Wednesday, March 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்

இராமாயணம் - பரதன் குகன் - மனத்தே நினைந்து செய்யும்


பரதன் தன்னுடைய தாயார்கள் கோசலையையும் , சுமித்திரையையும் குகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அடுத்து, அருகில் இருந்த கைகேயியை  பார்த்து "யார் இவர்"  கேட்கிறான்.

கம்பனின் கவித்திறமைக்கு உதாரணமான பாடல்.

"சுடுகாட்டுக்கு துணையான தசரதனை அனுப்பி விட்டு, துன்பக் கடலில் பெற்றெடுத்த மகனைத் தள்ளி விட்டு, கொடுமையான காட்டுக்கு இராமனை அனுப்பி விட்டு,  திருமால் அன்று தன்னுடைய நீண்ட வடிவாள் அளந்த மூன்று உலகத்தையும்  , இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய கொடுமையால் அளந்தாளை பார்த்து யார் இவர் " என்று கேட்டான் குகன்.

பாடல்

சுடும் மயானத்து இடைத் தன் துணை ஏகத்
    தோன்றல் துயர்க் கடலின் ஏகக்,
கடுமை ஆர் கானகத்து இடைக் கருணை ஆர்
    கலி ஏகக் கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
    தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை‘‘ ‘யார் இவர்? ‘என்று
    உரை‘‘ என்னக் குரிசில் கூறும்.

பொருள்


சுடும் மயானத்து இடைத் = எரிக்கின்ற  மயானத்துக்கு

 தன் துணை ஏகத் = தன்னுடைய துணைவனான தசரதன் போக

தோன்றல் = தன்னிடம் தோன்றிய பரதன்

துயர்க் கடலின் ஏகக் = துயரமான கடலில் செல்ல

கடுமை ஆர் கானகத்து இடைக் = கடுமையான கானகத்துக்கு

கருணை ஆர்  கலி ஏகக் = கருணை வடிவான இராமன் செல்ல

கழல் கால் = வீரக் கழல் அணிந்த

மாயன் = திருமால்

நெடுமையால் = பெரிய உருவத்தால்

அன்று  = அன்று

அளந்த உலகு எல்லாம் = அளந்த உலகை எல்லாம்

தன் மனத்தே = தன்னுடைய மனத்தினால்

நினைந்து செய்யும் = நினைத்து செய்யும்

கொடுமையால் அளந்தாளை = கொடுமையால் அளந்தாளை

‘‘ ‘யார் இவர்? ‘என்று = யார் இவர் என்று

 உரை‘‘ =கூறு

என்னக்  = என்ன

குரிசில் கூறும் = அரசன் கூறினான் (பரதன் கூறினான் ...கூறத் தொடங்குகிறான்)

பெண்ணின் மனதில் ஒன்று தைத்து விட்டால் , அது எவ்வளவு பெரிய விஷயமானாலும் அவள் அதை சாதிக்காமல் விட மாட்டாள்.

பெண் என்பவள் உடல் அளவில் ஆணை விட பலகீனமானவள் தான்.

எப்படி ஒரு புலன்  சரியாக வேலை செய்யாவிட்டால் மற்ற புலன்கள் மிக அதிகமாக வேலை செய்து  அந்த சரியாக வேலை செய்யாத புலனின் குறையை நிறைவு செய்யுமோ அது போல, பெண்ணின் உடல்  பலகீனத்தை அவளின் மன பலம் சரி செய்கிறது.

திருமாலுக்கு கூட, பாற்கடலை விட்டு , பூமிக்கு வந்து, வாமனனாக உருவெடுத்து, மூவடி தானம் பெற்று, பின் உலகளந்த பெருமாளாக வடிவு கொண்டு, மூன்று உலகத்தையும் அளக்க வேண்டி இருந்தது.

கைகேயியோ, இருந்த இடத்தில் தன்னுடைய மனதால் நினைத்த மாத்திரத்திலேயே அளந்தாள்.

பெண்ணின் மனம் அவ்வளவு வலிமை வாய்ந்தது.

சீதை , இலங்கையில் சிறை இருக்கிறாள்.

அவளை மீட்டு வர, இராமனுக்கு வானர சேனையின் துணை தேவைப் பட்டது.  பாலம் அமைத்து, இலங்கை போய் , சண்டை போட்டு, பின் சிறை மீட்டான்.

சீதை சொல்கிறாள், இந்த இலங்கை என்ன பெரிய பிரமாதம். எல்லாம் இல்லாத இந்த உலகம் அனைத்தையும் , என்னுடைய சொல்லால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்

இராமனுக்கு இவ்வளவு வேலை செய்ய வேண்டி இருத்தது. சீதைக்கு அது ஒரு சொல். அவ்வளவுதான். யாருக்கு வலிமை அதிகம் ?

இவ்வளவு சக்தியை தனக்குள் வைத்துக் கொண்டு, தன்னிடம் அவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னும், அதை உபயோகிக்காமல் , இராமன் வரட்டும் என்று இருக்கிறாள் என்றால் அவளின் மன உறுதி எவ்வளவு இருக்கும்  ?

