Tuesday, May 6, 2014

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆற்றல் அழியும்

நீதி நூல் - அதிகம் உண்டால்  ஆற்றல் அழியும் 


உணவில் இருந்து நமக்கு சக்தி கிடைக்கிறது.

அதிகம் உண்டால் அதிகம் சக்தி கிடைக்க வேண்டும் அல்லவா ?

 அதுதான் இல்லை.

அளவோடு உண்டால், அது உடலில் சக்தியாக மாறி உடல் எங்கும்  இயங்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் ?

ஒரு குளத்தில் கொஞ்சம் நீர் இருக்கிறது. மேலும் கொஞ்சம் நீர் வந்தால் குளம்  நிறையும்.மேலும் மேலும் நீர் வந்து கொண்டே இருந்தால், அது குளத்தின் கரையை உடைத்து இருக்கின்ற நீரையும் சேர்த்து கொண்டு போய் விடும். அது போல அளவுக்கு அதிகமாக உண்டால் உடலில் ஏற்கனவே உள்ள சக்தியையும் அது கொண்டு போய் விடும்.

சரி, அந்த அளவை எப்படி கண்டு பிடிப்பது ?

உணவு உண்ட பின் வயிறு பள்ளமாக இருக்க வேண்டும். மேடாக மாறக் கூடாது. அதாவது வயிறு முட்ட சாப்பிடக் கூடக் கூடாது.

பாடல்

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ளநீ ரையுமி ழக்கும் உண்மைபோற் பேர கட்டின்
பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற்று ணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ.

சீர் பிரித்த பின் 

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல்  பேர் அகட்டின் 
பள்ளம்  மேடாக உண்ணும்  பதம் உடல்  வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற் உணவால் அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ 


பொருள் 

கொள்ளுரு நீரைக் = அளவுக்கு அதிகமான நீரைக்

கொண்ட  குளங்கரை = கொண்ட குளத்தின் கரை

புரண்டு = உடைந்து

முன்னம் = முன்பே

உள்ள = உள்ள

நீரையும் இழக்கும் உண்மை போல் = இழக்கும் உண்மை போல

பேர் அகட்டின் = அகடு என்றால் வயிறு

பள்ளம் = ஒட்டிய வயிறு

 மேடாக = உப்பி பெரிதாகும் வரை

உண்ணும்  பதம் = உண்ணும் உணவு

உடல்  வளத்தைப் போக்கும் = உடல் வளத்தை போக்கும்

எள்ளலில் = சிறந்த

சிற் உணவால் =கொஞ்சமான உணவை  உண்டால் 

அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ = அது செரிமானமாகி சக்தியாக உடல் எங்கும்  இயங்கும்.


வயிறு முட்ட உண்ணாதீர்கள். அது சக்தியை அழிக்கும். 

வயறு ஒட்டி இருக்கும் படி உண்ணுங்கள். அது உடலுக்கு சக்தியை  தரும்.


நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து 


அளவுக்கு அதிகமாக உண்பவர்கள் இன்று மட்டும் அல்ல நீதி நூல் எழுதப் பட்ட அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

அதிகம் உண்டால் என்ன  ஆகும் என்று சொல்கிறது நீதி நூல்.

நீதி என்றால் ஏதோ சட்டம் என்று நினைத்துக் கொள்ள கூடாது. வாழ்க்கைக்குத் தேவையான நல்லவைகளை எடுத்துக் கூறுவது நீதி நூல்.

நெல் வளர நீரும், மிதமான வெப்பமும் தேவை. அதிகமான நிழல், அதிகமான தண்ணீர் இருந்தால் நெல் பயிர் அதிகமாக வேகமாக வளராது. அழுகிப் போகும்.

நோய் வந்தால் மருந்து உண்கிறோம். சீக்கிரம் குணமாக வேண்டும் என்று இருக்கின்ற மருந்தை எல்லாம் ஒரே நாளில் உண்டால் நோய் தீர்க்கும் மருந்தே விஷமாகி நம்மை கொன்றுவிடும்.

அது போல

அளவுக்கு அதிகமாக உண்டால், அது சிலவற்றை அன்போடு கூடவே அழைத்து  வரும். அவை என்ன தெரியுமா ?

