Saturday, June 17, 2017

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க 


இன்று ஆன்மீக உலகில் உள்ள பெரிய சிக்கல் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்கள் கொண்ட கொள்கை தான் உண்மையானது, மற்றது எல்லாம் தவறு என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றன. தங்கள் தெய்வம் தான் மற்ற எல்லா தெய்வங்களை விடவும் உயர்ந்தது என்று அடம் பிடிக்கிறார்கள். மதங்கள் மட்டும் அல்ல, மதங்களின் உட் பிரிவில் உள்ளவர்களும் தங்கள் பிரிவே உயர்ந்தது என்று சாதிக்கிறார்கள்.

இதனால்  பல சண்டைகள் , சச்சரவுகள். போர்கள். உயிரிழப்பு. சதா தொல்லை.

அது ஒரு புறம் இருக்க, எது உண்மையை கண்டறியும் வழி ? இறைவனை, இயற்கையை, பிரபஞ்ச சக்தியை அறிய எது வழி ?

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல வித மார்க்கங்களை சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று சாதாரண மனிதன் குழம்புகிறான்.

அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத் வைதம் என்று பல வித கோட்பாடுகளை சொல்கிறார்கள். இவற்றை படித்து, அறிந்து தெளிய நேரம் இல்லை.

யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது ? எதைப் படித்து அறிந்து கொள்வது ? யாரை நம்புவது ? நாட்டில் பல போலி சாமியார்கள் அலைகிறார்கள். யார் உண்மையானவர் , யார் போலி என்று எப்படி இனம் கண்டு கொள்வது ?

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் விடை தருவது பெரிய புராணம்.

ஒரு நூலை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்டால் அதை எழுதிய ஆசிரியனே ஒரு கணம் திகைப்பான்.

இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும் ? இராமாயணத்தில் ஆயிரம் செய்தி  இருக்கிறது. எதை என்று சொல்லுவது ? சற்று சிக்கலான காரியம்.

திருக்குறளை எதற்குப் படிக்க வேண்டும் ?

கீதையை எதற்குப் படிக்க வேண்டும் ?

என்றெல்லாம் கேட்டால், படித்தால் நல்லது, வழி காட்டும் என்று பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லலாம்.

சேக்கிழார் சொல்கிறார் - பெரிய புராணத்தை எதற்குப் படிக்க வேண்டும் என்று. ஒரே வரியில் சொல்கிறார்.

"அக இருளை நீக்க "

பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று.

எப்படி சூரியன் புற இருளை நீக்குமோ, அது போல , அக இருளை நீக்க இந்த நூல் உதவும் என்கிறார்.

பாடல்

 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்


 இங்கிதன் = இங்கு இதன் (இந்த புத்தகத்தின்)

 நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

 இவ் உலகத்து  = இந்த உலகில்

முன்னாள்  = முன்பு

 தங்கிருள் =தங்கிய இருள்கள்

இரண்டில் =  இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

இருளை = இருளை

ஏனைப் = மற்றைய

புற இருள் = வெளி இருளை

போக்கு கின்ற = நீக்கு கின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = நீக்கும்

திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்

என்பாம் = என்று சொல்லுவோம்

புற இருளை சூரியன் நீக்குவது போல, அக இருளை நீக்குவது இந்த புராணம்.

தங்கிய இருள் என்கிறார்.

இருள் ரொம்ப நாள் தங்கி இருக்கிறது.

சரி, ரொம்ப நாள் இருண்ட வீடாயிற்றே என்று அதில் வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என்றால், அதே போல ரொம்ப நாள் ஆகாது. ஒரு தீக்குச்சியை உரசிய மாத்திரத்தில் வெளிச்சம் வரும், இருள் விலகி விடும்.

அறிவு என்ற தீ பற்றிக் கொண்டால், அறிவீனம் என்ற இருள் உடனே விலகி விடும். எத்தனை நாளாக நாம் அறியாமையில் இருந்தோம் என்பதல்ல கேள்வி.

ஒரு நொடியில் அந்த அறியாமை விலகும்.

வெளியில் உள்ள இருளுக்கும், மனதுக்குள் இருக்கும் இருளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

"சிந்தையுள் சார்ந்து , நின்று, பொங்கிய" இருள் என்கிறார் சேக்கிழார்.

