Tuesday, August 6, 2013

திருக்குறள் - நிலமும் நீரும்

திருக்குறள் - நிலமும் நீரும் 



நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

போன குறளில் பெருமை சிற்றினம் கண்டு அஞ்சும் என்று  பார்த்தோம்.

சிலருக்கு அதில் சந்தேகம். எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று விலகி விட்டால் கெட்டவர்களை யார் திருத்துவது என்று ?

வள்ளுவர் சொல்லுகிறார்....

நம் அறிவு இருக்கிறதே அது  நீர் போன்றது. அது எந்த நிலத்தில் விழுகிறதோ அந்த நிலத்தின் தன்மையை  பெரும்.

செம்மண் நிலத்தில் விழுந்தால் செந்நீராக மாறும்.

கரிசல் காட்டில் விழுந்தால் கரிய நீராக மாறும்.

திரிதல் என்றால்  மாறுதல்.பால் திரிந்து விட்டது என்றால் பால் அப்படியேதான் இருக்கும், அதன் குணம்  மாறிப் போகும்.

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்  மாந்தர்க்கு
இனத்து இயல்பாகும் அறிவு

நிலத்தோடு சேர்ந்த நீரின் குணம்  மாறுவது போல மக்களுக்கு அவர்கள் சேர்ந்த  இனத்தால் அறிவு மாறும்.

 நல்ல  அறிவு வேண்டும் என்றால் நல்ல இனத்தோடு சேருங்கள்.

அப்படி நல்ல அறிவு வேண்டாம் என்றால் மற்ற இனத்தோடு சேருங்கள். கெட்டவர்களை  திருத்துவது உங்கள் நோக்கம் என்றால் கெட்டவர்களோடு
பழகுங்கள் அவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, உங்கள் அறிவு மாற்றம்  அடையும்.

நீர் திரிந்து அற்றாகும் என்றார். அது என்ன அற்றாகும் ? அற்றம் என்றால் முடிவு. அறிவு அற்றம் காக்கும்  கருவி என்பது  வள்ளுவம்.

நீர் திரிந்து போவது மட்டும் அல்ல, அது அதன் முடிவை அடையும். அழிந்து போகும்.

அது போல கெட்டவர்களோடு சேர்ந்த நல்லவர்களின் அறிவும் அழிந்து போகும்.

  

இராமாயணம் - உடலும் மிகை

இராமாயணம் - உடலும் மிகை 




வேதமும் வேதியர் அருளும் வெ·கலா
சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்!

சந்நியாசி வேடத்தில்  இராவணன், அவன் பெருமையை அடுக்கிக் கொண்டே போகிறான். எல்லாம் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட இராவணன் வாழும் ஊரில்  வருகிறேன்  என்று சீதையிடம்  சொல்கிறான்.

இதையெல்லாம் கேட்டு சீதை மயங்குவாள் என்பது அவன் எண்ணம்.

ஆனால் சீதை கேட்கிறாள்.....

"தங்கள் உடலை கூட சுமை என்று நினைக்கும் முனிவரே, வேதத்தையும், வேதம் பயின்ற முனிவர்களையும் விரும்பாமல், உயிர்களை தின்னும் அந்த ஊரில் நீங்கள் ஏன் போய் இருந்தீர்கள் ?" என்று.

இவ்வளவு பெரிய அமைதியான கானகம் இருக்கிறது. இதை விட்டுவிட்டு அரக்கர்கள் வாழும் அந்த நகரத்திற்கு எதற்கு போனீர்கள் என்பது அவள் கேள்வி.

அரக்கர்களுக்கு (=கெட்டவர்களுக்கு ) நல்லதும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. அவர்கள் மனிதர்களை தின்பவர்கள்.

முனிவர்களுக்கு ஒரு விதி சொல்கிறான் கம்பன். அவர்கள் இந்த உடலை கூட சுமையாக   நினைப்பார்களாம். அவ்வளவு மெலிந்த உடலே சுமை என்று நினைக்கிறார்கள். நம்ம உடம்பை என்ன என்று சொல்லுவது?

உடம்பு சுமை என்றால் எதற்கு சுமை ? மனதிற்கா? உயிருக்கா ?

போற போக்கில் கொளுத்தி போட்டு விட்டுப் போகிறான் கம்பன். யோசியுங்கள் என்று.

