Showing posts with label குரு தரிசனம். Show all posts
Showing posts with label குரு தரிசனம். Show all posts

Saturday, March 7, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?


இன்று புதியதாய் பிறந்தோம், சென்றது இனி மீளாது என்று பாரதி சொன்னான். (பார்க்க முந்தைய ப்ளாக்).

அப்படி என்றால் நாம் காலம் காலமாக கர்மா என்று சொல்லிக் கொண்டு வருகிறோமே அது என்ன ஆகும் ?

மறு ஜென்மம், பாவம்  புண்ணியம், இருவினை, எழு பிறப்பு, சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் சொல்லக்  இருக்கிறோமே அது எல்லாம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும் அல்லவா ?

பாரதி சொல்கிறான்....



மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.


பொருள்

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, .... மேலும் மேலும் நடந்தையே நினைத்து அழ வேண்டாம். தவறு செய்து  விட்டேன்,பாவம் செய்து விட்டேன், இதனால் என்ன ஆகுமோ என்று நினைத்து அழாதீர்கள்.



அந்தோ! .... ஐயோ

மேதையில்லா மானுடரே = அறிவு இல்லாத மானிடரே


மேலும் மேலும் = மேலும் மேலும்

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியகாற் றெம்முள் வந்து = புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியவுயிர் விளைத்தல் கண்டீர் = புதிய உயிர் விளைதல் கண்டீர்

ஆன்மாவென்றே = ஆன்மா என்றே

கருமத் தொடர்பை யெண்ணி = கருமத் தொடர்பை எண்ணி. அதாவது நல்லது செய்தால் நல்லது  நடக்கும்,தீமை செய்தால் தீமை நடக்கும், என்ற கருமத் தொடர்பை எண்ணி

அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! = அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி = மான் போன்ற விழியுடைய சக்தி தேவி

வசப்பட்டுத் = அவள் வசப் பட்டு

தனைமறந்து வாழ்தல் வேண்டும். = தன்னை மறந்து வாழ வேண்டும்

ஆன்மா , கருமம் என்று மயக்கம் கொள்ளாதீர்கள் என்று  சொல்கிறார்.

நம்மால் ஒத்துக் கொள்ள முடியுமா ? எத்தனை வருடத்திய பழக்கம், படிப்பு.

அத்தனையும் வீண் என்று ஒத்துக் கொள்ள ஒரு தைரியம் வேண்டும். நம்மிடம் இருக்கிறதா  ? பாரதியார் அப்படித்தான்  சொல்லுவார்.நாம நம்ம வேலையப்  பார்ப்போம்  என்று கிளம்பி விடாமல் சற்று  சிந்திப்போம்.

ஒரு வேளை நாம் நம்பியவை தவறாக இருந்தால்...இன்றே மாற்றிக் கொள்ளலாமே ?





Friday, March 6, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம் 


ஏன் குப்பை மூட்டையை தூக்கித் திரிகிரீர் என்று பாரதி, குள்ளச் சாமியை பார்த்து கேட்டான்.

அதற்கு, அந்த குள்ளச் சாமி, நானாவது வெளியே குப்பை மூட்டையை தூக்கித் திரிகிறேன். நீயோ, மனதுக்குள் எத்தனை குப்பை மூட்டைகளை தூக்கிக் கொண்டு திரிகிறாய் என்று திருப்பிக் கேட்டார்.

கேட்டது பாரதியிடம் அல்ல...நம்மிடம்.

மேலும் பாரதி சொல்லுகிறார்....

முட்டாள்களே, சென்றது இனி மீண்டு வராது. நீங்கள் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து வருந்துகிறீர்கள். சென்றதைப் பற்றி மறந்து விடுங்கள்.

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் உறுதியாக கொண்டு, தின்று, விளையாடி இன்பமாக  வாழ்வீர்.

பாடல்

சென்றதினி மீளாது; மூடரே நீர்
எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


பொருள்

படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள்,  பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள்  என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள்  என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாமாக நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன.


நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது.

இறந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள். இன்று புதியதாய் பிறந்தோம்  என்று எண்ணிக்  கொள்ளுங்கள்.

வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.

பழைய குப்பைகளை தூக்கிப்  போடுங்கள்.

