Monday, October 9, 2017

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல்

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல் 


விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள். "என்னை யாராலும் கொல்ல முடியாது. இந்த பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுங்கள் " என்று அவன் சொல்கிறான்.

இராமனும், இலக்குவனும் வில்லை கையில் எடுக்கிறார்கள்.

விராதன், சண்டைக்கு தயாராகிறான். அவன் கையில் அகப்பட்ட சீதை , பூனை கையில் சிக்கிய கிளி போல தவிக்கிறாள்.

பாடல்

வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

பொருள்

வஞ்சகக் = வஞ்சகமான

கொடிய =கொடுமையான

பூசை = பூனை

நெடு வாயில் = பெரிய வாயில்

மறுகும் = சிக்கித் தவிக்கும்

பஞ்சரக் கிளி = கூண்டுக் கிளி

எனக் = போல

கதறு = கதறுகின்ற

பாவையை விடா = பெண்ணாகிய சீதையை விடாமல்

நெஞ்சு உளுக்கினன் என = நெஞ்சம் துணுக்குறவன் போல

சிறிது = கொஞ்ச நேரம்

நின்று =நின்று

நினையா = சிந்தித்தான்

அஞ்சனக் = கரிய

கிரி = மலை

அனான் = போன்ற

எதிர் = எதிரில் நிற்கும் இராமனை

அரக்கன் = அரக்கன்

அழலா = தீப்போல நோக்கினான்


இங்கே "நின்று நினையா " என்ற தொடரில் , நினையா என்றால் நினைக்க மாட்டாமல், அல்லது நினைக்காமல் என்று தான் பொருள் வர வேண்டும் அல்லவா ? எதிர்மறை பொருள் வர வேண்டும். ஓடாத சினிமா படம் என்று கூறுவது போல. 

ஆனால், "நின்று நினைத்து " என்ற பொருளில் வருகிறது. 

என்ன ஒரே குழப்பாக இருக்கிறதே ? நினையா என்றால் நினைத்து என்று எப்படி  பொருள் கொள்வது ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

பொதுவாக சொற்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். 

பெயர் சொல் 
வினைச் சொல் 

(இடைச் சொல், உரிச் சொல் என்று இருக்கின்றன. அவற்றை பின்னால் பார்ப்போம்).

இதில் வினைச் சொல் என்பது செயலை குறிக்கும் சொல். 

ஓடு, பாடு, நட , தூங்கு போன்றவை வினைச் சொல். வினையை குறிக்கும் சொல் வினைச் சொல். 

சரி தானே ? இதுவரை சிக்கல் இல்லையே ?

அடுத்த படிக்கு போவோம். 

இந்த வினைச் சொல் சில சமயம் முழுமையாக வராமல் , கொஞ்சம் குறைபட்டு நிற்கும். அதற்கு எச்சம் என்று பெயர். வினையில் குறைபட்டு இருப்பதால் அதை வினையெச்சம் என்போம். (பெயரில் குறைபட்டு நின்றால் அதற்கு பெயரெச்சம் என்று பெயர்).


அதற்கு என்ன உதாரணம் ?

நடந்து 

என்று சொன்னால் , அது முடியவில்லை. 

நடந்து சென்றான் 
வந்து நின்றான் 

நடந்து , வந்து என்பன வினையெச்சம். 

புரிகிறது அல்லவா ?

அது வினையெச்சமாகத்தான் இருக்க வேண்டுமா ? வேறு விதமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். முயன்று பாப்போம். 

நடந்து முருகன்.
வந்து மயில் 


சரியாக இல்லை அல்லவா ? ஏதோ நெருடுகிறது அல்லவா ? 

நடந்து என்பது ஒரு பெயரைக் கொண்டு முடியாது. ஒரு வினையைக் கொண்டுதான் முடியும்.  

எனவே வினையெச்சம்தான் என்று நாம் உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். 

சரி, இந்த வினையச்ச சொற்களை எப்படி உருவாக்குவது ?  எப்படி இனம் கண்டு கொள்வது ? இந்த நடந்து, வந்து போல இன்னும் எவ்வளவோ சொற்கள் இருக்கும் அல்லவா ? இன்னமும் புது புது சொற்களை உண்டாக்க வேண்டி இருக்கலாம் . அதற்கு ஏதாவது விதி இருக்கிறதா ? 

இருக்கிறது. 