- பனி - (சளி, காய்ச்சல் ,இருமல் முதலியன )
- பிணி - அனைத்து விதமான நோய்கள்
- மடமை - முட்டாள் தனம் (அறிவு மழுங்கிப் போகும் )
- மந்தம் - சுறுசுறுப்பின்மை, சோம்பேறித்தனம்
- பழிச் சொல் - வேலை இல்லாமல் , முட்டாளாக இருந்தால் பழிச் சொல் வராமல் பாராட்டா வரும் ?

இவற்றையெல்லாம், இந்த அளவுக்கு அதிகமாக உண்ணும் செயல், ஒரு தூதுவனைப் போல சென்று அன்போடு அழைத்துக் கொண்டு வரும்.

பாடல்

நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும்
இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும்
பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக்
கனிவொடு மழைக்குந் தூதாங் கழியபே ருண்டி மாதோ.

சீர்  பிரித்த பின்

நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசம் மிகவே உண்ணும் 
இனிய மாமருந்து நஞ்சாம் இன்பம் மிகித்து உண்பாகும் 
பனி பிணி மடமை மந்தம் பழி எல்லாம்  வம்மி னென்னக்
கனிவொடு அழைக்கும் தூதாம்  கழிய பேருண்டி மாதோ.

பொருள்


நனி நிழல் = அதிகமான நிழல்

புனல் = அதிகமான நீர்

கொள் = கொள்ளும்

பைங்கூழ் = நெற் பயிர்

நாசம் = நாசமாகும்

மிகவே உண்ணும் = அதிகமாக உண்டால்

இனிய = இனிமையான

மாமருந்து = சிறந்த நோய் தீர்க்கும் மருந்து

நஞ்சாம் = விஷமாகிவிடும்

இன்பம் மிகித்து = இன்பம் இருக்கிறது என்று அதிகமாக

உண்பாகும் = உண்டால்

பனி = சுரம்

பிணி = நோய்

மடமை = முட்டாள்தனம்

மந்தம் = சோம்பேறித்தனம்

பழி = பழிச் சொல்

எல்லாம் = எல்லவாற்றையும்

வம்மி னென்னக் = தீமைகளை எல்லாம்

கனிவொடு அழைக்கும் = அன்போடு அழைக்கும் 

 தூதாம்  = தூதனாக செயல் படும்

கழிய பேருண்டி மாதோ = அளவுக்கு அதிகமான உணவு

கழி என்றாலே அதிகம் என்று  அர்த்தம்.இதில் பேருண்டி என்று இன்னொரு அடைமொழி.



Monday, May 5, 2014

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம்

நீதி நூல் - அழகியை காணாமல் திகைத்தோம் 


பெண்ணின் அழகில் மயங்காதவர்கள்  யார் ?

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருபவள் அவள் என்று வள்ளுவர்  கூறுகிறார்.

அவள் ஒரு அழகான பெண். அவள் கிட்ட போனாலே ஒரு இனிய மணம்  வீசும்.தாமரை இதழ்கள் போன ஆதாரங்கள். நூல் போல இடை; அன்னம் போல  நடை, அழகிய  மார்புகள், பிறை சந்திரன் போன்ற  நெற்றியும்,மீன் போன்ற கண்கள், பால் போல மொழியும் எல்லாம் அவளிடம்  இருக்கும். ஒரு நாள் அவள் இறந்து போனாள் . அவளைத் தேடி சுடுகாடு போனோம். அங்கே இவை ஒன்றும்  இல்லை. காய்ந்த குசிகளை அடுக்கி வைத்தது போல சில எலும்புகள் தான் கிடந்தன,  தேடிச் சென்ற அழகியைக்  காணோம்.

 பாடல் 

தோல்வாசம் துறந்திறந்து கிடந்தஅழ
    கியைக்காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே
   கண்டனஞ்செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையுமன நடையுமணி
   தனமுமதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா
   ணாமலுளந் திகைத்தோமன்னோ.

