Showing posts with label 108 திவ்ய தேசம். Show all posts
Showing posts with label 108 திவ்ய தேசம். Show all posts

Monday, April 29, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


பொருள் 

ஏற்றினை = ஏறு போல கம்பீரமானவனை 

இமயத்து = இமய மலையில் 

ளெம் மீசனை = எம் ஈசனை 

இம்மையை = இப்பிறவிக்கு 

மறுமைக்கு = மறு பிறவிக்கு 

மருந்தினை = மருந்து போன்றவனை 

ஆற்றலை = சக்தி வடிவானவனை 

அண்டத் தற்புறத் துய்த்திடும் = அண்டத்து அப்புறம் உயித்திடும் 

ஐ யனைக் = ஐயனை 

கையிலாழி யொன்றேந்திய = கையில் ஆழி ஒன்று ஏந்திய 

கூற்றினை = தீயவர்களுக்கு எமன் போன்றவனை 

குருமாமணிக் குன்றினை = நீல மாணிக்க மணி போன்ற குன்றினை 

நின்றவூர் = திரு நின்ற ஊரில் 

நின்ற = நின்ற 

நித்திலத் தொத்தினை = முத்தை போன்றவனை (நித்திலம் = முத்து) 

காற்றினைப் = காற்றினை 

புணலைச் = நீரை 

சென்று = சென்று 

நாடிக் = நாடி 

கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் = திரு கண்ணமை என்ற ஊரில் கண்டு கொண்டேனே 

திருமால் இருந்த ஊர் திருநின்றவூர் என்கிறார். கண்டது திருக்கண்ணமையில் என்கிறார். என்ன குழப்பம் இது ?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் வழியாகச் சென்றாராம். சென்றவர், இந்த கோவிலை தரிசனம் செய்து விட்டு, மங்களாசாசனம் செய்யமால் சென்று விட்டாராம்.

அப்போது, இலக்குமி "சுவாமி, எல்லா ஊரிலும் மங்களாசாசனம் செய்யும்  திருமங்கை ஆழ்வார் நம்ம ஊரை மட்டும் விட்டு விட்டாரே, அவரிடம் சென்று ஒரு பாசுரம் வாங்கி வாருங்கள்" என்று சொன்னாளாம்.

"அதுவும் சரிதான். எப்படி இந்த ஊரை மட்டும் விட்டு விட முடியும். இப்பவே போய்  வாங்கி வருகிறேன் " என்று சுவாமி கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருமல்லை என்ற மாமல்லபுரத்துக்கு சென்று விட்டாராம். பெருமாள் விடவில்லை. மாமல்லபுரம் வரை தொடர்ந்து சென்று பாசுரம் வாங்கி வந்துவிட்டார்.

அந்தப் பாசுரம் ...

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
          நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
     காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
          கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே

இப்போது கூட, மனைவிமார்கள் கணவனிடம் ஏதாவது வாங்கி வரும் படி சொல்லுவார்கள். சொல்லும் போது முழுதாக சொல்லுவது கிடையாது. அரைகுறையாக சொல்லிவிட வேண்டியது. கணவன் வாங்கி வந்த பின், "அய்ய , இதையா வாங்கிட்டு வந்தீங்க...போய் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கிட்டு வாங்க" என்று சொல்லி திருப்பி அனுப்புவார்கள்.

பெருமாள், ஒரு பாசுரம் வாங்கி வந்து, இலக்குமியிடம் காட்டினார். உடனே இலக்குமி "என்ன எல்லா ஊருக்கும் பத்து பாட்டு பாடுகிறார். நமக்கு மட்டும் ஒரு பாட்டுத்தானா? போய்  இன்னொரு பாசுரம் வாங்கிட்டு வாங்க " என்று அனுப்பிவிட்டாள்.

வேற வழியில்லை. பெருமாள் மறுபடியும் கிளம்பி விட்டார்.

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணமை என்ற ஊருக்கு சென்று விட்டார். அங்கு வரை போய், பாடல் பெற்று வந்தாராம் பெருமாள்.

அந்தப் பாடல் தான் மேலே இருக்கும் "ஏற்றினை" என்று ஆரம்பிக்கும் மேலே சொன்ன பாடல்.

பக்தன் வாயால் பாடல் வேண்டும் என்பதால் ஆண்டவனுக்கு அவ்வளவு விருப்பம்.

