Showing posts with label நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி. Show all posts
Showing posts with label நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி. Show all posts

Tuesday, May 1, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம் 


நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். சாதிக்க முடியும். இருந்தும் ஒன்றும் செய்யாமல் , ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏன்?

செய்யும் ஆர்வம் இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. உடலில் வலு இருக்கிறது. நன்றாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. இருந்தும், ஒன்றும் செய்வதில்லை.

படித்தோம், வேலைக்குப் போனோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவற்றைப் படிக்க வைத்தோம், அவர்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ...இவை எல்லாம் செய்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் வயதாகி விடுகிறது.

"இனி போட்டு என்னத்தச் செய்ய ..." என்று சோர்ந்து போய் விடுகிறோம்

நம்மை பெரிய காரியங்களைச் செய்ய விடமால் தடுப்பது எது?

நம் புலன்கள் தான். அவை தூண்டி விடும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்டு, அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் ஒன்றும் செய்யாமல் வாழ் நாள் எல்லாம் வீணடிக்கிறோம்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்கிறார் ....

"செயற்கரிய செய்ய முடிந்த நம்மை , செய்ய விடாமல் மயக்கியவர் ஐந்து பேர் (புலன்கள்) . அவர்கள் மயக்கத்தில் மயங்கி, சிற்றின்பங்கள் பின் போய் அலைகிறாய் நெஞ்சே. அதை விட்டு விட்டு, சிவந்த கண்களை உடைய திருமால் இருக்கும் திரு விண்ணகரம் என்ற தலத்தை நாடு"

என்கிறார்.


பாடல்

செயற்கரியசெய்வோமைச்செய்யாமனெஞ்சே
மயக்குவாரைவர்வலியா - னயக்கலவி
சிந்திபுரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
னந்திபுரவிண்ணகரநாடு.

சீர் பிரித்த பின்

செயற்கு அரிய செய்வோமை செய்யாமல் என் நெஞ்சே 
மயக்குவார் ஐவர் வலியால் இனிய கலவி 
சிந்தி புரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மால் 
நந்தி புர விண்ணகரநாடு.

பொருள்

செயற்கு = செய்வதற்கு

அரிய = கடினமான

செய்வோமை = செய்யத் தகுந்த நம்மை

செய்யாமல் = செய்ய விடாமல்

என் நெஞ்சே = என் மனமே

மயக்குவார் ஐவர் = மயக்குவது இந்த ஐந்து புலன்கள்

வலியால் = வலிமையால்

இனிய = இன்பமான

கலவி = கலந்து அனுபவிப்பது

சிந்தி = சிந்திப்பாய்

புர = ஆட்சி செய்

விண்ணகரமென்பர் = விண்ணுலகை என்பார்

திருச்செங்கண்மால் = சிவந்த கண்களை உடைய திருமால் உறையும்

நந்தி புர விண்ணகரநாடு. = நந்திபுர விண்ணகரத்தை நாடு

இந்த புலன்கள் நம்மை ஆசை காட்டும். அதில் இன்பம், இதில் இன்பம். அதைச் செய்தால் , அந்த சொர்கமே தெரியும் என்றெல்லாம் நம்மை அலைக்கழிக்கும்.

அவற்றில் இருந்து மனதை திருப்பி நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்றால், நந்திபுர விண்ணகரத்தை நாடு என்கிறார்.

இந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு ?

பேயாழ்வார் சொல்கிறார்.

பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் போன்ற இடங்களில் இருந்த பின், இந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தில் வந்து இருந்தாராம்.

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.

                      (2342) மூன்றாந் திருவந்தாதி - 61

ஒப்பிலியப்பன். உப்பு இல்லாத அப்பன். மனைவி உப்பு இல்லாமல் சமைத்தால் கூட  அதை அன்போடு உண்ண வேண்டும் என்று குடும்ப பாடம் நடத்திய இடம்.

நம்மாழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி தந்தாராம் இந்தத் திருத்தலத்தில்

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

        -திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்


இந்தத் திருத் தலத்துக்கு என்று தனி சுப்ரபாதமே உண்டு.

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாதுறை பக்கம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post.html

Thursday, February 15, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே 


நமது வாழ்நாளில் பெரும் பகுதி பொருள் திரட்டவே போய் விடுகிறது. முன்பெல்லாம் ஆண்கள் தான் பொருள் தேடி அலைந்தார்கள். இப்போது பெண்களும். பெண்கள் நேரடியாக பொருள் தேடாவிட்டாலும், அந்த தேடலுக்கு பெரும் உதவி செய்கிறார்கள். எனவே, ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து விடுகிறார்கள்.

சரி. பொருள் வேண்டும் தானே. சாப்பிடணும், உடை, உறை , மருத்துவம், பிள்ளைகள் படிப்பு இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா ?

வேண்டும் தான். வேலை செய்யத்தான் வேண்டும். ஆனால், வேலை மட்டும் செய்தால் போதுமா ? மேல் அதிகாரியை வணங்க வேண்டும்.  அவர் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு சண்டை பிடிக்கக் கூடாது. கீழே வேலை செய்பவர்களை அணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி பலப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதுதானா வாழ்க்கை ? பல் இளிப்பதும் , பணம் சம்பாதிப்பதும் மட்டும் தானா வாழ்க்கை?

"உன் நேரத்தை, திறமையை பணம் சம்பாதிக்க வேண்டி செல்வர்கள் வீட்டு வாசலில் பழியாக கிடக்காதே. அதை இறை தேடவும் செலவழி என்கிறார்" பிள்ளை பெருமாள் ஐயங்கார்.


பாடல்

சென்றுசென்றுசெல்வஞ்செருக்குவார்வாயிறொறு
நின்றுநின்றுதூங்குமடநெஞ்சமே - யின்றமிழைக்
கூறைக்குஞ்சோற்றுக்குங்கூறாதே பேறாகச்
சேறைக்குநாயகன்பேர்செப்பு.


பொருள்


சென்று சென்று = ஒவ்வொரு இடமாகச் சென்று

செல்வம் = பணம் , பொருள்

செருக்குவார் = ஆணவம் கொண்டோர்

வாயில் தொரும் = வாசல் படி எல்லாம்

நின்று நின்று = நின்று நின்று

தூங்கு = காத்து கிட

மட நெஞ்சமே = மட நெஞ்சமே

இன்தமிழை = இனிமையான தமிழை

கூரைக்கும் = வீட்டுக்கும்

சோற்றுக்கும் = சோற்றுக்கும்

கூறாதே = கூறாமல்

பேறாக = பெரும் பேறு தரும்

சேறை = திருச் சேறை

நாயகன் = நாயகனாக விளங்கும்

பேர் = நாமத்தை

செப்பு = கூறு


சரி, இந்த ஊருக்கு சேறை என்று ஏன் பெயர் வந்தது ?