கைகேயி கொடியவளாக மாறிப் போனாள். அதை சொல்லும் போது கூட, பெண்ணின் மிகப் பெரிய சக்தியை கம்பர் படம் பிடித்து  காட்டுகிறார்.

அவள்  அடங்கி , அமைதியாக இருக்கிறாள் என்பதால் சக்தி இல்லாதவள் என்று  அர்த்தம் அல்ல. அளவிட முடியாத ஆற்றல் அவளிடம் புதைந்து கிடக்கிறது என்று இராமாயணம் நமக்கு சுட்டி காட்டுகிறது.

அந்த சக்தியை வணங்குவோம்.

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
  நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள் 
  பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
  வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி 

  ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

என்று பாரதி சொன்னது போல , அவளே தஞ்சம் என்று உரைப்போம்.

அவள் பேர் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்












Tuesday, February 28, 2017

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?


ஒரு வீடு , வீடாவது எப்போது ?

வீட்டை சுத்தமாக வைத்து, நல்ல விளக்கு போட்டு, சாமான்களை அதது அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் அது  நல்ல வீடாகுமா ?

வீடென்றால் என்ன ? ஒரு வரவேற்பு அறை , சமையல் அறை , குளியல் அறை , டிவி முதலிய சாதனங்கள் இருந்தால் நல்ல வீடாகுமா ?

பல வீடுகளில் இவை எல்லாம் இருப்பது இல்லை. குடிசை வீடாக இருக்கலாம். ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருக்கலாம். வாடகை வீடாக இருக்கலாம். மிக மிக வசதி குறைவான வீடாக இருக்கலாம். அவை எல்லாம் வீடாகாதா ?

இதெல்லாம் வீடல்ல.

வசதி இருக்கிறதோ, இல்லையோ அதெல்லாம் கணக்கு இல்லை. எந்த வீட்டில் பெண் கற்போடு இருக்கிறாளோ, அதுவே வீடு. மத்ததெல்லாம் வீடு அல்ல.

பாடல்

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

பொருள்

நாலாறும் = நான்கு பக்கமும்

ஆறாய் = இடிந்து விழும் நிலையில் இருந்தாலும்

நனிசிறிதாய் = ரொம்ப ரொம்ப சின்னதாய் இருந்தாலும்

எப்புறனும் = எல்லா பக்கங்களிலும்

மேலாறு = மேலே உள்ள

மேலுறை = கூரை

சோரினும் = உடைந்து விழுந்தாலும்

மேலாய = சிறப்பான

வல்லாளாய்= வல்லவளாய்

வாழும் = தான் வாழும்

ஊர் = ஊரில்

தற்புகழு = தன்னை மற்றவர் புகழும்படி

மாண்கற்பின் = உயர்ந்த கற்புடைய

இல்லாள் = இல்லத்தை ஆளும் மனைவி

அமர்ந்ததே இல் =இருக்கும் இடமே வீடு

வீடு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நாலு பக்கமும் இடிந்து விழும்  சுவர். ஒழுகும் கூரை. எதுவாக இருந்தாலும் கவலை இல்லை.


வீட்டில் பெண் நன்றாக இருக்கிறாளா , அப்ப அதுதான் வீடு.

அதென்ன கற்புடைய பெண்கள் இருக்கும் வீடு தான் வீடு என்பது. எல்லா வீட்டு பெண்களும்  கற்புடன் தான் இருக்கிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றும்  ஏதோ வழி பிறழ்ந்து போயிருக்கலாம். அவர்களை தவிர்த்துப் பார்த்தால்  எல்லாம் கற்புள்ள பெண்கள்தான்.

எல்லா வீடும் , வீடுதான் என்று சொல்லி விட்டு போக வேண்டியதுதானே ?

கற்பு என்றால் ஏதோ உடல் சார்ந்த ஒழுக்கம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

அது அல்ல.

கற்பு என்றால் கல் + பு விகுதி = கற்பு.

கல் போன்ற உறுதியான மனம் என்று பொருள்.

அது என்ன கல் போன்ற உறுதியான மனம் ?

ஒன்றைப் பற்றினால் அதில் நிற்பது. திருமணம் என்று ஒன்று ஆன பின்,கணவனை விட மற்ற ஆடவர்கள் அழகிலும், செல்வத்திலும், பலத்திலும், உயர்ந்தவர்களாக இருந்தாலும், கொண்ட கணவனையே சேர்ந்து நிற்கும் உறுதி.

காமம் என்பது தான் எவ்வளவுதான் பெருக்கெடுத்து வந்தாலும், கணவன் துணை இன்றி  காமத்தை அனுபவிக்காமல் இருக்கும் உறுதி. ஆண்கள் மனம் எளிதில் சலனம் அடையக் கூடியது. மனைவியை விட அழகான ஒரு  பெண்ணை பார்த்தால் சற்று பேதலிக்கும் குணம் கொண்டது. பெண் அப்படியல்ல.

எத்தனை துன்பம் வந்தாலும், நேர் வழியில் இருந்து தானும் விலகாமல் , கணவனையும், பிள்ளைகளையும் நல்ல நெறியில் செலுத்தும் உறுதி.

இராமாயணத்தில் , இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள் என்று மந்திரிகளிடம் தசரதன் கேட்கிறான்.

