Thursday, May 25, 2017

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள்

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள் 


வெயில் காலத்தில் செடிகள் எல்லாம் வாடி நிற்பதை பார்க்கலாம். மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் அவை சிலிர்த்து கொண்டு தள தள என்று பச்சை பசேல் என்று ஒரு புத்துணர்ச்சியோடு சிரிப்பது போல இருக்கும். செடிக்கு நீர் வார்த்தவர்களுக்குத் தெரியும் அது.

கணவன் எப்போதெல்லாம் தளர்ந்து, சோர்ந்து போய் இருக்கிறானோ, அப்போது அவன் புத்துணர்ச்சி பெற அவனுடைய மனைவியின் தோள்களே அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.

பொருள்

உறுதோறு = உறு + தோறும் = சேரும் போது எல்லாம்

உயிர்  = உயிரானது

தளிர்ப்பத் = தளிர்க, துளிர்க்க

தீண்டலான் = தீண்டுவதால்

பேதைக்கு = எங்கே பெண்ணுக்கு , மனைவிக்கு

அமிழ்தின் = அமிழ்தில்

இயன்றன = செய்யப்பட்ட

தோள் = தோள்


காமத்துப் பால் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சொல்ல வந்த பகுதி. ஒரு எல்லைக்கு மேல் விவரித்தால் விரசத்தின்  எல்லைக்குள் போய் விடும்.  அதற்காக சொல்லாமலும் விட முடியாது. கத்தி மேல் நடப்பது போன்ற காரியம்.

வள்ளுவரின் காமத்துப் பாலை ஒரு தந்தையும் மகளும் ஒன்றாகப் படிக்கலாம். தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம்.

படிக்கும் போது இன்பம் தரும். ஆனால், விரசம் என்பது ஒரு துளியும் இருக்காது.

"தளிர்ப்ப" என்ற ஒரு சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தங்களை வைக்கிறார் வள்ளுவர் என்று பார்ப்போம்.

செடி வாடும். நீர் வார்த்தால் தளிர்க்கும். அதற்காக இருக்கிற நீரை எல்லாம் ஒரே நாளில்  ஊற்றி விட்டு, நீ பார்த்து வளர்ந்து கொள் என்று சொல்ல முடியாது. நிதமும் கொஞ்சம் கொஞ்சம் நீர் வார்க்க வேண்டும். மனைவியின் அன்பும் அப்படித்தான். ஏதோ ஒரு நாள் சந்தோஷமாக இருந்தால் போதாது. நாளும் நீர் வார்ப்பது போல அது எப்போதும் வேண்டும்.

தளிர்த்தல் என்றால் புத்துணர்ச்சி பெறுதல் மட்டும் அல்ல. நீர் வார்த்தால், வேரின் மூலம் சத்துகளை உறிஞ்சி அந்த செடியை உரம் கொள்ளச் செய்யும். வலிமை கொள்ளச் செய்யும். செடி வளர்ந்து , மரமாகி, நிழல் தரும், காய் கனிகளை தரும். அது போல, மனைவியின் அன்பானது கணவன் வலிமை பெற உதவும். அவன் உயர்ந்து வீட்டையும், நாட்டையும் காக்க பயன் படுவான்.

நீரை வேருக்கு மட்டும் ஊற்றினால் போதும். ஆனால், செடியின் இலையின் மேல் தெளித்தால்  அது சிலிர்த்து புத்துணர்ச்சி பெரும். அது போல அன்பு என்பது ஏதோ கடைமைக்கு இருக்கக் கூடாது. செலுத்தும் அன்பினால் கணவன் முகம் மலர வேண்டும்.

உறு தோறும் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொரு முறை அணைக்கும் போதும் புத்துணர்ச்சி தருமாம். தவிர்க்க வைக்குமாம்.

மனைவி என்பவை அமுதுக்கு ஒப்பானவள் என்று கணவன் நினைக்க வேண்டும்.