பிறந்த குழந்தைக்கு எதிர் காலம் மட்டும் தான் உண்டு....அதற்கு இறந்த காலம் என்பது இல்லை.

குழந்தைக்கு எல்லாமே புதிது....இந்த உலகமே புதிது....மனிதர்கள், உறவுகள், பொருள்கள, சப்தங்கள், காட்சிகள் என்று எல்லாமே புதிது....

அது போல, புத்துணர்வு கொண்டு உண்டு, விளையாடி, இன்பமாக இருங்கள்.

இதை விட உயர்ந்த  உபதேசம் கிடைத்து விடுமா என்ன ?

 


Thursday, March 5, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை 


பாரதியார் திண்ணையில் அமர்ந்து இருக்கும் போது , அந்தப் பக்கம் குள்ளச் சாமி ஒரு பழங் கந்தை மூட்டையை சுமந்து  வந்தான்.

பாரதியார் கேட்டார் "என்னய்யா இது, இப்படி குப்பை மூட்டையை தூக்கிக் கொண்டு திரிகிரிறே "

அதற்கு அந்த குள்ளச் சாமி சிரித்துக் கொண்டே சொன்னான்,

"நானாவது பரவாயில்லை, அழுக்கு மூட்டையை வெளியே சுமந்து கொண்டு செல்கிறேன் ...நீயோ குப்பைகளை உள்ளே சுமந்து கொண்டு திரிகிறாயே "

யோசித்து பாப்போம்....

நமக்குள் தான் எவ்வளவு குப்பை மூட்டைகள்...அதுவும் மிக மிக பழைய குப்பைகள். மக்கிப் போனவை. துர் நாற்றம் அடிப்பவை.

ஒவ்வொருவனும் ஒரு ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு  அலைகிறான்....நான் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி வாழ்கிறேன் என்கிறான்.

அந்தப் புத்தகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பெருமை கொள்கிறான்.

என் புத்தகம் 1000 ஆண்டுகள் பழமையானது என்று ஒருவன் பெருமை கொள்கிறான். இன்னொருவன், தன்னுடைய புத்தகம் 2000 ஆண்டு பழமையானது என்று பெருமை கொள்கிறான்.

பழங் குப்பைகளை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.

இவற்றை விட்டு விட்டு வாருங்கள் என்கிறார் பாரதி.

இந்தப் புத்தகங்கள் உங்களை சிறைப்  படுத்துகின்றன.உங்கள் சிந்தனைகளை தடைப் படுத்துக்கின்றன. உங்களை மூளைச் சலவை  செய்கின்றன.இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கிறார் பாரதியார்.

பாடல்

புன்னகைபூத்தாரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்தவனுமேகிவிட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தரெல்லாம மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்


பொருள் 

புன்னகை பூத்து ஆரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்து அவனும் ஏகி  விட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

உங்கள் பழம் நம்பிக்கைகளை, பொய்களை, விட்டு விடுதலை  பெறுங்கள்.

அது எப்படி பழசை எல்லாம் விட முடியும்  ? நம் முன்னவர்கள் என்ன முட்டாள்களா  ? அவர்கள் சொன்னதில் ஏதோ அர்த்தம் இருக்கும் ? அர்த்தம் இல்லாமலா  சொல்லி இருப்பார்கள் ? இத்தனை வருடம் அவற்றை நம்பி காரியங்கள்  செய்து வந்து இருக்கிறோம் ...

பாரதியார் அவற்றிற்கும் விடை தருகிறார்....


Tuesday, March 3, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - மூட்டை சுமந்திடுவதென்னே?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் -  மூட்டை சுமந்திடுவதென்னே?


 இன்னொரு நாள், அந்தக் குள்ளச் சாமி பழைய கந்தைகள் கொண்ட ஒரு அழுக்கு மூட்டையை சுமந்து பாரதியின் முன்னால் வந்தான்.

