழ்வு சிறக்க அதுவும் ஒரு வழி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_29.html



Saturday, May 25, 2019

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல் 


இராமனோடு சூர்ப்பணகை பேசிக் கொண்டிருக்கும் போது, சீதை அங்கு வந்தாள். முதலில் அவளைப் பார்த்து வியந்த சூர்ப்பணகை , பின் அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள். சீதையை அரக்கி என்று இராமனிடம் கூறுகிறாள். சீதையை நம்பாதே என்றும் சொல்லி வைக்கிறாள். அவள் சொல்வதைக் கேட்டு சீதை அஞ்சி, இராமன் பின் ஒடுங்கி நின்று கொள்கிறாள்.

விளையாடியது போதும் என்று நினைத்த இராமன், சூர்பனகையை விரட்டுகிறான்.

"கோரை பற்களை கொண்ட அரக்கர்களோடு விளையாடினாலும் தீமையே வரும் என்று உணர்ந்து, மனம் வருந்தும் படியான செய்லகளை செய்யாதே. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு சென்று விடு. என் இளையவன் இலக்குவன் உன்னைப் பார்த்தால் கோபப் படுவான் "

என்று கூறி அவளை விரட்ட முனைகிறான்.

பாடல்

'வளை எயிற்றவர்களோடு வரும் 
     விளையாட்டு என்றாலும், 
விளைவன தீமையே ஆம்' என்பதை 
     உணர்ந்து, வீரன், 
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் 
     நிலை உணருமாகில், 
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி 
     விரைவில்' என்றான்.


பொருள்


'வளை  = வளைந்த

எயிற்றவர்களோடு = பற்களை கொண்டவர்களோடு (அரக்கர்கள்)

வரும் விளையாட்டு என்றாலும் = விளையாட்டு என்றாலும்

விளைவன தீமையே ஆம்'  = அதில் தீமையே விளையும்

என்பதை  = என்பதை

உணர்ந்து, = உணர்ந்த

வீரன் = வீரனாகிய இராமன்

'உளைவன இயற்றல்;  = மனதுக்கு துன்பம் தருபவனவற்றை செய்யாதே

ஒல்லை  = சீக்கிரம்

உன்  நிலை உணருமாகில்,  = உன் நிலையை அறிந்தால் (நீ அரக்கி என்று அறிந்தால்)

இளையவன் முனியும்; = இளையவனான இலக்குவன் கோபம் கொள்வான்

நங்கை!  = நங்கை,

ஏகுதி  விரைவில்' என்றான். = போய்விடு சீக்கிரம் என்று கூறினான்

இராமன் வாக்கு மூலம் தருகிறான். "நான் இதுவரை அவளோடு விளையாடினேன் " என்று.

ஒரு பெண்ணின் காதலோடு, காமத்தோடு விளையாடுவது சரியா ?


அவள் செய்தது தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அவளோடு இப்படி விளையாட்டாக பேசியது மட்டும் சரியா ?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், அர்க்கியோடு (தீயவளோடு) இராமன் விளையாடினான். அது  எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய்  விட்டது.

தீயவர்களின் சகவாசமே கூடாது.

விளையாட்டுக்குக் கூட அவர்களோடு உறவாடக் கூடாது

நாம் ஏதோ   கிண்டல், நையாண்டி என்று நினைத்து பேசி இருப்போம். ஆனால், அவர்கள் மனதில் அதை வைத்து இருந்து, தக்க நேரத்தில் நம்மை பழி தீர்த்து விடுவார்கள்.


கூனி அப்படி செய்தாள் .

சூர்பனகையும் அப்படிச் செய்வாள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

விபரீதம் நிகழவே செய்தது.

"தீயவர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி


இராமன் போ என்று சொல்லிவிட்டான்.

போனாளா? அல்லது வேறு எதுவும் செய்தாளா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_25.html

Thursday, May 23, 2019

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர 


இராமனுக்கும் சூர்பனகைக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , சீதை பர்ணசாலையில் இருந்து வெளியே வந்தாள் என்று பார்த்தோம்.

சீதையின் அழகைக் கண்ட சூர்ப்பனகை திகைத்துப் போய் விட்டாள்.

சீதையின் அழகில் சூர்பனகை வியந்ததை கம்பன் சொல்லிக் கொண்டே போகிறான். அவற்றை எல்லாம் விட்டு விடுவோம்.

கடைசியில், சூர்ப்பனகை சொல்கிறாள்

"இராமா, இவள் (சீதை) மாயா ஜாலங்களில் வல்லவள். வஞ்சனையான அரக்கி. நல்ல மனம் கொண்டவள் இல்லை. எதையும் ஆராய்ந்து செய்பவனே, இந்தப் பெண்ணின் உண்மையான உருவம் இது அல்ல. இவள் மாமிசம் சாப்பிடும் அரக்கி. இவளை விட்டு நீ விலகு"

சூர்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.


பாடல்

வரும் இவள், மாயம் வல்லள்;
    வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தரெிவு இலம்; தேறும் தன்மை,
    சீரியோய்! செயல் இது அன்றால்,
உரு இது மெய்யது அன்றால்;
    ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல்
    விலக்குதி, வீர! என்றாள்.



பொருள் 


வரும் இவள் = இங்கே வந்து நிற்கும் இவள்

மாயம் வல்லள் = மாயா ஜாலங்களில் வல்லவள்

வஞ்சனை அரக்கி = வஞ்ச மனம் கொண்ட அரக்கி

நெஞ்சம்  தெரிவு இலம் = இவள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது

தேறும் தன்மை  சீரியோய்!    -  காரியங்களை தேர்ந்து எடுத்து செய்பவனே

செயல் இது அன்றால் = நீ செய்ய வேண்டிய செயல் என்ன என்றால்
,
உரு இது மெய்யது அன்றால் = இவளின் உருவம் மெய்யானது அல்ல

ஊன் நுகர் வாழ்க்கையாளை = மாமிசம் சாப்பிடும் இவளை

வெருவினென் = இவளை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது

எய்திடாமல் = இவளை அடையாமல்

விலக்குதி, வீர! என்றாள். = அவளை விலக்கிவிடு என்றாள்

இது எப்படி இருக்கு ?

சூர்ப்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.

அது போகட்டும். சூர்ப்பனகை சீதையை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

நமக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன?

தீயவர்கள் (அரக்கர்கள்), தங்களது தீய குணத்தை நம் மேல் ஏத்தி மற்றவர்களிடம் சொல்லுவார்கள்.  சீதையை சூர்ப்பனகை சொன்ன மாதிரி...அவள்  உருவம் மெய்யானது அல்ல (சூர்ப்பனகை மாறு வேடத்தில் வந்து இருக்கிறாள் ), சீதை வஞ்ச மனம் கொண்ட அரக்கி, சீதை புலால் உண்பவள் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறாள்.  தீயவர்களிடம்  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களது தீய குணங்களை நம்மிடம் உள்ள தீய குணங்கள் போல  ஊராரிடம் சொல்லி கதை கட்டி விடுவார்கள்.

இரண்டாவது, சீதைக்கும் சூர்பனகைக்கும் ஒரு பகையும் கிடையாது. இருவரும் முன்ன பின்ன சந்தித்தது கூட இல்லை.  பார்த்த உடனேயே, சீதையைப் பற்றி  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைக்கிறாள். எனவே தான், தீயவர்கள் கண்ணுக்கு படாமல் நீங்குவதே நல்ல நெறி  என்று சொல்லி  வைத்தார்கள். அவர்கள் பார்வையிலேயே படக் கூடாது. "பட்டால் என்ன  ஆகும். இப்படி தீயவர்களை கண்டு பயந்து ஒளிந்து கொண்டே இருக்க முடியுமா ?" என்று விதண்டாவாதம் பண்ணினால் , இராமனுக்கும் சீதைக்கும் என்ன ஆயிற்று   என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கே அந்த கதி என்றால்.....


மூன்றாவது, தீயவர்கள், தங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இங்கே, சூர்ப்பனகை, கணவன் மனைவியை பிரிக்க  வழி தேடுகிறாள். அவளுக்கு இராமன் வேண்டும். எனவே, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க வழி தேடுகிறாள்.

நான்காவது, தீயவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. இராமனுக்கு சீதையைப் பற்றி நன்கு தெரியும். எனவே, அவன் சூர்ப்பனகை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.  இல்லை என்றால் யோசித்துப் பாருங்கள். சந்தேகத்தின் விதை விழுந்து விடும் அல்லவா?

அம்மாவைப் பற்றி மகனிடம், மகனைப் பற்றி அம்மாவிடம்,  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி  குடும்பத்தை பிரித்து, அதை சிதற அடித்த பெண்கள் பற்றி நாம்  நிறைய கேட்டு இருக்கிறோம் அல்லவா?

நண்பர்களை பிரித்து விடுவது, அம்மா மகன், அப்பா மகன் உறவை துண்டித்து விடுவது  என்று எவ்வளவோ நடக்கிறது.

இறுதியாக, தீயவர்கள், எப்போதும் நம்மை தனிமைப் படுத்தி, அவர்களோடு சேர்த்துக் கொள்ளவார்கள்.

யார் நம்மை தனிமை படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் தீயவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கதை படிக்கும் போது, கொஞ்சம் கருத்தையும் படித்துக் கொள்வோம்.


Tuesday, May 21, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


சில தினங்களுக்கு முன்னால், அறிவுடைய எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்ற குறளின் அர்த்தம் பற்றி சிந்தித்தோம்.

