Showing posts with label திருக்கரம்பனூர். Show all posts
Showing posts with label திருக்கரம்பனூர். Show all posts

Thursday, December 21, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்


வயதாக வயதாக ஆசார பற்று அதிகம் ஆகும் என்று சொல்வார்கள்.

காரணம் பலவாக இருக்கலாம். இருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாள் தான். அந்த கொஞ்ச காலத்தில் பூஜை புனஸ்காரம் செய்து போகும் வழிக்கு புண்ணியம் தேடுவோம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

அல்லது, பிள்ளைகள் எல்லாம் வேலை, திருமணம் என்று போன பின், பொழுது நிறைய இருக்கும். அதை பூஜை, ஆன்மீக புத்தகங்களை படிப்பது என்று செலவிடலாம்.

அல்லது, ஆசாரங்களை கடை பிடிப்பது சமூகத்தில் ஒரு மதிப்பை தருவதால் இருக்கலாம். அவர் அந்த மலைக்கு 18 வருடம் விடாமல் போய் இருக்கிறார்,  இவர் ஒவ்வொரு  வருடமும், ஒரு குறிப்பிட்ட தினத்தில் இந்த கோவிலுக்கு போய் விடுவார் , என்று ஆசாரங்களை கடை பிடிப்பதால் வரும் சமூக அந்தஸ்து காரணமாக இருக்கலாம்.

இப்படி விரதம், கோவில், பூஜை, தத்துவ விசாரங்கள் , என்று அலைவதால் பயனில்லை என்று நான் சொன்னால் அது எப்படி என்று கேட்கலாம். சொல்வது பிள்ளை பெருமாள் ஐயங்கார். ஆன்மீகத்தில் தோய்ந்த, அறிஞர். இவை எல்லாம் ஒரு பயனையும் தராது. இறைவன் நாமத்தை கல் என்கிறார்.


பாடல்


சிலமாதவஞ்செய்துந் தீவேள்விவேட்டும்
பலமாநதியிற்படிந்து - முலகிற்
பரம்பநூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூருத்தமன்பேர்கல்.

சீர் பிரித்த பின்

சில மாதவம் செய்தும்  தீ வேள்வி வேட்டும்
பல மா நதியிற் படிந்தும்   - உலகில்
பரம்ப நூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்.

பொருள் 

சில மாதவம் = சில பெரிய தவங்களை

செய்தும் = செய்தும்

தீ வேள்வி வேட்டும் = யாகம், ஓமம், போன்ற பூஜைகள் செய்தும்

பல மா நதியிற் படிந்தும் = பல நதிகளில் நீராடியும்

 உலகில் = உலகில்

பரம்ப நூல்கற்றும் = பரந்து பட்ட பல நூல்களை கற்றும்

பயனில்லை = பயன் எதுவும் இல்லை

நெஞ்சே = நெஞ்சே

கரம்பனூர் = திருக்கரம்பனூர் என்ற தலத்தில் கோவில் கொண்டுள்ள

உத்தமன் = உத்தமன் என்ற பெயர் கொண்ட பெருமாளின்

பேர் கல் = பெயரை கற்றுக் கொள்

பெயரை சொல் என்று சொல்லவில்லை. சில மந்திரங்களை, பெயர்களை ஏதோ tape recorder போட்டால் ஓடுவது போல மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். அப்படி அல்ல. இறைவன் திருநாமத்தை கற்க வேண்டும். கற்றல் என்றால் அதில் ஏதோ புரியாத ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

புலன்களை வருத்தி, விரதம் இருந்து, உடலும் மனமும் வாடும் படி செய்யும் பூஜைகளால் ஒரு பலனும் இல்லை என்று திருமங்கை ஆழ்வாரும் சாதிக்கிறார்.

பாடல்

ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

(பொருள் எழுத வேண்டுமா ? பாடலை வாசித்துப் பாருங்கள்...நாக்கில் துள்ளும் பாடல். வாசிக்கும் போதே ஒரு சுவை தெரிகிறது அல்லவா. பத உரை வேண்டும் என்றால் சொல்லுங்கள், தனியாக எழுதுகிறேன்).


இந்த திருக்கரம்பூர் எங்கு இருக்கிறது தெரியுமா ?

திருச்சியில் இருந்து 4 km தொலைவில். திருவரங்கம் போனால், அங்கிருந்து பக்கம் தான். 

பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே,

என்பார் திருமங்கையாழ்வார். 

கரம்பனூர் உத்தமனை கண்டது தென் அரங்கத்தே என்கிறார். ரொம்ப பக்கம். நடந்து போயிரலாம். இப்பவும் கூட, அந்த பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. 


இந்த கடல் ஏழும் , மலை ஏழும் , உலகு ஏழும் உண்டு உமிழ்ந்ததைப் பற்றி பல முறை சிந்தித்து இருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது, எப்படி இதே போல நவீன விஞ்ஞானத்திலும் சில விஷயங்கள் இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப் பட்டது என்று சொல்ல மாட்டேன். நவீன விஞ்ஞானம் ஆழ்வர்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்ல மாட்டேன். ஆனால், சிந்தனைகள் மிக ஆச்சரியமான ஒன்று. என்ன என்பதை இன்னொரு பிளாகில் சிந்திப்போம். சரியா ?



பெருமாள் பெயர் உத்தமன். வட மொழியில் புருஷோத்தமன் என்று பெயர். 

ஒரு காலத்தில் இங்கு நிறைய கடம்ப மரங்கள் இருந்ததாம். பிரம்மா இந்த தளத்தில் விஷ்ணுவை வழிபட்டு வந்தாராம். அப்படி இருக்கும் போது ஒரு நாள் ப்ரம்மாவின் பக்தியை சோதிக்க எண்ணி பெருமாள் கடம்ப மரமாய் நின்றாராம். பல கடம்ப மரங்கள் உள்ள அந்த வனத்தில் பெருமாள் கடம்ப மரமாய் நின்ற அந்த மரத்தை ப்ரம்மா கண்டு கொண்டு பூஜை செய்தாராம். அதனால் மனம் மகிழ்ந்த பெருமாள், பிரம்மாவுக்கு அங்கு சிலை வடிவில் ஆராதனை நடக்க அருள் புரிந்தாராம். 

இந்த தலத்தில் பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் கோவில் உள்ளது. 

பிரம்மாவுக்கு கோயில் உள்ள மிக அரிதான இடங்களில் இதுவும் ஒன்று. 

1000 பழமையான பழைமையான கோவில். நம்ப முடிகிறதா ?

1000 ஆண்டு பழமையான கோவில். 700 அல்லது 800 ஆண்டுகள் பழைமையான பாடல்கள். இன்று நம் கண் முன்னே. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

அடுத்த முறை திருச்சி சென்றால், உத்தமனூரை எட்டிப் பார்த்து விட்டு வாருங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_21.html