Wednesday, April 21, 2021

திருக்குறள் - உடற்றும் பசி

 திருக்குறள் - உடற்றும் பசி 


மழை பெய்யாவிட்டால், இந்த உலகில் நிலைத்து வாழும் உயிர்களை பசி வருத்தும். 


பாடல் 

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_21.html


(please click the above link to continue reading)



விண்ணின்று = வின் + இன்று = இன்று என்றால் இல்லாமல். 


பொய்ப்பின் = பொய்த்து விட்டால் 


விரிநீர் வியனுலகத்து = விரிந்த நீரை கொண்ட (கடல்) இந்த பெரிய உலகில் 


உண்ணின்று  = உள் + நின்று = உள்ளே இருந்து 


உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பொய்ப்பின் என்றால் ஒரு பருவ மழை பொய்ப்பித்து போவது அல்ல. நீண்ட நாட்களாய் பெய்யாமல் விட்டால். 


விரிநீர் வியனுலகு என்று ஏன் கூறினார் என்றால், உலகில் கடல் நீர் தான் அவ்வளவு இருக்கிறதே. மழை பெய்யாவிட்டால் என்ன என்று சிலர் நினைக்கக் கூடும். கடல் நீர் எவ்வளாவு இருந்தாலும், அதை குடிக்க முடியாது, அதை வைத்து உழவு செய்து பயிர் வளர்க்க முடியாது. 


இன்று அறிவியலில் கடல் நீரை குடி நீராக்க முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், அவை ஏதோ ஒரு சிறிதளவு பயன் தரலாம். உலகம் அனைத்துக்கும் தேவையான நீரை கடலில் இருந்து நம்மால் தர முடியாது. 


மழை வந்தால் தான் உண்டு. 


பசி வருத்தும் என்கிறார்.  பசி என்பதை அனுபவித்தால் தான் தெரியும். நமக்கெல்லாம் வரும் பசி என்பது ஒரு சில மணி நேர தாமதம்தான். உணவு கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதி வேறு உண்டு. 


அடுத்த வேளை உணவு இல்லை. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இருக்கிறானே, அவன் உணர்வதுதான் பசி. 


"அழிபசி" என்பார் திருவள்ளுவர்.  அழிக்கின்ற பசி. எதையெல்லாம் அது அழிக்கும் என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். 


பசி நின்று வருத்தும் என்கிறார். ஏதோ கொஞ்ச நேரம் வருத்தி விட்டு பின் போய்விடும் என்று அல்ல. விடாமல், நின்று வருத்தும் என்கிறார். 


மழை எவ்வளவு பெரிய விஷயம்.





3 comments:

  1. மிகப்பெரிய விஷயம் தான் ஐயா .....
    எவ்வளவு எளிதான உரை ...வணக்கம்.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரைகள். மனநிறைவைத் தருவன. பாராட்டுகளும் நன்றியும்.
    ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. அறிந்துகொள்ளலாமா?

    ReplyDelete