Sunday, November 13, 2016

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?


தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.

இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து  கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?

பார்க்கப் போனான்.

கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.  நாம் மேலே போக வேண்டுமே அல்லால்  நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.

பாடல்

மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.

பொருள்

மை = கருமை, தீய எண்ணங்கள்

அறு = அறுந்த , இல்லாத

மனத்து  = மனதை கொண்டவன் (பரதன்)

ஒரு மாசு = ஒரு குற்றம் கூட

உளான் அலன் = இருப்பவன் அல்லன்

செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்

என்பது = என்பதை

தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த

சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)

‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி

இழைத்த = செய்த

கைதவம் = வஞ்சனை



ஐய! = ஐயனே 

 நீ = நீ 

அறிந்திலை = அறியவில்லை 

போலுமால்? = போலிருக்கிறது 

‘என்றாள் = என்றாள் 

பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள்.  அதில்  மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.

பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று  அவள் அறிவாள் .

இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?

அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும்  வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும்.   ,கோசலை   ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று   நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதை சரி செய்கிறான் கம்பன். 


அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான். 

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள்   போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான். 

எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.

அவை என்னென்ன என்று பார்ப்போம். 


Wednesday, November 9, 2016

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. 

பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது. 

தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன்  பெயர்.

தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம். 

எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது. 

தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது. 


தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும். 

‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘

என்பான் கம்பன்.

தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.

அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்

"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.

பாடல்

நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


பொருள்

நீ = நீ, கைகேயி

இனம் = இன்னும்

இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்

யானும் = நானும் (பரதன்)

நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்

“ஏ”  = ஏ

எனும் = என்று

மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்

எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்

ஆயவன் = தாய் போன்ற இராமன்

முனியும் = கோபம் கொள்வான்

என்று = என்று

அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்

அலால் = இல்லை என்றால்

“தாய்” எனும் = தாய் என்ற

பெயர் = பெயர்

எனைத்  = என்னை

தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.

 குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து  விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?

கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு  பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.

தவறு செய்த தாய் ஒருபுறம்.

தவறிப் போன அரச நீதி மறுபுறம்.

தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.

தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.

தவிக்கிறான் பரதன். 

சோதனைகள் மனிதனின் உண்மையான  குணத்தை வெளியில் காட்டும். 

பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். 

Tuesday, November 8, 2016

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்




நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.


ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.


எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.


அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல்

‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

பொருள்

‘மாண்டனன் = இறந்தான்

எந்தை = என் தந்தையாகிய தயரதன்

என் = என்னுடைய

தம்முன் = முன் பிறந்த இராமன்

மா தவம் = பெரிய தவம்

பூண்டனன் = மேற்கொண்டான்

நின் = உன்னுடைய

கொடும் = கொடிய

புணர்ப்பினால் = சூழ்ச்சியால்

என்றால் = என்றால்

கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை

அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்

நின்ற யான் = இருக்கும் நான்

ஆண்டனெனே = ஆண்டேன்

அன்றோ  =  இல்லையா

அரசை ஆசையால்? = அரசை ஆசையால்

இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு  ஒப்பாகும் என்றான்.

ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை  தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.

இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.

பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது  அறச் சிந்தனையே

Monday, November 7, 2016

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் ?

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்  ?


 இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு  பெரும்பாலும் அது நாயக நாயகி பாவமாகவே இருந்திருக்கிறது. 

சுந்தரர் ஒருவர் தான் அதை மாற்றினார். இறைவனை தோழனாக பாவித்தார்.

நட்பு அனைத்து உறவுகளிலும் உயர்ந்தது.

நட்பு என்றால் ஏதோ பெயரளவில் அல்ல.

சிவ பெருமானிடம் love லெட்டர் கொடுத்து அனுப்பியவர் சுந்தரர்...அதுவும் முதல் மனைவி இருக்கும் போதே , இரண்டாவது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து அனுப்பினார். சிவ பெருமானும் கொண்டு போனார்.

