Wednesday, August 23, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன் 


(முன்கதை சுருக்கத்திற்கு , இதற்கு முன்னால் உள்ள ப்ளாகுகளை வாசிக்கவும்).

மறையவன், என் மனைவியை கொன்ற வேடன் இவன் தான் என்று குற்றம் சுமத்தினான் . அரசன், அந்த வேடனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவன், "ஐயா நான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை, இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது " என்றான்.

பாடல்

ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் 
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து 
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் 
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

பொருள்

ஐயே = ஐயனே

நானும் கொன்றவன் அல்லேன் = நான் கொல்லவில்லை

கொன்றாரைக் = யார் இவளைக் கொன்றார்களளோ

கையேன் = கீழ்மையான நான்

வேறும் கண்டிலன் = வேறு யாரையும் காணவும் இல்லை

என்றான் = என்றான்

இவள் ஆகத்து  = இவள் அகத்தில் (உடம்பில்)

எய்யேறு = எய்யப்பட்ட அம்பு

உண்ட வாறு = உள் நுழைந்தது

என் = எப்படி

என்றார் = என்று கேட்டார்

எதிர் நின்றார் = எதிரில் உள்ள அமைச்சர்கள்

மெய்யே ஐயா = உண்மையைச் சொல்கிறேன்

யான் அறியேன் = எனக்குத் தெரியாது

இவ் விளைவு என்றான் = இது எப்படி நடந்தது என்று .

கொன்றவன் இவன் என்று வேதியன் குற்றம் சுமத்துகிறான்.

நான் கொல்லவில்லை . கொன்றாரையும் காணவில்லை என்று வேடன் சொல்கிறான்.

அரசனும் , அமைச்சர்களும் விசாரித்து விட்டார்கள்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

காட்டுக்குள் நடந்த சம்பவம்.

கொலை நடந்திருக்கிறது. யாரோ தானே செய்திருக்க வேண்டும் ? யார் செய்தது ?

கதையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று பாருங்கள்.


நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்  அவனை குற்றவாளியாக்குகிறது.  வேறு எந்த சாட்சியும் இல்லை.

மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நமக்கு ஒரே ஆவலாக இருக்கிறது.

ஒரு வேளை வேடனுக்கு தண்டனை கொடுத்து விடுவானோ ?  அப்படியே கொடுத்தாலும், அரசன் மேல் குறை சொல்ல முடியாது.

சரி, வேடன் செய்யவில்லை என்று அவனை விட்டு விட்டால், பின் கொலை யார் தான் செய்தது ? வேதியனுக்கு என்ன பதில் சொல்வது ?

தான் நிரபராதி என்று நிரூபிக்க வேடனுக்கு  வேறு வழி ஒன்றும் இல்லை

ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டானே என்று நம் மனம் பதறுகிறது. அவன் மேல் பச்சாதாபப் படுகிறது.

மனைவியை இழந்து, கை குழந்தையோடு  நிற்கும் வேதியன் மேலும் பரிதாபம் வருகிறது.

மன்னன் தவறு செய்து விடக் கூடாதே என்று தவிப்பும் இருக்கிறது.

கதை ஒரு புள்ளியில் நிற்கிறது.  கொஞ்சம் அசந்தாலும் பிரண்டு விடும்.

எப்படி மேலே கதையைக் கொண்டு செல்வது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_23.html



Tuesday, August 22, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல் 


மரத்தில் சிக்கி இருந்த அம்பு காற்றில் கீழே விழுந்து , அங்கே தாகத்திற்கு இளைப்பாறிக் கொண்டு இருந்த ஒரு வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய, அவள் இறந்து போனாள். அவளுக்கு நீர் கொண்டு வரச் சென்ற வேதியன் வந்து பார்க்கிறான். மனைவி அம்பு பட்டு இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் நிற்கிறான். அந்த வேடன் தான் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அவனை அரசனிடம் இழுத்துக் கொண்டு போகிறான்.

"என்ன நடந்தது " என்று அரசன் கேட்டான்.

வேதியன் சொல்கிறான்

"என் மனைவியை மரத்தின் அடியில் விட்டு விட்டு நீர் கொண்டு வரச் சென்றேன். நான் வருவதற்கு முன் இந்த வேடன், என் மனைவியை கொன்று விட்டான்" என்று கூறினான்.

பாடல்


இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்*
சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன்
கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல்
வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால்.