 சீர்  பிரித்த பின்


தோல் வாசம் துறந்து இறந்து கிடந்த அழகியை 
    காணச் சுடலை சென்றோம்
கோல்போன்ற வெள் எலும்பின் குவை ஒன்றே 
   கண்டனம் செங் குமுத வாயும்
நூல்போன்ற இடையும் அன்ன நடையும் அணி 
   தனமும் மதி நுதலும் வாய்ந்த
சேல்போன்ற விழியும் பால் மொழியும் 
   காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ.

பொருள்

தோல் வாசம் = அவள் உடலில் இருந்து  வரும் வாசம்

 துறந்து = விட்டு

இறந்து கிடந்த அழகியை = இறந்து கிடக்கும் அழகியை

காணச் = காண்பதற்கு

சுடலை சென்றோம் = சுடுகாட்டிற்குப் போனோம்

கோல்போன்ற = குச்சி போன்ற

வெள் எலும்பின் = வெண்மையான எலும்பின்

குவை ஒன்றே கண்டனம் = குவியல் ஒன்றைக் கண்டோம்

செங் குமுத வாயும் = சிவந்த தாமரை போன்ற வாயும் (இதழ்களும்)

நூல்போன்ற இடையும் = நூல் போன்ற சிறிய இடையும்

அன்ன நடையும் = அன்னம் போன்ற நடையும் 

அணி தனமும் = ஆபரணங்கள் அணிந்த மார்புகளும்

 மதி நுதலும்= நிலவு போன்ற நெற்றியும்

வாய்ந்த = கொண்ட

சேல்போன்ற விழியும் = மீன் போன்ற விழியும்

பால் மொழியும்  = பால் போன்ற மொழியும்

காணாமல் உள்ளம்  திகைத்தோம் அன்னோ= காணாமல் உள்ளம் திகைத்தோம்


இத்தனயும் ஒரு நாளில் சில பல எலும்புக் குவியலாக மாறிவிடும்.

அந்த எலும்பு குவியலுக்கா இத்தனை  உருக்கம், பாடல்,  காதல், கலவி, வலி, வேதனை,  இலக்கியம், சண்டைகள்....?




Sunday, May 4, 2014

நீதி நூல் - அழகென்னும் செருக்கு

நீதி நூல் - அழகென்னும் செருக்கு 


ஆணவம் பல வழியில் வரும்.

அழகு ஒரு வழி. நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஆணவத்திற்கு அடிகோலும். எல்லா ஆணவமும் அழிவுக்கு, துன்பத்திற்கு வழி கோலும்.

அழகாய் இருக்கிறோம் என்று  படாதே. அழகான ஆடையை நீக்கி, உடலை கழுவாமல் கண்ணாடியில் பார்த்தால் தெரியும் எவ்வளவு அழகு என்று. சுடுகாட்டுக்குப் போய் பார்த்தால் நிறைய மண்டை ஓடுகள் கிடக்கும். அந்த மண்டை ஓடுகள் எல்லாம் ஒரு காலத்தில் உன் முகம் போலத்தான் இருந்தன என்று அறிந்து கொள் என்கிறது நீதி நூல்.

பாடல்

எழிலு ளேமெனச் செருக்குறு நெஞ்சமே யிழைதுகில் நீத்தங்கம்
கழுவிடாதுற நோக்குதி முகந்தனைக் கஞ்சந் தனில்நோக்கின்
எழுநி லத்திடை யுன்னின்மிக் காருள ரெனவறி வாயீமத்து
அழியும் வெண்டலை யுன்றலை போலிருந் தவணுற்ற தறிவாயே.

சீர் பிரித்த பின் 

எழில் உள்ளேம் என செருக்கு உறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் 
கழுவிடாது உற நோக்குதி முகம் தனை கஞ்சம் தனில் நோக்கின் 
எழு நிலத்திடை உன்னின் மிக்காருளர் என அறிவாய் மற்று 
அழியும் வெண் தலை உன் தலை போல் இருந்தவன் உற்றது அறிவாயே 

