Monday, July 18, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம் 



துன்பம் வந்தால் சுந்தர காண்டம் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அழகான காண்டம் (சுந்தரம்) என்றால் அதில் ரசிக்க ஏதாவது இருக்க வேண்டும். அழகிய பூஞ்சோலைகள், அருவிகள், பச்சை பசேல் என்ற வயல் வெளி, அங்கு வரும் பறவைகள், மகிழ்ச்சியான ஆடி பாடும் மக்கள் என்று ஏதாவது இருக்க வேண்டும்.

சுந்தர காண்டத்தின் தொடக்கம் சீதையைப் பிரிந்த இராமன். ஒரே புலம்பல் இரண்டு பேரும் . அனுமன் கடல் தாண்டி போகிறான். உப்புக் கடலில் இரசிக்க என்ன இருக்கிறது. பாத்தா குறைக்கு போகின்ற வழியில் இடைஞ்சல்கள் வேறு. இலங்கைக்குப் போன பின்னால், சீதை தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள். அனுமன் இலங்கைக்கு தீ வைக்கிறான். கணையாழியோடு திரும்பி வந்து சேர்கிறான்.

இதில் என்ன சுந்தரம் இருக்கிறது ?

அது மட்டும் அல்ல, நாமே ஒரு துன்பம் என்று போனால், கதையில் அதை விட பெரிய துன்பமாக இருக்கிறது. மனதுக்கு ஆறுதலாக ஒன்றும் இல்லை.


பின் ஏன் துன்பம் வந்த நேரத்தில் சுந்தர காண்டம் படி என்று சொன்னார்கள் ?

காரணம் இருக்கிறது.

எந்த ஒரு துன்பத்தையும், சிக்கலையும் எப்படி சரி செய்து , அதில் இருந்து மீள்வது  என்று காட்டுகிறது சுந்தரகாண்டம்.

துன்பத்தில் இருந்து மீண்டால் மகிழ்ச்சி தானே ?

அந்த மகிழ்ச்சிக்கு வழி காட்டுவது சுந்தர காண்டம்.

எப்படி என்று பார்ப்போம்.

அனுமன் சீதையைத் தேடி புறப்படுகிறான். மகேந்திர மலையின் மேல் ஏறி , தனது விஸ்வரூபத்தை எடுத்து நாலா புறமும் பார்க்கிறான்.இலங்கை எங்கே என்று தெரியாது. முன்ன பின்ன போனது கிடையாது. வரைபடம் கிடையாது. போக வேண்டிய இடம் தெரியும். எப்படி போவது என்று தெரியாது. இலங்கை எப்படி இருக்கும் என்றும் தெரியாது.

நம் வாழ்விலும் அப்படி எத்தனையோ குழப்பங்கள் வருவது உண்டு இல்லையா. என்ன வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை எப்படி அடைவது என்று தெரியாது.

பாடல்

ஆண் தகை ஆண்டு அவ் வானோர்
    துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை
    இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும்
    மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
‘காண் தகு கொள்கை உம்பர்
    இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.


பொருள்

ஆண் தகை = ஆண்களில் உயர்ந்த அனுமன்

ஆண்டு = அப்போது (விஸ்வரூபம் எடுத்த அப்போது)

அவ் வானோர் = வானவர்கள், தேவர்கள்

துறக்கம் நாடு  = தேவர்களின் நாட்டை

அருகில் கண்டான்; = அருகில் கண்டான்

ஈண்டது தான்கொல் = இப்போது அது தான்

வேலை = கடல்

இலங்கை என்று = (சூழ்ந்த) இலங்கை என்று

ஐயம் எய்தா = சந்தேகம் கொண்டான்

வேண் தரு = வேண்டியதைத் தரும்

விண்ணாடு என்னும் = விண்ணவர்களின் நாடு

மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை அறிந்து

உள்ளம் மீட்டான்; = உள்ளம் மீண்டான்

‘காண் தகு கொள்கை = காணாத தகுந்த கொள்கை (சீதையை காண வேண்டும் என்ற கொள்கை )

உம்பர்  இல் ‘ = இங்கே இல்லை

எனக் கருத்துள் கொண்டான். = என மனதில் கொண்டான்

இதில் இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது.

