Thursday, December 11, 2014

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 


நமக்கு வாய்த்தது மாதிரி குருமார்கள் யாருக்கு வாய்த்து இருக்கிறார்கள் ?

சம்பவாமி யுகே யுகே என்றான் கண்ணன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு நிறைய குருமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

ஏனோ நாம் தான் அவர்கள் சொல்வதை எல்லாம் அறியாமலேயே, அறிந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமலும், வாதம், எதிர்வாதம், குதர்க்கம் பேசியும் அவர்கள் சொன்ன நல்லதையெல்லாம் இழந்து நிற்கிறோம்.

அவர்கள் திருவருள் பெற்றார்கள். பெற்றவரை நல்லது என்று சுயநலத்தோடு இல்லாமல், பின் வரும் சந்ததியினரும் வாழ வேண்டும் என்று அவற்றை சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நம் துர்பாக்கியம், அவற்றை எல்லாம் நாம் அறியாமலேயே போனது.

புதையலின் மேல் அமர்ந்து பிச்சை எடுக்கும் பிச்சைகாரானைப் போல இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் !

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

வழி தவறிப் போய் இருக்கிறார்.

இளைய தலைமுறையினர் பல வழி தெரியாமல் செல்வதைப் போல அவரும் இளமையில் வழி தவறி சென்றிருக்கிறார்.

இறைவன் இல்லை, என்று நாத்திகம் பேசி இருக்கிறார். சிவ நிந்தனை செய்திருக்கிறார்.  தான் பிறந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தில் சேர்ந்து , சமண மத பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

ஏதோ கொஞ்ச காலம் இல்லை...நீண்ட காலம்.

பின் உண்மை உணர்ந்து, மீண்டும் சைவ சமயம் வந்து சேர்கிறார்.

சிவ நிந்தனை செய்த அவருக்கு "திருநாவுக்கரசர்" என்ற பட்டத்தை சிவனே

கொடுத்தான்.

அவர் பாடிய பாடல்களை தேவாரம் என்று சைவ சமயம் கொண்டாடுகிறது.

இன்று அகிம்சை என்பது ஏதோ காந்தி கண்டு பிடித்தது என்று நாம்  நினைக்கிறோம்.

அன்பால், பக்தியால் அரசனை எதிர்த்து வென்றவர் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.

அகிம்சை என்றால் கோழைத்தனம் இல்லை. "யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் " என்று வீர முழக்கம் செய்தவர் அவர்.

இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது " எதுவும் வேண்டி  பக்தி செய்யவில்லை..." என்று இறைவனிடமே சொன்னவர் அவர்.

காதலையும், ஏன் காமத்தையும்  போற்றினார். ஆண் பெண் இன்பத்தின் உயர்வை சிறப்பித்துப் பாடினார்.

வாருங்கள், அவரின் வாழ்க்கையை அறிவோம்.

அவர் சொன்னவற்றை கேட்போம்.

கொட்டிக் கிடக்கிறது செல்வம். அள்ளிக் கொண்டு போங்கள். அள்ள அள்ள குறையாத செல்வம் இது.

திருநாவுகரசைப் பற்றிப் சொல்ல வந்த சேக்கிழார் இப்படி ஆரம்பிக்கிறார்.

உலகில் ஒரு நாவாலும் (ஒருவராலும்) சொல்ல முடியாத புகழ் உடைய அவரைப் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் என்று அடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

பாடல்

திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.

சீர் பிரித்த பின்

திரு நாவுக்கரசு, வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவ முனிவர் வாகீசர், வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  பேருலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 

பொருள்

திரு நாவுக்கரசு, = திரு நாவுக்கரசு

வளர் = வளர்ந்த, வளர்கின்ற, வளரும். இந்த உலகம் அறியாமை, ஆணவம், என்ற சேற்றில் அமிழ்ந்து கிடைக்கிறது. அதில் இருந்து முளைத்து வளர என்பது பொருள். துன்பத்தில், அறியாமையில் கிடந்து மக்கிப் போய் விடாமல், வளரும் படி என்று கொள்க.