நட்பு என்றால் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும் அல்லவா.

சுந்தரர் சிவனைப் பார்த்து கேட்கிறார்

"இங்க பாரு, உன் பக்தர்கள் உன் அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று காத்து கிடக்கிறார்கள். நீயோ காலம் தாழ்த்திக் கொண்டே போகிறாய். நீ அருள் செய்வதற்கு முன் அவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வாய் ? அப்புறம் யாருக்கு அருள் செய்வாய் ? அது மட்டும் அல்ல, உனக்கு இருக்கும் அருளுக்கு , இந்த பக்தர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடும்...போ சீக்கிரம் அருள் செய் " கட்டளை இருக்கிறார்.

பாடல்

நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! 
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! 
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

பொருள்


நஞ்சி, = விரும்பி

“இடை இன்று நாளை” = இன்று வரும் , நாளை வரும்

என்று = என்று

 உம்மை  = உன்னை

நச்சுவார் = உள்ளன்போடு விரும்புவார் 


துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

பின்னைச் = அப்புறம்  பின்னால்

செய்வது என்? = என்ன செய்வது ?

அடிகேள், = அடிகளே கேள்

சொலீர் = ஆரவாரம் எழுப்பும் கழல்கள் அணிந்த திருவடிகளை உடையவரே

பஞ்சி = பஞ்சு

இடப் புட்டில் = இட்டு வைத்தால்

கீறுமோ? = உடைந்து விடுமோ

பணியீர், = சொல்வீர்

அருள்! = உம்முடைய அருள்

முஞ்சி இடைச் =  புல்லின் மேல்

சங்கம் = சங்கு

ஆர்க்கும் = சப்தம் எழுப்பும்

சீர் முதுகுன்றரே! = சிறந்த முது குன்று என்ற ஊரில் உள்ளவரே


நச்சி என்றால் விரும்பி , உள்ளன்போடு விரும்பி என்று பொருள். விரும்பப் படாதவன் செல்வம் ஊர் நடுவில் ஒரு நச்சு மரம் பழுத்தது போன்றது என்பார் வள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

யாரிடமும் அனுப்பு செலுத்தாதவன். அவனிடம் யாரும் போக மாட்டார்கள். அவனுக்கு செல்வம்  வந்தால் அது நச்சு மரம் பழுத்தது போலத்தான் என்கிறார்.

மானிட வாழ்வு கொஞ்சம் காலம்தான். சிவனே, உன் அடியார்கள் இறப்பதற்குள் போய் அருள் செய் என்று இறைவனையே பணிக்கிறார்.

துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். 

தமிழிலே மங்கள வழக்கு என்று ஒன்று உண்டு. 

எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும் என்பது தமிழ் மரபு. 

அதிலும் குறிப்பாக மங்கல சொற்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று  விதி செய்து வைத்து இருந்தார்கள். 

சொற்களுக்காக பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் திணறி இருக்கிறார்கள். 

கடைசியில் இறைவனிடமே சென்று , நீயே ஒரு சொல் எடுத்துக் கொடு என்று வேண்டி , வாங்கியும் இருக்கிறார்கள். 

சேக்கிழாருக்கு , அருணகிரி நாதருக்கு, கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு இறைவனே  அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. 

இலக்கியம் படிக்கும் போது இடையிடையே  இலக்கணமும் சற்று படிப்போமே 

இறைவனிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையும் இல்லை. 

உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள். 

தமிழில் அன்று வைதாரையும் வாழ வைத்தோன் என்பார் அருணகிரி நாதர். 

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

என்பது கந்தரலங்காரம் 


சுந்தரர் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர். தேவாரம் என்பது திருநாவுக்கரசர்  பாடிய பாடல்களை மட்டுமே குறிக்கும். எளிதாக அடையாளம் காண  தேவாரம் என்று தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

திருபாட்டை  தேடிப் படியுங்கள் . அத்தனையும் தேன் .


இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும்

இராமாயணம் - பரதன் 12 - நெடியவன் முனியும் 


"உன் தந்தை இறந்து விட்டார். இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு சீதையும், இலக்குவனும் போய் விட்டார்கள்" என்று கைகேயி பரதனிடம் கூறினாள் .


“குற்றம் ஒன்று இல்லையேல்,
    கொதித்து வேறு உேளார்
செற்றதும் இல்லையேல்
    தயெ்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே
    பிள்ளை கான் புக
உற்றது என்? பின் அவன்

இராமன் குற்றம் எதுவும் செய்யவில்லையென்றால், வேறு ஒருவர் செய்ய வில்லையென்றால், தெய்வத்தால் ஆனது இல்லை என்றால், பெற்றவன் இருக்க இராமன் ஏன் கானகம் போனான் என்று பரதன் கேட்கிறான்.

உன் தந்தை எனக்கு தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பினேன், தயரதன் அது கேட்டு மாண்டு போனான் என்றாள்.

பரதனால் தாங்க முடியவில்லை.

இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்.

அரசு கையில் வந்து விட்டது. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். தயரதனும் இறந்து விட்டான். இனி என்ன வேண்டும் ? அரசை மகிழ்ச்சியாக ஆளலாம் என்று நினைக்கலாம். சந்தோஷப் படலாம்.

அல்லது, இது சரி இல்லை. நமக்கு எதுக்கு இந்த பழிச் சொல். பேசாமல் இராமனிடமே இந்த அரசை கொடுத்து விடலாம் என்று நினைக்கலாம். என்று பழிக்கு அஞ்சி இருக்கலாம்.

அல்லது, இந்த அரசு என்பது பெரும் பாரம். இதை யார் கட்டி இழுப்பார். இராமனே இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க நினைக்கலாம்.

பரதன் இது எதுவும் செய்யவில்லை.

கோபத்தில் கொந்தளிக்கிறான்.

கைகேயியை கொல்லப் பார்க்கிறான். இப்படி ஒரு பாதகத்தை செய்த அவளை தண்டிக்க நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் கோபப் படுவான்  என்று நினைத்து கைகேயியை ஒன்றும்  செய்யாமல் விடுகிறான்.

பாடல்

கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;

பொருள்

கொடிய = கொடுமையான

வெங் = வெம்மையான

கோபத்தால் = கோபத்தால்

கொதித்த = கொதித்த

கோளரி = சிங்கம் போன்ற பரதன்

கடியவள் = கடுமையானவள்

தாய் எனக் = தாய் என்று

கருதுகின்றிலன் = நினைக்கவில்லை

‘நெடியவன் முனியும்’ = பெரியவன் கோபிப்பான்

என்று = என்று

அஞ்சி = பயந்து

நின்றனன் = நின்றான்

இடிஉரும் = இடி இடிப்பது

அனைய = போன்ற

வெம் மொழி = சூடான சொற்களை

 இயம்புவான் = சொல்லுவான்

ஒரு பக்கம் தாய். என்னதான் அவள் தவறு செய்திருந்தாலும் , தாயின் மேல் உள்ள அன்பு  இல்லாமல் இருக்காது. கைகேயி பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராஜ்யத்தை பெற்றுத் தந்திருக்கிறான். சொல்லப் போனால் பரதன் அவளுக்கு நன்றி சொல்லலாம். இல்லை என்றால்  சும்மா இருக்கலாம். அவள் மேல் கோபம் கொள்ள ஒரு காரணமும் இல்லை - அறம் பிழைத்த ஒன்றைத் தவிர.

இன்னோரு பக்கம், இராமன். அவன் மேல் கொண்ட பக்தி. காதல்.

இன்னொரு பக்கம், அரச நீதி. தர்மம். அறம் .

தாயே ஆனாலும், தனக்கு ஒரு பெரிய அரசையே பெற்றுத் தந்தாலும், அது  அறம் அல்லாத  வழியில் வந்தது என்று அறிந்து கொதித்துப் போகிறான். அப்படி செய்த  கைகேயியை கொன்று விடலாமா  என்று கூட நினைக்கிறான்.