பொருள் 


எழில் உள்ளேம்  = அழகாக இருக்கிறோம் 

என = என்று 

செருக்கு உறு நெஞ்சமே = ஆணவம் கொள்ளும் மனமே 

இழை துகில் நீத்து = ஆடையை நீக்கி  

அங்கம் கழுவிடாது = உடலை கழுவாமல்  

உற நோக்குதி = ஆழ்ந்து நோக்கு 

முகம் தனை = முகத்தை 

கஞ்சம் தனில் = கண்ணாடியில் 

நோக்கின் = நோக்கினால் 
 
எழு நிலத்திடை = இந்த உலகில் 

உன்னின் மிக்காருளர் = உன்னைவிட அழகானவர்கள் இருக்கிறார்கள் 

என அறிவாய் = என்று அறிவாய் 

மற்று = அது மட்டும் அல்ல 
 
அழியும் வெண் தலை = அழியும் மண்டை ஓடு (வெண் தலை)

உன் தலை போல் = உன்னுடைய தலை போல ஒரு காலத்தில் 

இருந்தவன்  = இருந்ததை 

உற்றது அறிவாயே  = உணர்ந்து அறிந்து கொள் 



Saturday, May 3, 2014

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும்

திருக்குறள் - பிறர்பழியும் தம் பழியும் 



பிறர்பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு 

பிறருடைய பழியையும், தன்னுடைய பழியையும் கண்டு நாணம் அடைவோரை நாணத்தின் உறைவிடம் என்று உலகம் சொல்லும்.

இது மேலோட்டமான அர்த்தம்.

வள்ளுவர் இவ்வளவு மேலோட்டமாக எழுதக் கூடியவர் அல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தம் எதுவாக இருக்கும் ?

தவறு செய்யும் நிறைய பேர் நினைப்பது என்ன என்றால், மாட்டிக் கொண்டால் என்ன ? இது எல்லாம் ஒரு பெரிய விஷயமா ? ஊர் உலகத்தில் செய்யாததையா நான் செய்கிறேன்....என்று தாங்கள் செய்யும் தவறினால் வரும் பழியை அவர்களோடு மட்டும் வைத்துப் பார்கிறார்கள். அவர்களை சார்ந்த மற்றவர்களின் பழியைப் பார்ப்பது இல்லை.

ஒரு தந்தை, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஏதாவது தவறு செய்தால், அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் மனைவியை, அவன் பிள்ளைகளை பாதிக்கும்.  திருடன் மனைவி, திருடன் பிள்ளை என்று பழி அவர்கள் மேலும் விழும். அவன் பெற்றோரைப் பாதிக்கும். அப்படி ஒரு மோசமான பிள்ளையை பெற்றவர்கள் என்று. அதனால், மற்றவர்களுக்கு வரும் பழியையும் தனக்கு வரும்  பழி என்று நினைக்க வேண்டும்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்க வில்லை, வகுப்பில் தேறவில்லை என்றால் பழி அவனுக்கு  மட்டும் அல்ல, அவனுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர், பெற்றோர் என்று அனைவர் மேலும்   பழி வரும். நம் பெற்றோருக்குத் தலை குனிவை  நாம் ஏற்படுத்தி விடுவோம் என்ற பழிக்கு அவன் நாண வேண்டும்.

ஒரு பெண்ணை ஒருவன் கெடுத்து விட்டான் என்றால், அந்த பெண்ணின் மேலும் பழி வரும்.  அந்தப் பழிக்கும் அவன் நாண வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தவறு செய்தால், அந்தப் பழி அந்த நிறுவனத்தின் மேலும்    படியும்.

இப்படி, ஒருவன் செய்யும் பழிச் செயல் அவனோடு நிற்காமல் அவனைச் சார்ந்தவர்களையும்  பற்றிப் படரும். ஒருவன் மற்றவர்கள் பழிக்கும் நாண வேண்டும்.


இன்னும் சற்று உன்னிப்பாக பார்த்தால் தெரியும், வள்ளுவர், முதலில் பிறர் பழியைச்  சொல்லி பின் தன் பழியைச்  சொல்கிறார்.

தான் செய்யும் பாவச் செயலால் மற்றவர்களுக்கு வரும் பழியைப் பற்றி முதலில்  சிந்திக்க வேண்டும்.

ஒருவன் பழிச் செயலைச் செய்கிறான். அதனால் அவனுக்கு சில பலன்கள் கிடைக்கலாம். பழியும் பாவமும் ஓரிடத்தில். ஆனால், அவன் செய்த பழியால் மற்றவர்களுக்கு  ஒரு பலனும் இல்லை, பழி மட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.  எனவே,மற்றவர்களுக்கு வந்து சேரும் பழியையும் அவன் நினைக்க வேண்டும்.


