Saturday, July 8, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு 


தந்தையின் உரை கேட்டு கானகம் சென்ற இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன், அரசை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான். எவ்வளவோ சொல்லியும் இராமன் ஏற்றுக்  கொள்ளவில்லை. வசிட்டன் இடையிட்டு , "இராமா , நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் . இது என் ஆணை " என்று கூறுகிறான்.

"நான் என் பெற்றோர் சொல்வதை கேட்பதா, குரு சொல்வதை கேட்பதா " என்று கேள்வியை வசிட்டனிடமே விடுகிறான் இராமன்.

வசிட்டன் பாடு சங்கடமாகிவிட்டது. பெற்றோர் சொல் கேளாதே என்று குரு சொல்ல முடியாது. பின்  என்ன செய்வது.

"நான் சொன்னது தவறுதான், நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. நீ பெற்றோர் சொல்லையே கேள் " என்று வசிட்டன் சொல்லி இருக்க வேண்டும்.

 அவன் படித்த கல்வி அவனை அவ்வாறு சொல்ல விடாமல் தடுக்கிறது.

இராமன் அப்படி கேட்டவுடன் "இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை " என்று எண்ணி பேசாமல் அமர்ந்து விட்டான்.

பார்த்தான் பரதன், "சரி தான், வசிட்டனும் வாய் மூடி மௌனமாகி விட்டான். இனி மேல் இராமனை யாரும் மாற்ற முடியாது " என்ற எண்ணத்திற்கு வந்து வந்தான்.

" அப்படியா சங்கதி.   சரி.  யாராவது நாட்டை  ஆண்டு கொள்ளட்டும்.  நான் இராமனோடு கானகம் போகிறேன் " என்று கூறுகிறான்.

பாடல்

முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும்,
'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான்

பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

 'உரைப்பது = இனி சொல்வதற்கு

ஓர் = ஒரு

முறைமை கண்டிலெம் = வழியும் இல்லை

இனி' = இனிமேல்

என இருந்தனன்; = என்று நினைத்து அமர்ந்து விட்டான்

இளைய மைந்தனும் = பரதனும்

அனையதேல் = அப்படியானால்

ஆள்பவர் ஆள்க நாடு; = யாரவது நாட்டை ஆண்டு கொள்ளட்டும்

நான் = நான்

பனி படர் = பனி விழும்

காடு = காட்டுக்கு

உடன் = இராமனுடன்

படர்தல் மெய்' = உடன்செல்வது உண்மை

என்றான் = என்றான்

காப்பியம் நின்று விட்டது. கதையை மேலே நகர்த்த வழி இல்லை.


இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

பரதன் நாட்டை ஆள மாட்டேன் என்கிறான்.

வசிட்டன் வாய் மூடி மௌனமாகிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது ?

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக முட்டிக் கொண்டு நிற்கிறது. ஆங்கிலத்தில் grid lock என்று சொல்லுவார்களே ,   அது போல.


இந்த சிக்கலை யார் அவிழ்ப்பது ? எப்படி அவிழ்ப்பது ?

இராமனின்  அவதார நோக்கம் நிறைவேற வேண்டும். அதே சமயம் அயோத்தி மக்களும் மன்னன் இல்லாமல் தவிக்கக் கூடாது.

இராமனும் பரதனும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வருவதாய் இல்லை.

என்ன செய்வது ? எப்படி கதையை நகர்த்துவது ? யார் வந்தால் இந்த சிக்கல் தீரும் ? எப்படித்தான் தீரும் ?

சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

நாளையும் சந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_81.html

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய 


சடையனார் என்பவருக்கும், இசை ஞானியாருக்கும் பிள்ளையாக சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தார்.

இது செய்தி.

இதைச் சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

தமிழ் கொஞ்சுகிறது.

பாடல்

மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி 
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

பொருள்

மாதொரு பாக னார்க்கு = மாது + ஒரு + பாகனார்க்கு = பெண்ணை ஒரு உடம்பின் ஒரு பக்கத்தில் உடையவர்க்கு . அதாவது சிவ பெருமானுக்கு

வழிவழி யடிமை செய்யும்  = வழி வழி அடிமை செய்யும்.