அதற்க்கு வாய்பாடுகள் என்று  பெயர். ஆங்கிலத்தில் சொல்வது என்றால் template என்று சொல்லலாம். என்ன செய்ய, தமிழை ஆங்கிலம் மூலம் கற்க வேண்டி இருக்கிறது. 

ஒரு சொல் இந்த மாதிரி இருந்தால் அது வினையெச்சம் என்று கூறலாம். அந்த  "இந்த மாதிரி" என்று சொல்கிறோம் அல்லவா அதற்கு வாய்பாடு என்று பெயர். 

அதற்கு முன்னால் , வினை என்றாலே அதற்கு ஒரு காலம் இருக்க வேண்டும் அல்லவா ? வினை எப்போது செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் அல்லவா ?

எனவே, நமக்கு இரண்டு தேவைகள் இருக்கிறது.

ஒன்று , வினையெச்சம் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும். 

இரண்டாவது, வினையெச்சத்தில் காலத்தை எப்படி அறிந்து கொள்வது ?

இதை எல்லாம் சிந்தித்து விடை எழுதி வைத்திருக்கிறார்கள். 

வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் பன்னிரண்டு.  

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் 

என்பது நன்னூல் சூத்திரம். 

ரொம்ப சலிப்பாக இருக்கிறதோ ? என்னடா இராமாயணம் சொல்லச் சொன்னால் இவன் நன்னூல் சொல்லி சலிப்பூட்டுகிறானே என்று தோன்றுகிறதா ?


Sunday, October 8, 2017

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன் 


பொதுவாகவே அரக்கர்கள் கடுமையாக தவம் செய்வார்கள். இறைவன் நேரில் வந்து "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். உடனே, அந்த அரக்கர்கள் , "சாகா வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். "பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. வேறு ஏதாவது கேள்" என்று இறைவன் சொல்வான். அரக்கர்களும் எப்படியெல்லாம் சாவை வெல்ல முடியும் என்று சிந்தித்து வரம் கேட்பார்கள். இறைவனும் கொடுத்து விடுவான்.

என்ன வரம் கேட்டாலும், கடைசியில் அவர்களுக்கு மரணம் வந்தே தீருகிறது.

ஆனால், இதற்கு விதி விலக்காக , விராதன் இருக்கிறான்.

"நான் முகன் தந்த வரத்தினால் என் உயிர் என்னை விட்டு போகவே போகாது. இந்த  உலகங்கள் அனைத்தும் எதிர்த்து வந்தாலும், ஒரு ஆயுதம் கூட இல்லாமல் அவற்றை வெல்லுவேன். உங்களுக்கு (இராம இலக்குவனர்களுக்கு) உயிர் பிச்சை தருகிறேன். இந்த பெண்ணை (சீதையை) என்னிடம் விட்டு விட்டு ஓடி விடுங்கள் "

என்கிறான்.

பாடல்

‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
     யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
     தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
     என்று புகல


பொருள்

‘ஆதி நான்முகன் = உயிர்களுக்கு எல்லாம் மூலமான  பிரமன்

வரத்தின் = வரத்தினால்

எனது ஆவி அகலேன் = என் உயிர் என்னை விட்டு போகாது. என்னை கொல்ல முடியாது

ஏதி யாவதும் இன்றி = காரணம் எதுவும் இன்றி. இங்கு படை அல்லது துணை எதுவும் இன்றி என்று கொள்ளலாம்.

உலகு யாவும் = உலகங்கள் யாவும்

இகலின் = சண்டைக்கு வந்தால்

சாதியாதனவும் இல்லை = அவற்றை வென்று முடிக்காமல் இருக்க மாட்டேன்

உயிர் தந்தனென் = உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்

அடா! = அடேய்

போதிர் = போய் விடுங்கள்

மாது இவளை உந்தி = மாது இவளை விட்டு விட்டு

இனிது = சந்தோஷமாக

என்று புகல = என்று கூறினான்

உயிர் பிழைத்தோம் என்று சந்தோஷமாக ஓடி விடுங்கள் என்கிறான்.

உங்களுக்கு சகுனம், விதி இவற்றில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. தமிழில் எப்போதும் , எதையும் மங்களமாகவே சொல்ல வேண்டும் என்று ஒரு விதியே வைத்து இருக்கிறார்கள்.  அமங்கலமான சொற்களை விலக்க வேண்டும்  என்பது விதி.