இறைவனே வந்து எனக்கு ஒரு பாசுரம் கொடு என்று ஒன்றுக்கு இரண்டாக கேட்டு வாங்கிப் போன இடம் இது.


ஒரு முறை, இலக்குமி ஏதோ ஒரு காரணத்துக்காக சமுத்திர இராஜனிடம் கோபித்துக் கொண்டு பாற் கடலை விட்டு இங்கே வந்து விட்டாளாம்.

திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் அதற்கு "திரு நின்ற ஊர்" என்று பெயர் வந்தது.

சமுத்திர இராஜன் எவ்வளவோ சொல்லியும் தேவி சமாதானம் ஆகவில்லை.

கடைசியில், " நீ என்னை பெற்ற தாய் அல்லவா" என்று சொல்ல, தேவிக்கு மனம் குளிர்ந்து விட்டது. எந்தத் தாய்க்குத் தான் பிள்ளை மேல் தீராத கோபம் வரும்.

சமுத்திர இராஜன் "என்னை பெற்ற தாய்" என்று சொன்னதால், அம்பாளுக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.


இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தினை என்கிறார் திருமங்கை.

இந்த பிறவி இருக்கிறதே, அது ஒரு பிணி.

நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணம் ஆகிவிடும். பிணி அப்படி அல்ல.

உதாரணமாக பசி பிணி என்று சொல்லுவார்கள். எத்தனை உணவு சாப்பிட்டாலும், நாலு அஞ்சு மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும். அதுக்கு மருந்தே கிடையாது.

இந்தப் பிறவி இருக்கிறதே. அதுக்கும் மருந்தே கிடையாது. மருந்து கிடையாது என்றால் , கடையில், வைத்தியரிடம் கிடையாது.

ஆண்டவன் ஒருவன் தான் பிறவி நோய்க்கு மருந்து.

இராமாயணத்தில், இராமனையும் இலக்குவனையும் கண்ட அனுமன் சொல்லுவான், இவர்கள் "அரு மருந்து" என்று.

தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,
இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள்.

என்பது கம்ப வாக்கு.



அடுத்த முறை சென்னைப் பக்கம் போனால், பூந்தமல்லிக்கு பக்கத்தில் தான் இருக்கிறது இந்த இடம். ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_29.html

Saturday, April 27, 2019

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை

108 திவ்ய தேசம் - திரு நின்ற ஊர் - இம்மையை மறுமைக்கு மருந்தினை 


அம்மையே அப்பா என்று இறைவனை தொழுது கேட்டு இருக்கிறோம்.

என்ன பெத்த இராசா என்று குழந்தையை கொஞ்சுவதை கேட்டு இருக்கிறோம்.

"என்னை பெற்ற தாயார்" என்று ஒரு திருத்தலத்தில் அம்பாளின் பெயர் இருக்கிறது தெரியுமா ? அம்பாள் பெயரே "என்னைப் பெற்ற தாயார்" என்பது தான்.

அந்தத் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

எல்லோரும் இறைவனிடம் சென்று அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள். பொருள், பதவி , வேண்டாவிட்டாலும், முக்தி கொடு, பரம பதம் கொடு, வைகுந்தம் கொடு, சுவர்க்கம் கொடு என்று ஏதோ ஒன்றைக் கேட்பார்கள்.

பக்தனிடம் இறைவன் கேட்டு வந்தான் என்று கேள்விப் பட்டதுண்டா? அதுவும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பகவானே நேரில் சென்று பக்தனிடம் கை ஏந்தி நின்ற கதை தெரியுமா ?

இறைவனிடம் இல்லாத ஒன்று அப்படி என்ன பக்தனிடம் இருந்து விடப் போகிறது ?

எல்லாவற்றிற்கும் விடை, இந்தத் திருத்தலத்தில் இருக்கிறது. 


திரு நின்ற ஊர் !

சென்னைக்கு மிக சமீபத்தில், பூந்தமல்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

திரு நின்ற ஊர் என்பது எவ்வளவு அழகான பெயர். திரு என்ற திருமகள் வந்து நின்ற ஊர். அது காலப் போக்கில் நம் மக்கள் வாயில் சிதிலமடைந்து திண்ணனூர் என்று ஆகி  விட்டது.

