Monday, November 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள் 


Poetry is the language of hearts என்று சொல்லுவார்கள். கவிதையை இதயத்தில் இருந்து படிக்க வேண்டும். மூளையில் இருந்து அல்ல. கவிதையின் உயிர் அது சொல்லம் உணர்சிகளில் இருக்கிறது. 


அந்த உணர்வை தொட்டு விட்டால், "அட" என்று வியக்க வைக்கும். இல்லை என்றால் "இதுல என்ன இருக்கு" என்று கேள்வி கேட்கத் தோன்றும். 


பெரும்பாலான பிரபந்தப் பாடல்களை படிக்கும் போது, அர்த்தம் கை நழுவிப் போய் விடுகிறது. உணர்ச்சி ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


அப்படிப்பட்ட பாசுரம் ஒன்று கீழே. 


அது அந்தக் காலம். அவளுக்கு அவன் மேல் அவ்வளவு காதல். செல் போன்களும், whatsapp களும் இல்லாத காலம். கார் பஸ் கிடையாது. தபால் தந்தி கிடையாது. அவன் இருப்பதோ வெகு தொலைவில். அவளால் நினைத்தால் கூட அங்கே செல்ல முடியாது. என்ன செய்வாள் பாவம். 


மறுகிக் கொண்டு இருக்கிறாள். காதல் ஒரு பக்கம். ஏக்கம் ஒரு பக்கம். காண முடியவில்லையே என்ற தவிப்பு மறு பக்கம். 


யார் கிட்டவாவது சொல்லி விடலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாள். 


அங்கே சில மேகங்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை இந்த மேகங்கள் அவன் இருக்கும் இடம் போகுமோ ? இதுக கிட்டா சொல்லி விட்டால் ஒரு வேளை அவனுக்கு என் காதல் எண்ணம் போய்ச் சேருமோ என்று நினைக்கிறாள். 


அவள்: ஏய் மேகங்களே, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? 

மேகம்: என்ன உதவி சொல்லு..

அவள்: நீங்க அவன் இருக்கும் ஊருக்குப் போனால், என் நிலை பற்றி அவனிடம் சொல்லுவீர்களா?


மேகம்: அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் முடியாது. நேரம் இல்லை. 


அவள் யோசிக்கிறாள். இந்த மேகங்களை விட்டால் வேறு வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று. 


அவள்: சரி, ஒண்ணு செய்யுங்க. போற போக்கில் உங்க காலை என் தலை மேல் வச்சிட்டு போங்க. அவன் இருக்கிற ஊர்ல போய் நீங்க மழை பெய்யும் போது, என் கூந்தலின் வாசம் அவனுக்குத் தெரியும். அதில் இருந்து அவனுக்கு என் நினைவு வரும். அது போதும் எனக்கு. 


என்ன இது ஏதோ தமிழ் பட சீன் மாதிரி இருக்கு. இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எல்லாம் கூடவா பாசுரம் இருக்கு? இருக்காது. 


பாடல் 

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


சீர் பிரிக்காமல் புரியாது 


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல்

அசைமின்கள் என்றால்  அசையும் கொல்லோ ? அம் பொன் மா மணிகள்

திசை மின்மிளிரும் திருவேங் கட்த்து அவன் தாள் சிமயம்

மிசை மின்மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_30.html

(click the above link to continue reading)

இசைமின்கள் = சொல்லுங்கள் 

தூது = தூது 

என்று இசைத்தால் = என்று கூறினால் 

இசையிலம் = ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் 


என் தலை மேல் = என் தலை மேல் 


அசைமின்கள் என்றால் = உங்கள் காலை வைத்து விட்டு போங்கள் என்றால் 

அசையும் கொல்லோ ?  = கேட்பீர்களா? 

அம் பொன் மா மணிகள் = பொன்னும் மணியும் 

திசை = திசைகள் தோறும் 

மின்மிளிரும் = மின்னல் போல் வெளிச்சம் தரும் 

திருவேங் கட்த்து = திரு வேங்கடத்தில் 

அவன் தாள் சிமயம் = சிகரத்தின் மேல் உள்ள அவன் திருவடிகளில் 

மிசை மின்மிளிரிய = மின்னல் அடித்துக் கொண்டு

போவான்  = போகும் 

வழிக் கொண்ட மேகங்களே. = அந்த வழியாக (போகும்) மேகங்களே 


என்னையும் தொட்டு, அவனையும் தொடும் போது, அவன் என்னை தொட்டதாகவே நான் உணர்வேன். அவன் நேரில் வந்து என்னைத் தொட விட்டால் என்ன. இந்த மேகங்களின் ஊடாக அவன் என்னைத் தொடுவதாக உணர்வேன் என்கிறாள். 


வருகின்ற அருள் நேராக அவனிடம் இருந்து வர வேண்டும் என்று அல்ல. எப்படியோ, யார் மூலமோ, எந்த வடிவிலோ வந்து சேரும். 


வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறது. 


காற்றாக, நீராக, உணவாக, உறவாக எத்தனையோ வகைகளில்...


உணர்வுடையார் பெருவறுனர் ஒன்றும் இல்லார்க்கு ஒன்றும் இல்லை. 

No comments:

Post a Comment