Friday, February 28, 2014

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை 


குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கழித்து அதற்கு அந்த பொம்மைகளின் மேல் சலிப்பு வரும். அம்மாவை தேடும். அம்மாவைக் காணாவிட்டால் அழும். அம்மாவைக் கண்டவுடன் ஓடி சென்று அவளின் காலைக் கட்டிக்  கொள்ளும். அப்போதுதான் அதற்கு நிம்மதி, சந்தோஷம்.

குழந்தை மட்டுமா ?

நாமும் தான்.

பொம்மைகள் வேறு அவ்வளவுதான்.

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.  பொங்கி வரும் கங்கை நீரில்  மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.

பாடல்


பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே


கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டு ஆங்கு  நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரு நீர் மடுவுள் மலைச் சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக் கொழு மணியே


பொருள் 

பெரு நீர் = பெரிய நீர். பெருகி வரும் நீர்

அறச் = அற்றுப் போக.

சிறு மீன் = சிறிய மீன்

துவண்டு = நீரின்றி துவண்டு

ஆங்கு = அங்கு துடிப்பதைப் போல

 நினைப் பிரிந்த = உன்னை விட்டுப் பிரிந்த

வெரு = பயம் கொள்ளும் (வெருட்சி = பயம் )

நீர்மையேனை = கொள்ளும் என்னை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் கங்கை பொங்கி = பெரிய கங்கை பொங்கி

வரு நீர் = வெள்ளம் வருகின்ற போது

மடுவுள் = தேங்கிய நீரில்

மலைச்  = மலைத்து நிற்கும்

சிறு தோணி வடிவின் = சிறு தோணி போல

வெள்ளைக் குரு நீர் மதி = வெண்மையான பிறைச் சந்திரனை

பொதியும் = பொதிந்து வைத்து இருக்கும்

சடை = சடையைக் கொண்ட

வானக்  = வானில் உள்ள

கொழு மணியே = சிறந்த மணி போன்றவனே


அது ஏன் பிறை சந்திரன் ?

ஒரு முறை சந்திரன் தவறு செய்தான். நாளும் ஒரு கலையாக தேய்ந்து அழியும்படி  சபிக்கப் பட்டான். 

மூன்றே கலைகள் இருக்கும் போது கடைசியில் சிவனை தஞ்சம் அடைந்தான். 

அவர், அவனை மன்னித்து தன் தலையில் சூடிக் கொண்டார். அவன் அழிவு தவிர்க்கப் பட்டது. 

எவ்வளவு தவறு செய்து இருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் , பாவ விமோசனம் தருவான் அவன்.

காலில் விழுந்த சந்திரனை தலையில் தூக்கி  வைத்தார்.

இதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார், நிலவு உலாவிய நீர் மலி வேணியன் என்றார்.  நிலவு உலவுகிரதாம். ஏன் உலவமாட்டான் ? சிவனின் தலையில் அல்லவா இருக்கிறான் ? உலாத்தலுக்கு என்ன குறைச்சல் ? 

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; 
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
 
 

Wednesday, February 26, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு 




நாங்கூழ் புழு என்று ஒரு புழு  உண்டு.மண் புழு  என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த புழுவை எறும்புகள் சூழ்ந்து கொண்டு அதை கடித்து கடித்து தின்னும். அந்த புழுவால் ஓடவும் முடியாது. எறும்புகளை எதிர்த்து போராடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, வலி கொண்டு, துடித்து துடித்து சாகும். அந்த எறும்புகளுக்கே இரையாகும்.

அது போல இந்த ஐந்து புலன்கள் என்ற எறும்புகள் நம்மை நாளும் அந்த புழுவை எறும்பு தின்பது போல அரித்து  தின்கின்றன.

என்ன செய்வது என்று அறியாமல் அலைகின்றோம்.

அப்படி தனியாக அலையும் என்னை கை விட்டு விடாதே.

மார்கண்டேயனை அந்த கூற்றுவன் பற்ற வந்த போது உன் மலர் பாதங்களால் கூற்றுவனை உதைத்து அவனை ஒடுங்கப் பண்ணினாய்  நீ.

உணர்வு உள்ளவர்கள் பெறும் பெரியவனே. அடியார்கள் உன்னை விட்டு என்றும் நீங்காத பெருமை உள்ளவனே.

பாடல்

எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.


