Saturday, February 28, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை 


குள்ளச்சாமி மூன்று பொருள்களை பாரதிக்கு காட்டினான்.

குட்டிச் சுவர்
சூரியன்
கிணற்றில் சூரியனின் நிழல்
அவ்வளவுதான் உபதேசம். புரிந்ததா என்று  கேட்டார்,பாரதியும் புரிந்தது என்றார். குள்ளச் சாமி சந்தோஷமாக போய்  விட்டார்.

நாம் தான் மண்டை காய்கிறோம்.

நம் நிலை தெரிந்து பாரதி அதை  விளக்குகிறார்.

குரு சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது என்று ஒரு விதி உண்டு. காரணம், சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும்.

தகுதி இல்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அவன் உபதேசத்தை கீழ்மை படுத்துவான்.

ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு இயற்பியலின் உயர் விதிகளை சொல்லிக் கொடுத்தால் அவன் அதைக் கேட்டுச் சிரிப்பான். தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி அதை ஏளனம் செய்வான். அவனுக்குப் புரியவில்லை என்பது அவனுக்குப் புரியாது. ஏதோ நகைச்சுவை என்று நினைத்து ஏளனம் செய்வான்.

எனவேதான், தகுதி இல்லாதவர்களுக்கு உயர்ந்த விஷயங்களை  சொல்லித் கூடாது என்று வைத்தார்கள்.

இந்த நாட்டில் கம்ப இராமயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதன் உயர்வு புரியாதவர்கள் நினைத்த தவறு அது.


முதன் முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார்.தான் அறிந்த உண்மையை எல்லோரும் அடைய வேண்டும் என்று கோவில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.   சீடன் யார் என்றே தெரியாமல் உபதேசம் செய்தார்.

அடுத்து பாரதியார், தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொல்லிச்  செல்கிறார்.



தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;


தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன்.

ஏன் சொல்ல வேண்டும் ? தனக்கு கிடைத்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது தானே ? அதுதான் அவரின் பெரிய உள்ளம்.



“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி ?  வாசி என்றால் சுவாசம்.

நாம் உயிர் வாழ்வது, சிந்தனை செய்வது, செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. மூச்சு நின்றால் எல்லாம் அடங்கி விடும்.

இந்த மூச்சு மூன்று விதமாக  வெளிப்படும்.

இடது நாசியின்  வழியே ஓடும் மூச் சந்திரக் கலை எனப்படும்.
வலது நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் கலை எனப்படும்
இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை எனப்படும்.

சுவாசம் இடது நாடியில் ஓடும் போது என்ன செய்ய வேண்டும், வலது நாடியில் ஓடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள். இரண்டு நாடியிலும் ஓடும் போது செய்யக் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குள்ளச் சாமி சொன்ன செய்தி "சுவாசத்தை கட்டுப் படுத்தி, மண் போல சுவர் போல வாழ வேண்டும்"

அது என்ன மண் போல சுவர் போல வாழ வேண்டும்.

மண்  இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டியது சுவர். சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். சுவரை இடித்தாலும் மண் அப்படியே தான் இருக்கும்.

மண்ணிற்கு என்ன இயல்பு - பரவுவது. குவித்து வைத்தாலும் நாளடைவில் தானே பரவி விடும்.

என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி  என்கிறார்.

உலகில் உள்ள பொருள்கள்,  இன்பங்கள், உறவுகள் எல்லாம் மறையும் இயல்பு  உடையன. மண் எது சுவர் எது என்று கண்டு வாழ் என்பது இரண்டாவது உபதேசம். (மூச்சுப் பழக்கம் முதல் உபதேசம் )



தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;

இது மூன்றாவது உபதேசம். ஒளி உடைய சூரியனை கிணற்றுக்குள்ளே பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய்.

இறைவன் மிகப் பெரியவன். அவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும். இந்த உயிர்கள் நேற்று  தோன்றி,இன்று இருந்து, நாளை போபவை. இதற்குள்  எப்படி அனாதியான இறை சக்தி இருக்க முடியும் ?

அதை விளக்குகிறார் குள்ளச் சாமி.

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோ இருப்பது. கிட்ட போக முடியாது. ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும்.

கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

எந்த கிணற்றில் ? சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம்  தெரியும்.பாழடைந்த வீட்டின் கொல்லையில் உள்ள கிணற்றில் சலனம் இல்லை. அதில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

அது போல, நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும். ஆசை, கோபம், காமம் என்று பலப் பல சலனங்கள். எங்கே சிவனைக் காண்பது.

சரி இதை எல்லாம் ஏன் குள்ளச் சாமி தெளிவாக சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் நமக்கு சந்தேகம் வராது இல்லையா ?

அதைத்தான் அடுத்த வரியில் சொல்கிறார் பாரதியார் ...


பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

பேசுவதில் பயனில்லை. 

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு நிற்க வேண்டும். 

கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும்.

மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றால்  மணிவாசகர்.

"சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார். 

படிப்பது,  கேட்பதும், பேசுவதும், கேட்பதும் நின்று ...அனுபவத்தால் அறிய வேண்டும். 

அதுவே ஞானம் என்கிறார் பாரதி. 

உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ?

உண்மையை நேரடியாக உணருங்கள். 



Friday, February 27, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் 


குள்ளச் சாமியை துரத்திக் கொண்டு வந்த பாரதி அவரை அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தில் மடக்கிப் பிடித்தார்.

சரி இவன் நம்மை விடமாட்டான் போல் இருக்கிறது என்று அறிந்த கொண்ட அந்த குள்ளச் சாமி, இவன் ஒரு நல்ல சீடன்...இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்று உபதேசம்  செய்கிறார்.

அருகில் இருந்த குட்டிச் சுவரைக் காட்டினார், பின் சூரியனைக் காட்டினார், அப்புறம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து அந்த சூரியனின் நிழலைக் காட்டினார்...இந்த மூன்றையும் காட்டி விட்டு "என்ன புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரிந்தது " என்றார் பாரதி.

குள்ளச்சாமியும் மகிழ்வுடன் சென்று விட்டார்.

வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் என்கிறார் பாரதி.

பாடல்

குள்ளச் சாமியும் சந்தோஷமாக 
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

சரி, இது என்ன உபதேசம் ?

குட்டிச் சுவர், சூரியன், பழைய கிணறு...இந்த மூன்றையும் காட்டி  என்ன புரிந்ததா  என்று கேட்டார், பாரதியும் புரிந்தது என்றார். மொத்தம் அவ்வளவுதான் உபதேசம்.

நமக்கு ஏதாவது புரிகிறதா.

தலை சுற்றுகிறது அல்லவா ?

பாரதி இந்த மூன்றின் விளக்கம் தருகிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளக்கம்.

பாரதியின் அறிவின் வீச்சை நாம் அறிந்து கொள்ள உதவும் பாடல்.

எவ்வளவு பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் பெருமை அறியாமல் இருக்கிறோம்.

பாரதியின் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


திருக்குறள் - பொறாமை என்ற பாவி

திருக்குறள் - பொறாமை என்ற பாவி 


பொறாமை என்ற ,ஒரு பாவி , நம் செல்வத்தை அழித்து நம்மை  நரகத்தில் செலுத்தி விடும்.



பாடல்

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

பொருள்

அழுக்காறு = பொறாமை

என ஒரு = என்ற ஒரு

பாவி = பாவி

திருச் செற்று = செல்வத்தை அழித்து

தீயுழி = தீக் குழியான நரகத்தில்

உய்த்துவிடும் = செலுத்தி விடும்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான்.

மிக மிக ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் . சற்றே விரிவாகப் பாப்போம்.

பொறாமை என்றால் என்ன ?

மற்றவர்கள் பெற்றதைக் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இன்மை.

மனிதனுக்கு எத்தனையோ கெட்ட குணங்கள் உண்டு - காமம், கோபம், லோபம், சோம்பேறித்தனம், பொய்மை என்று எவ்வளவோ இருக்கும் போது  ஏன்  பொறாமையை மட்டும் வள்ளுவர் இப்படி சொல்லுகிறார் ?

மற்ற குணங்கள் வரும், சற்று நேரத்தில் போய் விடும். நேரத்தில் அல்லது காலத்தில்  போய் விடும்.