அறிவும், தவமும்  வளர வளர உடல்  மெலியும். சாப்பாட்டில் கவனம் குறையும். புலன் இன்பங்கள் மட்டுப் படும்.

உணவு மருந்தாகவிட்டால், மருந்து உணவாகும் என்று அவர்கள்  அறிந்திருக்கிறார்கள்.

பொருள்



வேதமும் = வேதமும்

வேதியர் அருளும் = வேதம் பயின்ற வேதியர்களின் அருளும்

வெ·கலா = விரும்பாத

சேதன = சேதனம் என்றால் வெட்டுதல். இங்கே பகுத்தல். பகுத்து அறிதல். பகுத்தறிவு உள்ள (மனிதர்களை) 

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

தின்னும் = தின்னும்

தீவினைப் =  தீய செயல்கள் செய்யும்

பாதக அரக்கர்தம் பதியின் = பாதகங்கள், பாவங்கள் செய்யும் அரக்கர்கள் வாழும் அந்த ஊரில்

வைகுதற்கு ஏது என்? = ஏன் தங்கினீர்கள் ?

உடலமும் மிகை என்று எண்ணுவீர்! =  உடலைக் கூட தேவை இல்லாத சுமை, அதிகம் என்று என்னும் முனிவராகிய நீங்கள் ?

உடலே தேவையில்லாத சுமை என்றால் பின் எதுதான்  தேவையானது ?  உடல் சார்ந்த    சுகங்கள், உடல் சார்ந்த உறவுகள் இவையும் தேவை இல்லாமல் போகும்தானே.....





Monday, August 5, 2013

இராமாயணம் - இராவணன் தன் பெருமை கூறல்

இராமாயணம் - இராவணன் தன்  பெருமை கூறல் 


இராவணன் சீதையிடம் தன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகிறான்.

நம் அற நூல்கள், தற்பெருமை பேசுவது தற்கொலை செய்வது கொள்வதற்கு ஒப்பாகும் என்று கூறுகின்றன.  இராமாயணத்தில், அநேகமாக எல்லா பாத்திரங்களும் தற்பெருமை பேசுகின்றன...இராமன் உட்பட.

இராவணன் தன் பெருமைகளை கூறுகிறான் இங்கே.....

நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே;
சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய நிதியம் கையன;
பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர்

பொருள்

Sunday, August 4, 2013

இராமாயணம் - ஆணவம்

இராமாயணம் - ஆணவம் 




'ஈசன் ஆண்டு இருந்த பேர் 
     இலங்கு மால் வரை 
ஊசி-வேரொடும் பறித்து 
     எடுக்கும் ஊற்றத்தான்; 
ஆசைகள் சுமந்த பேர் 
     அளவில் யானைகள் 
பூசல் செய் மருப்பினைப் 
     பொடிசெய் தோளினான்.

ஏதோ இராவணன் என்று ஒரு அரக்கன் இருந்தான், பெரிய பலசாலி, படித்தவன், அவன் சீதையை தூக்கிக் கொண்டு போனான், இராமன் அவனை கொன்று சீதையை  சிறை மீட்டான் என்பதுதான் இராமாயண கதையின் நோக்கமா ?

இதில் என்ன பெரிய கதையோ அர்த்தமோ இருக்கிறது. ஒருவனின் மனைவியை இன்னொருவன் கவர்ந்து சென்றால், மனைவியை பறி கொடுத்தவன் சண்டையிட்டு மீட்பது ஒன்றும் பெரிய விஷயமைல்லையே.


இதுக்கு ஒரு காப்பியமா ? அது ஏன் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது ?

கதை அதுவல்ல .

இராவணன் என்ற அரக்கன் வேறு யாரும் அல்ல. நீங்களும் நானும்தான்.

அளவுதான் வேறு, செய்யும் செயல்கள் எல்லாம் ஒன்றுதான்.

அவன் செய்ததில் எதை நாம் செய்யவில்லை ?

படித்தோம். அறிவு பெற்றோம்.

அவன் தவம் செய்து பல வரங்களை பெற்றான்.