இடிந்த கோயில்களை புனரமைத்தது கும்பாபிஷேகம் செய்வது போல, திரிந்து போன ஊர் பெயர்களையும் மீட்டு எடுத்தால் எவ்வளவோ நல்லது.

இந்த திருத்தலத்தை திருமங்கை ஆழ்வார் மங்களாசானம் செய்து இருக்கிறார்.


பாடல்


ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
          இம்மையை மறுமைக்கு மருந்தினை
     ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
          ஐ யனைக் கையிலாழி யொன்றேந்திய
     கூற்றினை, குருமாமணிக் குன்றினை
          நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
     காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
          கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன் - (1642)
                          பெரியதிருமொழி 7-10-5


தொடரும்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108_27.html

Wednesday, April 17, 2019

108 திவ்ய தேசம் - திருமோகூர்

108 திவ்ய தேசம் - திருமோகூர் 


ஒரு முறை தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று அமுதம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுக்கென்ன, கொடுத்துட்டா போகுது னு, திருப்பாற்கடலை கடைய ஆணையிட்டார். தேவர்கள் ஒருபுறம் கடைந்தார்கள். மறுபுறம் அசுரர்கள். முதலில் ஆலகால விஷம் வந்தது. சிவன் அதை எடுத்து உண்டார். ஏதேதோ வந்தது. கடைசியில் அமுதம் வந்தது.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை வந்தது.

திருமால் மோகினி வடிவம் கொண்டு, அசுரர்களை மயக்கி, அமுதம் அனைத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டார்.

அப்படி கொடுத்த இடம் தான் திருமோகூர்.

மோகினி வடிவில் வந்ததால் திரு மோகினி ஊர், திரு மோகியூர், திருமோகூர் என்று ஆகிவிட்டது.

அந்த இடம், எங்கே இருக்கிறது தெரியுமா ?

மதுரைக்கு ரொம்ப பக்கத்தில..மேலூர் போற வழியில, ஒத்தக்கடைக்கு பக்கத்தில இருக்கு.

மதுரையில் இருந்து சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் போய் விடலாம்.

டவுன் பஸ் வசதியும் இருக்கும். திருவாதவூர் போகும் பஸ் அந்த வழியாத்தான் போகும்.

நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசம்.



பாடல்

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.


பொருள்

நாம டைந்த  = நாம் அடைந்த, நாம் பெற்ற

நல் லரண் = நல்ல அரண், நல்ல பாதுகாப்பு

தமக் கென்று = நம்முடையதென்று

நல் லமரர் = நல்ல தேவர்கள்

தீமை செய்யும் = தீமைகள் செய்யும்


வல் லசுரரை = வன்மையான அசுரர்களை

யஞ்சிச் = அஞ்சி

சென் றடைந்தால் = சென்று அடைந்தால்

காம ரூபம் = மோகினி உருவம்

கொண் டெழு = கொண்டு எழுந்து

அளிப் பான் = அருள் செய்வான்

திரு மோகூர் = திருமோகூர்

நாம மே = அவன் நாமமே

நவின்று = சொல்லி

றெண்ணுமின் = மனதில் எண்ணுங்கள்

ஏத்துமின் = போற்றுங்கள்

நமர்காள்  = நம்மவர்களே

அவன் நாமத்தை , பெயரை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் போதும் என்கிறார்.

நவிலுதல் என்றால் கற்றல் என்று பொருள்.

நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார் வள்ளுவர்.

நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு


உயர்ந்த புத்தகங்களை படிக்க படிக்க எப்படி இன்பம் உண்டாகிறதோ அது போல நல்ல பண்புடையவர்களின் தொடர்பும் இன்பம் தரும் என்கிறார்.

இறைவன் நாமத்தை நவில வேண்டும்.

சும்மா இராமா இராமா என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய வேண்டும்.

"எண்ணுமின்" மனதுக்குள் எண்ண வேண்டும்.

"ஏத்துமின்" கையால் வணங்க வேண்டும் .


மனம் வாக்கு காயம் என்று சொல்லும் திரிகாரணத்தாலும் வணங்க வேண்டும்.

