Thursday, December 31, 2020

திருக்குறள் - விலங்கும் மக்களும்

திருக்குறள் - விலங்கும் மக்களும் 


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பெரும்பாலானோர் சொல்லுவது, மனிதனுக்கு சிரிக்கத் தெரியும், விலங்குகளுக்கு அது தெரியாது என்பது தான். 


பல வேறு பாடுகள் இருந்தாலும், வள்ளுவர் ஒன்றைச் சொல்கிறார்.


கல்வி அறிவு. அதுதான் வேறுபாடு என்கிறார். விலங்குகள் தானே கற்றுக் கொள்ளவதில்லை. நூல் அறிவு இல்லாதவை. சரி/தவறு, நல்லது/கெட்டது, உயர்ந்தது/தாழ்ந்தது என்று ஒன்றும் தெரியாது. மனதுக்கு பட்டதை செய்யும். 


மனிதராய் பிறந்தும், கல்வி அறிவு இல்லாதவர்களை என்ன என்று சொல்லுவது? விலங்குகளுக்கு கல்வி அறிவு இல்லை. கல்வி அறிவு இல்லாதவை விலங்குகள்.


வள்ளுவர் அப்படி நேரே சொல்லவில்லை. 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ அந்த அளவு வேறுபாடு நூல் அறிவு பெற்றவர்களுக்கும் , அந்த அறிவு பெறாதவர்களுக்கும் இருக்கிறது என்கிறார். 


நுண்மையான வேறுபாடு. 


பாடல் 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்


பொருள் 


click the following link to continue reading


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_31.html


விலங்கொடு = விலங்கோடு ஒப்பிட்டு பார்த்தால் 

மக்கள் அனையர் = மக்கள் எப்படியோ அப்படி 

இலங்குநூல் = சிறந்த நூல் 

கற்றாரோடு  = கற்றவர்களோடு 

ஏனை யவர் =கல்லாதவர் 


நாங்களும் தான் எவ்வளவோ வாரப் பத்திரிகை, நாவல், whatsapp இல் வரும் அறிவு பூர்வமான   செய்திகள்,  செய்தித்தாள் போன்றவற்றைப் படிக்கிறோம்  என்று கூறலாம். 


"இலங்கு நூல்" என்றார். இலங்குதல் என்றால் தெளிவு தருதல், வெளிச்சம் தருதல், உண்மையை விளங்கச் செய்தல் என்று பொருள். 


இலங்கு + அண்  = இலக்கணம். மொழியை விளங்கச் செய்வது இலக்கணம். 


இலக்கம் - இருக்கும் இடத்தை சரியாக சுட்டுவது, அளந்து சொல்லுவது. குத்து மதிப்பாக இல்லாமல், சரியாக சொல்லுவதால் அது இலக்கம்.  இலக்கம் என்றால் குறிக்கோள் என்றும் பொருள் உண்டு. 


இலங்கு நூல் என்றால் ஏதோ ஒரு நூல் அல்ல.  தெளிவு தரும் நூல் சந்தேகத்தை தீர்க்கும் நூல், வழி நடத்தும் நூல். 


அவற்றைப் படிக்காதவர்களும், விலங்கும் ஒன்று தான் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார். 

கொஞ்சம் கடினமான வார்த்தைப் பிரயோகம்தான். 

சிந்தித்துப் பார்ப்போம். 


கண்ட நூல்களையும் படிப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களை தேடிச் சென்று படிப்போம். 


குப்பைகளை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே நல்லது. 






1 comment:

  1. நல்ல குறள்தான்.

    ஆனால், ஏட்டுப் படிப்புப் படித்தல் மட்டும் போதுமா?

    ReplyDelete