Wednesday, April 29, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.



Sunday, April 26, 2015

வில்லி பாரதம் - கோபமும் தவமே

வில்லி பாரதம் - கோபமும் தவமே 


தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது.

யோகம் என்பது இணைவது. சேர்ப்பது.

நாம் பிரிந்து , சிதைந்து கிடக்கிறோம்.

மனம் ஆயிரம் துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது சரியில்லை, இது முடியாது, அதை செய்யலாம் ஆனால் உலகம் ஒத்துக் கொள்ளுமா என்று மனம் ஆயிரம் துண்டுகளாய் இருக்கிறது.

மனமும் உடலும் பிரிந்து கிடக்கிறது.

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடிகிறதா ? செய்ய முடிகிறதா  ?

மனம் ஒரு புறம் இழுக்கிறது ...உடல் இன்னொரு புறம் இழுக்கிறது ...கிடந்து அலைகிறோம் .

ஒன்றாகச் சேர்ப்பது தவம், யோகம்.

கோபமும் ஒரு விதத்தில் தவம் தான்.

முழுமையாகச் செய்தால் எதுவும் தவம் தான்...

கோபம் உள்ளவன் தன்னை மறக்கிறான்...

கோபம் தணிந்த பின் "நானா அப்படிச் சொன்னேன் ? நானா அப்படி செய்தேன்  " என்று வியந்து கேட்கிறான். அவன் செய்யவில்லை என்றால் யார் செய்தது...

நான் இல்லாத இடம் அது.

கோபம் மட்டும்தான் இருக்கும். தன்னை மறந்த இடம்.

மகாவீரர் , கோபமும் ஒரு வித தியானம் என்று கூறுகிறார்.

கோபம் வரும் போது "இது சரி இல்லை, நான் கோபப் படக் கூடாது" என்று நீங்கள் இடையில் வராதீர்கள்.

கோபம் மட்டுமே  இருக்கட்டும்.

பாரத்தில் துருவாசர் என்று ஒரு முனிவர் இருந்தார். கோபத்திற்கு  .பெயர் போனவர்.

கோபம் வந்தால் உடனே சாபம் தான். அவர் கோபத்திற்கு எல்லோரும்  பயந்தார்கள்.

அவருக்கு கோபமே ஒரு தவம்.

 கோபத்திலும், சாபத்திலும் அவர் தவம்  வளரும்.

ஒரு நாள் அவரை துரியோதனன் சந்தித்து ,  உபசரித்தான். அப்போது அவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் "

"எனக்கு என்ன வேண்டும்...நீங்கள் இங்கு வந்து என்னை மகிழ்வித்தது போல  பாண்டவர்களையும்  மகிழ்விக்க வேண்டும் " என்று கேட்டான்.

பாண்டவர்கள் துர்வாசரை உபசரிக்க முடியாமல் அவரின் கோபத்திற்கு ஆளானாவர்கள்...துர்வாசர் சபிப்பார் என்பது அவன் எண்ணம்.

துர்வாசர் பாண்டவர்கள் கானகத்தில் இருக்கும் இடத்திற்கு வருகிறார். ....

பாடல்    

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும், 
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன், 
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ, 
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான், 
                           அந்த அடவியின்வாய்.


பொருள்

சாபத்தாலும் = சாபம் தருவதினாலும்

சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும் = சாபம் தருவதினால் வரும் தவத்தாலும்


கோபத்தாலும் = கோபத்தாலும்

பேர் படைத்த = பெயர் பெற்ற

கொடிய முனிவன் துருவாசன் = முனிவனான துருவாசன்

தீபத்தால் மெய் வகுத்தனையான் =  தீபத்தால் செய்த உடல் போன்றவன். உடல் தீபம் போல ஜொலிக்கும். கோபம் என்ற தீயால் உடல் ஜொலிக்கும். கோபாக்கினி.