அடுத்த தடவை மதுரை பக்கம் போனால், மறக்காமல் திருமோகூர் போய்விட்டு வாருங்கள். அங்கே ப்ரம்ம தீர்த்தம் இருக்கிறது. இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/108.html


Thursday, January 17, 2019

108 திவ்ய தேசம் - திரு ஊரகம்

108 திவ்ய தேசம் - திரு ஊரகம் 


தேவாரம், திருவாசகம், பிரபந்தம் இவற்றை எல்லாம் படிக்கும் போது, இதில் என்ன இருக்கிறது. கடவுள் பற்றிய வர்ணனை, அவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார், இன்னது செய்வார், என்று கடவுள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வாழ்க்கை தத்துவங்கள் இருக்கும். என்னை காப்பாற்று, என்னை உன்னோடு அழைத்துக் கொள் , என்னை மன்னித்துக் கொள் என்ற பிரார்த்தனைகள் இருக்கும்.

இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால், அதில் வேறு ஒன்றும் தேறாது.  அப்படியே தேர்ந்தாலும் , ஏதோ கொஞ்சம் இருக்கலாம்.

எப்படி இந்தப் பாடல்கள், பாசுரங்கள் காலம் கடந்து நிற்கின்றன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களையும் வசீகரிக்கின்றன?  அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.

திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு தாயாகவும், காதல் வயப்பட்ட தன் மகளை பார்த்து பாடுவது போல ஒரு பாசுரம் எழுதி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள், மகளுக்காக உருகும் ஒரு தாயின் மனம் தெரியும்.

ஒரு தந்தை எவ்வளவுதான் பாசத்தை மகள் மேல் கொட்டினாலும், ஒரு தாயின் அளவுக்கு தந்தையால் மகளை நெருங்க முடியாது. ஒரு பெண்ணின் உடல் கூறுகள், உணர்ச்சி கொந்தளிப்புகள், இவற்றை இன்னொரு பெண் தான் அறிந்து கொள்ள முடியும். கூச்சப் படாமல் எளிமையாக பேச முடியும்.

மகளின் உடல் கூறுகளைப் பற்றி ஒரு தந்தை பேசுவது நாகரீமாக இருக்காது.

தாயின் இடத்தில் இருந்து, திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்....மனதை என்னவோ செய்யும் பாடல்....

பாடல்

கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,

அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,

சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பொருள்


கல்லெடுத்துக் = மலையை எடுத்து

கல்மாரி = கல் மழையில் இருந்து

காத்தாய் என்றும் = காப்பாற்றினாய் என்று கூறும் (கூறுகிறாள்)

காமருபூங் = விரும்பும் பூவைப் போன்ற

கச்சியூ ரகத்தாய் = காஞ்சி ஊரகத்தில் உள்ளவனே

என்றும் = என்று கூறும்

வில்லிறுத்து  = வில்லினை அறுத்து

மெல்லியல் தோள் = மென்மையான தோள்களை கொண்ட சீதையை

தோய்ந்தாய் = அடைந்தாய்

என்றும் = என்றும் கூறும்

வெஃகாவில் = திரு வெஃகா என்ற இடத்தில்

துயிலம ர்ந்த = துயில் அமர்ந்த

வேந்தே. = தலைவனே

என்றும், = என்றும் கூறும்

அல்லடர்த்து = இருள் சூழ்ந்த (கொடுமை நிறைந்த)

மல்லரையன் றட் டாய்  = மல்லரை அன்று வென்றாய்

என்றும் = என்றும் கூறும்

மாகீண்ட கை தலத்து என்  = கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அவனை அழித்தாய்

மைந்தா என்றும் = மைந்தனே என்றும் கூறும்

சொல்லெடுத்துத் = சொல் எடுத்துக் கொடுத்து

தங்கிளியைச் = தன்னுடைய கிளியை

சொல்லே என்று = சொல் என்று கூறும்

துணைமுலைமேல் = துணையான இரு முலைகள் மேல்

துளிசோரச் = விழி நீர் வடிய

சோர்க்கின் றாளே = சோர்ந்து போகின்றாளே , என் மகள்.


அவளுக்கு அவன் மேல் காதல். அவனைப் பற்றி யாராவது உயர்வாகச் சொன்னால், அவளுக்கு மகிழ்ச்சி. அதற்காக எல்லோரிடமும் போய் கேட்கவா  முடியும்.

அவன் நினைவு அவளை வாட்டுகிறது.

