Tuesday, January 3, 2017

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?


நண்பர்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். அது நல்ல திசையிலும் இருக்கலாம், அல்லது மற்ற வழியிலும் இருக்கலாம்.

நண்பர்களை எப்படி தேர்தெடுப்பது ?

நம்மை விட படித்தவர்கள், செல்வத்தில், அதிகாரத்தில் , புகழில் உயர்ந்தவர்களை நாம் நட்பாக பெற விரும்புவோம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

நாலடியார் ஓர் எச்சரிக்கை தருகிறது.

படித்தவர்கள், அறிவாளிகள் , புத்திசாலிகள் சில சமயம் தங்களுடைய சுய நலத்துக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், வலிமை அற்ற சில நண்பர்களோ நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை மன்னித்து நம் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

யானை இருக்கிறதே, அது வலிமையானதுதான், கம்பீரமானதுதான் இருந்தாலும் சில சமயம் தன்னை பழக்கிய பாகனையே அது மிதித்து கொன்று  விடுகிறது. நாய் இருக்கிறதே அது சாதாரண விலங்குதான் . நாம் அதை எட்டி உதைத்தாலும், திட்டினாலும், அது நம் மீது தொடர்ந்து அன்பு காட்டும். நாம் அதன் மீது வேலை எறிந்தாலும் , அந்த வேல் உடலில் தைத்து இருந்து வேதனை தந்தாலும்  , அதையும் மறந்து அந்த நாய் நம் மீது அன்பு செலுத்தும். அது போல, நம் பிழை பொறுத்து, நம் மீது அன்பு கொண்டவர்களை நாம் நட்பாகக் கொள்ள வேண்டும்.

பாடல்

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

பொருள்

யானை யனையவர் = யானை அனையவர் = யானை போன்றவர்

நண்பொரீஇ = நட்பைக் கொள்ளாமல்

நாயனையார் = நாய் அனையர் = நாய் போன்றவர்

கேண்மை = நட்பை

கெழீஇக் கொளல்வேண்டும்; = தழுவிக் கொள்ள வேண்டும்

யானை = யானையானது

அறிந்தறிந்தும் = தன்னை நன்றாக அறிந்த

பாகனையே கொல்லும் = பாகனையே கொல்லும்

எறிந்தவேல் = தன் மேல் எறியப்பட்ட வேல்

மெய்யதா = உடலில் தைத்து இருந்த போதும்

வால்குழைக்கும் நாய் = வாலை குழைத்து வரும் நாய்


அறிவும், செல்வமும், அதிகாரமும் நட்புக்கு அடிப்படை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அது சில சமயம் அதுவே ஆபத்தாகக் கூட முடியலாம்.

அன்புதான் நட்புக்கு அடிப்படை.

அது மட்டும் அல்ல,

நாம் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்றால், நம் நண்பர்கள் செய்யும் துன்பத்தையும்  பொறுத்துக் கொள்ள வேண்டும். நட்பில் சில சமயம் சில வேண்டாத   வார்த்தைகள் வந்து விழுந்து விடலாம், சந்தேகம் வரலாம், வேறு ஏதேனும்  மனக் கசப்பு வரலாம். அவற்றை மறந்து அன்போடு இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நாயிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.

நாய் என்றால் ஏதோ ஒரு கேவலமான பிராணி என்று தான் இலக்கியங்கள்  பேசி வந்திருக்கின்றன.

நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு என்பார் மணிவாசகர்.

நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து என்பதும் அவர் வாக்கே.

அதை மாற்றி நாய் போன்ற குணம் உள்ளவர்களின் நட்பை கொள்ள வேண்டும் என்று சொல்கிறது  நாலடியார்.

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நண்பர்களாய் இருக்கிறோம் ?


Monday, January 2, 2017

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர்

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர் 


பொதுவாக இறைவனிடம் வேண்டுபவர்கள் "கடவுளே என்னை காப்பாற்று" என்று வேண்டுவார்கள். என்னை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்று, இந்த வறுமையில் இருந்து காப்பாற்று, இந்த வலியில் இருந்து காப்பாற்று, இந்த பிறவிப் பிணியில் இருந்து காப்பாற்று என்று வேண்டுவார்கள்.