இரண்டாவது, குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். அவற்றைக் கண்டு , அதில் மயங்கி நின்று விடக் கூடாது.  அல்லது குறிக்கோளை விட்டு வேறு வழியில் போகக் கூடாது.

அனுமனுக்கு தேவர்களின் உலகம் கண்ணில் பட்டது. அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு   வரலாமே என்று நினைத்திருக்கலாம். அழகான பெண்கள்,  கற்பக மரம், இனிமையான இசை, நல்ல கட்டிடங்கள், மனதை மயக்கும் நறுமணம் என்று எல்லாமே இருந்திருக்கும்.

அதில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், தனது குறிக்கோள் என்ன என்பதில்  கவனமாக இருந்தான்.

துன்பத்தை வெல்ல முதல் படி, குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும்.

எடையை குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். உணவை கட்டுப் படுத்த வேண்டும் என்று தெரியும். நல்ல ice cream ஐ பார்த்தால் உடனே  குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

படிக்க வேண்டும் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள்.தொலைக்காட்சியில் cricket வந்தால்,  பெரிய நடிகரின் படம் திரைப்படத்தில் வந்தால் குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

சலனத்திற்கு ஆட்படாமல், குறிக்கோளில் குறியாக இருக்க வேண்டும்.

துன்பம் ஓடிப் போய்விடும்.

போகட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post.html




Monday, July 11, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

துன்பம் வந்து விட்டால் ஏதோ  நமக்கு மட்டும் வந்து விட்டது போல துவண்டு போகிறோம். நமக்கு துன்பமே வரக்கூடாது, எப்படியோ வந்து விட்டது என்று அங்கலாய்கிறோம்.

அது உண்மையா ?

சாம்ராஜ்யத்துக்கு முடி சூட்ட இருந்த இராமனை காட்டுக்கு 14 வருஷம் போ என்று விரட்டி விட்டாள் கைகேயி. அதை விட பெரிய துன்பம் நமக்கு வந்து விடுமா ?

நாடு, நகரம், சொந்தம் , பந்தம், சொத்து , சுகம், பெருமை, புகழ் அனைத்தும் ஓர் இரவில் இழந்து, உடுக்க நல்ல துணி கூட இல்லாமல் கானகம் போன இராமனின் துன்பத்தை விட உங்கள் நட்டம் , உங்கள் அவமானம், உங்கள் இழப்பு பெரிய இழப்பா ?

சரி, அதுவாவது போகட்டும். 

இராமன் வலிமையான ஆடவன். அவனால் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியும். 

சீதை, செல்லமாக வளர்ந்த பெண்.

காடு என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்த பெண். அவளை காட்டுக்குப் போ என்று யாரும் சொல்லாவிட்டாலும் அவளும் கிளம்பி விட்டாள் . 

அதை விட நம் துயரம் பெரிய துயரமா ?

பெண்ணை கட்டி கொடுத்து விட்டு, "ஐயோ அவள் அங்கே என்ன கஷ்டப் படுகிறாளோ " என்று மனம் சோரும் பெண்களுக்கு சீதையின்  வாழ்க்கை   ஒரு ஆறுதலைத் தரும். 

சரி கானகம் போனார்கள்...போன இடத்திலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா ?

இராவணன் , சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

யார் தூக்கிப் போனார்கள் என்று கூடத் தெரியாது. 

கட்டிய மனைவியை காணவில்லை. 

இராஜ்யத்தை சக்கரவர்த்திக்கு கட்டிய மனைவியை பாதுக்காகத் தெரியவில்லை என்ற பழிச் சொல் வேறு.

அரக்கனின் சிறையில் ஜானகி.

மனைவியின் போன இடம் தெரியாத இராமன்.

நினைத்துப் பார்த்து இருப்பார்களா வாழ்க்கை இப்படி தலை கீழாக மாறும் என்று ?  