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

நமது மனதுக்குள் இருக்கும் இருள் இருக்கிறதே, அது நமது சிந்தனையை சார்ந்து நிற்கிறது. பற்றிக் கொண்டு நிற்கிறது. நிலைத்து நிற்கிறது. உள்ளேயே பொங்குகிறது. 

சற்று சிந்திப்போம். 

முதலில் நமது அறியாமை நமக்குத் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று  நாம் நினைக்கிறோம். நாம் அறிந்தவை தான் சரி என்று வாதிக்கிறோம். என் மதம், என் கடவுள்  என்று சொந்தம் கொண்டாடுகிறோம். அது நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. எத்தனையோ நாள்  இந்த அறியாமையில் மூழ்கி கிடந்ததால், அது பழகிப் போய் விடுகிறது. அசுத்தத்திற்கு நடுவில் வாழ்பவனுக்கு , அந்த துர் நாற்றம் பழகிப் போய் விடுவதைப் போல , அறியாமை நமக்கு பழகி போய் விடுகிறது. 


யாரவது நம் அறியாமையை சுட்டிக் காட்டினால் , அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவரை கொல்ல முயல்கிறோம். 

சாகரடீஸ், இயேசு கிறிஸ்து, முகமது நபி, புத்தர் என்று உண்மையை யார் கண்டு சொன்னாலும், அவர்கள் மேல் சாதாரண மக்கள் கோபம் கொள்கிறார்கள்.  காரணம், அவர்கள், அந்த மக்களின் அறியாமை வெளிச்சம் போட்டு  காட்டுகிறார்கள். 

"நின்று "  நம் அறியாமை வந்து வந்து போவது இல்லை. எப்போதும் நம்முடனையே நிலைத்து நிற்கிறது. 

"பொங்கிய" ...இந்த அறியாமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு முட்டாள் சொல்வதை , இன்னொரு முட்டாள் கேட்டு இப்படியே அது  பெரிதாகிக் கொண்டே போகும். 

இதை நீக்கி, அறிவை அடைய இந்த திருத் தொண்டர் புராணம் வந்தது என்கிறார். 

எப்படி என்று பார்ப்போம். 


Friday, June 16, 2017

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் 


இலக்கியங்களை எதற்கு படிக்க வேண்டும் ?

படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது - அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், கணிதம், நிர்வாகம், என்று எவ்வளவோ முக்கியமான துறைகள் இருக்கும் போது , அவற்றை எல்லாம் விட்டு விட்டு , எப்பவோ எழுதிய கதைகளை ஏன் படிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ?

இளையவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பெரியவர்கள் மத்தியிலும் இந்த கேள்வி இருக்கிறது.

இலக்கியம் படிக்க பல காரணங்கள் சொல்ல முடியும். அதில் ஒன்று, மன ஆறுதல் பெற.

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி போய்க் கொண்டு இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும் போது மகிழும் நாம் , துன்பத்தில் துவண்டு போகிறோம்.

துன்பத்தில் தவிக்கும் போது , ஒரு தாயின் மடியாய், மனைவியின் இனிய தோளாய், நண்பனின் ஆதரவான கரமாய் இலக்கியம் இருக்கிறது.

காலங்கள் தாண்டி , தன் கற்பனை விரல்களால் நம் கண்ணீரை துடைத்து விடும் இந்த இலக்கியங்கள்.

மனதுக்கு மருந்து தடவி , சுகம் அளிப்பவை.

நமக்கு துன்பம் வரும் போது , எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சோர்ந்து போகிறோம்.

அந்த சமயத்தில் இலக்கியங்களை புரட்டுங்கள். நம்மை விட ஆயிரம் மடங்கு துன்பப பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் கவலை, துயரம் இவற்றை பார்க்கும் போது , நம் துன்பம் ஒன்றும் பெரியதில்லை என்று ஒரு ஆறுதல் பிறக்கும். அவர்களே மீண்டு வந்து விட்டார்கள் , நம்மால் முடியாதா என்று ஒரு தைரியம் பிறக்கும்.  நம்பிக்கை துளிர்விட்டால் , போதும், அது தானே வளரும்.

இலக்கியங்கள் கை கொடுத்து தூக்கி விடும் அந்தக் காரியத்தை செய்கின்றன.