ஏன் என்றால், வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்று நம்பினார்கள். நாம் என்ன சொல்கிறோமோ, அது நமது மனத்தில் பதிந்து அப்படியே நடக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

எனவே, எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும், மங்களமான சொற்களையே பேச வேண்டும் விதித்து வைத்திருந்தார்கள்.

இதை தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். 

(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)


இங்கே விராதன் சொல்வதை வேறு விதமாக பார்க்கலாம்.

"உயிர் போகாது என்று பிரமன் வரம் தந்திருக்கிறான். ஆனால், இப்போது இந்த பெண்ணை கடத்திக் கொண்டு போவதன் மூலம் என் உயிரை விடப் போகிறேன். நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிதாக வாழுங்கள் "

என்று அர்த்தம் சொல்லலாம்.



‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்"

பிரமன் வரத்தினால் , என்னை கொல்ல முடியாது

 உயிர்  தந்தனென் = என் உயிரை தரப் போகிறேன்


போதிர், மாது இவளை உந்தி, இனிது = இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிமையாக வாழுங்கள்

என்று புகல = என்று கூறினான்.

அவன் எதை நினைத்துச் சொன்னானோ தெரியாது. அவன், தெரியாமல் சொன்ன வார்த்தை கூட பலித்தது. உயிரை விட்டான்.


எனவே, மறந்தும், அமங்களமான சொற்களை பேசக் கூடாது. 

கோபம் வரும்போது, எரிச்சல் வரும்போது, வருத்தத்தில் அமங்களமான சொற்களை சொல்லாமல் இருப்பது நலம். 

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_8.html

Saturday, October 7, 2017

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி


விராதன் என்ற அரக்கன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவன் பின்னே, அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள்.

"டேய், அவளை எங்கே தூக்கிக் கொண்டு போகிறாய். நில் " என்று அவனை அதட்டிக் கொண்டு கையில் வில்லோடு அவனை துரத்துகிறார்கள்.

பாடல்

காளை மைந்தர் அது கண்டு,
    கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு
    தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர்,
    வஞ்சனை, “அடா!
மீள்தி; எங்கு அகல்தி? ‘‘ என்பது
    விளம்ப, அவனும்.

பொருள்


காளை மைந்தர் = காளை போன்ற வீரம் கொண்ட மைந்தர்களான இராமனும், இலக்குவனும்

அது கண்டு = சீதையை விராதன் தூக்கிச் செல்வதைக் கண்டு

கதம் வந்து கதுவத் = கோபம் வந்து பற்றிக் கொள்ள

தோளில் = தோளில்

வெம் சிலை = கொடுமையான வில்லை

இடம் கொடு = இடக் கையில் பிடித்துக் கொண்டு

தொடர்ந்து, = விராதனை தொடர்ந்து துரத்திக் கொண்டு போய்

சுடர் வாய் = சுடர் விட்டு பிரகாசிக்கும்

வாளி தங்கிய = அம்பை தங்கிய

வலங்கையவர் = வலக்கையில்

வஞ்சனை, = வஞ்சனையாக

“அடா! = அடேய்

மீள்தி; = திரும்பி வா

எங்கு அகல்தி?  - எங்கு அகன்று போகிறாய்

என்பது = என்று

விளம்ப, = கேட்க

அவனும் = அந்த விராதனும்

விதி.  வேறென்ன சொல்ல. சக்கரவர்த்தி திருமகனும், அவன் தம்பியும் காட்டில்  ஏதோ ஒரு அரக்கனை விரட்டிக் கொண்டு செல்ல வைத்தது. கட்டிய மனைவியை எவனோ ஒருவன் தூக்கிக் கொண்டு போகிறான் . அவன் பின்னால் விரட்டிக் கொண்டு செல்ல விதி.

நமக்கு துன்பம் வரும்போது இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இவர்கள் இப்படி அவனை விரட்டிக் கொண்டு போனபோது அவன் என்ன சொன்னான் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_7.html

Friday, October 6, 2017

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல்

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல் 


இராவணன் சீதையை தூக்கிச் சென்றான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சீதையை தூக்கிச் செல்வதில் இராவணன் முதல் ஆள் அல்ல. அவனுக்கு முன்னே இன்னொரு அரக்கன் சீதையை தூக்கிச் சென்றான்.

அவன் பெயர் விராதன்.