அவனைக் கண்டு நகைத்து, பாரதி கேட்டான்,


பாடல்


பொய்யறியா ஞானகுரு சிதம்பரேசன்
 பூமிவிநாயகன்குள்ளச்சாமியங்கே
மற்றொருநாள் பழங்கந்தையழுக்கு மூட்டை
 வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
 கற்றவர்கள் பணிந்தேத்துங்கமலபாதக்கருணைமுனி
சுமந்துகொண்டென்னெதிரே வந்தான்
 சற்றுநகை புரிந்தவன்பால் கேட்கலானேன்
தம்பிரானே இந்தத் தகைமையென்னே?
 முற்றுமிது பித்தருடைச் செய்கையன்றொ?
 மூட்டை சுமந்திடுவதென்னே?

மொழிவாய் என்றேன்


பொருள்


பொய் அறியாத ஞான குரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச் சாமி அங்கே மற்றொரு நாள்  பழங்கந்தை அழுக்கு மூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின்  மீது கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதம் கருணை முனி சுமந்து கொண்டு  என் எதிரே வந்தான்.

சற்று நகை புரிந்து அவன் பால் கேட்காலானேன், தம்பிரானே இந்தத் தகைமை  என்னே ? முற்றுமிது பித்தருடைய செய்கை அன்றோ ? மூட்டை சுமந்திடுவது என்னே ? மொழிவாய் என்றேன் ...


 அதற்கு   அந்த குள்ளச் சாமி சொன்னான் ....


Sunday, March 1, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி 



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;



குள்ளச்சாமி சொன்னது எல்லாம் சரிதானா ? அவை உண்மைதானா ?

மூச்சை கட்டுப் படுத்தி, யோகம் பயின்றால், அழியாத (மணல் போல) உண்மையை அறிய முடியுமா ?

பாரதி சொல்கிறான் , கையில் (வேத) நூல் ஏதும் இருந்தால், அதைப் பிரித்து அதில் அந்த குள்ளச் சாமி சொன்ன உபதேசம் எங்கே  இருக்கிறது என்று காட்டச் சொல்வேன். அவனும் அதைக் காட்டி இருப்பான்.

அதாவது, குள்ளச் சாமி சொன்னது எல்லாம் நம் வேத புத்தகத்தில் உள்ளதுதான் என்கிறார்.

மேலும்....


வானைக் காட்டி, மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,


வானத்தைக் காட்டி, அந்த வானத்து இருளை கண்ணின் மையாகக் கொண்ட அவளின் காதல் ஒன்றே இந்த உலகில் வாழும் வழி என்று காட்டி.

அவள் யார் ?

தாயா  ? காதலியா ? மனைவியா ?

தெரியவில்லை. ஆனால், அவளின் காதல் மட்டும்தான் வையகத்தில் வாழும் நெறி என்கிறார் பாரதியார்.

அவள், உங்களுக்கு யாரோ, அவள் தான் பாரதி சொன்ன அவள்.

அது மட்டும் அல்ல,

குள்ளச்சாமி எனக்கு பல குறிப்புகளை காட்டி, ஞானத்தைத் தந்தான் என்கிறார்.


ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,


அந்த குள்ளச் சாமி பொய் என்பதை அறியாதவன். சிதம்பரேசன், பூமியில் விநாயகன் அவனே (விநாயகன் = நாயகன் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் விநாயகன் )

பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.


அடுத்த நாள் பாரதி குள்ளச்சாமியை மீண்டும் சந்திக்கிறார் .....


Saturday, February 28, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை 


குள்ளச்சாமி மூன்று பொருள்களை பாரதிக்கு காட்டினான்.

குட்டிச் சுவர்
சூரியன்
கிணற்றில் சூரியனின் நிழல்
அவ்வளவுதான் உபதேசம். புரிந்ததா என்று  கேட்டார்,பாரதியும் புரிந்தது என்றார். குள்ளச் சாமி சந்தோஷமாக போய்  விட்டார்.

நாம் தான் மண்டை காய்கிறோம்.

நம் நிலை தெரிந்து பாரதி அதை  விளக்குகிறார்.

குரு சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது என்று ஒரு விதி உண்டு. காரணம், சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும்.

தகுதி இல்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அவன் உபதேசத்தை கீழ்மை படுத்துவான்.

ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு இயற்பியலின் உயர் விதிகளை சொல்லிக் கொடுத்தால் அவன் அதைக் கேட்டுச் சிரிப்பான். தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி அதை ஏளனம் செய்வான். அவனுக்குப் புரியவில்லை என்பது அவனுக்குப் புரியாது. ஏதோ நகைச்சுவை என்று நினைத்து ஏளனம் செய்வான்.

