Monday, December 29, 2014

குறுந்தொகை - புது நலன் இழந்த

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம். 

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு
 
பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்
 
புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை 

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.


Thursday, December 25, 2014

தேவாரம் - பலர் சிரிக்கும் முன்

தேவாரம் - பலர் சிரிக்கும் முன் 


வாழ்க்கையில் என்னென்னமோ செய்கிறோம். கொஞ்சம் நல்லது, கொஞ்சம் அல்லாதது, கொஞ்சம் பொய், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் காமம்...இப்படி அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கிறோம்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதை அனுபவிக்காமல் விட்டு விட்டுப் போகிறோம்.

 நம்பியவர்கள் கை விட்டு விடுகிறார்கள். நம்பியவர்களை நாம் கை விட்டிருக்கிறோம்.

கூட்டிக் கழித்தால் நம் வாழ்க்கையே ஒரு அர்த்தமற்றதாக, நகைப்புக்கு உரியதாக இருக்கும். இதற்கா இந்த பாடு....இந்த  அலைச்சல் ?

இறந்த பின், இடு காட்டில் பிணத்தை வைத்திருக்கும் போது , சுற்றி நிற்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்....

நம்மைப் பார்த்து அவர்கள் சிரிக்கும் முன் திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

வாழ்வில் எதை எதையோ தேடி அலைகிறோம் . கிடைத்தது கொஞ்சம், கிடைக்காதது நிறைய. கலைந்த கனவுகள், கரைந்த கற்பனைகள், ஏமாந்த எண்ணங்கள்...

இவ்வளவுதானா வாழ்க்கை ?

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


சீர் பிரித்த பின்

அரித்து உற்ற வினையால் அடர்பு உண்டு நீர் 
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் 
சிரித்து உற்று பல பேசப் படா முன்னம் 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே 



பொருள்

அரித்து = அரித்து,

உற்ற வினையால் = செய்த வினையால். நாம் செய்யும் இரு வினைகள் நாளும் நம்மை அரித்து எடுக்கின்றன

அடர்பு உண்டு  = பற்றப் பட்ட

நீர் = நீங்கள்

எரி = தீ

சுற்ற கிடந்தார் என்று = சுற்றி இருக்கக் கிடந்தார் (பிணத்தைச் சுற்றி தீ எரியும் போது )

அயலவர் = மற்றவர்கள்

சிரித்து உற்று = நம்மைப் பார்த்து சிரித்து

பல பேசப் படா முன்னம் = பலவிதமாக பேசும் முன்

திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே  = திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள்.



Wednesday, December 24, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பெண்களை கண்ட இலக்குவன் நிலை 



அழகழகான பெண்கள் புடை சூழ தாரை, இலக்குவன் முன் போய் நிற்கிறாள்.

அப்போது இலக்குவனின் நிலையை கம்பன் சொல்கிறான்.

ஒரு ஆணுக்கு இலக்கணம் வகுக்கிறான்.

முதலில் அவனுடைய கோபம் போயிற்று.

இரண்டாவது, அவர்களை பார்க்காமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.

பார்த்தால் தானே சலனம் வரும்...முதலில் கண்ணை அவர்களை விட்டு வேறு இடம் நோக்குகிறான்.

பின்னர், அவர்களுக்கு நேர் எதிரே நிற்காமல், ஒதுங்கி நிற்கிறான்.

பின்னர், மீண்டும் முகம் திருப்பி அவர்களை பார்க்கவும் அஞ்சினான்.

என்னடா இவன் பெண்களை பார்க்க எதற்கு அஞ்ச வேண்டும், ஒரு வேளை இவன் ஒரு கோழையோ என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அப்படி நின்றவன் "மலை போல் உயர்ந்த தோள்களை" கொண்டவன் என்கிறான் கம்பன்.

பாடல்


ஆர்க்கும் நூபுரங்கள் பேரி,
    அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப,
    மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர,
    முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப்
    பருவரை அனைய தோளான்.