அது என்ன வழி வழி ? ஒரு முறை சொன்னால் போதாதா ?

தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழியிலும் சிவத் தொண்டு செய்து வந்த குடும்பம்.  எனவே வழி வழி என்று கூறினார்.

வேதியர் குலத்துட் =  வேதியர் குலத்தில. வேதம் ஓதும் குடும்பத்தில்.  வேதம் என்பது வீட்டுப் புழக்கமாக இருந்திருக்கிறது.

டோன்றி = தோன்றி

மேம்படு சடைய னாருக் = மேன்மை மிகுந்த சடையனாருக்கு

கேதமில் கற்பின் = கேதம் என்றால் துக்கம்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

கேதமில் கற்பு என்றால் குற்றமற்ற கற்பு, தீமையற்ற கற்பு.

வாழ்க்கை = வாழ்க்கை

மனை = மனைவியான

யிசை ஞானியார்பாற் = இசை ஞானியார் பால். அவரிடம்

றீதகன் றுலக முய்யத் = தீது அகன்று உலகம் உய்ய

திருவவ தாரஞ் செய்தார்= திரு அவதாரம் செய்தார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

என் வீடு, என் குடும்பம், என் சமயத்தில் உள்ளவர்கள், என் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இன்பமாக வாழ்ந்தால் போதும் என்று சேக்கிழார் போன்ற பெரியவர்கள் நினைக்கவில்லை.

அவர்களிடம் உலகம் பற்றிய சிந்தனை  இருந்தது.

உலகம் நன்றாக இருக்க வேண்டும் விரும்பினார்கள். உலகம் என்றால் உலகில் உள்ள மக்கள். இடவாகு பெயர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பார் சேக்கிழார்

உலகம் யாவையும் தாம் உள வாக்கிலும் என்பார் கம்பர்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . .

என்று தொடங்குகிறார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப என்றால் உலகம் மகிழ என்று அர்த்தம்.

நான் மகிழ, என் வீட்டில் உள்ளவர்கள் மகிழ, என் சாதிக்காரர்கள் மகிழ என்று வேண்டவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று  பாடினார் நக்கீரர்.

உலகளாவிய சிந்தனை இருந்திருக்குறது.

உலகிலே தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுந்தரர் காலத்திலும் தீமைகள் இருந்திருக்கின்றன.

அந்தத் தீமைகள் எல்லாம் விலகி, உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான்.


தீமைகள் நீங்காவிட்டால் உலகம் அழித்து போகும்.

நன்மைகள் பெருகி உலகம் உய்ய என்று சொல்லி இருக்கலாம்.

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், கொஞ்சம் தீமை இருந்தால் அது நல்லவைகளை சிறுமை படுத்தி விடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பார் வள்ளுவர்.

மனத்துக்கண் நல்லவன் ஆதல் அறம் என்று சொல்லி இருக்கலாம்தானே ? சொல்லவில்லை. மாறாக, மாசிலன் ஆதல் என்று கூறுகிறார்.

தீமைகளை விலக்கி விட்டால், நன்மை தானே வரும்.

"அவதாரம் செய்தார் " அவதாரம் என்றால் மேலிருந்து கீழ்  வருவது. வந்த பின் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடுவது.

இராமனை இருகை வேழத்து இராகவன் என்பார் கம்பர்.

ஏன் இராமனை யானையோடு ஒப்பிடுகிறார் ?

யானையின் காலைப்  பிடித்தால்,அது நம்மை தலைக்கு மேலே தூக்கி முதுகில் உட்கார வைத்துக் கொள்ளும்.

இராகவனும் , அவனுடைய பாதங்களை பிடித்தவர்களை மேலே தூக்கி விடுவான்.

நம்மை உயர்த்த வந்த  யாருமே அவதாரம் தான்.

கீழிருப்பது மேலே செல்வதற்காக , மேலிருந்து ஒன்று கீழே வருவது அவதாரம் என்று பெயர்.

உலகம் தீமைகளில் இருந்து விடப்பட்டு உய்வடைய சுந்தர மூர்த்தி நாயனார்  அவதாரம் செய்தார்


பெரிய புராணத்து தமிழ் சொற்கள் ஆழம் மிகுந்தவை. பொருட்ச்செறிவு நிறைந்தவை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_8.html


Friday, July 7, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?