அறிவு என்பது என்ன ? அறிவு எப்படி வருகிறது? அறிவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

அறிவு யாருக்குத்தான் வேண்டாம் ? அறிவில்லாமல் முட்டாளாக இருக்க யாருக்கு விருப்பம் இருக்கும் ?

எனவே அறிவு என்றால் என்ன, அதை எப்படி அடைவது என்பது பற்றி சிந்திப்போம்.

முதலில், கற்பதனால் அறிவு வளரும் என்று பார்த்தோம்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு 

என்று பார்த்தோம்.

தோண்ட தோண்ட நீர் வருவது போல, படிக்க படிக்க அறிவு வளரும்.

சரி,எதைப் படிப்பது ? படித்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே ? ஆளுக்கு ஒரு வழி சொல்கிறார்கள்.

ஆன்மீகம் ஒன்று சொல்கிறது. அறிவியல் இன்னொன்று சொல்கிறது.

எதை எடுத்துக் கொள்வது.

ஆன்மீகத்திலும் எத்தனையோ பிரிவுகள், ஒவ்வொரு பிரிவும் ஒன்றைச் சொல்கிறது.

என் கடவுள் தான் பெரியவர்,  என் வழிதான் ஒரே வழி,  நான் கண்டதே உண்மை, மற்றதெல்லாம் பொய், என் கடவுள் தான் முக்தி தருவார்,  என்று ஆளாளுக்கு  கொடி பிடிக்கிறார்கள்.

அறிவியலோ , நேற்று ஒன்று சொன்னது. இன்று அதை மாற்றிச் சொல்கிறது. நாளை  என்ன சொல்லுமோ, தெரியாது.

நாம் நடுவில் குழம்பிப் போய் நிற்கிறோம்.

சரி, யாரிடமாவது போய் கேட்கலாம் என்றால், யார் உண்மையானவர் என்று தெரியவில்லை.  அப்படியே ஒருவர் நல்லவராக இருந்தாலும், அவருக்கு எல்லாம் தெரியுமா  என்பதும் சந்தேகமே.

என்னதான் செய்வது ?

வள்ளுவர் சொல்லிவைத்து விட்டுப் போய் இருக்கிறார்.

"யார் என்ன சொன்னலாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காம சொன்னதில் உள்ள உண்மை என்ன என்று தெரிந்து கொள்வது அறிவு" என்கிறார்.


பாடல்


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

பொருள்

எப்பொருள் = எந்தப் பொருளை

யார்யார்வாய்க்  = யாரிடம் இருந்து

கேட்பினும்  = கேட்டாலும்

அப்பொருள்  = அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் = உண்மையான பொருளை

காண்பது = காண்பது

அறிவு.  = அறிவு


என்ன இது சரியான கதையா இருக்கே. எங்களுக்கு அறிவு எப்படி வரும் என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் உண்மை எது என்று எங்களையே கண்டு பிடிக்கச் சொன்னால் எப்படி. அது தெரிந்தால் நாங்க ஏன் இப்படி இருக்கோம் ?

ஒரு ஒரு படியாக வருவோம். 

அது என்ன "யார் யார் வாய்"

மனிதர்ளுக்கு முக்குணங்கள் மாறி மாறி வருவது இயல்பு. 

சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் நமக்குள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 

அப்படி மாறி மாறி வரும்போது நண்பர்களும், உறவினர்களும் தவறான ஒன்றை நமக்குச் சொல்லி விடலாம், நம் பகைவர்கள் நமக்கு நல்லதைச் சொல்லிவிடலாம்,  உயர்ந்தவர்கள் வாயில் தாழ்ந்த கருத்துகளும், தாழ்ந்தவர் வாயில் இருந்து உயர்ந்த கருத்துகளும் வரலாம். 

யாரிடம் இருந்து எப்போது எது வரும் என்று தெரியாது. 

எதையும், அது எப்போதும் சரியாக இருக்கும் என்றும் நினைக்கவும் கூடாது.  அது போல, சிலர் சொல்லுவது எப்போதும் தவறாகவே இருக்கும் என்றும் நினைக்கக் கூடாது. 

அது ஆளாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவானாலும்  சொன்னது யார் என்று பார்க்கக் கூடாது. என்ன சொன்னார்கள் என்று பார்க வேண்டும். 

வேதம், கீதை, பைபிள், குரான், தேவாரம், திருவாகம், பிரபந்தம், அறிவியல், கணிதம், என்று யார் எதில் என்ன சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

சிந்திக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள், அதன் அர்த்தம் என்ன, அது சரிதானா என்று உரசிப் பார்க்க வேண்டும். 

கடவுளே நேரில் வந்து சொன்னாலும், அவர் சொன்னதின் மெய் பொருள்  என்ன என்று அரிய வேண்டும். 

"அப்பொருள் மெய் பொருள்" என்றால் என்ன ?

நாம் படிப்பது, கேட்பது எல்லாமே நமக்குத் தெரிந்தவற்றின் மூலமாகத் தான். 

புதிதாக ஒரு கருத்தை படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அது பற்றி ஏற்கனவே  ஒரு அப்பிராயம் இருக்கும். நம் மனதில் உள்ளதோடு புதிய கருத்தை நாம் ஒப்பிட்டுப் பார்போம். நமக்கு வசதியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம்.  இல்லை என்றால் தூக்கி எறிந்து விடுவோம். 

நமக்குத் தெரிந்தவற்றை முதலில் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். 

சொல்லப்படுவது என்ன என்று கேட்க வேண்டும். அதை ஆராய வேண்டும் 

அது உண்மை என்றால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு எதிரானது என்றால், நமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டுமே அல்லாது, புதிய கருத்துகளை விட்டு விடக் கூடாது. 

அது தான் அறிவு வளரும் வழி. 

நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. 

யார் எதைச் சொன்னாலும், ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும்...

அது அறிவு வளர்வதின் முதல் படி.....

அடுத்த படி என்ன தெரியுமா ?

Monday, May 20, 2019

கம்ப இராமாயணம் - திரு இங்கு வருவாள்கொல்லோ?

கம்ப இராமாயணம்  - திரு இங்கு வருவாள்கொல்லோ?


இராமனுக்கும் சூர்பனகைக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , பர்ணசாலையின் உள் இருந்து சீதை வெளியே வந்தாள்.

சீதையை கண்ட சூர்ப்பனகை திகைக்கிறாள்.


"நறுமணம் பொருந்திய கூந்தலை உடைய இந்தப் பெண்ணை இவன் இந்தக் காட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டான். இப்படி ஒரு அழகு உள்ள பெண் இந்த காட்டில் யாரும் இல்லை. தாமரை மலரில் இருந்து, கால் தோய அந்த இலக்குமியே எங்கு வந்தாளோ" என்று உள்ளை திகைத்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


பாடல்

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து 
     இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் 
     யாரும் இல்லை; 
அரவிந்த மலருள் நீங்கி, அடி 
     இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள்கொல்லோ?' என்று அகம் 
     திகைத்து நின்றாள்.


பொருள்


'மரு ஒன்று = நறுமணம் பொருந்திய

கூந்தலாளை = கூந்தல் கொண்ட இந்தப் பெண்ணை

வனத்து = காட்டுக்கு

இவன் = இராமன்

கொண்டு வாரான்; = கொண்டு வந்திருக்க மாட்டான்

உரு = இப்படி ஒரு உருவம் உள்ள பெண்கள்

இங்கு = இந்தக் காட்டில்

இது உடையர் ஆக = இப்படி அழகு உடையவர் ஆக

மற்றையோர்  = வேறு பெண்கள்

யாரும் இல்லை;  =யாரும் இல்லை

அரவிந்த = தாமரை

மலருள்  = மலரில் இருந்து

நீங்கி = நீங்கி

அடி  = திருவடி

இணை = இரண்டும்

படியில் தோய = நிலத்தில் படும்படி

திரு = திருமகள்

இங்கு வருவாள்கொல்லோ?' = இங்கு வந்திருப்பாளோ?

என்று = என்று

அகம்  = மனம், உள்ளம்

திகைத்து நின்றாள். = திகைத்து நின்றாள்

சீதை அப்போதுதான் பர்ண சாலையில் இருந்து வெளியே வருகிறாள். அவள் கூந்தலின்  மணம் சூர்பனகைக்குத் தெரிந்து விடுகிறது.

தாடகையும் அப்படித்தான்.


தாடகையைப் பற்றி கூறும் போது விசுவாமித்திரன் வாயிலாக கம்பன் கூறுவான்,

"எமன் கூட நமது இறுதி நாளில் தான் வந்து நம் உயிரை கொண்டு செல்வான். ஆனால், இவளோ, உயிர்களின் வாடை பட்டாலே போதும், எடுத்து தின்று விடுவாள்" என்கிறான்.

‘சாற்றும் நாள் அற்றது எண்ணித்,
    தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி,
    இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன
    நயப்பது ஓர்
கூற்று உண்டோ? சொலாய்!
    கூற்று உறழ் வேலினாய்!

சிலருக்கு உணவின் வாடை பட்டாலே போதும். பசி வந்து விடும். ஹ்ம்ம்...நல்ல மணம் வருதே...இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று சாப்பிட கிளம்பி விடுவார்கள். அது அரக்க குணம். பசித்தால் அன்றி சாப்பிடக் கூடாது.

இங்கே, சூர்பனகைக்கு சீதையின் கூந்தல் வாசம் வருகிறது.