அந்தப் பெண்ணின் தாய்க்குத் தெரிகிறது.  தன் மகள் காதல் வசப் பட்டு இருக்கிறாள் என்று  தெரிகிறது. மகளைப் பார்த்து, தாயும் உருகுகிறாள்.

மகளுக்கும், தாயிடம் சென்று நேரே சொல்ல வெட்கம். தயக்கம்.

தன்னுடைய கிளியை எடுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, அவன் பெயரை சொல்லுகிறாள். அந்த கிளியும் திரும்பிச் சொல்லுகிறது. அவள் சிலிர்த்துப் போகிறாள்.

ஆயர் பாடியில், இந்திரனின் ஏவலால் வருணன் கல் மழை பொழிந்தான். அங்கே இருந்த மலையை கையில் எடுத்து குடை போல பிடித்து அந்த மக்களை கண்ணன் காப்பாற்றினான்.

அவன் தூக்கியது மலையை. அவளுக்கு அது சாதாரண கல் போலத் தெரிகிறது.

அவன் திறமைக்கு முன்னால், இது எல்லாம் சாதாரணம் என்பது போல.


"கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்" என்கிறாள்

யாராலும் தூக்கக் கூட முடியாத வில். சீதையின் மெல்லிய தோள்களை சேர விரும்பி, அவ்வளவு பெரிய வில்லை எடுத்து அதை முறித்தான்.


"வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்"

பெண் மென்மையானவள் தான். ஆனால், அந்த மென்மை தான், ஆணுக்கு அவ்வளவு பலத்தைத் தருகிறது.

பாலில் ஒரு துளி தயிரை விட்டு உறைய விடுவார்கள். அதற்கு தோய்தல் என்று பெயர். பாலும் தயிரும் ஒன்று சேர்ந்து முழுவதும் தயாராகி விடும்.

சீதையின் தோள்களோடு இராமன் தோய்ந்தான் என்கிறாள். பிரியாமல் இருந்து , இருவரும் இரண்டற கலந்தார்கள்.

இவள் அவன் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அதைக் கேட்ட கிளியும் அதையே சொல்கிறது.

இது போன்ற பாடல்களை சொல்லி விளக்க முடியாது.

அந்த உணர்ச்சிகளை அப்படியே உள் வாங்கினால், அந்தப் பாடலை உணரலாம்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/108.html

Monday, October 29, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2 



 ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை கேட்டால் சொல்லுவார்கள், "நான் இறைவனை நம்புகிறேன். இறைவனிடம் போய் சேர முயல்கிறேன். இறைவன் சொர்க்கத்தில்  இருக்கிறான்  வைகுந்தத்தில் இருக்கிறான் அல்லது கைலாயத்தில் இருக்கிறான் .." என்றது சொல்லுவார்கள். 

இறைவனை தேடுவது என்றால் என்ன  அர்த்தம். எதையோ தொலைத்து விட்டு , பின் தேடினால் அர்த்தம்  இருக்கும். நாம் இறைவனை தொலைத்து விட்டோமா ? இதற்கு முன் அவர் நம்மிடம் இருந்தாரா ? இல்லையே. பின் எப்படி தேட முடியும் ?

 என் கார் சாவி என்னிடம் இருந்தது. எங்கேயோ வைத்து விட்டேன். அதைத் தேடி கண்டு பிடிக்கலாம். அந்த சாவி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 

இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? தெரியாத ஒன்றை எப்படி தேடுவது ? 

ஒரு நாள் என் வீட்டில் , இரவில் மருந்து சாப்பிட மாத்திரையை எடுத்தேன். கை தவறி கீழே விழுந்து விட்டது. எடுக்கக் குனியும் நேரத்தில் மின்சாரம் போய் விட்டது. ஒரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. 

என்ன செய்வது. வெளியே பார்த்தேன். தெரு விளக்கில் வெளிச்சம் இருந்தது.  சரி, அங்கே போய் தேடலாம் என்று போனால் அது எவ்வளவு பைத்தியகாரத்தனம் ?

அந்த அளவு பைத்தியகாரத் தனம் இறைவனை தேடுவது. எங்கே தொலைத்தோமோ அங்கு தானே தேட முடியும்? தொலைத்த இடம் எது ? கோவிலில் தொலைத்தோமா ? தினமும் அங்கே போய் தேடுகிறார்கள். 