நாமும்தான் கோவிலுக்குப் போகிறோம், தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். எதற்கு ? உலக நன்மைக்காகவா ? நமக்கு செல்வம்  வேண்டும்,  
,பதவி வேண்டும், புகழ் வேண்டும், இப்படி பல வரங்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவன் நாடு பிடித்தான்...நாமும்  போடுகிறோம், வீடு மேல வீடு வாங்குகிறோம்.

அவன் தேவர்களை வேலை வாங்கினான் ..நாம் நம் வீட்டு வேலை காரியை, வண்டி ஓட்டுபவனை, வீட்டு காவல்காரனை என்று வேலை வாங்குகிறோம்.

 அழகான பெண்ணை கண்டால் ஆசைப் படாதவன் யார் ?

அழாகான ஆணைக் கண்டால் ஆசைப் படாத பெண் யார் ?

காப்பியங்கள் எதையும் அதீத கற்பனையோடுதான் சொல்லும். அடிப்படையில்  நமக்குள் ஒன்றல்ல பல அரக்கர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால் ?

யோசித்துப் பாருங்கள்.

கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன் சீதையிடம் இராவணின் (தன் ) பெருமையை   பற்றி சொல்லிக் கொண்டு போகிறான்.

சிவன் வாழும் கைலாய மலையை வேரோடு பிடுங்கி எடுத்த ஆற்றல் உடையவன்.

எட்டு திசைகளை சுமந்த யானைகளின் தந்தத்தை ஒடித்து பொடியாக்கியவன்   பேராற்றல்  பெற்றவன் என்று தன் பெருமைகளை  கூறுகிறான்.

ஆணவம்.

நீங்கள் என்றாவது உங்கள் திறமைகளை பெருமைகளை மற்றவர்களிடத்து  பட்டியல்  இட்டு இருக்கிறீர்களா ?

பொருள்


ஈசன் = சிவன்

ஆண்டு இருந்த = அன்று இருந்த

பேர்  இலங்கு மால் வரை = பெருமையுடன் விளங்கும் பெரிய மலையை (கைலாய மலை)

ஊசி-வேரொடும் பறித்து = ஆணி வேரோடு பறித்து 

எடுக்கும் ஊற்றத்தான் = எடுக்கும் வலிமை வாய்ந்தவன்

ஆசைகள் சுமந்த பேர் = திசைகளை சுமந்த பெரிய 

அளவில் யானைகள் = அளவிலான யானைகளின்

பூசல் செய் மருப்பினைப் = வலிய தந்தங்களை

பொடிசெய் தோளினான் = பொடிப் பொடியாக்கும் தோள் வலிமை கொண்டவன்

ஆணவம் அழிவுக்கு வழி கோலும். நாவுக்கரசர், தனது தேவாரத்தில் இராவணின்  ஆணவத்தைப் பற்றி பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.

நமக்குள் இருக்கும் இராவணனைப் பற்றி.



Saturday, August 3, 2013

திருக்குறள் - சிறியோரை சேராமை

திருக்குறள் - சிறியோரை சேராமை 


சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சீர் பிரித்த பின்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாகச் சூழுந்து விடும்

பொருள்

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். இது மு. வரதராசனாரின் உரை.

விரிவுரை

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால் அஞ்சுவார்கள். சிறியவர்களோ ஒருவரோடு ஒருவர் உறவாக  வாழ்வார்கள்.

சரி. சிற்றினம் என்றால் யார் ?

அறிவில் குறைந்தவர்களா ? ஆற்றலில் குறைந்தவர்களா ? பண்பாட்டு இல்லாதவர்களா ? செல்வத்தில் குறைந்தவர்களா ?

சிற்றினம் என்றால் யார் ?

அறிவை திரித்து, இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்கிறார் பரிமேல் அழகர்.

நம் அறிவை குழப்புபவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள். தெளிவு இல்லாதவர்கள். அரை  குறை அறிவு  உள்ளவர்கள். ஒன்றும் தெளிவாக தெரியாவிட்டாலும்  எல்லாம் தெரிந்த மாதிரி  பேசுபவர்கள்.

இருமைக்கும் பலன் இல்லாமல் செய்பவர்கள் என்றால் என்ன ?

இந்த  வாழ்விலும், இறப்பிற்கு பின் மறு வாழ்விலும் நமக்கு ஒரு   நன்மை இல்லாமல்   செய்பவர்கள் சிற்றினத்தை சேர்ந்தவர்கள்.