திகழ் = புகழ் பெற்ற

பல் முனிவர் புடை சூழ = பல முனிவர்கள் புடை சூழ

ஆபத்தால் வந்து அடைந்தவர்போல் = ஆபத்து வந்தது போல

அடைந்தான் = அடைந்தான்

அந்த அடவியின்வாய் = அந்த காட்டுக்கு (பாண்டவர்கள் இருக்கும் கானகத்திற்கு)

தன்னை மறக்கும் எதுவும் தவம்தான்....

பக்தியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கலவியாக இருந்தாலும்...கோபமாக  இருந்தாலும்.

பாரதத்தில் இப்படி ஆயிரம் இருக்கிறது....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.





Saturday, April 25, 2015

பட்டினத்தார் - கடவுள் நாள்

பட்டினத்தார் - கடவுள் நாள் 


சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்டு விடும்...அப்படி ஒரு பிரயோகம் "கடவுள் நாள்".

கடவுள் நாள் என்றால் என்ன ? கடவுளைப் போல உயர்ந்த நாள்...

எந்த நாள் ?

காலம் கடவுள் போன்றது.

மிக உயர்ந்தது. கிடைக்காது. அருமையானது.

அந்தக் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் ?

ஏதோ அது நம்மிடம் மிக மிக அதிகமாக இருப்பது போல, அதை அனாவசியமாக செலவு செய்கிறோம்.

மீண்டும் மீண்டும் அதே இட்லி, தோசை, அரிசிச் சோறு, உப்புமா, காபி, டீ என்று சாப்பிடதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ....

அதே சட்டை, சேலை, சுடிதார் என்று போட்ட உடைகளையே மீண்டும் மீண்டும் போட்டு

திருப்பி திருப்பி அதே பேச்சு, அரட்டை, பொய்கள்...

அதே வீடு, அதே அலுவலகம், அதே பிள்ளைகள், அதே கணவன், மனைவி என்று அவர்களையே திருப்பி திருப்பி பார்த்து, அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கேட்டு ....

இப்படி நம் வாழ்வில் நடப்பது எல்லாம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதில் புதியதாய் என்ன இருக்கிறது...ஏதோ ஒன்றிரண்டு புதியதாய் இருக்கலாம் நாளடைவில் அதுவும் இதே சக்கரத்துக்குள் வந்து விடும்....

சலிப்பு வரவில்லையா ?

எத்தனை நாள் இதையே செய்து கொண்டு இருப்பது ?

எப்போது இதில் சலிப்பு வந்து இதை விடுவது ?

காலம் கடவுள் போன்றது...அதை இப்படி வீணடிக்கலாமா ?


பாடல்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்


பொருள்


இத்தனை நாளும் செய்ததையே செய்து, செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து வாழ் நாளை எல்லாம்   வீணாக்கி விட்டேனே என்று வருந்துகிறார் பட்டினத்தார்....

நாம் என்ன செய்தோம் என்று நாமும் யோசிப்போமே....


Monday, April 20, 2015

வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்

வில்லி பாரதம் -  பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் 


நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது.

அஸ்வமேத யாகம் முடிந்தபின் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

எல்லோரும் கண்ணனுக்கே என்று கூறினார்கள் - சிசுபாலனைத் தவிர.

சிசுபாலன் கண்ணனுக்கு முதல் மரியாதை தரக் கூடாது என்று கூறி வாதாடுகிறான்.

ஒரு தாய் போல முலைப் பால் தர வந்த பூதனை என்ற அரக்கியை இரக்கம் இல்லாமல் கொன்றவன் கண்ணன். பால், நெய், வெண்ணை முதலியவைகளை திருடித் தின்றவன் கண்ணன். அதற்காக உரலில் கட்டுண்டு அழுதவன் கண்ணன். அவனுக்கா முதல் மரியாதை என்று வெகுண்டு எழுகிறான்.

பாடல்

'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
                               தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
                                உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
                                நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
                                இருந்து அழுதான்!


(http://interestingtamilpoems.blogspot.in/2015/04/blog-post_31.html)

பொருள்

'ஈன்ற = பெற்ற

தாய் = தாயின்

வடிவம் கொண்டு = வடிவம் கொண்டு

உளம் உருகி = உள்ளம் உருகி

இணை = இணையான

முலைத் தடத்து அணைத்து = மார்போடு அனைத்து

அமுதம் போன்ற பால் கொடுப்ப = அமுதம் போன்ற பால் கொடுக்க முனைந்த போது

பொழி முலைப் பாலோ = பொழிந்த முலைப் பாலோடு

பூதனை = பூதனை என்ற அரக்கியின்

உயிர்கொலோ, நுகர்ந்தான் = உயிரையும் சேர்த்து உறிஞ்சினான்

சான்ற பேர் உரலால் = பெரிய உரலால்

உறிதொறும் = உறிகள் தோறும்

எட்டாத் தயிருடன் = எட்டாத தயிருடன்

நறு நெய் = நல்ல நெய்

பால்  = பால்

அருந்தி = அருந்தி

ஆன்ற தாய் = சிறந்த தாயான யசோதை

கண்டு = கண்டு வருந்தி

வடத்தினின் பிணிப்ப = கயிறால் கட்ட

அணி உரலுடன் = உரலுடன்

இருந்து அழுதான்! = இருந்து அழுதான்


உலகளந்த பெருமாள் , சிசுபாலன் கண்ணுக்கு, திருடனாகத் தெரிந்தார்.

உலகம் அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

ஆணவம் தலைக்கு ஏறினால் அருகில் உள்ள ஆண்டவன் கூடத் தெரியாது.


பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி

பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி 


வெளி ஊரில் உள்ள உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் இருக்கிறீர்கள். நண்பர் வசதியானவர். நன்றாக உபசரித்து, உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார். இரவு வருகிறது. உங்களுக்கு என்று ஒரு தனி அறை தந்து "எங்கே படுத்துக் கொள்ளுங்கள்.  A C இருக்கிறது. இங்கே தண்ணி இருக்கிறது..." என்று எல்லாம்  எடுத்து வைத்துவிட்டு போகிறார். நீங்களும் பயணக் களைப்பு, உண்ட மயக்கம் 'அப்பாட' என்று நிம்மதியாக படுக்கிறீர்கள்.

சிறிது நேரத்தில் நண்பர் வந்து "ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...இராத்திரி ஒரு பத்து பதினொரு மணிக்கு ஒரு ஆறடி நீள கரிய நாகப் பாம்பு ஒண்ணு இந்த ஜன்னல் வழியா வந்து அந்த ஜன்னல் வழியா போயிரும். உங்களை ஒண்ணும் செய்யாது...நீங்க பாட்டுக்கு தூங்குங்க" என்று சொல்லி விட்டுப் போகிறார்.

அப்புறம் தூக்கம் வருமா ? எப்போ பாம்பு வருமோ, என்ன செய்யுமோ என்று நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ளும் அல்லவா ? களைப்பு போயிரும், தூக்கம் போயிரும்....பயம் மட்டுமே இருக்கும்.

அது போல, இந்த வாழ்கை.

எல்லா சுகமும் இருக்கிறது...உணவு, உடை, மனைவி , மக்கள், நண்பர்கள், உறவு, சொத்து சுகம் எல்லாம் இருக்கிறது...புலன் இன்பம் அல்லது ஆசை என்ற பாம்பு அப்பப்ப வந்து போகும்...மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை....

இன்பங்களை அனுபவிக்க முடியுமா ? பாம்போடு வாழ முடியுமா ?

வேண்டாம்ப்பா இந்த பிறவி ...போதும்,  பட்டது எல்லாம் போதும், இனி ஒரு பிறவி  வேண்டாம் என்கிறார்  திருமங்கையாழ்வார்.

பாடல்


தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.

பொருள்


தூங்கார் = சஞ்சலம் மிக்க

பிறவிக்க ளின்னம்= பிறவிகளில் இன்னும் 

புகப்பெய்து = நுழைய வைத்து

வாங்காயென்று = என்னை நீ வாங்கிக் கொள்ள மாட்டாய் என்று

சிந்தித்து = நினைத்து

நானதற் கஞ்சி = நான் அதற்கு அஞ்சி

பாம்போடு = பாம்போடு

ஒரு கூ ரையிலே = ஒரே கூரையின் கீழ் (வீட்டில் )

பயின்றாற்போல் = வசித்தார் போல

தாங்காதுள் ளம்தள்ளும்  = என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது

என் தாமரைக் கண்ணா.= தாமரை போன்ற கண்களை உடையவனே


தூங்கும்போது பாம்பு வரும் என்று தெரிந்தும் தூங்குபவர்களை  என்ன செய்ய முடியும் ?


Saturday, April 18, 2015

பிரபந்தம் - வா போ வா

பிரபந்தம் - வா போ வா 


வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது , அவர்களை அவ்வபோது கூப்பிட்டு ஏதாவது கேட்போம், சொல்வோம். குழந்தைகள், வீட்டின் வெறுமையை போக்குவார்கள். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சத்தம் இருக்கும், அதைக் காணோம், இதைக் காணோம் என்று தேடுவதும், கண்டு பிடித்தபின் மகிழ்வதும் நிகழும்.

அவர்களின் இருப்பின் அருமை எப்போது தெரியும் என்றால் அவர்கள் மேல் படிப்புக்காக, அல்லது திருமணம் முடித்து வீட்டை விட்டு போன பின் தெரியும். வீடு வெறுமையாக இருக்கும்.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள், அவர்களின் சத்தம், அவர்களுக்கு பிடித்த உணவு என்று எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அவர்கள் வீட்டை விட்டுப் போகப் போகிறார்கள் என்று தெரிந்த பின் அவர்கள் மேல் பாசம் மிக அதிகமாகும். இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கப் போகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும்.

அது மட்டும் அல்ல, அவர்கள் புது இடத்துக்குப் போய் எப்படி சமாளிப்பார்களோ, உணவு எப்படி இருக்குமோ, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்களோ , என்றெலாம் நம் பிள்ளைகளைப் பற்றிப் கவலைப் படுவோம் அல்லவா ?


இராமன் கானகம் போகப் போகிறான். தசரதனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

இராமன் மாளிகையில்  இருக்கும் போது ஒரு நிமிடம் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியாது  தசரதனுக்கு.  உடனே அவனை "வா" என்று கூப்பிடுவான். இராமன் வந்து "என்ன " என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் கூப்பிட்டேன், சரி நீ போ " என்பான். இராமன் போக ஆரம்பித்து கொஞ்ச தூரம் போன பின் "ஒரு நிமிஷம், இங்க வந்துட்டுப் போ " என்பான் . இராமனை பார்க்காமல் தசரதானால் ஒரு நிமிடம் இருக்க முடியாது.



புலம்புகிறான் ....


வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்

வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று

நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

பொருள்

வா = இராமா, நீ இங்கே வா என்பேன்

போகு = ஒண்ணும் இல்லை போ என்பேன்

வாஇன்னம் = இன்னொரு தரம் வா

வந்தொருகால் கண்டுபோ = ஒரு நிமிஷம் வந்து என்னை பாதுவிட்டுப் போ என்பேன்

மலராள் கூந்தல் = மலர் உள்ள கூந்தலைக் கொண்ட

வேய்போலு = மூங்கில் போல

மெழில் = அழகான

தோளி = தோள்களைக் கொண்ட (சீதையின் )

தன்பொருட்டா = அவளுக்காக

விடையோன்றன் = (விடை = எருது ) எருதின் மேல் ஏறியவனின் (சிவனின்)

வில்லைச் செற்றாய் = வில்லை முறித்தாய்

மாபோகு = யானைகள் அலையும்

நெடுங்கானம் = பெரிய வனம்

வல்வினையேன் = கொடிய வினை உடைய

மனமுருக்கும்  = மனத்தை உருக்கும்

மகனே = மகனே

இன்று = இன்று

நீபோக = நீ போக

என்னெஞ்ச = ஏன் நெஞ்சம்

இரு பிளவாய்ப் = இரண்டு பிளவாகப்

போகாதே = போகாமல்

நிற்கு மாறே = நிற்கின்றேனே



Friday, April 17, 2015

திருக்குறள் - நினைக்கப்படும்

திருக்குறள் - நினைக்கப்படும் 


நல்லவன் எல்லாம் துன்பப் படுகிறான்.

தீமை செய்பவன் நன்றாக சுகமாக இருக்கிறான்.

இதுதான் நாம் வாழ்வில் அன்றாடம் காண்பது.

சட்டத்தை மதிப்பவன், சமுதாயத்திற்கு பயப்படுபவன், நீதி நேர்மையை மதிப்பவன் துன்பத்தில் உழல்கிறான்.

பொய், புரட்டு, இலஞ்சம், இலாவண்யம், கொலை, கொள்ளை, திருட்டு என்று இருப்பவன் பெரிய பணக்காரனாக, பேரும் பெகுழுமாக இருக்கிறான்.

இப்படி இருந்தால் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தோன்றும் ?

அறம் என்று ஒன்று இல்லையா ? இது எப்படி என்று வள்ளுவரிடம் கேட்டால் , இது நினைக்கப்படும் என்கிறார்.

பாடல்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொருள்

அவ்விய நெஞ்சத்தான் = கோட்டம் உள்ள மனம் கொண்டவனின்

ஆக்கமும் = செல்வமும், புகழும், பெருமையும்

செவ்வியான் = நேரிய வழியில் வாழ்பவனது


கேடும் = துன்பமான வாழ்கையும்

நினைக்கப் படும் = யோசிக்கப் பட வேண்டிய விஷயம்.


கேள்வி கேட்டால், நீயே யோசித்துக் கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம் இல்லாமல் இல்லை.

நாம் யோசிப்போம்.

முதலில் இரண்டு மாணவர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவன் நல்லவன். மற்றவன் கெட்டவன் .

நல்ல மாணவன், தினமும் ஒழுங்காக படிப்பான், அனைத்து வகுப்புகளுக்கும் சென்று ஆசிரியர் சொல்வதை கவனமாக கேட்பான், அவர் சொல்வதை குறிப்பு எடுத்துக்  கொள்வான். வீட்டில் வந்து அவர் சொன்னதை படித்துப் பார்ப்பான். கடினமாக உழைப்பான். பரிட்சையில் ஒழுங்காக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான்.


மற்றவன், படிப்பது இல்லை, பாதி நாள் பள்ளிக்கு வருவது இல்லை, ஆசிரியர் சொல்லவதை கேட்பது இல்லை. பரிட்சையில் காப்பி அடித்து, பிட் வைத்து எழுதி பாஸ் பண்ணி அவன் நல்ல மாணவனை விட அதிகம் மதிப்பெண் பெற்று விடுகிறான்.


இப்போது யோசித்துப் பாருங்கள்.

கெட்டவனின் அதிக மதிப்பெண்களா, நல்ல மாணவனின் குறைந்த மதிப்பெண்களா  எது உயர்ந்தது ?

இருந்தாலும், நல்ல மாணவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதே, நல்ல வேலை  கிடைக்காதே என்று நீங்கள் நினைக்கலாம்.

கெட்ட மாணவன், கல்லூரியிலும் இதையே தான் செய்வான். அப்படியே கல்லூரியில் வெற்றி பெற்று விட்டால் கூட , வேலை கிடைத்தால் கூட, செய்யும்  வேலைகளை தப்பும் தவறுமாக செய்து என்றோ ஒரு நாள் தனக்கும் , தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் கேட்டினையே தேடித் தருவான். அதில்  சந்தேகமே இல்லை. வேலை தெரியாமல் இருந்து கொண்டு அந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுவான். செய்ய கூடாதனவற்றை எல்லாம் செய்வான். அவனுக்கு கீழேவேலை பார்ப்பவன் அவனை மதிக்க மாட்டான், அவனை ஏமாற்றுவான், அவனை பயமுறுத்துவான். நாளும் செத்து செத்து பிழைக்க வேண்டும்.

நினைத்துப் பாருங்கள்,  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் சிறந்ததா ? அப்படி ஒரு  வாழ்கை உங்களுக்கு வேண்டுமா ?

ஊரை ஏமாற்றி வாழ்பவன் சிறப்பாக இருக்கிறானே என்று நாம் நினைக்கலாம் ?

அவன் சிறப்பு என்ன என்று அவனுக்குத் தெரியும். என்றோ ஒரு நாள் சிறை செல்ல வேண்டி  இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். மரியாதை இழக்க வேண்டி வரும்.  மனைவியின் முன், பெற்ற பிள்ளைகளின் முன் தலை குனிந்து நிற்க வேண்டும் என்று நாளும் அவன் மனதுக்குள் புளுங்குவான். நிம்மதி  இருக்காது.

கெட்டவன் பெற்ற செல்வம் எப்படி வந்தது ? பல கெட்டவர்களின் கூட்டால் வந்தது. கெட்டவர்களின் சகவாசம் எங்கே கொண்டு போய் விடுமோ என்று அவன்  நாளும் நடுங்கிக் கொண்டிருப்பான். நம்மைப் போலத்தானே அவனும் ஒரு அயோக்கியன். நாளை என்னை காட்டி கொடுத்து விட்டால் என்ன செய்வது  என்று யாரைப் பார்த்தாலும் பயப் படுவான். நாளும் பயந்து பயந்து வாழ்வான்.

கெட்ட வழியில் பணம் சேர்த்தவன் எல்லோருக்கும் பயப்படவேண்டும்..

அதுமட்டும் அல்ல, எப்போ இந்த செல்வம் போகுமோ என்று மனதுக்குள் வருந்திக் கொண்டு  இருப்பான்.  இருக்கும் போதே அனுபவித்து விடுவோம் என்று  என்னென்ன தீய வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயல்வான். அது அவனை மேலும் தீய வழியில் செலுத்தும்.

அது மட்டும் அல்ல, தீய வழியில் வந்த செல்வம் போகும்போது, அது நல்ல வழியில்  சேர்த்த கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் சேர்த்து கொண்டு போகும்.

கெட்ட வழியில் வந்த செல்வத்தை பாதுகாக்க மேலும் பல கெட்ட வழிகளில் செல்ல  வேண்டி இருக்கும். பணத்தை பதுக்க வேண்டும், மற்றவன் பேரில் சொத்து  வாங்க வேண்டி வரும், அவன் ஏமாற்றி விடாமல் இருக்க அவனை தாஜா செய்ய வேண்டும், மீறினால் அவனை கொலையும் செய்ய வேண்டும், எங்கே இந்த  கெட்டவன் தன்னை கொலை செய்து விடுவானோ என்று மற்றவன்  கெட்டவனை கொலை செய்ய வழி தேடிக் கொண்டிருப்பான்.

தூக்கம் போகும்.

நிம்மதி போகும்.

மானம் மரியாதை போகும்.

யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும்.

மாறாக, நல்லவன் சேர்த்த சொத்து கொஞ்சமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழ  முடியும். நிம்மதியாக இருக்க முடியும். மரியாதையுடன் வாழ முடியும்.

நினைத்துப் பாருங்கள் - செவியான் கேடு உண்மையிலேயே கேடா ?

ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் இது. இது பற்றி மேலும் சிந்திப்போம்.