Showing posts with label திருப்புள்ளம்பூதங்குடி. Show all posts
Showing posts with label திருப்புள்ளம்பூதங்குடி. Show all posts

Saturday, December 23, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2


முந்தைய பிளாகில் திருபுள்ளக்குடி பற்றி பார்த்தோம். இது அதன் தொடர்ச்சி.

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


இந்த ஊர் எங்கிருக்கிறது ? இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது ? இந்த பெயருக்கு என்ன அர்த்தம் ?

கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் போய் விடலாம். சுவாமி மலைக்கு ரொம்ப பக்கம். 

புள் என்றால் பறவை. 


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.


என்பார் வள்ளுவர். 

தான் இருந்த கூட்டை விட்டு எப்படி பறவை பறந்து போய் விடுகிறதோ, அது போலத் தான், இந்த உடல் என்ற கூட்டை விட்டு உயிர் பறந்து போய் விடும் என்பது கருத்து. 

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும் 
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம் 
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

என்பார் திருஞானசம்பந்தர். மெய் சொல்லாத இராவணனை தோற்று புறம் காணச் செய்த ஜடாயு (என்ற பறவை, புள்) வுக்கு முக்தி தந்த இடம் என்ற பொருளில்  புள் இருக்கும் வேளூர் என்ற பெயர் பெற்றது வைத்தீஸ்வரன் கோவில். (திரு புள்ளபூதக் குடி அல்ல).

புள்ளம்பூதக்குடி யை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

பாடல் 

அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க  எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)

பொருள் 

அறிவது அறியாது அனைத்து உலகும் உடையாய் என்னை ஆளும் உடையான் 
குறிய மாண உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம் 
நறிய மலர் மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம் பூதக் குடிதானே 

சீதையை பிரிந்து , இராமன் காட்டில் அலைந்த போது , ஜடாயுவை சந்தித்து, ஜடாயுவுக்கு முக்தி  கொடுத்த இடம் என்பதால் இது புள்ளபூதக்குடி என்று பெயர் பெற்றது. இங்குள்ள இராமருக்கு அருகில் சீதை இல்லை. 

நமது இன்றைய வாழ்க்கை, என்றோ நடந்ததாக கூறப் படும் புராண சம்பவங்கள் என்று இரண்டையும் இணைக்கும் பாலங்களாக விளங்குவது இந்த திருக்கோவில்கள்.

ஒவ்வொரு கோவிலும் ஒரு கால இயந்திரம் (time machine ). உங்களை ஒரு நொடியில் புராண காலத்துக்கு கொண்டு செல்லும் அமைப்புகள். 

இந்த கோவிலில்  நிற்கும் போது , இங்கு தான் இராமர் இருந்தார், இங்குதான் சீதையை  தேடி அலைந்தார், ஜடாயுவுக்கு முக்தி தந்தார் என்று நினைக்கும் போது உடல் சிலிர்க்காதா ?


இம்மை நலன்கள், அத்தனை வினையும் போகும், மறுமை பலனும் கிடைக்கும். 

தஞ்சாவூர் , கும்பகோணம் பக்கம் போனால், புள்ள பூதக்குடிக்கும் போய் வாருங்கள். 



Friday, December 22, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1 


விலங்குகளை பறவைகளை சிறை பிடிக்க விரும்பும் வேடர்கள் , அவற்றிற்கு பொறி வைத்து பிடிப்பார்கள். உதாரணமாக , புலியை பிடிக்க வேண்டும் என்றால், ஒரு கூண்டு செய்து, அதில் ஒரு மானை கட்டி வைத்து விடுவார்கள். மானின் வாசனையை கொண்டு புலி அதை பிடிக்க பாயும். கூண்டின் கதவு மூடிக் கொள்ளும். புலி மாட்டிக் கொண்டு வாழ் நாள் எல்லாம் அவதிப் படும். 

வீட்டில் கூட எலியை எலி பொறி வைத்து பிடிப்பதை நாம் அறிவோம். 

ஒரு கணம் , அந்த பொறியில் உள்ள வடை துண்டுக்கோ, தேங்காய் சில்லுக்கோ ஆசைப் பட்டு எலி உயிரை விடும். 

அந்த எலியைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய் வரும். பாவமாய் இருக்கும். 

நாம் அந்த எலியை விட பெரிய ஆள் இல்லை. 

இந்த ஐந்து புலன்களும் , ஐந்து பொறியைப் போல. ஒரு நிமிடம் ஆசைப் பட்டு நம்மை மீளாத துயரில் ஆட்படுத்தி விடும். 

விலங்குகளுக்கு , பொறி இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். நமக்குத் தெரியும். இருந்தும் நாம் மாட்டிக் கொள்கிறோம். ஏன் ? 

ஏன் என்றால், இந்த பொறிகள் நமக்கு நல்லது செய்வதாக கூறி, வஞ்சகமாக இழுத்துக் கொண்டு போய் மாட்டி விட்டு விடும். 

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , அனுபவம் இருந்தாலும், ஒரு நொடியில் வீழ்த்தி விடும்.  

எனவே அது பெரிய பொறி.

வஞ்சகமாக நம்மை மாட்டி விட்டு விடுவதால் அது கள்ளப் பொறி.

இந்த வஞ்சக பொறிகளை வைத்துக் கொண்டு நாம் அல்லாடுகிறோம். 

இந்த புலன்கள் ஆசைப்படும் அனைத்தும் வேண்டும், அப்படி புலன் இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வரும் நல் வினை , தீ வினை பலன்கள் நம்மை தொடரக் கூடாது, அதாவது வினையினால் மறு பிறப்பு வரக் கூடாது, மேலும், அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பின் ,  இறைவனடி சேர வேண்டும். 

நடக்கிற காரியமா இது ?

முடியும் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

"விரும்பியவை அடைவீர்கள், வினை அனைத்தும் தீரும், பரம பதம் அடைவீர்கள்" என்கிறார்.

அடைவது யார் தெரியுமா ?

"பெரும் பொறி, கள்ளப் பூதங்களான புலன்களை கொண்ட உடலை உடைய நாம் " என்கிறார்.

எப்படி அடைவது ?

திரு புள்ளக் குடி என்ற திரு தலத்துக்கு சென்றால் போதுமாம். 

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


ஒருவர் இறந்து விட்டால், "இன்னாருடைய பூத உடல் இந்த இடத்தில், இன்ன நேரத்தில் அடக்கம் செய்யப் படும் " என்று அறிவிப்பதை கேட்டிருப்பீர்கள். அது என்ன பூத   உடல் ? பூதம் போல பெரிதாக இருக்குமா ?

இல்லை.

பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடம்பு. எனவே பூத உடல்.

இந்த உடலில் உள்ள புலன்கள் இருக்கின்றனவே, அவை கள்ள பெரும் பூதங்கள்.

வெறும் பூதம் என்றாலே பயம். இதில் கள்ள பெரும் பூதம் என்றால் எப்படி இருக்கும்.  கட்டாயம், நம்மை தின்று விடும் அல்லவா ?

அப்படி பயப்பட வேண்டும் இந்த புலன்களுக்கு.

அப்படிப்பட்ட புலன்களை கொண்ட அடியவர்களே, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லது வேண்டும் என்றால், புள்ளபூதக் குடிக்கு போங்கள்.

நீங்க போனா மட்டும் போதும்.

சரி, இந்த புள்ள பூத குடிக்கு இந்த பெயர் எப்படி வந்தது ? இந்த ஊர் எங்கே இருக்கிறது ? இங்கு வேறு என்ன விஷேசம் ?

மேலும் சிந்திப்போம்.

(பயணம் தொடரும்)