Wednesday, November 30, 2016

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?

திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?


பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்  
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்  
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற  
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்  
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்  
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்  
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்  
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?


போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக  மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக  காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக  உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக  நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப்  படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை  எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.

கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.

கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த  முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள்  போன்ற உயர்ந்த நூல்களை  பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை  ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும்  பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை  கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக  இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது  விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ  = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்  நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும்  நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?

கொடிய முயற்றுலகீர்  = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும்  உலகத்தீரே

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன்  வரும்போது

மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது  நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால்  ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.

சிந்திப்போம்.


Tuesday, November 29, 2016

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப

திருமுருகாற்றுப்படை - உலகம் உவப்ப 


ஒரு அரசனிடமோ  அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர் , மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் முதல் பாடல்....

"உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறம் எழும் , பலர் புகழும் சூரியனை கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல , இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி"

பாடல்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
 பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

பொருள்

உலகம் = உலகம்

உவப்ப = மகிழ

வலன் = வலப்புறமாக

ஏர்பு = எழும்

திரிதரு =  வானில் திரிகின்ற

 பலர்புகழ் = பலரும் புகழும்

ஞாயிறு = சூரியன்

கடல்கண் டாஅங்கு = கடலில் இருந்து எழுவதைப் போல

 ஓஅற = இடைவெளி இல்லாமல் 

இமைக்கும் = இமைக்கும் நேரம்

சேண்விளங்கு = சேண் என்றால் உயரம். உயரே விளங்கும்

அவிர் = பிரகாசமான

ஒளி = ஒளி , வெளிச்சம்


இது என்ன பாடல். கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா ? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? இதைப் படித்து  என்ன ஆகப் போகிறது ? என்று கேள்விகள் எழலாம்.

சற்று சிந்திப்போம்.

உலகம் உவப்ப - உலகம் மகிழ.

முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று  ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். 

என்று ஆரம்பித்தார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

இரண்டாவது,  உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள்  மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ  என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார்.

சேரவாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் அழைத்தார் போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும் ? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா ? என்று யோசித்தார்.

இரவில் அனைத்து உயிர்களும்  உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நமதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன்  எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது.

இருள் துன்பத்திற்கு உதாரணம். ஒளி இன்பத்திற்கு உதாரணம். எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து , வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து   போகுமா.நிரந்தரமான இன்பம் இல்லையா ?  மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா ? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளி....

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. அது  மட்டும் அல்ல.

ஆறாவது,  சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே ? எவ்வளவு உயரத்தில் ?

நமது உடலில் 7 சக்கரங்கள், அல்லது சக்தி இருக்கும் இடங்கள் என்று கூறுகிறார்கள். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்யா, சஹஸ்ரார் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதில் கடைசியாக கூறிய சஹஸ்ரார் என்பது உடலுக்கு வெளியே உள்ள சக்கரம். நம் தலைக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் உள்ள ஒரு இடம்.  சஹஸ்ரார் என்றால் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலர் என்று அர்த்தம்.  

மூலாதாரம் - தண்டுவடத்தின் அடிப் பகுதி
ஸ்வாதிஸ்தானம் - பிறப்புறுப்பு
மணிப்பூரஹம் - தொப்புள்
அனாஹதம் - இருதயம்
விசுத்தம் - கழுத்து
ஆக்ஞா - புருவ மத்தி
சஹஸ்ரார் - உச்சந்தலைக்கு ஓரங்குலம் மேலே

இறைவனை வணங்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்க வேண்டும் என்று கூறியது எதற்கு என்றால் , சஹஸ்ரார் என்ற அந்த இடத்தில் உள்ள அந்த ஒளியை தொட்டு காண்பிக்க.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

என்பார் மணிவாசகர்.

சிரம் குவிப்பவரை ஓங்கி வளரச் செய்வான். கரம் குவித்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவது ஒரு முறை. இரு கையையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்குவது இன்னொரு முறை.

மணிவாசகர் வேலை மெனக்கெட்டு இரண்டு வரியை எதற்காக செலவிடுகிறார் ? இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பலன்களை சொல்கிறார்.

ஏன் ?

இரண்டும் வெவ்வேறானவை என்பதால்.

சேண் விளங்கு என்றால், அந்த உயர்ந்த இடத்தில் என்று பொருள்.