யோசித்துப் பாருங்கள். நம்மை குழப்பி, நமக்கு ஒரு விதத்திலும் நன்மை செய்யாதவர்களின் கூட்டு நமக்குத் தேவையா ?

குறள்  இன்னும் முடியவில்லை.

இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்களை கண்டால் பெரியவர்கள் அஞ்சுவார்கள் .

அதாவது, சும்மா ஒதுங்கிப் போனால் போதாது. அஞ்சி ஒதுங்க வேண்டும். அவர்களைப்  பார்த்தால்  பயப்படவேண்டும். எங்கே வந்து நம்மோடு ஒட்டிக் கொள்வானோ  அல்லது கொள்வாளோ என்று ஒரு பயம் இருக்க வேண்டும்.

வந்தால் வரட்டுமே, என்னை என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கக் கூடாது.  நம்மை கெடுத்து குட்டிச் சுவராக ஆக்கி விடுவார்கள்.

நாம் அவர்களோடு உறவாக இருப்போம். ஆனால் நாம் தப்பு தண்டா எதுவும் செய்யாமல்  இருந்தால் போதாதா என்று நினைக்கக் கூடாது. சிற்றினத்தை சேர்ந்தவர்களோடு  உறவாக இருப்பதே நம்மையும் அவர்களில் ஒருவனாக உலகம்  நினைக்கத் தலைப்படும். நாம் தவறே செய்யா விட்டாலும், நம் மீது பழி வந்து சேரும்.

எனவே, பெரியவர்கள், சிற்றனத்தை சேர்ந்தவர்களை கண்டால்  அஞ்சுவர்.

குறள்  இன்னும் முடியவில்லை.

பெரியவர்கள் அஞ்சுவார்கள். ஆனால் இந்த சிற்றினத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே  அவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவினர் போல் ஒன்றாக வாழ்வார்கள்.

கெட்டவர்கள் ஒரு முறை பழக்கம் கொண்டு விட்டால் பிடித்துக் கொள்வார்கள். ரொம்ப நாள் பழகிய உறவினர்கள் போல் நம்மை விட மாட்டார்கள்.

எனவே, சிற்றினம் சேர்ந்தவர்களை கண்டால் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்களோடு  ஏற்கனவே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தால், வெட்டி விட  முயற்சி செய்யுங்கள்.

சிற்றினம் என்றால் திருடன், கொள்ளைக்காரன் என்று இல்லை, தெளிந்த அறிவு இல்லாதவர்கள், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை செய்யாதவர்கள்.

இன்னும் கூட முடியவில்லை இந்த குறள் ...இருப்பினும் விரிவஞ்சி இத்தோடு முடித்துக் கொள்கிறேன்....


Thursday, August 1, 2013

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும்

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும் 



பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன் பொய் சொல்லாமல் இருந்தால் அவன் மற்ற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பொய்யாமையே பெரிய அறம் .

இருப்பதே ஏழு வார்த்தைகள். அதிலே இரண்டு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வரும்படி எழுதுவானேன்.

பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று

என்று சொல்லி இருக்கலாம்தானே. பொருள் ஒன்றும் சிதையவில்லையே ? பின் எதற்கு அந்த வார்த்தைகளை இரண்டு தரம் சொல்லுவது ?

வள்ளுவர் சும்மா சொல்லுவாரா ?

பொய் சொல்லாமல் இருந்தால் மற்ற அறங்கள் செய்யத் தேவை இல்லை.

சரி. பொதுவாக நான் பொய் சொல்லுவது இல்லை, ஆனால் எப்போதோ, ஒரு சில சமயங்களில், கடினமான நேரங்களில், தர்ம சங்கடமான நேரங்களில் பொய் சொல்லுவது உண்டு. அது பரவாயில்லையா ? என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார்....

பொய்யாமை என்ற செயலை  பொய்யாமல் செய்ய வேண்டும். அது ஒரு போதும்  பொய்த்துப்  போகக் கூடாது. இந்த ஒரு தடவை தானே, அந்த ஒரு தடவை தானே  என்று சாக்கு சொல்லக் கூடாது.