நம் துன்பங்கள் அதை விட மோசமானதா ?


இராமன் யார் ? அவன் ஒரு அவதாரம். சக்ரவர்த்தி திருமகன். அவனுக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம் ?

துன்பம் வரும். அது இயற்கை. துன்பம் வந்த போது ஐயோ எனக்கு இப்படி வந்து  விட்டதே என்று துவண்டு போய் விடக்  கூடாது.

போராடி வெல்ல வேண்டும் என்று சொல்ல வந்தது சுந்தர காண்டம். 

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை வெல்ல முடியும் என்று தைரியம் சொல்வது சுந்தர காண்டம்.

துன்பத்தில் துவண்டு விடலாம், தோள் தந்து நம்மை தூக்கி நிறுத்துவது  சுந்தர காண்டம். 

சுந்தர காண்டத்தை படிக்க படிக்க மனதில் ஒரு உற்சாகமும், உத்வேகமும் வரும்.

முடியும். என்னால் முடியும். என்னால் இந்த துன்பத்தை வெற்றி காண முடியும் என்று தன்னம்பிக்கை தருவது சுந்தர காண்டம்.

மனம் சோர்வடையும் போதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள்.

அது ஆயிரம் "Self Help " புத்தகங்களுக்கு சமம். 

மேலும் சிந்திப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/2.html


Friday, July 8, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை 



வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்காதவர் யார் ?

துன்பம் வரும் போது ...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்...எல்லாருக்கும் நல்லது தான் செய்கிறேன். யாருக்கும் ஒரு கெடுதலும் நினைப்பது இல்லை. முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்கிறேன். கடவுள் பக்தி உண்டு. பாவ புண்ணியத்திற்கு பயப்படுகிறேன். பூஜை புனஸ்காரங்களை ஒழுக்காகச் செய்கிறேன்....

இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்ளாதவர் யார் ?

ஏன் என் பிள்ளை இப்படி படிக்காமல் இருக்கிறான், ஏன் என் பெண்ணின் மாமியார் இப்படி இருக்கிறார், ஏன் என் கணவனோ மனைவியோ இப்படி இருக்கிறார்கள், எனக்கென்று ஏன் இப்படி ஒரு மானேஜர் அலுவலத்தில், ஏன் எனக்கு தொழிலில் நட்டம் வருகிறது என்று நொந்து கொள்ளாத யாராவது இருக்கிறார்களா ?

சரி, அப்படியே ஒரு துன்பம் வந்து விட்டாலும், நாம் மலை போல நம்பி இருந்தவர்கள்  நம்மை கை விட்டு விடுவதும் நிகழ்வது  சாதாரணமாக  எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தானே.

அவனுக்கு அல்லது அவளுக்கு எவ்வளவு எல்லாம் செய்தேன்...எனக்கு ஒரு  தேவை , அவசரம் என்று வந்த போது உதவி செய்ய யாரும் இல்லையே , இந்த உலகமே நன்றி கெட்ட உலகம் என்று வருந்தாதார் யார் ?

துன்பம் நமக்கு மட்டுமா வருகிறது ?

நம்பியவர்கள் கை விட்டு விடுவது நமக்கு மட்டுமா நிகழ்கிறது ?


சரி, அதற்கும் இந்த சுந்தர காண்டத்திற்கும் என்ன தொடர்பு ?

கம்ப இராமாயணம் எங்கே , அல்லாடும் தள்ளாடும் என் வாழ்க்கை எங்கே...இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

சம்பந்தம் இருக்கிறது...அது என்ன என்று வரும் நாட்களில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_8.html



Tuesday, June 7, 2016

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்



ஊரில் விவசாயம் செய்வார்கள். நிலத்தை உழுது, அதில் உளுத்தம் செடியை பயிரிடுவார்கள். அந்த ஊரில் சில ஊர் கன்றுகள் திரியும். யாருக்கும் சொந்தம் இல்லாத கன்றுகள். கோவில் காளை மாதிரி திரிந்து கொண்டு இருக்கும். அந்த ஊர் கன்றுகள்  , இரவில் வயலில் நுழைந்து அங்கு வளர்ந்து இருக்கும் உழுதஞ் செடிகளை மேய்ந்து விடும். காலையில் வயலுக்கு வரும் உழவன், பயிர்கள் நாசமானதைக் கண்டு, கோபம் கொண்டு, இந்த கழுதை தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று நினைத்து, அதன் காதை அறுத்து விடுவான்.

