Sunday, November 16, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும் 


இராமனுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன் இலக்குவனை அனுப்பி சுக்ரீவனை மிரட்டி வரச் சொல்கிறான்.

இலக்குவனும் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானர சேனைகள் என்ன செய்வது என்று அறியாமல் அங்கும் இங்கும் ஓடி கடைசியில்  அனுமனிடம் வந்து சேர்கின்றன.

அனுமன் அவர்களை அழைத்துக் கொண்டு தாரையிடம் செல்கிறான்.

எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள்.

அவள் மேலும் சொல்கிறாள் (முதலில் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம் )

"மீண்டும் ஒன்று சொல்லுவாள்.  படைகளை கூட்டுங்கள் என்று இராமன் சொன்ன நாள் தப்பினால் , உங்கள் நாளும் தப்பும், என்று நான் பல முறை சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. இப்போது குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். பாருங்க என்ன நடக்கப் போகிறது என்று "

பாடல்


மீட்டும் ஒன்று
      விளம்புகின்றாள்: ' ''படை
கூட்டும்'' என்று, உமைக்
      கொற்றவன், ''கூறிய
நாள் திறம்பின், உம்
      நாள் திறம்பும்'' எனக்
கேட்டிலீர்; இனிக்
      காண்டிர்; கிடைத்திரால்.

பொருள்

மீட்டும்  = மீண்டும்

ஒன்று  விளம்புகின்றாள்: = ஒன்று கூறுவாள்

' ''படை கூட்டும்'' என்று, = படைகளை கூட்டுங்கள் என்று

உமைக்  கொற்றவன், = சீதையின் கணவன்

 ''கூறிய நாள் திறம்பின், = கூறிய நாள் தவறிப் போனால்

உம்  நாள் திறம்பும்'' = உங்கள் வாழ் நாளும் தவறிப் போகும்

எனக் = என்று

கேட்டிலீர்;  = சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை

இனிக் காண்டிர்; = இனி என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்

கிடைத்திரால்.= நன்றாக கிடைத்தீர்கள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  தாரை, நடை முறை ஆட்சியில் ஈடு பட்டிருக்கிறாள் .  இராமனுக்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றால்  அரசுக்கு துன்பம் வரும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. வீரகளை பல முறை அவள் எச்சரிக்கை செய்திருக்கிறாள்.

இப்போது எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள். அவள் அவர்களை கோபித்து திட்டுகிறாள்.

மேலும் சொல்லுவாள் ....



Tuesday, November 11, 2014

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை 


சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர்.


ஆண்டவன் - பக்தன்;
ஆண்டான் - அடிமை;
நாயகன் - நாயகி என்று பல மன நிலைகளில் ஆண்டவனை அடியவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள்.

இறைவனை நண்பனாக கொண்டாடியவர் சுந்தரர். இறைவனை வேலை சொல்வது, தனக்காக மனைவியிடம் தூது போகச் சொல்வது என்று மிக மிக உரிமையுடன் ஒரு உயிர் நண்பனைப் போல இறைவனோடு பழகுகிறார்.

அது மட்டும் அல்ல, இடையில் சில கிண்டல் வேறு. 

தெரியாம வந்து இவர் கிட்ட மாட்டிகிட்டோமே என்று நையாண்டி செய்வது போல சுந்தரர் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்.

பிறப்பதும் இல்லை. மூப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருக்கும் இடமோ சுடு காடு. அது மட்டும் அல்ல திரு வேள்விக்குடி மற்றும் திருத் துருத்தி என்ற இடங்களில் வசிக்கிறார். சரி, உடையாவது சரியாக உடுத்துகிராரா என்றால் அதுவும் இல்லை. அவர் இடையில் கட்டுவது பாம்பை. முன்னாலேயே தெரிந்து இருந்தால் இவர்கிட்ட மாட்டி இருக்க மாட்டோம் என்று நையாண்டிப் பொருளில் பாடிய பாடல் இது: 

பாடல்

மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; 
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், 
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் 
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! 