இறைவன் யார், எப்படி இருப்பான், எங்கே இருப்பான், அவன் கருப்பா சிவப்பா, உயரமா குள்ளம்மா, ஆணா பெண்ணா என்று எதுவும் நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படித் தேடுவது ?

இங்குதான் இந்த பாசுரம் வருகிறது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா ? அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு புதிய ஊருக்குப் போகிறோம். விலாசம் தொலைந்து போய் விட்டது. போய் சேரும் இடம் பற்றி கொஞ்சம் தெரியும். ஆனால் எந்த இடம், எந்தத் தெரு என்பதெல்லாம் தெரியாது. 

என்ன செய்யலாம் ?

அந்த ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

நம் சமயங்கள் , அதிலும் குறிப்பாக வைணவ சமயம், ஆசாரியர்களை கொண்டாடுகிறது. அவர்களை , இறைவனுக்கும் ஒரு படி மேலே வைத்து கொண்டாடுகிறார்கள். ஆசாரியன் தான் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். 

மாதா பிதா குரு தெய்வம். 

அம்மா தான் அப்பா யார் என்று அடையாளம் காட்டுகிறாள். 

அப்பா தான் குரு யார் என்று அடையாளம் காட்டுகிறார். 

குரு தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்ட முடியும். 

எனவேதான் அந்த வரிசை. மாதா, பிதா, குரு , தெய்வம். 

இங்கே வண்டு என்று அவர் கூறுவது, ஆசாரியனை. ஆசாரியனுக்கு ஒரு உவமானம். "நான் அவனை அடைய விரும்புகிறேன். ஆனால், எப்படி என்று தெரியவில்லை. நீ போய் சொல்லி அவனை வரச் சொல்" என்று வண்டை தூது விடுவதாக உள்ள இந்த பாசுரம் சொல்லுவது, "ஆசாரியனே, நீ என்னை அந்த  வரிவில் கொண்ட இலக்குமி கேள்வனோடு சேர்த்து விடு " என்று கூறுவதாக உள்ளது. 

சைவ சமயமும் குருவை பிரதானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" 

என்று இறைவனே குரு வடிவில் வருவதாக நம்பியது. 

இன்னொன்றையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

ஆழ்வார் "என்னை அங்கே கூட்டிப் போ " என்று வண்டிடம் (ஆசாரியனிடம்) கூறவில்லை. என் நிலைமையை அவனிடம் கூறு என்று தான் வேண்டுகிறார். 

அவன் இருக்கும் இடம் தெரிந்தாலும் நம்மால் அங்கே போக முடியாது. அவன் வந்து கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டான் திரு ஞான சம்பந்தரை 

ஓலை கொடுத்து ஆட்கொண்டான் சுந்தர மூர்த்தி நாயனாரை 

காலை காட்டி ஆண்டு கொண்டான் மணிவாசகரை 

அவன் வந்து ஆட் கொண்டால் தான் உண்டு. 

சிந்திப்போம் 



------------------------------------ பாகம் 1 --------------------------------------------------------------------


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                     
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html




Sunday, October 28, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி

108 திவ்ய தேசம் - திருவாலி 


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                       
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html





Saturday, December 9, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - அன்பில்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - அன்பில் 


பிள்ளைகள் வளர்ந்து அது அது வேறு வேறு ஊர்களுக்குப் போய் விடுகின்றன. சில சமயம் அயல் நாடுகளுக்குக் கூட போய் விடுகின்றன. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இருந்தாலும் , கிட்டத்திலா இருக்கு ஒரு எட்டு போய் விட்டு வரலாம் என்றால்.  நேரம், பண விரயம், உடல் உழைப்பு என்று ஆயிரம் சங்கடங்கள் வருகின்றன. வருடத்துக்கு ஒரு முறை வருவதே கடினமாக இருக்கிறது.

ஒரு வழி இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி சென்று பார்த்து கொள்ளலாம் அல்லவா ?

இங்கிருக்கும் ஊருக்கே இந்த பாடு என்றால், வைகுந்தத்துக்கு ?


ஒரு நடை போயிட்டு வர முடியுமா ?

ஆண்டவனுக்கும் அவன் பிள்ளைகளை பார்க்க ஆசை தான். பிள்ளைகளுக்கும் இறைவனை தரிசிக்க ஆசை தான். முடியுமா ?