சற்று கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும். உடலுக்கு வெளியே உள்ள ஒரு இடம் , உடலில் உள்ள மற்ற சக்கரங்களோடு தொடர்பு கொண்டது. சக்தியை மூலாதாரத்தில் இருந்து கிளப்பி அங்கே கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். அது போல, அங்கே உள்ள ஒளி உள்ளுக்கும் செல்லும் என்பது சொல்லாமல் சொன்ன கருத்து.

அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது ?


சேண் விளங்கு அவிர் ஒளி

பிரகாசமாக இருக்கும் ஒளி. இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் சுடர் விடும் ஒளி.

சூரியனின் ஒளியை கண்ணை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். வீட்டின்  கதவை மூடிக் கொண்டால் மறைத்து விடலாம். இந்த சேண் விளங்கு அவிர் ஒளி  உள்ளுக்குள் சுடர் விடும் ஒளி. அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை தரும் ஒளி.

எல்லோரிடமும் ஏதோ ஒரு ஞானம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாம் அறிந்தாரும் இல்லை, ஏதும் அறியாதரும் இல்லை.

ஆனால், நம் ஞானம் ஆணவம், கோபம், காமம் இவற்றால் மறைந்து நிற்கிறது.  இவை நீங்கும் போது , அந்த ஞான ஒளி மேலே    சென்று ஒளி விடும்.

இது முதல்  மூன்று வரிக்கு அர்த்தம்.

முழு  புத்தகத்தையும் படித்துப் பாருங்கள். 

Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும். 

 


Tuesday, November 22, 2016

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?

பெரிய புராணம் - பிள்ளைகளை எதற்கு பெற வேண்டும் ?


பிள்ளைகள் எதற்கு என்று கேட்டால், "எனக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேண்டாமா ?" என்று சிலர் கூறுவார்கள்.

அவர்கள் விரும்பியபடியே பிள்ளை பிறக்கும்...கொள்ளி போட ...சில சமயம் உயிரோடு இருக்கும் போதே கூட.

சிலர் , "எனக்குப் பிறகு இந்த சொத்தை எல்லாம் ஆள ஒரு வாரிசு வேண்டாமா ?" என்று பிள்ளை பெறுவதற்கு காரணம் சொல்லுவார்கள். அவனுக்கு வரும் பிள்ளை, அவன் மேல் கோர்ட்டில் கேஸ் கொடுக்கும்...."சொத்தை பிரித்து தா"..என்று.

இன்னும் சிலரோ, "வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பிள்ளை வேண்டாமா " என்று கேட்பார்கள்.

இதெல்லாம் சுயநலத்தில் இருந்து எழும் ஆசைகள்.

திருஞான சம்பந்தரின் தந்தையார் , தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தவம் இருந்தார். எதற்காக தெரியுமா ?

பாடல்

மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.


சீர் பிரித்த பின் 

மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்
அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடி கமல 
நினைவுற முன் பர சமய நிராகரித்து, நீறாக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெற ப் போற்றும் தவம் புரிந்தார்.


பொருள் 

மனை = வீடு

அறத்தில்= அறத்தில்

இன்பம் = இன்பம்

உறு = பெறும் , பெற

மகப் = பிள்ளைகளை

பெறுவான் = பெறுவதற்காக

விரும்புவார் = விரும்பி

அனைய = அந்த

நிலை = நிலையில்

தலை = சிறப்பாக

நின்றே = நின்றே

ஆடிய = ஆடிய

சேவடி = சிவந்த திருவடிகளை

கமல = தாமரை போன்ற

நினைவுற = மனதில் நினைத்து

முன் = முன்பு

பர = மற்ற

சமய = சமயங்களை

நிராகரித்து = நிராகரித்து

நீறாக்கும் = திருநீற்றின் பெருமையை விளங்கும்படி செய்து

புனை = அணியும் (புனைந்து கொள்ளுதல் )

மணிப்பூண் = மணிகள் கொண்ட பூணை

காதலனைப் = காதல் கொண்ட மகனை

பெறப் = பெறுவதற்காக

போற்றும் = போற்றுதலுக்கு உரிய

தவம் புரிந்தார் = தவத்தினை செய்தார்

பிள்ளைகளைப் பெறுவதைப் பற்றி பேச வந்த வள்ளுவர் கூறுவார்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பெறக் கூடியவற்றில் அறிவான பிள்ளைகளை பெறுவதைத் தவிர சிறந்தது ஒன்றும் இல்லை என்றார். 