ஆனால், அப்படி செய்தால் இராமன் சினம் கொள்வான். கைகேயியை கொன்றால்  இராமானுக்குப் பிடிக்காது என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் நின்றான்.

அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம்  என்று நினைக்கிறான்.

இராம பக்தி.

பின்னால் பார்க்கப் போகிறோம். இராமனே சொன்னால் கூட , அறம் என்று அவன் நினைத்ததை , பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும்  விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

அதுதான் பரதன்.


Sunday, November 6, 2016

திருக்குறள் - உற்றநோய் நீக்கி

திருக்குறள் -  உற்றநோய் நீக்கி


சில பேரிடம் உதவி என்று கேட்டுப் போனால், "நீ அப்படி செஞ்சிருக்கக் கூடாது. இப்படி செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சதால தான் இப்ப இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்ட " என்று நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒழுங்கா படிக்க வேண்டிய நேரத்தில பிடிச்சிருந்தா நல்ல மார்க்கு கிடைச்சிருக்கும், இப்ப அழுது என்ன புண்ணியம் என்று கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் பழங்கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

கண்டதையும் சாப்பிட வேண்டியது, அப்புறம் acidity , வயிற்று வலின்னு தவிக்க வேண்டியது என்று ஏற்கனவே வலியில் துடிக்கும் ஒருவனுக்கு மேலும் வலிக்கும் படி ஏதாவது சொல்லுவது.

பெரியவர்கள் என்றால், முதலில் இருக்கின்ற பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும். பின் , அந்த மாதிரி பிரச்சனை இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். அப்படிப் பட்ட பெரியவர்களை , அவர்களைப் போற்றி அவர்கள் உறவை கொள்ள வேண்டும்.

பாடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பொருள்

உற்றநோய் = வந்த துன்பத்தை

நீக்கி = நீக்கி

உறாஅமை = மீண்டும் அவை வராமல்

முற்காக்கும் = முன்பே காத்துக்  கொள்ளும் வழி சொல்லும்

பெற்றியார்ப் = தன்மை உடையவரை

பேணிக் = போற்றி

கொளல் = அவர்கள் உறவை ன், நட்பை கொள்ள வேண்டும்.


நோய் என்றால் துன்பம்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

என்பது குறள் . தனக்கு துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு துன்பம்  வேண்டும் என்று நினைக்கக் கூடாது.


அது என்ன உற்ற நோய் ? உற்ற நோய் என்றால் வந்த துன்பம்.  

துன்பம் இரண்டு வழியில் வரும். 

தெய்வத்தால் வருவது. மக்களால் வருவது. 

தெய்வத்தால் வருவது என்பது (an act of God ) வெள்ளம் , நில நடுக்கம், தீ, பெருங்காற்று, பெரிய நோய்  போன்றவை. 

மக்களால் வருவது என்பது பகை, திருட்டு, கொள்ளை, பழி சொல்லுதல் போன்றவை. 

பெரியோர் என்பவர் இவற்றில் இருந்து நம்மை காப்பார்கள். 

தெய்வத்தால் வருவதில் இருந்து எப்படி காப்பார்கள் என்றால், இயற்கையை நன்றாக ஊன்றி கவனித்து,  அதன் தன்மை புரிந்து, இந்த இந்த நிலை இருந்தால், இன்னின்ன நிகழும் என்று கணித்து கூறுவார்கள்.  இப்படி வெயில் அடித்தால் , இந்த வருடம் அதிகம் மழை பொழிவு இருக்கும். எனவே, ஏரிகளை தூர் வாரி, சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று வருவது உரைப்பார்கள். 

அறிவில் சிறந்த அமைச்சர்கள், பண்டிதர்கள் இவர்களை ஒரு அரசன் துணையாக  வைத்துக் கொள்ள வேண்டும்.