ஊழிக் காலத்தில், உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி போய் விட்டதாம். எது போனாலும் போகட்டும், வேதங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ப்ரம்ம தேவர், ஒரு பெரிய பானை செய்து, அதற்குள் இந்த வேதங்கள் எழுதப் பட்ட ஓலை சுவடிகளை வைத்து விடலாம் என்று எண்ணினார். பானை செய்ய பல  இடங்களில் மண் எடுத்தார். பானை சரியாக வரவில்லை. கடைசியில்  இந்த இடத்தில் எடுத்த சேறு (மண்) தான் சரியாக வந்ததாம். எனவே, இந்த இடம் சேறை அல்லது திருச் சேறை என்று அழைக்கப்பட்டது.




இந்த ஒரு தலத்தில் தான் பெருமாள் ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார். வேறு எங்கும் இப்படி ஒரு காட்சி கிடையாது. ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்ற ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்
          துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
          என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
          திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க்
          காளாமென் அன்பு தானே (1584)
                        பெரியதிருமொழி 7-4-7

இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

கும்பகோணம், திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது. நாச்சியார் கோவிலுக்குப் பக்கம்.

இன்னும் கொஞ்சம் சிறப்புகள் உண்டு. நேரில் போய் பாருங்கள். கொஞ்சம் சுவாரசியம்  இருக்கட்டும்.

சரிதானே !

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_15.html


Wednesday, February 14, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2


பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

இந்த ஊர் எங்கே இருக்கிறது? இந்த ஊரின் சிறப்புகள் என்ன?


திரு அழுந்தூர் என்று கூறப் பட்டாலும், இதன் ஆதிப் பெயர் தேரழுந்தூர். 

ஒரு முறை ஒரு கந்தர்வன் , தேவர்களுக்கு எதிராக தவறான ஒரு தீர்ப்பு சொன்னானாம். அதனால் கோபம் கொண்ட தேவர்கள், பறக்கும் அவன் தேர் தரையில் அழுந்திப் போக என்று சாபம் கொடுத்து விட்டார்களாம். அந்த தேர் அழுந்திய ஊர்  , தேர் அழுந்தூர் என்று ஆகி, தேரழுந்தூர் என்று ஆகி, அழுந்தூர் என்று ஆகி, பின்னர் திரு அழுந்தூர் என்று ஆகிவிட்டது. 

அதெல்லாம் விடுங்கள். 

இந்த ஊருக்கு இன்னொரு முக்கிய , மிக மிக முக்கிய சிறப்பு உண்டு. 

கவி சக்கரவர்த்தி கம்பன் இந்த ஊரில் தான் பிறந்தாராம். அந்த ஊர் மண்ணை மிதித்தால் உடல் சிலிர்க்கும் அல்லவா. ஒரு காலத்தில், கம்பர் இந்த ஊரில்  இருந்திருக்கிறார் , இந்த மண்ணில் நடந்திருக்கிறார் என்று நினைக்கும் போது  எவ்வளவு பெருமையாக , மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு இங்கே மணி மண்டபம் இருக்கிறது. 

அதற்கும் மேலாக, கம்பரின் மனைவிக்கும் ஒரு ஒரு சிலை இருக்கிறது. கம்பரின் மனைவியை  நாம் நினைத்தாவது பார்த்தது உண்டா?


*“கம்பன் பிறந்தவூர், 
காவிரி தங்குமூர்          
கும்பமுனி சாபம் குலைந்தவூர் 
செம்பதுமத்தாதகத்து நாண்முகனும் தாதையும் 
தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

என்ற புலவர் புராணம், இந்த ஊர் கம்பர் பிறந்த ஊர் என்று சொல்லும். 

இந்த ஊரில், பெரிய குளங்கள் இருக்கின்றன. அதில் அன்னப் பறவைகள் வசிக்கின்றன. அன்ன குஞ்சுகள், குளத்தில், அதன் கூட்டில் உறங்குகின்றன. அதன் பெற்றோர் இரை தேடி போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் அந்த குஞ்சுகள் பசியால் விழித்து அழுகின்றன. அந்த சத்தத்தில் , குழம்பிப் போய் அந்த குளத்தில் உள்ள  மீன்கள் அங்கும் இங்கும் தாவுகின்றனவாம். 

குளம்  என்றா சொன்னேன். தவறு. திருத்திக் கொள்ளுங்கள். குளம் இல்லையாம். நிலமாம். அங்குள்ள நிலங்களில் அவ்வளவு தண்ணீர் இருந்ததாம். நிலத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுமாம். அன்னம் கூடு கட்டி வசிக்குமாம். 

பெரிய திருமொழி காட்டும் தேரழுந்தூர் அது. 

  வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
          அடியேன் மனம் புகுந்தென்
     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
          நின்றார் நின்ற ஊர் போலும்
     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
          போனகாதல் பெடையோடும்
     அள்ளல் செறுவில் கயல் நாடும்
          அணியார் வயல் சூழ் அழுந்தூரே
                   (1591) பெரியதிருமொழி 7-5-4

ஒரு போக விளைச்சலுக்கு , மற்ற மாநிலத்தை தண்ணீருக்காக எதிர் நோக்கி இருக்கும் இன்றைய நிலையை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

ஒரு காலத்தில் நீர் அவ்வளவு இருந்தது. 

அப்படிப்பட்ட நீர் உள்ள நிலங்கள் சூழ்ந்த இடம் , தேரழுந்தூர். 

இந்த திரு தலத்தை பிரபந்தம் அப்படி கொண்டாடுகிறது. 45 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

*கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.*

(2066)

*தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,

பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,


நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.*

(2077)


இந்த இடம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

மாயவரத்துக்கு பக்கத்தில் , 2 km  தொலைவில். 

மாயவரம் பக்கம் போனால். ஒரு எட்டு போய்விட்டு வாருங்கள். 

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2.html

Tuesday, February 13, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்


குழந்தை முதன் முதலாக எழுந்து நடை பயிலும் போது, தத்தி தடுமாறும். அருகில் தந்தை நிற்பார். இருந்தும் பிடிக்க மாட்டார். பிள்ளை தவிக்கும்.  அப்பா எங்கேயோ ரொம்ப தள்ளி இருப்பது போலத் தோன்றும். நான் இவ்வளவு துன்பப்         பிள்ளை சில சமயம் கீழே கூட விழும். கீழே விழுந்து தலை அடி போகிறது என்றால் தாவி வந்து தடுத்து விடுவார். குழந்தை நினைக்கும் , இந்த அப்பா இருந்து என்ன பிரயோஜனம், நான் இவ்வளவு துன்பப் படும்போது உதவி செய்யாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறாரே. அவருக்கு என் மேல் பாசமே இல்லையா என்று?