அழகான பிள்ளை, ஆரோக்கியமான பிள்ளை என்று சொல்லவில்லை ... அறிவான பிள்ளை என்றார். 

திருஞான சம்பந்தரின் தந்தையார் பிள்ளை வேண்டி தவம் இருந்தார்...

எதற்காக பிள்ளை வேண்டினார் ?

இல்லறத்தில் இருந்து பெறும் இன்பம் பிள்ளைகள் மூலம் வரும். 

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், அவர் பேசுவதைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பார் வள்ளுவர். 

அந்த இன்பத்தை பெற தவம் செய்தார்.

அது மட்டும் அல்ல. 

"பர சமய நிராகரித்து, நீறாக்கும்"

மற்ற சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமையை விளங்கச் செய்ய பிள்ளை வேண்டும் என்று  தவம் செய்தார். 

பிள்ளைகளை பெறுவது , மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு. 

கொள்ளி வைப்பதற்கோ, சொத்தை அனுபவிப்பதற்கோ அல்ல.

பர சமயங்களை ஏன் நிராகரிக்க வேண்டும் ?

மக்கள் எது உண்மை, எது தவறு என்று அறியாமல் தடுமாறிய சமயம். 

எது அறம் , எது அறம் அல்லாதது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம். 

பலப் பல சமயங்கள். ஆளுக்கு ஒன்றை கூறுகிறார்கள். பாமர மக்களுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது.  

உண்மை புரியாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு சீரழிந்து கொண்டிருந்த நேரம். 

அந்த நேரத்தில், மற்ற பொய்யான சமயங்களை நிராகரித்து, திருநீற்றின் பெருமை விளங்க ஒரு புதல்வன் வேண்டும் என்று தவம் செய்தார். 

மக்கள் உய்யும் பொருட்டு பிள்ளை வேண்டினார்.

அது தான் கருத்து. 

நம் பிள்ளைகளும், வீட்டுக்கு மட்டும் இன்றி நாம் வாழும் சமுதாயத்துக்கும், இந்த  நாட்டுக்கும்,மற்றைய உயிர்களுக்கும்  பயன் படும்படி வாழ நாம் கற்றுத் தர வேண்டும். 

தேவர்கள் , சிவனை வேண்டி , தங்கள் துயர் தீர்க்க ஒரு பிள்ளையைத் தர வேண்டும் என்று வேண்டினர். முருகன் தோன்றினான். 

ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.

என்பது கந்த புராணம். 

தயரதனுக்கு நீண்ட நாள் பிள்ளை இல்லை. அவனுடைய குல குருவான வசிட்டரிடம் சென்று தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கூறினான். பிள்ளை எதற்கு தெரியுமா ? தனக்கு பின்னால் அரசை ஆள  அல்ல.

தனக்குப் பின்னால் , இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள் ? அவரக்ளை காக்க வேண்டுமே என்ற கவலையில் பிள்ளை வேண்டினான். 

‘அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ.

என்பது கம்ப இராமாயணம். 

அறுபதினாயிரம் ஆண்டுகள் , பகைவர்களை ஒடுக்கி, இந்த உலகை நான் காத்து வந்தேன். வேறு ஒரு குறையும் இல்லை. எனக்குப் பின் இந்த வையகம் துன்பப் படுமே என்று ஒரு வருத்தம் இருக்கிறது என்று கூறினான். 

இந்த உலகைக் காக்க ஒரு பிள்ளை வேண்டினான். அப்படியே பெற்றான்.  

பிள்ளைகளைப் பெறுவது, உலக நன்மைக்காக என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. 

பெரிய புராணம் காட்டும் வழியும் அதுவே. 


 

Sunday, November 20, 2016

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....

அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.

அதில் ஒன்று

பாடல்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்

இல்லக = இல்லத்தினுள்

விளக்கது = உள்ள விளக்கானது

விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது

சொல்லக = சொல்லினுள் உள்ள

விளக்கது = விளக்கானது

சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது

பல்லக = பலருடைய மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

பலருங் காண்பது = எல்லோரும் காண்பது

நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்

என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?

விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.

அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.

அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.

இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.

அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?

அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.

"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"

அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.

சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?

அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.

"பல்லக விளக்கது பலரும் காண்பது"

பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.

அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?

நல்லவர்களின் மனதில் உள்ளது.

நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.

கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?

அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.



விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.





நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.