எனவேதான், தகுதி இல்லாதவர்களுக்கு உயர்ந்த விஷயங்களை  சொல்லித் கூடாது என்று வைத்தார்கள்.

இந்த நாட்டில் கம்ப இராமயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதன் உயர்வு புரியாதவர்கள் நினைத்த தவறு அது.


முதன் முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார்.தான் அறிந்த உண்மையை எல்லோரும் அடைய வேண்டும் என்று கோவில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.   சீடன் யார் என்றே தெரியாமல் உபதேசம் செய்தார்.

அடுத்து பாரதியார், தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொல்லிச்  செல்கிறார்.



தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;


தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன்.

ஏன் சொல்ல வேண்டும் ? தனக்கு கிடைத்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது தானே ? அதுதான் அவரின் பெரிய உள்ளம்.



“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி ?  வாசி என்றால் சுவாசம்.

நாம் உயிர் வாழ்வது, சிந்தனை செய்வது, செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. மூச்சு நின்றால் எல்லாம் அடங்கி விடும்.

இந்த மூச்சு மூன்று விதமாக  வெளிப்படும்.

இடது நாசியின்  வழியே ஓடும் மூச் சந்திரக் கலை எனப்படும்.
வலது நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் கலை எனப்படும்
இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை எனப்படும்.

சுவாசம் இடது நாடியில் ஓடும் போது என்ன செய்ய வேண்டும், வலது நாடியில் ஓடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள். இரண்டு நாடியிலும் ஓடும் போது செய்யக் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குள்ளச் சாமி சொன்ன செய்தி "சுவாசத்தை கட்டுப் படுத்தி, மண் போல சுவர் போல வாழ வேண்டும்"

அது என்ன மண் போல சுவர் போல வாழ வேண்டும்.

மண்  இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டியது சுவர். சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். சுவரை இடித்தாலும் மண் அப்படியே தான் இருக்கும்.

மண்ணிற்கு என்ன இயல்பு - பரவுவது. குவித்து வைத்தாலும் நாளடைவில் தானே பரவி விடும்.

என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி  என்கிறார்.

உலகில் உள்ள பொருள்கள்,  இன்பங்கள், உறவுகள் எல்லாம் மறையும் இயல்பு  உடையன. மண் எது சுவர் எது என்று கண்டு வாழ் என்பது இரண்டாவது உபதேசம். (மூச்சுப் பழக்கம் முதல் உபதேசம் )



தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;

இது மூன்றாவது உபதேசம். ஒளி உடைய சூரியனை கிணற்றுக்குள்ளே பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய்.

இறைவன் மிகப் பெரியவன். அவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும். இந்த உயிர்கள் நேற்று  தோன்றி,இன்று இருந்து, நாளை போபவை. இதற்குள்  எப்படி அனாதியான இறை சக்தி இருக்க முடியும் ?

அதை விளக்குகிறார் குள்ளச் சாமி.

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோ இருப்பது. கிட்ட போக முடியாது. ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும்.

கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

எந்த கிணற்றில் ? சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம்  தெரியும்.பாழடைந்த வீட்டின் கொல்லையில் உள்ள கிணற்றில் சலனம் இல்லை. அதில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

அது போல, நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும். ஆசை, கோபம், காமம் என்று பலப் பல சலனங்கள். எங்கே சிவனைக் காண்பது.

சரி இதை எல்லாம் ஏன் குள்ளச் சாமி தெளிவாக சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் நமக்கு சந்தேகம் வராது இல்லையா ?

அதைத்தான் அடுத்த வரியில் சொல்கிறார் பாரதியார் ...


பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

பேசுவதில் பயனில்லை. 

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு நிற்க வேண்டும். 

கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும்.

மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றால்  மணிவாசகர்.

"சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார். 

படிப்பது,  கேட்பதும், பேசுவதும், கேட்பதும் நின்று ...அனுபவத்தால் அறிய வேண்டும். 

அதுவே ஞானம் என்கிறார் பாரதி. 

உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ?