பொருள்

ஆர்க்கும் = விம்மி வரும்

நூபுரங்கள் = மார்பகங்கள்

பேரி = முரசு போல

அல்குலாம் தடம் = இடுப்புப் பகுதி

தேர் சுற்ற = தேர் போல அசைய 

வேல் கண் = வேல் போன்ற கண்கள்

வில் புருவம் = வில் போன்ற புருவம்

போர்ப்ப = போருக்கு வர

மடந்தையர் மிடைந்த போது = பெண்கள் வந்த போது

பேர்க்க  அருஞ்சீற்றம் = மாற்ற முடியாத கோபம்

 பேர = மாறிப் போக

முகம் பெயர்த்து = முகத்தை வேறு இடத்திற்கு மாற்றி - அதாவது பார்வையை மாற்றி

ஒதுங்கி = அவர்களிடம் இருந்து ஒதுங்கி

பின்னர்ப் = மீண்டும்

பார்க்கவும் அஞ்சினான் = பார்க்கவும் அஞ்சினான்

அப் = அந்த

பருவரை  = மலை போன்ற

அனைய தோளான் = பெரிய தோள்களை உடைய (இலக்குவன் )

பெண்களை நேராக பார்க்காமல், அவர்கள் முன்னால் நேருக்கு நேர் நில்லாமல், அவர்களை பார்ப்பது கூட தவறு என்று அஞ்சி விலகி நின்றான்.

இது போன்ற உயர்ந்த கருத்துகளை இளம் வயதில் பையன்களுக்கு சொல்லிக் கொடுத்தால்,  அவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன, எது சரி, எது தவறு என்று  தெரியும்.

பாலியல் கொடுமைகள் குறையும்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அதில் உள்ள உயர்ந்த பாத்திரங்களின்  குணங்களை இரசித்து, அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஒரு சமுதாயம் உருவானால், மிக நன்றாக இருக்கும்.



Monday, December 22, 2014

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை 


பல பெண்கள் மத்தியில் மாட்டிக் கொண்ட ஆண்களுக்குத் தெரியும், அது எவ்வளவு சங்கடமான விஷயம் என்று.

அதிலும், மிக மிக அழகான பெண்கள் மத்தியில் , தனி ஆளாக மாட்டிக் கொண்டால் தெரியும்....

இலக்குவன் அப்படி  மாட்டிக் கொண்டான்.

மிகுந்த கோபத்தோடு வரும் அவன் முன், ஒரு பெண்கள் பட்டாளாமே, ஒரு படையே சென்றது.

வாளும் , வேலும், கொடியும், அசைய, முரசு ஒலிக்க ஒரு பெண் படையே சென்று நின்றது.


வில் போல் வளைந்த உடல், கண்ட நொடியில் இதயத்தை அறுக்கும் கண்கள், பளபளக்கும் அணி கலன்கள் , ஒலி எழுப்பும் மேகலை, வளைந்து நெளியும் புருவங்கள்...

என்ன செய்வான் அவன்....

பாடல்

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

பொருள்

வில்லும் = வில்லும்

வாளும் = வாளும்

அணிதொறும் மின்னிட = ஒவ்வொரு அணிகலனிலும் மின்ன

மெல்  = மென்மையான

அரிக் குரல் = ஆரவாரிக்கும்

மேகலை ஆர்த்து எழ = மேகலை விம்மி எழ

பல் வகைப் = பலவிதமான

புருவக் கொடி = புருவங்கள், கொடி போல

பம்பிட = உயர்ந்து பறக்க

வல்லி ஆயம் = வலிமையான போர்ப் படை போல 

வலத்தினில் வந்ததே. = வலம் வந்ததே



Friday, December 19, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீரைக் கடைந்து 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அமுதம் வந்தது. ஆலகால விஷமும் வந்தது. திருமால், அமுதத்தை தேவர்களுக்குக் கொடுத்தார்.

இது கதை.

நம்பும் படி இருக்கிறதா ? கடலை கடைய முடியுமா ? தண்ணீரைக் கடைந்தால் என்ன கிடைக்கும் ? அதைக் கடைய எவ்வளவு பலம் வேண்டும்....இப்படி ஒரு அர்த்தமில்லா கதையை ஏன் படைத்து இருக்கிறார்கள் ?