காட்டில் , சூர்பனகையை எல்லாம் பார்ப்பதற்கு முன் நிகழ்ந்தது இது.

என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இராமன், இலக்குவன் , மற்றும் சீதை கானகத்தில் நடந்து போகிறார்கள். அப்போது அவர்களை துரத்திக் கொண்டு விராதன் என்ற அந்த அரக்கன் வருகிறான்.

பாடல்


நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை, 
சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

பொருள்

நில்லும், நில்லும் என வந்து "நில்லுங்கள், நில்லுங்கள் " என்று சொல்லிக் கொண்டே வந்து

நிணம் உண்ட = மாமிசம் உண்ட

நெடு = நீண்ட

வெண் பல்லும் = வெள்ளையான பற்களும்

வல் எயிறும் = வலிமையான கோரை பற்களும்

மின்னு = மின்னும் படி

பகு வாய் = பிளந்த வாயை

முழை திறந்து = குகை போல திறந்து வைத்துக் கொண்டு

அல்லி புல்லும்  = மலர் இதழ்கள் ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்த வண்ணம் நெருங்கி இருக்கும்

அலர் = தாமரை மலரில் இருக்கும்

அன்னம் அனையாளை = அன்னம் போன்றவளை

ஒரு கை = ஒரு கை

சொல்லும் எல்லையில் = செல்லும் எல்லையில், கையின் முடிவில், உள்ளங் கை

முகந்து = நீரை முகப்பது போல முகந்து கொண்டு

உயர் = உயரமான

விசும்பு = வானம்

தொடர = தொடும்படி சென்றான்

விராதன் வந்தான், சீதையை உள்ளங் கையில் தண்ணீரை முகர்வதைப் போல எளிதாக  எடுத்துக் கொண்டு வானில் பறந்து விட்டான்.

அப்புறம் என்ன நடந்தது ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_6.html

Thursday, October 5, 2017

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள்

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள் 




அவள் அவனை காதலிப்பது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். யார் கேட்டாலும், "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ..." என்று சொல்லி மழுப்பி விடுவாள்.

ஆனால், இப்போது , அவளை விட்டு அவன் அயல் நாடு போய் இருக்கிறான்......

"போறதுக்கு முன்னால அவன்  என்ன சொன்னான்" ?

"நீ கவலைப் படாதே, சிறிது நாளில் வந்து விடுவேன்...தைரியமா இரு " என்று தான் சொல்லிவிட்டுச் சென்றான்...

சொல்லி எத்தனை நாள் இருக்கும் ? இரண்டு நாள் ? நாலு நாள் ? பத்து நாள் ?

இல்லை, அவ்வளவு எல்லாம் இருக்காது...நேத்தோ , முந்தா நாளோதான் சொன்னான்.

அப்படியா, அப்படினா இப்பதான் போனானா ? அப்ப திரும்பி வர ரொம்ப நாள் ஆகும்னு சொல்லு...

இல்ல இல்ல , நேத்து சொன்ன மாதிரி இருக்கு , ஆனால் சொல்லி ஒரு பத்து நாள் இருக்கும்.


பத்து நாளா ? இல்லையே அதுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி இருக்கே....

இப்படி அவன் பிரிவில் , அவள் தவிக்கிறாள். நாள் கணக்கெல்லாம் மறந்து விட்டாள்.

இருந்தும் அவனைக் காணாமல் மனம் ஒன்றிலும் ஒட்டவில்லை. சரியாக சாப்பிடுவது இல்லை,  தூங்குவது இல்லை.

மெலிந்து போனாள். கை மெலிந்து, கையில் உள்ள வளையல் தானே நழுவி கீழே விழுகிறது.

அவள் சொல்லா விட்டாலும், அவள் கையில் இருந்து நெகிழ்ந்து விழும் வளையல் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறது, அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை.

அவள் என்ன செய்வாள் பாவம்.

ஒரு பக்கம், பிரிவு. அதில் வரும் துயரம்.

இன்னொரு பக்கம், அவன் வருவான் நம்பிக்கை.

இன்னொரு புறம், எப்போ வருவானோ என்ற ஏக்கம்.

இதற்கிடையில், இந்த வளையல் வேற , ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறது. வெட்கம் வேறு பிடுங்கி தின்கிறது அவளை.

ஒரு பெண் படும் அவஸ்தை , சொல்லி மாளாது.