தந்தைக்குத் தெரியும். குழந்தை தடுமாறுகிறது. தள்ளாடுகிறது என்று. எப்போதும் குழந்தையின் கையை பிடித்துக் கொண்டே இருந்தால் , ஒரு காலும் பிள்ளை சுயமாக நடக்காது. தன் காலில் ஒரு போதும் அது நிற்காது. தானே எழுந்து, தத்தி தடுமாறி விழுந்து எழுந்தரித்தால் , பின் அது தானே நடக்க ஆரம்பிக்கும். ஓடும், தாவும். விளையாடும்.

முதலில் அந்த கீழே விழுந்து சின்ன சின்ன அடி பட்டால்தான் , பின்னாளில் தைரியமாக , சொந்த காலில் நிற்க முடியும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

அவன் எங்கேயோ இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கிறான். நாம் தான் , இருக்கும் இடத்தை விட்டு விட்டு  எங்கெல்லாமோ தேடி அலைகிறோம்.

 வினைகள் உங்களைப் படுத்துகிறதா ? வாழ்க்கை உங்களை வாட்டுகிறதா ? கவலைப் படாதீர்கள். எங்கேயோ இருப்பது போலத் தோன்றும் திருமால், எங்கேயோ, பாற்கடலில், வைகுந்தத்தில் இல்லை, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கிறான்.  என்கிறான். 

இந்த தேரழுந்தூர் எங்கே இருக்கிறது ? அதன் பெயர் காரணம் என்ன? அதன் மற்ற சிறப்புகள் என்ன ?

நாளை பார்ப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_13.html

Friday, December 29, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2



பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.

இது முதல் பாகத்தின் தொடர்ச்சி. 

இந்த ஊருக்கு ஆதனூர் என்று ஏன் பெயர் வந்தது ?

ஆ + தன்  + ஊர் = ஆ என்றால் பசு. பசுவின் ஊர் என்பதால், ஆதனூர்.


காமதேனு என்ற பசு, இந்தத் தலத்தில் இருந்து தவமிருந்து பெருமாளிடம் சரண் அடைந்ததால் இந்தத் தலம் திரு ஆதனூர் என்று அழைக்கப் படுகிறது. 


இங்குள்ள கோவிலில் கர்ப்ப கிரகத்தில் இரண்டு தூண்கள் உள்ளன.

இதே போல் இரண்டு தூண்கள் உள்ள ஒரே ஒரு இன்னொரு தலம் திருவரங்கம். இந்தத் தூண்களை மனத் தூண் என்கிறார்கள். இந்த தூண்களை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டால், நரகம் போக மாட்டோம் என்பது ஐதீகம்.

வைகுண்டத்திலும் இப்படி இரண்டு தூண்கள் இருக்கின்றதாம்.

பாடல் 

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!

என்பது குலசேகர ஆழ்வார் வாக்கு 

மன தூண் , ஒரு சிறப்பு. 



 “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
 முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”

 பெரிய திருமடல் 126 - 129 (2674)

என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பு. 

இவை எல்லாம் விட எனக்குப் பிடித்த சிறப்பு என்றால் , கீழே வருவதுதான் .....

திருமங்கை ஆழ்வார் , திருவரங்கனுக்கு மதில் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது பொருள் பற்றாக் குறை ஏற்பட்டது. அவர், பெருமாளிடம் வேண்டினார். அப்போது பெருமாள் கனவில், "கொள்ளிட கரைக்கு வா , பணம் தருகிறேன் " என்றார். திருமங்கையும் அங்கே சென்றார். அங்கே ஒரு ஆள் கையில் ஒரு வியாபாரி கையில் ஒரு காலி மரக்காலும் (பெரிய படி) எழுத்தாணியும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். "நீ யார்" என்று மங்கை வினவ, "உமக்கு பொருள் தரும்படி அழகிய மணவாளன் என்னை அனுப்பினார் " என்று கூறி காலி மரக்காலை திருமங்கையிடம் கொடுத்தார். 

"இது என்ன காலி மரக்காயாக இருக்கிறதே ..இதனால் என்ன பிரயோஜனம் " என்று கேட்டார். 

அதற்கு அந்த வியாபாரி , "இதில் பெருமாளே சரண் என்று மூன்று முறை சொல்லி இதில் கை விட்டால் நீர் நினைத்த பொருள் வரும். ஆனால், யார் முறையாக வேலை செய்தார்களோ அவர்களுக்குத் தான் பொருள் வரும். வேலை செய்யாமல் சோம்பித் தெரிந்தவர்களுக்கு வெறும் மணல் தான் வரும்  " என்று சொல்லி அதை கொடுத்தார். 

பெற்றுக் கொண்ட திருமங்கை எல்லோருக்கும் அதில் இருந்து கூலி கொடுத்தார். 

சிலருக்கு பொருளும், சிலருக்கு மண்ணும் வருவதைக் கண்ட மக்கள், இந்த வியாபாரி ஏதோ மந்திரவாதி என்று நினைத்து அவரை அடிக்க அவரை துரத்தினார்கள்.

பெருமாள் வேகமா சென்றார். மக்களும் துரத்தினார்கள். திருமங்கை ஒரு குதிரையின் மேல் ஏறி துரத்தினார். ஓடி வந்த பெருமாள் திரு ஆதனூர் கோவிலில் மறைந்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. 

இது அல்ல நான் சொல்ல வந்த சிறப்பு. 

அவ்வாறு ஓடி வரும் போது , 

ஆதனூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து ஓலை எழுதியதால் அந்த ஊருக்கு ஓலைப்பாடி என்று பெயர் வந்தது, 

பெருமாள் கம்பீரமாக விஜயம் செய்த ஊருக்கு விஜயமங்கை என்றும், 

அவர் ஓடும் போது மற்றவர்கள் எவ்வளவு தூரத்தில் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாராம், அந்த ஊர் "திரும்பூர்" என்றும், 

எங்கேடா ஆள் யாரையும் காணோம் என்று மயங்கி நின்ற ஊர் , மாஞ்சு போய் நின்ற ஊர் "மாஞ்சேரி " என்றும், 

மரக்காலில் கை வைத்த ஊருக்கு "வைகாவூர்" என்றும் , 

புகுந்த ஊருக்கு "பூங்குடி" என்றும், 

கடைசியில் சென்று அமர்ந்த ஊருக்கு "ஆதனூர் என்றும் 

பெயர் வந்தது என்பது வரலாற்று குறிப்பு. 

இந்த ஊர்கள் இன்றும் இதே பெயரில் வழங்கப் படுகிறது. 

இத்தனை ஊர்கள். ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? இந்த சிறப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

யோசித்துப் பாருங்கள்.

பெருமாள் விரைவாக முன்னே செல்கிறார். அவர் பின்னே திருமங்கை குதிரையில் செல்கிறார். அவருக்குப் பின்னே மக்கள் அவரை தொடர்கிறார்கள்.

இறைவன் முடிவு செய்து விட்டான் திருமங்கைக்கு அருள் செய்வது என்று. அவன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது. திருமங்கைக்கு வியாபாரி போல  வந்தான்.