சீர் பிரித்த பின்

இன்று இவளை கொண்டு ஓர் வட நிழல் இடை இட்டு 
சென்று தண்ணீர் கொண்டு  யான் வரு முன் இச் சிலை வேடன் 
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல் போல் வன் வன் திறல் மாறன்  செவி நுழை வித்தான் மறையோன் ஆல் 


பொருள்


இன்று = இன்று

இவளை = இவளை

கொண்டு = கொண்டு

ஓர் = ஒரு

வட = மர

நிழல் இடை இட்டு = நிழலின் கீழ் இருத்தி விட்டு

சென்று = சென்று

 தண்ணீர் கொண்டு  யான் வரு முன் = நான் நீர் கொண்டு வருவதற்குள்

இச் சிலை வேடன் = இந்த வில்லை ஏந்திய வேடன்

கொன்று அயல் நின்றான் = அவளை கொன்று அயலில் நின்றான்

என்று = என்று

உலை = கொதி உலையில்

ஊட்டும் = இருக்கும்

கொலை வேல் போல் = கொலைத் தொழிலை செய்யும் வேலைப் போல

வன் திறல் மாறன்  = வலிமையான திறமை கொண்ட பாண்டிய மன்னனின்

செவி நுழை வித்தான் = செவியில் சொன்னான்

மறையோன் = அந்த வேதியன்

ஆல் = அசைச் சொல்

"சிலை வேடன்."

வில்லைக் கொண்ட வேடன். இராமனைப் பற்றிக் கூறும் போது , கம்பர் கூறுவார்,  வில்லை கொண்ட இராமனின் தோளின் வலிமையை சொன்னால் போதும் , நிறைய நன்மைகள் கிட்டும் என்பார்.


 நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.


இந்த  வேடன் என் மனைவியை கொன்று விட்டான் என்ற சொல்லே கொல்லன்  உலையில் (தீயில்) கொதிக்கும் கூர்மையான வேலை காதில் நுழைத்தது போல  இருந்ததாம். 

இராமாயணத்தில், கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள் . தயரதன் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறான். அவள் கேட்ட வரம் அவனை வாட்டுகிறது. எப்படி என்றால், போரில் அடிபட்டு இருக்கும் யானையின் புண்ணில் வேலைப் பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி வலியால் துடித்தான் என்கிறான் கம்பன். 


பெண் என உற்ற பெரும்
    பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
    உயிர்த்து உலாவும்;
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்;
    வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும்
    ஆனை போல்வான்.

தன்னுடைய ஆட்சியில் , இப்படி ஒரு கொடுமை நடந்து விட்டது என்ற சொல் காதில் விழுந்த போது , அது கொதிக்கின்ற வேலை காதில் குத்தியது போல இருந்ததாம் அந்த பாண்டிய மன்னனுக்கு. 

அப்படி என்றால், இந்த மாதிரி அநீதி நடப்பது இல்லை என்று அர்த்தம். தினம் ஒரு கொலை, கொள்ளை என்று நடந்தால் , மன்னன் இது ஒரு சாதாரணமான ஒன்று என்று நினைத்து தள்ளி விட்டிருப்பான். எப்போதோ நடப்பதால் , அதை கேட்கும் போது அவ்வளவு வலி. 

அடுத்து என்ன நடந்திருக்கும் ? 

யோசித்துப் பாருங்கள் ?  கதை எப்படி நகர்கிறது என்று புரியும். மன்னன் என்ன செய்திருப்பான் ? 

பெண் இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் வில்லோடு நிற்கிறான். இறந்தவளின் கணவன் , இந்த வேடன் தான் கொன்றான் என்கிறான். வேறு யாரும் இல்லை அருகில். 

நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று. மன்னனுக்குத் தெரியாது. 

அவன் என்ன செய்ய வேண்டும் இப்போது ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_22.html

Monday, August 21, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ 


வேதியன் ஒருவன் மதுரை வரும் வழியில் , கானகத்தில் மனைவியையும் பிள்ளையையும் ஒரு ஆல மரத்தின் கீழ் தங்க வைத்து விட்டு நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் என்றோ , யாரோ விட்ட அம்பு ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது. அது காற்றில் ஆடி கீழே விழுந்தது. விழுந்த அம்பு, நேரே சென்று அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் தைத்தது. அவள் இறந்து போனாள் . அதே சமயம் ஒரு வேடன் , நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் வந்து நின்றான். அதே சமயம் நீர் கொண்டு வந்த வேடன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். அருகில் இருக்கும் வேடனைப் பார்த்தான். அந்த வேடன் தான் அவளை கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அந்த வேடனை இழுத்துக் கொண்டு பாண்டியன் இருக்கும் அரண்மனை வருகிறான்.

தோளில் பசித்து அழும் பிள்ளை. மனதில் மனைவி இறந்த சோகம். கையில் வேடனை பிடித்துக் கொண்டு அரண்மனை வாசலில் நின்று ஓலமிடுகிறான்.

மன்னா, உன் நாட்டில் இப்படி நடப்பது முறையோ முறையோ என்று கதறுகிறான்.