பொய்யாமை , பொய்யாமை ஆற்றின். பொய்யாமையை பொய்யாமல் செய்தால்

சரி, பொய்யாமை பொய்யாமை புரிகிறது.

அது என்ன செய்யாமை செய்யாமை நன்று ?

ஒருவன் பொய்யாமை என்ற அறத்தை கடை பிடித்துக் கொண்டே மற்ற அறங்களையும்  செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மற்ற அரண்களை செய்யும்போது  அதில் சில தீமைகளும், தவறுகளும் நிகழலாம். இவனால்  அவற்றை மறைக்க முடியாது ஏன் என்றால் அவன் பொய்யாமை என்ற அறத்தை  செய்து  கொண்டு இருக்கிறான். அந்த சிறிய தவறுகளால் அவன்  தண்டனை அடைய  நேரிடலாம். அவனைப் பிடிக்காதவர்கள், அந்த தவறுகளை பெரிதாக்கி அவனை அழிக்க நினைக்கலாம்.

எனவே, பொய்யாமை என்ற ஒரு அறத்தை பற்றி ஒழுகுபவர்கள், மற்ற அறங்கள்  எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

இது ஒரு செய்யாமை.

பொய்யாமை வழி  நிற்பவர்கள், மற்ற அறங்களை கடை பிடித்து அதில் தவறோ  தீங்கோ ஏற்பட்டால், அதன் மூலம் அவர்கள் தண்டனை அடைவார்கள், ஏன் என்றால் அவர்கள் அதை மறைக்க  மாட்டார்கள்.   இப்படி தண்டனை பெற்று, திருந்தி எல்லா தீவினைகளும் அவனை விட்டுப் போய் விடும். மற்ற அறங்களை செய்யாமல் இருப்பது என்பது தானகவே  நிகழும்.
அதாவது, செய்யாமை என்ற செயல் செய்யாமல் தானகவே நிகழும்.

அதாவது, கள் உண்ணாமை என்ற  அறம் இவன் முயற்சி எதுவும் செய்யாமலே  தானாகவே  நிகழும்.அதாவது இவன் கள்  உண்ணாமல் இருக்க எந்த முயற்சியும்  செய்ய வேண்டாம். செய்யாமை என்பது   பெரும்பாலும் முயற்சியால் விளைகிறது.

நான் இனிப்பு பண்டங்களை உண்ணாமல் இருக்க ரொம்ப முயற்சி எடுக்கிறேன். எனக்கு இனிப்பு பண்டங்கள் மேல் அவ்வளவு ஆர்வம். அதை உண்ணாமல்  இருக்க நான் ரொம்ப முயற்சி எடுக்கிறேன்.

ஆனால், களவு என்ற கெட்ட செயலை செய்யாமல் இருக்க நான் எந்த முயற்சியும்   எடுப்பது இல்லை. அது இயல்பாக நிகழ்கிறது.    ஒன்றும் செய்யாமல்  களவு செய்யாமை நிகழ்கிறது.

வள்ளுவர் ரொம்ப யோசித்து இந்த குறளை எழுதி இருக்கிறார்.

நீங்களும் யோசியுங்கள்


நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை

நல்வழி - பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை




பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

யாருக்குப் பயம் வரும் ? யாரிடம் தேவை அதிகமாய் இருக்கிறதோ அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும். 

தேவைகள் அதிகம் ஆகும்போது, அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம்  சம்பாதிக்க யார்  யாரை எல்லாமோ பார்த்து பல்லை காண்பிக்க வேண்டி இருக்கிறது, எல்லோரிடமும் பயப் பட வேண்டி இருக்கிறது, யார் என்ன செய்வானோ என்ற பயம் பிடித்து ஆட்டும். 

மனதிற்குள் வைத்தாலும் வெளியில் ஆசை ஆசையாகப் பேச வேண்டி இருக்கிறது. 

யாரிடம் என்ன உதவி கேட்கலாம் என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வையார் சொன்னார்....

பிச்சை எடுப்பது கேவலம்.

அதை விட கேவலமான ஒன்று இருக்கிறது. 

அது தான், மற்றவர்களிடம் ஆசை வார்த்தை சொல்லி , அவர்களிடம் பலன் பெற்று உயிர் வாழ்வது.  அதை விட சாகலாம் என்கிறார் 

 பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


பொருள்