என்ன தத்துவம் , இறைவன் எந்த வடிவிலும் வருவான். எல்லா வடிவையும் இறையாக நினைத்து  போற்ற வேண்டும்.

வந்த இறைவன், கொஞ்சம் சோதனை செய்கிறான். ஓடுகிறான், எங்கே பக்தனுக்கு  ஆர்வம் இருக்கிறதா என்று காண. திருமங்கையும் விடாமல் துரத்துகிறார்.

அவர் பின்னால் மற்றவர்கள் செல்கிறார்கள். என்று அவர் இறைவனை அடைகிறாரோ, மற்றவர்களும் இறைவனை காண அவர் வழி செய்வார் என்று ஆச்சார்யா ஸம்ப்ரத்யாத்தை விளக்குகிறது.

சரி, இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

சுவாமி மலைக்கு பக்கத்தில், திரு புள்ள பூதக்குடிக்கு பக்கத்தில், நடந்தால் போய் விடும் தூரம் தான்.

கும்பகோணம் போய் விட்டால், புள்ள பூத கூடியும், திரு ஆதனூரும் தரிசனம் பண்ணலாம்.


மூலவர் கையில் மரக்காலோடு அளந்து கொடுக்கும் திருக்கோலம். பெயர் ஆண்டாளுக்கு ஐயன். இன்னொரு கையில் எழுத்தாணி.

சென்று வாருங்கள். பக்திக்காக இல்லாவிட்டாலும்,  ஒரு சரித்திர சம்பவம் நிகழ்ந்த இடம் என்றாவது  நினைத்துப்  போகலாம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_29.html


Thursday, December 28, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1 


பக்திமானுக்கு என்ன இலக்கணம் ?

மூன்று வேளை குளிப்பது, இரண்டு வேளை பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது, வேத பாராயணம் செய்வது, நாள் கிழமை என்றால் விரதம் இருப்பது, பெரியவர்களை வணங்குவது...என்று நாம் ஒரு பட்டியல்  வைத்திருக்கிறோம். இவை எல்லாம் செய்தால் பக்த சிரோன்மணி என்று நமக்குள் ஒரு எண்ணம்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஒரு பட்டியல் தருகிறார்.  அது,

"துன்பம் நிறைந்த இந்த வாழ்க்கையில் இருக்க முயல மாட்டார்கள். பெண்கள் மேல் ஆசை கொண்டு அவர்கள் காம வலையில் விழ மாட்டார்கள். செல்வங்களுக்கு ஆசைப் பட மாட்டார்கள். நான், எனது என்று எண்ண மாட்டார்கள்..."

இப்படியெல்லாம் யார் இருப்பார்கள் ?

"குற்றமற்ற எந்தை அடியார் "

என்கிறார் அவர்.

பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.


செல்வத்தை சேர்க்க நாளும் பொழுதும் அலைகிறோம். சேர்த்த செல்வத்தில் வீடு , வாசல், நகை , நட்டு என்று வாங்கிப் போட்டு, அவை என் வீடு, என் நகை, என் சொத்து பெருமை படுகிறோம்.  இந்த உடம்பை அழகு செய்ய படாத பாடு படுகிறோம்.  இவற்றை எல்லாம் செய்து கொண்டு நாமும் இறைவன் அடியவர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம்.


ஒரு நாளாவது , செல்வம் வேண்டாம். போதும் என்று நினைக்கவாவது முடியுமா நம்மால். சேர்த்த செல்வம் நமது இல்லை என்று நினைக்க முடியுமா ?

நமக்கும் , உண்மையான அடியவர்களுக்கும் உள்ள தூரம் அதிகம் என்று அறிந்து கொண்டால் போதும்.

முழுவதும் முடியாவிட்டாலும், கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஆதனூர் எங்கே இருக்கிறது, இந்த ஊரின் சிறப்பு என்ன , ஆழ்வார்கள் யாராவது இந்த தலத்துக்கு மங்களாசானம் செய்திருக்கிறார்களா ? என்பனவற்றை அடுத்த பிளாகில் பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_28.html



Wednesday, December 27, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 2


பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

ஆணுக்குள்ள முரட்டுத் தனத்தை மென்மை படுத்தி , பண் படுத்தி எடுப்பதில்  பெண்ணின் பங்கு பெரியது. 

நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை தணிக்க இலக்குமி அவர் மடியில் அமர்ந்தாள். அவளை அணைத்தவுடன் , அவர் கோபம் தணிந்தது என்று பார்த்தோம். 

அது மட்டும் அல்ல. 

ஆணுக்குள் அடைந்து கிடக்கும் அன்பை, அருளை, கருணையை, ஒரு நெகிழ்வை  வெளி கொண்டுவரவும் பெண்ணின் அன்பு தேவைப் படுகிறது. 


உயிரைச் சுமந்து, உயிரை வளர்க்கும் பெண்ணில், அன்பும் கருணையும்  இயல்பாகவே அமைந்திருக்கிறது. 

அவளோடு சேரும் போது , ஆணுக்கும், அந்த குணங்கள் தானே வரும். 

திருமங்கை ஆழ்வார் , இறைவன் அன்பைத் தேடி தவித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருள் செய்ய வேண்டும் இலக்குமி , பெருமாளிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள் .  

இதை வைணவ சம்பிரதாயத்தில் புருஷார்த்தம் என்கிறாரகள்.  தந்தையின்  அருள் வேண்டும் என்றால், தாயின் மூலம் அதை எளிதாகப் பெறலாம்  என்பது அந்தத் தத்துவம். 

நம் வீட்டில் நடப்பது தானே. அப்பாவிடம் ஏதாவது என்றால் பிள்ளைகள்  அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்வது இல்லையா ? அது போலத் தான். 

திருமங்கை ஆழ்வாருக்கு அருள் செய்ய வேண்டும் என்று இலக்குமி சொன்னதும், சரி நீ போய்  திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்து இரு. நான் உன்னை அங்கே வந்து திருமணம் செய்து கொள்கிறேன். அந்த சமயத்தில் திருமங்கைக்கு அருள் செய்வோம் என்றார். 


அம்பாளை திருமணம் செய்து கொண்டு பெருமாள் வரும் வழியில், திருமங்கை மன்னன்  , அவர்கள் யார் என்று அறியாமல் , அவரக்ளை வழி மறித்து  பணம் பறிக்க முயன்றார். பெருமாள் அவரை தடுத்தாட்கொண்ட  அவருக்கு செவியில் மந்திர உபதேசம் செய்தார். 

உபதேசம் பெற்ற பின் திருமங்கை பாடிய பாடல் 

பிணியவிழு நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறுவண்டே
பணிகெழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
பணியறியேன் நீ சென்றென் பயலை நோயுரையாயே



இன்றும்  , திருமங்கை உபதேசம் பெற்ற நிகழ்வு ஒரு வைபவமாக கொண்டாடப் படுகிறது இந்த கோவிலில். 