பாடல்

கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையையோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையையோ
மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


பொருள்

கோமுறை = கோ + முறை = அரச முறை

கோடாக் = கோட்டம் என்றால் வளைவு.  கோடா என்றால் வளையாத, நேரான.

கொற்றவ ரேறே = கொற்றவ + ஏறே  = அரசர்களில் சிங்கம் போன்றவனே

முறையையோ = இது முறையா ?

தாமரை யாள்வாழ் = தாமரையில் இருக்கும் திருமகள் வாழும்

தண்கடி = குளிர்ந்த மலர் மாலை அணிந்த

மார்பா = மார்பை உடையவனே

முறையையோ = இது முறையோ

மாமதி = பெரிய நிலவு. சந்திரன்

வானோன் = வானில் இருக்கும்

வழிவரு = வழியில் வந்த

மைந்தா = மைந்தனே

முறையேயோ = இது முறையா ?

தீமைசெய் தாய்போற் = தீமை செய்தால் போல

செங்கை = சிவந்த கைகளை

குறைத்தாய் = குறைத்தவனே

முறையேயோ = முறையோ


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.

என்ற இந்த கடைசி வரிக்கு ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது.

முன்பொரு காலத்தில் ஒரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் நகர் வலம் வரும் போது ஒரு மறையவன் வீட்டின் வாசலில் , நடு இரவு நேரத்தில் பேச்சு சத்தம்  கேட்டது. என்ன என்று , மாறு வேடத்தில் இருந்த மன்னன் ஓட்டு கேட்டான்.

அந்த வீட்டின் பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்

"நீங்கள் ஊரை விட்டுப் போய் திரும்பி வர கொஞ்ச நாள் ஆகும். எனக்கு தனியாக இருக்க பயமாக  இருக்கிறது. நானும் உங்கள் கூடவே வந்து விடுகிறேன் " என்று கூறிக் கொண்டிருந்தாள்.

அதற்கு அந்த மறையவன் " ஒன்றும் பயப்படாதே....பாண்டிய மன்னன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை , நமக்கு ஒரு தீங்கும் வராது " என்று சொல்லி அவளை தேற்றிக் கொண்டிருந்தான்.

மன்னனுக்கு பெருமிதம். "  அடடா, நம் மக்கள் நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்" என்று மகிழ்ந்து சென்றான்.

அன்றிலிருந்து தினமும் அவள் வீட்டை , மாறு வேடத்தில் வரும் போது கவனித்து வந்தான்.

அப்படி இருக்கும் போது ஒரு நாள், திடீரென்று அந்த வீட்டில்  இரவில் பேச்சுக் குரல் கேட்டது.

மன்னனுக்கு  சந்தேகம். கணவன் வெளியூர் போயிருக்கிறான். ஆண் குரல் கேட்கிறது. யாராக இருக்கும் என்று என்று சந்தேகப் பட்டு, வீட்டின் கதவை தட்டினான்.

"யாரது " என்று குரல் கேட்டது. கேட்டது யாரும் அல்ல, அந்த பெண்ணின் கணவன். போன காரியம் முடிந்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரம் ஊர் திரும்பி விட்டான்.

மன்னனுக்கு தர்ம சங்கடம். உள்ளே போனால், ஒரு வேளை அந்த வேதியன் தன் மனைவியை சந்தேகப் பட்டு  விடுவானோ என்று பயந்து, வேக வேகமாக  அங்கிருந்து விலகினான். போகிற வழியில் அங்குள்ள எல்லா வேதியர் வீட்டின்  கதவையும்  தட்டி விட்டு சென்றான்.

மறு நாள் , வேதியர்கள்  எல்லோரும் அரண்மனை வந்து, மன்னனிடம் முறையிட்டார்கள். "மன்னா, யாரோ தெரியவில்லை, நடு இரவில் எங்கள் வீட்டின் கதவை  தட்டுகிறார்கள் " என்று முறையிட்டார்கள்.

அப்போது மன்னன், "சரி, அவனை பிடித்து விடலாம். பிடித்தால் அவனுக்கு என்ன  தண்டனை கொடுப்பது " என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் "இப்படி நள்ளிரவில் வந்து மற்றவர்கள் வீட்டின் கதவை தட்டிய அவன் கையை  வெட்டி விட வேண்டும் " என்று கூறினார்கள்.

மன்னவனும் , "அப்படி தட்டியது வேறு யாரும் அல்ல, நான் தான் " என்று கூறி,  தன் கையை தானே வெட்டிக் கொண்டான்.

நீதி என்றால் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த மன்னன் அவன்.