தந்தை சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். அவனைத் தொடர்ந்து வந்த பரதன், இராமனிடம், அரசை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது இடை மறித்து , வசிட்டன் "இராமா நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் , இது என் ஆணை " என்று ஆணையிட்டு  விடுகிறான்.

குருவின் ஆணையை மீற முடியாது. இராமன் மீறினால், பின்னால் வரும் சந்ததி ஒன்றும் ஆசிரியர் பேச்சை கேட்கமாட்டார்கள். இராமனே கேட்கவில்லை, நான் ஏன் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இராமன் இந்த தர்ம சங்கடத்தை மிகத் திறமையாக கையாளுகிறான்.

ஆணையிட்ட வசிட்டனை நோக்கி இராமன் கேட்கிறான்

"முன்னால் சொன்ன தாய் தந்தையரின் கட்டளையை ஏற்று, நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது நீ ஆணையிடுகிறாய். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் " என்று.

பாடல்


முன் உறப் பணித்தவர்
     மொழியை யான் என
சென்னியில், கொண்டு, “அது
     செய்வேன்” என்றதன்
பின்னுறப் பணித்தனை;
     பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை?
     உரைசெய் ஈங்கு’ என்றான்


பொருள்


முன் உறப் = முன்பு தெளிவாக

 பணித்தவர் =  என்னை கானகம் போகும் படி பணித்தவர்கள் (என் தாய் தந்தையர்)

மொழியை = சொன்ன சொல்லை

யான் = நான்

என்எ = என்னுடைய

சென்னியில் கொண்டு, = தலைமேல் கொண்டு

 “அது செய்வேன்” = அதை செய்து முடிப்பேன்

என்றதன் = என்ற அந்த வாக்குக்குப்

பின்னுறப் பணித்தனை; = பின்னால் நீ என்னை பணிக்கிறாய்

பெருமையோய்! = பெருமை உடையவனே

எனக்கு = எனக்கு

என் இனிச் செய்வகை? = இனி எந்த வகையில் காரியம் செய்ய வேண்டும்

உரைசெய் ஈங்கு’ என்றான் = இங்கு நீ உரைப்பாய் என்றான்

நான் உன் மாணவன். நீ எனக்கு ஆசிரியன். என் தாய் தந்தையரின் சொல் கேட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். நீ திரும்பி நாட்டுக்கு வா என்கிறாய். நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான்.

இப்போது வசிட்டன் பாடு திண்டாட்டம்.

பெற்றோர் வார்த்தையை கேட்காதே என்று வசிட்டன் சொல்ல முடியாது.

இராமன் நினைத்து இருந்தால் , வசிட்டன் சொல் கேட்டு மீண்டும் அரசை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

இராமனின் நோக்கம் அது அல்ல. பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டும் என்று   வாழ்ந்து காட்டுவது அவன் நோக்கம்.

எனவே,கேள்வியை வசிட்டன் பால் திரும்புகிறான்.

வசிட்டன் என்ன செய்தான் என்பதை நாளை பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_7.html

Thursday, July 6, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல் 


தயரதனின் கட்டளை ஏற்று இராமன் கானகம் சென்றான். இராமனை , கானகத்தில் சந்தித்த பரதன், அரசை இராமன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது வசிட்டன் இடையிட்டு , இராமன் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறான்.

ஒரு புறம் பெற்றோர் சொல். மறு புறம் குருவின் சொல். எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவது என்ற தர்மசங்கடமான நிலை இராமனுக்கு.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம் ? அரசு பரதனிடம் இருக்கிறது. பரதனே அந்த அரசை தருகிறான். மக்கள் எல்லோரும் இராமன் தான் ஆள வேண்டும் என்கிறார்கள். அரச முறைப்படி பார்த்தாலும் இராமன் தான் பட்டத்துக்கு உரியவன். ஆணையிட்ட தயரதன் இறந்து போய்விட்டான்.  எழுந்து வந்து கேட்கப் போவது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக , குல குருவான வசிட்டரும் ஆணை இட்டு விட்டார்.

பேசாமல் அரசை ஏற்றுக் கொண்டிருப்போம். அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் குறை சொல்ல முடியாது.