கடவுளுக்கு ஏதாவது துன்பம் வந்து விடக் கூடாது , அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காதலில் பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

திருவாசகத்தை தொடங்கிய மணிவாசகர், "நமச்சிவாய வாழ்க" என்று  தொடங்கினார்.

தசரதனுக்கு ஈமக் கடன்களை முடித்துவிட்டு , இராமனை கண்டு அவனை நாட்டுக்கு அழைத்து வர  பரதன் புறப்படுகிறான். கங்கை ஆற்றின் ஒரு கரையில் தங்கி இருக்கிறான். மறு கரையில் குகன் நிற்கிறான்.

பரதன் ஏதோ இராமன் மேல் சண்டை போடத் தான் வந்து விட்டான் என்று எண்ணி கோபம் கொள்கிறான் குகன்.


பாடல்


கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
‘கிட்டியது அமர் ‘எனக் கிளரும் தோளினான்.

பொருள் 

கட்டிய = இடையில் கட்டிய

சுரிகையன் = உடை வாளை உடையவன்

கடித்த வாயினன் = உதட்டை கடித்துக் கொண்டு நிற்கிறான்

வெட்டிய மொழியினன் = கோபத்தில் பேச்சு கோர்வையாக வரவில்லை. துண்டு துண்டாக வந்து விழுகிறது.

விழிக்கும் தீயினன் = கண்கள் தீயைக் கக்குகிறது

கொட்டிய துடியினன் = துடி என்பது ஒரு தோற் கருவி. போர் முரசை கொட்டுகிறான்

குறிக்கும் கொம்பினன் = கொம்பு என்பது ஒரு காற்று கருவி. போர் சங்கம் ஊதி விட்டான்.

‘கிட்டியது அமர் ‘ = கிட்டியது போர்

எனக் கிளரும் தோளினான் = என்று கிளர்ந்து எழும் தோளை கொண்டவன்

இராமனுக்கு ஏதோ ஒரு தீங்கு என்று முடிவு செய்துவிட்டான். இராமனை காக்க , அவனுக்காக போர் செய்ய புறப்பட்டு விட்டான்.

கிட்டியது அமர் என்ற வார்த்தை கொஞ்சம் உற்று நோக்கத் தக்கது.

தமர் என்றால் உறவு.

அமர் என்றால் போர்

கிட்டியது என்ற வார்த்தையையும் அமர் வார்த்தையையும் சேர்த்து வாசித்தால்

கிட்டியதமர் என்று வரும். உறவு கிடைத்தது என்ற பொருளில்

பிரித்து வாசித்தால்

கிட்டியது அமர் - போர் கிடைத்தது என்ற பொருளில்

சேர்ந்து இருந்தால் உறவு. பிரித்துப் பார்த்தால் பகை. சேர்ந்து இருக்க படிக்க வேண்டும்.

"சேர வாரும் செகத்தீரே" என்றார் தாயுமானவர்.

"ஒன்றாகக் காண்பதுவே காட்சி" என்றார் ஒளவையார்

இராமன் மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவனுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று குகன் தவிக்கிறான்.


அங்கே பாரதனோ...

Sunday, January 1, 2017

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 


சிலப்பதிகாரம் ஒரு ஆச்சரியமான நூல். வில்லன் என்ற பாத்திரமே இல்லாத ஒரு காப்பியம் என்றால் அது சிலப்பதிகாரம் தான். 

இராமாயணத்தில் - இராமன், இராவணன் 
பாரதத்தில் - பாண்டவர்கள், கௌவரவர்கள் 
கந்த புராணத்தில் - கந்தன் , சூரபத்மன் 

இப்படி எந்த கதையை எடுத்துக் கொண்டாலும், அதில் கதாநாயகன் இருப்பான், அவனுக்கு எதிராக ஒரு பலமான வில்லன் இருப்பான். வில்லனை முறியடித்துத்தான் கதாநாயகன் தன் வலிமையை காட்ட முடியும். 

சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு வில்லன் என்று யாரும் கிடையாது. 

விதிதான் வில்லன். 

நடக்கும் சம்பவங்கள் தான் வில்லனின் விளையாட்டு.

ஒரு சின்ன சம்பவம், கதையின் போக்கையே மாற்றி விடுகிறது. 

பாண்டிய மன்னன் அவையில் இருந்து நடனத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் அங்கு நடனமாடும் பெண்கள் மேல் இலயிக்கிறது. அதை , அருகில் இருந்த அவன் மனைவி பார்த்து விடுகிறாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. 'தலை வலிக்கிறது' என்று கூறிவிட்டு அந்தப் புறம் நோக்கிச் செல்கிறாள். அவளின் ஊடலை புரிந்து கொண்ட பாண்டியன் அவள் பின்னே செல்கிறான் அவளை சமாதனப் படுத்த. அந்த நேரத்தில் பொற் கொல்லன் வந்து கோவலனைப் பற்றி ஏதோ சொல்ல, தான் இருந்த மன நிலையில் , சரியாக ஆராயாமல் , பாண்டியன் கோவலனுக்கு தண்டனை கொடுத்து விடுகிறான். 

பாடல் 

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், 
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும், 
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன் 
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து, 
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 
குலமுதல் தேவி கூடாது ஏக, 
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன் 
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு 
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி, 
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்

பொருள்

‘கூடல் மகளிர் = கூடத்தில் ஆடும் பெண்களின்

ஆடல் தோற்றமும் = ஆடலும், அவர்களின் தோற்றமும்

பாடல் பகுதியும் = பாடல் பகுதியும்

பண்ணின் பயங்களும் = பாடலின் பயன்களும்

காவலன் = அரசனின்

உள்ளம் கவர்ந்தன’ என்று, = உள்ளத்தை கவர்ந்தன என்று

தன் = தன்னுடைய

ஊடல் உள்ளம் = ஊடல் கொண்ட மனத்தை

உள் கரந்து ஒளித்து = உள்ளே ஒளித்து  வைத்து

தலைநோய் = தலைவலி

வருத்தம் = வருத்தம்

தன்மேல் இட்டு = தனக்கு இருப்பதாகக் கூறி

குலமுதல் தேவி = பாண்டிமாதேவி

கூடாது ஏக = சேர்ந்து இருக்காமல் உள்ளே போக

மந்திரச் சுற்றம் நீங்கி = மந்திரிகளை விட்டு நீங்கி

மன்னவன் = பாண்டிய மன்னன்

சிந்து அரி நெடுங் கண் = சிவந்த அழகிய நீண்ட கண்களை கொண்ட

சிலதியர் = பணிப் பெண்கள்

தம்மொடு = அவர்களோடு

கோப்பெருந்தேவி = அரசியின்

கோயில் = அரண்மனை

நோக்கி, = சென்று

காப்பு உடை  = காவலை உடைய

வாயில் = வாசலில்

கடை காண் = வாசலை அடையும் முன்பே

அகவையின் விழ்ந்தனன் = படியில் வீழ்ந்தான்

கிடந்து = தரையில் கிடந்து

தாழ்ந்துபல ஏத்திக் = பணிந்து பலவாறாக அவளை சமாதானம் செய்து

காமம் , பாண்டியனை அந்த நடனமாடும் பெண்களின் உடலை இரசிக்கத் தூண்டியது. அருகில் அவன் மனைவி இருப்பது கூடத் தெரியாமல். இன்னொரு பெண்ணை கணவன் இரசிப்பதை எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. 'தலை வலிக்கிறது ' என்று  சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் .

'போனால் போகட்டும்...அவ எப்போதும் அப்படித்தான் ...அப்புறம் பேசிக் கொள்ளலாம் ...இந்த ஆட்டம் முடியட்டும் ' என்று பாண்டியன் இருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்தான். அவள் இருக்கும் அரண்மனைக்கு சென்று அவளை சமாதனப் படுத்த முயன்றான்.