பொருள்

மூப்பதும் இல்லை = வயதாகி மூப்பு அடைவதும் இல்லை

பிறப்பதும் இல்லை = பிறப்பதும் இல்லை

இறப்பது இல்லை = பிறப்பும் இல்லை, மூப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை.

சேர்ப்பு அது காட்டு அகத்து = சேர்ந்து இருக்கும் இடம் சுடு காடு

ஊரினும் ஆக = வாழும் ஊர்

சிந்திக்கின் = யோசித்துப் பார்த்தால்

அல்லால் = மேலும்

காப்பது வேள்விக்குடி , தண்துருத்தி = காவல் செய்து இருப்பது வேள்விக் குடி மற்றும் குளிர்ந்த திருபந்துருத்தி

எம் கோன் = எங்கள் அரசன்

அரைமேல் = இடுப்பின் மேல்

ஆர்ப்பது நாகம் = படம் எடுத்து ஆடுவது நாகப் பாம்பு

அறிந்தோமேல்  = இது தெரிந்து இருந்தால் 

நாம் இவர்க்கு ஆட்படோமே! = நாம் இவருக்கு ஆட் பட்டோமே.



Monday, November 10, 2014

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம்

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம் 


அது ஒரு பெரிய குளம்.

அது ஒரு கார் காலம்.

அந்த குளத்தின் நடுவில் ஒரு குவளை மலர் மலர்ந்து நிற்கிறது. கழுத்தளவு நீரில் நின்று கொண்டு என்ன இது தவம் ?

யாருக்காக இந்த தவம் ?

ஓ ....புரிந்து விட்டது....கூர்மையான வேலைக் கொண்ட, வண்டுகள் ரீங்காரம் இடும், குதிரையின் மேல் செல்லும் பாண்டிய மன்னனின் மார்பில் மாலையாக மாற இந்த குவளை மலர் ஒற்றைக் காலில் இந்த குளிர்ந்த நீரில் தவம் இருக்கிறது.

பாடல்

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்

பொருள்

கார் = கார் காலத்தில்

நறு = நறு மணம் பொருந்திய

நீலம் = குவளை மலர்

கடிக் = பெரிய

கயத்து = குளத்தில்

வைகலும் = தினமும்

நீர்நிலை நின்ற = நீர் நிலையில் நின்று

தவம்கொலோ = எதற்க்காக தவம் செய்கிறாய்

கூர் நுனை வேல் = கூர்மையான முனை கொண்ட வேலைக் கொண்ட

வண்டு இருக்கும் = வண்டு இருக்கும்

நக்க தார் = மலர்ந்த மாலையைக் கொண்ட (நக்க = மலர்ந்த; தார் = மாலை )

வாமான் = தாவி செல்லும் குதிரை

வழுதியால் = பாண்டிய மன்னனால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம் = அவனோடு இருக்க வேண்டி


இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்வதனால், அந்த மாதிரி தவம் இருந்ததால், அவன் மார்பில் இருக்கப் பெற்றது.



Saturday, November 8, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா 


தாரை சொல்ல சொல்ல கேளாமல் சுக்ரீவனோடு போரிட்டு இராம பாணத்தால் வாலி இறந்து போனான்.

தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள். அவள் புலம்பலிலும் அறிவின் தீட்சண்யம் தெரியும்.

"நான் இங்கு துன்பத்தில் கிடந்து நைந்து போகிறேன். நீயோ உண்மையான வானோர்கள் உள்ள நாட்டிற்கு சென்று விட்டாய். நான் உன் உயிர் என்று நீ என்னிடம் சொல்லி இருக்கிறாய். ஆனால், இன்றோ நான் இருக்கும்போது நீ எப்படி செல்ல முடியும் . ஒரு வேளை நீ சொன்னது பொய்யோ. ஆனால், நீ பொய் சொல்ல மாட்டாயே...."

பாடல்

நையா நின்றனன் நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திருநாடு மேவினாய்;
ஐயா! ‘நீ எனது ஆவி ‘என்றதும்
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!