திருமங்கை ஆழ்வார் , வழிப்பறி செய்து கொண்டிருந்தார். அவரை ஒரு சமயப் பெரியாராக, ஆழ்வாராக ஸ்ரீ வைஷ்ணவம் கொண்டாடுகிறது. 

நரசிம்ம மூர்த்தி, திருமகளை ஆலிங்கனம் செய்து அமைதி பெற்றதால் இந்தத் தலம் திருவாலி என்று பெயர் பெற்றது என்று பார்த்தோம். 


இங்கு பெருமாள் நரசிம்ம வடிவில் திருமகளோடு எழுந்து அருளி இருக்கிறார். 

இதையும் சேர்த்து , இந்த இடத்தை சுற்றி ஐந்து நரசிம்ம தலங்கள் உள்ளன.

அவை 

திருவாலி         - லட்சுமி நரசிம்மன் 
குறையலூர்    - உக்கிர நரசிம்மன் 
திருநகரி          - யோக நரசிம்மன் 
திருநகரி          - ஹிரண்ய நரசிம்மன் 
மங்கை மடம்      - வீர நரசிம்மன் 


இந்த கோவிலுக்கு எப்படி போவது ?

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. 3 km தொலைவுதான். 

திருவாலிக்குப் போனால், ஐந்து நரசிம்ம மூர்த்தியையும், பக்கத்தில் உள்ள திருநகரியும்  சேர்த்து தரிசித்துவிட்டு வரலாம். 

கோபமே வடிவான நரசிம்மம். கருணையே வடிவான திருமகள். அவளை அணைத்தபடி  அவன். 

கோபமோ, வெறுப்போ, ஆங்காரமோ வந்தால் என்ன செய்ய வேண்டும் , தெரியும் தானே ? மனைவியை கட்டிப் பிடியுங்கள். எல்லாம் போய் விடும். சாந்தம் வரும். 

கணவன் கோபமாக இருக்கிறானா, முசுடா, முரடா...கவலையை விடுங்கள். அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிப் பிடியுங்கள். ஆனானப் பட்ட நரசிம்ம மூர்த்தியே கோபம் தணிந்து குளிர்ந்தார். இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். 

சிலிர்க்கவில்லை ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_27.html


Tuesday, December 26, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 1


ஆண்கள் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனம் உள்ளவர்கள். காடுகளில் சென்று வேட்டையாடி, எதிரிகளோடு சண்டை போட்டு, வெள்ளம் தீ என்று இவற்றோடு முட்டி மோதி அவர்கள் குணமே போர் குணமாகி விட்டது. வேட்டையாடுதல், போர் எல்லாம் குறைந்து விட்டாலும், இரத்தத்தில் ஊறிய அந்த சண்டைக் குணம், ஒரு வேகம், ஒரு முரட்டுத் தனம் உள்ளே உறங்கியே கிடக்கிறது. எப்போது அது விழிக்கும் என்று அவனுக்கே தெரியாது.

முரட்டு ஆண்களை மென்மை படுத்துவது பெண்கள்தான். ஒரு பெண் வாழ்வில் வந்து விட்டால் போதும் , ஆணின் மனம் மென்மை அடையத் தொடங்குகிறது. கல்லும் கனியாகும்.

இரணியனை கொல்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் , அவனை கொன்ற பின்னும் , கோபம் தணியாமல் இருந்தார். நரசிம்மத்தின் கோபத்தை யார் தணிக்க முடியும்.

தேவர்கள் இலக்குமியை வேண்டினார்கள். அவள் வந்து, நரசிம்மத்தின் வலது தொடையில் அமர்ந்தாள். இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார். அவர் கோபம் மறைந்து விட்டது. திருவை (இலக்குமியை) ஆலிங்கனம் பண்ணிக் கொண்டதால் , இந்த இடம் திரு+ஆலி  , திருவாலி என்று அழைக்கப் படுகிறது.


மூச்சை அடக்கி, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, பூஜை, புனஸ்காரம் என்று அலைந்து திரியாமல் கடைத்தேற வழி வேண்டுமா, திருவாலியில் கோவில் கொண்டுள்ள அந்த பெருமானை சென்று சேருங்கள். நான் அப்படித்தான் உய்ந்தேன் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_26.html



Saturday, December 23, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 2


முந்தைய பிளாகில் திருபுள்ளக்குடி பற்றி பார்த்தோம். இது அதன் தொடர்ச்சி.

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


இந்த ஊர் எங்கிருக்கிறது ? இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது ? இந்த பெயருக்கு என்ன அர்த்தம் ?

கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்ஸில் போய் விடலாம். சுவாமி மலைக்கு ரொம்ப பக்கம். 

புள் என்றால் பறவை. 


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.


என்பார் வள்ளுவர். 

தான் இருந்த கூட்டை விட்டு எப்படி பறவை பறந்து போய் விடுகிறதோ, அது போலத் தான், இந்த உடல் என்ற கூட்டை விட்டு உயிர் பறந்து போய் விடும் என்பது கருத்து. 

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும் 
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம் 
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

என்பார் திருஞானசம்பந்தர். மெய் சொல்லாத இராவணனை தோற்று புறம் காணச் செய்த ஜடாயு (என்ற பறவை, புள்) வுக்கு முக்தி தந்த இடம் என்ற பொருளில்  புள் இருக்கும் வேளூர் என்ற பெயர் பெற்றது வைத்தீஸ்வரன் கோவில். (திரு புள்ளபூதக் குடி அல்ல).

புள்ளம்பூதக்குடி யை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

பாடல் 

அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க  எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)

பொருள் 

அறிவது அறியாது அனைத்து உலகும் உடையாய் என்னை ஆளும் உடையான் 
குறிய மாண உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம் 
நறிய மலர் மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம் பூதக் குடிதானே 

சீதையை பிரிந்து , இராமன் காட்டில் அலைந்த போது , ஜடாயுவை சந்தித்து, ஜடாயுவுக்கு முக்தி  கொடுத்த இடம் என்பதால் இது புள்ளபூதக்குடி என்று பெயர் பெற்றது. இங்குள்ள இராமருக்கு அருகில் சீதை இல்லை. 

நமது இன்றைய வாழ்க்கை, என்றோ நடந்ததாக கூறப் படும் புராண சம்பவங்கள் என்று இரண்டையும் இணைக்கும் பாலங்களாக விளங்குவது இந்த திருக்கோவில்கள்.

ஒவ்வொரு கோவிலும் ஒரு கால இயந்திரம் (time machine ). உங்களை ஒரு நொடியில் புராண காலத்துக்கு கொண்டு செல்லும் அமைப்புகள். 

இந்த கோவிலில்  நிற்கும் போது , இங்கு தான் இராமர் இருந்தார், இங்குதான் சீதையை  தேடி அலைந்தார், ஜடாயுவுக்கு முக்தி தந்தார் என்று நினைக்கும் போது உடல் சிலிர்க்காதா ?