அன்பான, இனிமையான தாம்பத்யத்தின் இலக்கணம் அது.

'நான் எவ்வளவு பெரிய ஆள். நீ யார் என்னை கேட்க ' என்று இருக்கவில்லை.

அவன் அந்த அளவுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறான் என்றால் அவர்களுக்குள் இருந்த தாம்பத்யம் புலப்படும்.

வெளியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியின் முன்னால் கணவன் , அவ்வளவுதான்.

அந்த ஒரு இக்கட்டான இடத்திலும் ஆண்களுக்கு ஒரு பாடத்தை வைக்கிறார் இளங்கோ அடிகள் .

ஆண் வெளியில் யாராக இருந்தாலும், வீட்டில் , தாய்க்கு பிள்ளைதான், தாரத்துக்கு கணவன் தான், பிள்ளைகளுக்கு தந்தை அவ்வளவுதான் இருக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டால் வாழ்வு உறவுகள் பலப்படும். 

Friday, December 23, 2016

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்

இராமாயணம் - பரதன் - தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்


தசரதன் இறந்து போனான். இராமன் கானகம் போனான். இறந்த தசரதனுக்கு இறுதிக் கடன்கள் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது.

 மீண்டும் மந்திரி சபை கூடுகிறது. அரசன் ஆணைப்படி, பரதன் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்று மந்திரிகள் பரதனை வேண்டுகிறார்கள்.

அதைக் கேட்ட பரதன் "விஷத்தை குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி பயந்து நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

பாடல்

‘தஞ்சம் இவ் உலகம், நீ
    தாங்குவாய் ‘எனச்
செஞ் செவ்வே முனிவரன்
    செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர் ‘என,
    நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன்
    அருவிக் கண்ணினான்.

பொருள்

‘தஞ்சம் = அடைக்கலம்

இவ் உலகம் = இந்த உலகம்

நீ = நீ

தாங்குவாய் = காப்பாய்

எனச் = என்று

செஞ் செவ்வே = செம்மையாக

முனிவரன் = முனிவர்கள்

செப்பக் கேட்டலும் = சொல்லக் கேட்டதும்

‘நஞ்சினை நுகர் ‘ = விஷத்தை அருந்து

என = என்று சொல்லக் கேட்டு

நடுங்குவாரினும் = நடுங்குபவர்களை விட

அஞ்சினன் = பயந்தான்

அயர்ந்தனன் = தளர்ந்தான்

அருவிக் கண்ணினான் = அருவியே கண்ணாகக் கொண்ட பரதன்


அரசனின் ஆணை. ஆட்சிக்கு உரிய இராமனோ கானகம் போய் விட்டான். நாட்டுக்கு அரசன் இல்லை. மந்திரிகள் எல்லோரும் அரச பதவியை ஏற்றுக் கொள்ளும்படி  சொல்கிறார்கள்.

ஒரு வேளை பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் , அவனை பழி சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அவன் ஏற்றுக் கொண்டான் என்றுதான் உலகம் சொல்லும்.

பரதன் அப்படிச் செய்யவில்லை.

மந்திரிகள் அப்படிச் சொன்னவுடன், "விஷத்தைக் குடி" என்று சொன்னால் ஒருவன் எப்படி  நடுங்குவானோ அப்படி நடுங்கினான்.

எவ்வளவு பெரிய பதவி. சக்கரவர்த்தி பதவி. அதிகாரம். செல்வம். ஆள். அம்பு. சேனை. புகழ். என்று கணக்கில் அடங்காத செல்வம்.

அதை  எடுத்துக் கொள் என்றால், உயிர் போவது போல (விஷத்தைக் குடிப்பது) நடுங்குகிறான்.

பதவியின் மேல் கொஞ்சம் கூட ஆசை இல்லாமல்  இருந்தவர்கள் இருந்த நாடு.