தர்மன், சூதில், நாடு நகரம் எல்லாம் இழந்து, தம்பிகளோடு காட்டில் இருக்கிறான்.

நினைத்துப் பார்க்கிறான். எப்படி இருந்த நான் , இப்படி ஆகி விட்டேனே என்று  மனம் வருந்துகிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

சக்கரவர்த்தி, ஆள், அம்பு, சேனை, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று இருந்த தர்மன் அனைத்தையும் இழந்து, காட்டில் தனியாக தவிக்கிறான். அவன் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரிய துன்பம் ?


அப்போது , அங்கு வந்த முனிவரிடம் கேட்கிறன், அறிவை இழந்து, சூது ஆடி, மண்ணை இழந்து,  கானகம் வந்து ,இப்படி துன்பப் படும் என்னை போல வேறு யாராவது உண்டா என்று கேட்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறான்.

அதை கேட்ட அந்த முனிவர், "தர்மா கவலைப் படாதே, துன்பம் வருவது இயல்பு. உன்னை விடவும் உயர்ந்த நிலையில் இருந்து , உன்னை விடவும் துன்பப் பட்ட நள மகாராஜாவின் கதையை சொல்கிறேன் கேள் " என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்ணை இழந்து

மாயக் கவறாடிக் = மாயமான சசூது ஆதி

காவலர்தம் மண்ணிழந்து = காவல் செய்யும் (அரசு செய்யும்) மண்ணை இழந்து

போந்து = போய்

வனம்நண்ணி = காட்டினை அடைந்து

விண்ணிழந்த = விண்ணில் இருந்து வந்த

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூன்மார்பா  = நூல் +  மார்ப = பூணூலை அணிந்தவனே

மேதினியில்  = உலகில்

வேறுண்டோ = வேறு ஒருவர் உண்டா?

என்போ லுழந்தா ரிடர். = என் + போல் + உழந்தார் + இடர் = துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்

கண் இழந்து என்றால் இரண்டு கண்ணையும் இழந்து குருடாகி என்று அர்த்தம் அல்ல.

அதே போல் மண் இழந்து என்றால் ஏதோ கட்டிடம் கட்ட வாங்கி வைத்து இருந்த  இரண்டு வண்டி மணலை இழந்த மாதிரி என்று கொள்ளக் கூடாது. பின் என்ன ?

பின் என்ன அர்த்தம் என்று கேட்டால்,  கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

நிமிர்ந்து உட்காருங்கள்.

ஒரு நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.

விட்டாச்சா ? இப்ப படிப்போம்.

ஆகு பெயர், ஆகு பெயர் என்று ஒன்று உண்டு தமிழ் இலக்கணத்தில்.


ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது , ஆகு பெயர்.

உதாரணமாக,

ஊரே தூங்கிருச்சு என்றால் ஊர் தூங்குவது அல்ல. ஊரில் உள்ள மக்கள் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.


ஊர் என்ற இடம், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது.

அரிசி எவ்வளவு  என்று கடை காரரிடம் கேட்கிறோம். அவர் படி அம்பது ரூபாய் என்கிறார். அரிசி என்ன விலை என்று கேட்டல் படிக்கு விலை சொல்கிறாரே என்று  நினைப்பது இல்லை. படி அம்பது ரூபாய் என்றால் ஒரு படி அரிசியின் விலை அம்பது ரூபாய் என்று அர்த்தம்.

படி இங்கே அரிசிக்கு ஆகி வந்தது.

நல்ல தமிழ் படிக்க வேண்டுமா , கம்பனை  வாசி என்று சொல்கிறோம். கம்பன்  என்ற ஒரு கவிஞனின் பெயர் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஆகி வந்தது.

புரிகிறது அல்லவா.

இந்த ஆகு பெயர்  18 வகைப்படும் என்று சொல்கிறது நன்னூல்

பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"