இம்மை நலன்கள், அத்தனை வினையும் போகும், மறுமை பலனும் கிடைக்கும். 

தஞ்சாவூர் , கும்பகோணம் பக்கம் போனால், புள்ள பூதக்குடிக்கும் போய் வாருங்கள். 



Friday, December 22, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்புள்ளம்பூதங்குடி - பாகம் 1 


விலங்குகளை பறவைகளை சிறை பிடிக்க விரும்பும் வேடர்கள் , அவற்றிற்கு பொறி வைத்து பிடிப்பார்கள். உதாரணமாக , புலியை பிடிக்க வேண்டும் என்றால், ஒரு கூண்டு செய்து, அதில் ஒரு மானை கட்டி வைத்து விடுவார்கள். மானின் வாசனையை கொண்டு புலி அதை பிடிக்க பாயும். கூண்டின் கதவு மூடிக் கொள்ளும். புலி மாட்டிக் கொண்டு வாழ் நாள் எல்லாம் அவதிப் படும். 

வீட்டில் கூட எலியை எலி பொறி வைத்து பிடிப்பதை நாம் அறிவோம். 

ஒரு கணம் , அந்த பொறியில் உள்ள வடை துண்டுக்கோ, தேங்காய் சில்லுக்கோ ஆசைப் பட்டு எலி உயிரை விடும். 

அந்த எலியைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய் வரும். பாவமாய் இருக்கும். 

நாம் அந்த எலியை விட பெரிய ஆள் இல்லை. 

இந்த ஐந்து புலன்களும் , ஐந்து பொறியைப் போல. ஒரு நிமிடம் ஆசைப் பட்டு நம்மை மீளாத துயரில் ஆட்படுத்தி விடும். 

விலங்குகளுக்கு , பொறி இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். நமக்குத் தெரியும். இருந்தும் நாம் மாட்டிக் கொள்கிறோம். ஏன் ? 

ஏன் என்றால், இந்த பொறிகள் நமக்கு நல்லது செய்வதாக கூறி, வஞ்சகமாக இழுத்துக் கொண்டு போய் மாட்டி விட்டு விடும். 

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும் , அனுபவம் இருந்தாலும், ஒரு நொடியில் வீழ்த்தி விடும்.  

எனவே அது பெரிய பொறி.

வஞ்சகமாக நம்மை மாட்டி விட்டு விடுவதால் அது கள்ளப் பொறி.

இந்த வஞ்சக பொறிகளை வைத்துக் கொண்டு நாம் அல்லாடுகிறோம். 

இந்த புலன்கள் ஆசைப்படும் அனைத்தும் வேண்டும், அப்படி புலன் இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வரும் நல் வினை , தீ வினை பலன்கள் நம்மை தொடரக் கூடாது, அதாவது வினையினால் மறு பிறப்பு வரக் கூடாது, மேலும், அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பின் ,  இறைவனடி சேர வேண்டும். 

நடக்கிற காரியமா இது ?

முடியும் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

"விரும்பியவை அடைவீர்கள், வினை அனைத்தும் தீரும், பரம பதம் அடைவீர்கள்" என்கிறார்.

அடைவது யார் தெரியுமா ?

"பெரும் பொறி, கள்ளப் பூதங்களான புலன்களை கொண்ட உடலை உடைய நாம் " என்கிறார்.

எப்படி அடைவது ?

திரு புள்ளக் குடி என்ற திரு தலத்துக்கு சென்றால் போதுமாம். 

பாடல் 

விரும்பினவையெய்தும் வினையனைத்துந்தீரு
மரும்பரவீடுமடைவீர் - பெரும்பொறிகொள்
கள்ளம்பூதங்குடிகொள்காயமுடையீ ரடிகள்
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

சீர் பிரித்த பின் 

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  - பெரும் பொறிகொள்
கள்ள பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள் 
புள்ளம்பூதங்குடி யிற்போம்.

பொருள் 

விரும்பினவை = ஆசைப் பட்டவை  அனைத்தும் 

எய்தும் = அடைவீர்கள் 

வினை அனைத்தும் தீரும் = வினை அனைத்தும் தீரும் 
அரும்  பர வீடும் அடைவீர்  = அடைவதற்கு அரிதான பரம பதம் அடைவீர்கள்

பெரும் = பெரிய

பொறிகொள் = பொறிகளை கொண்ட

கள்ள பூதம் குடி கொள்  = கள்ளத்தனமான பூதங்கள் குடி கொண்டுள்ள

காயமுடையீர் = உடம்பை  உடைய

அடிகள் = அடியவர்களே

புள்ளம்பூதங்குடி யிற்போம் = புள்ள பூதக்குடி என்ற திரு தலத்துக்கு போங்கள்


ஒருவர் இறந்து விட்டால், "இன்னாருடைய பூத உடல் இந்த இடத்தில், இன்ன நேரத்தில் அடக்கம் செய்யப் படும் " என்று அறிவிப்பதை கேட்டிருப்பீர்கள். அது என்ன பூத   உடல் ? பூதம் போல பெரிதாக இருக்குமா ?

இல்லை.

பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடம்பு. எனவே பூத உடல்.

இந்த உடலில் உள்ள புலன்கள் இருக்கின்றனவே, அவை கள்ள பெரும் பூதங்கள்.

வெறும் பூதம் என்றாலே பயம். இதில் கள்ள பெரும் பூதம் என்றால் எப்படி இருக்கும்.  கட்டாயம், நம்மை தின்று விடும் அல்லவா ?

அப்படி பயப்பட வேண்டும் இந்த புலன்களுக்கு.

அப்படிப்பட்ட புலன்களை கொண்ட அடியவர்களே, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நல்லது வேண்டும் என்றால், புள்ளபூதக் குடிக்கு போங்கள்.

நீங்க போனா மட்டும் போதும்.

சரி, இந்த புள்ள பூத குடிக்கு இந்த பெயர் எப்படி வந்தது ? இந்த ஊர் எங்கே இருக்கிறது ? இங்கு வேறு என்ன விஷேசம் ?

மேலும் சிந்திப்போம்.

(பயணம் தொடரும்)

Thursday, December 21, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருக்கரம்பனூர்


வயதாக வயதாக ஆசார பற்று அதிகம் ஆகும் என்று சொல்வார்கள்.

காரணம் பலவாக இருக்கலாம். இருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாள் தான். அந்த கொஞ்ச காலத்தில் பூஜை புனஸ்காரம் செய்து போகும் வழிக்கு புண்ணியம் தேடுவோம் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

அல்லது, பிள்ளைகள் எல்லாம் வேலை, திருமணம் என்று போன பின், பொழுது நிறைய இருக்கும். அதை பூஜை, ஆன்மீக புத்தகங்களை படிப்பது என்று செலவிடலாம்.