அவன் வழியில் தோன்றிய மன்னா, உன் நாட்டில் இப்படி நடக்கலாமா , இது முறையா  என்று இந்த வேதியன் முறையிட்டான்.


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


தீமை செய்யவில்லை. செய்தால் போல சிவந்த கைகளை குறைத்தாய் என்று  முன்பு நடந்ததை நினைவு படுத்துகிறான். 

நீதி பரிபாலனம் நாட்டில் அப்படி இருந்தது. 

மக்களை , கண்ணை இமை காப்பது போல மன்னர்கள் காத்தார்கள். 

தவறு , தானே செய்திருந்தாலும், தண்டனை கொடுத்துக் கொண்டார்கள். 

அடுத்து என்ன நடந்தது ?

Sunday, August 20, 2017

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய் 


நாம் ஒரு வழியில் , ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருப்போம். போகிற வழியில் ஏதோ ஒரு கடையில் நல்ல உணவு சமைக்கும் வாசம் வரும். "அடடா , ஏதாவது சாப்பிட்டு விட்டு போனால் என்ன " என்று தோன்றும் நமக்கு.

போகிற வழியில் , ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் கண்டால், தாகம் எடுப்பது போலத் தோன்றும்.

அழகான பெண்ணை கண்டால், ஏதேதோ எண்ணம். இப்படி நம் புலன்கள், நம்மை , நாம் செல்ல நினைத்த இடத்துக்கு செல்ல விடாமல் அது வேண்டும்,இது வேண்டும் என்று இழுத்து அலைக் கழிக்கின்றன.

ஆசைப் படுவது தப்பா என்ன ? ஒரு சுவையான, உருசியான பண்டத்தைப் பார்த்தால்  அதை சுவைக்க ஆசைப் படுவது என்ன பாவமா என்றால் இல்லை தான்.

சிக்கல் சுவைப்பதோடு முடிவது இல்லை.

ஒன்றை சுவைத்தால் , இன்னொன்று தேடும். இதே போல வேறு என்ன என்ன இருக்கிறது என்று மனம் தாவும். நிறைய உண்டால் நோய் வரும். அதற்கு மருந்து. அந்த மருந்தின் பக்க விளைவு.  இப்படி வாழ்க்கை எங்கோ  தொடங்கி எங்கோ போய் விடும்.

மனைவிதான், அன்புதான், இனிமைதான் என்று திருமணம் செய்து கொள்கிறான். அதோடு நிற்கிறதா ? பிள்ளைகள், பொறுப்பு என்று ஆயிரம் சிக்கல் கூடவே  வருகின்றன.

முதலில் ஏதோ நமக்கு இன்பம் தருவது போல இழுத்துக் கொண்டு போய் , பின்னால் பெரிய சிக்கலில் மாட்டி விடுபவை இந்த புலன்கள்.


சரி, புலன் இன்பங்கள் முதலில் இன்பம் போல் இருந்தாலும்,  பின்னால் சிக்கல் நிறைய இருக்கிறது என்று புரிகிறது.

அதற்காக இன்பமே வேண்டாம் என்று இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று நாம் நினைக்கலாம்.

மணி வாசகர் சொல்கிறார்,  இன்பங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தே , வெளியே இருக்கும் இன்பம். புலன்கள் மூலம் பெரும் இன்பம்.

இன்னொரு இன்பம் இருக்கிறது. அது உள்ளுக்குள் இருந்து வரும் இன்பம்.  அதற்கு புலன்கள்  வேண்டாம். வெளி உலக பொருள்களோ , மாற்றார்களோ வேண்டாம். உள்ளே இருந்து ஊற்றெடுக்கும் இன்பம் ஒன்று இருக்கிறது. அது வற்றாத இன்பம். திகட்டாத இன்பம்.

அதை நாம் அவ்வப்போது அனுபவித்து இருக்கிறோம். நமக்கு அது கோடி காட்டி விட்டுப் போகிறது.

ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு நல்ல இசையை கேட்கிறீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் மூடும். ஏன் ? காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது ? சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அந்த இனிய இசையின் இன்பம், உங்களுக்குள் இருக்கிறது.

இல்லை, அந்த இசையில் தான் இருக்கிறது என்றால், எப்போதும் அது இன்பம் தர வேண்டும் அல்லவா ? எல்லோருக்கும் இன்பம் தர வேண்டும் அல்லவா ?

ஒரு துண்டு லட்டை வாயில் போடுங்கள்....உங்களை அறியாமலேயே கண்கள் மூடும், அந்த இன்பத்தை நீங்கள் உள்ளுக்குள் அனுபவிப்பீர்கள்.

ஆனால், அந்த இன்பம் லட்டு கரைந்து தொண்டையை தாண்டும் வரை தான்.