அவையாவன


  1. பொருளாகு பெயர் = சந்தனம் போல மணம் = சந்தன மரக் கட்டைக்கு பதிலாக சந்தனம் என்ற பொருள் வந்தது
  2. சினையாகு பெயர் = கூட்டத்துக்கு வருவது என்றால் , தலைக்கு நூறு ரூபாய், ஒரு பிரியாணி பொட்டலம் தர வேண்டும் என்றால் தலைக்கு தருவது அல்ல. தலை உள்ள ஆளுக்கு தருவது (தலை , சினை )
  3. காலவாகு பெயர் = கோடை வாட்டுகிறது. கோடை காலத்தில் உள்ள வெப்பம் வாட்டுகிறது
  4. இடவாகு பெயர் = இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியா என்ற இடத்தில் இருந்து சென்ற அணி வென்றது
  5. பண்பாகு பெயர் = என்ன மாதிரி துண்டு வேண்டும் ? அந்த சிவப்புல ஒண்ணு , பச்சையில ஒண்ணு குடு 
  6. தொழிலாகு பெயர் = அந்த பணத்தை அப்பவே நம்ம கணக்கு கிட்ட குடுத்து அனுப்பி விட்டேனே (கணக்கு = கணக்க பிள்ளை) 
  7. எண்ணலளவையாகு பெயர் = இரண்டு போட்டா எல்லாம் சரியா போகும் 
  8. எடுத்தலளவையாகு பெயர் = கத்தரிக்காய் எவ்வளவு வாங்கட்டும். மூணு கிலோ வாங்கிட்டு வா 
  9. முகத்தலளவையாகு பெயர் = இரண்டு லிட்டர் வாங்கிட்டு வா, ஒரு குவாட்டர் போட்டா சரியாயிரும் 
  10. நீட்டலளவையாகு பெயர் = ஒரு மீட்டர் போடு 
  11. சொல்லாகு பெயர் = அபிராமி அந்தாதி எனக்கு மனப்பாடம். அதில் உள்ள பாடல்கள் எனக்கு மனப்பாடம் என்பதற்கு ஆகி வந்தது 
  12. காரியவாகு பெயர் = நான் நல்லா type அடிப்பேன் (எனக்கு type writer என்ற இயந்திரத்தை நன்றாக இயக்க வரும் )
  13. கருத்தாவாகு பெயர் = அவரு கம்பன்ல பெரிய ஆளு. (கம்ப இராமாயணம் நன்றாக கற்றவர் )
  14. உவமையாகு பெயர் = மயில் வந்தாள் 
  15. அடை அடுத்த ஆகுபெயர் = மா நட்டான்.
  16. தானியாகுபெயர் = தானி என்றால் இடம். விளக்கு முறிந்தது என்றால் , விளக்கின் தண்டு முறிந்தது என்று பொருள். 
  17. இருபடியாகு பெயர் =  முகில் வந்தது என்றால் மேகத்தை தாண்டி அதற்கு பின் உள்ள மழையை குறிப்பது. 
  18. மும்மடியாகு பெயர் = கார் வந்தது என்றால், கருமையான நிறத்தைத் தாண்டி, அதை உள்ள மேகத்தைத் தாண்டி, மழை வந்தது என்பதை குறிப்பது. 

இங்கே கண்ணிழந்து , மண்ணிழந்து என்றால் எப்படி கண் எது எப்படி என்று காட்டுமோ அதுபோல் காட்டும் அறிவை இழந்து என்று பொருள். 

மண் என்பது அதில் வாழும் மக்களை குறிப்பது. இடவாகு பெயர் 


இன்னும் கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம். இன்று இவ்வளவு போதும். 

மேலும் நாளை சிந்திப்போம் 

சரியா ?







Thursday, June 15, 2017

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு 


செல்வம் இருக்கிறதே, அதன் பெயரே அதன் நிலையைக் குறிக்கும்.

செல்வோம் என்பது செல்வம் என்று ஆனது. எப்போது வேண்டுமானாலும் சென்று விடும்.

முடி சாய்த்த மன்னரும் பிடி சாம்பராய் போய் விடுவர்.

செல்வம் நிற்காமல் உருண்டு ஓடிக் கொண்டே இருக்கும்.

இளமை எப்படி நில்லாமல் போய் கொண்டே இருக்குமோ, அது போல செல்வமும். அதை கட்டி வைக்க முடியாது.

ஆனால், அதையும் கட்டி வைக்க முடியும், அதற்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

உங்களிடம் வந்த செல்வம் , உங்களை விட்டு போகாமல் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டுமா ?

ஆம், என்றால் அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

நல்ல பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள், வீடு வாங்கி போடுங்கள், நிலத்தில் முதலீடு செய்யுங்கள், தங்கம் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

நிறைய உழையுங்கள், கடினமாக வேலை செய்யுங்கள், நிறைய படியுங்கள், நிறைய  பேரை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லவில்லை.