இத்தனை உணர்ச்சி குவியலையும் வார்த்தையில் வடிக்க முடியுமா ?

வள்ளுவர் அதையும் செய்திருக்கிறார்...

படித்துப் பாருங்கள், உதட்டோரம் ஒரு சோகம் கலந்த இன்பப் புன்னகை படர்வதை உணர்வீர்கள்....


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்

துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு சென்றமை

தூற்றாகொல் = சொல்லாதோ (தூற்றுதல் = அவதூறாக சொல்லுதல்)

முன்கை = முன் கையில் உள்ள

இறை = மணிக்கட்டு

இறவா = நெகிழாமல்

நின்ற வளை = நின்ற வளையல்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_5.html




Wednesday, October 4, 2017

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?


என்ன பண்ணி என்ன பலன். எல்லாம் விதி என்று பலர் நொந்து கொல்வதைப் பார்த்து இருக்கிறோம்.

விதி என்று ஒன்று இருக்கிறதா ? இருக்கிறது என்றால் அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள் ? கடவுளா ? எல்லாம் விதிப்படிதான் என்றால் மனிதன் ஏன் எந்த முயற்சியும் செய்ய வேண்டும் ? மனிதனுக்கு ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா ?  விதிக்கு நாம் எல்லாம் அடிமைகளா என்ற பல கேள்விகள் வரும்.

விதி என்பதை நமது சூழ்நிலை என்று வைத்துக் கொள்வோம். நாம் பிறந்த குடும்பம், வீடு, பெற்றோர், உடன் பிறப்பு , நாடு, நாம் படித்த பள்ளிகள் இவை எல்லாம் நாம் தேர்ந்தெடுக்க வில்லை. நமக்கு அமைந்தது. நம் விதி அது. நாம் விரும்பி பெற்றது அல்ல. நாம் விரும்பினாலும் மாற்ற முடியாது.

நமக்கு வரும் போட்டிகள், இடர்பாடுகள், எதிரிகள், சிக்கல்கள் இவையும் நமது விதிதான்.

பரிட்சைக்குப் போகிறோம். அதில் வரும் கேள்விகள் நம் விதி. நாம் அதை மாற்ற முடியாது.

வேலைக்கு மனு போடுகிறோம். நம்மோடு எத்தனை பேர் அந்த வேலைக்கு போட்டி போடுவார்கள். அதில் நம்மை விட சிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ? அதுவும் விதி.

பொதுவாகவே , இந்த விதி , அதாவது நமது சூழ்நிலை , நமக்கு எதிராகவே இருக்கிறது  ?

ஏன் ?

இருக்கும் வாய்ப்புகள் குறைவு ? அதை அடைய நினைப்போர் அதிகம். எனவே  ,போட்டி, பொறாமை,  போன்றவை இருப்பது இயற்கை.

காரில் போகிறோம், விபத்து ஏற்பட்டு விடுகிறது. விதி.

அலுவலகத்தில் , செய்யாத தவறு நம் மீது வந்து விழுகிறது. அதுவும் விதி.

சரி, இப்படி எல்லாமே விதி என்றால், மனிதன் என்னதான் செய்வது ? எப்படித்தான் வாழ்வது ?

இந்த விதியை நம்மால் வெல்ல முடியாதா ?


முடியும் என்கிறார் ?

எப்படி என்றால் அதற்கு இரண்டே இரண்டு செயல்பாடுகள் அவசியம்.

விதிக்கு எதிராக நாம் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் நமக்கு வேண்டியது இரண்டு அம்சங்கள்.

முதலாவது, விடாமல் போராட வேண்டும்.

இரண்டாவது, வெற்றி கிடைக்கும் வரை வலிமையை ஏற்றிக் கொண்டே போக வேண்டும் நமது போராட்டத்தில்.

பாடல்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்


பொருள்


ஊழையும்  = விதியையும்

உப்பக்கம் = புறமுதுகு

காண்பர்  = காண்பர்

உலைவின்றித் = தளர்வின்றி

தாழாது = முயற்சியில் குறைவு இன்றி

உஞற்று பவர் = முயல்பவர்

எத்தனை நாள் ஆனாலும் விடாமல் போராட வேண்டும்.

முயற்சியை விட்டு விடக் கூடாது.

அது மட்டும் அல்ல, முயற்சி குறையக் கூடாது.