தவறு செய்தது என்னவோ ஊர் கன்று. தண்டனை பெற்றது கழுதை.

அது போல,

தலைவி , தலைவனை கண்டு காதல் கொள்கிறாள். அவர்களுக்குள் பிரிவு நிகழ்கிறது. பிரிவினால் அவள் தோள் மெலிகிறது. காதல் கொண்டது கண்கள், மெலிவதோ தோள்கள்.

பாடல்

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு

பொருள்

உழுத = உழப்பட்ட

உழுத்தஞ்செய் = உளுந்து வளர்ந்த நிலத்தில்

ஊர்க்கன்று மேயக் = ஊரில் உடையவன் இல்லாத கன்று மேய

கழுதை செவி  = கழுதையின் காதை

அரிந்தற்றால் = அறுத்தது போல

வழுதியைக் = தலைவனை

கண்ட நம் கண்கள் இருப்பப் = கண்டு காதல் கொண்ட என்னுடைய கண்கள் இருக்க

பெரும் பணைத்தோள் = நீண்ட , பனை மரம் போன்ற தோள்கள்

கொண்டன மன்னோ பசப்பு = பசலை நிறம் படர்ந்தது

சரி, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இந்த கண்கள் காதல் கொள்வதும் , இடை மெலிவதும் , வளை நெகிழ்வதும் எப்போதும் கவிஞர்கள் சொல்லுவதுதானே. இதில் என்ன இருக்கிறது ?

பேரின்பம், சொர்க்கம், கைலாயம், வைகுண்டம், இறைவன் திருவடி நீழல் என்று மனிதன் தேடிக் கொண்டு இருக்கிறான். எங்கெங்கோ  தேடுகிறான்.தவம் இருக்கிறான்.

ஒரு வேளை அந்த பேரின்பம் கிடைத்துவிட்டால், இது தான் அவன் தேடிய  பேரின்பம் என்று அவனுக்கு எப்படித் தெரியும் ? இதற்கு முன்னால் அனுபவித்து இருந்தால், தெரியும். ஆனால், அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்ததே கிடையாது. பேரின்பம் கிடைத்தால் கூட அது பேரின்பம் என்று அறிய முடியாது.

அறிவு என்பது தெரிந்ததில் இருந்து தெரியாதை அறிந்து கொள்வது.

புலி எப்படி இருக்கும் என்றால், பூனை மாதிரி இருக்கும் என்று சொல்வதைப் போல.

சிற்றின்பத்தை அறிந்தால் தான், பேரின்பம் என்பது என்ன என்று அறிய முடியும்.

அது தான் வாசல்.

அதன் வழியாகத்தான் போக வேண்டும் .

இதை அறிந்துதான் நம் முன்னவர்கள் சிற்றின்பத்தை தள்ளி வைக்காமல் அதை இலக்கியத்தோடு, பக்தியோடு இணைத்தார்கள்.

நாயக நாயகி பாவம் என்பது சிற்றின்பத்தை தொட்டுக் காட்டி, அதில் இருந்து பேரின்பம் எப்படி இருக்கும் என்று அறிய வைக்கும் ஒரு உத்தி.

கோவில் சிற்பங்களிலும், கதைகளிலும், காவியங்களிலும், பக்தியிலும் சிற்றின்பத்தை வைத்தார்கள்.

அறம்  - பொருள்  - இன்பம் - வீடு என்று வைத்தார்கள்.

காமமும் காதலும் தவறு என்றால், அறம் பொருள் வீடு என்று வைத்திருக்கலாம் தானே ?