தந்தை சொல் உயர்ந்தது என்று பதவியை விட்டு விட்டு இராமன் கானகம் போனான்.

அறம் உயர்ந்தது என்று வந்த பதவியை வேண்டாம் என்று விலக்கி நிற்கிறான்  பரதன். எப்பேர்ப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.

இன்று நடக்கும் பதவிச் சண்டைகளை பார்த்தால் மனம் வலிக்கிறது.


சொத்துக்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்கிறார்கள். நீதி மன்றத்தின் படி ஏறுகிறார்கள்.

சொந்த தாய் தந்தையரை கொலை கூட செய்து விடுகிறார்கள்.

அரசியலில் கேட்கவே வேண்டாம்.

சொத்து அல்ல. பதவி அல்ல. அதிகாரம் அல்ல.....தர்மம் தான் உயர்ந்தது என்று வாழ்ந்து காட்டினார்கள் .

கதையை பிடித்துக் கொண்டோம். கருத்தை விட்டு விட்டோமோ என்று சந்தேகம் வருகிறது.

பரதன் ஏன் இராமனை விட பல மடங்கு உயர்ந்தவன் என்பதற்கு  கம்பன் அமைக்கும்  அடித்தளம் இது.

போகப் போகத் தெரியும். பரதன் எப்படி உயர்ந்தவன் என்று.

போவோமா ?


Tuesday, December 20, 2016

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?

திருக்குறள் - எப்படி செயல் செய்ய வேண்டும் ?


ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் ? வேலை செய்வதற்கு எப்படி திட்டமிட வேண்டும் ? திட்டமிடுவதற்கு என்னென்ன வேண்டும் ? எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு எப்படி முடிவு எடுக்க வேண்டும் ? இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

பொருள்

அழிவதூஉம் = அழிவதையும்

ஆவதூஉம் = ஆவதையும்

ஆகி = ஆன பின்

வழிபயக்கும் = வழியை தரும்

ஊதியமும் =  பயனையும்

சூழ்ந்து செயல் = ஆராய்ந்து செய்ய வேண்டும்


இதுல என்ன பெருசா இருக்கு ?

சிந்திப்போம்.

நாம் ஒரு செயலை செய்யப் போகும் போது பொதுவாக  அதில் உள்ள நன்மைகள், சுகம் மட்டும் தான் தெரியும்.

டிவி வாங்கணுமா,கார் வாங்க வேண்டுமா, வீடு வாங்க வேண்டுமா...அதை எப்படியெல்லாம்  அனுபவிக்கலாம் என்று நாம் கனவு காணுவோம். பெரிய டிவி, பெரிய கார், அதில் குளிர் சாதன வசதி, நல்ல ஒலி பெருக்கி சாதனம், அது இது என்று  கனவு காணுவோம்.

வீடு என்றால், அதில் என்னென்ன செய்யலாம், சோபா எங்க போடலாம், AC எங்க மாட்டலாம் என்று சிந்தனை ஓடும்.

ஆனால், அதில் இருந்து வரும் சிக்கல்கள் தெரியாது.

ஒரு வீடு வாங்கினால்,  அதற்கு  வட்டி கட்ட வேண்டும், வீட்டை பாதுக்காக்க வேண்டும், வரி கட்ட வேண்டும், பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை, வழக்கு ஏதாவது வரலாம், எங்காவது விரிசல் விட்டால் மனம் வலிக்கும். இப்படி ஆயிரம் தொல்லைகள். நாம் இவற்றை யோசிப்பது கிடையாது.

திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்...மனைவி வருவாள், அவளோடு சந்தோஷமாக இருக்கலாம், ருசியாக சமைத்துத் தருவாள், சமுதாயத்தில் ஒரு  மதிப்பு , மரியாதை வரும் என்று மனம் இறக்கை கட்டி பறக்கும்.

இது ஆவது.

அழிவது எது ?  அவளுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும். அவற்றை நிறைவேற்ற  வேண்டும். பிள்ளைகள் வரும். அவற்றை படிக்க வைத்து , ஆளாக்க வேண்டும். மாமியார் மருமகள் உறவில் வரும் சிக்கல்கள். எதிர்பார்ப்புகள். ஏமாற்றங்கள்.