பாற்கடல் என்பது நம் வாழ்க்கைதான். இந்த உலகம் தான்.

இதில் உண்மை தேடி (அமுதம்) நாளும் கடைந்து கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் நல்லதும் இருக்கிறது. பொல்லாததும் இருக்கிறது.

நல்லதை (அமுதை) எடுத்துக் கொண்டு அல்லாததை (விஷத்தை ) விட்டு விடவேண்டும்.

இதுவரை நாம் அமுதத்தை கண்டதில்லை. அதனால், அதை நேரில் வந்து யார் தந்தாலும் அது அமுதம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

எப்போதெல்லாம் மனித குலம் நல்லது எது , கெட்டது எது என்று அறியாமல் தவிக்கும் போது பெரியவர்கள் தோன்றி வழி காட்டி இருக்கிறார்கள்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரியார்.

எத்தனை அற நூல்கள், எத்தனை குருமார்கள்....

அமுதை அள்ளி தந்திருக்கிறார்கள்....நாம் தான் அமுதை விட்டு விட்டு வேறு எங்கோ  அலைந்து கொண்டிருக்கிறோம்.....

பாடல்

கூடிநீரைக் கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடு கின்ற நின்தனை
நாடும் வண்ணம்சொல்லாய் நச்சுநா கணையானே!

பொருள்

கூடி = தேவர்களும் , அசுரர்களும் ஒன்றாகக் கூடி (நல்லவர்களும் கெட்டவர்களும் )

நீரைக் கடைந்த வாறும் = கடலை கடைந்து

அமுதம் தேவர் உண்ண = அமுதை தேவர்கள் உண்ண

அசுரரை - அசுரர்களை

வீடும் வண்ணங்களே    =  விட்டுப் போகும்படி (விடுவது வீடு)


செய்துபோன வித்தகமும் = செய்த வித்தகமும்

ஊடு புக்கு = உள்ளே புகுந்து 

எனது ஆவியை உருக்கி = எனது ஆவியை உருக்கி

உண்டிடு கின்ற நின்தனை = உண்ணும் உன்னை

நாடும் வண்ணம் = நான் அடையும் வண்ணம்

சொல்லாய் = சொல்வாய் 

நச்சு நாகணையானே! = நஞ்சை கொண்ட பாம்பணையில் துயில்பவனே


இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


கோபத்தோடு வரும் இலக்குவனை சந்திக்க தாரை தன் தோழிகளோடு செல்கிறாள்.

எப்படி ?

அந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்.....

பாடல்


விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.

பொருள்

விலங்கி = பார்பவரை விலங்கிட்டு, அங்கிங்கு நகர விடாத அழகு

மெல்லியல் = மென்மையானவர்கள்

வெள்நகை = வெண்மையான புன்னகை. பளிசென்ற வெண்மையான பற்கள் தெரியும்படியான புன்னகை

வெள்வளை = வெண்மையான வளையல். சங்கு வளையல்

இலங்கு நுண்ணிடை = விளங்கும் நுண்ணிய இடை

ஏந்து இள மென்முலை = ஏந்திய இளமையான மார்புகள்

குலம்கொள் = நல்ல குலத்தில்  

தோகை மகளிர் குழாத்தினால் = மயில் போன்ற பெண்களின் கூட்டத்தினால்

வலம்கொள் வீதி  = வலம் வரும் வீதியின்

நெடுவழி மாற்றினாள் = இலக்குவன் வரும் வழியை மாற்றினாள், தடுத்தாள்

ஆணின் கோபத்தை, மூர்கத்தை மாற்றும் இயல்பு பெண்மைக்கு உண்டு. அனுமனோ, அங்கதனோ சென்றிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும்.

இலக்குவன் பெண்ணிடம் வீரத்தை காண்பிக்க மாட்டான். அவன் கோபம் மட்டுப் படும்  என்று நினைத்து அனுமன் தாரையை அனுப்பினான்.