உண்மையை நேரடியாக உணருங்கள். 



Friday, February 27, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் 


குள்ளச் சாமியை துரத்திக் கொண்டு வந்த பாரதி அவரை அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தில் மடக்கிப் பிடித்தார்.

சரி இவன் நம்மை விடமாட்டான் போல் இருக்கிறது என்று அறிந்த கொண்ட அந்த குள்ளச் சாமி, இவன் ஒரு நல்ல சீடன்...இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்று உபதேசம்  செய்கிறார்.

அருகில் இருந்த குட்டிச் சுவரைக் காட்டினார், பின் சூரியனைக் காட்டினார், அப்புறம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து அந்த சூரியனின் நிழலைக் காட்டினார்...இந்த மூன்றையும் காட்டி விட்டு "என்ன புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரிந்தது " என்றார் பாரதி.

குள்ளச்சாமியும் மகிழ்வுடன் சென்று விட்டார்.

வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் என்கிறார் பாரதி.

பாடல்

குள்ளச் சாமியும் சந்தோஷமாக 
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

சரி, இது என்ன உபதேசம் ?

குட்டிச் சுவர், சூரியன், பழைய கிணறு...இந்த மூன்றையும் காட்டி  என்ன புரிந்ததா  என்று கேட்டார், பாரதியும் புரிந்தது என்றார். மொத்தம் அவ்வளவுதான் உபதேசம்.

நமக்கு ஏதாவது புரிகிறதா.

தலை சுற்றுகிறது அல்லவா ?

பாரதி இந்த மூன்றின் விளக்கம் தருகிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளக்கம்.

பாரதியின் அறிவின் வீச்சை நாம் அறிந்து கொள்ள உதவும் பாடல்.

எவ்வளவு பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் பெருமை அறியாமல் இருக்கிறோம்.

பாரதியின் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


Thursday, February 26, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4


பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், ஒரு நாள் தெருவில் , ஞானியைப் போல தோன்றும் ஒரு குள்ள மனிதனைக்  கண்டார்.ஏனோ அந்த மனிதனின் மேல் பாரதியாருக்கு ஒரு ஈர்ப்பு.

அந்த குள்ளச் சாமியின் கையை பற்றிக் கொண்டு "நீ யார் " என்று கேட்டார்.

அப்போது அந்த குள்ளச் சாமி, பாரதியின் கையை உதறி விட்டு ஓட்டம் பிடித்தான். பாரதியும்  விடவில்லை.அந்த குள்ளச் சாமியின் பின்னாலேயே  ஓடுகிறார்.

இரண்டு பெரிய ஞானிகள் செய்யும் வேலையா இது என்று நமக்கு வியப்பு வரும்.

ஓடிய குள்ளச் சாமி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தை அடைந்தான்.  பாரதியும்  அங்கே சென்று அந்த குள்ளச் சாமியை மடக்கிப் பிடித்தான்.

பாடல்


பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்

பொருள்

பற்றிய கை திருகி அந்த குள்ளச் சாமி , பரிந்தோடப் பார்த்தான், நான் விடவே இல்லை.

சுற்று முற்றும் பாத்து, பின் புன் முறுவல் பூத்தான் அந்த குள்ளச் சாமி.

அவனுடைய தூய்மையான தாமரை போன்ற இரண்டு பாதங்களைக் கண்டேன்.
குற்றம் இல்லாத அந்தக் குள்ளச் சாமியும், கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த வீட்டின் கொல்லைப் புரத்தை அடைந்தான்.

அவன் பின்னே நான் ஓடிச் சென்று அவனை மறித்துக் கொண்டேன்

......


அதன் பின் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

குள்ளச் சாமி பாரதிக்கு ஞான உபதேசம்  செய்தான்.

என்னென்ன செய்திகள் சொல்லி இருப்பார், எவ்வளவு நேரம் சொல்லி இருப்பார்,  வேதம், புராணம், இதிகாசம் இவற்றில் இருந்து எல்லாம் எடுத்து அறங்களை  சொல்லி இருப்பார் இல்லையா ?

சிந்தித்துக் கொண்டிருங்கள்...

குள்ளச் சாமி என்ன சொன்னார் என்று நாளை பார்ப்போம்....