இவை அழிவு.

இப்படி எதை எடுத்தாலும் ஆவதும் இருக்கும், அழிவதும் இருக்கும்.

சரி, புரியுது.

இரண்டையும் பட்டியல் போட்டாச்சு.

எப்படி முடிவு எடுப்பது. எதை எடுத்தாலும் நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும். என்ன செய்வது. மேலே எப்படி போவது ?


"வழிபயக்கும் ஊதியமும்"  நீண்ட கால நன்மை, அல்லது பயன் என்ன என்று அறிய வேண்டும்.

எதைச் செய்தாலும், கொஞ்சம் இழப்பு இருக்கும். கொஞ்சம் பலனும் இருக்கும்.  நீண்ட கால நன்மை என்ன என்று யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவன் படிக்க உட்காருகிறான் என்றால், நண்பர்களோடு இனிமையாக அரட்டை அடிப்பது, டிவி பார்ப்பது போன்ற சுகங்கள் இழப்பு. அறிவு வளர்வது அதில் வரும்  ஆக்கம். அறிவு வளர்ந்து என்ன செய்வது ? நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்...இவை எல்லாம் நீண்ட கால பயன்கள்.


உடற் பயிற்சி செய்கிறோம் என்றால், வலி, உடற் பயிற்சி கூடத்திற்கு (gym ) கொடுக்கும் பணம்,  நேர விரயம் இவை எல்லாம் அழிவு.

ஆக்கம் , உடல் உறுதி.

நீண்ட கால பயன் - ஆரோக்கியமான உடல்,  குறையும் மருத்துவ செலவு, நீண்ட ஆயுள்.

சரி, அழிவு, ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றை அறிந்து கொண்டோம்.

அடுத்து என்ன செய்வது ?

"சூழ்ந்து"  அதாவது ஆராய்ந்து. அழிவு எவ்வளவு ? ஆக்கம் எவ்வளவு ? நீண்ட கால பயன் எவ்வளவு ?  எப்படி ஆராய்வது ? ஒவ்வொரு செயலுக்கும் வேற வேற மாதிரி  ஆராய வேண்டும். ஒரு டிவி வாங்குவது மாதிரி அல்ல ஒரு வீடு வாங்குவது. அழிவு , ஆக்கம், நீண்ட கால பயன் இவற்றின் அளவை பொறுத்து நம் ஆராய்ச்சி அமைய வேண்டும். சில விஷயங்களை நாமே ஆராய முடியும்.  சிலவற்றிற்கு மற்றவர்களின் உதவி தேவைப் படும்.

வீடு வாங்குவது என்றால் ஒரு வக்கீலை பார்க்க வேண்டும்.

திருமணம் செய்வது என்றால் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஆராய என்ன கருவிகள் (tools ) வேண்டும், எப்படி ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவை எப்படி உபயோகப் படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஆராய்ந்த பின், "செயல்" .

அதற்கு பின் செயல்பட வேண்டும்.

இதில் இன்னும் கூர்மையாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,

முதலில் அழிவை சொல்லி அடுத்து ஆக்கத்தை சொல்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

ஆக்கம் வராவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நட்டம் வந்து விட்டால்  அதை தாங்கும்  சக்தி வேண்டும்.

உதாரணமாக, வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் விலை உயர்வது  ஆக்கம், நீண்ட கால பலன். அது நிகழாவிட்டால் பரவாயில்லை. ஆனால், வீடு வாங்கிய பின், அந்த வீட்டுக்கு இன்னொருவன்  உரிமை கொண்டாடி  நீதி மன்றம் போனால் , வீடு நம் கையை விட்டுப் போனால்  அந்த நட்டத்தை நம்மால் தாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

முதலில் அழிவை ஆராய வேண்டும்.

மேலும், அழிவை ஆராய்வதன் மூலம், அதை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட முடியும். (Risk Management ).

