Tuesday, December 8, 2020

திருக்குறள் - அன்பும் அருளும்

 திருக்குறள் - அன்பும் அருளும் 


துறவத்துக்கு அன்பு எப்படி அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தோம். அன்பு இருந்தால், எதையும் மகிழ்வோடு துறக்க முடியும். 


அதெல்லாம் சரி, நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் தருகிறோம். அது எல்லாம் துறவறம் என்று எப்படிச்  சொல்லுவது? 


நாம் ஒரு பூங்காவில் அமர்ந்து இருக்கிறோம். நம் பிள்ளையோ, பேரப் பிள்ளையோ அங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறது. பதறிப் ஓடிப் போய் தூக்குவோம் இல்லையா. 


சரி. 


வேறு யாரோ ஒரு பிள்ளை கீழே விழுந்து விடுகிறது. நமக்கு என்ன, நம்ம பிள்ளை இல்லையே என்று இருப்போமா அல்லது அந்தப் பிள்ளையையும் அதே மாதிரி ஓடிப் போய் தூக்குவோமா? 


பெரும்பாலானோர் தன் பிள்ளை மாதிரியே மற்ற பிள்ளைகள் விழுந்தாலும் பதறிப் போய் தூக்குவார்கள். சிலர் தூக்காமல் இருக்கலாம். 


நம் பிள்ளை மேல் நாம் செய்வது அன்பு. மற்ற பிள்ளை மேல் நாம் செய்வது கருணை. 


இது எப்படி ஆரம்பிக்கிறது என்றால், முதலில் தான் தான் என்று இருந்தவன், (ள்), பின் தன் மனைவிக்கு என்று பாடு படுகிறான். அவள் என்ன சொன்னாலும், அவளை பாதுகாக்க, அவளை மகிழ்ச்சிப் படுத்த பாடு படுகிறான்.  

அடுத்த கட்டம் பிள்ளைகள்.  ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல், பிள்ளைகள் மேல் அன்பு படர்கிறது. 


அடுத்த நிலை, தன் குடும்பம் தாண்டி மற்றவர்கள் மேலும் பரிவு கொள்வது. ஒரு ஏழைக்கு சோறு போடுவது, பணம் தானம் செய்வது, பக்கத்து வீட்டில் முடியாவிட்டால் ஓடிப் போய் உதவி செய்வது என்று அந்த வட்டம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_8.html

click the above link to continue reading 


அன்பு கொஞ்சம் கொஞ்சமாக அருளாக மாறும். வீடு தாண்டி அது தன் கிளை விரிக்கும். 


தனக்கு தனக்கு என்பது சுயநலம் என்றால், என் மனைவி, என் பிள்ளை என்பதும் சற்றே பெரிய சுயநலம். அவ்வளவுதான். 

எப்படி பிள்ளைக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறதோ, அந்த மகிழ்ச்சி மற்றவருக்கு செய்யும் போதும் வரும். 


வரணும். வரவில்லை என்றால், மனம் விரியவில்லை என்று அர்த்தம். 


குகனையும், சுக்ரீவனையும், வீடனனையும் தம்பியாக, தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அந்த அருள் வரும். 


எல்லாம் என் குடும்பம்தான் என்ற எண்ணம் வரும். அப்படி வரும் போது, கொடுப்பது எளிதாகும். விடுவது சுகமாகும். 


மனம் விரிய விரிய மகிழ்ச்சி பொங்கும். 


நாம் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவதை விட நம் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது எவ்வளவு சுகம். பேரப் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது இன்னும் சுகம். 


தான் ஈட்டிய பொருளால் இன்னொரு உயிர் சுகப் படுவதை காண்பது இன்னொரு சுகம். 


அது துறவிக்கு மட்டுமே வாய்த்த வரம். 


துறவு என்பது சுகம். துறக்காமல் இருப்பதுதான் கடினம். துன்பம். 


சரி, இதெல்லாம் திருக்குறளில் எங்கே இருக்கிறது?  


நாளை முதல் அதை சிந்திக்க இருக்கிறோம். 

 


2 comments:

  1. மனம் விரிய விரிய மகிழ்ச்சி பொங்கும்.

    அட்டகாசமான வரிகள்

    ReplyDelete
  2. வள்ளுவத்தை சொல்லும் அழகு மிகக் காணுகிறேன்.
    வணங்கி மகிழ்கிறேன்.

    ReplyDelete