Showing posts with label திருவரங்க அந்தாதி. Show all posts
Showing posts with label திருவரங்க அந்தாதி. Show all posts

Thursday, July 17, 2014

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று

திருவரங்க அந்தாதி - தருக்காவலா என்று 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதியது திருவரங்க அந்தாதி.

யமகம் என்ற யாப்பில் எழுதப்பட்டது. ஒரே வார்த்தை பல்வேறு பொருள் தாங்கி வரும்படி அமைப்பது.

அதில் இருந்து ஒரு பாடல்

இது என்ன வாழ்க்கை. ஒண்ணும் இல்லாதவனை இந்தரேனே சந்திரனே என்று புகழ் பாடி, விலை மாதரை மயில் என்றும் குயில் என்றும் புகழ்ந்து வாழ் நாளை எல்லாம் வீணாக்கிக் கொண்டு. இருக்கிற நாளில் பக்தர்களுக்கு அருள் வழங்க பலராமனுக்கு பின்னே தோன்றிய கண்ணனை வணங்குங்கள்.

பாடல்

தருக்காவலாவென்றுபுல்லரைப்பாடித்தனவிலைமா
தருக்காவலாய்மயிலேகுயிலேயென்றுதாமதராய்த்
தருக்காவலாநெறிக்கேதிரிவீர்கவிசாற்றுமின்பத்
தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே.

சீர் பிரித்த பின்

தரு காவலா என்று புல்லரைப் பாடித் தன விலைமா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்த்
தருக்கு அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றும் இன்பத் 
தருக்காவலாயுதன் பின் தோன்ற அரங்கர் பொற் தாளிணைக்கே.

பொருள்

தரு காவலா  = எனக்கு அதைத் தா , இதைத் தா

என்று = என்று

புல்லரைப் பாடித் = கீழானவர்களைப் பாடி, துதித்து

தன = அழகிய தனங்களைக் கொண்ட 

விலைமாதருக்கு = விலை மாதருக்கு

 ஆவலாய் = ஆவலாய், அவர்கள் மேல் விருப்பு கொண்டு

மயிலே குயிலே என்று = மயிலே குயிலே என்று அவர்களை வர்ணித்து 

தாமதராய்த் = தாமதம் செய்பவர்களாய்

தருக்கு = செருக்கு கொண்டு 

அலா = அல்லாத

நெறிக்கே= வழியில்

திரிவீர் = செல்வீர்கள்

கவி சாற்றும் = பாடுங்கள்

இன்பத் = இன்பம் தர

தருக்கா ஆயுதன் = கலப்பையை ஆயுதமாகக் கொண்ட (பலராமன்)

 பின் தோன்ற = பின் தோன்றிய, தம்பியான கண்ணன்

அரங்கர் பொற் தாளிணைக்கே = திருவரங்கத்தில் எழுந்து அருளியுள்ள அவன் பொன் போன்ற இரண்டு திருவடிகளையே