அல்லது, ஆசாரங்களை கடை பிடிப்பது சமூகத்தில் ஒரு மதிப்பை தருவதால் இருக்கலாம். அவர் அந்த மலைக்கு 18 வருடம் விடாமல் போய் இருக்கிறார்,  இவர் ஒவ்வொரு  வருடமும், ஒரு குறிப்பிட்ட தினத்தில் இந்த கோவிலுக்கு போய் விடுவார் , என்று ஆசாரங்களை கடை பிடிப்பதால் வரும் சமூக அந்தஸ்து காரணமாக இருக்கலாம்.

இப்படி விரதம், கோவில், பூஜை, தத்துவ விசாரங்கள் , என்று அலைவதால் பயனில்லை என்று நான் சொன்னால் அது எப்படி என்று கேட்கலாம். சொல்வது பிள்ளை பெருமாள் ஐயங்கார். ஆன்மீகத்தில் தோய்ந்த, அறிஞர். இவை எல்லாம் ஒரு பயனையும் தராது. இறைவன் நாமத்தை கல் என்கிறார்.


பாடல்


சிலமாதவஞ்செய்துந் தீவேள்விவேட்டும்
பலமாநதியிற்படிந்து - முலகிற்
பரம்பநூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூருத்தமன்பேர்கல்.

சீர் பிரித்த பின்

சில மாதவம் செய்தும்  தீ வேள்வி வேட்டும்
பல மா நதியிற் படிந்தும்   - உலகில்
பரம்ப நூல்கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்.

பொருள் 

சில மாதவம் = சில பெரிய தவங்களை

செய்தும் = செய்தும்

தீ வேள்வி வேட்டும் = யாகம், ஓமம், போன்ற பூஜைகள் செய்தும்

பல மா நதியிற் படிந்தும் = பல நதிகளில் நீராடியும்

 உலகில் = உலகில்

பரம்ப நூல்கற்றும் = பரந்து பட்ட பல நூல்களை கற்றும்

பயனில்லை = பயன் எதுவும் இல்லை

நெஞ்சே = நெஞ்சே

கரம்பனூர் = திருக்கரம்பனூர் என்ற தலத்தில் கோவில் கொண்டுள்ள

உத்தமன் = உத்தமன் என்ற பெயர் கொண்ட பெருமாளின்

பேர் கல் = பெயரை கற்றுக் கொள்

பெயரை சொல் என்று சொல்லவில்லை. சில மந்திரங்களை, பெயர்களை ஏதோ tape recorder போட்டால் ஓடுவது போல மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். அப்படி அல்ல. இறைவன் திருநாமத்தை கற்க வேண்டும். கற்றல் என்றால் அதில் ஏதோ புரியாத ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

புலன்களை வருத்தி, விரதம் இருந்து, உடலும் மனமும் வாடும் படி செய்யும் பூஜைகளால் ஒரு பலனும் இல்லை என்று திருமங்கை ஆழ்வாரும் சாதிக்கிறார்.

பாடல்

ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

(பொருள் எழுத வேண்டுமா ? பாடலை வாசித்துப் பாருங்கள்...நாக்கில் துள்ளும் பாடல். வாசிக்கும் போதே ஒரு சுவை தெரிகிறது அல்லவா. பத உரை வேண்டும் என்றால் சொல்லுங்கள், தனியாக எழுதுகிறேன்).


இந்த திருக்கரம்பூர் எங்கு இருக்கிறது தெரியுமா ?

திருச்சியில் இருந்து 4 km தொலைவில். திருவரங்கம் போனால், அங்கிருந்து பக்கம் தான். 

பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே,

என்பார் திருமங்கையாழ்வார். 

கரம்பனூர் உத்தமனை கண்டது தென் அரங்கத்தே என்கிறார். ரொம்ப பக்கம். நடந்து போயிரலாம். இப்பவும் கூட, அந்த பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. 


இந்த கடல் ஏழும் , மலை ஏழும் , உலகு ஏழும் உண்டு உமிழ்ந்ததைப் பற்றி பல முறை சிந்தித்து இருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது, எப்படி இதே போல நவீன விஞ்ஞானத்திலும் சில விஷயங்கள் இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப் பட்டது என்று சொல்ல மாட்டேன். நவீன விஞ்ஞானம் ஆழ்வர்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்ல மாட்டேன். ஆனால், சிந்தனைகள் மிக ஆச்சரியமான ஒன்று. என்ன என்பதை இன்னொரு பிளாகில் சிந்திப்போம். சரியா ?



பெருமாள் பெயர் உத்தமன். வட மொழியில் புருஷோத்தமன் என்று பெயர். 

ஒரு காலத்தில் இங்கு நிறைய கடம்ப மரங்கள் இருந்ததாம். பிரம்மா இந்த தளத்தில் விஷ்ணுவை வழிபட்டு வந்தாராம். அப்படி இருக்கும் போது ஒரு நாள் ப்ரம்மாவின் பக்தியை சோதிக்க எண்ணி பெருமாள் கடம்ப மரமாய் நின்றாராம். பல கடம்ப மரங்கள் உள்ள அந்த வனத்தில் பெருமாள் கடம்ப மரமாய் நின்ற அந்த மரத்தை ப்ரம்மா கண்டு கொண்டு பூஜை செய்தாராம். அதனால் மனம் மகிழ்ந்த பெருமாள், பிரம்மாவுக்கு அங்கு சிலை வடிவில் ஆராதனை நடக்க அருள் புரிந்தாராம். 

இந்த தலத்தில் பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் கோவில் உள்ளது. 

பிரம்மாவுக்கு கோயில் உள்ள மிக அரிதான இடங்களில் இதுவும் ஒன்று. 

1000 பழமையான பழைமையான கோவில். நம்ப முடிகிறதா ?

1000 ஆண்டு பழமையான கோவில். 700 அல்லது 800 ஆண்டுகள் பழைமையான பாடல்கள். இன்று நம் கண் முன்னே. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

அடுத்த முறை திருச்சி சென்றால், உத்தமனூரை எட்டிப் பார்த்து விட்டு வாருங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_21.html


Thursday, December 7, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - தஞ்சாவூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - தஞ்சாவூர்


பெரும்பாலான சமயங்களில் நமக்கு மனம் ஒரு பக்கம் போகிறது, உடல் இன்னொரு பக்கம் போகிறது.

மனம் சொல்கிறது, இருந்து படி என்று. உடல் சொல்கிறது, "போதும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் " என்று.

சில சமயம் உடல் துடிதுடிப்பாக இருக்கும் , மனம் சோர்ந்து போய் இருக்கும்.

சில பேரை பார்த்தால் கோபமும் , எரிச்சலும் வரும். நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் போல இருக்கும். மனம் சொல்லும் , திட்டச் சொல்லி. உடல் மறுக்கும். மேலதிகாரியாக இருப்பார். அசடு வழிந்து விட்டு வர வேண்டி இருக்கும்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்று வேண்டுவார் வள்ளலார்.