"இவளை பார்த்தால் நல்ல குலப் பெண் போல இருக்கிறாள். இராமன் எதுக்கு இவளை  காட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கப் போகிறான்" எனவே, இது அவன் மனைவியாக இருக்காது  என்று அவள் நினைக்கிறாள்.

சரி, மனைவி இல்லை என்றால், இங்கே காட்டில் இருக்கும் பெண்ணாக இருக்கும் என்றால், இப்படி ஒரு அழகான பெண் இந்தக் காட்டில் ஏது. எனவே, இவள் இந்தக் காட்டில் திரியும் பெண்ணும் இல்லை.

ஒருவேளை, இராமன் பூஜை சேத பலனாக, அந்த திருமகளே இங்கு வந்திருப்பாளோ என்றால், இவள் கால் தரையில் படுகிறது. எனவே, இவள் திருமகளும் இல்லை.

யார் இவள் என்று திகைக்கிறாள்.

பெண் என்றால், பார்த்தவுடன் ஒரு நல்ல மதிப்பு மனதில் வர வேண்டும்.

சீதையின் அழகை கம்பன் வர்ணித்த மாதிரி இன்னொரு கதாநாயகியை வேறு எந்த இலக்கிய  கர்த்தாவும் வர்ணித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

வர்ணனையின் உச்சம் தொடுவான் கம்பன், சீதையை வர்ணிக்கும் போது.

அது பற்றி தனியாக கொஞ்சம் சிந்திப்போம், பின்னொரு நாளில்.


சற்று இந்த சூழ்நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தனியான காடு.

சீதை ஒரு புறம். சூர்ப்பனகை மறுபுறம். நடுவில் இராமன்.

சூர்பனகையும், சீதையும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக சந்திக்கும் இடம்.

அந்த இடத்தில் கம்பன் நிறுத்துகிறான்.

அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் ?


Saturday, May 18, 2019

திருக்குறள் - எல்லாம் உடையார்

திருக்குறள் - எல்லாம் உடையார் 


பாடல்

‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்’’

பொருள்

‘அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்

எல்லாம் உடையார் = எல்லாம் உடையவர்கள்

அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

என்னுடைய ரேனும்  = எவ்வளவுதான் இருந்தாலும்

இலர் = ஒன்றும் இல்லதாவர்களே

இது பொதுவாக சொல்லும் பொருள்.

திருக்குறளை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கும் சொல்லலாம். முதுகலை படித்து முடித்து, முனைவர் (doctorate ) படிப்பு படிப்பவர்களுக்கும் சொல்லலாம். எளிமைக்கு எளிமை. ஆழத்துக்கு ஆழம்.

சரி, இதில் என்ன ஆழம் இருக்கிறது.

"அறிவுடையார்" ... கல்வி உடையார், கற்றவர் என்று சொல்லவில்லை. அறிவு உடையார்  என்று சொல்கிறார். கல்வி வேறு, அறிவு வேறு.  அறிவுடைமைக்கும் கல்விக்கும்  இரு வேறு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

அறிவு என்பது நமக்குள் இருப்பது. அதை வெளியே கொண்டு வருவது கல்வி.

அது என்ன உள்ளே இருப்பது, வெளியே வருவது ?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் வள்ளுவர்.

ஆற்றில் நீர் வற்றிய காலங்களில் மக்கள் ஆற்றுப் படுகையை தோண்டுவார்கள். அதில் நீர் ஊற்றெடுத்து வரும்.  அதற்கு மணற்கேணி என்று பெயர். நீர் உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால்  நீர் வரும்.

அது போல, அறிவு உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால் அது வெளியே வரும்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’

எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் வரும் மணற்கேணியில் இருந்து. அது போல எவ்வளவு கற்கின்றோமோ அவ்வளவு அறிவு வளரும்.

சிலருக்கு லேசாக தோண்டினாலே நீர் வந்து விடும். சிலருக்கு பல அடி ஆழம் தோண்ட வேண்டும்.

சரி, அறிவு புரிகிறது.

அறிவு இருந்தால் எல்லாம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ அறிவாளிகள்  ஏழையாக இல்லையா? படிக்காத தற்குறிகள் செல்வத்தில்  திளைக்கவில்லையா ?

நாம் ஏழ்மை என்று சொல்லுவது பொன் , பொருள்  இல்லாமல் இருப்பதை. ஒருவனிடம்  நிறைய காசு இருந்தால்  அவனிடம் எல்லாம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

செல்வம் நிலையாதது.

ஒரு அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அது மட்டும் அல்ல , அதனால் சிக்கல்களே அதிகம்.

மேலும், இந்த பொருளும், பொன்னும் நாம் இறந்த பின் நம் கூட வருமா ?

வராது.

அறிவு மட்டும் வருமா ?

வரும் என்கிறார் வள்ளுவர்.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழ் பிறவிக்கும் வரும் என்கிறார்.

அப்படி என்றால், நம் வாழ்நாளை இதில் செலவிட வேண்டும் ?

பொன்னும் பொருளும் சேகரிப்பதிலா? அல்லது அறிவை சேகரிப்பதிலா ?

"என்னுடையரேனும் இலர்"

என்ன இருந்தாலும், ஒன்றும் இல்லாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள் அறிவு இல்லாதவர்கள் என்கிறார்.

அறிவில்லாதவனிடம் நிறைய செல்வம் இருந்தாலும், அவனுக்கு அதை அனுபவிக்கத் தெரியாது.

பிற்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைப்பான். பிற்காலம் வரும் முன்னே  இறந்தும் போவான். அந்த செல்வம் அவனிடம் இருந்து என்ன பலன்.  செல்வம் இல்லாதவன் எப்படி ஒன்றையும் அனுபவிக்காமல் இறப்பானோ , அதே போல  இவனும் இருக்கிற பணத்தை எல்லாம் shares, stocks, gold, mutual fund, real estate  என்று வாங்கிப் போட்டுவிட்டு, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்து போவான்.

நிறைய பணம் இருக்கும், கண்டதையும் சாப்பிடுவது, சர்க்கரை வியாதி வந்து விடும்.  அரசி சோற்றை நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று சொல்லிவிடுவார்  வைத்தியர். பணம் இருந்து என்ன பலன்? ஒரு பிச்சைக்காரனுக்கு  கிடைக்கும் இன்பம் கூட இவனுக்கு கிடைக்காது.

செல்வம் நிறைய இருக்கிறதே என்று மது, புகை பிடிப்பது என்று கெட்ட வழக்கங்களை  மேற்கொள்ளுவான். இதய நோய் , காச நோய் , கான்சர் என்று   அவதிப் படுவான்.

என்ன இருந்து என்ன செய்ய ?

அறிவு இல்லை என்றால், மனைவி மக்களோடு பிரச்சனை வரும். குடும்ப உறவுகள் சிக்கலாகும். அது ஒரு சுகமா ?

தீயவர் சகவாசம் வரும். அது மேலும் பல தீமையில் கொண்டு போய் விடும்.

அறிவில்லாதவன் பல செல்வங்களை சேர்த்தாலும், நம்மை விட அவன் அதிகம் சேர்த்து விட்டானே என்று மற்றவர்களைப் பார்த்து  பொறாமை படுவான். அந்த பொறாமை, அவனை, அவனது செல்வங்களை நிம்மதியாக அனுபவிக்க விடாது.


அறிவு இல்லை என்றால், மற்றவை எல்லாம் இருந்தும் ஒன்றுக்கும் பயன் படாது.

கேக்க நல்லாத்தான் இருக்கு.

சரி, இந்த அறிவை எப்படி பெறுவது?

அதற்கு ஏதாவது வழி சொல்லி இருக்கிறார்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_60.html

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி

கம்ப இராமாயணம் - கற்பின் கனலி



இராமயணத்தில் சில சொற் தொடர்கள் மிக அருமையாக அமைந்து மீண்டும் மீண்டும் நினைத்து இன்புறத் தக்கதாக இருக்கும். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" போன்ற சொற் தொடர்கள்.

தன்னை மணந்து கொள்ளும்படி இராமனை எத்தனையோ வழிகளில் வாதம் செய்து அவனை ஒத்துக் கொள்ளும்படி செய்ய முயற்சி செய்தாள் சூர்ப்பனகை. இராமன் மசியவில்லை. சூர்பனகையைப் பார்த்து ஏளனம் செய்கிறான். முதலில் "உன் அண்ணன் வந்து தந்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று சொல்லிவிட்டு பின் அவளைப் பார்த்து ஏளனம் செய்கிறான்.

அந்த சமயத்தில் சீதை பரணசாலையில் இருந்து வெளியே வருகிறாள்.

என்ன வெளியே சத்தம், யாரிடம் இராமன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்க்க வந்திருக்கலாம்.

சீதையின் அழகைக் கண்ட சூற்பனைகை வியக்கிறாள்.

சூர்ப்பனகையின் கூற்றுக்கு முன், கம்பன் முந்திக் கொண்டு அவன் பங்குக்கு சீதையின் வருகையை அறிவிக்கிறான்.

"காமத் தீ உடலில் உள்ள தசை எல்லாம் சுட, பெரிய வாயை உடைய, உணர்வு இல்லாத சூர்ப்பனகை கண்டாள். எதைக் கண்டாள் ? வானத்தில் உள்ள சுடர் வெள்ளம் போல் வந்ததைக் கண்டாள். அரக்கர் குலத்தை அழிக்க வந்த கற்பின் கனலியை கண்டாள் "

என்கிறான் கம்பன்.