எல்லோரும் அதை ஆமோதித்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.

இறுதியில்,வசிட்டன் ஒரு வார்த்தை சொல்லுகிறான்.

சீதை நல்லவள் , எனவே இராமனுக்கு அரசை கொடுக்கலாம் என்று.

மண்ணினும் நல்லள் ; 
     மலர்மகள், கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள் ; 
     பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன் ; 
     கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும்,
     உயிரினும், அவனையே உவப்பார்.

எதற்காக இராமனுக்கு முடி சூட்டலாம் என்று சொல்லிக் கொண்டு போகும் போது , சீதை நல்லவள், அதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறான்.

காரணம் என்ன ?

மனைவி ஒழுக்கமானவளாக இருந்தாள் , கணவனும் அப்படியே இருப்பான். அவள், அவனை வழி நடத்துவாள் என்பது அறியப்படுகின்ற ஒன்று.


வீட்டின் மனைவி நல்லவளாக இருந்தால், அது வீடு. இல்லையென்றால் அது வீடு இல்லை.

மனைவியை கொண்டாடுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தை வீடாக்குபவள் அவள்.






Sunday, February 26, 2017

இராமாயணம் - பரதன் குகன் - பிரியாதனைப் பயந்த பெரியாள்

இராமாயணம் - பரதன் குகன் - பிரியாதனைப் பயந்த பெரியாள் 


கோசாலையை அறிமுகப் படுத்திய பின், அருகில் இருக்கும் சுமித்திரையை காட்டி

"அன்பு நிறைந்த இவர்கள் யார்" என்று குகன் கேட்கிறான்

அதற்கு பரதன், "நெறி தவறாத தசரதனின் இளைய மனைவி. எல்லோரும் வணங்கும் இராமனை விட்டு எப்போதும் பிரியாத இலக்குவனை பெற்ற பெரியாள் " என்றான் பரதன்


பாடல்

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
     நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
     தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
     தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
     பயந்த பெரியாள்’ என்றான்.

பொருள்

அறம் தானே = அறத்தின் மொத்த உருவாய் தானே

என்கின்ற  = என்பது போன்ற

அயல் நின்றாள்தனை = அருகில் இருந்த அவளை (சுமித்ரை)

நோக்கி,  = பார்த்து

‘ஐய! = ஐயனே

அன்பின் நிறைந்தாளை உரை’ என்ன = அன்பால் நிறைந்த இவளைப் பற்றி சொல் என்று கேட்ட போது

‘நெறி திறம்பாத் = உயர்ந்த நெறிகளில் இருந்து மாறாத

தன் மெய்யை நிற்பது ஆக்கி = தன்னுடைய உண்மையை நிலைத்து நிற்கும்படி செய்து

இறந்தான்தன் = இறந்த தசரதனின்

இளந் தேவி; = இளைய மனைவி

யாவர்க்கும் = எல்லோருக்கும்

தொழு குலம் = தொழுகின்ற குல தெய்வமாய்

ஆம் = ஆகும்

இராமன் = இராமனின்

பின்பு = பின்னால்

பிறந்தானும் உளன் = பிறந்தவனுக்கு உள்ளான்

என்னப் = என்று

பிரியாதான் தனைப் = எப்போதும் இராமனை விட்டு பிரியாத தனை

பயந்த பெரியாள்’ என்றான் = பெற்ற பெரியவள் என்றான்


சுமித்திரையின் மூலம் கம்பன் நமக்கு சில உயர்ந்த விஷயங்களை சொல்லுகிறான். 

அறம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும். "அறம்தானே " என்கின்ற  வடிவு உடையாள்.  "அன்பின் நிறைந்தாள் " என்கிறான். 

இன்னும் சொல்லப் போனால் அன்பு நிறைய நிறைய அறம் பெருகும். அன்பாக இருப்பதுவே  அறம் . அன்பு இல்லாதவர்களை அறம் கொன்று போடும் என்கிறார் வள்ளுவர். 


என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பிலதனை அறம்  

எலும்பு இல்லாத புழுக்களை எப்படி வெயில் காய்ந்து கொல்லுமோ அது போல  அன்பு இல்லாதவர்களை அறம் கொல்லும் என்கிறார். 

அன்போடு இருப்பதுதான் அறம் . 

மனதில் அன்பு வந்து விட்டால், எப்படி தவறு செய்ய முடியும் ? 

″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″

என்பது திருமந்திரம் 

அன்பே சிவமாகி விடும். 

ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி 
மேவலன் விரை சூழ் துவராபதிக் 
காவலன் கன்று மேய்த்து விளையாடும் 
கோவலன் வரில் கூடிடு கூடலே 

என்பது நாச்சியார் திருமொழி. அன்பு இல்லாதவர் மனதில் ஆண்டவன் வர மாட்டான் . (மேவலன் - மேவ மாட்டான், வர மாட்டான் )

தசரதன் கட்டுக்குப் போகச் சொன்னது இராமனை மட்டும் தான்.  இலக்குவனை யார்  கானகம் போகச் சொன்னது ? சுமித்திரை தான் சொன்னாள் . இராமன் திரும்பி வந்தால் நீ வா , இல்லை என்றால் அவனுக்கு முன்னால் நீ முடி என்று இலக்குவனிடம் சொல்லி அவனை கானகம் அனுப்பினாள் . தன் பிள்ளையை காட்டுக்கு அனுப்ப எந்த தாய் சம்மதிப்பாள் ? சுமித்திரை செய்தாள். இராமனும் சீதையும் துன்பப் படுவார்கள். அவர்களுக்கு உதவிக்கு  ஒரு ஆள் வேண்டும் என்று அனுப்பினாள் . இராமன் மேல் கொண்ட அன்பு.   உடன் பிறந்தவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அறம் . நம்மை நம்பி நம் வீட்டுக்கு வந்த  பெண் (சீதை ) துன்பப்  படக்கூடாது என்ற அறம் மற்றும் அன்பு. "சீதையை தாயாக நினைத்து அவள் பின் போ " என்று அனுப்பினாள் .

சொத்துக்காக நீதி மன்ற படியேறும் அண்ணன் தம்பிகள் படிக்க வேண்டும் இந்த  இராமாயணத்தை. 

மருமகளை எப்படி நடத்த வேண்டும் என்று மாமியார்கள் கற்றுக் கொள்ள வேண்டும்  இராமாயணத்தில் இருந்து. 

நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி

நீதி நெறியை நிலை நிறுத்தும் பொருட்டு தன் இன்னுயிரை தந்தான் தசரதன்  என்கிறான் பரதன்.

வாக்கு விலை வேண்டும் என்று சொல்லுவார்கள்.

"ஆமாம் வரம் தந்தேன். அதுக்கு என்ன இப்போ ? அதெல்லாம் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டேன் ...இராமனையெல்லாம் காட்டுக்கு அனுப்ப முடியாது. ..." என்று சொல்லி இருக்கலாம்.

அப்படி சொல்லி இருந்தால் அவனை யாரும் பெரிதாக குறை சொல்லி இருக்க முடியாது.

இருந்தாலும், தன்  வாக்கை காப்பாற்றி அதற்காக தன் உயிரையே கொடுத்தான் தசரதன்.

இப்படி இராமாயணத்தில் எங்கு பார்த்தாலும் வாழ்க்கைக்கு வேண்டிய வழி முறைகள்  கொட்டி கிடக்கிறது.

அடிக்கடி படித்தால் இந்த நல்ல குணங்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் வந்து விடும்.

படித்துப் பாருங்கள்.



Friday, February 24, 2017

இராமாயணம் - பரதன் குகன் - மூவுலகும் ஈன்றானை ஈன்றவள்

இராமாயணம் - பரதன் குகன் - மூவுலகும் ஈன்றானை ஈன்றவள் 


குகனோடு பேசி முடிந்த பின், தங்களை கங்கை ஆற்றின் மறு கரையில் சேர்க்குமாறு பரதன் வேண்டுகிறான். குகனும் படகுகளை கொண்டு வருகிறான். எல்லோரும் ஏறுகிறார்கள்.

கோசலை படகில் ஏறும் போது குகன் கேட்கிறான், இந்த அம்மா யார் என்று.

"சுற்றத்தாரும், தேவரும் தொழ நின்ற கோசலையை நோக்கி , வெற்றி மாலை அணிந்த பரதனே , இவர் யார் என்று குகன் கேட்டான்.  அரசர்களுக்கு எல்லாம் அரசனான தயரதனின் முதல் தேவி. மூன்று உலகங்களை படைத்த பிரமனை படைத்த திருமாலின் தாய். அப்படிப்பட்ட இராமனை பெற்றதால் வர வேண்டிய செல்வம் அனைத்தையும் நான் பிறந்ததால் இழந்தவள் "

என்றான் பரதன்.

நெஞ்சை உருக்கும் அருமையான பாடல்

பாடல்

சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற
    கோசலையைத் தொழுது நோக்கிக்
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்? ‘என்று
    குகன் வினவக் ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி, மூன்று உலகும்
    ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம் யான்
    பிறத்தலால் துறந்த பெரியாள் ‘என்றான்.


பொருள்

சுற்றத்தார் = உறவினர்களும்

தேவரொடும் = தேவர்களும்

 தொழ நின்ற = தொழுது நின்ற

கோசலையைத் = கோசாலையை

தொழுது நோக்கிக் = தொழுது, நோக்கி


‘கொற்றத் தார்க் குரிசில்! = வெற்றி மாலை சூடிய பரதனே

இவர் ஆர்? ‘என்று = இவர் யார் என்று

குகன் வினவக்  = குகன் கேட்க

‘கோக்கள் = ஏனைய அரசர்கள்

வைகும் = வந்து காத்து நிற்கும்

முற்றத்தான் = வாசலைக் கொண்ட  (தயரதன்)

முதல் தேவி = முதல் மனைவி

மூன்று உலகும் = மூன்று உலகையும்

ஈன்றானை = படைத்தவனை (பிரமனை)

முன் ஈன்றானைப் = முன்பு தனது நாபிக் கமலத்தில் உருவாக்கியவனை (இராமனை)

பெற்றத்தால் = பிள்ளையாகப் பெற்றதால்

பெறும் செல்வம் = பெற வேண்டிய செல்வம் அனைத்தையும்

யான் = நான்

பிறத்தலால் = பிறந்ததால்

துறந்த பெரியாள் = துறந்த  பெரியாள்

என்றான்.= என்றான்

இதில் சில நுணுக்கங்களை நாம் கவனிக்க வேண்டும்.