முதலில் அழிவு.

பின் ஆக்கம்.

பின் நீண்ட கால பயன்

பின் இந்த மூன்றையும் சரியாக எடை போடுவது.

பின், செயல் படவேண்டும்.

புரியுதா ?  

Wednesday, December 14, 2016

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?


ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார். அவருக்குப் பின் யார் ஆட்சி செய்வது என்று பெரிய  குழப்பம் நிகழ்கிறது. இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது ?

இராமாயணம் போன்ற நூல்களை ஊன்றிப்  படித்தால்     இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கைகேயி வரம் கேட்டாள் . தசரதன் தந்து விட்டான். அதன்படி பரதன் அரசாள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி   இராமனிடம் கூறுகிறாள். அவனும் சரி என்று காட்டுக்கு கிளம்பி விட்டான். அரசு எனக்குத் தான் சொந்தம். பாட்டனார் சொத்து, அரச தர்மப்படி எனக்குத்தான் வர வேண்டும், தசரதன் யார் இதை பரதனுக்கு கொடுக்க என்று அவன் வாதம் பண்ணவில்லை. அரசை விட தந்தை சொல் முக்கியம் என்று இருந்தான் அவன்.

இராமன் கானகம் போன பின், பரதன் வருகிறான். தாயும், அமைச்சர்களும் அவனை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அவன் ஏற்றுக் கொண்டிருந்தால் அவனை யாரும் குறை சொல்ல முடியாது.  அவன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.  அண்ணன் இருக்கும் போது தான் அரசை ஏற்றுக் கொள்ளுவது  அறம் அல்ல என்று நினைக்கிறான்.

அவனை அரசை ஏற்றுக் கொள்ளும் படி சொன்ன அமைச்சர்களிடம்

"பெரிய கொடுமையைச் செய்த என் அன்னையின் செயலை நல்லது என்று நீங்கள் கூறினால் , இது கலி காலம் தான் வந்து விட்டதோ என்று எண்ணும்படி இருக்கிறது " என்கிறான்.

பாடல்


‘அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ  நெறி்க் கலியின் ஆட்சியோ!


பொருள்

‘அடைவு = அடைய முடியாத. எங்கும் காணாத என்று பொருள்

அருங் கொடுமை = பெரிய கொடுமையை

என் அன்னை = என் தாயின்

செய்கையை = செயலை

நடைவரும் = உயர்ந்த ஒழுக்கத்தை

தன்மை நீர், = இயல்பாகக் கொண்ட நீரங்கள் (அமைச்சர்கள்)

“நன்று இது” = அது நல்லது

என்றிரேல் = என்று கூறினால்

இடை வரும் காலம் = இடையில் வரும் காலம்

ஈண்டு = இங்கு

இரண்டும் நீத்து, = இரண்டையும் தவிர்த்து

இது = இந்தக் காலம்

கடை வரும் = கடைசியில் வரும்

 தீ நெறி்க் = தீய வழியில் செல்லும்

கலியின் ஆட்சியோ! = கலிகாலத்தில் ஆட்சியோ , அல்லது கலி புருடனின் ஆட்சியோ


இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து என்றால் என்ன ?  

இராமாயணம் நடந்தது கிரேதாயுகம். அதற்குப் பின் திரேதாயுகம், துவாபர யுகம் என்று  இரண்டு யுகங்கள் வரவேண்டும். அதற்குப் பின் கலியுகம் வரும். நீங்கள்  சொல்வதைப் பார்த்தால் இப்போதே அந்த இரண்டு யுகங்களும் கழிந்து கலி யுகம்  வந்து விட்டது போலத் தெரிகிறது என்கிறான். 

ஆண்டது போதும் , அரசை இராமானுக்குத் தரலாம் என்று தயரதன் நினைத்தான். சாகும் வரை தானே ஆள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அரசின் மேல் அவனுக்கு பற்று இல்லை. 

தந்தை சொல்லே உயர்ந்தது என்று நாட்டை விட்டு கானகம் போனான் இராமன். அவனுக்கும் அரசின் மேல் பற்று இல்லை. 