பின், என்ன தான் சொல்கிறார் ?

ஒன்றே ஒன்று தான், காலத்தோடு சேர்ந்து வாழுங்கள். அவ்வளவுதான்.

பாடல்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

பொருள்

பருவத்தோடு = காலத்தோடு

ஒட்ட = சேர்ந்து

ஒழுகல் = வாழ்தல்

திருவினைத் = செல்வத்தை

தீராமை  = தீர்ந்து போகாமல்

ஆர்க்கும் = பிணைக்கும்க, கட்டும்

கயிறு = கயிறு

பருவத்தோடு ஓட்ட ஒழுகல் என்றால் என்ன ?

நிறைய மென்பொருள் (software ) பொறியாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். சில பேரை அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி விடுகிறது. நிறுவனத்தின் மேல் கோபம் கொள்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன ?

அவர்கள் படித்த படிப்பு, இந்த காலத்துக்கு பொருந்த வில்லை.  சந்தையில் வேறு திறமைகள் வேண்டி இருக்கிறது.


நான் படித்த படிப்புக்கு வேலை கொடு என்றால், அந்த படிப்பு காலாவதியாகி விட்டது.

இப்போது எது தேவையோ , அதை படிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்.

இது அரசர்களுக்கு சொல்லப் பட்ட அறிவுரை. நமக்கும் பொருந்தும்.

இதை இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

காலத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும்.

இன்று என்ன செய்ய வேண்டும், நாளை என்ன செய்ய வேண்டும், இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம், என்று கணக்கு பண்ணி செயலாற்ற வேண்டும்.


அது மட்டும் அல்ல, நமது பாதையை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

இன்டர்நெட், கம்ப்யூட்டர், என்று புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. அவற்றை அறிந்து , அதில் நம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் படித்ததை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.

சரி, அது என்ன "ஒழுகல் "

ஒழுகுதல் என்பதில் இருந்து ஒழுகல் , ஒழுக்கம் என்பவை வந்தன.


ஒழுகல் என்ற வார்த்தையில் இரண்டு பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று, உயர்ந்த இடத்தில் இருந்து தான் ஒழுகும். கூரையில் இருந்து நீர் ஒழுகி கீழே வரும். கீழிருந்து மேலே போகாது.

அது போல, ஒவ்வொவரு காலத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஒழுகுவது என்பது ஒரே சீராக வருவது. கொட்டுவது, தெளிப்பது, சிதறுவது என்றால் விட்டு விட்டு வருவது. ஒழுகுதல் என்றல் ஒரே சீராக வந்து கொண்டு இருப்பது.

அது போல, நல்ல விஷயங்களை பழக்கமாக கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என்று இருக்கக் கூடாது. ஒரு காரியத்தை எடுத்தால் அதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்டி ஒழுகினால், இருக்கின்ற செல்வம் நம்மை விட்டு போகாது.

ஒரு காகிதத்தை எடுத்து பட்டியில் போடுங்கள்.

எத்தனை காரியங்கள் நீங்கள் செய்கிறீர்கள், அதில் எத்தனை காலத்தோடு ஒட்டி இருக்கிறது என்று.

காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் எவை எவை என்று சிந்தியுங்கள் அவற்றை என்ன செய்வது என்று முடிவுக்கு வாருங்கள்.

இன்று என்ன செய்வது, நாளை என்ன செய்வது, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.

அப்படி சிந்தித்து செயல் பட்டால், உங்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும்.

நிற்கட்டும். 

Tuesday, June 13, 2017

திருக்குறள் - வலிமையையும் காலமும்

திருக்குறள் - வலிமையையும் காலமும் 


எதற்கும் ஒரு காலம் வேண்டும். காலம் பார்த்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாடல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்

பகல்வெல்லும் = பகலில் வெல்லும்

கூகையைக் காக்கை = ஆந்தையை காக்கை

இகல்வெல்லும் = எதிர்ப்பை வெல்ல நினைக்கும்

வேந்தர்க்கு = அரசர்களுக்கு

வேண்டும் பொழுது = வேண்டும் சரியான காலம்

இது எல்லோருக்கும் தெரிந்தா ஒன்று தானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது. எதற்கு இதை வேலை மெனக்கெட்டு வள்ளுவர் சொல்கிறார் ?