திருத் தொண்டின் = சிறந்த திருத் தொண்டின்

நெறி வாழ = வழி முறைகள் வாழ

வரு = வந்த . நெறிகள் வாழ என்று பொருள். இன்னொரு பொருள், அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டிய ஞான தவ முனிவர் என்பது இன்னொரு பொருள். சொல்லுவது எளிது. செய்வது கடினம். அப்பர் அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டினார்.

ஞானத் = ஞானமும்

தவ  = தவமும்

முனிவர் = கொண்ட முனிவர்

வாகீசர், = வாகீசர் (வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முந்திய பிறப்புப்  பெயர்)

வாய்மை திகழ் = வாய்மை திகழ

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  = அவருடைய பெருமையை எல்லோரிடமும் பரப்ப நினைக்கின்றேன்

பேருலகில் = பெரிய உலகில்

ஒரு நாவுக்கு உரை செய்ய = ஒரு நாவாலும் உரை செய்ய

ஒண்ணாமை உணராதேன் = முடியாமையை உணராத நான்





Wednesday, December 10, 2014

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல்

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல் 


எதுதான் நிலையாக இருக்கிறது நம் வாழ்வில்.

நேற்று இருந்தது போல இன்று எது இருக்கிறது.

மனம், அது நொடிக்கு ஒரு தரம் மாறிக் கொண்டிருக்கிறது.

 சுற்றமும்,உறவும்  அப்படியே.

செல்வம் - வரும்,  போகும்.

ஆரோக்கியம் - இன்றிருக்கும், நாளை போகும்.

வாலிபம், இளமை எல்லாம் அப்படித்தான்.

அப்படியென்றால், எது தான் நிலைத்து நிற்கும் ?

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அப்பர்.



நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, 
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, 
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும், 
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”

    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

Tuesday, December 9, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு - பாகம் 2

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு  - பாகம் 2 



மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.


இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

---------------------------பாகம் 2 ----------------------------------------------------------------------------------------------

ஏன் ஒவ்வொரு செயலையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறார்  ? ஒரு வேளை அவற்றிற்கு  ஒரு அழுத்தம் தர நினைத்து அப்படி சொல்லி இருப்பாரா ? அப்படி என்றால் ஒவ்வொரு  வார்த்தைக்கும் அழுத்தம் தர நினைத்து இருப்பாரா ? அல்லது வேறு ஏதாவது காரணம்  இருக்குமா ?

சிந்தித்துப் பார்ப்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நினைந்து நினைந்து = முதலில் எதை நினைக்க வேண்டும் ? பின் எதை நினைக்க வேண்டும் ? 

முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.

இரண்டாவது, இந்த பிரபஞ்சம், இதன் சிருஷ்டி, அதன் தாளம் தவறாத கதி இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகின் லயம் புரியும். ஒரு வேளை,  அதில் இருந்து இறைவனும் புரியலாம். 


உணர்ந்து உணர்ந்து 

உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும்  இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.

நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும். 


நெகிழ்ந்து நெகிழ்ந்து = முதலில் நமக்கு கிடைத்த நல்லவற்றை நினைத்து மனம் நெகிழ வேண்டும். நாம் என்ன செய்து விட்டோம் , நமக்கு இவ்வளவு கிடைத்து இருக்கிறதே என்று மனம் நெகிழ வேண்டும். 

நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று  வித்து என்பார் மணிவாசகர். 

நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே. 

அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர். 

உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும். 


நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்

முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர். 

இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும். 

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். 


உடம்பு நனைந்து நனைந்து= அந்தக் கண்ணீரால் உடம்பு நனைய வேண்டும். உடம்பு நனைந்தால் உடல் குளிரும். உள்ளமும் குளிர வேண்டும். உள்ளத்தில் காமமும், கோபமும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் உடல் குளிர்ந்தாலும் உள்ளம் குளிராது. கண்ணீரால் உடலும் குளிர வேண்டும். உள்ளமும் குளிர வேண்டும். 

மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி சொல்லுகிறார் வள்ளலார்.

Thursday, December 4, 2014

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு

திருஅருட்பா - மரணமில்லா பெருவாழ்வு 


மரணமில்லா வாழ்வு யாருக்குத்தான் வேண்டாம் ? ஆனால் அதை எப்படி அடைவது ?