வெளியில் இருந்து வரும் இன்பங்கள்....சீக்கிரம் மறைந்து விடும்.

ஆனால், உள்ளுக்குள் இருக்கும் இன்பம், மறையவே மறையாது.

நீங்கள் அந்த இன்பத்தை கண்டு விட்டால், அனுபவித்து விட்டால், அதற்குப் பிறகு வெளியில் உள்ளவைகளும் உங்களுக்கு நீங்காத இன்பத்தைத் தரும்.

உள்ளும் வெளியும் ஒன்றாகக் கலந்து , ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடும்.


மாணிக்க வாசகர் சொல்கிறார்,

மாறி நின்று, வஞ்சகம் செய்து என்னை சிக்கலில் ஆழ்த்தும் ஐந்து புலன்களின் வழியை அடைத்து, என்னுள்ளே தோன்றும் இன்பமே , சிவனே, நீ என் அன்பானவன் என்று.


பாடல்

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!


பொருள்

மாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று

என்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்

வஞ்சப்  = வஞ்சகமான

புலன் = புலன்கள்

ஐந்தின் = ஐந்து புலன்களின்

வழி அடைத்து = வழியை அடைத்து

அமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று

என் உள் எழு பரஞ்சோதி! = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே

உள்ளவா = உள்ளவனே

காண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்


தேறலின் தெளிவே! = தேனின் தெளிவே

சிவபெருமானே! = சிவ பெருமானே

 திருப்பெருந்துறை உறை சிவனே! = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே

ஈறு இலாப் = இறுதி இல்லாத

பதங்கள் = நிலைகள்

யாவையும் = எல்லாவறையும்

கடந்த இன்பமே! = கடந்த இன்பமே

என்னுடை அன்பே! = என்னுடைய அன்பே


எத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.

மகள், கன்னிப் பெண், மனைவி, தாய்,  பாட்டி

மகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா

என்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள்.  பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.


இறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு  என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.

வெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.

ஆனந்தமாய் , என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் என்பார் அபிராமி பட்டர்


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

தித்தித்தது இருக்கும் அமுது கண்டேன்....இந்த உலகையே மூழ்க வைக்கும் பரம ஆனந்த சாகரம் என்பார் அருணகிரிநாதர் 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


அந்த இன்பத்தை அறிந்து கொண்டால், பின் உலக இன்பங்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

இனிப்பான ஒரு பலகாரத்தை தின்றபின் காப்பி குடித்தால் அது கசக்கும் அல்லவா ? அது போல அந்த உள்ளுறை இன்பத்தை அறிந்து கொண்டால் இந்த உலக இன்பங்கள் ,  இன்பங்கள் போலவே தோன்றாது. துன்பம் போல இருக்கும். 

அந்த பரம ஆனந்தத்தை சுவைத்து விட்டால் கரும்பு துவர்க்கும் , செந்தேன் புளிக்கும் என்கிறார் அருணகிரிநாதர் 


பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!


உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அறிந்து கொண்டார் மணிவாசகர். 

இந்த உலகை என்ன செய்வது. இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள்  இவற்றோடு எவ்வாறு ஒன்றுவது. இந்த உலகில் எப்படி செயல்படுவது ? எல்லாவற்றையும்  விட்டு விட்டு ஓடி விடுவதா ?

இல்லை, இந்த இன்பத்தை எனக்கும் வெளியிலும் காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 


"உள்ளவா காண வந்தருளாய்"

வெளியிலும், மற்ற உயிரிகளிலும் உன்னை காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 

இந்த உரையை மறந்து விடுங்கள். 

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

ஏதோ தோன்றுகிறதா ? அது தான் அர்த்தம்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_20.html

Friday, August 18, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

அப்போது ,  நீர் கொண்டு வரச் சென்ற வேதியனும் நீரோடு வருகிறான். 

ஒரு புறம் இறந்து கிடக்கும் மனைவி. இன்னொரு புறம், கையில் வில்லோடு நிற்கும் வேடன். 

மனைவியைப் பார்த்து கதறுகிறான். பிள்ளை ஒரு புறம் பாலுக்கு அழுகிறது. கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு ஒரு சோகமான காட்சி என்று புரியும்.

கொஞ்சம் தேறி, யார் இந்த கொடுமையான காரியத்தை செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

அங்கே நின்ற வேடனைப் பார்க்கிறான். வில்லும் கையுமாக முரட்டுத் தனமாக இருக்கும் இந்த வேடன் தான் இவளை கொன்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அவனிருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் நினைத்திருப்பார்கள் அல்லவா ?

"மன்னவன் ஆணை , வா நீதி மன்றத்திற்கு " என்று அவனை இழுத்துக் கொண்டு போகிறான்.

பாடல்


என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.