எதைச் சொல்வதாக இருந்தாலும், முதலில் உயர்ந்தவற்றை சொல்லி பின் மற்றவற்றை சொல்ல வேண்டும்.

எது முக்கியமோ , அதை முதலில் சொல்ல வேண்டும். முக்கியம் குறைந்தவற்றை பின்னால் சொல்ல வேண்டும்.

"சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற"

என்ற வரியில் முதலில் சுற்றத்தாரை கூறி பின் தேவர்களை கூறுகிறார் கம்பர்.

அது சரியா ? தேவர்கள் உயர்ந்தவர்கள். முதலில் அவர்களை சொல்லி பின் மனிதர்களான சுற்றத்தாரை சொல்ல வேண்டும்.

பின் மாத்தி சொல்லக் காரணம் என்ன ?

முதலாவது, இராமனின் சுற்றத்தார் என்றால் அவர்கள் தேவர்களை விட உயர்ந்தவர்கள் என்று  கம்பர் நினைத்திருக்கலாம்.

இரண்டாவது, சுற்றத்தார் இராமனை நாட்டுக்கு வரும்படி அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். தேவர்களோ, இராமன் நாட்டுக்குப் போய்விட்டால் , இராவண  சம்காரம் நிகழாது. எனவே அவன் காட்டுக்கே போகட்டும் என்று வந்து இருக்கிறார்கள்.

சுற்றத்தார் கோசாலையை தொழுது , 'எப்படியாவது இராமனை நாட்டுக்கு அழைத்து வந்து விடு " என்று வேண்டுகிறார்கள்.

தேவர்களோ, "அம்மா, தயவுசெய்து இராமனை நாட்டுக்கு அழைத்து விடாதே " என்று தொழுது நிற்கிறார்கள்.

இராமன் துன்பப் படக்கூடாது என்று நினைத்த சுற்றத்தார் உயர்ந்தவர்கள் என்று கம்பர் நினைத்திருக்கலாம்.

யாருக்குத் தெரியும் ?

"துறந்த பெரியாள் "

கோசலை நினைத்திருந்தால் , சண்டைபோட்டு அரசை இராமனுக்கு வாங்கித் தந்திருக்கலாம். அது  தயரதனின் புகழுக்கும், இராமனின் கொள்கைக்கும்  விரோதமாக போயிருக்கும். எனவே, இழந்தாள் என்று சொல்லாமல் துறந்தாள் என்றான்.

இராமனின்  பெருமையைச் சொல்லி, தன் சிறுமையைச் சொல்லி முடிக்கிறான் பரதன்.

http://interestingtamilpoems.blogspot.com/2017/02/blog-post_24.html





Wednesday, February 22, 2017

நீதி நெறி விளக்கம் - பூத்தலின் பூவாமை நன்று

நீதி நெறி விளக்கம் - பூத்தலின் பூவாமை நன்று 


நிறைய வாசிக்கிறோம். புத்தகங்களில் மட்டும் அல்ல  ஊடகங்களில் எல்லாம் நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. வாசைக்கவும் செய்கிறோம். தெருவில் சென்றால் ஏறக்குறைய எல்லோருமே தங்கள் கை பேசியில் ஏதோ வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல, எதையும் சரியாக புரிந்து கொள்வது இல்லை. வாசிப்பது எல்லாம் உண்மை என்று நினைத்துக் கொள்கிறார்கள். எதையும் அரைகுறையாக படித்து விட்டு எல்லாம் தெரிந்த மேதாவி போல பேசத் தலைப்படுகிறார்கள்.

ஒரு புத்தகத்தை கூட முழுமையாக வாசிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றும் கேட்டுவிட்டு அதை வைத்துக் கொண்டு அனைத்தும் தெரிந்தவர்களை போல அடித்து விடுகிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் படித்தவர்கள் , தாங்கள் படித்ததை பயமில்லாமல் எடுத்துச் சொல்ல முடியாமல் தயங்குகிறார்கள். சரியோ தவறோ என்று திணறுகிறார்கள்.

படிக்காதவன் எல்லாம் படித்தவனைப் போல பேசுகிறான். படித்தவன் பேசத் தயங்குகிறான்.

அதைப் போல, நிறைய  செல்வம் உள்ளவன் யாருக்கும் ஒன்றும் தர மாட்டான். வறுமையில் இருப்பவனிடம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் நிறைந்து நிற்கிறது.

 இவை எல்லாம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்கிறார் குமர் குருபரர்.

பாடல்

அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் 
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி 
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும் 
பூத்தலின் பூவாமை நன்று

பொருள்

அவை அஞ்சி = கூட்டத்தைப் பார்த்து

மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவர்

கல்வியும் = கற்ற கல்வியும்

கல்லார் = படிக்காதவர்கள்

அவை அஞ்சா  = அவைக்கு அஞ்சாமல் பேசும்

ஆகுலச் சொல்லும் = ஆரவார சொல்லும்

நவை =குற்றத்திற்கு , பிழைக்கு பிழைக்கு , தவறுக்கு

அஞ்சி = அச்சப்பட்டு

ஈத்து உண்ணார் செல்வமும் =  வறியவர்களுக்கு கொடுத்து உண்ணாதார்  செல்வமும்

நல்கூர்ந்தார் = வறுமை பட்டவர்

 இன் நலமும் = கொடை போன்ற இனிய குணங்களும்

பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது.