பொருள்

‘நையா நின்றனன் நான் =நைந்து நின்றேன் நான்

இருந்து இங்ஙன் = இங்கிருந்து

மெய் = மெய்யான

வானோர்  = வானவர்கள்

திருநாடு மேவினாய் = திரு நாட்டிற்கு சென்றாய்

ஐயா! = ஐயா

‘நீ எனது ஆவி ‘என்றதும் = என்னிடம் நீ "நீ என் ஆவி" என்று கூறியது

பொய்யோ? = பொய்யோ ?

 பொய் உரையாத புண்ணியா! = பொய் சொல்லாத புண்ணியனே

தாரைக்கும் வாலிக்கும் உள்ள அன்பின் ஆழம் தெரிகிறது. வாலி, தாரையை உயிருக்கு உயிராக நேசித்து இருக்கிறான்.

நான் உன் உயிர் என்று நீ (வாலி) சொன்னது பொய்யானால், நீ எப்படி பொய் புகலாத வானவர் நாடு போவாய் (மெய் வானோர் திரு நாடு மேவினாய்)

வாலியின் சிறப்பு, வாலிக்கும் தனக்கும் உள்ள அன்பின்   நெருக்கம்,  வாலியைப் பிரிந்த துயரம் எல்லாம் அவளின் புலம்பலில் காணக் கிடைக்கும்.

மேலும் பார்ப்போம்.



Friday, November 7, 2014

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம்

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம் 


சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அதனால் கோபம் கொண்ட சமணர்கள் திருநாவுக்கரசருக்கு மிகுந்த தொல்லை கொண்டுத்தனர். அரசனிடம் சொல்லி அவரை ஒரு அறையில் இட்டு, அந்த அறையில் நிறைய விறகுகளைப் போட்டு தீ மூட்டச் செய்தனர். தீயில் வெந்து மாளட்டும் என்று.

"விண் வரை அடுக்கிய விறகின் சூடான அழல் ஆனது உண்பதற்கு புகுந்தால் அந்த விறகு ஒன்றுக்கும் ஆகாது. பண்ணிய இந்த உலகில் நாம் பயின்ற பாவங்களை நம்முடன் இருந்து அறுப்பது நமச்சிவாய என்ற நாமமே"

பாடல்

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல் 
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே 

பொருள்


விண்ணுற = விண் வரை

அடுக்கிய  = அடுக்கி வைக்கப்பட்ட

விறகின்  = விறகின்

வெவ் அழல் = சூடான தீ

உண்ணிய புகில் = உண்பதற்கு புகுந்தால்

அவை ஒன்றும் இல்லையாம் = அந்த விறகுகள் ஒன்றும் இல்லாமல் (எரிந்து) போகும்


பண்ணிய உலகினில் = செய்யப்பட்ட உலகில்

பயின்ற பாவத்தை  = பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே = அருகில் இருந்து அறுப்பது நமச்சிவாயவே

இது மேலோட்டமான பொருள்.

சொல்வது நாவுக்கு அரசர்.

ஆழ்ந்து சிந்தித்தால் மேலும் பலவற்றை நாம் உணர முடியும்.


எவ்வளவு பாவங்களை செய்கிறோம். நாம் செய்திருக்கிற பாவங்களுக்கு அளவு உண்டா.

இந்த ஒரு பிறவி மட்டும் அல்ல...முன் எத்தனையோ பிறவிகளில் எவ்வளவோ  பாவங்கள் செய்து வந்திருக்கிறோம்.

அவற்றை எல்லாம் அடுக்கி வைத்தால் அது வானம் வரை உயர்ந்து நிற்கும்.

இந்த பாவங்களை எப்படிப் போக்குவது. அனுபவித்துதான் தீர்க்க வேண்டும் என்றால், அனுபவிக்கும் நேரத்தில் இன்னும் பல பாவங்களை நாம் செய்து விடுவோம்.

இந்த பாவங்களை எல்லாம் ஒரேயடியாக எப்படி போக்குவது.

விறகுகள் எவ்வளவு இருந்தாலும், ஒரு சிறு நெருப்பு பத்திக் கொண்டால் அது அத்தனையும் கருகி சாம்பலாகிப் போகும். அது போல , இந்த சேர்த்து வைத்த அத்தனை   பாவங்களையும் எரிக்கும் ஒரு நெருப்பு "நமச்சிவாய " என்ற ஐந்தெழுத்து .

