Friday, February 12, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத் தூய்மை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத்  தூய்மை 


பெரியாழ்வார் பாசுரம்.


தமிழிலே "பழக்க வழக்கம்" என்று ஒரு சொற்றொடர் உண்டு. 


ஒன்றை திரும்ப திரும்பச் செய்வதை பழக்கமாகக் கொண்டால், அது வழக்கமாகி விடும். அப்புறம் நாம் நினைகாமாலையே அதை செய்து விடுவோம். 


காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது மாதிரி. தன்னிச்சையாக நிகழும். 


பெரியாழ்வார் சொல்கிறார் 


"எனக்கு வாக்கு சுத்தம் கிடையாது. சொல்லில் வரும் குற்றங்கள் பல என்னிடம் உண்டு. இப்படி குற்றமுள்ள நாவால் உன்னை எவ்வாறு நான் போற்றுவேன். சரி, போற்றாமல் விட்டு விடலாம் என்றால், இந்த நாக்கு உன்னைப் போற்றி பழகி விட்டது. நான் சொன்னாலும் அது கேட்பது இல்லை. என் நாக்கு என் வசம் இல்லை.  நான் உன்னைப் போற்றி சொல்கின்ற சொற்களை ஏதோ காகம் கரைந்தது போல என்று எடுத்துக் கொள்ளேன்" என்கிறார். 



பாடல் 


வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_12.html


(click the above link to continue reading)


வாக்குத் = வாக்கில், பேச்சில் 


தூய்மை  = தூய்மை 


யிலாமையி னாலே = இல்லாததால் 


மாதவா  = மாதவா 


உன்னை = உன்னை 


வாய்க் கொள்ள மாட்டேன் = என் வாயால் சொல்ல மாட்டேன் 


நாக்கு = என்னுடைய  நாக்கு 


 நின்னையல் லால் = உன்னைத் தவிர 


அறி யாது = வேறு ஒன்றை அறியாது 


நான தஞ்சுவன் = நான் அதை நினைத்து அஞ்சுகிறேன் 


என் வசமன்று = என் நாக்கு என் வசம் அன்று 


மூர்க்குப் = மூர்கனைப் போல 


பேசுகின் றானிவ னென்று = பேசுகிறான் இவன் என்று 


முனிவா யேலும் = நீ என் மேல் கோபப் பட்டாலும் 


என்  = என்னுடைய 


நாவினுக்கு = நாவினை 


ஆற்றேன் = என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை 


காக்கை வாயிலும்  = காகத்தின் வாயில் இருந்து  வரும் சப்தங்களை கூட 


கட்டுரை கொள்வர் =உயர்ந்ததென்று கொள்வார்கள் 


காரணா = காரணம் என்ன என்றால், ஏன் என்றால் , 


கரு ளக்கொடி யானே. = கருடக் கொடியை கொண்டவனே 


"என் சொல் அவமெனினும் நின் நாமங்கள் தோத்திரமே " என்பார் அபிராமி பட்டர். 



"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"  என்பார் சுந்தரர். 



இந்த இரண்டையும் சொல்லாமல் விட்டு விடலாம்தான். ஆனால், சிலர், பாசுரத்தை விட்டு விட்டு, இதை கமெண்ட் ல் போடுவார்கள். அதைத் தவிர்க்கவே, சுட்டிக் காட்டினேன். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். 


இறைவனின் நாமத்தை சொன்ன வாயால் மற்ற கீழான வார்த்தைகளை பேசக் கூடாது.  இறைவன் நாமத்தை சொல்ல வேண்டுமா, வாக்கில் தூய்மை வேண்டும். 


வாக்குத் தூய்மை என்றால் என்ன?


- பொய் சொல்லுதல் 

- புறம் சொல்லுதல் 

- கடும் சொல் 

- பயனற்ற சொற்கள் 


எங்கே ஒரு நாள் முயன்று பாருங்கள்.  இந்த நான்கு குற்றமும் சொல்லில் வராமால் பேசிப் பாருங்கள் பார்ப்போம். முதல் மூன்றைத் தவிர்த்தால் கூட, நான்காவதை தவிர்கவே முடியாது. பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? 


பயனுள்ள சொற்கள் என்றால் மற்றவருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் சொற்கள் என்பார் பரிமேல் அழகர். 


ஒரு பக்கம் இறைவன் நாமம் நாவில். அதே நாவில், ஊரில் உள்ளவர்களை ஏசுவது, பொய் சொல்லுவது, வெட்டி பேச்சு பேசுவது. அது கூடாது என்கிறார் பெரியாழ்வார். 


"அவருக்கென்ன சொல்லுவார்...நடைமுறை னு ஒண்ணு இருக்குல்ல ...."


நாம நம்ம வேலையை பார்ப்போம். 

1 comment:

  1. வாக்கு தூய்மை பற்றிய விளக்கம் அருமையாக உள்ளது.

    ReplyDelete