அமுதம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க மனைவியும் முயற்சி செய்ய வேண்டும். அமிலம் போல, சுடு நீர் போல இருக்கக் கூடாது. சுடு நீரில் செடி தளைக்குமா ?


அமிழ்து என்பது உயிரையும் உடலையும் இணைப்பது. எப்போதும் இளமையோடு வைப்பது. மனைவியின் தோள்கள்  அமுதத்தால் செய்யப்பட்டது என்கிறார் வள்ளுவர்.

சரி, அது என்ன "தோள் " என்று சொல்கிறார். தோள்கள் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஒரு தோள் மட்டும் எப்படி அமுதில் செய்யப்பட்டதாக இருக்கும் ?

இங்கு கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று தமிழ் இலக்கணத்தில் ஒன்று உண்டு.

என்ன இது ஏதோ வேற்று மொழிப் பெயர் மாதிரி இருக்கிறதா ?

தமிழில் பெயர் சொற்களை உயர் திணை , அஃறிணை என்று இரண்டாக பிரிப்பார்கள்.

பெயர் சொல்லின் இறுதி (விகுதி) பொதுவாக பால் எது என்று காட்டும்.

அவன் என்றால் அதில் உள்ள இறுதிச் சொல் 'ன்' அது அது ஆண் பால் ஒருமை என்று காட்டும்.

அவள் என்றால் பெண்பால் ஒருமை

ஒருமையா பன்மையா, ஆண்பாலா பெண்பாலா எ ன்று உயர் திணையில் அறிய வாய்ப்பு உள்ளது.

ஆனால், அஃறிணையில் அப்படி இல்லை.

அஃறிணை சொற்கள் பால் எது என்று காட்டாது.

பாலை பகராத சொற்கள் அவை.

உதாரணமாக

ஆடு வந்தது என்றால் ஒருமை
ஆடு வந்தன என்றால் பன்மை

அது ஆடு என்றால் ஒருமை
அவை ஆடு என்றால் பன்மை

வினை மற்றும் அதற்கு தொடர்புடைய சொல்லால் அவற்றின் பாலை (ஒன்றன் பாலா, பலவின் பாலா ) என்று அறிந்து கொள்ள முடியும்.

அது போல, தோள் என்பது பால் பகா அஃறிணை சொல். ஒரு தோளை மட்டும் அணைக்க முடியாது அல்லவா, அதனால் அவை தோள்கள் என்று அறியப் படும்.


















இராமாயணம் - மீண்டு அரசு செய்க

இராமாயணம் - மீண்டு அரசு செய்க 


கானகத்தில் உள்ள இராமனை காண வந்த பரதன், தயரதன் இறந்த செய்தியை கூறுகிறான். பின், "நீ வந்து ஆட்சியை ஏற்றுக் கொள் " என்று இராமனிடம் கூறுகிறான்.

"உன் தந்தையான தசரதன் செய்த தீமையும், தாயாகிய கைகேயி செய்த தீமையும் நீங்க , என் தந்தை போன்றவனே , நீ மீண்டு வந்து ஆட்சி செய் " என்று கூறுகிறான்.


பாடல்

‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

பொருள்

‘உந்தை = உன் தந்தை (தயரதன்)

தீமையும் = செய்த தீமையும்

உலகு உறாத நோய் =உலகு இது வரை பெறாத நோய்

தந்த = தந்த

தீவினைத் = தீய வினை

தாய் செய் தீமையும் =தாயாகிய கைகேயி செய்த தீமையும்

எந்தை! = என் தந்தை போன்றவனே

நீங்க  = அந்த துன்பங்கள் நீங்க

மீண்டு அரசு செய்க = இந்த கானகத்தில் இருந்து மீண்டு வந்து அரசை ஏற்று நடத்து

‘எனாச் = என்று

சிந்தை யாவதும் = சிந்தை முழுவதும்

தெரியக் கூறினான் = அறியும்படி கூறினான்


தயரதனை , "உன் தந்தை என்கிறான்" .  ஏன் என்றால், தயரதன் பரதனை தன் மகன் அல்ல என்று சொல்லி விட்டு இறந்தான். எனவே, தயரதனை தன் தந்தை என்று பரதன்  கூறவில்லை.