இன்னும் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

மற்றவர்கள் பழியையும் தன் பழி போல் நினைக்க வேண்டும்.

மற்றவர்கள் பழி நம்மால் விளைந்ததாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது அவர்களாகவே தேடிக் கொண்டதாகக் கூட இருக்கலாம். அதையும் தன் பழி போல் நினைத்து அதற்காக வெட்கி, அந்த பழியைத் துடைக்க பாடு பட வேண்டும்.

உதாரணமாக, நம் பிள்ளையே ஒரு தவறு செய்து விட்டால், அந்தத் தவறை நாமே செய்தது போல  நினைத்து, அதற்கு பரிகாரம் தேட வேண்டும்.

கணவனோ மனைவியோ தவறு செய்து விட்டால், அதனால் வரும் பழியை தன்  பழி என நினைத்து செயல் படவேண்டுமே அன்றி அது அவர்கள் செய்த பழி அவர்களே  அதை சரி செய்யட்டும் என்று நினைக்கக் கூடாது.

பிறர் பழி என்று வள்ளுவர் சொன்னதை பிள்ளைகள், கணவன் மனைவி என்று  குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல், நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயல் என்று  விரித்து நோக்கினால் யார் மேல் பழி வந்தாலும் அது தன் பழியாக  நினைத்து செயல் பட வேண்டும்.

இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், உலகம் எவ்வளவு இனிமையாக  இருக்கும் ?

ஏழு வார்த்தைகளில் உலகம் உய்ய வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.


Friday, May 2, 2014

இராமாயணம் - விதி நிலையை மதியாத கொள்கை

இராமாயணம் - விதி நிலையை மதியாத கொள்கை


கம்பன் விதியை ஆழமாக நம்புகிறான்.

செயல்களுக்கு விளைவுகள் இருக்கும் என்றால், விளைவுகள் செயலுக்கு ஆதாரமாக இருக்கின்றன என்று அவன் நம்புகிறான்.

இராமனை கானகம் போகச் சொன்னதை கேட்டு வெகுண்ட இலக்குவனிடம், "நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்று இராமன் சொல்கிறான்.

அதற்கு இலக்குவன் "விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் தொழில் காண்டி" என்று சினக்கிற இடத்திலும் கம்பன் விதியை காண்பிக்கிறான்.

இப்படி பல இடத்தில் கம்பன் விதியை கொணர்கிறான்.

இங்கே, போரில் இறந்து விழுந்த இராவணன் மேல் விழுந்து புலம்பும் வீடணனை சாம்பவான் என்ற குரங்கு அரசன் தேறுதல் கூறுகிறான்.

"நீ என்ன இந்த உலகம் அனைத்தையும் மதியினால் வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? விதியை மதியால் வெல்ல முடியாது.  விதி என்று ஒன்று இல்லை என்று நினைப்பதால் நீ வருந்துகிறாய். இது எல்லாம் விதியின் படி நடக்கிறது. நீ வருந்தாதே" என்று அவனுக்கு ஆறுதல் கூறுகிறான்.


பாடல்

என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம் எண்கின் வேந்தன், 
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச் 
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி 
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் மயன் பயந்த நெடுங் கண் பாவை. 

பொருள்

என்று ஏங்கி = இறந்து கிடக்கும் இராவணனை பார்த்து ஏங்கி  அரற்றுவான்தனை  = அழுகின்ற வீடணனை
எடுத்து = கையில் எடுத்து
சாம்பவனாம் எண்கின் வேந்தன் = சாம்பவான் என்ற கரடிகளின் அரசன்

'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! = குன்று போல் உயர்ந்த தோளினை கொண்டவனே

விதி நிலையை = விதியின் நிலையை
மதியாத = மதிக்காத
கொள்கைத்து ஆகிச்  = கொள்கை கொண்டு

சென்று = சென்று

ஓங்கும் உணர்வினையோ? = அப்படி பட்ட அறிவை கொண்டவனா நீ ?