மனதும் உடலும் ஒத்து போவது என்பது எப்போதும் நிகழ்வதும் இல்லை.

There is a constant fight between head and heart என்று சொல்லுவார்கள்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்லுகிறார்....

"நெஞ்சே நான் சொல்வதைக் கேள். தஞ்சையில் உள்ள பெருமாளை போற்று.
அது உனக்கு நல்லது. எனக்கும் நல்லது " என்கிறார்.

பாடல்


ஓதக்கேணெஞ்சே யுனக்குமிதுநன் றெனக்கு
மேதக்கநன்மையினிவேறில்லை - போதப்
பெருந்தஞ்சைமாமணியைப் பேணிவடிவம்
பொருந்தஞ்சைமாமணியைப் போற்று.


சீர் பிரித்த பின்

ஓதக் கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்
மேதக்க நன்மை இனி வேறில்லை  - போதப்
பெருந் த ஞ்சை மா மணியைப் பேணி வடிவம்
பொருந்திய அஞ்சை மா மணியைப் போற்று.

பொருள்


ஓதக் கேள் நெஞ்சே = சொல்லுவதை கேள் நெஞ்சே

உனக்கும் = உனக்கும்

இது நன்று = இது நல்லது

எனக்கும் = எனக்கும்

மேதக்க  = மேன்மை தரத் தக்க

நன்மை = நல்லது தரக் கூடியது

இனி வேறில்லை = இனிமேல் வேறு இல்லை

போதப் = சிறந்த

பெருந் த ஞ்சை = பெரிய தஞ்சையில்

மா மணியைப் = பெரிய மணியை

பேணி = போற்றி

வடிவம் = வடிவம்

பொருந்திய = பொருத்தமாக அம்மனித

அஞ்சை = ஐந்தை

மா = பெரிய , உயரிய

மணியைப் போற்று= மணியைப் போற்று


தஞ்சை மாமணி என்பது தஞ்சாவூரில் உள்ள பெருமாளின் நாமம்.

பொருந்திய அஞ்சை என்பதற்கு என்ன அர்த்தம்  ? எது பொருந்தியது ? எதில் பொருந்தியது ?

இதற்கு இரண்டு விதமாக பொருள் கூறலாம்.

ஒன்று பெருமாளின் ஐந்து பொருள்கள்

- சுதர்சன சக்கரம்
- பாஞ்ச சன்யம் என்ற சங்கு
- கௌமோதகீ என்ற கதாயுதம்
- நந்தகம் என்ற வாள்
- சார்ங்கம் என்ற வில்

இந்த ஐந்தும் பொருந்திய என்று கூறலாம்.

வேறொரு வகையில்

பரத்வம், வ்யூஹம், விபவம் அந்தர்யாமித்வம், அர்ச்சை என்பன.

பரத்வம்ப என்பது பரம பதத்தில் உள்ள நிலை

வ்யூஹம் என்பது  திருப்பாற்கடலில் எழுந்து அருளிய நிலை

விபவமாவது - இராமர், கிருஷ்ணர் என்ற அவதாரங்கள்

அந்தர்யாமித்வமாவது - உலகில் உள்ள அணைத்து பொருள்களிலும் நிறைந்து இருப்பது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூறிய நிலை

அர்ச்சை என்பது விக்கிரஹ வடிவில் இருப்பது

சைவத்திலும் சரி வைணவத்தில் சரி, ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இறைவன் தோற்றம் அளிக்கிறான் என்று சொல்கிறார்கள்.

விறகில் தீயினன் , பால் படு நெய் போல மறைய நின்றுளன், மாமணி சோதியன்

என்பார் திருநாவுக்கரசர்.

சிலருக்கு விறகில் உள்ள தீ போல , உரசினால் பற்றிக் கொண்டு வெளியே வரும்.

சிலருக்கு பாலில் உள்ள நெய் போல , உறை விட்டு, தயிராக்கி, கடைந்து எடுத்தால் தான் வெண்ணெய் , நெய் எல்லாம் வரும்.

சிலருக்கு மணியில் உள்ள ஒளியைப் போல, லேசாக துடைத்தால் போதும் மணியில் இருந்து ஒளி வெளிப்படும்.

ஒரு இடத்துக்கு போக ஒருவர் வழி கேட்டால், அவர் எங்கு இருக்கிறாரோ அங்கிருந்து தான்  வழி சொல்ல வேண்டும்.

போய் சேர வேண்டிய இடத்துக்கு பக்கத்தில் இருப்பவருக்கு ஒரு மாதிரி வழி சொல்லலாம். ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருப்பவருக்கு வேறு மாதிரி வழி சொல்ல   வேண்டும். இரண்டு பேருக்கும் எப்படி ஒரே வழியைச் சொல்வது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று வைகை ஆற்றுக்கு பக்கத்தில் இருந்து கேட்டால் ஒரு மாதிரி வழி சொல்லலாம். மேலூரில் நிண்டு கேட்டால், வேறு மாதிரி வழி, சென்னையில் இருந்து  கேட்டால் இன்னொரு மாதிரி வழி, லண்டனில் இருந்து கேட்டால் வேறு வழி.

எல்லோருக்கும் ஒரே வழி என்பது சரிப்படாது.


போய் சேரும் இடம் ஒன்று தான். புறப்படும் இடம் வேறு.

அது போல, இறைவன் இருக்கும் இடம் ஒன்றுதான், ஒவ்வொருவர் இருக்கும் இடம் வேறு வேறு.

எனவே ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறான்.

ஒரு பெண் , அவளின் தந்தையிடம் ஒரு மாதிரி இருக்கிறாள், கணவனிடம் வேறு மாதிரி  இருக்கிறாள், பிள்ளையிடம் வேறு மாதிரி இருக்கிறாள்.

வீட்டு பெண்ணுக்கே இத்தனை வேடம் வேண்டி இருக்கிறது.

ஆண்டவனுக்கு எவ்வளவு வேண்டும்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த மனம் இருக்கிறதே, அது பாட்டுக்கு அலைந்து கொண்டே இருக்கும். அதை பிடித்து கட்டி போட முடியாது.

அப்படி ஓடும் மனதை, இறைவன் பால் திருப்பினால் , அதுக்கும் நல்லது நமக்கும் நல்லது என்கிறார் பிள்ளை பெருமாள் அய்யங்கார்.

மனம் ஓடும் இயல்பு உடையது.

எனவே, அவர் சொல்கிறார், பார், அங்கே சக்கரம், இங்கே கதை, அந்த பக்கம் வாள் , இந்தப் பக்கம் வில் என்று அவன் மேனியையே நீ எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கிறது என்று.

இரசித்து, அனுபவித்து படிக்க வேண்டிய பாடல்கள்.

நேரம் ஒதுக்கி அனுபவித்து படியுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_7.html