பின்னாளில், ஏதோ சிற்றின்பம் என்றால் வெறுக்கத்தக்கது என்ற ஒரு மனோபாவம் வந்து விட்டது.

சிற்றின்பம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல.

காதல், கனிவு, அன்பு, பாசம், கருணை, தன்னை மறப்பது, தன்னில் தான் கரைவது, நெகிழ்வது என்று அத்தனையும்  உண்டு.

இந்தப் படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு போக முடியாது.

சிற்றின்பத்தை அனுபவியுங்கள். ஒரு நாள் அது உங்களை பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/06/blog-post.html

)

Tuesday, May 31, 2016

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை 



பாடல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும். 

பொருள்

வருமுன்னர்க் = வருவதற்கு முன்

காவாதான் = காத்துக் கொள்ளாதவன்

வாழ்க்கை = வாழ்கை

எரி = தீயின்

முன்னர்  = முன்னால்

வைத்தூறு = வைத்த வைக்கோல்

போலக் கெடும் = போலக் கெடும்


தீயின் முன்னால் வைத்த வைக்கோல் எப்படி எரிந்து சாம்பலாகுமோ அது போல  வருவதற்கு முன்னால்  காத்துக் கொள்ளாதவன் வாழ்கையும் ஆகும்.

ரொம்ப சிரமப் பட வைக்காத குறள். நேரடியான அர்த்தம் தரும் குறள் .

சற்று உள்ளே இறங்கி ஆராய்வோம்.

முதலாவது, தீயின் பக்கத்தில் வைக்கோலை வைத்தால், ஒரு காற்று அடித்தால், ஒரு வைக்கோல் பிரண்டு தீயின் மேல் விழுந்தால் அந்த வைக்கோல் போர் முழுவதும் பற்றி எரிந்து விடும். யாரும் வந்து அந்த தீயை எடுத்து வைக்கோல் போரின் மேல் போட வேண்டாம். தானாகவே பற்றி எரிந்து சாம்பாலகிப் போய் விடும்.

அது போல, தவறுகளும், குற்றங்களும் செய்தால் அதன் விளைவுகள் வாழ்க்கையையே நாசமாக்கி விடும். யாரும் வந்து செய்ய வேண்டாம்.

படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால், அதன் விளைவு  பின்னாளில்  வாழ்வே நாசமாகி விடும்.


இரண்டாவது, வைக்கோலில் தீ பிடித்துக் கொண்டால் அது மட்டும் எரியாது. அக்கம் பக்கத்தில் உள்ளதையும் சேர்த்து எரிக்கும். அது போல, ஒருவன் தவறு செய்தால் அதன் விளைவு அவனுக்கு மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

ஒரு குடும்பத் தலைவன் ஏதோ ஒரு தவறு செய்கிறான்...அலுவலகத்தில் பணத்தை தவறான வழியில் எடுத்து விடுகிறான், அல்லது வேறு ஏதோ தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை வேலையில் இருந்து அனுப்பி விடுகிறார்கள். அது அவனை மட்டும் பாதிக்காது. அவனை நம்பி உள்ள அவன் குடும்பத்தையும் பாதிக்கும் அல்லவா ?

ஒரு வீட்டில் கணவனோ மனைவியோ தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால், பிற்காலத்தில் அவர்கள் நோய் வாய்ப்படும்போது அது அவர்களை மட்டும் பாதிக்காது...அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும் அல்லவா.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யும் தவற்றின் விளைவுகள் செய்பவனை மட்டும் பாதிப்பது இல்லை , அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது.

மூன்றாவது, நெருப்பு சிறு பொறி தான். வைக்கோல் போர் மிகப் பெரியதுதான். இருந்தாலும், சின்ன நெருப்பு பெரிய வைக்கோல் போரை எரித்து சாம்பாலாக்கி விடும். அது போல தவறும் குற்றமும் சின்னதாக இருக்கலாம். ஆனால், அது ஒருவனின் பெரிய செல்வத்தையும், வாழ் நாள் எல்லாம் கட்டிக் காத்த புகழையும் ஒரே நொடியில் அழித்து விடும் ஆற்றல் வாய்ந்தது. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தவறு செய்து மாட்டிக் கொண்டாலும் பணத்தைக் கொண்டு வெளியே வந்து விடுவேன் என்று நினைக்கக் கூடாது. அத்தனை செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய் விடும்.