எனவே தான், பெருமாள், பக்தர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்து இருந்து கோவில் கொள்கிறாராம். பக்தனுக்கு சிரமம் வேண்டாம். நாம் அவன் பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி வந்து நம்மை பார்ப்பான். நாமும் அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று. 


கோவிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் அவன் மனதியிலேயே இடம் பிடித்துக் கொள்ளலாம் என்று ஆண்டவன் நினைத்துக் கொண்டிருப்பானாம். 

நான் சொல்லவில்லை, திருமழிசை ஆழ்வார் கூறுகிறார். 

பாடல் 

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.

பொருள்

நாகத் தணைக் = ஆதி சேஷனை படுக்கையாக கொண்ட (இடங்கள்)

குடந்தை = திருக்குடந்தை

வெஃகா = திரு வெஃகா

திருவெவ்வுள் = திருவெள்ளுர்

நாகத் தணையரங்கம் = நாகத்தை அணையாகக் கொண்ட திருவரங்கம்

பேர் =  திருப்பேரூர்

அன்பில் = அன்பில்

நாகத்தணைப்பாற் கடல் = பாம்பணையில் உள்ள பாற்கடல்

கிடக்கும் = சயனித்து இருக்கும்

ஆதி = மூலப் பொருளான

நெடுமால் = நெடிய மால்

அணைப்பார் = அணைத்துக் கொள்ளும் அன்பர்கள்

கருத்தன் = கருத்தில், மனதில்

ஆவான்த = இருப்பான்

அவனுக்கு இருக்க ஆசை உள்ள இடம் அன்பர்கள் மனம்தான். அங்கு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து , பாற்கடலில் இருந்து எழுந்து வந்து பக்தன் இருக்கும் இடத்துக்கு அருகில் கோவில் கொண்டிருக்கிறானாம்.

அப்படி அவன் சயனம் கொண்ட இடங்கள் ஏழு

திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் என்ற இந்த ஐந்து இடங்களில் பள்ளி கொண்டிருக்கின்றானாம்.

அப்படி அவன் சயனம் கொண்ட ஏழு இடங்களில் ஒன்றான இடம் அன்பில்.

அது தான் நாம் இன்று பார்க்க இருக்கின்ற இடம்.


நமக்கு வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன. பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக்  குறைவு, உறவுகளில் சிக்கல், என்று எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன.

இந்த ஆண்டவன் நினைத்தால் நமக்கு இந்த துன்பங்களை எல்லாம் நீக்கி எப்போதும் இன்பமாக இருக்க வழி செய்ய முடியாதா ? எதற்கு இவ்வளவு சோதனை என்று நாம் மனம் நொந்து கொள்வோம்.


தாயின் அன்பும், தந்தையின் அன்பும் வெளிப்படும் விதம் வேறு வேறாக இருக்கும்.

பிள்ளை கீழே விழுந்து விட்டால் , தாய் பதறி ஓடிப் போய் தூக்குவாள் . தந்தையோ பார்த்துக் கொண்டிருப்பார். அவனே எழுந்திரிக்கட்டும். வலி தாங்கட்டும் . அவன் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கிறது. எத்தனையோ தரம் விழுவான். அவனே எழுந்து நிற்கப் பழக வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருப்பார்.

நான் இப்போது தூக்கி விட்டால், பின் அவன் தானே எழுந்திருப்பது எப்படி என்று அறியாமலேயே போய் விடுவான். வலிக்கும் தான், ஆனால் , ஒரு முறை எழ பழக்கிக் கொண்டால், பின் அவன் தன்னைத் தானே பார்த்துக் கொள்வான் என்று தந்தை நினைப்பர்.

பிள்ளை நினைக்கலாம், "என்ன தகப்பன் இவன். நான் இவ்வளவு துன்பப் படுகிறேன். பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறானே. இவனுக்கு என் மேல் அன்பே இல்லையா " என்று. அன்பு இருப்பதால்தான் சும்மா இருக்கிறார் என்பது பிள்ளைக்குத் தெரியாது.