சத்தியமாக சொல்லுகிறேன், பொய் இல்லை...நிச்சயமாக அப்படி ஒரு மரணம் இல்லா பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார் வள்ளலார்.


பாடல்

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

சீர் பிரித்தபின்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே


பொருள் 

நினைந்து நினைந்து = நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து = உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து = நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே = அன்பே

நிறைந்து நிறைந்து = நிறைந்து நிறைந்து

ஊற்று எழும்  = ஊற்று போல எழும்

கண்ணீர் அதனால் = கண்ணீரினால்

உடம்பு = உடம்பு

நனைந்து நனைந்து = நனைந்து நனைந்து

அருள் அமுதே  = அருள் தரும் அமுதே

நன்னிதியே = நல்ல நிதியே

ஞான = ஞானமாகி

நடத்து அரசே = என்னை நடத்தும் அரசே

என்னுரிமை நாயகனே = என்னை  உரிமையாகக் கொண்ட நாயகனே

என்று  = என்று

வனைந்து வனைந்து  = வனைந்து வனைந்து

ஏத்துதும்= போற்றுங்கள்

நாம் வம்மின் உலகியலீர் = உலகில் உள்ளவர்களே

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் = மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் = இட்டு கட்டி சொல்ல மாட்டேன்

பொய்புகலேன் = பொய் சொல்ல மாட்டேன்

சத்தியஞ் சொல்கின்றேன் = சத்யம் சொல்லுகின்றேன்


பொற் சபையில் = பொற் சபையில்

சிற் சபையில் = சிற்சபையில்

புகும் தருணம் இதுவே = புகும் நேரம் இதுவே

மிக எளிமையான பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தத்தை நாளை பார்ப்போம்.




Wednesday, December 3, 2014

நாலடியார் - நல்ல வழி இல்லை

நாலடியார் - நல்ல வழி இல்லை 


முதுமை நமக்கில்லை என்று நாம் இருக்கிறோம்.

அப்படியே வரும் என்று நினைத்தாலும், அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ணி வைத்து விட்டு, அப்புறம் அதையெல்லாம் செய்யலாம் என்று நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நேரத்தில் இப்படியேவா இருக்கப் போகிறோம் ?

படிக்க வேண்டும் என்று நினைத்தால் - கண் சரியாக இருக்காது.

யாரிடமாவது பேசலாம் என்றால் பேச்சு குழறும்.

சரி, படித்தவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றால் காது கேட்டால் தானே.

எனவே, இளமையிலேயே இது பற்றியெல்லாம் சிந்தித்து இப்போதே முடிவு எடுங்கள்.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள்

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தைகள் கோர்வையாய் வராது. வார்த்தைகளோடு எச்சிலும் வரும். பல் போன பின், சொல் தளரும். குரல் கம்மும்.

கோல்ஊன்றிச் = ஒரு இடத்திற்கு போக முடியாது. நடை எனபது பெரிய விஷயமாகப் போகும்.  கோல் துணையின்றி நடக்க முடியாது

சோர்ந்த நடையினராய்ப் = கொஞ்ச தூரம் நடந்தாலும் சோர்வு வரும்.

பல்கழன்று = பல் விழுந்து

பண்டம் பழிகாறும் = இந்த உடல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகும். "கிழத்துக்கு காது கேட்க்காது...நம்ம உயிரை வாங்குது..."

இல்செறிந்து = இல்லத்தில் இருந்து

காம நெறிபடருங் = காம, ஆசையின் வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே. கண் போன திசை எல்லாம் போனவர்களுக்கு 

ஏம நெறிபடரு மாறு.= மெய் வழியில் செல்லும் வகை

உடலில் வலிமை இருக்கும் போதே நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வோம்



Monday, December 1, 2014

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது 


 இந்தப் பிறவி இன்பமானதா ? துன்பமானதா ?

ஒட்டகம் முள் மரத்தின் இலைகளை  தின்னும்.அப்படி தின்னும் போது , அந்த முள்  மரத்தில் உள்ள முள் தைத்து , ஒட்டகத்தின் உதட்டில் இருந்து இரத்தம் வழியும். அப்படி வழிந்த இரத்தம் ஒட்டகத்தின் வாயில்  சென்று  சேரும். தன் இரத்தத்தை தான் அறியாத ஒட்டகம், இந்த முள் மரத்தின் இலைகள் மிக சுவையாக இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் உதடு கிழிபட தின்னும்.