என்ன சொல்ல வருகிறார் குமரகுருபரர் ?

கல்வி கற்றால் அதை தெளிவாக , பயமில்லாமல் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அரைகுறையாக படித்து விட்டு பேசிக் கூடாது.

செல்வம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து இன்பமாய் இருக்க வேண்டும்.

நல்ல மனம் இட்டும் இருந்தால் போதாது, மற்றவர்களுக்கு உதவும் செல்வமும் இருக்க வேண்டும்.

சிந்திப்போம்.



Tuesday, February 21, 2017

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ? பாகம் 2

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ? பாகம் 2


(இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் - 

)



புலன்களை இறை சிந்தனைக்கு ஆட்படுத்தச் சொல்கிறார். ஒவ்வொரு புலனையும் இறைவனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும் ? இறைவனிடம் தானே ? போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்கிறார்.

பாடல்

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
 கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டுமிலித்தனிய னேற்கே


பொருள்


சிந்தனை = சிந்தனை, மனம், எண்ணங்களை

நின்தனக்கு ஆக்கி = உனக்கு என்று ஆக்கி

நாயினேன் தன் = நாய் போன்ற கீழான என்

கண் இணை = இரண்டு கண்களையும்

நின் = உன்னுடைய

 திருப்பாதப் = திருவடிகள் என்ற

போதுக்கு ஆக்கி = மலர்களுக்கு ஆக்கி

வந்தனையும் = என் வணக்கத்தையும்

அம்மலர்க்கே ஆக்கி = அந்த திருவடிகளுக்கே ஆக்கி

வாக்கு = என் பேச்சை

உன் = உன்னுடைய

மணிவார்த்தைக்கு ஆக்கி = உன் பெருமைகளை பேசும்படி செய்து

ஐம்புலன்கள் ஆர = எனது ஐந்து புலன்களும் அமைதி அடைய

வந்தனை = வந்து என்னை

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

உள்ளே புகுந்த = எனதுள்ளே புகுந்து

விச்சை = வித்தை

மால் = விரும்பும்

அமுதப் பெரும் கடலே = அமுதத்தாலான கடலைப் போன்றவனே

மலையே = மலையே

உன்னைத் தந்தனை = உன்னை எனக்குத் தந்தனை

செந் தாமரைக்காடு = சிவந்த தாமரை மலர்களைக் கொண்ட காடு 

அனைய மேனித் = போன்ற உடல் கொண்டவனே

தனிச்சுடரே = தனித்துவம் வாய்ந்த சுடரே

இரண்டும் = இரண்டும்

இலி = இல்லாத

தனிய னேற்கே = தனியனான எனக்கே

புலன்களையும் , அவற்றை செலுத்தும் மனதையும் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் அவை போகும் திசையை மாற்ற முடியும். அவற்றை நல்ல வழியில் திருப்பி விட்டால் அவை அந்த வழியில் போகும். 

சரி, புலங்களையும் மனதையும் இறைவன் பால் திருப்பினால், அதனால் நமக்கு ஒரு இன்பம் இருக்குமா ?

மனைவியின் அணைப்பு, குழந்தையின் விரல் தீண்டும் இன்பம், சுவையான உணவு, இனிய சங்கீதம், இயற்கை காட்சிகள் என்ற இன்பத்தை எல்லாம்  விட்டு விட்டு , இறைவனை நினை என்றால் அதில் என்ன இன்பம் இருக்கும் ?

இருக்கும் என்கிறார் மணிவாசகர்.

மால் அமுதப் பெரும் கடலே மலையே


அமுதம்இ இனிமையானது. உடலையும் உயிரையும் இணைத்து வைக்கக் கூடியது. ஒரு கடலளவு அமுதம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அள்ள அள்ள குறையாத இன்பம். நாம் குடுத்தா கடல் வற்றி விடும் ?

மலை போல் குவிந்து கிடக்கும் இன்பம்.

சரி. அது என்ன கடலே , மலையே என்கிறார். கடலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் ?

மிக உயரமானது மலை. மிக ஆழமானது கடல். இரண்டையும் சொன்னால் , இவை இரண்டுக்கும்  இடைப்பட்ட அனைத்தும் இதில் அடங்கும்.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்லுவது போல.

வேங்கடம் முதல் , குமரி வரை என்று சொல்லுவதைப் போல.

இறைவன் அமுதக் கடல் போன்றவன். அமுத மலை போன்றவன்.

அவன் எப்படியும் இருந்து விட்டு போகட்டும். அவனை நினைப்பதால் எனக்கு இன்பம் வருமா ?

வரும் என்கிறார்கள். மணிவாசகர் மட்டும் அல்ல.

ஐம்புலன்கள் ஆர

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருபவன் இறைவன். புலன்கள் ஆர என்றால் திருப்தி அடைய, அமைதி அடைய என்று பொருள்.