இராமனை , தந்தை இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

தந்தையும் , தாயும் செய்தது தீமை, தீவினை என்கிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று,  பெரியவர்கள் சொன்னால் அப்படியே  கேட்க வேண்டியது என்று ஒரு முறை வைத்திருக்கிறோம்.  

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்று பெற்றோர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பது என்று ஒரு கொள்கை  வைத்து இருக்கிறோம்.

இராமன் அந்தப் பாதையில் தான் செல்கிறான்.

ஆனால், பரதன் அதில் இருந்து விலகுகிறான் .

அறம் அல்லாத ஒன்றை யார் செய்தாலும் அது தவறுதான் என்பது அவன் கொள்கை.

அறத்தின் முன், தாய், தந்தை, என்று யாரும் கிடையாது.

"உந்தை தீமையும்...தாய் செய் தீமையும்"  என்று அவர்கள் இருவரும் செய்தது பெரிய தீமை என்கிறான்.

இராமா, நீ அரசை ஏற்றுக் கொள்ளா விட்டால், அந்த தீமை தொடரும் என்ற குறிப்பில், "தாய் செய் தீமை" என்கிறான்.

செய் தீமை - வினைத் தொகை. செய்த தீமை, செய்கின்ற தீமை , செய்யும் தீமை.

அந்தத் தீமை விலக வேண்டும் என்றால், நீ மீண்டு வந்து ஆட்சி செய் என்று இராமனை அழைக்கிறான்.

யார் செய்வது சரி ?

பெற்றோர் பேச்சை கேட்ட இராமன் செய்வதா ?

யார் சொன்னால் என்ன, அறம் தான் முக்கியம் என்று செயல்படும் பரதன் செயலா ?

யோசித்துக் கொண்டிருங்கள். கம்பன் கடைசியில் தீர்வு தருகிறான்.

அது என்ன என்று வரும் நாட்களில் பார்ப்போம். 

Wednesday, May 24, 2017

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

முதற்றே உலகு என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்து எப்படி பொருள் தந்தது என்று நேற்றைய பிளாகில் பார்த்தோம்.

ஆதி பகவன் என்றால் என்ன என்று இன்று சிந்திப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

முதலில் ஒலி வடிவம்.

பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.

முதலில் எழுத்து.

எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.

சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.

மற்றவற்றை  விடுவோம். சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாவதைப் பற்றி சிந்திப்போம்.

இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.

வீடு காட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போது தான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.

அது போல

இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.

தொகுக்கும் மொழி தொகை மொழி.

புரிகிறது அல்லவா ?

தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.

1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .

ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.

உதாரணமாக

பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விலக்கிக் கூறுகிறது.

உயர்ந்த மரம்

கரிய மலை

இவை எல்லாம் பண்புத் தொகைகள்.

இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.

சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.

தாமரைப் பூ
தென்னை மரம்
நாகப் பாம்பு

என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.

வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.

இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.

இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.

இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.

சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத் தான் குறிக்கும்.

ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.

ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.

இரண்டும் ஒன்றையே குறிப்பது.

பகவன் என்றால் வேறு ய யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.

அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.

ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.

இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.

இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 

Tuesday, May 23, 2017

திருக்குறள் - அகர முதல எழுத்தெல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்தெல்லாம் 


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

என்ற குறளில் , எப்படி அகரம் மொழிக்கெல்லாம் முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று நேற்றைய பிளாகில் (blog ) பார்த்தோம்.

இறைவன் முதல் என்றால் யார் அவனை முதலாக நியமித்தது ? அவன் மட்டும் தான் முதல்வனா அல்லது இந்த உலகம் தோன்ற மற்ற காரணங்களும் உண்டா ? இறைவனும் முதல் , அவன் கூட மற்ற ஏதாவது முதலாக இருக்குமா ? சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா ?