பாடல்

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு
     இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து
     இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும்
     விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக்
     கண்ணின் கண்டாள்.


பொருள்

ஊன் சுட = சதைகள் சுட. காமத்தால் உடல் சுடுகிறது.

உணங்கு = திறந்த

பேழ் = பெரிய

வாய் = வாயை உடைய

உணர்வு இலி = உணர்வு இல்லாதவள்

உருவில் = உருவத்தில்

நாறும் = மணம் வீசும். அந்தக் காலத்தில் நாறும் என்றால் மணம் வீசும் என்று பொருள். நாளடைவில் அது மாறிவிட்டது.

வான் = வானத்தில் உள்ள

சுடர்ச் = சுடர் விடும்

சோதி  = சோதி

வெள்ளம் வந்து = வெள்ளம் போல் வந்து

இடை வயங்க = ஒளி வீசும்

நோக்கி = நோக்கி

மீன் = விண்மீன்கள்

சுடர் = சந்திரன்

விண்ணும் மண்ணும் = வானும் மண்ணும்

விரிந்த = விரிந்த

போர் அரக்கர் = போர் செய்யும் அரக்கர்கள்

என்னும் = என்ற

கான் = கானகம்

சுட முளைத்த = எரிக்க பிறந்த

கற்பின் கனலியைக் = கற்பின் கனலியை

கண்ணின் கண்டாள். = கண்ணின் கண்டாள்

அரக்கர் குலத்தை எரிக்க பிறந்த கற்பின் கனலி என்கிறான் கம்பன்.


சூர்பனகையை குறிப்பிடும்போது "உணர்விலி " என்கிறான்.

இந்த வார்த்தையை பற்றி நிறைய நேரம் சிந்தித்தேன்.

உணர்வு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இராமன் மேல் அவ்வளவு காதல் என்ற உணர்வு இருந்ததே?  காம உணர்வு உடல் எல்லாம் சுட்டது என்றானே கம்பன். பின் எப்படி உணர்விலி ?


உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருப்பதைத்தான் கம்பன் உணர்விலி என்கிறான்.

இராமனை மணக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? பார்த்த முதல் நாளே, "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" என்று  ஆரம்பிக்கிறாள்.

ஒரு வரைமுறை  இல்லாமல் அவள் உணர்ச்சிகள் தறி கெட்டு ஓடுகின்றன.

எனவே, அவளை உணர்விலி என்கிறான் கம்பன்.

சிந்திப்போம். நம் உணர்வுகளை நாம் சரியாக வெளிப்படுத்துகிறோமா?

மென்மையாக, இனிமையாக, பிறர் மனம் புண்படாமல், நேரம் காலம் அறிந்து வெளிப்படுத்துகிறோமா ?

அல்லது, சூர்ப்பனகை மாதிரி மனதில் தோன்றிய உணர்ச்சிகளை வந்த நேரத்தில் அப்படியே போட்டு  உடைக்கிறோமா?


சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_18.html

Thursday, May 16, 2019

கம்ப இராமாயணம் வாள் எயிறு இலங்க நக்கான்

கம்ப இராமாயணம்  வாள் எயிறு இலங்க நக்கான் 



உன்னுடைய சகோதரர்கள் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் என்று இராமன் சூர்பனகையிடம் சொன்னான் என்று நேற்று பார்த்தோம்.

அதற்கு சூர்ப்பனகை சொல்கிறாள் "நாம் காதர்வ முறைப் படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த பின் என் சகோதரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல, நீ சொன்ன படி கேட்டு நடப்பார்கள் " என்று மேலும் பலவும் கூறுகிறாள்.

அதைக் கேட்டு இராமன் ஒரு ஏளன சிரிப்பு சிரிக்கிறான்

"அரக்கர் அருளையும் பெற்றேன். உன்னால் பெரும் செல்வத்தையும் பெற்றேன். உன்னை அடைந்ததால் வரும் இன்பங்களையும் பெற்றேன். இதனால் நான் பெற்ற இன்பங்கள் ஒன்றா இரண்டா? அயோத்தி விட்டு வந்த பின், நான் செய்த தவத்தால் இவை எல்லாம் எனக்குக்  கிடைத்தன " என்று சொல்லி விட்டு, பற்கள் தெரியும் படி சிரித்தான்

பாடல்


''நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் 
     நலம் பெற்றேன்; நின்னோடு 
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் 
     பெற்றேன்; ஒன்றோ, 
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் 
     தவம் பயந்தது?' என்னா, 
வரி சிலை வடித்த தோளான் வாள் 
     எயிறு இலங்க நக்கான்.

பொருள்


''நிருதர்தம் = அரக்கர்களின்

அருளும் பெற்றேன் = அருளைப் பெற்றேன்

நின் = உன்

நலம் பெற்றேன் = நலம் பெற்றேன்

நின்னோடு = உன்னோடு

ஒருவ = நீங்காத

அருஞ் செல்வத்து = அரிய செல்வத்தை

யாண்டும் = எப்போதும்

உறையவும் பெற்றேன் = என்னுடன் இருக்கவும் பெற்றேன்

ஒன்றோ,  = இது மட்டுமா

திரு நகர் = அயோத்தி

 தீர்ந்த பின்னர் = விட்டு வந்த பின்

செய் தவம் பயந்தது?' என்னா, = நான் செய்த தவங்கள் என்ன

வரி சிலை வடித்த தோளான் = வில்லை பிடித்த வடிவான தோள்களை உடைய இராமன்

வாள் எயிறு இலங்க நக்கான். = ஒளி பொருதிய பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தான்


கிண்டலின் உச்சம்.

சூர்பனகையை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம்.

அவளை பார்த்து கிண்டல் செய்வது சரியா ?

அந்த நேரத்தில் பர்ண சாலையில் இருந்து சீதை வெளியே வருகிறாள்.

என்ன நடந்திருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_16.html

Wednesday, May 15, 2019

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன்

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன் 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள்.

இராமன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். அவன் மறுத்துச் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் சூர்ப்பனகை சரியான பதில் தருகிறாள்.

இறுதியில் இராமன் சொல்கிறான்

"உனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஒருவனோ உலகாளும் இராவணன். இன்னொருவனோ செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த இரண்டு பேரில் ஒருவர் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் வேறு இடம் பார்"

என்கிறான்.

இது இராம பக்தர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இராமன் எப்படி இப்படிச் சொல்லலாம்? ஒருவேளை இராவணன் வந்து , "இந்தா என் தங்கையை ஏற்றுக் கொள்" என்று சொன்னால், இராமன் ஏற்றுக் கொள்வானா? அவன் சொன்ன சொல் தவறாதவனாயிற்றே ? இராவணனோ, குபேரனோ ஏன் சூர்பனகையை இராமனுக்கு கட்டி வைக்க மாட்டார்கள். சக்கரவர்த்தி திருமகன். நல்லவன்.

பாடல்

ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு 
     தலைவன், ஊங்கில் 
ஒருவனோ குபேரன், நின்னோடு 
     உடன்பிறந்தவர்கள்; அன்னார் 
தருவரேல், கொள்வென்; அன்றேல், 
     தமியை வேறு இடத்துச் சார; 
வெருவுவென்;-நங்கை!' என்றான்;மீட்டு 
     அவள் இனைய சொன்னாள்:

பொருள்


ஒருவனோ = உன் அண்ணன்களில் ஒருவனோ

உலகம் மூன்றிற்கு = மூன்று உலகிற்கும்

ஓங்கு ஒரு தலைவன், = சிறந்த ஒரு தலைவன்

ஊங்கில் = உன்னிப்பாக கவனித்தால்

ஒருவனோ  = மற்றொருவனோ

குபேரன் = குபேரன்

நின்னோடு = உன்னோடு

உடன்பிறந்தவர்கள் = உடன் பிறந்தவர்கள்

அன்னார்  = அவர்கள்

தருவரேல் = உன்னை எனக்குத் தந்தால்

கொள்வென் = ஏற்றுக் கொள்வேன்

அன்றேல்,  = இல்லை என்றால்

தமியை = பெண்ணே

வேறு இடத்துச் = வேறு இடத்தில்

சார;  = சேர

வெருவுவென் = நான் அஞ்சுவேன்

நங்கை!' = நல்ல பெண்ணே

என்றான்; = என்றான்

மீட்டு = மீண்டும்

அவள் = சூர்ப்பனகை

இனைய சொன்னாள்:= இதைச் சொன்னாள்


"நீயாக தனியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் என்னால் அது முடியாது. உன் அண்ணன்கள் வந்து உன்னை தாரை வார்த்துக் கொடுத்தால்  ஏற்றுக் கொள்வேன் "

என்று வெளிப்படையாக சொல்கிறான். 

அப்படி சொன்னது சரியா ?

இராமனுக்கு அபப்டி ஒரு எண்ணம் இருந்ததா ?

இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முறைப்படி பெண் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன்  என்கிறான். அவள், அரக்கி என்று தெரிந்த பின்னும். 

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தியாலும் தொடேன் என்ற செவ்வரம்" கொஞ்சம் பழுது படும். இருந்தாலும், தவறு ஒன்றும் இல்லை. இராமனின் தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவிகளை கொண்டவன். இராமன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. 

அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால், இராமன் அப்படி சொல்லி இருக்கலாமா?