இராமன் ஏற்கவில்லை.

அப்பாவின் ஆணையை, அம்மா மகிழ்ந்து சொன்ன சொல்லை ஏற்று அதன்படி நடக்காதபிள்ளையும் ஒரு பிள்ளையா ? அவனைக் காட்டிலும் நாய் எவ்வளவோ மேல் என்கிறான்.

பாடல்


‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?


பொருள்



‘தாய் = தாயான கைகேயி

பணித்து = பணி செய்யுமாறு ஆணையிட்டு

உவந்தன = மகிழ்வோடு

தந்தை, = தந்தையான தயரதன்

 “செய்க” என ஏய  = செய் என்று கட்டளையிட

எப் பொருள்களும் = அப்படி சொல்லப்பட்ட எது ஒன்றையும்

இறைஞ்சி  = வணங்கி

மேற்கொளாத் = ஏற்றுக் கொள்ளாத

தீய = தீமை நிறைந்த

அப் புலையனின் = அந்த புலையனின்

செய்கை = செயலானது

தேர்கிலா = நல்லது கேட்டது தேர்ந்து அறியாத

நாய் எனத் திரிவது = நாய் போலத் திரிவது

நல்லது அல்லதோ? = எவ்வளவோ நல்லது

எவ்வளவு படித்தாலும், யார் என்ன சொன்னாலும், பெற்றோரின் சொல்லுக்கு மேல்  ஒன்று கிடையாது என்று இராமன் வாழ்ந்து காட்டுகிறான்.

பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது, நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கும் ஒரு தலைமுறை வரும் என்று இராமனுக்கு தெரிந்திருக்கிறது. நாலு புத்தகம், கொஞ்சம் google அலசல் செய்து விட்டு , பெற்றோரைப் பார்த்து "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று எள்ளி நகையாடும் தலைமுறைக்கு இராமனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு

பெற்றோர் சொல்வதை கேட்காமல் இருக்கும் வாழ்க்கை , நாயை விட கேவலமானது என்கிறான் இராமன்.

மிக கடினமான வார்த்தைதான்.

பெற்றோரின் சொல் கேட்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் தருகிறான் இராமன்.

சில வீடுகளில் பிள்ளைகள் தந்தை சொல் கேட்டாலும் கேட்பார்கள், தாய் சொல்லை கேட்பது இல்லை. அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு இளக்காரம் வேறு.

இராமானுக்குத் தெரியும் , கைகேயியை விட வசிட்டன் அறிவில் மிக உயர்ந்தவன் என்று. இருந்தும், தாய் சொல்லை வசிட்டனின் சொல்லை விட அதிகம் இராமன் மதிக்கிறான்.

உயர்ந்த கருத்து. அற்புதமான பாடல்.

அறிந்து கொள்வோம். அறியச் சொல்வோம். 

Sunday, July 2, 2017

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?


நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான் இராமனிடம். இராமன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. அருகில் இருந்த வசிட்டன், "குல குருவான என் ஆணை, நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று கூறுகிறான்.

வசிட்டனை வணங்கி, இராமன் சொல்லத் தொடங்குகிறான்.

"தாமரை மலரில் தோன்றிய பிரமனின் புதல்வனே (வசிட்டனே ), தாய், தந்தை, குரு போன்றோருக்கு ஒன்றை செய்கிறேன் என்று வாக்கு தந்து விட்டால் அதில் இருந்து மாறுவது சரியா "

என்று வசிட்டனிடம் இராமன் கேட்கிறான்.

பாடல்


சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -
தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?

பொருள்

‘சான்றவர் ஆக; = பெரியவர்கள் ஆக

தன் குரவர் ஆக; = தனக்கு மேலே உள்ளவர் (தலைவர், பெரியோர்) ஆகட்டும்

 தாய் போன்றவர் ஆக; = தாய் போன்றவர் ஆக. இராமன் வார்த்தையை பொறுக்கி எடுத்து போடுகிறான். தாய் ஆக என்று சொல்லவில்லை. தாய் போன்றவர் ஆக.