விறகுகள் இருந்த இடம் தெரியாமல் போவது போல நம் பாவங்களும் மறைந்து போகும்.

சரி, பாவம் என்றால் என்ன ? எது பாவம் ?

இது இயற்கை இல்லையோ அது பாவம்.

பாவங்களை நாம் "பயில்கிறோம்". அதாவது அது இயற்கையாக வராது. நாம் பாவம் செய்ய படிக்கிறோம்.

"பயின்ற பாவத்தை" என்றார்.

பாவத்தை எங்கிருந்து படிக்கிறோம் ? - தீயவர்களிடம் இருந்து, அவர்களின் சகவாசத்தால், அவர்கள் சொல்வதை கேட்பதால், அவர்கள் எழுதியவற்றை படிப்பதால்  நாம் பாவத்தை பயில்கிறோம்.


 பாவம் நம்மை இந்த உலகோடு கட்டிப் போடுகிறது.

நல்ல வலிமையான சங்கிலி அது. அந்த சங்கிலியை அறுப்பது நமச்சிவாய என்ற மந்திரம்.


நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


நண்ணி என்றால் அருகில் இருந்து. 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


என்பது மணிவாசகர் வாக்கு. 



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நம் கூடவே இருந்து அந்த அறம் பாவம் என்ற அரும் கையிற்றை அறுப்பது அந்த மந்திரம். 



இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1


இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் மிக ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஓரிரவில் ஒரு சாம்ராஜ்யத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதிய கூனியாகட்டும் ,

இரண்டே வரத்தால் ஒரு சக்ரவர்த்தியைக் கொன்று, புது சக்ரவர்த்தியை கானகம் அனுப்பி, யாரும் நினைக்காத ஒருவனை சக்ர்வர்த்தியாக்கிய கைகேயியாகட்டும்,

முக்கோடி வாழ் நாள் கொண்ட இராவணனை அற்பாயுளில் முடித்த சூர்பனகையாகட்டும்,

எல்லோரும் மிக மிக வலிமையான ஆளுமை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

வாலியின் மனைவி தாரை.

ஒரு பெண்ணின் ஆளுமையை தாரையின் பாத்திரத்தில் வடிக்கிறான் கம்பன்.

தாரை அரசாங்க விஷயங்களில் மிக மிக ஆழமாக ஈடு பட்டிருக்கிறாள். இன்னும் சொல்லப் போனால் ஒற்றரர்கள் தாரையிடம் பல விஷயங்களை சொல்லி இருக்க வேண்டும். நாட்டில் நடப்பவைகளைப் பற்றி வாலிக்குத் தெரியாத விஷயங்கள் கூட  தாரைக்கு தெரிந்திருக்கிறது.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைக்கிறான்.

இத்தனை நாள் பயந்து ஒளிந்து இருந்தவன் எப்படி இன்று துணிவோடு சண்டைக்கு வருகிறான் என்று சிந்திக்கத் தவறி விடுகிறான் வாலி.

வலி(மை) வாலியைத் தடுமாற வைத்தது.

தாரை தடுத்துச் சொல்கிறாள்.

சுக்ரீவனோடு போருக்குப் போகிறேன் என்று வாலி சொல்லக் கேட்ட தாரை சொல்லுவாள் "அரசனே, சுக்ரீவனுக்கு உயிரினும் இனிய நட்பாக இராமன் என்பவன் கிடைத்திருக்கிறான்; அவன் உன் உயிரை எடுக்க உறுதி கூறி இருக்கிறான். இதை நான் நம் மேல் தூய அன்புள்ளவர்கள் சொல்லக் கேட்டேன் "

பாடல்


அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

பொருள்

அன்னது கேட்டவள் = அதைக் கேட்டவள்

'அரச!'  = அரசனே

ஆயவற்கு = அவர்களுக்கு

இன் உயிர் நட்பு = உயிரினும் இனிய நட்பாக 

அமைந்து = அமைந்த

இராமன் என்பவன் = இராமன் என்பவன்

உன் உயிர் கோடலுக்கு = உன் உயிரை எடுப்பதற்கு

உடன் வந்தான்''  = உடன் வந்தான்

எனத் = என

துன்னிய அன்பினர் = நமக்கு நெருங்கிய அன்புள்ளவர்கள்

சொல்லினார்' என்றாள்.= சொல்லினார் என்றாள்

சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையிலான நடப்பைப் பற்றி வாலிக்குத் தெரியவில்லை. தாரைக்குத் தெரிந்திருக்கிறது.

