Monday, March 29, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 4

திருக்குறள் - அகர முதல - பாகம் 4 


 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


அது என்ன "ஆதி பகவன்" 


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


முதலில் ஒலி வடிவம்.


பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.


முதலில் எழுத்து.


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.


இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.


வீடு கட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போதுதான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.


அது போல


இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.


தொகுக்கும் மொழி தொகை மொழி.


புரிகிறது அல்லவா?


தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/4.html


(please click the above link to continue reading)


1. வேற்றுமைத்தொகை

2. வினைத்தொகை

3. பண்புத்தொகை

4. உவமைத்தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை


இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .


ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.


உதாரணமாக


பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறது.


உயர்ந்த மரம்


கரிய மலை


இவை எல்லாம் பண்புத் தொகைகள்.


இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.


சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.


தாமரைப் பூ

தென்னை மரம்

நாகப் பாம்பு


என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.


வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.


தென்னை என்று சொன்னால் போதாதா? தென்னை என்றாலே மரம் தானே. தாமரை என்றாலே பூ தானே. பின் ஏன், தாமரைப் பூ? 


வெறும் தென்னை என்றால் தென்னை ஓலை, தென்னை குருத்து என்று வேறு பல விடயங்களும் வரும். எனவே, தென்னை மரம். 


இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.


இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.


இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.


சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத்தான் குறிக்கும்.


ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.


ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.


இரண்டும் ஒன்றையே குறிப்பது.


பகவன் என்றால் வேறு  யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.


அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.


ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.


இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.


இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 


பகவான் கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன பகவன்? 


3 comments:

  1. அருமை சார் ....
    வணக்கம் .வாழ்க வாழ்க ....

    ReplyDelete
  2. மேலோடு படித்தால் வார்த்தைகளில் பொதிந்து உள்ள அர்த்தம் புரியாது. அழகாக . விளக்கினீர்கள். என்னுடைய ஆர்வமும் கூடுகிறது.

    ReplyDelete
  3. "இரு பெயரொட்டு பண்புத் தொகை" - அருமை. நன்றி.

    ReplyDelete