Showing posts with label arapaleesura chadhagam. Show all posts
Showing posts with label arapaleesura chadhagam. Show all posts

Friday, September 21, 2018

அறப்பளீசுரம் - எது அழகு

அறப்பளீசுரம் - எது அழகு 


ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு,  தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா?  பொருள் இல்லாமல் ஏழையாக இருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? கை கால் போய் முடமாக இருப்பது ஒரு அழகா ? ஒரு செயலை செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தால் அது அழகா ?


அழகுதான். அதிலும் ஒரு அழகு இருக்கு என்கிறது அறப்பளீசுரம்.


யார் செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது அழகு.


வகுப்பில், ஆசிரியர் நம்மைத் திட்டுகிறார்..."மண்டு மண்டு ...எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன்...இன்னும் உன் மர மண்டையில் ஏற வில்லையா...சரி இப்படி படி " என்று திட்டி சொல்லித் தருகிறார். வீட்டில் பெற்றோர் கண்டிக்கிறார்கள். இவர்களிடம் திட்டு வாங்குவது அவமானமா? இல்லை. பெரியவர்கள் பாராட்டினாலும், திட்டினாலும் அது ஒரு அழகுதான்.


கட்டிய மனைவி அன்போடு ஆசையோடு வந்து அணைத்தால் அது அசிங்கமா? சுகம்தானே ?


தன்னிடம் இருந்த செல்வங்களை மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கி ஒருவன் ஏழையாக போனால் அது பெருமை இல்லையா?


நாட்டை காக்க போராடி ஒருவன் கையையோ காலையோ இழந்து விட்டால், அவனை முடவன் என்றா ஊர் கேலி செய்யும்? அவனை பெருமையோடு பார்க்கும் அல்லவா?


பெரிய யானை மேல் ஏறும் போது தவறி விழுந்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதுவே ஒரு நாயின் மேல் ஏற முயன்று தவறி விழுந்தால், ஊரே கை கொட்டி சிரிக்கும் அல்லவா ?


செயலிலோ, செயலின் வெளிப்பாட்டிலோ அசிங்கம் இல்லை. யார் , எதற்காக செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது உயர்வும் தாழ்வும்.


தோல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை. இதில் தோல்வி அடைந்தோம் என்பதில் இருக்கிறது அது உயர்வா தாழ்வா என்பது.


பாடல்



வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓர்ஊனம் மானம்எது ஆகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும்அது ஓர ழகதாம்!
  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

பொருள்

வெகுமானம் ஆகிலும்  = பாராட்டு ஆனாலும்

அவமானம் ஆகிலும் = அவமானம் ஆனாலும்

மேன்மையோர் செய்யில் அழகாம்! = மேன்மை உடைய பெரியவர்கள் செய்தால் , அல்லது தந்தால் அது அழகு


விரகமே ஆகிலும்  = காம வயப்பட்டாலும்

சரசமே ஆகிலும் = சரசம் செய்ய வந்தாலும்

விழைமங்கை செய்யில் அழகாம்! = நமக்கு உரிய பெண் (மனைவி) செய்தால் அது அழகு.

தகுதாழ்வு = தகுதியான தாழ்வு (என்ன ஒரு வார்த்தை)

வாழ்வு = வாழக்கை

வெகு தருமங்க ளைச்செய்து = பெரிய தருமங்களைச் செய்து

சாரிலோ  = வந்தாலோ

பேர ழகதாம்! = அந்த ஏழ்மையும் ஒரு பெரிய அழகு

சரீரத்தில் ஓர்ஊனம் = உடம்பில் ஒரு ஊனம்

மானம் = அவமானம்

எது ஆகிலும் = எது என்றாலும்

சமர் செய்து வரில் அழகதாம்? = நாட்டை காக்க எதிரியோடு போராடி பெற்றால் அதுவும் ஒரு அழகுதான்

நகம் மேவு = மலை போன்ற

மதகரியில் = மதம் கொண்ட யானையின் மேல்

ஏறினும் தவறினும் = ஏறினாலும், தவறி ஏறும் போது தவறி விழுந்தாலும்

நாளும்அது ஓர ழகதாம்! = அதுவும் ஒரு அழகுதான்

நாய்மீதில் = நாயின் மேல்

ஏறினும் = ஏறினாலும்

வீழினும் = வீழ்ந்தாலும்

கண்டபேர்  = காண்போர்

நகைசெய்தழ கன்றென் பர்காண்! = கை கொட்டிச் சிரிப்பார்கள்

அகம்ஆயும் = தன்னை ஆராய்ச்சி செய்யும்

 நற்றவர்க் கருள் புரியும் = நல்லவர்களுக்கு அருள் புரியும்

ஐயனே! = ஐயனே

ஆதியே!  = மூலப் பொருளே

அருமை மதவேள் = அருமையான மதவேள் (அரசன்)