 மெய்ப் புதல்வர் ஆக; = உண்மையான புதல்வர்கள் ஆகட்டும்

தான் = ஒருவன்

தேன் தரு மலருளான் சிறுவ! = தேனைத் தருகின்ற மலரின் மேல் அமர்ந்து இருக்கும் பிரமனின் மகனே (வசிட்டனே )

 “ செய்வேன்” என்று = செய்வேன் என்று

ஏன்றபின், = ஏற்றுக் கொண்ட பின்

 அவ் உரை  = அந்த உரையை

மறுக்கும்  = மறுக்கும், மாறுபடும்

ஈட்டதோ? = செய்யலாமா (செய்யக் கூடாது என்பது தெளிவு)


சரியோ தவறோ, சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது இராமனின் கொள்கை.

நான் வாக்கு தந்து விட்டேன். என்ன ஆனாலும் சரி, அதை நிறைவேற்றியே தீருவேன் என்று இராமன் கூறுகிறான்.

வாக்கு தரக் கூடாது. தந்து விட்டால், உயிரை கொடுத்தாவது அதை காக்க வேண்டும் என்பது நம் பண்பாட்டின் ஒரு கூறு.

வாக்குக்கு விலை இருக்கும் என்று தான் நமது வாழ்க்கை முறை அமைக்கப் பட்டிருக்கிறது.

திருமண சடங்கில், பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு "வாழ்விலும் சாவிலும் ஒன்றாக இருப்பேன், சுக துக்கங்களில் சம பங்கு எடுப்பேன் " என்று வாக்குத் தருகிறார்கள்.

பெரிய பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போது  (MLA , MP , பிரதம மாதிரி, ஜனாதிபதி , தலைமை நீதிபதி ) பதவி பிரமாணமும் , இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்கள்.


சட்டம் போட்டு அதை கட்டுப் படுத்த முடியாது. ஒருவன் தரும் வாக்கு தான் முக்கியம்.

நீதி மன்றத்தில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை "  என்று பிரமாணம் செய்கிறார்கள்.

இந்த பிரமாணங்களை எல்லோரும் ஏற்று அதன்படி வாழ்ந்தால் இந்த நாடு எவ்வளவோ  முன்னேறி இருக்கும்.

மனைவியை துன்பத்தில் தவிக்க விடும் கணவன், கணவனை மதிக்காமல் அவன் துன்பத்தில்  பங்கெடுக்காத மனைவி , குடும்பச் சிக்கல்கள் வருகின்றன.  

ஏன் ? ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருப்போம் என்று தந்த வாக்கை இருவரும் காற்றில்   பறக்க விட்டதால்.

வீடு நாசமாகப் போகிறது.


அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டுகிறார்கள். இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? ஏன் ?

"பாரபட்சமின்றி நாட்டு மக்களுக்கு உழைப்பேன் " என்ற வாக்கை காற்றில் பறக்க  விட்டதால்.

இன்று நிறைய மருந்தகங்களில் தேவை இல்லாத சோதனைகள் செய்ய வைக்கிறார்கள்,  தேவை இல்லாத மருந்துகள் தருகிறார்கள். மருத்துவ மனைக்கு போவது என்றாலே பயமாக இருக்கிறது .

காரணம் என்ன ?

ஹிப்போக்கரிடிஸ் பிரமாணம் என்ற பிரமாணத்தை மருத்துவர்கள் காற்றில் விடுவதால்.

இத்தனை மணிக்கு வரும் என்றால், அத்தனை மணிக்கு வர வேண்டும். அது ஆகாய விமானமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பேருந்தாக இருந்தாலும் சரி.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றி அதன் வழி நடப்பேன் என்று ஒவ்வொரு குடிமகனும் வாக்குத் தருகிறான். அதன் படி நடந்து விட்டால் நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் எப்படி நடக்கும் ?


இப்படி, நாடும், வீடும், நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சிதைந்து போக  காரணம் , யாருக்கும் தங்கள் தந்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் இல்லாததால்.

எல்லோரும், தங்கள் வாக்கை காப்பாற்ற தொடங்கிவிட்டால், இந்த உலகம் சொர்க்கமாக மாறும்.

அதை வலியுறுத்த, இராமன் வாழ்ந்து காட்டுகிறான். 