இருப்பதோ ஏழே வார்த்தைகள். விரித்தும் சொல்ல முடியாது. அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.

வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.

தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.

இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே

என்பது தொல்காப்பியம்.

இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.

அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.

இந்த ஏகார இடைச் சொல் பல 7 விதமாக வரும்.

ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

எப்படி என்று பார்ப்போமா ?

1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.

நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்

நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.

நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்

நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.

நானே செய்தேன் என்பது நான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.

2. வினா

வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?

முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.

3. எண்

வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே

இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.

வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை

அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.


5. எதிர்மறை

நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.

6. இசை நிறை

’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.

7. ஈற்று அசை

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.

 என்றுமேத்தித் தொழுவோ மியாமே

 என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.

சரி, இவ்வளவு பெரிய இலக்கணம் எதற்கு ?

அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

"ஆதி பகவன் முதற்றே உலகு "  என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள்.

ஆதி பகவான் முதற்று உலகு என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அப்படி சொல்லி இருந்தால், உலகுக்கு இறைவன் முதல் என்று அர்த்தம் வரும். அவன் மட்டும் தான் முதல் என்ற அர்த்தம் வராது.

முதற்றே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. அதாவது உறுதிப் பொருளில் வந்தது.

அவன் மட்டுமே முதல். வேறு யாரும் கிடையாது. மிக உறுதியாக சொல்கிறார் வள்ளுவர்.  அது மட்டும் அல்ல, அவன் மட்டுமே  என்று சொல்லும் போது அவனுக்கு முன்னால் யாரும் கிடையாது. எனவே அவனை  யாரும் முதல்வனாக நியமிக்கவில்லை.

ஒரே ஒரு ஏகாரம், பொருள் எப்படி மாறுகிறது ?

இலக்கணம் தெரியாவிட்டால் இவற்றை சுவைக்க முடியாது அல்லவா.


சரி, அது என்ன ஆதி பகவன் ? அது யார் ? ஆதி பகவன் என்றால் இப்போது latest பகவன் என்று  யாராவது இருக்கிறார்களா ?

அதற்கு , அடுத்த இலக்கணம் படிக்க வேண்டும்.  படிப்போமா ? 

Monday, May 22, 2017

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 


இலக்கியம் அறிய இலக்கணம் அவசியமா ?

மற்ற மொழிகளில் எப்படியோ, தமிழ் மொழியில் , இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியத்தின் ஆழத்தை , நுண்மையை அறிய முடியும்.

எடுத்துக்காட்டாக


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளை எடுத்துக் கொள்வோம்.

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான். எவ்வாறு "அ" என்ற எழுத்து மொழிகளுக்கு எல்லாம் முதலாக இருக்கிறதோ, அது போல உலகுக்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பது குறளின் சாரம்.

இதில் இலக்கணம் எங்கிருந்து வந்தது ?

சிந்திப்போம்.

முதலில் எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன என்று பார்ப்போம்.

அணி என்றால் அணிகலன். மோதிரம், வளையல், சங்கிலி போன்ற அணிகலன்கள். இவை நமக்கு அழகு செய்பவை. அது போல, பாடலுக்கு அழகு செய்பவை அணி எனப்படும்.

உவமை அணி என்றால், ஒன்றைச் சொல்லி மற்றதை விளங்க வைப்பது.

நிலவு போன்ற முகம், தாமரை போன்ற பாதம் என்று சொல்லும் போது முகத்தை நிலவுக்கு உவமையாக்கி சொல்கிறோம்.

இதில் இரண்டு வகை உண்டு.

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணி என்று.

நிலவு போல முகம் என்றால் உவமை அணி.