நமக்கு வாழ்வில் வெற்றி தோல்வி வருவது இயல்பு.

வெற்றி வரும்போது நம் திறமையால் நிகழ்ந்தது என்று நினைக்கிறோம்.

தோல்வி வரும் போது ஏதோ நம் திறமையில் குறை என்று நினைக்கிறோம்.  நம் திறமையின் மீது நமக்கு சந்தேகம் வருகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. பதற்றம் வருகிறது.

ஆனால் , முக்கியமான ஒன்றை நாம் மறந்து விடுகிறோம்.

காலம் என்ற ஒன்றை நாம் மறந்தே விடுகிறோம்.

பகலில் காக்கை ஆந்தையை வெல்லும். இரவில் , ஆந்தை ,காக்கையை வெல்லும். 

காரணம், பகலில் காக்கைக்கு கண் தெரியும். ஆந்தைக்குத் தெரியாது. 

அதே போல, இரவில் ஆந்தைக்கு கண் தெரியும். காக்கைக்குத் தெரியாது. 

வெல்லுதல் என்பது உடல் வலிமை / திறமை மட்டும் காரணம் அல்ல.  பகலில் காக்கை  வலிமையாகவும், இரவில் ஆந்தையை வலிமையாகவும் இருப்பது இல்லை. 

இரவில் காக்கைக்கு கண் தெரியாது என்பதால் காக்கையின் கண்ணில் குறை என்று  சொல்ல முடியாது. அந்த நேரத்தில் அதனால் பார்க்க முடியாது.  

என்ன தான் வலிமை இருந்தாலும், காலம் சரியாக இல்லாவிட்டால் அந்த திறமை  சரிவர எடுபடாது. 

தோல்வி வந்தால், நினைத்தது நடக்கவில்லை என்றால் , உங்கள் திறமையை சந்தேகப் படாதீர்கள். உங்கள் திறமையை சரியான காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை  என்று அர்த்தம். 

சரி, அதற்காக நல்ல காலம் வரும் என்று சும்மா உட்கார்ந்து இருப்பதா ?

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார் ....இகல் வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது.

எல்லாவற்றையும் திட்டமிடும் போது காலத்தையும் சேர்ந்து திட்டம் இட வேண்டும். 

காலம் தவறினால் , நல்ல திறமையும், வலிமையையும் கூட வியர்த்தமாகி விடும். 

எப்போது உழ வேண்டும், எப்போது விதைக்க வேண்டும், எப்போது நீர் பாய்ச்ச வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டும். 

காலம் தவறினால் விளைச்சல் வராது. 

எந்த காரியத்தையும் செய்யத் தொடங்குமுன் அதை செய்யப்போகும் காலம் சரிதானா என்று சிந்தித்து செயல்படுங்கள். 

வெற்றி நிச்சயம். 

வள்ளுவர் ஏழு வார்த்தையில் சொன்னதை ஔவையார் மூன்றே வார்த்தையில் சொல்கிறார் 

"பருவத்தே பயிர் செய்" 

காலம் அறிதல் பற்றி பத்து குறள் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

மற்றவற்றையும் பார்ப்போமா ?

Monday, June 12, 2017

பெரிய புராணம் - அறிமுகம்

பெரிய புராணம் - அறிமுகம் 


பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

63 நாயன்மார்களின் வரலாறுகளை கூறுவது.

பெரிய புராணத்தை பலர் , பல வழிக்களில் பார்த்தது, இரசித்து, வணங்கி எழுதி இருக்கிறார்கள்.

பிள்ளை பாதி, புராணம் மீதி என்று சொல்லுவார்கள். மொத்த பாடலில் , திருஞான சம்பந்தரைப் பற்றிய பாடல்கள் பாதி பாடல்கள். மீது 62 நாயன்மார்களின் புராணங்களும் மற்றொரு பாதி.

பெரிய புராணம் ஒரு புராணமே இல்லை. இது பல்வேறு நாயன்மார்களின் வாழ்க்க்கை வரலாற்று தொகுப்பே என்று கூறுவாரும் உள்ளனர்.

அதை மறுத்து, இல்லை, சுந்தரர் என்ற ஒரு நாயனாரின் வாழ்வை மையமாக வைத்து எழுதப் பட்டதுதான் இந்த பெரிய புராணம் என்று கூறுவாரும் உள்ளனர்.