பொருள் 

எறும்பிடை = எறும்புகளிடையே

நாங்கூழ் = நாங்கூழ் என்ற புழு


என = அகப்பட்டது போல

புலனால் அரிப்புண்டு = புலன்களால் நாளும் அரிக்கப்பட்டு

அலந்த = அலைந்த

வெறும் தமியேனை = ஒன்றும் இல்லாத தனிமையானவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெய்ய கூற்று ஒடுங்க = கொடுமையான கூற்றுவன் ஒடுங்கும்படி

உறும் கடிப் போது = அடக்கிய மணம் பொருந்திய மலரை போன்ற திருவடிகளை உடையவனே . போது என்றால் மலர். கடி என்றால் சிறந்த, உயர்ந்த என்று அர்த்தம்

அவையே = அந்த திருவடிகளே

உணர்வு உற்றவர் = ஆழ்ந்த உணர்வு உள்ளவர்கள்

உம்பர் உம்பர் = உயர்ந்தவர்களுக்கு உயர்ந்தவர்கள்

பெறும் பதமே = அடையும் பதமே

அடியார் பெயராத பெருமையனே = அடியார்கள் உன்னை விட்டு என்றும் விலகாத  பெருமை உடையவனே



Tuesday, February 25, 2014

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை 


நம் நோக்கத்திற்கு தடையாய் இருப்பவர்கள் எல்லோரும் பகை தானே ?

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் எல்லோரும் நமக்கு பகையே.

அன்பின் பெயரால், கடமையின் பெயரால், காதலின் பெயரால் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து எப்படி அவனை அடைவது என்று ஏங்குகிறார் பட்டினத்தார்.

ஓர் இரவில் கட்டிய மனைவியை, மகனை, அகன்ற அரசை அனைத்தையும் விடுத்து சென்றான் சித்தார்த்தன்...

மாட மாளிகை, கணக்கில் அடங்கா செல்வம் என்று அனைத்தையும் காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே என்ற ஒரு வாக்கியம் கண்டவுடன் விட்டு விட்டு சென்றார் பட்டினத்தார்...

அவரின் பாடல்

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே

பொருள்

தாயும்பகை = தாயும் பகை. தாய் பகை அல்ல, தாயும் பகை. உலகிலேயே நம் மீது பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுபவர் தாய்தான்.

தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே என்பார் வள்ளலார்.

அப்பன் நீ , அம்மை நீ என்பார் அப்பர்.

அந்தத் தாயும் பகை என்கிறார் பட்டினத்தார்.

கொண்ட பெண்டீர் பெரும்பகை = மனைவி பெரும் பகை. ஒரு புறம் அவளின் சுயநலம்.  இன்னொரும் புறம் பிள்ளைகளை காக்க வேண்டுமே என்ற எண்ணம். இவற்றால் கணவனின் நேரத்தை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் மனைவி பெரும் பகை. பட்டினத்தார் சொல்கிறார்.

தன்னுடைய சேயும்பகை = பிள்ளைகளும் பகை. அவர்கள் பெரியவர்களாக ஆகும் வரை நம்மை ஒரு விதம் அசைய விட மாட்டார்கள். வாழ்வில் பெரும் பகுதி அவர்களை ஆளாக்குவதிலேயே போய் விடுகிறது.

யுறவோரும் பகை = உறவோரும் பகை.

யிச்செகமும் பகை = இச் செகமும் பகை. இந்த உலகமே பகை

ஆயும் பொழுதில் = ஆராயும் பொழுதில். உங்களுக்கு இது எல்லாம் பகை என்று தெரியாவிட்டால், இன்னும் சரியாக ஆராயவில்லை என்று அர்த்தம். ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். அது எப்படி தாய், மனைவி, பிள்ளைகள், உறவு, உலகம் எல்லாம் பகையாக முடியும் என்று கேட்கிறீர்களா ? 

அருஞ்செல்வம் நீங்கில் = அருமையான செல்வம் நீங்கினால் எல்லோரும் பகையே. செல்வம் இருக்கும்  வரை தான் அவர்களின் அன்பும், நட்பும், உறவும், காதலும். செல்வம் நீங்கினால் உண்மை தெரியும்.  நாலு காசு சம்பாதிக்காதவனை மனைவியும், பிள்ளைகளும், உறவும் எப்படி மதிக்கும் ? அவன் உறவு யாருக்கு வேண்டும் ? 