பொறாமை என்ற தீக் குணம் வந்து விட்டால் அது போகவே போகாது.

கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் ?

காமம் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் ?

எவ்வளவு நேரம் பொய் செல்ல முடியும் ?

ஆனால் பொறாமை வந்து விட்டால் அது போகவே போகாது. இரவு படுக்கையிலும்  வந்து தூக்கத்திலும் அரிக்கும். அவனுக்கு அவ்வளவு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று தூங்க விடாது.

அது மட்டும் அல்ல,

ஒரு தீயவனோடு நாம் உறவு கொண்டால் என்ன ஆகும் ? முதலில் நம்மை அவன் தீய  வழியில் செலுத்துவான். அவன் வழியில் போய் நாம் நம் செல்வங்களை இழப்போம்.  செல்வத்தை இழந்த பின் பயம் வரும், எதிர் காலம் பற்றி, பணம் இல்லாவிட்டால் என்ன ஆவோம் என்ற பயத்தில் அந்த செல்வத்தை  எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்போம், எந்த வழியானாலும்   சரி, விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று மேலும் பல தீய வழியில் முயன்று பாவங்களைச் செய்து மறுமைக்கும் பாவம் தேடிக் கொள்வோம்.

அது  போல,பொறாமை வந்து விட்டால்,


மற்றவனை விட நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும்,  செல்வம் சேர்க்க வேண்டும், நம் பிள்ளையை உயர்த்த வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை சிந்திப்போம், தவறான பாதையில் போனால் செல்வம் அழியும். அது மேலும்  பொறாமைக்கு  வித்திடும்...தவறான பாதை போய் தீய பாதையில் போகத் தலைப் படுவோம்....இலஞ்சம் கொடுக்கலாமா, அவனை எப்படி கவுக்கலாம் என்று மனம் கணக்கு போடும், அவனைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம்  பேசச் சொல்லும், அவனுக்கு வரும் நல்ல  பெயரை, வாழ்வை தடுக்க திட்டம்   போடும்....அதக்காக செலவு செய்யும் மனம்.

பணம் போகும்

தவறான  செய்ததால் பாவம் வந்து சேரும்....அதனால் நரகம் கிடைக்கும்.

நரகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை, இந்த வாழ்கையே தீயில் கிடந்து  கருகுவதைப் போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாவியைக் கண்டால் எப்படி நாம் பயந்து விலகுவோமோ அப்படி பொறாமையைக் கண்டு  விலக வேண்டும்.

எல்லோரும் பாவியைக் கண்டு விலகினால் அந்த பாவி எப்படி உயர்வான் என்று கேட்டு  அந்த பாவியோடு சகவாசம் வைத்து கொள்பவர்கள் வைத்துக் கொள்ளட்டும்.

நீங்கள் சுகப் படவேண்டும் என்றால், தீயவர்களை விட்டு விலகுங்கள்.

அதே போல பொறாமை என்ற குணத்தையும் விட்டு விலகி இருங்கள்.

பொறாமை வந்து விட்டால் இருக்கும் செல்வமும் போய் , நரகமும் வந்து சேரும்.

சரி, இந்த பொறாமை வாராமல் எப்படி நம்மை காத்துக் கொள்வது ?

அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர்.





Thursday, February 26, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4


பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், ஒரு நாள் தெருவில் , ஞானியைப் போல தோன்றும் ஒரு குள்ள மனிதனைக்  கண்டார்.ஏனோ அந்த மனிதனின் மேல் பாரதியாருக்கு ஒரு ஈர்ப்பு.

அந்த குள்ளச் சாமியின் கையை பற்றிக் கொண்டு "நீ யார் " என்று கேட்டார்.

அப்போது அந்த குள்ளச் சாமி, பாரதியின் கையை உதறி விட்டு ஓட்டம் பிடித்தான். பாரதியும்  விடவில்லை.அந்த குள்ளச் சாமியின் பின்னாலேயே  ஓடுகிறார்.

இரண்டு பெரிய ஞானிகள் செய்யும் வேலையா இது என்று நமக்கு வியப்பு வரும்.

ஓடிய குள்ளச் சாமி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தை அடைந்தான்.  பாரதியும்  அங்கே சென்று அந்த குள்ளச் சாமியை மடக்கிப் பிடித்தான்.

பாடல்


பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்

பொருள்

பற்றிய கை திருகி அந்த குள்ளச் சாமி , பரிந்தோடப் பார்த்தான், நான் விடவே இல்லை.

சுற்று முற்றும் பாத்து, பின் புன் முறுவல் பூத்தான் அந்த குள்ளச் சாமி.

அவனுடைய தூய்மையான தாமரை போன்ற இரண்டு பாதங்களைக் கண்டேன்.
குற்றம் இல்லாத அந்தக் குள்ளச் சாமியும், கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த வீட்டின் கொல்லைப் புரத்தை அடைந்தான்.

அவன் பின்னே நான் ஓடிச் சென்று அவனை மறித்துக் கொண்டேன்

......


அதன் பின் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

குள்ளச் சாமி பாரதிக்கு ஞான உபதேசம்  செய்தான்.

என்னென்ன செய்திகள் சொல்லி இருப்பார், எவ்வளவு நேரம் சொல்லி இருப்பார்,  வேதம், புராணம், இதிகாசம் இவற்றில் இருந்து எல்லாம் எடுத்து அறங்களை  சொல்லி இருப்பார் இல்லையா ?

சிந்தித்துக் கொண்டிருங்கள்...

குள்ளச் சாமி என்ன சொன்னார் என்று நாளை பார்ப்போம்....


திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?


எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.

ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ?  அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?

மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.

சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.

(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)

இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.

அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.  அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று  கேட்கிறார்.

பாடல்

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


பொருள்

உத்தமன் = உயர்ந்தவன்

அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்

உடையான் = உடையவன்

அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி

மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு

`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று

மன நினைவில் = மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட

ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து

எவரும் = எல்லோரும்

தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச

எஞ்ஞான்று கொல் = எப்போது

சாவதுவே? = இறப்பது ?


இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது. 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி. 

உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அந்த களிப்பில் ஏதேதோ  சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள். 

ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை. 

இருந்து என்ன செய்ய ?

எப்போது இறப்பது என்று வினவுகிறார். 

இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது. 

உரையைப் படித்த பின்,  அதை மறந்து விடுங்கள். 

நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.  

மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம். 

 

Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3


பாரதியார், அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீ யார்" என்று கேட்கிறார்.

பாடல்

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பொருள்

நீ யார். உனக்கு உள்ள திறமை என்ன ? நீ என்ன உணர்வாய் ? ஏன் கந்தை சுற்றி திரிகிறாய் ? தேவனைப் போல ஏன் விழிக்கிறாய் ? சின்ன பையன்களோடும் நாய்களோடும்  ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் ? புத்தனைப் போல இருக்கிறாயே நீ யார் ? பரம சிவன் போல இருக்கிறாய் ....ஆவலோடு நிற்கிறாய் ....நீ அறிந்தது எல்லாம் எனக்கு உணரத்த வேண்டும்

என்று பாரதியார் அவனை வேண்டுகிறார்.

நாம் அறிவை சேர்ப்பது பொருள் தேட, சுகம் தேட, மேலும் அறிவைத் தேட.

நம் அறிவை நாம் எதற்கு உபயோகப் படுத்துகிறோம் ?

யாருக்கோ பயன் படுத்துகிறோம்.  அவர் நமக்கு சம்பளம் தருகிறார். நாம் படித்தது  அத்தனையும் பொருள் தேடவே சென்று விடுகிறது. பொருள் தேடுவதைத் தவிர   வேறு ஏதாவது நாம் செய்கிறோமா நம் அறிவை வைத்து.

குள்ளச் சாமி, பெரிய ஞானி. பாரதி குரு என்று ஏற்றுக் கொண்ட ஞானி. அவர் கந்தை  கட்டி அலைகிறார்.

பெரிய ஆட்களோடு சகவாசம் இல்லை....சின்னப் பையன்களோடும், நாய்களோடும்  விளையாடுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடு ! பொருள் மேல் பற்று இல்லை. அறிவின் மேல் பற்று இல்லை.  உறவுகளின் மேல் பற்று இல்லை. ஒரே விளையாட்டு தான்...