தேறாது வருந்துதியோ?' = அதை அறியாமல் வருந்துகிறாயா ?

என்ன, தேறி = என்று சொன்னவுடன், வீடணன் தேறி 

நின்றான்  = நின்றான்

அப்புறத்து; = அந்த புறத்தில்

அரக்கன் நிலை கேட்டாள் = இராவணின் நிலை கேட்டாள்

மயன் பயந்த நெடுங் கண் பாவை = மயனின் மகளான மண்டோதரி

நாம் எல்லாம் நம் அறிவால் , நம் திறமையால் செய்து முடித்து விட முடியும்  என்று  நினைக்கக் கூடாது. 

என்ன முயன்றாலும், முடியாத காலங்களும் உண்டு. 

எவ்வளவு பெரிய இராவணனுக்கு இப்படி அழிவு வரும் என்று யார் நினைத்து இருப்பார்கள் ?

விதி !

துக்கம் வரும்போது அமைதியாக இருங்கள். இது விதியின் விளைவு என்று இருங்கள். அந்த துக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வலிமை வரும். அதை சகித்துக் கொள்ளும்  பொறுமை வரும். 

உண்மையோ பொய்யோ அது வாழ்கையை இலேசாக மாற்றும். 


Thursday, May 1, 2014

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?  


குழந்தையோடு ஒரு கோவிலுக்கோ, திருவிழாவுக்கோ, சினிமாவுக்கோ போகிறோம். நடுவில் பிள்ளையை காணவில்லை.

எப்படி பதறிப் போவோம். எப்படி தேடுவோம் ? எங்கெல்லாம் தேடுவோம் ? எதிரில் பார்க்கும் எல்லோரையும் கேட்போம் "இந்த மாதிரி ஒரு பிள்ளையை பார்த்தீர்களா " என்று. மனம் பதறும், பயம் கவ்விக் கொள்ளும், வயறு என்னோவோ செய்யும். என்னவெல்லாமோ நினைப்போம்....

அப்படியா இறைவனைத்  தேடுகிறோம் ?

நாள் கிழமை என்றால் கோவிலுக்குப் போவது, வீட்டில் விளக்கு ஏற்றுவது, பலகாரங்கள் பண்ணி உண்பது, அப்பப்ப சில பல பாடல்களை பாடுவது....

இதுவா தேடல் ?

தேடலில் ஆழம் இல்லை, அவசரம் இல்லை, நம்பிக்கை இல்லை. பின் எப்படி கிடைக்கும்.

மணி வாசகர் சொல்கிறார்.....

உன்னைப் பற்றி பாட மாட்டேன், உன்னை பணிய மாட்டேன், எனக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உன்னை காண முடியாமல் இந்த ஊன் உடலை விட மாட்டேன், உன் பெருமைகளை நினைத்து வியக்க மாட்டேன், நீ எங்கே அலறித் தேட மாட்டேன், சிவன் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டார்கள் என்று ஓடி சென்று அறிய முயல மாட்டேன், உள்ளம் உருக மாட்டேன், நின்று உழல்கிறேனே என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; `சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.


பொருள்

பாடிற்றிலேன் = உன்னைப் பற்றி பாட மாட்டேன்

பணியேன் = உன்னை பணிய மாட்டேன்

மணி = மணி போன்ற

நீ = நீ

ஒளித்தாய்க்குப் = எனக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்

பச்சூன் = பசிய ஊன் (ஊன் உடம்பு)

வீடிற்றிலேனை = விட மாட்டேன்

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வியந்து = உன் பெருமைகளை வியந்து

ஆங்கு = அங்கு

அலறித் = அலறி

தேடிற்றிலேன் = தேட மாட்டேன்

`சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று = செய்வான் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டவர்கள் என்று

ஓடிற்றிலேன்; = ஓடிச் சென்று அறிய முயல மாட்டேன்

கிடந்து உள் உருகேன் = உள்ளம் உருக மாட்டேன்

நின்று உழைத்தனனே = கிடந்து உழல்கிறேனே

ஆர்வத்தோடு, ஆழத்தோடு, அவசரமாகத் தேடுங்கள்....

தேடுங்கள் கண்டடைவீர்கள்