கேள்வியை இராம பக்தர்களிடம் விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_15.html


Tuesday, May 14, 2019

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள். இராமனோ, "நீயோ அரக்க கணம். நான் மானிட கணம். நம்முள் கணப் பொருத்தம் இல்லையே "  என்றான்.

அதற்கு சூர்ப்பனகை, சொல்லுகிறாள் ,

"செய்த பக்தியின் பலனை நான் அறியவில்லை. என் பேதைமை. இராவணன் தங்கை என்று நான் சொன்னது பிழை. பாம்பணையில் துயிலும் குற்றம் அற்றவனைப் போல உள்ளவனே, தேவர்களை தொழுது என் பழி கொண்ட அந்தப் பிறவியை நான் நீக்கி விட்டேன்"


பாடல்

'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் 
     பயத்தை ஓராது, 
"இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் 
     பாலது' என்னா, 
'அரா-அணை அமலன் அன்னாய்! 
     அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் 
பராவினின் நீங்கினேன், அப் 
     பழிபடு பிறவி' என்றாள்.

பொருள்



'பராவ  = பரவுதல், சொல்லுதல், இங்கு துதித்தல் என்ற பொருளில் வந்தது

அருஞ் = அரிய

சிரத்தை = சிரத்தையோடு

ஆரும் பத்தியின் = செய்யும் பக்தியின்


பயத்தை ஓராது,  = பலனை நினைக்காமல்

"இராவணன் தங்கை" என்றது = "இராவணனின் தங்கை" என்று நான் கூறியது

ஏழைமைப் பாலது' என்னா,  = என்னுடைய அறியாமையே ஆகும்

'அரா-அணை  = பாம்பு அணையில்

அமலன் = குற்றம் இல்லாதவனே (மலம் = குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்)

துயிலும் =துயிலும்

அன்னாய்!  = போன்றவனே (திருமால் போன்றவனே)

அறிவித்தேன் முன்னம்; = முன்னாடியே சொன்னேனே

தேவர்ப் = தேவர்களை

பராவினின் = வணங்கி, துதித்து

நீங்கினேன் = நீக்கினேன்

அப் பழிபடு பிறவி' என்றாள். = பழிக்கத்தக்க பிறவி என்றாள்

இராமாயணத்தில், எதிர் பார்க்காத இடத்தில், எதிர் பார்க்காத பாத்திரங்கள் சில சமயம்  மிக உயர்ந்த கருத்துக்களை சொல்வதை நாம் காணலாம்.

கூனி சில அறங்களை சொல்லி இருக்கிறாள்.

இங்கே சூர்ப்பனகை சொல்கிறாள்.

நிறைய பேர் பக்தி செய்வார்கள். அதனால் என்ன பலன்,பயன் என்று அவர்களுக்குத் தெரியாது.  ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், என்று இருப்பார்கள். அதனால் என்ன பலன் என்று கேட்டால் ஒன்றும்  தெரியாது.

பலன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யலாமா ? அப்படி யார் செய்வார்கள்?

அப்படி செய்பவர்கள் அரக்கர்கள். செய்த பக்தியின் பலன் அறியாதவர்கள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்,

"சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது"

சாவி கொடுத்த பொம்மை மாதிரி செய்யாமல், செய்யும் காரியத்தின் பலா பலன்களை அறிந்து செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீ அந்தணர் குலம் , நான் அரச குலம் என்றதற்கு பதில் சொல்லி விட்டாள்

நீ அரக்க குலம் நான் மனித குலம் என்பதற்கும் பதில் சொல்லி விட்டாள்.

அடுத்து இராமன் என்ன செய்யப் போகிறான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_14.html

Sunday, May 12, 2019

குறுந்தொகை - நாணும் சிறிதே

குறுந்தொகை - நாணும் சிறிதே 


பெண்ணுக்கு நாணம் வரும். எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆணுக்கு நாணம் வருமா? வந்தால் எப்படி இருக்கும்? வெட்கப்படும் ஆண் மகனை பார்த்து இருக்கிறீர்களா?

குறுந்தொகை அப்படி ஒரு ஆண் மகனை, அவன் வாயிலாகவே காட்டுகிறது.

அவனுக்கு அவள் மேல் காதல். அவள் வீட்டில் அந்த காதலுக்கு தடை விதிக்கிறார்கள்.  அவனுக்கோ அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.

என்ன செய்வது ?

அந்தக் காலத்தில் மடல் ஏறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆண் மகன், ஒரு துணியில் அந்தப் பெண்ணின் படத்தையும், தன் படத்தையும் வரைந்து, கொடி போல் பிடித்துக் கொண்டு, பனை மரக் கட்டையில் செய்த ஒரு குதிரை போன்ற ஒரு உருவத்தின் மேல் அமர்ந்து கொண்டு, ஊரில் உள்ள சின்ன பையன்களை அந்த குதிரையை இழுத்துக் கொண்டு செல்லச் சொல்லி, அந்த பெண்ணின் வீட்டின் முன்னால் அமர்ந்து கொள்வான். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் பேசி, திருமணம் முடித்து வைத்து வைப்பார்கள்.

இதற்கு மடல் ஏறுதல் என்று பெயர்.

அந்தப் பையன் சொல்கிறான். இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணி அவளை திருமணம் செய்து கொள்வேன்.  அவள் மிக நல்லவள். எனக்குத் தெரியும்.

திருமணத்திற்கு பின், நாங்கள் இனிமையாக வாழ்வோம். எனக்கும் வயதாகிவிடும். அப்பா ஆகி, தாத்தா ஆகி விடுவேன்.  அப்போது நான் ஊருக்குள் போதும் போது, என் காது பட சொல்லுவார்கள் "இந்தா போறாரே பெரிய மனுஷன்...அவர் அந்தக் காலத்தில், அவருடைய காதலியை மணக்க என்னவெல்லாம் பண்ணார் தெரியுமா " என்று. அதை கேட்கும் போது எனக்கே கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.



பாடல்

அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த 
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் 
பெறுகதில் லம்ம யானே பெற்றாங் 
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில் 
நல்லோள் கணவ னிவனெனப் 
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே.்  

பொருள்

அமிழ்துபொதி = அமுதத்தை பொதிந்து வைத்த

செந்நா = சிவந்த நாக்கு

அஞ்ச = = அஞ்சும்படி

வந்த = முளைத்த

வார்ந்திலங்கு = வார்த்து எடுத்தது போல நேராக விளங்குகின்ற

வையெயிற்றுச் = கூர்மையான பற்களையும்

சின்மொழி = சிறிய மொழி

யரிவையைப்  = அரிவையை , பெண்ணை, மனைவியை

பெறுகதில் = பெறுவேனாக

அம்ம = அம்ம

யானே = யானே

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் = அறிவார்களாக

அம்ம  இவ்வூர் = இந்த ஊரில் உள்ளவர்கள்

மறுகில்  = வீதியில்

நல்லோள்  = நல்லவளான  அவளின்

கணவ னிவனெனப்  = கணவன் இவன் என

பல்லோர் = பலர்

கூற = கூற

யா  = நான்

நாணுகஞ் சிறிதே.்   = சிறிது நாணம் கொள்வேன்

யார் யாரெல்லாம், என்ன எல்லாம் கூத்து அடித்தார்களோ அவர்கள் இளமை காலத்தில். யோசித்துப் பார்த்தால், இதழோரம் ஒரு புன்னகை அரும்பாமலா போகும்?

நாணுகஞ் சிறிதே....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_83.html


கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல்

கம்ப இராமாயணம் - அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல் 


தன்னை மணந்து கொள்ளும் படி வேண்டிய சூர்பனகையிடம், நமக்குள்ள குல வேறுபாடு இருக்கிறது எனவே மணந்து கொள்ள முடியாது என்றான் இராமன்.

அதற்கு, "நான் தாய் வழியில் அரச குலத்தை சேர்ந்தவள்...எனவே நீ என்னை மணந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை" என்றால் சூர்ப்பனகை.

அதற்கு இராமன்

"நீயோ அரக்கர் குலத்தில் வந்தவள். இராவணன் உன் தமையன். அரக்கர்களும், மனிதர்களும் மணந்து கொள்வது முறை அல்ல" என்கிறான்.

அவள் எப்படியாக இருந்தாலும் இராமன் அவளை மணக்கப் போவது இல்லை. பின் எதற்கு ஒவ்வொரு காரணமாகச் சொல்லி, இந்த பேச்சை நீட்டிக்க வேண்டும் ?

பாடல்

அருத்தியள் அனைய கூற,
    அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல்
    உண்டாட்டம் கொண்டான்,
“‘வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில்
    மானுடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று ‘‘ என்று சாலப்
    புலமையோர் புகல்வர் ‘என்றான்.


பொருள் 

அருத்தியள் = ஆசை மிகக் கொண்டவள்

அனைய கூற, = அவ்வாறு கூற

அகத்து = உள்ளத்தில்

உறு = உண்டாகிய

நகையின் = சிரிப்பின்

வெள்ளைக் குருத்து = வெள்ளை குருத்து போல

எழுகின்ற = எழும்பி வர

நீலக் = நீல நிறம் கொண்ட

கொண்டல் =  மேகம்

உண்டாட்டம் கொண்டான், = ஒரு விளையாட்டை கொண்டான்

“‘வருத்தம் நீங்கு = வருத்தம் இல்லாத

அரக்கர் தம்மில் = அரக்கர் குலத்தோடு

மானுடர் மணத்தல்,  = மனிதர்கள் மணந்து கொள்வது

நங்கை! = பெண்ணே

பொருத்தம் அன்று  = பொருத்தமானது அல்ல

என்று = என்று

சாலப் = பெரிய

புலமையோர் = அறிவாளிகள்

புகல்வர்  = சொல்வார்கள்

என்றான். = என்றான்

இராசனுக்குத் தெரிகிறது அவள் அரக்கி என்று. மேலும், அவள் யாராக இருந்தாலும் அவளை  மணந்து கொள்ளப் போவது இல்லை என்றும் தெரியும்.