நான்காவது, மரக் கட்டையில் தீ பிடித்தால் போராடி அனைத்து விடலாம். அணைத்த பின் மீதி உள்ள கட்டை பயன்படும். வைக்கோல் போரில் தீ பிடித்தால், அணைப்பதற்குள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். மேலும், எரியாத வைக்கோல் நீரில் நனைந்து , புகை சுற்றி கருகிய வாடை அடிக்கும். அதை மாடு கூட தின்னாது. ஒன்றுக்கும் பயன்படாது. எவ்வளவுதான் சொந்தம் பந்தம், பெரிய இடத்து நட்பு என்று இருந்தாலும், குற்றங்களும் தவறுகளும் மனிதனின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னா பின்னாமாக்கி விடும். அதில் இருந்து தப்பி வந்தாலும், அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்காது. ஒரு பயனுள்ள வாழ்க்கையாக இருக்காது.

ஐந்தாவது, வள்ளுவர், வைக்கோல் போரின் மேல் வைத்த தீ என்று என்று சொல்லவில்லை. தீயின் முன்னால் வைத்த வைக்கோல் போர் என்றார். நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று இல்லை. தவறு செய்யும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் போதும், தவறு செய்பவர்களோடு  சகவாசம் வைத்துக் கொண்டிருந்தாலும் போதும் அது உங்கள் வாழ்வை  நாசமாக்கி விடும். "இவனும் அவனும் கூட்டு களவாணி தான் " என்று தான் உலகம் சொல்லும்.  குற்றங்களுக்குப் பக்கமே போகக் கூடாது.

ஆறாவது, பெரிய வைக்கோல் போரை எரிக்க பெரிய தீ பந்தம் வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். உங்கள் வாழ்வை நாசமாக்க பெரிய தவறுகள் வேண்டாம். சின்ன சின்ன தவறுகள் போதும். எப்பவாவது தண்ணி அடிப்பது, அலுவலகத்தில் இருந்து எப்பவாவது பென்சில் , பேனா போன்றவற்றை வீட்டுக்கு கொண்டு வருவது போன்ற சின்ன தவறுகள் போதும். என்றேனும் காற்று அடித்து அந்த சிறு தவறுகள் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்.

சின்ன தவறுகள், சின்ன குற்றங்கள், சின்ன எதிரிகள் எல்லாம் சின்ன நெருப்பு பொறி மாதிரி.

குற்றங்களும், தவறுகளும் நிகழா வண்ணம் உங்களை காத்துக் கொள்ளுங்கள். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மதியீனம்.

அடுத்த முறை ஜிலேபி போன்ற இனிப்புகளை தொடுமுன், பெப்சி போன்ற குளிர் பானங்களை தொடுமுன்,  படிக்காமல் தொலை காட்சி பார்க்குமுன், உடற் பயிற்சி செய்யாமல் போர்வையை இழுத்து போர்த்தி தூங்கப் போகுமுன்.....  வைக்கோல் போர் ஞாபகம் வர வேண்டும்.

வரும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.com/2016/05/blog-post_31.html

)





Friday, May 13, 2016

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?


எது அழகு என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம் ?

காதலியின் முகம் அழகு, அவளின் வெட்கம் அழகு, குழந்தையின் முகம் அழகு, அப்போது பூத்த பூ அழகு, மழை அழகு, கடல் அழகு என்று அடுக்குவோம்.

ஔவை வேறு ஒரு பட்டியல் தருகிறாள்.

வறுமை அழகு, சாப்பிடாமல் இளைத்த தேகம் அழகு, ஏன் மரணம் கூட அழகு என்கிறாள் கிழவி.

