Friday, March 19, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 


அவற்றுள் "ஒழுக்கமாவது", அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


ஒழுக்கம் என்றால் என்ன? 

ஒழுக்கம் என்பது வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட விதி முறைகள். 

ஒரு சமுதயாத்தை எப்படி பிரிக்கலாம் என்று சிந்தித்த நம் முன்னோர், சமுதாயத்தின் வேலை என்ன? அதன் அடிப்படையில் பிரிக்கலாம் என்று நினைத்தார்கள். 

எந்த ஒரு சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி. அது தமிழ் நாடாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும். எந்த நாட்டுக்கும், எந்த சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி.

உற்பத்தி என்றால் பொருள் (goods )மற்றும் சேவை (service). GST என்று வரி போடுகிறார்கள் அல்லவா? 

விவசாயி,சட்டி பானை செய்பவன், முடி திருத்துபவன், மருத்துவன், பொறியாளர் (engineer), விமானம் ஒட்டுபவன், இசை அமைப்பவன், வண்டி ஓட்டுபவன் என்று யாராக இருந்தாலும் இந்த உற்பத்தி என்ற துறைக்குள் வந்து விடுவான்.  உற்பத்தி அல்லது production . இது முதல் படி.  

சரி, உற்பத்தி செய்தாகி விட்டது. அடுத்து என்ன? ஒரு இடத்தில் உற்பத்தி செய்ததை அது தேவைப் படும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  இது வியாபாரம் அல்லது distribution என்று  சொல்லப் படும்.இது இரண்டாவது படி. 

சரி உற்பத்தி செய்தாகிவிட்டது, விநியோகமும் செய்தாகி விட்டது. இரண்டு பிரிவு போதுமா என்றால் போதாது.   உற்பத்தி செய்வதில், விநியோகம் செய்வதில் நடை முறை சிக்கல்கள் வரும். சண்டை சச்சரவு வரும். போட்டி வரும். இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு மேலாண்மை அல்லது administration என்று பெயர். சட்டம், ஒழுங்கு, நெறிப் படுத்துதல், சமரசம் செய்தல் என்று  பல இருக்கிறது. 

சரி,  production, distribution, and administration வந்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. 

இந்த மூன்றையும் செம்மை படுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். அதற்கு research and development என்று பெயர். 

இந்த நான்கையும் தான் வர்ணம் என்று குறிப்பிட்டார்கள். 

உற்பத்தி செய்பவன் - சூத்திரன் - அவன் தான் மூல காரணம். 
விநியோகம் செய்பவன் - வைசியன் 
மேலாண்மை செய்பவன் - சத்ரியன் 
சிந்தித்து, படித்து, மேம்பட்ட, உயர்ந்த வழிகளை ஆராய்பவன் - பிராமணன் என்று வைத்தார்கள். 

இது பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல. செய்யும் தொழிலின் அடிப்படையில் வருவது. 

சரி, சமுதயாத்தை பிரித்தாகி விட்டது. 

தனி மனிதனை என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_19.html

(click the above link to continue reading)

தனி மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். 

பிரமச்சரியம் - கற்கும் பருவம். மாணவப் பருவம். 
இல்லறம் - திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை 
வனப்ரஸ்தம் - இல்லறத்தில் இருந்து கொண்டு பற்றற்று இருப்பது 
சன்யாசம் - காட்டுக்குச் சென்று தவம் செய்வது 

இதைத்தான் நிலை என்கிறார் பரிமேலழகர். 



ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். இது வள்ளுவர் வகுத்துக் கொண்ட வழி. இந்த வழியில் தான் பின்னால் வரும் குறள்கள் நிற்கும். 

அறத்தின் முதல் கூறு ஒழுக்கம். 

அடுத்து என்ன ? 

2 comments:

  1. நான் மிக ஆவலாக எதிர்பார்த்த இடம் இதுதான் ....
    அடடா மிக கவனமாக தந்தீர்கள் ....
    என் சிந்தைக்கு தெரியும் எண்ணம் எழுத்தாக வந்தது ...

    வணக்கம் ....வாழ்த்துகள் ...
    நூறாண்டு காலம் வாழ்க ....

    ReplyDelete
  2. அதெல்லாம் சரி, ஆனால் நடைமுறையில் வருணாசிரம வழி பிறவிப்படிதான் என்று வைத்து, எத்தனை கோடி மக்களைத் துன்புறுத்திய பிரிவினை இது.

    ReplyDelete