தெரிந்தும், அவளிடம் விளையாடுகிறான் என்றே கம்பன் பதிவு செய்கிறான்.

"உண்டாட்டம் கொண்டான்" என்கிறான்.

பெண்ணின் உணர்ச்சிகளோடு  விளையாடுவது சரியான செயலா?

அவள் ஆசையைத் தூண்டும்படி பேசிவிட்டு பின்னால் அவளை அவமானப் படுத்தி அனுப்பியது சரியா ?

அதற்கு சூர்ப்பனகை என்ன சொல்லி இருப்பாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_12.html

Saturday, May 11, 2019

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென்

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென் 


தன்னை மணந்து கொள்ளும்படி இராமனிடம் சூர்ப்பனகை கூறுகிறாள். "என்னால் உன்னை மணந்து கொள்ள முடியாது" என்று கூறாமல், "நான் எப்படி உன்னை மணந்து கொள்ள முடியும். நானோ அரச வம்சத்தில் வந்தவன், நீயோ வேதியர் குலத்தில் வந்தவள். நமக்குள் எப்படி தொடர்பு ஏற்பட முடியும் " என்று கேட்கிறான்.

அதற்கு என்ன அர்த்தம் ?

ஒரு வேளை அவளும் அரச குலமாக இருந்தால், பிரச்சனை இல்லை என்பதுதானே முடிவாக இருக்க முடியும்?

அதை அறிந்து கொண்டு, சூர்ப்பனகை சொல்லுகிறாள்

"ஓ..இப்ப அதுதான் பிரச்சனையா? என் தந்தை வேதியர் குலத்தில் பிறந்தவர். என் தாய் சாலகங்கடர் என்ற அரச வம்சத்தை சேர்ந்தவள். எனவே, நான் அரச குலத்தில் வந்தவள் தான். என்னை ஏற்றுக் கொள். இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன்"

என்கிறாள்.


பாடல்

'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக்
     கற்பின் எம் மோய், 
தாரணி புரந்த சாலகடங்கட 
     மன்னன் தையல்; 
போர் அணி பொலம் கொள் வேலாய்! 
     பொருந்தலை இகழ்தற்கு ஒத்த 
காரணம் இதுவே ஆயின், என் உயிர் 
     காண்பென்' என்றாள்.

பொருள்


'ஆரண மறையோன் எந்தை; = என் தந்தை மறை ஓதும் குலத்தில் தோன்றிய அந்தணர்

அருந்ததிக் கற்பின் எம் மோய்,  = என் தாய் அருந்ததி போல் கற்பில் உயர்ந்தவள்

தாரணி புரந்த = உலகத்தை ஆண்ட

சாலகடங்கட = சாலகடங்கட என்ற வம்சத்தில் வந்த

மன்னன் தையல்;  = மன்னனின் மகள் அவள்

போர் = போர் செய்வதையே

அணி பொலம்  = ஒரு அணிகலன் போல

கொள் வேலாய்!  = கொண்ட வேலை உடையவனே

பொருந்தலை = நமக்குள் பொருத்தம் இல்லை என்று

இகழ்தற்கு = இழந்ததற்கு

ஒத்த காரணம் இதுவே ஆயின், = சரியான காரணம் இது தான் என்றால்

என் உயிர்  காண்பென்' என்றாள். = என் உயிரை விட்டு விடுவேன் என்றாள்

இராமனுக்கு குல வேறுபாடு உண்டா ?

குகனோடு ஐவரானோம் என்று குகனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் என்று சுக்ரீவனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

காதல் ஐய உன்னோடும் எழுவரானோம் என்று அரக்கர் குலத்தில் பிறந்த  வீடணனை தம்பியாக ஏற்றுக் கொன்றான்

குகனோடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த 
அகமனர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் 
புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை



குகனை தம்பி என்று சொன்னால், ஏதோ ஒப்புக்கு சொன்னான், ஒரு உபசார வார்த்தை   என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

இராமன் ஒரு படி மேலே போகிறான். 

"இந் நன்நுதல் அவள் நின் கேள்" என்று சொல்கிறான். 

இந்த சீதை இருக்கிறாளே உனக்கு கொழுந்தியாள் என்று அதை மேலும்  உறுதிப் படுத்துகிறான். 

தயரதனுக்கு இராமன் நேரடியாக இறுதிக் கடன் செய்யவில்லை. 

ஜடாயு என்ற பறவைக்கு, மகன் இடத்தில் இருந்து இறுதிக் கடன் செய்தான். 

அப்படிப்பட்ட இராமனுக்கு குல வேறுபாடு இருக்குமா ?

சரி, அப்படியே இருந்தாலும், சூர்ப்பனகை அதற்கும் பதில் சொல்லி விட்டாள் . என் தாய் அரச குலத்தில் பிறந்தவள். எனவே நானும் அரச குலம் தான் என்று.

இராமன் கூறிய ஒரே எதிர்ப்பும் இப்போது சரி செய்யப்பட்டு விட்டது. 

திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே ?

செய்தானா ?

Wednesday, May 8, 2019

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே



புதிதாக திருமணம் ஆனவர்கள் அவர்கள். ஏதோ வேலை நிமித்தம் அல்லது வேறு ஏதோ தவிர்க்க முடியாத காரணம், அவளை விட்டு அவன் பிரிந்து கொஞ்ச காலம் போக வேண்டி இருக்கிறது. அவளுக்கு அவனை விட்டு பிரியவே மனம் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதே சமயம், போகும் நேரத்தில் அபசகுனமாக அழுது கொண்டிருந்தால் அது நல்லா இருக்காது என்று எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு அவனை வழி அனுப்புகிறாள்.

அவனும் ஊர் போய், செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஊர் திரும்புகிறான்.

அவனை கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியவில்லை. கண்ணீர் பொங்கி பொங்கி வருகிறது. அடக்க முடியாமல் அழுகிறாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு, மெல்லச் சிரிக்கிறாள். வெட்கம் வருகிறது. ஐயோ, நான் ஏன் இப்படி அழுகிறேன்...அவர் தான் வந்து விட்டாரே , எதுக்கு அழுகிறேன். அழுவதாய் இருந்தால் அவர் போகும் போது அழுதிருக்க வேண்டும். அழுது, அவர் போவதை நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்போது ஏன் அழுகிறேன் என்று நினைத்து தனக்குத் தானே வெட்கப் படுகிறாள். "இந்த கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே " என்று தன்னைத் தானே வியக்கிறாள்.


பாடல்

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழி துளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

பொருள்

நாணில = நாண் + இல்லை = நாணம் இல்லை

மன்ற = மற்ற

வெங் கண்ணே = என் கண்ணே

நாணேர்பு = நாள் + ஏற்பு = அவர் சென்ற நாளை ஏற்றுக் கொண்டு. அவர் பிரிந்து போவதை ஏற்றுக் கொண்டு

சினைப் = கரு கொண்ட

பசும்  = பச்சை

பாம்பின் = பாம்பின்

சூன் = சூல் , கரு

முதிர்ப் பன்ன = முதிர்ந்த போது. பச்சை பாம்பின் வயிற்றில் இருக்கும் கரு போல

கனைத்த = வளர்ந்த

கரும்பின் = கரும்பின்

கூம்பு = தோகை

பொதி யவிழ = விரித்து நிற்க

நுண்ணுறை = நுண்ணிய

யழி துளி = மழை துளி

தலைஇய = பெய்ய



தண்வரல் வாடையும்  = குளிர்ந்த வாடை காற்று 

பிரிந்திசினோர்க் = பிரிந்து வாழும் தலைவருக்கு 

கழலே. = அழுவதால் 

பிரிந்த போது அழாமல், சேரும் போது அழுவதால், இந்த கண்களுக்கு ஒரு நாணம் இல்லை. 

மழைச் சாரல், குளிர்ந்த சூழ் நிலை.  ஊரெல்லாம் ஒரே பச்சை பசேலென இருக்கிறது. கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது. 

பிரிந்தவர் வந்திருக்கிறார். 

அப்புறம் என்ன?....

சங்க காலப் பாடல். 

மனித மனம், மனிதனின் உணர்ச்சிகள் எப்படி நிலத்தோடும், கால சூழ் நிலையாலும் பாதிக்கப் படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

நாம் அவ்வளவாக நேரடியாக அறிவது இல்லை. நாம் வாழும் சூழ்நிலை நம் எண்ணங்களை, நம் சிந்தனைகளை பாதிக்கிறது என்பதை. 

வீட்டைப் பெருக்கி , பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, அழகாக வைத்திருங்கள்....மனம் சந்தோஷமாக இருக்கும். 

வீட்டை குப்பை கூளமாக வைத்து இருங்கள். மனமும் குழப்பத்தில் இருக்கும். 

தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்தார்கள். 

அகம் , புறத்தை பாதிக்கிறது. 

புறம், அகத்தை பாதிக்கிறது. 

அகமும் புறமும் ஒன்றான ஒரு கூட்டு கலவைதான் நம் வாழ்க்கை. 

சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_8.html

Tuesday, May 7, 2019

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு 


வீட்டில், அலுவலகத்தில், வெளி உலகில் என்று பல இடங்களில் நாம் பல செயல்களை செய்கிறோம். அப்படி தொழில் ஆற்றும் போது எப்படி வேலை செய்ய வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

என்னங்க இது, நாம இருக்கிறது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. வள்ளுவர் இருந்தது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். இப்ப இருக்கிற அலுவலகம், தொழில் நுட்பம், வேலைச் சிக்கல்கள் எல்லாம் வள்ளுவருக்கு எப்படித் தெரியும். அவர் எப்படி எனக்கு அறிவுரை கூற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.  மேலும், எப்படி வேலை செய்ய வேண்டும் கட்டு காட்டாக வழிகாட்டி நூல்கள் இருக்கின்றன (operating manual ). அதன் படி நடந்தாலே சிக்கல் வருகிறது. வள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் என்ன பெரிதாக சொல்லி விட முடியும் என்றும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் தவறு ஒன்றும் இல்லை.

வள்ளுவர் என்ன தான் சொல்கிறார் என்று கேட்போம். அப்புறம் முடிவு செய்வோம்.

பாடல்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு

பொருள்

எள்ளாத = பிறர் பார்த்து நகைக்கும் படியாக இல்லாமல்

எண்ணிச் = திட்டமிட்டு

செயல்வேண்டும் = செயல் பட வேண்டும்.

தம்மொடு = தம்மோடு

கொள்ளாத = ஒத்து வராதாவற்றை

கொள்ளாது உலகு = ஒத்துக் கொள்ளாது உலகு

உலகு ஒத்துக் கொள்ளும் காரியங்களை செய்ய வேண்டும். பிறர் பார்த்து நகைக்கும்படியான காரியங்களை செய்யக் கூடாது.

அவ்வளவுதான் குறள்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இதெல்லாம் நமக்குத் தெரியாதா? இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ?

சிந்திப்போம்.

"பிறர் பார்த்து நகைக்கும் படியாக செயல் செய்யக் கூடாது" அப்படி என்றால் என்ன அர்த்தம்?

முதலாவது, நம் தகுதிக்கு குறைவான செயல்களை செய்யக் கூடாது. நம் தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்ற  செயல்களை செய்ய வேண்டும்.  அதை இன்னும்  விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது, தெரியாதவற்றை செய்தால் உலகம் நகைக்கும் படி ஆகி விடும். எனக்கு ஒரு நிறுவனத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கத் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். ஒரு கணக்குப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். நான் கணக்கு வேலை செய்தால் யாரும் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். மாறாக, நான் போய் அந்த நிறுவனத்தின் மின்சாரம் வரும் transformer கழட்டி மாட்டுகிறேன் என்று இறங்கினால் எப்படி இருக்கும் ? உலகம் நகைக்குமா? நகைக்காதா ? கோமாளி இருக்கும். தெரியாத ஒன்றில் இறங்கி  பிறர் நகைக்கும் படி செயல் செய்யக் கூடாது.

மூன்றாவது, தெரிந்த வேலையை செய்யாமல் சோம்பிக் கிடந்தாலும் உலகம் எள்ளி நகையாடும்.  "வேலை செய்ய மாட்டோம்னா சொல்றோம். நல்ல வேலை கிடைக்கணும்ல " என்று சிலர் சொல்லுவார்கள்.

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் 
நிலம் எனும் நல்லாள் நகும் 

என்பார் வள்ளுவர். வேலை இல்லை, கையில் காசு இல்லை, எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை, எனக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை என்று இப்படி  ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பவரைக் கண்டால் இந்த நில மகள் சிரிப்பாள் என்கிறார். நில மகள் என்றால் இந்த உலகில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் என்று அர்த்தம். நிலமா சிரிக்கும்.

நான்காவது, பிறர் நகைக்கும் படி வேலை செய்யக் கூடாது என்றால் என்ன அர்த்தம், பிறர் போற்றும் படி, பிறரை வியக்கும் படி வேலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

ஒரு வேலை செய்தால், "அடடா என்ன அற்புதம்...இப்படி யாராலயும் செய்ய முடியாது  "என்று வியக்க வேண்டும்.

...வீட்டை என்னமா அழகா வச்சிருக்கா அந்த பொண்ணு. கண்ணுல ஒத்திக்கலாம். அப்படி ஒரு சுத்தம். அப்படி ஒரு ஒழுங்கு வீட்டில் என்று பிறர் சொல்லும் படி இருக்க வேண்டும். வீடா அது, குப்பை கூளமா மாதிரி இருக்கு இருக்கு என்று  இகழ்ந்து நகைக்கும் படி இருக்கக் கூடாது.

...ஆஹா சாப்பாடு என்ன உருசியாக இருக்கிறது என்று வியக்க வேண்டும்.

....இந்த ரிப்போர்ட், இந்த presentation என்ன நேர்த்தியாக இருக்கிறது என்று வியந்து பாராட்ட வேண்டும்.

...என்னமா படித்து எவ்வளவு மார்க் வாங்கி இருக்கிறான் பாரு என்று மாணவனை பார்த்து வியக்க வேண்டும்.

அப்படி எந்த வேலை செய்தாலும், பிறர் பார்த்து வியக்கும் படி செய்ய வேண்டும்.

சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு புரிகிறது அல்லவா?


சரி, அது என்ன "தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


தம்மொடு என்பதை கடைசியில் உள்ள உலக என்று வார்த்தையோடு சேர்த்துக் கொள்ளுங்கள். 

"உலகோடு கொள்ளாத கொள்ளாது உலகு" என்று பொருள் வரும். 

அதாவது,  இந்த உலகிற்கு ஒத்து வராததை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும்  ஒரு சில கோட்பாடுகள் உண்டு. வரை முறைகள் உண்டு.  அதற்கு ஒவ்வாத செயல்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. 

உதாரணமாக, சில உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று  ஒரு வரைமுறை வைத்து இருக்கிறது இந்த உலகம். அது இடத்துக்கு இடம் மாறுபடலாம். மதத்திற்கு மதம் மாறுபடலாம். ஆனால், ஒரு இடத்தில், ஒரு மதத்தில்  இதுதான் சட்டம் என்று ஆன பின், அதை மீறுவதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கறி மீன் சாப்பிடக் கூடாது என்று வரை முறை இருக்கிறது.  அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை உலகம் ஒத்துக் கொள்ளாது. 

பொதுவாக சொல்லுவது என்றால், சட்ட விதி முறைகள், சமுதாய பழக்க வழக்கங்களை மீறுவதை  உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என்று சட்ட விதிமுறைகளை மீறக் கூடாது. 

நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்பதற்காக தேர்வில் காப்பி அடிக்கக் கூடாது. 

இன்னொரு விதமாக இதை சிந்திக்கலாம். 


"தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


அதாவது, நம்முடைய மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்வதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. தவறு என்று மனசாட்சி சொன்னால், அதை செய்யக் கூடாது. 

படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடுவது சரி என்று மனசாட்சி சொல்கிறதா? 

உருப்படியாக எதுவும் செய்யாமல் வாட்ஸாப்ப், பக்கத்து வீட்டு பெண்கள், டிவி சீரியல், என்று நேரத்தை வீணடிப்பதை சரி என்று மனசாட்சி சொல்கிறதா ?

மனம் தவறு என்று சொல்வதை செய்யக் கூடாது. 

என்ன? ஒண்ணே முக்கால் அடி போதுமா ? 

வினை செயல் வகை என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 

எப்படி வேலை செய்ய வேண்டும் என்று  சொல்லி இருக்கிறார்.  பிரமிப்பூட்டும் குறள்கள். 

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_7.html

Monday, May 6, 2019

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள்

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள் 


இராமன் மேல் தனக்குள்ள காதலை சூர்ப்பனகை வெளிப்படையாகவே சொல்லி விட்டாள். "பெண்மைக்கு ஒரு பங்கமும் இல்லாமல் வந்து இருக்கிறேன். என் இளமை எல்லாம் வீணே கழிந்து விட்டது" என்று கூறினாள்.

இராமனுக்கு தெரிந்து விட்டது. இவள் சாதாரண பெண் இல்லை. அரக்கி என்று அறிந்து கொண்டான். அவள் நோக்கமும் சரி இல்லை என்றும் புரிந்து கொண்டான்.

புரிந்தவன் என்ன செய்திருக்க வேண்டும்? "அம்மா தாயே, ஆளை விடு...வேறு இடம் பார் " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு இராமன் சொல்கிறான் ..."உனக்கும் எனக்கும் எப்படி பொருந்தும். நீயோ அந்தணர் மரபில் வந்தவள். நானோ அரச குலத்தில் பிறந்தவன். நமக்குள் எப்படி ஒரு தொடர்பு இருக்க முடியும் " என்று சொல்கிறான்.

"எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் வேறு ஒரு பெண்ணை தொடுவது இல்லை என்ற விரதம் பூண்டவன். எனவே உன் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது " என்று  சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, "நம் குலம் வேறு வேறாக இருக்கிறதே" என்று கூறுகிறான். ஒரு வேளை அவள் அரச குலத்தில் பிறந்தவளாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது இருப்பானா ?

எதற்காக வீணாக அவள் மனதில் ஆசையை வளர்க்க வேண்டும் ?