இந்த பெரிய புராணம் தோன்றிய வரலாறே சுவாரசியமானது.

அநபாய சோழன் என்ற ஒரு சோழ அரசன் பல சிற்றின்ப நூல்களை படிப்பதில் காலம் செலவழித்து வந்தான்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது போல, மக்களும் அந்த வழியில் சென்று கெட்டு விடுவார்களே என்று அறிந்த , அமைச்சரான சேக்கிழார் , அரசனை  நல்ல நூல்களை படிக்கும் படி அறிவுரை வழங்கினார்.

நல்ல நூலகள் என்றால் எது என்று கேட்டான்.

திருத் தொண்டர்களின் வரலாற்றை படிக்கும்படி கூறினார்.

அது எங்கு இருக்கிறது என்று கேட்டான்.

"அது தொகுக்கப்படாமல் இருக்கிறது" என்றார் சேக்கிழார்.

"சரி, அப்படி என்றால் நீரே அந்த நூலை எழுதும் " என்று சொல்லிவிட்டான் அநபாய சோழன்.

அரச கட்டளை ஆயிற்றே , மீற முடியுமா ?

முதலமைச்சர் பதவியை துறந்து விட்டு, புராணம் எழுத முற்பட்டார் சேக்கிழார்.

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பினார்.

நேரே சிதம்பரம் சென்று நடராஜரிடம் முறையிட்டார்.

"உலகெல்லாம் " என்று ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க , பெரிய புராணம்  பாடத் தொடங்கினார்.

பெரிய புராணத்தில் அப்படி என்ன சிறப்பு ? அது சொல்லும் சேதி என்ன ? ஒரு கம்ப இராமயணமோ , சிலப்பதிகாரமோ மக்களை சென்று அடைந்த மாதிரி பெரிய புராணம் சென்று அடைந்ததா ?

சிந்திப்போம்




Friday, June 9, 2017

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் 



அரசை ஏற்றுக் கொள் என்று பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் உடன் படவில்லை.

பரதனிடம் இராமன் சொல்கிறான் ,  " பரந்த கேள்வி அறிவும் , குற்றமற்ற ஞானமும், கொண்ட ஒழுக்கமும்,  செய்யும் தொழிலின் மேன்மையும் , வணங்கத் தக்க தேவர்களும் , நமது பெரியவர்களே "

அதனால், நீ படித்த அறங்களும், நமது குல வழக்கமும், மனு நீதியும், எல்லாம் என் தந்தையான தயரதன் சொல்லுக்கு அப்புறம் என்று சொல்லி விடுகிறான்.

பாடல்



‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும் -
உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும்,
“குரவரே”எனப் பெரிது கோடியால்.


பொருள்


‘பரவு கேள்வியும் = புகழ் பெற்ற கேள்வி அறிவும்

பழுது இல் ஞானமும் = குற்றம் அற்ற ஞானமும்

விரவு சீலமும் = கடை பிடிக்கும் ஒழுக்கமும்

வினையின் மேன்மையும் = செயலின் மேன்மையும்

உர விலோய்! = உறுதியான வில்லைக் கொண்டவனே

தொழற்கு உரிய தேவரும் = தொழுதற்கு உரிய தேவர்களும்

“குரவரே”எனப் = பெரியவர்களே

பெரிது கோடியால் = பெரிதும் மனதில் கொள்வாய்

இதில் குரவர் என்றால் யார் என்று முதலில் பார்த்து விடுவோம்.

குரவர் என்றால் பெரியவர், முன்னோர், என்று கொள்ளலாம். ஆசாரக் கோவை என்ற நூல் ஐந்து பேரை  குரவர் என்று சொல்கிறது.

யார் அந்த ஐந்து பேர் ?

அரசன்,
ஆசிரியன் ,
தாய்,
தந்தை,
தனக்கு முன் பிறந்த சகோதரன், சகோதரி (அண்ணன் /அக்காள்)

இவர்களுக்கு இணையான குரவர் அல்லது பெரியவர்கள்  .யாரும் இல்லை. எனவே இவர்களை தினம் தொழ வேண்டும் என்று சொல்கிறது. 

அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே-
யாவரும் கண்ட நெறி.