நிலவு முகம் என்றால் எடுத்துக்காட்டு உவமை அணி. இதில் "போல" என்ற உவம உருபு இல்லை. அதை நாம் தான் எடுத்துக் காட்ட வேண்டும்.

மதி முகம் என்றால் மதி போன்ற முகம்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளில் 

அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி பகவான் முதற்றே உலகு 

என்ற இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

நடுவில் "போல" என்ற உவம உருபு இல்லை. அகரம் மொழிக்கு முதலாக இருப்பது போல, இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒன்று இல்லாவிட்டால், இந்த இரண்டு வரியும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படும் ? தனித்தனியான இரண்டு வரிகள் இருக்கும். ஒரு பொருளும் இருக்காது. 

போல என்ற அந்த ஒரு சொல்  இந்த குறள் என்ன சொல்ல வந்ததோ அதை நமக்கு  உணர்த்துகிறது அல்லவா ?


உவமைக்கு இரண்டு வேலை இருக்கிறது. ஒன்று ஒன்றை உயர்வு படுத்திச் சொல்வது. இரண்டாவது, தெரிந்ததை வைத்து தெரியாதை விளங்கச் செய்வது. 

உதாரணமாக,

அவளுடைய முகம் நிலவு போல இருந்தது என்றால் முகமும் தெரியும், நிலவும் தெரியும். எனவே , இங்கே உவமை முகத்தின் அழகை உயர்த்திச் சொல்ல வந்தது. 

புலி இருக்கிறதே அது ஒரு பெரிய பூனை போல இருக்கும் என்று சொல்லும்போது பூனை ஒன்றும் புலியை விட உயர்ந்தது அல்ல. ஆனால் நாம் பூனையை பார்த்து இருப்போம். வீட்டிலேயே இருக்கும். புலியை பாத்து இருக்க மாட்டோம். எனவே, தெரிந்த பூனையை வைத்து தெரியாத புலியை புரிய வைக்க உவமை பயன்படுகிறது. 

இது ஒரு புறம் இருக்கட்டும். 

உவமை சொல்லும் போது , ஒரு படி உவமை என்று ஒன்று உண்டு. அதாவது உவமை சொல்லப்பட்ட பொருளின் ஒரே ஒரு குணம் தான் பொருந்தும். எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகும். 

உதாரணமாக,

நிலவு போன்ற முகம் என்றால், குளிர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  நிலவில் இருப்பது போல அவளின் முகத்தில் பள்ளம் மேடு இருக்குமா ? அவளும் நிலவு போல வளர்ந்து வளர்ந்து தேய்வாளா என்று கேட்கக்  கூடாது.நிலவின் குளிர்ச்சி மட்டும் தான் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இறைவனைப் பற்றி சொல்ல வருகிறார் வள்ளுவர். 

இறைவனை எதற்கு உதாரணமாகச் சொல்லலாம் ? இறைவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, உயர்ந்ததைச் சொல்லி இறைவன் அது போல இருப்பான் என்று சொல்ல முடியாது. 

இறைவன் அறிய முடியாதவன். எனவே, அறிந்த ஒன்றை வைத்து அறியாத இறைவனை விளங்கச் செய்ய வேண்டும். 

எனவே, அகரத்தை எடுக்கிறார் வள்ளுவர். 

இங்கே,அகரத்துக்கும் இறைவனுக்கும் எதில் சம்பந்தம் ?

"தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை " என்கிறார் பரிமேலழகர். 

எப்படி அகரம் எழுத்துக்கு முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான்.

சரி, ஒருவன் தலைவன் என்றால் அவனை யாரோ தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும் அல்லவா ? முதல்வரோ, பிரதமந்திரியோ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு தலைவராக வருகிறார்கள். 

அப்படி என்றால் இறைவனை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா ?

எப்படி இறைவன் முதல்வனான் ?

இலக்கணம் அதையும் விளக்குகிறது.

எப்படி என்று மேலும் சிந்திப்போம். 