அனுதினமும் = தினமும்

மனதில்நினை = மனதில் வழிபடும்

தருசதுர கிரிவளர் = தருகின்ற சதுர கிரி என்ற மலையில் உறையும்

அறப்பளீ சுரதே வனே! = அறப்பளீசுர தேவனே

சின்ன காரியத்தை எடுத்து, அதில் வெற்றி பெற்றாலும் ஊரார் நகைப்பார்கள். பெரிய காரியத்தில் தோல்வி அடைந்தாலும் ஊர் பாராட்டும்.


விளைவுகள் மட்டுமே உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்வது இல்லை. யார் செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உயர்வும் தாழ்வும் அமைகிறது.


இந்தப் பட்டியல் ஒரு சில உதாரணம் மட்டுமே. அது சொல்ல வரும் கருத்தை மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_21.html









Wednesday, August 22, 2018

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?

அறப்பளீச்சுர சதகம் - யாருடன் எப்படி பழக வேண்டும் ?


தினமும் எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறது அறப்பளீச்சுர சதகம்


பாடல்

மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;
  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;
  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,
     நேர்அலர் இடத்தில் வைரம்;

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்; எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


பொருள் 

" மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;"



மாதா பிதா , அதாவது பெற்றோரிடம் உள்ளன்புடன், கனிவுடன் மாறாத  ஒழுக்கத்தோடு  இருக்க வேண்டும்.  இந்தக் கால பிள்ளைகளுக்கு இதைச் சொல்லித் தர வேண்டும்.  சிறு வயது முதல்.  பெற்றோரிடம் அன்பும், கனிவும் , ஒழுக்கமும் இருக்க வேண்டும். 



"  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;"



ஆசிரியருக்கு, ஆச்சாரியருக்கு இனிமையான உபசார வார்த்தைகள் சொல்லி, அவரை வழிபட்டு, அவர் முன் அடக்கமுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும்  பெற்றோர்கள் வாய்க்கும். பெற்றோர் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால், எல்லோருக்கும் குரு அமையாது.  இறைவனே குரு வடிவில் வந்துதான்  அருள் புரிவான் என்கிறார் அருணகிரிநாதர்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"

குருவுக்கு -  இனிய உபசார வார்த்தை, வழிபாடு, அடக்கம். 


" காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;"



காது வரை நீண்ட கரிய கண்களை உடைய மனைவிக்கு பள்ளி அறையில் இனிய சொல் வேண்டும்.  அது என்ன மனைவி என்றால் படுக்கை அறையில் மட்டும் தான் நல்ல சொல் வேண்டுமா ? மனைவி என்பவள் அதற்கு மட்டும் தானா  என்று கேட்கலாம். கேட்பார்கள்.

அது அப்படி அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகை பாராட்டினால் மிகவும் பிடிக்கும். மனைவியின் அழகை நண்பர்கள் முன் பாராட்டினால் என்ன நடக்கும். "உன் மூக்கு கிளியோபாட்ரா மூக்கு மாதிரி இருக்கு " என்று நண்பர்கள் மத்தியில் சொன்னால், அவனும் கூடவே "ஆமாம் ஆமாம், அதில் ஒரு சிகப்பு கல் மூக்குத்தி போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் " என்பான். அது மட்டும் அல்ல, நீங்கள் மூக்கை பாராட்டினால், "மூக்கு என்ன சார் மூக்கு, அந்த இடுப்பைப் பாருங்கள் " என்று நம்மோடு சேர்ந்து அவனும் பாராட்டத் தலைப்படுவான். தேவையா?

எனவே, மனைவியை பாராட்டுவது என்றால், தனிமையில் இருக்கும் போது மனம் விட்டு பாராட்ட வேண்டும்


" கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;"




அறிவில் மிகுந்த பெரியோர், முதியவர் போன்றவற்றுக்கு கருணையுடன் , அருளோடு  பொருள் உதவி செய்ய வேண்டும்.

" நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;"


பதவியில் இருப்பவர்களிடம் (அரசன்) பயம் கலந்த விநயத்துடன் இருக்க வேண்டும்.