உலகில் நமக்கு ஒவ்வொரு பொருளும் ஒரு சில இன்பங்களைத் தரும். சில ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும்.

ஊதுபத்தி நல்ல மணம் தரும். பார்க்க ஒன்றும் அழகாக இருக்காது. அதை சுவைக்க முடியாது. ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும்.

மல்லிகை , இனிய நறுமணம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும். இரண்டு புலன்களுக்கு இன்பம் தரும். ஆனால் அதை சுவைக்க முடியாது. கசக்கும்.

லட்டு , பார்க்கவும் அழகாக இருக்கும், நெய் வாசம் நாசிக்கும் இனிமையாக இருக்கும். வாயில் போட்டால் சுவையாகவும் இருக்கும். அது மூன்று புலங்களுக்கு இன்பம் தரும். ஆனால் பாடாது. அதை தொட்டு பார்ப்பதில் ஒரு பெரிய சுகம் இல்லை.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது, எது தெரியுமா ?

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருபவர்கள்.

நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லுகிறார்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும், கேட்டும், தொட்டும், முகர்ந்து, சுவைத்து மகிழும் இந்த ஐந்து புலன்களுக்கு இன்பமும் இந்த அழகிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்ணிடம் உள்ளது என்கிறார்.

சரி அப்படி என்றால் அவளையே பற்றி இருக்க வேண்டியதுதானே. எதற்கு ஆண்டவன் ?

இருக்கலாம். ஆனால், ஆணோ பெண்ணோ அவர்கள் மூலம் பெறும் இன்பம் ஒரு சிறிது  நேரம். சிறிது காலம்.   இளமையும் அழகும் உடல் வலிமையையும் கொஞ்ச நாள் தான். நீண்ட இன்பம் தராது.

பேரின்பத்தின் முதல் படி சிற்றின்பம். இந்தப் படியில் காலை வைத்து அங்கு போக வேண்டும்.

திருவாய்மொழியில்,

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

ஆர பருக  என்பார் ஆழ்வார்.


புலன்களோடும், மனதோடும் அவற்றை அடக்க வேண்டும் என்று சண்டை போடாதீர்கள். அவற்றை இறைவன் பால் திருப்பி விடுங்கள்.

தீராத இன்பம் கிடைக்கும் என்கிறார் மணிவாசகர்.




Sunday, February 19, 2017

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ?

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ?


இந்த புலன்கள் இருக்கிறதே , இவை நமக்கு நல்லது செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா ?

எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஏதோ இந்த புலன்கள் நமக்கு வாய்த்த வில்லன்கள் போலவே சொல்லுகின்றன. நம்மை தீய வழியில் இட்டுச் செல்லும், நம்மை பாவம் செய்யத் தூண்டும், நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்றெல்லாம் நம்மை பயமுறுத்துக்கிறார்கள்.

அப்படியா ?

புலன்களின் துணை இல்லாமல் நம்மால் வாழ முடியுமா ?

பார்க்காமல், பேசாமல், நுகராமல், தொடாமல், கேட்காமல் நம்மால் இருக்க முடியுமா ?

அப்படியே இருந்தாலும் அது என்ன வாழ்க்கை...மரக்கட்டை போல, ஒரு கல்லை போல வாழும் வாழ்க்கையில் என்ன சுகம் இருக்க முடியும்.

ஒருவேளை இந்த புலன்களை எல்லாம் அடக்கி , தவம் செய்து , இறைவனை அடைந்து விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம்...இறைவனை பார்க்க வேண்டாமா ? அவனைப் பற்றி பேச வேண்டாமா..அதற்கெல்லாம் புலன்கள் வேண்டுமே.

அப்படியானால் என்ன தான் செய்வது ?

புலன்கள் நல்லதும் செய்கின்றன. அல்லதும் செய்கின்றன.

அவற்றை வேண்டாம் என்று ஒரேயடியாக ஒதுக்கவும் முடியவில்லை. வேண்டும் என்று வைத்துக் கொண்டு கொண்டாடவும் முடியவில்லை.

என்ன செய்யலாம்.

சரி, கொஞ்சமாக அவற்றை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா ? ஒரு இட்டு, வாரம் ஒரு சினிமா...என்று ஒரு வரையறுத்து அனுபவிக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கொஞ்சம் இடம் கொடுத்தால், இழுத்துக் கொண்டு ஓடி விடும். ஒன்று என்று ஆரமபித்த எதுவும் ஒன்றில் நிற்பதில்லை. மேலும் மேலும் என்று புலன்கள் இன்பங்களை அன்புபவிக்கத் துடிக்கின்றன.

பின் என்ன தான் செய்வது ?

மாணிக்க வாசகர் வழி சொல்லுகிறார். .

புலன்களை நல்ல வழியில் விடுங்கள். அது எவ்வளவு போகுமோ போகட்டும். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு அதிகம் அந்த வழியில் போகிறதோ, அவ்வளவு நல்லது.

புலன்களை கட்டுப் படுத்த முடியாது என்று மாணிக்க வாசகர் உணர்ந்து இருக்கிறார்.