Friday, May 19, 2017

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்


வாழ் நாள் எல்லாம் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம். படிப்பு, வேலை, திருமணம், பிள்ளை வளர்ப்பு, ஆட்டம், பாட்டம், என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எதற்கு ?

எதை சாதிக்க ? எதை அடைய ? நமக்கு முன்னால் இப்படி ஆடி ஓடி அலைந்தவர்கள் தாங்கள் தேடியதை அடைந்து விட்டார்களா ?

நெல்லுக்கு நீர் இறைத்தால் , ஒரு காலத்தில் நெல் விளையும். ஒன்றும் முளைக்காத கட்டாந்தரைக்கு நீர் வார்த்தால் , எவ்வளவு தான் நீர் வார்த்தாலும் ஒன்றும் வராது.

அது மட்டும் அல்ல,  வாழ்வில்  நல்லது  எதன் மீதும் பற்று கிடையாது.இருந்தாலும் கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் மனம் மற்றவற்றை தேடி ஓடும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டார்கள். படித்து விட்டு "ஹா...இதெல்லாம் ரொம்ப கஷ்டம்...நடை முறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி வைத்து விட்டு , நமக்கு பிடித்ததை செய்ய போய் விடுகிறோம். பின்னால் வருந்தி என்ன பயன்? அறிவுள்ளவர்கள் , படித்தும் கேட்டும் அறிந்து கொள்வார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள், பட்டுத் தெளிந்தால் தான் உண்டு. அவர்களாகவே சென்று முட்டி மோதி கடினமான வழியில் தான்  அறிவை அடைவார்கள்.

அதுக்கு முன்னால் என்ன சொன்னாலும், "அதெல்லாம் சரி, ஆனால் ரொம்ப கஷ்டம் " என்று ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இப்படி வாழ்ந்து, கடைசி காலத்தில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று ஒரு வழியும் அறியாமல் தவிப்பார்கள். நானும் அப்படி ஆகி விட்டேனே என்று சொல்கிறார் நாவுக்கரசு சுவாமிகள்.


பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


சீர் பிரித்த பின்

பற்று இல்லா  வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்று அல்லால்  கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்
எற்று உள்ளேன் என் செய்கேன் நான் இடும்பையால்  ஞானம் ஏதும்
கற்றிலேன் களை கண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


பொருள்

பற்று இல்லா = பற்று இல்லாத

வாழ்க்கை வாழ்ந்து = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பயனில்லாத இடத்துக்கு

நீர் இறைத்தேன் = நீர் வார்த்தேன்

உற்று அல்லால் = பட்டால் அல்லால்

கயவர் தேறார் = கயவர்கள் அறிய மாட்டார்கள்

என்னும் = என்ற

கட்டுரையோடு = சொல்லுக்கு

ஒத்தேன் = ஏற்றவாறு வாழ்ந்தேன்

எற்று உள்ளேன் = எதற்க்காக இருக்கிறேன்

என் செய்கேன் = என்ன செய்வேன்

நான் = நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானம் ஏதும் = அறிவு எதுவும் இல்லாமல்

கற்றிலேன் = எதையும் கற்காமல் இருக்கிறேன்

களை கண்காணேன் = இந்த துன்பங்களை களைந்து , இதிலிலிருந்து மீள வழி காண மாட்டேன் 

கடவூர்வீ ரட்டனீரே. = திருக் கடவூர் என்ற திருத்தலத்தில் இருப்பவரே


எதற்காக இருக்கிறேன் ? என்ன செய்யப் போகிறேன் என்று தவிக்கிறார்.

நாமும் சிந்திப்போம். என்ன செய்கிறோம். எதற்காக செய்கிறோம்.

நெல்லுக்கு நீர் இறைக்கிறோமா ? பாழுக்கு நீர் இறைக்கிறோமா என்று அறிந்து நீர்  இறைப்போம்.

வாழ்வின் அர்த்தத்தை கண்டு பிடிப்போம்.


Wednesday, May 17, 2017

திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.