இவர்கள் அனைவருக்கும் வேண்டியது நீங்கள் அல்ல, உங்கள் செல்வம்.

இக்காதலினாற் தோயுநெஞ்சே = இவர்கள் மேல் காதலினால் நாளும் தோய்ந்து கிடக்கும் நெஞ்சே

மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே = திரு மருதுரீல் வாழும் சிவனின் பொன் போன்ற பாதங்களே விடுதலை தரும்.

ஜீரணிக்க கொஞ்சம் கடினம்தான். அது எப்படி என்று சண்டை பிடிக்கத்தான் தோன்றும். "ஆயுங்கால்"....ஆராயுங்கள்.


Monday, February 24, 2014

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?


வேலைக்குப் போனால் மேலதிகாரி சொல்வதை கேட்டு தலை ஆட்ட வேண்டும். பல்லைக் காட்ட வேண்டும். அவர் சொல்வது சரியோ, கேட்டுக் கொள்ள வேண்டும்.

தொழில் செய்யலாம் என்றால் வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதர்க்கெல்லாம் தலை ஆட்ட வேண்டும்.

அரசாங்க அதிகாரிகளின் கெடு பிடி...

இப்படி நாளும் பலரின் நெருக்கடிகள். நிம்மதியாக எங்கே இருக்க முடிகிறது.

இந்த தொல்லைகள், பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் என்று இருப்பேன் என்று அங்கலாய்கிறார் பட்டினத்தார்.....

பாடல்

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே

பொருள்

செல்வரைப் = செல்வந்தர்களை

பின்சென்று = பின்னால் சென்று

சங்கடம் பேசித் = மனதுக்கு பிடிக்காததை கடமைக்கு பேசி

தினந்தினமும் = தினமும்

பல்லினைக் காட்டிப் = பல்லினைக் காட்டி

பரிதவியாமற் = பறிதவிக்காமல்

பரமானந்தத்தின் = மிகப் பெரிய ஆனந்தத்தின்

எல்லையிற் புக்கிட = எல்லையில் புகுந்திட

வேகாந்தமாய் = ஏகாந்தமாய்

எனக்காம் இடத்தே = எனக்கு ஆகும் இடத்தில்


அல்லல் அற்று = துன்பங்கள் அற்று

என்றிருப் பேனத்தனே = என்று இருப்பேன் அத்தனே

 கயிலாயத்தனே = கைலாய மலையில் இருப்பவனே


நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா 


நம் புலன்கள் நம்மிலிருந்து வெளியே செல்வது மட்டும் அல்ல, வெளியில் இருப்பவற்றை உள்ளே இழுத்துக் கொண்டு வருகின்றன. நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பைப் போல புலன்கள் நம் மேல் சதா சர்வ காலமும் பற்றி ஏறி நம்மை காலி செய்கின்றன.

இந்த புலன்களால் என்ன செய்கிறோம் ?

இல்லாத பொய்களின் பின்னால்  போகிறோம்.உண்மையானவற்றை விட்டு விடுகிறோம்.

ஆசை. ஆசைப் பட்டதை அடைந்தவுடன் ஒரு ஆரவாரம். கிடைக்க வில்லை என்றால் சோகம். இப்படி புலன்களால் அலைகிறோம் .

அது மட்டும் அல்ல, இந்த புலன்கள் தப்பித் தவறி கூட நம்மை இறைவன் பக்கம் திருப்பாது. எப்போதும் சின்ன சின்ன சந்தோஷங்களின் பின்னேயே நம்மை விரட்டிக் கொண்டு இருக்கும்.


பாடல்


உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.


பொருள் 

உள்ளனவே நிற்க =  நிலையாக உள்ளவை ஒரு புறம் நிற்க

இல்லன செய்யும் = நிலை இல்லாதவற்றை செய்யும்

மையல் துழனி = ஆசை மற்று ஆரவாரம்

வெள்ளனலேனை = வெண்மை இல்லதாவனை. வெண்மை என்றால் தூய்மை. தூய்மை இல்லாதவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வியன் மாத் தடக் கைப் = பெரிய கை

பொள்ளல் = துளை உள்ள

நல் வேழத்து = நல்ல யானையின்

உரியாய் = தோலை உரித்து அதை உடையாக கொண்டவனே

புலன் = என் புலன்கள்

நின்கண் = உன்னிடம்

போதல் ஒட்டா = செல்வதற்கு விடாது

மெள்ளெனவே மொய்க்கும் = மெள்ள மெள்ள மொய்க்கும்

நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே = நெய்க் குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல

குடம்  பெரிது.எறும்பு  சின்னது.இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக எறும்புகள் குட நெய்யையும் காலி பண்ணி விடுவது போல புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை காலி செய்து விடுகின்றன.