பின் வரும் பாடல்களில் தாரையின் பேச்சு சாதுரியத்தை, இலக்குவனின் மிக உயர்ந்த ஒழுக்கத்தை காட்டுகிறான் கம்பன்.

பார்ப்போம்.




Wednesday, December 17, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை

இராமாயணம் - தாரையின் ஆளுமை 


சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன், சொன்ன சொல்லை மறந்து, போதையில் மிதந்தான்.

அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான்.

இலக்குவன் மிகுந்த கோபத்தோடு வருகிறான். கோட்டை மதிலை கற்களை கொண்டு குரங்குகள் அடைத்தன. இலக்குவன், அவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு வருகிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.

அப்போது, அனுமன் "தாரை அவன் முன் சென்று நின்றால், அவன் கோபம் மாறும் " என்றான்.

அதைக் கேட்ட தாரை

"நீங்க எல்லாம் விலகுங்கள். நான் போய் இலக்குவனை சந்தித்து அவன் மன நிலை என்ன என்று அறிந்து வருகிறேன் " என்று கிளம்பினாள் . அவளுக்கு வழி விட்டு எல்லோரும் விலகி நின்றனர்.

ஒரு அரசியல் திருப்பத்திற்கு , தாரை வழி வகுக்கிறாள். இத்தனை ஆண்பிள்ளைகள் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் . தானே நேரில் சென்றால்தான், இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று முடிவு செய்து, "நீங்க எல்லோரும் தள்ளுங்கள்..நான் போகிறேன் " என்று கிளம்புகிறாள்.

ஒரு பெண்ணின் தைரியம், அவளின் தன்னம்பிக்கை, ஆளுமை வியக்க வைக்க வைக்கிறது.

பாடல்

'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான்,
வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும்,
பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத்
தாரை சென்றனள், தாழ் குழலாரொடும்.

பொருள்

'நீர் எலாம் = நீங்கள் எல்லாம் (அனுமன், அங்கதன் எல்லோரும்)

அயல் நீங்குமின் = நீங்கிப் போங்கள்

நேர்ந்து , யான் = நான் சென்று

வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும் = வீரனாகிய இலக்குவனின் உள்ளத்தை விசாரிக்கிறேன்

பேர நின்றனர் = எல்லோரும் விலகி நின்றனர்

யாவரும் = எல்லோரும்

பேர்கலாத் = நல்ல நெறிகளில் இருந்து பெயராத, விலகாத

தாரை சென்றனள் = தாரை சென்றாள்

தாழ் குழலாரொடும் = தன் தோழியரோடு

யோசித்துப் பார்ப்போம்.

தன் கணவனை, இராமனின் துணையோடு, வஞ்சகமாக கொன்றவன் சுக்ரீவன்.

அவனுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

தாரை நினைத்திருந்தால் "நல்லா வேண்டும்...என் கணவனை கொன்றவன் இப்போது  வகையாக மாட்டிக் கொண்டான். இலக்குவன் அவனை கொல்லட்டும் , என் மகனுக்கு ஒரு வேளை ஆட்சி கிடைக்கலாம் " என்று நினைத்து இருக்கலாம்.

கணவனை கொன்றவன் மேலும் கருணை.

கணவனை கொன்றது மட்டும் அல்ல, மகனுக்கு ஆட்சி கிடைக்காமல் செய்தவன்.

அப்படிப் பட்ட சுக்ரீவன் மேலும் கருணை கொள்கிறாள் தாரை.

மேலும் உயிர் சேதம் விளைவதை அவள் விரும்பவில்லை.

குடும்பச் சண்டையில்  மற்றவர்கள் பாதிக்கப்  கூடாது என்று நினைக்கிறாள்.

பிரச்சனையை தீர்க்க தானே முனைகிறாள்.

அவளின் பெரிய மனதை நாம் கண்டு வியக்கிறோம்.

இப்படிப் பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

வீரமும், அறிவும்,  விவேகமும்,பரந்த மனமும், கருணையும் கலந்து அற்புத பிறவிகளாக இருந்திருக்கிறார்கள்.

வருங்காலப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக தாரையைப் படைக்கிறான் கம்பன்.