முதல் முறை முயன்றோம். முடியவில்லை என்றால், இரண்டாம் முறை முன்பைவிட   அதிக முயற்சி செலுத்த வேண்டும். அதை விட குறைவாக அல்ல.

இரண்டாம் முறையும் தோல்வி என்றால், மூன்றாம் முறை முயற்சியை இன்னும் அதிகரிக்க  வேண்டும்.

நிறைய பேர் கொஞ்சம் முயற்சி செய்வார்கள். தோல்வி வந்ததும் தளர்ந்து விடுவார்கள்.  "என்னால் அவ்வளவுதான் முடியும் ...முடிந்த எல்லா வழியும் முயற்சி செய்து  விட்டேன். இனி மேல் என்ன செய்வது "  என்று விரக்தி அடைந்து அமர்ந்து விடுவார்கள்.


தோல்வி வரும். முயற்சியை தளர விடக் கூடாது. அது மட்டும் அல்ல, அதை அதிகரிக்கவும் வேண்டும்.


பரீட்ச்சையில் தேற வேண்டுமா ? நல்ல வேலை கிடைக்க வேண்டுமா ? கிடைத்த வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டுமா ? போட்டிகளில் முதலில் வர வேண்டுமா ?  பணம் திரட்ட வேண்டுமா ?


மனம் தளராமல், முயற்சி குறையாமல் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வளவுதான் என்னால் முடியும் என்று ஒரு காலத்திலும் சொல்லக் கூடாது.

மேலும் மேலும் முயற்சியின் வலுவை அதிகரிக்க வேண்டும்.

அப்படி செய்தால், விதி என்ற அந்த பெரிய எதிரியை புறம் காட்டி ஓட விடலாம்.


உலகிலேயே பெரிய எதிரி விதி தான்.

வள்ளுவர் சொல்கிறார் "ஊழையும்" என்று . அதில் ஒரு "ம்" சேர்க்கிறார்.


ஊழை (விதியை) மட்டும் அல்ல, அதை விட பெரிய சிக்கல் எது வந்தாலும், அதையும் வெற்றி காண முடியும் என்கிறார்.

ஊழை வெற்றி காண்பது மட்டும் அல்ல, அதை ஓட ஓட விரட்டி அதன் புற முதுகை  காண முடியும் என்கிறார்.

ஊக்கம் தரும் குறள் . வாழ்வில் தளர்ச்சி வரும் போது , சோகம் துக்கம் வரும் போது இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு புத்துணர்ச்சி தோன்றும். உலகையே வென்று விடலாம் என்று தோன்றும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_4.html

Monday, October 2, 2017

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 




அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

இந்த குறள் பற்றி முன்பு ஒரு தரம் பார்த்தோம். நவில் தொரும் நூல் நயம் போல படிக்க படிக்க , சிந்திக்க சிந்திக்க மேலும் மேலும் அர்த்தங்களை தருவது குறள்.


குறளின் எளிய விளக்கம் , மற்ற உயிர்களின் துன்பத்தை நம் துன்பம் போல நினைத்து அதை நீக்கா விட்டால், நாம் பெற்ற அறிவின் பயன் என்ன ? (ஒன்றும் இல்லை )

பொருள்

அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?

பிறிதின்நோய் = மற்றவற்றின் நோய் (துன்பம்)


தந்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல

போற்றாக் கடை = நீக்காவிட்டால்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_2.html

சரி, இதில் என்ன ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

சிந்திப்போம்.

ஏன் "தன் நோய் போல்" என்று கூறினார் ?

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் போற்றாக் கடை என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அது என்ன "தன் நோய் "


சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் , பல துன்பங்களை அறிய மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு பெரிய பணக்காரன் , பசி என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. வேளா வேளைக்கு உணவு அவனுக்கு கிடைத்து விடும்.  குளிர், வெயில் இவற்றின் கொடுமை அவனுக்குத் தெரியாது.