இராமனைப் பொறுத்தவரை, அறிவு , ஞானம், தேவர்கள், ஒழுக்கம், நெறி எல்லாம்  அவனுடைய தந்தை சொல்லுக்குப் பிறகுதான்.

இதை இந்த இடத்தில் மட்டும் அல்ல, இராமாயணத்தில் அத்தனை சிக்கலான  இடத்திலும் , எங்கெல்லாம் நடைமுறை சிக்கல்கள் வருகின்றனவோ , அங்கெல்லாம்  யாரோ ஒரு பெரியவரின் சொல் கேட்டுத்தான் நடக்கிறான்.

எனக்குத் தெரியும், நான் அறிந்த அறத்தின் படி நடக்கிறேன் என்று சொல்லவில்லை.

மாறாக, பாரதனோ, அம்மா சொன்னால் என்ன, அப்பா சொன்னால் என்ன, அறம்  இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது. அதன் படி நடக்க வேண்டும் என்று  கூறுகிறான்.

எது சரி, எது தவறு என்று பின்னால் கம்பன் கூறுகிறான்.

அதுவரை அவர்களின் பேச்சை கவனிப்போம்.

Wednesday, June 7, 2017

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு

திருக்குறள் - கற்றனைத்து ஊறும் அறிவு


மணற் கேணியில் எவ்வாறு தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்க படிக்க அறிவு வளரும்.

குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு. 

பொருள்

தொட்டனைத்து = தோண்டிய அளவில்

ஊறும் = ஊற்று எடுக்கும்

மணற்கேணி = மணற் கேணி

மாந்தர்க்குக்  = மக்களுக்கு

கற்றனைத்து = கற்ற அளவு

ஊறும் அறிவு. = ஊறும் அறிவு

சரி இது என்ன புது விஷயமா ? இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

சிந்திப்போம்.

கல்வி என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது. கல்வி பற்றி சொல்ல வந்து வள்ளுவர் இந்த உதாரணத்தை சொல்கிறார்.

அது என்ன மணற் கேணி ? அதில் என்ன சிறப்பு ?

கேணியை மூன்று இடங்களில் தோண்டலாம்.

நிலத்தில் தோண்டும் கேணி - நிலக் கேணி

பாறையில் அல்லது மலையில் தோண்டும் கேணி = கற் கேணி

மணலில் தோண்டும் கேணி = மணற் கேணி.

இதில் , மணற் கேணியை ஏன் தேர்ந்தெடுத்தார் ?

மணல் கேணியில் , தோண்டிய பின், சிறிது காலத்தில்  மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும்.  அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம் , அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது.

படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும்.  வற்றி விடாது.

அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும் மேலும் அறிவு வளரும். கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.

படித்ததை பகிர வேண்டும்.


நீர் என்பது குளம், குட்டை, ஆறு, கடல் என்று விரிந்து கிடக்கிறது. மணற்கேணியில் உள்ள நீர் உலகில் உள்ள நீரில் மிகச் சொற்பமானது. எவ்வளவுதான் தோண்டினாலும் அது கடல் நீர் அளவுக்கு ஆகி விடாது. கல்வி கற்று  வரும் அறிவு கொஞ்சம் தான். அந்த அடக்கம் வேண்டும்.

கல்லாதது கடலளவு.

முக்கியமாய் கவனிக்க வேண்டியது , தோண்டுதல் என்பது கற்பதற்கு சமம். நாம் தோண்டி நீரை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊற்றுவது இல்லை. நீர் உள்ளுக்குள் இருந்து வெளியே வருகிறது.

நாம் படிக்க படிக்க , நமக்குள் இருந்து அறிவு வெளியே வர வேண்டும்.


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும்  கல்வி.

என்று சொல்லவில்லை.

சொல்லி இருக்கலாம்.

கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது.

அறிவு என்பது உள்ளிருந்து வெளியே வருவது.

கற்க கற்க உள்ளே இருந்து வெளியே வர வேண்டும்.

விஷயங்களை உள்ளே திணிப்பது அல்ல கல்வி. அதை ஒரு கணிப்பொறி மிகச் சிறப்பாக செய்யும்.

கற்றது உள்ளே போய் , உள்ளே இருக்கும் அறிவை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு குறளுக்கு பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. நிதானமாக சிந்திக்க வேண்டும்.