அது மட்டும் அல்ல, பல சமயங்களில் பிள்ளைகள் தந்தையை நினைப்பது கூட கிடையாது. அவர்களுக்கு அவர்கள் வேலை, குடும்பம், பிள்ளைகள் என்று நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்றோரை நினைக்க நேரம் இல்லை. அதற்காக பெற்றோர் பிள்ளைகளை நினைக்காமல் இருப்பதில்லை.

பிள்ளை பெருமாள் அய்யங்கார் , பெருமாளை , "தந்தையே" என்று அழைக்கிறார்.

நான் உன்னை நினைக்கவிட்டாலும், நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய் என்று கூறுவதைப் போல.

அது மட்டும் அல்ல, இந்த பிறவிக்கு ஒரு தந்தை இருக்கிறார், எத்தனையோ பிறவிகள். என்னவெல்லாமாகப் பிறந்தோமோ ? பிறக்க இருக்கிறோமோ ? அங்கெல்லாம் யார் தந்தை ? ஆண்டவன் தான் எப்போதும் தந்தையாக இருப்பவன் என்று கூறுகிறார். அவன் தான் ஆதி முதலே தந்தை.

அவனை தந்தை என்று அழைப்பதன் மூலம், அவனுடைய குடும்பத்தில் தானும்  ஒருவன் என்று நிலை நிறுத்திக் கொள்கிறார்.

அவனுடைய திருவடிகள் மேல் அன்பு செலுத்துவதைத் தவிர காசு, பணம், அதிகாரம் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை என்கிறார்.


பாடல்


போற்றிசெயவோர்குடைக்கீழ்ப்பொன்னாடுமிந்நாடு
நாற்றிசையுமாண்டாலுநன்கில்லை - தோற்றமிலா
வெந்தையன்பிலாதியிணைத்தாமரையடிக்கே
சிந்தையன்பிலாதார்சிலர்.

சீர்பொ பிரித்த பின்

போற்றி செய ஓர் குடைக் கீழ் பொன்னாடும் இந்நாடும் 
நான்கு திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை - தோற்றமிலா
எந்தை அன்பில் ஆதி இணை தாமரை அடிக்கே 
சிந்தை அன்பில்லாதார் சிலர் 

பொருள்


போற்றி செய = எல்லோரும் போற்றும் படி

ஓர் குடைக் கீழ் = ஒரே பெரிய அரசாக, சாம்ராஜ்யமாக

பொன்னாடும் = மேல் உலகும்

இந்நாடும் = பூவுலகம் ஆன இந்த பூமியையும்

நான்கு திசையும் = நான்கு திசையும் சூழ்ந்த நிலப் பரப்பை

ஆண்டாலும் = ஆட்சி செய்யும் அதிகாரம் இருந்தாலும்

நன்கு இல்லை  = நன்மை இல்லை

தோற்றமிலா = தோற்றம் என்பது இல்லாத

எந்தை = என் தந்தை என்பதன் மரூஉ

அன்பில் = திரு அன்பில் என்ற தலத்தில் பள்ளி கொண்டிருக்கும்

ஆதி = அனைத்துக்கும் ஆதியான அவனின்

இணை = இணையான இரண்டு

தாமரை = தாமரை போன்ற

அடிக்கே = அடிகளுக்கே

சிந்தை = மனதில் கொள்ளாத

அன்பில்லாதார் சிலர் = அன்பில்லாதர் சிலர்

இறைவனை யார் நினைக்க மாட்டார்கள் என்றால், மனதில் அன்பு இல்லாதவர்கள் நினைக்க மாட்டார்களாம். இறைவனை நினைக்க படிக்க வேண்டாம்,  ஞானம் வேண்டாம், அன்பு இருந்தால் போதும்.

அன்பு இருந்தால் அவனை நினைவு வரும். அவனை நினைக்கிறீர்கள் என்றால் என்ன  அர்த்தம், அவன் உங்கள் மனதில் இருக்கிறான் என்று தானே அர்த்தம். அதுக்குத்தானே  அவன் இந்த பாடு படுகிறான்.

அன்பு கொள்ளுங்கள். ஆண்டவன் உங்களைத் தேடி வருவான்.

(மன்னிக்கவும், இந்த பிளாக் சற்று நீண்டு விட்டது. எழுத எழுத இன்னும் கொஞ்சம் விரித்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து விரித்து எழுதி  விட்டேன். இனி வரும் ப்ளாகுகளில் நீளத்தை குறைக்க முயற்சி செய்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_9.html