பொருள்

என்ன மதித்தே = இவன் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து

ஏடா வேடா = ஏண்டா வேடனே

என் ஏழை தன்னை  =  பாவம்,என் மனைவியை

வதைத்தாய் நீயே = கொலை செய்தாய் நீயே

என்னா = என்று

அழல் = தீ. சிவந்த

கால் = காற்று. அனல் வீசும்.

கண் =கண்கள்

மின்னல் எயிற்றுக் = மின்னல் போல வெண்மையான பற்கள்

குற்று என = கூற்று என (கூற்றுவன் என்றால் எமன் )

வல் = வலிமையாக, ஓங்கி

வாய் விட்டு ஆர்த்து = வாய் விட்டு சொல்லி. ஆர்த்து என்ற வார்த்தையை பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்

மன்னவன் ஆணைப் = மன்னன் மேல் ஆணை

பாசம் = கயிறை

எறிந்து =எறிந்து

வலித்து ஏகும் = இழுத்துக் கொண்டு போனான்


ஆர்த்து என்றால் கொடுத்து, நிறைவு செய்து, ஊட்டி, அனுபவிக்கச் செய்து  என்று பொருள்.

ஆர்த்த பிறவி என்பார் மணிவாசகர். நல் வினை, தீ வினை என்ற கயிற்றால் கட்டி பிறவி என்ற பெரும் கடலுள் உயிர்கள் செலுத்தப் படுகின்றன என்பதால் ஆர்த்த பிறவி.

நம் பாவங்களை போக்க நமக்கு தீர்த்தமாக தன்னைத் தானே ஊட்டுவதால் , "ஆர்த்தாடும் தீர்த்தன்"

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

கதைக்கு வருவோம்.

டைரக்டர் cut சொல்லி, காட்சியை மாற்றுவதைப் போல, காட்சி மாறுகிறது.

காமிரா காட்டில் இருந்து அரண்மனைக்குப் போகிறது.

அங்கே என்ன நடக்கிறது. ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_18.html

Thursday, August 17, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

பாடல்

அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச்
செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன்
வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி
அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற.


சீர் பிரித்த பின்

அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச் 
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன் 
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும்  நிழல் தேடி 
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.

பொருள்

அவ்வாறு = அவ்வாறு

அவ் = அந்த

அணங்கு அனையாள் = தெய்வ மகள் போன்ற பெண்

உயிர் இழந்தாள் = உயிர் இழந்தாள்

உவ் வேலைச் = அந்த நேரத்தில்

செவ் வாளி = செம்மையான, சிவந்த அம்பை

ஏறிட்ட = ஏற்றும்

சிலை = வில்லை

உடையான் = உடைய

ஒரு வேடன் = ஒரு வேடன்

வெவ் வாளி ஏறு = ஆளி என்றால் சிங்கம். கோபம் கொண்ட ஆண் சிங்கம்

அனையான் = போன்றவன்

வெயிற்கு = வெயிலுக்கு

ஒதுங்கும் = ஒதுங்கும்

நிழல் தேடி = நிழல் தேடி

அவ் = அந்த

ஆல = ஆல மரத்தின்

நிழல் எய்தி = நிழலை அடைந்து

அயல் நின்றன் = தள்ளி நின்றான்

இளைப் பாற = இளைப்பாற

வேடன் , அவன் பாட்டுக்கு வந்து நிழலுக்கு ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒரு புறம் நிற்க, மறு புறம், அந்த வேதியனின் மனைவி அம்பு தைத்து இறந்து கிடக்கிறாள். அவனுக்கு அது தெரியாது.

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு புறம்  முரட்டு வேடன். மறு புறம் இறந்து கிடக்கும் ஒரு பெண். பக்கத்தில் ஒரு  குழந்தை.  வேதியன் , நீரோடு வருகிறான்.

சினிமா பார்ப்பது போல இருக்கிறது அல்லவா.

அப்படி ஒரு visual description .

செவ்வாளி . செம்மையான அம்பு அல்லது சிவந்த அம்பு.

இராமாயணத்தில், இராமன் எய்த அம்பை வாலி தன் வாலினால் பிடித்து இழுத்து  , அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க நினைக்கிறான்.

இழுத்தும் விட்டான். அதில் இராமன் என்ற பெயர் எழுதி இருக்கிறது.

இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான் என்பார் கம்பர்.

செம்மை சேர் நாமம் என்றால் செம்மையான நாமம் அல்லது வாலியின் இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்றும் கொள்ளலாம்.  வாலி வதை என்பது ஒரு முடிவுறா சர்ச்சையாகவே இருந்து வருகிறது. அது சரி என்று சொல்பவர்கள் 'செம்மை நாமம்" என்பதை செம்மையான நாமம் என்றும், அது தவறு என்று சொல்பவர்கள் "செம்மை நாமம்" என்பதை இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்று பொருள் சொல்வார்கள்.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.