தந்தை சொல் கொண்டு தாய் தந்த அரசை வேண்டாம் என்கிறான் பரதன்.  அவனுக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. 

இராஜ்யத்தை ஆள்வதை விட மற்றவற்றை உயர்ததாக அவர்கள் கருதினார்கள். 

இவர்களாவது பரவாயில்லை. படித்தவர்கள். அறம் அறிந்தவர்கள். 

குகன், ஒரு வேடன், படகு ஓட்டுப்பவன். இராமனை கண்ட மாத்திரம் , அரசும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம், உன் கூடவே இருந்து விடுகிறேன். அந்த அரசு துன்பத்தின் இருப்பிடம்  என்கிறான். 

அரச பதவி என்பது "இன்னலின் இருக்கை " என்கிறான். 

கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

என்பது கம்பர் வாக்கு. 

பதவி மோகம் அவர்களுக்கு இல்லை. 

பதவி பதவி என்று அலைவோர் பாடம் படிக்க வேண்டும். 


இராமாயணம் - மன்னவர் மன்னவா

இராமாயணம் - மன்னவர் மன்னவா 



தயரதன் இறந்ததையும் , இராமன் கானகம் போனதையும் அறிந்த பரதன், அந்த இரண்டுக்கும் காரணம் தன் தாயான கைகேயி தான் என்று அறிந்து அவளை சுடு சொற்களால் ஏசி விட்டு, கோசலையை காணச் செல்கிறான். கோசலையும் "உன் தாயின் செயல் உனக்குத் தெரியாததா" என்று கேட்கிறாள். அதனால் மனம் நொந்து, "என் தாய் கேட்ட வரங்கள் எனக்கும் தெரியும் என்றால், மிகப் பெரிய பாவங்களை செய்தவர்கள் செல்லும் நரகத்துக்கு நான் போவேன் " என்று அந்த பாவங்களை பட்டியல் இட்டு சூளுரைக்கிறான்.

அவனுடைய நல்ல மனதை அறிந்த கோசலை அவனை "மன்னர் மன்னவா" என்று வாழ்த்துகிறாள்.

பாடல்


‘முன்னை நும் குல முதலுேளார்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! ‘என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.


பொருள் 

‘முன்னை = முன்னால்

நும் = உன்னுடைய

குல = குலத்தில் தோன்றிய

முதலுேளார்கள்தாம் = அரசர்களில்

நின்னை யாவரே = உனக்கு யார்

நிகர்க்கும் = சமமாகும்

நீர்மையார் = தன்மை கொண்டவர்கள் ?

மன்னர் மன்னவா! = மன்னர்களின் மன்னவனே

என்று வாழ்த்தினாள் = என்று வாழ்த்தினாள்

உன்ன உன்ன = நினைக்க நினைக்க

நைந்து = இற்றுப் போய்

உருகி விம்முவாள் = உருகி விம்முவாள்

தனக்கு பதில் பரதன் முடி சூட்டப் போகிறான் என்று இராமன் தன்னுடைய தாயான  கோசாலையிடம் கூறிய போது  "நின்னினும் நல்லன் " என்று பரதனை கூறினாள்.

அடுத்து, பரதனை நேரில் கண்டு பேசிய பின் அவனை "மன்னர் மன்னவா" என்று  அவனை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகிறாள்.

இராமன் மன்னனாகி இருப்பான்.

பரதன் மன்னர்களுக்கு எல்லாம்  மன்னவன் என்று வாழ்த்துகிறாள்.

இது வரை சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களில் யார் உனக்கு இணையாவார்கள் , யாரும் ஆக மாட்டார்கள் என்று கூறுகிறாள்.

அப்படி என்ன செய்து விட்டான்  பரதன் ?

இரண்டே இரண்டு விஷயம் தான்

ஒன்று, நல்லதே நினைத்தது

இரண்டாவது, மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக பேசியது.

இன்னும் பரதன் எப்படி உயருகிறான் என்று  பார்ப்போம்.