அது போல இன்றைய தினத்தில்  ஒரு நிறுவனத்தின் முதலாளி, CEO  தனக்கு வரும் துன்பங்களில் இருந்து  தன்னை காக்கும் வழி சொல்லும் நல்லவர்களை  துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இல்லறத்தில் இருப்பவனுக்கு மனைவியே நல்ல துணை. ஒருவனுக்கு வரப் போகும் மற்றும்  வந்த துன்பங்களில் இருந்து ஒருவனை காப்பவள் அவன் வாழ்க்கை துணை நலமான மனைவியே. 

மக்களால் வரும் துன்பங்களை சாம, தான, பேத , தண்டம் என்ற வழிகளில் சென்று  அந்தத் துன்பங்களில் இருந்து அரசனை காக்க வேண்டும். 


"பேணிக் கொளல்"

பேணுதல் என்றால் போற்றுதல். 

தந்தை தாய் பேண் என்பது அவ்வை வாக்கு. (ஒண்ணாங் கிளாசில் படிச்ச ஆத்திச் சூடி நினைவுக்கு வருகிறதா ?)

கப்பிய கரி முகன் அடி பேணி என்பது அருணகிரியார் வாக்கு. 


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
   கப்பிய கரிமுக                      னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை                கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
   மற்பொரு திரள்புய                    மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
   மட்டவிழ் மலர்கொடு                  பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய                     முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
   அச்சது பொடிசெய்த                  அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை                   இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
   அக்கண மணமருள்                  பெருமாளே.
 

என்பது திருப்புகழ். 

முப்பது முவர்கத்து அமரரும் அடி பேண  என்பதும் அவர் வாக்கே 

முத்தைத்தரு பத்தித் திருநகை
                அத்திக்கிறை சத்திச் சரவண
                 முத்திக்கொரு வித்துக் குருபர                  எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
                முற்பட்டது கற்பித் திருவரும்
                முப்பத்துமு வர்க்கத் தமரரும்                  அடிபேணப்
 பத்துத்தலை தத்தக் கணைதொடு
                ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                 பட்டப்பகல் வட்டத் திகிரியில்                  இரவாகப்
 பத்தற்கிர தத்தைக் கடவிய
                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                பட்சத்தொடு ரட்சித் தருள்வது                   மொருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
                நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாட
 திக்குப்பரி அட்டப் பயிரவர்
               தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
               சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக                             எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
               குக்குக்குகு குக்குக் குகுகுகு                      
                குத்திப்புதை புக்குப் பிடியென                    முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
               வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
               குத்துப்பட ஒத்துப் பொரவல                         பெருமாளே

பேணுதல் என்றால் போற்றுதல்.

பேண் என்ற சொல்லடியாக வந்தது தான் பெண் என்ற சொல். 

போற்றுதலுக்கு உரியவள் என்று பொருள் 

ஏதோ பணம் கொடுத்து நல்லவர்களை, பெரியவர்களை துணையாகக் கொள்ளக் கூடாது. அவர்கள் மனம் விரும்பும்படி, அவர்களைப் போற்றி அவர்களின் உறவைப் பெற வேண்டும். 

அவர்கள் , நமக்கு வந்த துன்பத்தை போக்குவது மட்டும் அல்ல, இனி அந்த மாதிரி  துன்பங்கள் வரமால் இருக்கவும் வழி சொல்லித் தருவார்கள். 

அப்படி எத்தனை பெரியவர்களை உங்களுக்குத் தெரியும் ?

அப்படி ஒரு பெரியவராக நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?

சிந்தியுங்கள்.


Saturday, November 5, 2016

இராமாயணம் - பரதன் 11 - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம்  - பரதன் 11  - தீயன இராமனே செய்யுமேல்


இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.

உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். "இந்த துக்கத்தை மாற்ற இராமனின் திருவடிகளை பற்றினால் தான் சரி வரும் " என்று எண்ணி, இராமன் எங்கே என்று கேட்கிறான் பரதன்.

இராமன் கானகம் போய் விட்டான் என்று சொல்கிறாள் கைகேயி.