" நெறியுடைய பேர்க்கு இங்கிதம்; "


நல்வழியில் செல்பவர்களுக்கு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும்.


" நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,"


நேசம் உள்ள உறவினர்களிடம் மனம் மகிழ்ந்து பரிவுடன் இருக்க வேண்டும். 

" நேர்அலர் இடத்தில் வைரம்;"


நேர் அலர் = பகைவர். பகைவர்களிடம் வைரம் போல உறுதியான மனதுடன் எதிர்த்து நிற்க வேண்டும். 


" ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்;"

பழைய மனு நூல் சொல்லும் முறை இது ஆகும். 


Monday, August 20, 2018

அறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல்

அறப்பளீசுர சதகம் - செய்ய முடியாத செயல் 


அறப்பளீசுர சதகம் என்ற நூல் அம்பலவாண  கவிராயர் என்பவரால் எழுதப் பட்டது.  கொல்லிமலையில் உள்ள சிவன் மேல் பாடப்பட்ட நீதி நூல். மிக மிக எளிமையான நூல். 100 பாடல்களை கொண்டது.  அதில் இருந்து ஒரு  பாடல்.  பிடித்திருந்தால் , மற்ற பாடல்களை மூல நூலை படித்து  அறிக.

உலகில் யாராலுமே செய்ய முடியாத ஒன்று  இருக்கிறது.  எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும்  முடியாது.  அது என்ன காரியம் தெரியுமா ?

பாடல்


நீர்மே னடக்கலா மெட்டியுந் தின்னலா
நெருப்பைநீர் போற் செய்யலாம்
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலா
நீளரவி னைப்பூண லாம்
பார்மீதில் மணலைச் சமைக்கலாஞ் சோறெனப்
பட்சமுட னேயுண் ணலாம்
பாணமொடு குண்டுவில கச்செய்ய லாமரப்
பாவைபே சப்பண் ணலாம்
ஏற்மேவு காடியுங் கடையுற்று வெண்ணெயு
மெடுக்கலாம் புத்தி சற்று
மில்லாத மூடர்த மனத்தைத் திருப்பவே
எவருக்கு முடியாது காண்
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா சுரர்பரவு
மமலனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. 15

பொருள்


நீர்மே னடக்கலாம் = நீர் மேல் நடக்கலாம்

எட்டியுந் தின்னலாம் = விஷம் நிறைந்த எட்டிக் காயையும் தின்னலாம்

நெருப்பைநீர் போற் செய்யலாம் = நெருப்பை நீர் போல குளிரச் செய்யலாம்

நெடிய = நீண்ட

பெரு வேங்கையைக் = பெரிய புலியை

கட்டியே தழுவலாம் = கட்டித் தழுவலாம்

நீளரவி னைப் = நீள் + அரவினை =  நீண்ட பாம்பை

பூண லாம் = ஆபரணமாக அணிந்து கொள்ளலாம்

பார்மீதில் = உலகில்

மணலைச் சமைக்கலாஞ் = மணலை சமைக்கலாம்

சோறெனப் = சோறு என்று

பட்சமுட னேயுண் ணலாம் = பலகாரமாக அதை உண்ணலாம்

பாணமொடு = அம்பு

குண்டு = துப்பாக்கி குண்டு

விலகச் செய்ய லாம் = விலகி ஓடும்படி செய்யலாம்

மரப் பாவை = மர பொம்மையை

பே சப்பண் ணலாம் = பேசும்படி செய்யலாம்


ஏற்மேவு காடியுங் = காடியை

கடையுற்று = கடைந்து

வெண்ணெயு மெடுக்கலாம் = வெண்ணை எடுக்கலாம்

புத்தி சற்று மில்லாத = புத்தி இல்லாத

மூடர் தம் மனத்தைத் = மூடர்களின் மனதை

திருப்பவே எவருக்கு முடியாது = திருப்ப யாருக்கும் முடியாது

காண் = கண்டு கொள்

ஆர்மேவு = விருப்பமுடன்

கொன்றை = கொன்றை மலரை

புனை வேணியா = புனைபவனே

சுரர் = தேவர்கள்

பரவு = போற்றும்

மமலனே = அமலனே

யருமை = அருமை

மதவேள்  = தேவனே

அனுதினமும் = அனு தினமும்

மனதினினை = மனதில் நின்னை

தரு சதுர கிரிவள = தருகின்ற சதுர கிரி வளர்

அறப்பளீ சுர தேவனே = அறப்பளீசுர தேவனே

http://interestingtamilpoems.blogspot.com/2018/08/blog-post_20.html