பாடல்


நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; 
     வினை மற்று எண்ணி 
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் 
     மனத்துள் கொண்டான்; 
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் 
     துணிவிற்று அன்றால்,
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் 
     வந்தேன்' என்றான்.


பொருள்

நிந்தனை = பழிக்கத்தக்க

அரக்கி = அரக்கி

நீதி நிலை இலாள் = நீதி வழியில் நில்லாதவள்

வினை = செயல்

மற்று எண்ணி = வேறு எதையோ எண்ணிக் கொண்டு

வந்தனள் ஆகும்' என்றே = வந்திருக்கிறாள் என்று

வள்ளலும்  = இராமனும்

மனத்துள் கொண்டான்;  = மனதில் நினைத்துக் கொண்டான்

'சுந்தரி! = சுந்தரி (சூர்பனகையே)

மரபிற்கு = பழக்க வழக்கத்திற்கு

ஒத்த தொன்மையின்  = ஒத்துப் போகக் கூடிய தன்மையில்

துணிவிற்று அன்றால் = துணிந்து செய்ய முடியாது (உறுதியாக செய்ய முடியாது)

அந்தணர் பாவை நீ; = நீயோ அந்தணர் பாவை

யான் அரசரில்  வந்தேன்' என்றான். = நான் அரச குலத்தில் வந்தவன் என்றான்

இது ஒரு தேவை இல்லாத வாக்கு வாதம். "நம்ம இரண்டு பேருக்கு நடுவில் குலம் தான் வேறுபாடு .." என்று கூறினால் என்ன அர்த்தம்.

அதற்கும் சூர்பனகை பதில் வைத்து இருக்கிறாள் ....

அது என்ன என்று நாளை பார்ப்போமா


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_6.html



Sunday, May 5, 2019

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய்

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய் 


தன் காதலை சொன்ன பின்னும் அமைதியாக நிற்கும் இராமனை கண்டு சூர்பனகைக்கு குழப்பம் வருகிறது. அவன் என்னை விரும்புகிறானா இல்லை விரும்பவில்லையா என்று சந்தேகம் கொள்கிறாள்.

சரி, இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுப்போம் என்று பேசுகிறாள்.

"ஓவியத்தில் எழுத முடியாத அளவுக்கு அழகானவனே...நீ இங்கு எதற்கு வந்தாய் என்று நான் அறியவில்லை. இங்கே வாழும் முற்றும் துறந்த முனிவர்களிடம் அவர்கள் சொல்லும் செயலை செய்து நான் வாழ்கிறேன். என் பெண்மைக்கு ஒரு பங்கமும் வரவில்லை. என் இளமை அப்படியே இருக்கிறது, ஒரு பயனும் இன்றி. என் வாழ் நாட்கள் அப்படியே வீணாக கழிந்து கொண்டு இருக்கின்றன"

என்றாள்.

பாடல்


‘எழுதரு மேனியாய்! ஈண்டு
    எய்தியது அறிந்திலாதேன்,
முழுது உணர்முனிவர் ஏவல்
    செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும்
    இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா
    கழிந்தன போலும் ‘என்றாள்.

பொருள்

‘எழுதரு =  ஓவியத்தில் எழுதுவதற்கு அருமையான. கடினமான

 மேனியாய்! = மேனியை உடையவனே

ஈண்டு = இங்கு

எய்தியது = (நீ) வந்தது

அறிந்திலாதேன், = (ஏன் என்று) அறிய மாட்டேன் . எனக்குத் தெரியாது.

முழுது உணர்முனிவர் = முழுவதும் உணர்ந்த முனிவர்கள்

ஏவல் செய் தொழில் = அவர்கள் ஏவிய வேலையை

முறையின் முற்றிப் = முறைப்படி முழுவதும் செய்வேன்

பழுது அறு பெண்மையோடும் = குற்றம் இல்லாத பெண்மையோடும்

இளமையும் = என் இளமையும்

பயனின்று ஏகப் = பயனின்று போக

பொழுதொடு = சிறு பொழுதோடு

நாளும் = ஒவ்வொரு நாளும்

வாளா = வீணாக

கழிந்தன போலும் ‘என்றாள். = கழிந்து விட்டது போல என்றாள்


அது என்ன பொழுதொடு நாளும் ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.

பெரும் பொழுது என்றும் சிறு பொழுது என்றும்.

பெரும் பொழுது என்றால் ஆண்டின் பகுதிகள்.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் - மார்கழி, தை
பின் பனிக் காலம் - மாசி பங்குனி
இள வேனில் - சித்திரை, வைகாசி
முது வேனில் - ஆனி , ஆடி

இவற்றை பெரும் பொழுது என்று குறித்தார்கள்.

ஒரு நாளின் சிறு பகுதிகளை சிறு பொழுது என்று வரையறுத்தார்கள்


வைகறை = இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
காலை = 6 am முதல்  10 am  வரை
நண்பகல் = 10 am   முதல் 2 pm வரை
எற்பாடு = 2 pm  முதல் 6 pm வரை
மாலை = 6 pm முதல் 10 pm வரை
யாமம் = 10 pm முதல் அதி காலை 2 am வரை

இவற்றிற்கு சிறு பொழுதுகள் என்று பெயர்.

நம்முடைய மனமும் புத்தியும் சத்வம், ராஜஸம், தாமசம் என்று முக்குணங்களில் மாறி மாறி இயங்கும் தன்மை படைத்தவை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும்.

வைகறை என்று சொல்லப் படும் இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையில் உள்ள நேரம் சத்வ குணம் ஓங்கி நிற்கும் காலம் என்று சொல்கிறார்கள்.

எனவே தான், பூஜை, படிப்பது என்ற நல்ல காரியங்களை அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று விதித்தார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி எல்லாம் இந்த நேரத்தில் தான்  பாடப்படும்.

நான்கு மணிக்கு எழுந்து படித்துப் பாருங்கள். மனதில் அப்படியே உட்காரும்.

காலத்துக்கும் மனித மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை உன்னித்து கவனித்து, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் வரையறுத்து தந்திருக்கிறார்கள்.  நேரம் இருப்பின், அது பற்றி பின் ஒரு நாள் விரிவாக சிந்திப்போம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சூர்ப்பனகை சொல்கிறாள்

பொழுதும் நாளும் கழிந்தது என்று.

காலை போய் இரவாய் , கார் காலம் போய் வேனில் காலமாய் நாட்கள் உருண்டோடி விட்டன ..என் இளமை பாழாய் போகிறது என்று உருகுகிறாள்.

ஒரு பெண் காமத்தில் தவிக்கிறாள். வாய் விட்டுச் சொல்கிறாள்.

இராமன் என்ன செய்திருக்க வேண்டும்?

சிந்தித்துக் கொண்டிருங்கள்.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_5.html




Saturday, May 4, 2019

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும்

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும் 



அவள் மேல் அவனுக்கு தீராத காதல். அவள் பெரிய இடத்துப் பெண். இவனோ சாதாரண நடுத்தர வர்க்கம். அவள், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இவன் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதல் இதை எல்லாம் கேட்டுக் கொண்டா வருகிறது ? அது பாட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து கதவை தட்டுவது மட்டும் அல்ல, வீட்டுக்குள் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து கொள்கிறது.

எப்படி சொல்வது, எப்படி  சொல்வது என்று தவிக்கிறான் அவன்.

அவளை தூரத்தில் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதுக்குள் மழை. இவள் மட்டும் என் வாழ்க்கை துணையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு காண்கிறான். அவளை காதலியாக மட்டும் அல்ல, சில சமயம் பார்க்கும் போது, அவளின் அழகு, அந்த வெகுளித்தனம், களங்கம் இல்லாத அந்த முகம்...கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றும் அவனுக்கு.

அவள் மடியில் குழந்தையாக தலை வைத்து படுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்.

காலம் அப்படியே கனவில் கரைந்து கொண்டிருந்தது....


பாடல்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.


துணையும் -  மனைவியை வாழ்க்கை துணை என்றார் வள்ளுவர்.  வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். அது என்ன துணை? அவர்தான் மெயின், நாங்க என்ன துணையா என்று பெண் விடுதலையாளர்கள் போர் கொடி தூக்கக் கூடும். ஏன், கணவன் என்பவன் எங்களுக்கு துணையாக இருக்கக் கூடாதா என்றும் கேட்கக் கூடும். 

துணை எப்போது தேவைப் படும்?

பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

"துணையோடல்லது நெடு வழி போகேல்" என்பார் ஒளவையார். 

"துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ " என்பார் திருநாவுக்கரசர். 


அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ 
               அன்புடைய மாமனும் மாமியும் நீ 
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
               ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
               துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ 
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ 
               இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

துணை என்பது பெரிய விஷயம். 


தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 

கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின்  வேரும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 

பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. மனதில் ஆசையை தருபவள். அப்படி ஒரு அழகு. 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு.  

ஆசையை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவள் அல்ல அவள். அதை ஒரு கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவள் அவள். 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 


பெண் என்பவள் இன்பத்தின் இருப்பிடம் மட்டும் அல்ல.

அவள் துன்பம் வரும் போது துணையாக இருப்பவள். தளர்ந்த போது தோள் தந்து தாங்குபவள். 

குழப்பம் வரும் போது தெளிவு தரும் ஞானம் தருபவள். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ளவள் பெண் என்பான் பாரதி.
தாயக, தோழியாக, காதலியாக, தாரமாக, சகோதரியாக, மகளாக எல்லாமாக இருப்பவள்  அவளே. 

திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_4.html