நம்ப முடிகிறதா ?


உலகிலேயே மிக அழகானது, முதல் இரவு முடிந்து வெளியில் வரும் பெண்ணின் முகம் மிக அழகானது என்கிறாள்.

அடுத்து, விரதம் இருந்து இளைத்த ஞானியாரின் மேனி அழகு. காய்ச்சல் வந்து, உடல் நிலை சரியில்லாமல் இளைத்த மேனி அல்ல, ஞானம் வேண்டி ,ஊண் உறக்கம் இன்றி தவத்தால் விரதத்தால் இளைத்த மேனி அழகு. யோசித்துப் பார்ப்போம். அளவுக்கு அதிகம் தின்று தொந்தியும் தொப்பையும் உள்ள உடல் அழகா, விரதத்தால் இளைத்த மேனி அழகா ?


அடுத்து, கொடுத்து இளைத்த ஒருவனின் வறுமையும் கூட அழகு என்கிறாள் அவ்வை. ஒரு காலத்தில் பெரிய தனவந்தனாக இருந்து , எல்லோருக்கும் உதவி செய்து அதனால் வறுமையின் வாய்ப்பட்டாலும் , அந்த வறுமை கூட அழகுதான் என்கிறாள்.


இது எல்லாவற்றையும் விட அழகு, நாட்டுக்காக சண்டையிட்டு, அதில் மார்பில் புண் ஏற்று இறந்த வீரனின் சமாதியின் மேல் இருக்கும் அந்த கல் அழகு என்கிறாள்.


பாடல்


சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த
விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபிர மம்


பொருள்

சுரதம் = கூடல் , புணர்ச்சி

தனி = தனிமையில்

விளைந்த = சுகித்த, தோய்ந்த

தோகை = இளம் பெண்

சுகிர்த = ஞானம் (வேண்டி, தேடி)

விரதம் = விரதம் இருந்து

தனி விளைந்த மேனி = இளைத்த மேனி

நிரதம் = நித்தம்

கொடுத்திளைத்த தாதா =கொடுத்து இளைத்த செல்வந்தன்

கொடுஞ்சமரிற் = கொடும் + சமரில் = கொடிய சண்டையில்

பட்ட = இறந்து பட்ட

வடுத்துளைத்த = வடு துளைத்த = விழுப் புண் ஏற்ற

கல்லபிர மம் = கல் + அபிரமம் = அந்த நடு கல் அழகானது.

அபிரமம் என்றால் அழகானது என்று அர்த்தம். அபிராமி என்றால் அழகானவள் என்று பொருள்.


அழகு என்பது வேறு உடல் வனப்பில் மட்டும் அல்ல.


என்ன ஒரு அருமையான பாடல்.

கிழவி பெரிய ஆள் தான்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post_13.html )



Thursday, May 12, 2016

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின்

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின் 


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

நாம் பலமுறை கேட்ட பாடல் தான். திருவிளையாடல் படத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

 இதில் என்ன புதுமை இருக்கிறது தெரிந்து கொள்ள ?

நம்மிடம் இனிது எது என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

-நல்ல சுவையான உணவு
- காதுக்கு இனிய இசை
- நல்ல சினிமா, நாடகம், தொலைகாட் சி தொடர்
- கணவன்/மனைவியோடு இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போவோம்.

இனிமையை விட்டு விட்டு, ரொம்ப துன்பமானது, கடினமானது எது என்று கேட்டால்  தனிமை கொடுமை என்று சொல்லுவோம்.

அது கொடுமை என்பதால் தானே சிறையில் போடுகிறார்கள். ரொம்ப பெரிய  தவறு செய்தால் தனிமைச் சிறை என்றே இருக்கிறது. அதில் போட்டு விடுவார்கள்.

அவ்வை சொல்கிறாள்

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" 

ஏகாந்தம் என்றால் என்ன ?

ஏக + அந்தம்.

