Monday, April 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !


Rembrandt போன்ற மேலை நாட்டு ஓவியர்கள் ஆகட்டும், இரவி வர்மா போன்ற இந்திய ஓவியர்கள் ஆகட்டும், அவர்களின் ஓவியங்கள் தத்ரூபமாக இருக்கும். படகு கவிழ்வது போன்ற ஒரு  Rembrandt வரைந்த படம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், ஏதோ நாம் அந்த படகில் இருப்பது போல இருக்கும். 


அதை எல்லாம் விட குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். அதன் பிரமாண்டம், மெய் சிலிர்க்கும் வர்ணனை தெரியும். பாடிய பின் குலசேகர ஆழ்வாரே சொல்கிறார், இது எனக்கே மயக்கம் தருகிறது. தூணை கொஞ்சம் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார். 


கம்பன், நரசிம்மத்தை காட்டிய மாதிரி ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


நேரடியாக படித்தால் புரியாது. அந்தக் காலத்து தமிழ். 


முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். அப்புறம், சொல்லுக்குச் சொல் அர்த்தம் பார்ப்போம். 


"ஒரு இருண்ட கர்ப்ப கிரகம். ஓரத்தில் ஒரு சின்ன விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. வெளியில் இருந்து வந்த நம் கண்கள் சற்று சிரமப் படுகின்றன என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இருப்பது தெரிய வருகிறது. 


ஒரு பெரிய பாம்பு. ஆயிரம் தலை. அதன் வாயில் இருந்து நெருப்பு பறக்கிறது. சில வாய்கள் மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அந்த நெருப்பு பொறி பட்டுத் தெறித்து கீழே விழுகிறது. அது ஏதோ சிவந்த மலர் கொண்டு அர்சிப்பதைப் போல இருக்கிறது.  


நெளியும் தலைகள். நெருப்பு உமிழும் வாய்கள். மந்திரம் சொல்லும் வாய்கள். அந்த மந்திர உச்சாடன சப்த்தம் நம்மை வேறு ஒரு உலகுக்கு கொண்டு செல்கிறது. 


கீழே, இதைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் கண் மூடி மோன தவம் இருக்கும் ஒரு உருவம். 


பார்க்கவே ஏதோ பெரிய அமானுஷ்யமான , பயம் தரும் தோற்றம். பார்த்துக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வாருக்கு உலகமே சுத்துவது போல இருக்கிறது.  எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அருகில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார். 


அந்த உருவத்தின் மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு வசீகரம். பயம் கலந்த வசீகரம். 


இப்படி ஒரு நிலையில், அந்த தரிசனத்தை வாயார வாழ்த்தும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார். 


இப்போது அர்த்தத்தை பார்ப்போம் 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_19.html


(click the above link to continue reading)

 

வாயோரீ ரைஞ்ஞூறு  = வாயோ + ஈரைந்து நூறு = அதாவது 500 x 2 = 1000 வாய். 


துதங்க ளார்ந்த = துதம் என்றால் ஸ்தோத்திரம். மந்திரங்கள் ஆர்பரிக்க 


வளையுடம்பி னழல்நாகம் = வளை + உடம்பின் + அழல் + நாகம் = வெளுத்த உடம்பைக் கொண்ட அனல் கக்கும் நாகம் 


உமிழ்ந்த செந்தீ = வாயில் இருந்து புறப்பட்ட சிவந்த நெருப்பு 


வீயாத மலர்ச்  = அழிவில்லாத, வாடாத மலர் 


சென்னி = தலை மேல் உள்ள 

விதான மேபோல் = கூரை போல.  அதாவது, அந்த ஆயிரம் தலைகளும் கூரை போல இருக்கிறதாம். 


மேன்மேலும் = மேலும் மேலும் 


மிகவெங்கும் = எல்லா இடத்திலும் 


பரந்த தன்கீழ் = விரிந்து, பரந்து இருக்க 



காயாம்பூ = காயம் பூ 


மலர்ப்பிறங்கல்  = மலரால் செய்த மாலை 


அன்ன = போல 


 மாலைக் = பெருமை மிக்க 


கடியரங்கத் தரவணையில் = கடி அரங்கத்து அரவவனையில் = காவலை உடைய திருவரங்கத்தில் நாக சயனத்தில்  


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும்



மாயோனை = மாயோனை 


மணத்தூணே பற்றி = மணத் தூணே பற்றி 


நின்றென் வாயார = நின்று என் வாயார 


என்றுகொலோ = என்று 


வாழ்த்தும் நாளே! = வாழ்த்தும் நாளே 


(குறிப்பு: மணத் தூண் பற்றி வைணவ பெரியவர்கள் பல வியாக்யானங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கண்டு தெளிக). 


கண் மூடி அந்த காட்சியை ஒரு முறை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


ஆழ்வார் எந்த அளவுக்கு பெருமாளை அனுபவித்து இருக்கிறார் என்று தெரியும். 




2 comments:

  1. As I read Kulasekhara Alwar’s description of the lord Arangan resting on the thousand hooded Anantha that was chanting His names through its thousand lips and Alwar craving for the day when he could do likeise, i had goose bumps.
    Your presentation was magical. Thanks

    ReplyDelete
  2. கண்முன்னே காட்சியை நிறுத்தும் பாடல்தான்!

    "மனத் தூண்" என்பதற்குக் கொஞ்சம் குட்டியாகப் பொருள் எழுதக் கூடாதா ?

    ReplyDelete