தனக்கு அந்த துன்பம் இல்லை என்பதால் வேறு யாருக்கும் அந்த துன்பம் இருக்காது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

நமக்கு உணவு இல்லாமல் , பசியால் வாடினால் எப்படி இருக்கும், என்ன செய்வோம் என்று நினைத்து பார்த்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு பசியின் கொடுமை தெரியும் . தனக்கு பசி வந்தால் அவன் என்ன செய்வான் ? பிச்சை எடுப்பான்.  ஆனால் ஒரு செல்வந்தன் , தனக்கு பசி வந்தால் என்ன செய்வான் ?  "யப்பா, இந்த பசி ரொம்ப பொல்லாதது. ஒரு தரம் துன்பப் பட்டு விட்டோம்.  இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டும் அல்ல. என் பெண்டாட்டி பிள்ளைகளும் இந்த பசியால் துன்பப் படக் கூடாது " என்று நினைத்து அதற்கு வேண்டியவற்றை செய்வான் அல்லவா.

அது போல,  மற்றவர்களுக்கு வரும் துன்பத்தையும் ஒருவன் துடைக்க வேண்டும்.  ஏதோ, ஒரு வேளைக்கு உணவு போட்டால் போதாது. எப்படி தன்னுடைய பசி கொடுமையை நிரந்தரமாக போக்க முயல்வானோ, அப்படி மற்றவர்கள்  துன்பத்தையும் போக்க வேண்டும்.

மற்றொன்று, பெண்களின் உடல் ரீதியான பிரச்னைகளை ஆண்கள் அறிந்து கொள்ளவே முடியாது. யோசிக்கலாம். கற்பனை பண்ணி பார்க்கலாம். அப்படி ஒரு பிரசவ வலி தனக்கு வந்தால் என்னவெல்லாம் வேண்டியிருக்கும் என்று  யோசிக்கும் ஒவ்வொரு ஆணும், அதை அந்த பெண்களுக்கும் அளிக்க முயல வேண்டும்.

மற்றொன்று, வீட்டிலோ, அல்லது உறவினருக்கோ, நண்பருக்கோ ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், நமக்கு என்னென்ன வேண்டியிருக்கும் என்று  நினைத்து அவர்களுக்கு செய்ய வேண்டும்.

"பிறிதின்" என்றால் என்ன அர்த்தம். பிற மனிதர்கள் மட்டும் அல்ல, பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

"போற்றா கடை".  போற்றுதல் என்றால் விலக்குதல் , காத்தல் , நீக்குதல், மதித்தல் என்று பல பொருள் உண்டு.


மற்றவர்கள் துன்பத்தை நீக்கினால் மட்டும் போதாது, அது மீண்டும் வராமல் காக்க வேண்டும். வருவதற்கு முன்பே அந்த துன்பங்களை மாற்றி வைக்க உதவி செய்ய வேண்டும்.

சில சமயம், நம்மால் மற்றவர்களின் துன்பத்தை மாற்றவோ குறைக்கவோ முடியாது. அவர்கள் நமக்காக படும் துன்பத்தை கண்டு தலை வணங்குவதைத் தவிர ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு பெற்றோர் படும் பாட்டுக்கு , ஒரு பிள்ளை என்ன செய்து விட முடியும் ? ஒரு தாயின் பிரசவ வேதனையை , அவள் பெறும் பிள்ளை ஒன்றும் செய்து விட முடியாது. அந்த வலியை பொறுத்துக் கொண்டு தன்னை ஈன்றெடுத்த தாயின் வலியை போற்றலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.

"அறிவினான் ஆகுவது உண்டோ "...மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க அறிவு உள்ளவர்களால் தான் முடியும் .


எவ்வளவுதான் படித்தாலும் மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க முடியாவிட்டால் அந்த அறிவினால் ஒரு பயனும் இல்லை.

அறிவு என்பது எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறோம் என்பதல்ல, எத்தனை பட்டங்கள் பெற்றோம் என்பதல்ல, மற்றவர்களின் துன்பத்தை நம் துன்பமாக  எப்போது நினைக்கிறோமோ அதைப் பொறுத்தது.

"ஆகுவது உண்டோ "  ....சும்மா ஐயோ பாவம், எவ்வளவு துன்பப் படுகிறார்கள் என்று வருத்தப்படுவதோடு நின்று விடக் கூடாது. அது எல்லோராலும் முடியும்.  "ஆகுவது" என்றால் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். ஆக்குதல்  என்பதில் இருந்து வந்தது "ஆகுவது". உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

திருக்குறள் என்ற நூலில், ஒரு குறளுக்காவது  முழு அர்த்தமும் கண்டு விட முடியுமா என்று தெரியவில்லை.

கடல் போல் விரிந்து கிடக்கிறது.  அத்தனை பெரிய அறிவுக் கருவூலம்.