அந்தம் என்றால் முடிவு. ஏகம் என்றால் ஒன்று. ஒன்றான முடிவு. அல்லது ஒன்றில் முடிவது. ஒன்றில் இலயித்து விடுவது. அதில் கரைந்து போவது.

வாழ்க்கையின் பல சிக்கலகளுக்கு காரணம் மனம் ஒன்றாதது தான். ஒன்றிருக்கும் போது இன்னொன்றுக்குத் தாவுவது.

படிக்கும் போது தொலைக் காட்சி
அலுவலத்தில் இருந்தால் வீட்டின் எண்ணம்.
வீட்டில் இருந்தால் அலுவகலத்தின் எண்ணம்
இப்படி மனம் எதிலும் ஒன்றாமல் அலை பாய்ந்து கிடப்பதால் எதிலும்  நாம் சாதிக்க முடிவதில்லை.

ஏகாந்தம் இனிது.

சரி, அது தான் இனிமையா ? அதை விட இனிமையானது ஏதாவது இருக்கிறதா என்றால் ,

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

என்றார்.

கடவுளைத் தொழுதால் என்று சொல்லவில்லை. கடவுள் என்று சொன்னால் , உடனே எந்தக் கடவுள் என்று கேட்போம். அந்த சிக்கலைத் தவிர்த்து  அவ்வையார் "ஆதியைத் தொழுதல்" என்றார். 

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதி என்று ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை ஏன் தொழ வேண்டும்  ? அதை விட இனியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், 


"அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்"

ஆதியைத் தொழுவதை விட இனியது அறிவுடயவர்களைச் சேர்வது.


இதைப் புரிந்து கொள்வது சற்று கடினம். அறிவுடையவர்களை சேர்வது என்ன அவ்வளவு இனிமையான செயலா என்றால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இனிமை தெரியும்.

அறிவுடையவர்கள் நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நம்மை மிக மிக உயரத்தில் கொண்டு சேர்க்கும் வலிமை பெற்றவர்கள். நமது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு சொல்பவர்கள். அவர்களோடு சில நேரம் இருந்து விட்டு வந்தாலே, நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு உற்சாகமும், வாழ்வில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தோன்றும்.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எத்தனை அறிவுடையவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என்று. இல்லை என்றால், இன்றிலிருந்து தொடங்குங்கள். தேடிப்  பிடியுங்கள். அப்புறம் பாருங்கள்  உங்கள் வாழ்வின் திசை போகும் போக்கை. எங்கோ உயரத்திற்கு போய் விடுவீர்கள்.

சரி, அதை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா ?


அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே


நான் எங்கே இருக்கிறேன் , இந்த அறிவில் சிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நான் எப்படி சேர்வது ? அவர்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா ?

நீங்கள் சேரக் கூட வேண்டாம் ...அறிவுள்ளவர்களை பார்த்தால் கூட போதும். நேரில் கூட பார்க்க வேண்டாம், கனவில் கண்டால் கூடப் போதும்...

பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தாள் ஆண்டாள். அவள் கனவிலும் அவன் வந்தான். 

"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் " என்றாள் . 

கனவு கண்டவள் , நிஜமாகவே கைப் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கனவு காணுங்கள். கனவு மெய்படும்.

சரி, இந்தப் பாடலை சற்று வேறு விதமாகப்  பார்ப்போம். 

பாடலை அடியில் இருந்து மேல் நோக்கிப் படிப்போம். 

முதலில் அறிவுடயவர்களை கனவில் காணுதல், பின் அவர்களை நேரில் காணுதல், பின் அவர்களோடு சேர்தல், சேர்ந்த பின் ஆதியைத் தொழுதல் , அதையும் கடந்து பின் ஏகாந்தமாய் இருத்தல்.

ஆதியோடு ஒன்றாகி விடுதல். ஏக அந்தம்.  முடிவில் எல்லாம் ஒன்றாக இருத்தல். 

ஏக போகமாய், நீயும் நானுமாய் , இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். 


இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ்)

அறிவுடையவர்களை தேடிக் கண்டு பிடியுங்கள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


(மேலும் வாசிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post.html )