Saturday, July 1, 2017

திருக்குறள் - செயக் கிடந்தது இல்

திருக்குறள் - செயக் கிடந்தது இல் 


அது ஒரு பெரிய வீடு. வீடெல்லாம் செல்வச் செழிப்பு மின்னுகிறது. அங்கு உள்ள  அனைத்துப்  பொருள்களும் விலை உயர்ந்த பொருள்கள். குளிர் சாதன பெட்டிகள். பெரிய டிவி, என்று எங்கு பார்த்தாலும் செல்வம்.

அந்த வீட்டின் உரிமையாளன் இறந்து கிடக்கிறான். நடு வீட்டில் அவனது உடல் கிடத்தி வைக்கப் பட்டு இருக்கிறது.  அவனால் அந்த பொருள்களையெல்லாம் அனுபவிக்க முடியுமா ? அந்த பொருள்கள் அவனுக்கு ஏதாவது உதவி செய்யுமா ?

இரண்டும் இல்லை அல்லவா ?

சரி, அவன் கிடக்கட்டும் ஒரு புறம்.

நாம் வாழ் நாள் எல்லாம் ஓடி ஆடி பொருள் சேர்க்கிறோம். எல்லா பொருள்களையும் நாம் அன்புபவிக்கப் போகிறோமா ? நாம் அனுபவிக்கப் போவது இல்லை என்றால், எதற்காக வாழ் நாள் எல்லாம் செலவழித்து அவற்றை சேர்க்க வேண்டும் ?

அந்த வீட்டில், செல்வத்தை அனுபவிக்காமல் இறந்து கிடப்பவனுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?

பாடல்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருL அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்தது இல்.


பொருள்

வைத்தான்வாய் = வாய் என்றால் பணப் பெட்டியின் வாய். வைத்தான் வாய் , பணத்தை வைத்து இருக்கும் பேட்டி 


சான்ற = நிறைந்த

பெரும்பொருள் = பெரிய அளவிலான செல்வம்

அஃதுண்ணான் = அதை அனுபவிக்காதவன்

செத்தான் = இறந்தவன்

செயக்கிடந்தது இல் = செய்வதற்கு ஒன்றும் இல்லை.


செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் மட்டும் அல்ல வாழ்க்கை. சேர்த்த  செல்வத்தை  சிறந்த முறையில் செலவழிக்கவும் தெரிய வேண்டும்.

அந்த வங்கியில் போட்டு வைத்தேன், தங்க நகைகள் வாங்கி இந்த பெட்டகத்தில் வைத்து இருக்கிறேன் , இந்த கம்பெனியின் பங்கில் முதலீடு செய்து இருக்கிறேன்  என்று கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளை அனுபவிக்காமல் இருப்பவன், பிணத்துக்கு ஒப்பாவான் என்கிறார் வள்ளுவர்.

சரிதானே ?

இறந்தவன் பொருளை அனுபவிப்பது இல்லை. அது போல பொருளை அனுபவிக்கத் தெரியாதவன்  இறந்தவன் போலத்தானே ?

நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்தாலும், அந்த செல்வம் நமக்கு நேரடியாக பயன்படாது.

செல்வத்தை சரியான வழியில் பயன் படுத்தி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு உதவி அவர்களின் உறவை பலப் படுத்திக் கொள்ள வேண்டும்....

இப்படி நல்ல வழிகளில் பணத்தை அனுபவிக்கப் படிக்க வேண்டும்.

எப்படி எல்லாம் அனுபவிப்பது என்று பட்டியல் போடுங்கள்.

அனுபவியுங்கள்


இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !


காட்டில் இராமனைக் கண்டு, அரசை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. பார்த்தார் வசிட்டர், இது வேலைக்கு ஆகாது. பரதன் சொன்னால் இராமன் கேட்க மாட்டான். நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று , பரதனை இடை மறித்து "நீ அரசை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் . இது என் ஆணை " என்கிறார்.

குருவின் ஆணை. மீறவும் முடியாது.

தர்ம சங்கடத்தில் இராமன்.

இராமன் என்ன செய்தான் ?

முனிவரை வணங்கி, அறிஞனே , நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது என்று கூறத் தொடங்குகிறான் ...