ஆடிப் போய் விடுகிறான் பரதன். இராமன் ஏன் கானகம் போனான் ? அவனை யார் போகச் சொன்னது ? அவன் என்ன தவறு செய்தான் ? அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு போலல்லவா எண்ண வேண்டும் . இராமன் தயரதன் இறக்கும் முன் போனானா ? அல்லது இறந்த பின் போனானா என்று கேட்கிறான்.

பாடல்

தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

தீயன = தீமையான செயல்களை

இராமனே = இராமனே

செய்யுமேல் = செய்து இருந்தாலும்

அவை = அந்தச் செயல்கள்

தாய் = ஒரு தாய்

செயல் =செய்த செயல்

அல்லவோ = அல்லவோ ?

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது = இராமன் போனது

தாதை = தந்தை

விண் = வானம்

புக்க = புகுந்த

பின்னரோ? = பின்னாலா ?

ஆயதன் = அல்லது

முன்னரோ? = அதற்கு முன்னாலா ?

அருளுவீர்’  = தயவு செய்து சொல்லுங்கள்

என்றான் = என்றான்

இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே செய்து இருந்தாலும், அது ஒரு தாய் செய்த தவறு  மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறான் பரதன்.

அது என்ன தாய் செய்த தவறு ?

சில சமயம் குழந்தை பால் குடிக்காமல் அடம் பிடிக்கும். ஒரு தாய் அந்த குழந்தையை  இறுக்கிப் பிடித்து கட்டாயமாக பால் புகட்டுவாள். பார்ப்பதற்கு ஏதோ  அசுர வைத்தியம் போல இருக்கும்.

குழந்தை நோய் வாய்ப்பட்டால் , மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கசக்கும் என்று  குழந்தை குடிக்காது. தாய், தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையில் குழந்தையை இறுக பிடித்துக் கொண்டு, வலு கட்டாயாமாக வாயைத் திறந்து  மருந்தை புகட்டி விடுவாள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன இவள்  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே என்று தோன்றும்.

அவள் அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும், அது அந்த குழந்தையின் நல்லதுக்கே.

அது போல, ஒரு வேளை இராமன் தவறே செய்திருந்தாலும், அது ஒரு தாய் செய்த  தவறு போல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.

பல பேர் ஒரு சின்ன துன்பம் வந்தால் கூட இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா ? அவனை வணங்குவது சரி தானா ? நாம் எவ்வளவு எல்லாம் பூஜை பண்ணினோம்,  நமக்கே இந்த துன்பங்கள் வருகிறதே என்று இறைவனை சந்தேகப் படுவார்கள், அல்லது

கடவுளே உனக்கு கண் இல்லையா, உனக்கு கருணை இல்லையா என்று கடவுளை ஏச தலைப்படுவார்கள்.

பரதன் சொல்கிறான், இராமன் துன்பமே தந்தாலும், அது தாயின் அன்பில் விளைந்த துன்பம் , அது நல்லதுக்கே என்று கொள்ள வேண்டும் என்கிறான்.

நன்றே செய்வாய். பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்பார் மணிவாசகர்.

அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

என்பது திருவாசகம்.

நல்லது எது கெட்டது எது என்று அவளுக்குத் தெரியும். எனக்கு என்ன தெரியும். நீ தீமை செய்தால் கூட அது என் நன்மைக்கே. என்னுடையது என்று இருந்த அனைத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று உருகுகிறார் பட்டர்.



நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது 
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம் 
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக் 
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.


சரணாகதி  தத்துவத்தின் சாரம்.

கிடைப்பதை ஏற்றுக் கொள்ளுவது. 

இறைவன் எதைத் தந்தாலும்  அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. 

அது எப்படி  துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும். நடை முறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வி  வரும்.

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்றால், அந்த துன்பத்தை நாம் வெறுக்க மாட்டோம் அல்லவா ?

வள்ளுவர் சொல்கிறார்.  துன்பத்திலும் ஒரு நண்மை உண்டு. அந்தத் துன்பம்  நமக்கு  உரியவர்கள் யார். நமக்கு நல்லது செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள உதவும் அளவு கோல்  என்கிறார். 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

சிந்தித்துப் பாருங்கள்.