அடுத்தது,

"உவ் வேலைச்  செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான்"

அது என்ன உவ் வேலை .

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்.


தமிழில் ஒரு பொருளை சுட்டிக் காட்டும் சொல்லுக்கு சுட்டு பெயர் என்று பெயர்.

அருகில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது அண்மைச் சுட்டு என்றும்.

தொலைவில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது சேய்மை சுட்டு என்றும் பெயர் பெரும்.

அண்மை சுட்டு இகரத்தில் தொடங்கும்.

இது, இவை, இவர், இவள் என்று.

சேய்மைச் சுட்டு என்பது அகரத்தில் தொடங்கும்.

அது, அவை, அவர், அவள் என்று.

இரண்டுக்கும் நடுவில் இருப்பதை சுட்ட உகரத்தை பயன் படுத்தினார்கள்.

உது, உவை , உவர், உவள் என்று.

ஆனால், அது இப்போது நடை முறையில் இல்லை.


திருஞான சம்பந்தர், மூன்று வயது பிள்ளையாக இருக்கும் போது , அவருடைய தந்தையாருடன் கோவிலுக்குச் சென்றார். கோவிலுக்குப் போவதற்கு முன் , தந்தையார் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கியதும், தந்தையை காணமால் குழந்தையாக இருந்த ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரலை கேட்ட பார்வதி வந்து ஞானப் பாலை தந்தார்.

குளத்தில் மூழ்கி எழுந்து வந்த தந்தையார் ,  குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு  , "யார் தந்தது " என்று கேட்டார்.

தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடினார்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


அதில், இறுதியில் "பெம்மான் இவன் அன்றே" என்று சொல்லி முடிக்கிறார்.

இவன் என்றால் அண்மைச் சுட்டு. இறைவன் எங்கோ இல்லை. இதோ, இங்கே இருக்கிறான். அவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று கூறுகிறார்.

"அவன் அன்றே " என்று சொல்லி இருந்தால் , இறைவன் எங்கோ தொலைவில் இருக்கிறான் என்று பொருள் படும்.

அண்மைச் சுட்டின் ஆழம் புரிகிறதா ?


"அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன்"


முரட்டு வேடன்.  அழகான பெண் தனித்து நிற்கிறாள். அருகில் யாரும் இல்லை.

அவன் , அவள் அருகில் கூட போகவில்லை. "அயல் நின்றான்".

அது வேடனின் பண்பாடு என்றால் மற்றவர்களின் பண்பாடு எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொள்ளலாம்.


கதை சொல்லும் பாங்கு. கவி நயம். தத்துவம். கலாச்சாரம் என்று அனைத்தையும்  அள்ளித் தருவது திருவிளையாடற் புராணம்.

மேலும் படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_17.html

Wednesday, August 16, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி 


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் தன் மனைவியோடும் , பச்சிளம் குழந்தையோடும் மதுரையில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு ஒரு காட்டின் வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தாகத்திற்கு நீர் கேட்டாள் . அவன் நீரை கொண்டு வரும் போது .....

என்பது வரை பார்த்தோம்.

அவன் நீரை கொண்டு வரும்போது அந்த மனைவி இருந்த ஆல மரத்தில் முன்பு யாரோ ஒரு வேடன் எய்த, சிக்கியிருந்த அம்பு காற்றில் மரத்தில் இருந்து கீழே இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் வந்து குத்தியது.....

மென்மையாக போய் கொண்டிருந்த கதையில் ஒரு திடீர் திருப்பம்.

கணவன் நீர் கொண்டு வரப் போனான். நீர் எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறான். அதற்குள், யாரோ எப்போதோ எய்த அம்பு ஒன்று மரத்தில் சிக்கி இருந்தது. அது ஒரு காற்று அடிக்க , மரத்தில் இருந்து நழுவி நேரே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது....

பாடல்


இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு
கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால்
அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த
வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்.