பாடல்


கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:


பொருள்

கூறிய முனிவனைக் = ஆட்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய முனிவனை

குவிந்த தாமரை = குவிந்த தாமரை போன்ற

சீறிய கைகளால் = சிறந்த கைகளால்

தொழுது = வணங்கி

செங்கணான் = சிவந்த கண்களை உடைய

‘ஆறிய சிந்தனை அறிஞ! = ஆறிய சிந்தனை உள்ள அறிஞனே

ஒன்று உரை கூறுவது உளது’  = நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது

எனக் கூறல் மேயினான் = என்று கூறத் தொடங்கினான்



சொன்னது  ஆசிரியன். அவர் சொன்னதை மறுத்துச் சொல்லப் போகிறான் .

அப்படி சொல்வதற்கு முன்னால் , கை கூப்பி , தொழுது பின் சொல்லத் தொடங்குகிறான்.

இது நமது பண்பாடு. கலாச்சாரம்.

பெரியவர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையோடு பேச வேண்டும்.

இன்று , பெரியவர்கள் பேசுவதை கேட்பது கூட கிடையாது. அப்படியே கேட்டாலும், அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் பாதியில் இடை மறித்து பேசும் பழக்கம் இருக்கிறது.  

பெரியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேசும் போது , அவர்களை வணங்கி, மரியாதையுடன் பேச வேண்டும். .

இராமன் ஒரு மாற்றுக் கருத்தை கூறப் போகிறான். நாம் பெரியவர்களின் கருத்துக்களோடு முரண் படலாம். அதை சொல்லும் முறை இருக்கிறது.

இராமனிடம் பாடம் கற்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, "ஆறிய சிந்தனை அறிஞ" என்று மரியாதையோடு அவர் பெருமையையும்  சேர்த்துச் சொல்கிறான்.


"நீ பெரிய அறிஞன் என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லிவிட்டு சொல்லாத் தொடங்குகிறான்.

இது ஒரு பேசும் கலை.

நாம் இன்னொருவரின் கருத்தை மறுத்துச் சொல்ல வேண்டி இருந்தால், அவர்களோடு கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு, கடு கடு என்று பேச வேண்டியது இல்லை.

"நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்குத் தெரியாதது இல்லை. உங்க அறிவுக்கும், அனுபவத்துக்கும், நீங்க சொல்வது சரியாத்தான் இருக்கும். ....இருந்தாலும், எனக்கு சொல்ல ஒன்று இருக்கிறது "

என்று சொல்ல ஆரம்பித்தால், எதிரில் இருப்பவரும் நீங்கள் சொல்வதை கேட்பார்.

முதலில் இனிய சொற்களோடு ஆரம்பிக்க வேண்டும்.

"ஆறிய சிந்தனை அறிஞ" என்று சொன்னவுடன் வசிட்டரின் கோபம் கொஞ்சம் தணியும். என் அறிவின் வீச்சை இராமன் அறிவான். அவன் என்ன தான் சொல்கிறான் கேட்போம் என்று அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுவார்.


ஆறிய சிந்தனை என்றால் என்ன ?

நம் சிந்தனை எந்நேரமும் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. காமம், கோபம், பொறாமை, எரிச்சல் என்ற பல்வேறு குணங்களால் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. ஆறிய சிந்தனை என்பது, சலனம் இல்லாமல், அமைதியாக, தெளிவாக இருப்பது. உணர்ச்சி வசப்படாமல், அமைதியான சிந்தனை என்று பொருள்.

இராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன ? வசிட்டனுக்கு ஒன்றும் இல்லை.  இராமன் மேல் உள்ள அன்பினாலோ, அல்லது பரதன் மேல் உள்ள வெறுப்பினாலோ  அவன் அதைக் கூறவில்லை என்று இராமன் முன்னமேயே தெரிவித்து விடுகிறான்.


இரண்டு விஷயங்கள்


ஒன்று, பெரியவர்களோடு பேசும் போது , அவர்களை வணங்கி மரியாதையோடு பேச வேண்டும்.

இரண்டு, மாற்று கருத்து இருந்தாலும், பெரியவர்களின் அறிவை, திறமையை குறைத்து  மதிப்பிடக் கூடாது. நம் கருத்தை பணிவாக வெளிப்படுத்த வேண்டும்.