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய என்பார் திருவாசகத்தில்.

கட்டுப் படுத்த முடியாத புலன்களை நல்ல வழியில் செலுத்தும் படி சொல்லுகிறார்.

நல்ல வழி என்றால் என்ன வழி ?

புலன்களை இறை சிந்தனைக்கு ஆட்படுத்தச் சொல்கிறார். ஒவ்வொரு புலனையும் இறைவனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும் ? இறைவனிடம் தானே ? போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்கிறார்.

பாடல்

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
 கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டுமிலித்தனிய னேற்கே


பொருள்


சிந்தனை = சிந்தனை, மனம், எண்ணங்களை

நின்தனக்கு ஆக்கி = உனக்கு என்று ஆக்கி

நாயினேன் தன் = நாய் போன்ற கீழான என்

கண் இணை = இரண்டு கண்களையும்

நின் = உன்னுடைய

 திருப்பாதப் = திருவடிகள் என்ற

போதுக்கு ஆக்கி = மலர்களுக்கு ஆக்கி

வந்தனையும் = என் வணக்கத்தையும்

அம்மலர்க்கே ஆக்கி = அந்த திருவடிகளுக்கே ஆக்கி

வாக்கு = என் பேச்சை

உன் = உன்னுடைய

மணிவார்த்தைக்கு ஆக்கி = உன் பெருமைகளை பேசும்படி செய்து

ஐம்புலன்கள் ஆர = எனது ஐந்து புலன்களும் அமைதி அடைய

வந்தனை = வந்து என்னை

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

உள்ளே புகுந்த = எனதுள்ளே புகுந்து

விச்சை = வித்தை

மால் = விரும்பும்

அமுதப் பெரும் கடலே = அமுதத்தாலான கடலைப் போன்றவனே

மலையே = மலையே

உன்னைத் தந்தனை = உன்னை எனக்குத் தந்தனை

செந் தாமரைக்காடு = சிவந்த தாமரை மலர்களைக் கொண்ட காடு

அனைய மேனித் = போன்ற உடல் கொண்டவனே

தனிச்சுடரே = தனித்துவம் வாய்ந்த சுடரே

இரண்டும் = இரண்டும்

இலி = இல்லாத

தனிய னேற்கே = தனியனான எனக்கே

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்

நாம் உற்று கவனித்தால் , புலன்களால் ஒன்றும் பிரச்சனை இல்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் மனம் தான்.  ஒரு பொருளை வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லுவது மனம் தான். புலன்கள் உதவி  செய்கின்றன. அவ்வளவே.

எனவே, முதலில், மனதை திசை திருப்ப வேண்டும். அங்கங்கே அலையும் மனதை நல்ல வழியில் செலுத்தி விட்டால் , புலன்கள் கூடவே போகும்.

சிந்தனை நின் தனக்கு ஆக்கி என்றார்.

மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தால், புலன்களை கட்டுப் படுத்த முடியாது.

மனதை கட்டுப் படுத்த முடியாது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். கட்டுப் படுத்துவதற்கு பதில், அதை இறைவன் பால் திருப்பி விட்டு விட வேண்டும். அவ்வளவுதான்.


"நாயினேன்" என்கிறார்.

ஏன் ? நாய் நன்றியுள்ள பிராணி தானே. அதை ஏன் குறிப்பிட்டு கூறுகிறார் ?

நாய்க்கு இரண்டு கெட்ட  குணங்கள் உண்டு.

முதலாவது, என்ன தான் அதை கழுவி குளிப்பாட்டி, நடு வீட்டில் வைத்தாலும், உடையவன் இல்லாத போது அது வெளியில் ஓடி அசிங்கத்தை உண்ணும் இயல்பு உடையது.

இரண்டாவது, வீட்டைக் காக்கும் நாய்தான், வீட்டிற்கு வரும் ஒரு திருடன் அந்த நாய்க்கு ரெண்டு ரொட்டித் துண்டோ, மாமிச துண்டோ போட்டால் அவன் பின்னால் வாலை குழைத்துக் கொண்டு போய் விடும்.

மனித மனமும் அப்படித்தான். என்ன தான் உயர்ந்த சிந்தனைகள் , இறை சிந்தனைகள் இருந்தாலும், அந்தப் பக்கம் ஒரு அழகான பெண் போனால் மனம் சலனம் அடையும்.  பூஜை செய்யும் போது பக்கத்து வீட்டில் நல்ல மணமுள்ள  பதார்த்தம் ஏதாவது செய்தால், மனம் அங்கே போய் விடும்.

புலன்களை கட்டிக் காக்க வேண்டிய மனம், சில சமயம், புலன் இன்பத்தின் பின்னால் போய் விடும்.

கவனமாக இருக்க வேண்டும்.

அதெல்லாம் சரி, எந்நேரமும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா ?  சலிப்பு வராது.  மேலும், அதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம்  வந்து விடப் போகிறது ?

குழந்தையை எடுத்து முகர்ந்து பார்க்கும் சுகம் வருமா, இனிமையான பாடலை கேட்கும் சுகம் வருமா ,  ருசியான உணவை உண்ணும் இன்பம் கிடைக்குமா ?


(இன்னும் சிந்திப்போமா ?)