அது மட்டும் அல்ல, சொன்னது ஒரு ஆள் இல்லை. பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். "சொல்லினார்" என்றாள் .




Sunday, November 2, 2014

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம்

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம் 


இராமயணத்தை ஏதோ ஒரு கதையாகப் பார்க்கக் கூடாது.

கதை என்று பார்த்தால் அது ஒன்றும் பெரிய கதை இல்லை.

இராமாயணம், காலம் கடந்து நிற்கக் காரணம் அது சொல்லும் வாழ்கை அறங்கள் .

மனிதனை நல்வழிப் படுத்த அது சொல்லும் அறங்கள் .


கார் காலம் முடிந்து சீதையைத் தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு மட்டையாகி விட்டான். இலக்குவன் மிகுந்த சினத்தோடு வருகிறான். என்ன செய்வது என்று அறியாத வானரங்கள் அனுமனிடம் சென்று யோசனை கேட்டன.

அனுமன், அறிவில் சிறந்தவன், ஆதித்யனிடம் கல்வி பயின்றவன், சொல்லின் செல்வன் , உலகுக்கு அச்சாணி என்று இராமானால் பாராட்டப் பட்டவன்.

அப்பேற்பட்ட அனுமன், இந்த பிரச்சனையை தாரை தான் தீர்க்க முடியும் என்று அவர்களை  தாரையிடம் அழைத்துக் கொண்டு போகிறான்.


தாரை எல்லாவற்றையும் கேட்கிறாள்.

பின் சொல்கிறாள் ,

"என்ன செய்வது என்று இப்ப வந்து கேட்கிறீர்கள். யாரும் செய்ய முடியாத தீய காரியத்தை செய்துவிட்டு வந்து நிற்கிறீர்கள். நன்றி கொன்ற தீய செயலை செய்துவிட்டு அதை தீர்க்க என்ன வழி என்று திகைக்கிரீர்கள். நீங்கள் பிழைப்பது அரிது " என்கிறாள்

பாடல்

 எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

பொருள்

 எய்தி, = இங்கு வது

 'மேல் செயத்தக்கது என்?' = மேலே என்ன செய்வது

 என்றலும் என்று அவர்கள் கேட்டதும்

'செய்திர், = செய்தீர்கள்

செய்தற்கு அரு நெடுந் தீயன =செய்ய முடியாத பெரிய தீய செயலை

நொய்தில் = அதுவும் மிக எளிதாக 

அன்னவை நீக்கவும் = அதனால் வரும் சிக்கலை நீக்கவும்

நோக்குதிர்;= வழி தேடுகிறீர்கள்

உய்திர் போலும்,= நீங்கள் பிழைத்த மாதிரிதான்

உதவி கொன்றீர்?' எனா, = நன்றி கொன்றீர்.

ஒருவர் செய்த நன்றியை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பதை ஒரு அறமாகவே  நம் முன்னவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நன்றி மறவாமையை  பெரிய அறமாகவும், நன்றி மறப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகவும்  நம் முன்னவர்கள் நினைத்தார்கள்.

சுக்ரீவன் மது அருந்தி மறந்திருந்தாலும், அதை வேலை மெனக்கிட்டு கம்பன் சொல்ல  வேண்டிய அவசியம் என்ன ? அதைச் சொல்லாவிட்டால் காப்பியத்தின்  போக்கில் , கதையின் போக்கில் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், கம்பன் அதை குறிப்பாக சொல்கிறான் என்றால், கம்பன் ஏதோ முக்கியமான  ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கிறான் என்று தான் அர்த்தம்.

அந்த முக்கியமான ஒன்று, நன்றி மறவாமை.