துன்பத்தை இன்பமாக நினைத்தது அந்த முட்டாள் ஒட்டகம்.

இந்தப் பிறவிக்குத்தான் எத்தனை துன்பம் ? நோயால் துன்பம், நம் மீது அன்பு கொண்டவர்கள் நம்மை பிரிந்தால் துன்பம், வறுமை வந்தால் துன்பம், பழி வந்தால் துன்பம், நினைத்தது கிடைக்கவில்லை என்றால் துன்பம்..இப்படி துன்பத்திற்கு இருப்பிடமாகும் இந்தப் பிறவி.


இந்தப் பிறவி, துன்பத்தின் இருப்பிடம் என்று அறிந்த பெரியவர்களோடு மிக மிக நெருங்கி  பழக வேண்டும்.

பாடல்


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.


சீர் பிரித்த பின்

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.

பொருள்

அடைந்தார்ப் பிரிவும் = நம்மை அடைந்தவர்களின் பிரிவும். பெற்றோரை வெட்டு பிரிவது, காதலன் / காதலி பிரிவது, பிள்ளைகளை பிரிவது, நண்பர்களைப் பிரிவது, என்று பலவிதமான பிரிவு

அரும்பிணியும் = கொடுமையான நோயும்

 கேடும் = மற்ற பலவிதமான துன்பங்களும்

உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் = இந்த உடம்பை கொண்டவர்களுக்கு வருவதால்

தொடங்கிப் = தொடக்கம் முதல்

பிறப்பு இன்னாது என்று உணரும் = இந்த பிறப்பு துன்பம் தருவது என்று உணரும்

பேரறிவினாரை = பெரிய அறிவை கொண்டவர்களை


உறப் புணர்க அம்மா என் நெஞ்சு = மிக நெருங்கிப்  பழகுக, என் நெஞ்சே

கண்டு பிடியுங்கள்...அப்படி யாராவது இருக்கிறார்களா என்று. இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருங்கள்.

 .


தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்


இளையராஜாவின் இனிமையான இசையை கேட்டு மெய் மறக்கிறோம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்த்தானி சங்கீதம், என்று பலவிதமான இசைகளை கேட்கிறோம்.

இந்த இசையின்  பயன் என்ன ?

இந்த இசைகளை கேட்பதால் நமக்கு என்ன கிடைக்கிறது ?

சுந்தரர் சொல்கிறார், இசையும் அதன் பயனும் இறைவனே  என்கிறார்.

அது மட்டும் அல்ல, அவன் இனிய அமுதமாய் இருக்கிறான்.

இறைவனை, நண்பனாகக் கண்டவர் சுந்தரர்.

சுந்தரருக்கு ஏதோ ஒன்று அறியக் கிடைத்து இருக்கிறது. அதை நினைத்து நினைத்து உருகுகிறார். அது வாழ் நாள் பூராவும் இன்பம் தரக் கூடியது என்கிறார்.

பாடல்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை 
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் 
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. 

பொருள்

ஏழிசையாய் =  ஏழிசையாய்

இசைப்பயனாய் = இசையின் பயனாய்

இன்னமுதாய் = இனிய அமுதமாய்

என்னுடைய தோழனுமாய் = என்னுடைய நண்பனுமாய்

என்று = என்று

முன் நீ சொன்ன = முன்பு நீ சொன்ன 

பெருஞ் சொற்பொருளை = பெரிய சொல்லின் பொருளை

ஆழ நினைத்திடில் = ஆழமாக யோசித்தால்

அடியேன் = என்

அருங்கரணம் = அருமையான பொறிகள் எல்லாம்

கரைந்துகரைந் = கரைந்து கரைந்து

தூழியல் = ஊழிக் காலம் வரை

இன்புறுவது காண் = இன்பம் அடைவது காண்

உயர்கருணைப் பெருந்தகையே = உயர்ந்த கருணை கொண்ட பெரியவனே

அவர் அறிந்த அது என்னவாக இருக்கும் ?