நெய் குடம் பற்றி ஆழவார் பாடல் ஒன்று இந்த ப்ளாகில் இருக்கிறது. தேடிக் கண்டு பிடியுங்கள்.....






Sunday, February 23, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி 


எதை கொடுத்தாலும் அதை வைத்து மேலும் மேலும் பிழை செய்வது மனித இயல்பு. கிடைத்ததை வைத்து நல்லது செய்வது கிடையாது. மேலும் மேலும்  .தவறு செய்வது.

அது  .மட்டும் அல்ல. நாளும் நம் அன்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. எத்தனை பேரிடம் அன்பு செய்கிறோம் ? எவ்வளவு அன்பு செய்கிறோம் ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்  வள்ளலார்.அது அவரின் அன்பின் வீச்சு.

நாம் , நமக்கு நெருங்கியவர்களைக் கூட   முழுவதும் அன்பு செய்கிறோமா ?

இறைவா, நீ தந்ததை எல்லாம் பெற்றுக் கொண்டு, நாளும் தவறுகளையே செய்து, என் அன்பை சுருக்கி வாழும் இந்த வெற்று அடியேனை விட்டு விடாதே. நீ என்னை கை விட்டு விட்டால் நான் கெட்டுப் போவேன். உன்னை விட்டால் என்னை தாங்குபவர் யாரும் இல்லை. என் வாழ்வின் முதலே. எனக்கு என்று உள்ளவன் நீ மட்டும் தான்.....

பாடல்

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.


பொருள் 

பெற்றது கொண்டு = என்னவெல்லாம் கிடைக்குமோ அதை எல்லாம் பெற்றுக் கொண்டு

பிழையே பெருக்கி = நாளும் பிழைகளை பெருக்கி

சுருக்கும் அன்பின் = அன்பினைச் சுருக்கி

வெற்று அடியேனை = ஒன்றும் இல்லாத வெறுமையான அடியேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா?

விடிலோ = நீ என்னை கை விட்டு விட்டால்

கெடுவேன் = நான் கெட்டுப் போவேன்

மற்று = மேலும்

அடியேன் தன்னை = அடியவனாகிய என்னை

தாங்குநர் இல்லை = தாங்குபவர் யாரும் இல்லை

என் வாழ் முதலே = என் வாழ்வின் ஆதாரமான முதல் பொருளே

உற்று = துன்பங்களை உற்று , அனுபவித்து

அடியேன் = அடியவனாகிய நான்

மிகத் தேறி நின்றேன் = இந்த உலகம் இன்னது என்று அறிந்து தெளிந்து நின்றேன்

எனக்கு உள்ளவனே = எனக்கென்று உள்ளவன் நீயே 

எல்லாம் முடியாவிட்டாலும் அன்பை மட்டுமாவது பெருக்கிப் பாருங்கள். 


Saturday, February 22, 2014

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

அவனைக் காணாமல் அவளுக்கு துக்கம்  பொங்குகிறது.யாரிடம் சொல்வாள் அவள் ?

மேகத்தினிடம் முறை இடுகிறாள்.

வானிலே கம்பளம் விரித்தது போல இருக்கும் மேகங்களே. என் திருமால் அங்கு வந்தானா ? என் கண்ணீர் என் முலையின் மேல் விழுந்து நான் சோர்ந்து போகின்றேன். நான் அப்படி சோர்ந்து போவது அவனுக்கு ஒரு பெருமையா ?

பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிற வானத்தில்

மேலாப்பு = மேல் ஆடை

விரித்தாற்போல் மேகங்காள் = விரித்ததைப் போல உள்ள மேகங்களே

தெண்ணீர் = தெளிந்த தீர்த்தங்கள்

பாய் = பாய்கின்ற

வேங்கடத்து = திருவங்கடத்தில் உள்ள 

என் திருமாலும் போந்தானே = என் திருமாலும் போனானே

கண்ணீர்கள் = கண்ணீர்கள்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

 துளி சோரச் = துளியாக விழ

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் = பெண்ணின் குணங்களை இப்படி அழிப்பது

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா ?