Thursday, September 10, 2015

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்...ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ...

குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும், இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்...இப்படி பெரிய களேபரமாய் இருக்கும்.

ஒரு வீட்டில்,இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்....இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ?

இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.

பூத்தவளே புவனம் பதினான்கையும்

அனைத்து உலகங்களையும் ஒரு மலர் மலர்வது போல் படித்தாள்.

சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.

பூத்த வண்ணம் காத்தவளே. 

நமக்கு வாழ்வில் துன்பம் வரும். வேண்டியது கிடைக்காது. கிடைத்தது கை விட்டுப் போகும்.  நட்டம் வரும். இழப்பு வரும். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் துன்பப் படுவோம்.

வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும்.  தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து  வைப்பாள்.

அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

"பின் கரந்தவளே" (கரத்தல் = மறைத்து வைத்தல்)

பெண் பல வடிவம் எடுக்கிறாள். அது தாயக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் ஒரே பெண் பல வடிவம் எடுக்கிறாள்.

மகள் சின்னப் பெண்ணாக இருப்பாள்., அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ உடல் நிலை சரி என்றால், திடீரென்று வளர்ந்து பெரிய பெண் போல அவள் வீட்டை நிர்வகிக்க தொடங்கி விடுவாள். அவளே சமையல் செய்வாள். காப்பி போடுவாள். "பாரேன், இந்த பிள்ளைய " என்று பெற்றவர்களே வியப்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி என்றால் , மனைவியே தாயாக மாறி பணிவிடை செய்வாள்.

பாட்டியாகவே இருக்கட்டும், பேரன் ஒரு சேலை வாங்கித் தந்தால் , பதினாறு வயது பெண் போல வெட்கப் படுவாள்.

அவளுக்கு வயது இல்லை. எல்லாமாக அவள் இருக்கிறாள்.

பட்டர் பார்க்கிறார்...இந்த அபிராமிக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு சமயம் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா....இன்னொரு சமயம் பார்த்தால் பெரிய பெண் போல இருக்கிறாள்...

"கறை கண்டனுக்கு மூத்தவளே". கண்டத்திலே கறை உள்ளவன் சிவன். அவனை விட மூத்தவள் போல இருக்கிறாள்.

"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே " திருமாலுக்கு இளையவள் போலவும் இருக்கிறாள்.

 இவளை விட்டால் வேறு யார் நமக்கு ?

பாட்டை இன்னொரு தரம் படியுங்கள் ...


பூத்தவளே,

புவனம் பதினான்கையும்

பூத்தவண்ணம் காத்தவளே

பின் கரந்தவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


(இதற்கு உரை எழுதிய பெரியவர்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். புவனம் எழா ? அல்லது பதினான்கா ? 

சிவனுக்கு மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்றால் சிவன் திருமாலை விட  இளையவனா மூத்தவனா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.  
இது எனக்குத் தோன்றியது. அனைத்தயும் படித்துப் பாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் )


Tuesday, September 8, 2015

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?


தண்டலையார் சதகம் என்ற நூலை எழுதியவர் படிக்காசு புலவர்.  இந்த நூல் முழுவதும் இனிமையான எளிமையான தமிழ் பாடல்கள்.

உடம்பில் வலு இருக்கின்ற போது என்னவெல்லாம் செய்கிறோம், சொல்கிறோம்.

சண்டை பிடிக்கிறோம், வாதம் செய்கிறோம், மற்றவர்களின்  உணர்சிகளைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

அறச் சிந்தனை கிடையாது.

ஒரு நாள் வரும். படுக்கையில் படுத்து செய்ததெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கும் போது , செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யலாம் என்று நினைக்கும் போது, எழுந்திரிக்க முடியாது, பேச முடியாது, நடக்க முடியாது...

இன்னும் கொஞ்ச நாள் ஆரோக்கியம் வேண்டும் என்றால் கிடைக்குமா ? நல்லது செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்ப முடியுமா ?

முடியாது.

இயலாமையை நினைத்து கண்ணீர் விடலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

பூனை , எலியைப் பிடித்து கொண்டு போகும். எலி என்னதான் அழுதாலும் பூனை விடாது.

அது போல, நம் காலம் முடியும் போது என்னதான் அழுதாலும் மரணம் விடாது.

அதற்கு முன் நல்லது செய்யுங்கள்.

பாடல்

பொலியவளம் பலதழைத்த தண்டலநீ ணெறிபாதம்
     போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர்
     வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும்
     விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ
     என்செய் வீரே.          


பொருள்

பொலியவளம் = பொலிவு தரும் வளங்கள்

பலதழைத்த = பல தழைத்து நிற்கும்

 தண்டல = தண்டலை எனும் ஊரில் உள்ள சிவனை

நீ  ணெறிபாதம் = நீண்ட நல் (நெறியில்) செலுத்தும் பாதங்களை

போற்றி  = போற்றி

நாளும் = ஒவ்வொரு நாளும்

வலிய = வல்லமை பெற

வலம் செய்தறியீர் = வலம் செய்து அறியீர் .

மறஞ்செய்வீர் = கொடுமைகள் செய்வீர்

நமன்தூதர் = எமனின் தூதர்கள்

வந்து = வந்து

கூடி = கூட்டமாக

மெலிய = நீங்கள் மெலிவு அடைய

அறைந் திடுபொழுது = கூப்பிடும் போது

கலக்கண்ணீர் உகுத்தாலும் = கலங்கி கண்ணீர் உகுத்தாலும்

விடுவ துண்டோ = விடுவது உண்டோ ?

எலியழுது புலம்பிடினும் = எலி அழுது புலம்பினாலும்

பூனைபிடித் ததுவிடுமோ = பூனை பிடித்தது விடுமோ ?

என்செய் வீரே. = என்ன செய்யப் போகிறீர்கள் ?

நம் ஓலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே ..நல்லதைச் செய்யுங்கள்




Monday, September 7, 2015

இராமாயணம் - பரதன் - குலப் பழி

இராமாயணம் - பரதன் - குலப் பழி 


ஒரு தவறு செய்யும் முன், அந்தத் தவறு யாரையெல்லாம் பாதிக்கும் என்று நினைக்க வேண்டும்.

நம்மை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. நம் குடும்பத்தில் உள்ளவர்களை பாதித்தால் அது மோசம். நம் குலத்தையே பாதித்தால் அது இன்னும் மோசம் அல்லவா.

ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவன் மட்டும் தண்டனை அடைய மாட்டான். அவன் மனைவியும், பிள்ளைகளும் "கொலைகாரன் மனைவி" என்றும் "கொலைகாரன் பிள்ளை" என்றும் தூற்றப் படுவார்கள்.


சில பழிகள், குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

தனக்கு வந்த அரசால் இந்த சூரிய குலமே பழிச் சொல்லுக்கு ஆளாகும் என்றும் நினைக்கிறான் பரதன்.

கைகேயி அப்படி நினைத்தாள் இல்லை. தீர்க்க சிந்தனை இல்லை.

பாடல்


‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் -

மரதக மலை என வளர்ந்த தோளினான்.


பொருள்

‘இரதம் ஒன்று ஊர்ந்து = இரதத்தில் சென்று

பார் இருளை நீக்கும் = உலகில் உள்ள இருளை நீக்கும்

அவ்வரதனில் = அந்த சூரியனின்

ஒளி பெற மலர்ந்த தொல் குலம் = ஒளி  பெற சிறந்த இந்த சூரிய குலம்

“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால்  = பரதன் என்ற ஒருவனால் பழி அடைந்தது என்று சொல்லும் நிலை வந்து விட்டதே என்று என்று எண்ணி வருந்தினான்


மரதக மலை என வளர்ந்த தோளினான். = மரகத மலை போல வளர்ந்த தோளினை உடைய  பரதன்

இலஞ்சம் வாங்கும்போது, பொய் புரட்டு செய்யும் போது, கொலை , களவு செய்யும் போது  குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். தாய் தந்தையரை நினைக்க வேண்டும்.   குலத்தை நினைக்க வேண்டும்.

தவறான செய்கைகள் , செய்பவனுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்திற்கு மட்டும் அல்ல,  அவன் குலத்துக்கே கெட்ட  பெயரை கொண்டு வந்து சேர்க்கும்.

அதனால் தான் வள்ளுவரும் - "ஈன்றாள் பசிக் காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை " என்றார்.

இந்த அரசை தான் பெற்றுக் கொண்டால் தன் குலத்துக்கே பழி வந்துவிடுமே என்று அஞ்சினான் பரதன்.

அப்படி நினைத்ததால் அவன் உயர்ந்தான்.

அது உயரும் வழி.






Sunday, September 6, 2015

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன்

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன் 


அறத்தின் படி வாழ வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நான் ஒழுக்கம் இல்லாமல் வாழ நினைக்கிறேன் என்று யாரும் முனைந்து செயல்படுவதில்லை.

இருந்தும், உலகில் எத்தனையோ அறம் பிறழ்ந்த செயல்கள் நிகழ்கின்றன.

ஏன் ?

அன்பு இல்லாத காரணத்தால்.

சுயநலத்தால்.

என்னிடம் பணம் இருக்கிறது. அதை இலஞ்சமாகக் கொடுத்து எனக்கு வேண்டியதை நான் பெற்றுக் கொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம்.

தவறு இருக்கிறது...யாருக்கோ ஞாயமாக கிடைக்க வேண்டியதை நீங்கள், உங்கள் பணத்தின் மூலம் அபகரித்துக் கொள்கிறீர்கள். அந்த முகம் தெரியாத மனிதன் துன்பத்தில் ஆழ்கிறான்.

அந்த மனிதனின் மேல் உங்களுக்கு அன்பு இல்லை. அவன் எக்கேடும் கெட்டு போகட்டும், நான் சுகமாக இருந்தால் சரி என்ற நினைப்புதான் இலஞ்சம் என்ற பெரிய  நோயை கொண்டு வருகிறது.

திருட்டு, கொலை, கற்பழிப்பு என்று எந்த குற்றத்தை எடுத்துக் கொண்டாலும், அடிப்படை அன்பு இல்லாத தன்மைதான்.

அறம் செய் , அறம் செய் என்று சொல்லுவது எளிது. அதற்கு அடிப்படை அன்பு வேண்டும்.

அன்பு இருந்தால் அறம் தானே வரும்.

அறம் அற்ற வழியில் வந்த இராஜியத்தை நினைத்து அழுகிறான் பரதன். அப்படி அழும் போதும் , இதெல்லாம் கண் துடிப்பு என்று உலகம் தன் அன்பை தூற்றுமோ என்று கவலைப் படுகிறான்.

பாடல்


‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்;
    நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன்
    பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான்! அன்பு

    உடையார்போல் அழுகின்றேன்!‘‘


பொருள்

‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன, = வில்லை உடைய தோள்களை கொண்ட இராமன் கானகம் போனான் என்று


நல்லான் அன்றே துஞ்சினன் = நல்லவனாகிய தசரதன் அன்றே இறந்தான்

நஞ்சே அனையாளைக் = நஞ்சு போன்ற கைகேயியை

கொல்லேன், = நான் கொல்லவில்லை

மாயேன்; = நானும் இறக்கவில்லை

வன் பழியாலே குறைவு அற்றேன் = பழிக்கு ஒன்றும் குறைவு இல்லை

அல்லேனோ யான்! = அப்படிபட்டவன் அல்லவா நான்

அன்பு உடையார்போல் அழுகின்றேன்! = அன்பு உடையவர்களைப் போல நானும் அழுகின்றேன்

அன்பிருந்தால், மற்றவர்கள் படும் துயர் கண்டு அழுகை வரும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

இராமனின் துன்பம் நினைத்து பரதன் அழுதான்.


அதிலும், அந்தத் துயருக்கு நாமே காரணம் என்றால், அந்த அழுகை இன்னும் அதிகமாகும். பரிதாப உணர்ச்சியும், குற்ற உணர்வும் சேர்ந்து அழுகை அதிகமாகும்.

 
அன்பிருக்கும் இடத்தில் அறம் இருக்கும்.

சரி, என்னிடம் அன்பும் இல்லை, அறமும் இல்லை அதனால் என்ன என்று கேட்டால்....அப்படிப் பட்டவர்களை அறம் அழிக்கும் என்கிறார் வள்ளுவர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

அன்பில்லாதவர்களை அறம் அழிக்கும்.

அன்பு உள்ள இடத்தில் அறம் தழைக்கும்.

பரதன் மனதில் அன்பிருந்தது.


Friday, September 4, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2



வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்

=============== பாகம் 2 =================================================

ஈதல் - அறம்
தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டது - இன்பம்
பரனை நினைத்து இம்மூன்றையும் விடுவது - வீடு பேறு

இது பாடலின் சாரம்.

இதை மேலும் ஆழ்ந்து சிந்தித்தால், ஒன்று புலப்படும்.

இந்த "பரனை நினைத்து" என்ற சொற்றடரை மற்ற மூன்றுக்கும் சேர்த்துப் பார்ப்போம்.

பரனை நினைத்து ஈதல் - அறம்
பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே - இன்பம்
பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் - வீடு பேறு


அது என்ன பரனை நினைத்து ஈதல் அறம் ?

பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டா வெறுப்பாக, எரிச்சலோடும் கொடுக்கலாம். அப்படி கொடுப்பது அறமாகாது.

நாம் பெற்ற பொருள் அவன் தந்தது என்று நினைத்து அதை மற்றவர்களுக்குத் தருவது அறம்.

வரும் போது கொண்டா வந்தோம் ?

இதையே அருணகிரிநாதரும்

"வையிற் கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்கு என்றும் நொய்யிர்  பிளவேனும் பகிருங்கள்"

என்றார்.

கொடுக்கும் போது முருகனை நினைத்து, இப்படி ஒரு செல்வத்தை நமக்கு கொடுத்ததற்கும், கொடுத்த செல்வத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனதை தந்ததற்கும் அவனை வாழ்த்தி மற்றவர்களுக்குத் ஈதல் வேண்டும் என்கிறார்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 

இறைவனை வாழ்த்தி தானம் செய்ய வேண்டும். நான் கொடுக்கிறேன், என் செல்வம், என்ற ஆணவம் இல்லாமல் ஈதல் அறம் .

பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்

இரை தேடும் போதும் இறையும் தேட வேண்டும். 

செய்யும் செயலில் பக்தி கலக்கும் போது அதில் ஒரு ஆனந்தம், அமைதி பிறக்கிறது.  அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது.  போட்டி பொறாமை  மறைகிறது. இறைச் செயல் என்று நினைத்து செய்யும் போது  அதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற சுயநல கலப்பு மறைகிறது. 

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது 

கணவனும் மனைவியும்  ஒன்றாக இருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்  என்கிறார்.

இப்படி ஒரு அன்பான, அழகான, பண்புள்ள, என் மேல் ஆர்வம் உள்ள கணவனையோ, மனைவியையோ தந்த இறைவனுக்கு நன்றி என்று நினைக்க வேண்டும்.  நினைத்துப் பாருங்கள் , உங்கள் துணை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நீங்கள் விரும்படியும் இருக்கலாம், மற்றபடியும் இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன், அழகுடன், அன்புடன், பண்புடன், உங்கள் நலத்தில்  அக்கறை உள்ள துணை இறைவன் அருளால் அமைவது. நீங்கள்  என்ன செய்து விட முடியும் இங்கே. உங்களுக்கு கிடைத்தது அவன் அருள் . அதை நினைத்து, காதல் செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் துணையை  அன்போடு பார்க்கும் போது , அவன் அருளை நினைத்துப் பாருங்கள். அதன் சுகமே தனிதான். 

இந்த மூன்றையும் விடுவது என்பது எளிதான காரியம் அல்ல.  வேண்டா வெறுப்பாக  விடுவது ஒரு துறவறம் இல்லை. மருத்துவர் உங்களுக்கு சர்க்கரை வியாதி  என்று சொல்லி விட்டார்.  சர்கரையின் பக்கமே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்.  அதற்காக நீங்கள் சர்க்கரையை விட்டால் அதன் பெயர்  துறவறம் அல்ல. 

பரனை நினைத்து விடுவது வீடு பேறு.

இவற்றையெல்லாம் விடுவது இவற்றை விட பெரிய ஒன்றை அடைய என்று நினைக்கும் போது,  விடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியாது. 

பாட்டி பெரிய ஆளு....
 

Wednesday, September 2, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்


வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்



திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே


சொர்க்கம் நல்லதுதான்.

வீடு பேறு வேண்டும்தான்.

கைலாயம் கையில் கிடைத்தால் சுகம் தான்.

வைகுண்டம், பரமபதம் ..அடடா கிடைத்தால் என்ன சுகம்.

சரி, போகலாமா என்று கேட்டால் யார் வரத் துணிவார்கள் ?

யாராவது, இறைவனிடம் நான் உன்னிடம் வரவேண்டும் என்று வேண்டுகிறார்களா. அப்படியே வேண்டினாலும், சரி வா என்று இறைவன் அழைத்தால் போய் விடுவார்களா ?

இந்த உலகை விட்டுப் பிரிய யாருக்கு மனம் வரும்?

வைகுந்தம் அப்புறம் போகலாம், இந்த பூலோகத்தை அனுபவிப்போம் என்று இங்கேயே இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

இந்தச் சிக்கல், நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கே இருந்திருக்கிறது.

இறைவன் நேரில் வந்து, " வா போகலாம் " என்று அழைத்தான். சற்று தயங்கி நின்றார். இறைவன் போய் விட்டான்.

கிடந்து புலம்பித் தவிக்கிறார். ஐயோ, போகவில்லையே என்று.

திருவாசகம் எல்லாமே இந்தப் புலம்பல்தான்.

பாடல்

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருள்

மானேர் நோக்கி = மானைப் போன்ற கண்களைக் கொண்ட 

உடையாள் = உடையவளான பார்வதியை 

பங்கா  = பாதியாக கொண்டவனே

மறையீ றறியா = மறை + ஈறு + அறியா = வேதங்கள்  உன்னை முடிவாக அறியா

மறையோனே = மறைந்து இருப்பவனே, மறைகளுக்கு அப்பாற்பட்டவனே

தேனே = தேனே

அமுதே = அமுதே

சிந்தைக் கரியாய் = சிந்தனைகளுக்கு அரியவனே

சிறியேன் பிழைபொ றுக்கும் = சிறியவனான என் பிழைகளைப் பொறுக்கும்

கோனே = தலைவனே

சிறிதே கொடுமை பறைந்தேன் = சிறிய கொடுமைகள் சில சொன்னேன்

சிவமா நகர் = சிவ மாநகர் = கைலாயம்

குறுகப் போனார்  அடியார் = அடியார்கள் சென்றார்கள்

யானும் = நானும்

பொய்யும் = பொய்யும்

புறமே போந்தோமே. = வெளியே நின்று விட்டோம்

இறைவன் , வலிய வந்து ஆட்கொண்டான். இவர் போகவில்லை.

ஏன் போகவில்லை ?

பெரிய வேலையில் இருந்தார். பாண்டியன் அரசவையில் முதல் அமைச்சர் வேலை என்றால் சாதரணமா.

இப்படித்தான் வேலை, குடும்ப பொறுப்பு என்று அதை விட உயர்ந்தவற்றை விட்டு விடுகிறோமோ ?

வள்ளலார் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார்...


தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

அம்மா ஒரு தடை. பின்னர் தாரம் ஒரு தடை. பின்னர் பிள்ளைகள்....

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவை எல்லாம் எப்போதுதான்  தீருவது என்று சோர்கிறார் வள்ளல் பெருமான்.

ஒன்றைச் செய்யும் போது, மற்றது ஏதோ ஒன்றைச் செய்யாமல் விடுகிறோம்.

எதைச் செய்கிறோம் , எதை விடுகிறோம் என்று சிந்திப்போம்.