பொருள்

இலைத்தலைய = இலைகள் நிறைந்த

பழுமரத்தின் = பழுத்த மரத்தில்

மிசை = அசைச் சொல்

முன்னா ளெய்ததொரு = முன்னாள் எய்த ஒரு

கொலைத்தலைய = கொலை செய்வதை தொழிலாக கொண்ட

கூர்வாளி = கூர்மையான அம்பு

கோப்புண்டு = சிக்கிக் கொண்டு

கிடந்தது = கிடந்தது

கால் = காற்று

அலைத்தலைய = அலைக்கவும் (அலை, அலைத்தல்)

வீழ்ந்தும்மை = கீழே வீழ்ந்து

வினையுலப்ப = வினை முடிய (உலப்புதல் = அழிதல், முடிதல்)

வாங்கிருந்த =ஆங்கிருந்த

வலைத்தலைய = வலையில் அகப்பட்ட

மானோக்கி  = மானின் நோக்கத்தை போல உள்ள அந்தப் பெண்ணின்

வயிறுருவத் = வயிறு உருவ , வயிற்றுனுள்

தைத்தன்றால் = குத்தியது (தைத்தல் = குத்துதல்)


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

மிசை என்றால் அசைச் சொல் என்று பார்த்தோம். 

அசைச் சொல் என்றால் என்ன ?

நாம் நினைப்பதை சொல்ல வார்த்தைகள் தேவை. வார்த்தைகளை கோர்த்து வாக்கியங்கள்   அமைத்து நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். 

பாடல் எழுதும் போது அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அதற்கு யாப்பிலக்கணம் என்று  பெயர். யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். 

இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர். ஏன் என்றால், இது  இரத்தம், எலும்பு, தோல், தசை இவற்றைக் கொண்டு கட்டப் பட்டது. 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

என்பார் வள்ளுவர். (மருந்து என்று ஒன்று வேண்டாம் இந்த உடம்புக்கு, எப்போது என்றால்  உண்ட உணவு நன்றாக ஜீரணமாகி விட்டது அறிந்து உண்டால்) 


ஒரு கவிஞன் தான் நினைத்ததை கவிதையில் சொல்கிறான். சொல்லி முடித்தாயிற்று. ஆனால் கவிதையின் இலக்கணம் சரியாக அமைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு வார்த்தை போட வேண்டும். சரி ஏதாவது ஒரு வார்த்தை போடலாம் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் கவிதையின் அர்த்தத்தை சிதைத்து விடக் கூடாது. 

வார்த்தையும் வேண்டும், அதே சமயம் அது கவிதையின் அர்த்தத்தை சிதைத்தும் விடக் கூடாது என்கிற போது அர்த்தம் இல்லாத வார்த்தைகள் சில  இருக்கின்றன. அவற்றிற்கு அசை சொற்கள் என்று பெயர். கேண்மியா, சொன்மியா என்றவற்றில் மியா என்பது அசைச் சொல். கேள், சொல் என்பது மட்டும் தான் அர்த்தம். 

தலைய என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது இந்தப் பாடலில். தலைய என்பது குறிப்பு பெயரெச்சம். 

எச்சம் என்றால் மீதி. 

பெயரெச்சம் என்றால், பெயரை மீதியாக கொண்டது.

அது என்ன பெயரை மீதியாக கொண்டது ?

"வந்த " என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.  வந்த என்ற அந்த சொல்லுக்குப் பின் ஒரு பெயர்தான் வர முடியும். 

வந்த பையன், வந்த மாடு, வந்த பெண் என்று தான் இருக்க முடியும்.

வந்த என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு வினைச் சொல் வர முடியாது.

வந்த ஓடு, வந்த நட , வந்த சாப்பிடு என்று எழுத முடியாது. அதற்கு ஒரு அர்த்தம் இல்லை. 

வந்த என்பது பெயரெச்சம். 

இந்த பெயரெச்சம் தெரிநிலை, குறிப்பு என்று இரண்டு வகைப்படும்.

குறிப்பு பெயரெச்சம் என்றால் காலத்தையோ, செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பை மட்டும் வெளிப்படையாகச் சொல்வது. காலம் மற்றும் செயல் குறிப்பாக பெறப்படும். வெளிப்படையாக இருக்காது. 

நேத்து அந்த மேடையில் பாடிய பெண், அழகா இருந்தாள் என்று சொல்லும் போது ...

பாடிய என்ற பெயரெச்சம் இறந்த காலத்தை காட்டுகிறது. எனவே இது தெரிநிலை பெயரெச்சம். 

சில சமயம், காலம் வெளிப்படையாக தெரியாமல், குறிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

அழகிய என்பது பெயரெச்சம். அழகிய பெண், அழகிய புறா என்று பெயரைக் கொண்டு முடியும். ஆனால் அதன் காலம் தெரியாது. 

இலக்கணம் போதுமா ?


"அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த"

உலப்ப என்றால் முடிதல். இறுதி என்று பொருள். 

இறைவன் திருவருள் முடிவில்லா ஆனந்தத்தைத் தரும் என்பார் மணிவாசகர். 

உலப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து என்பது திருவாசகம் 


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 


தமிழ், எங்கோ ஆரம்பித்து, எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது. 

வாசியுங்கள். அத்தனையும் தேன் . அள்ளிப் பருகுங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_16.html