Wednesday, October 18, 2017

திருக்குறள் - பயனில சொல்லாமை

திருக்குறள் - பயனில சொல்லாமை 


நல்ல பேர் வாங்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் மிக கடினமான செயல்.

ரொம்ப உழைக்க  வேண்டும்.  கடுமையாக உழைத்தால்தான் நல்ல பெயரும், புகழும், செல்வமும் கிடைக்கும். அதுவும் ஏதோ ஒரு சில நாளிலோ அல்லது மாதத்திலோ வந்து விடாது. ஆண்டு பல ஆகும்.

அப்படி சேர்த்த  பெயரையும்,புகழையும் கட்டி  காப்பது அதை விட கடினம்.

ஒரு நொடியில் புகழ் போய்விடும், ஒரு தவறான முடிவில் செல்வம் போய் விடும்.

நல்லவர்கள், பண்புள்ளவர்கள், இனியவர்கள் தாங்கள் சிரமப் பட்டு சேர்த்த பேரையும் , செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று நிச்சயமாக செய்யக் கூடாது

அது என்ன ?

பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் பேசக் கூடாது

பயனில்லாத சொற்களை பேசினால் சீர்மையும் சிறப்பும் போய் விடும் என்கிறார்  வள்ளுவர் ...

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்


பொருள்

சீர்மை = புகழ், நல்ல பெயர்

சிறப்பொடு = பெற்ற சிறப்புகள் (பட்டம், பதவி, செல்வம், )

நீங்கும் = ஒருவனை விட்டு நீங்கும்

பயன்இல = பயன் இல்லாத

நீர்மை = நீர் போல

உடையார் = உயர்ந்த குணம் உடையவர்கள்

சொலின் = சொன்னால்

எனவே, நீங்க சேர்த்து வைத்த நல்ல பெயர், புகழ், செல்வம் , பட்டம் , பதவி , செல்வாக்கு இவற்றை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பயன் இல்லாத சொற்களை சொல்லாமல் இருங்கள்.

பயன் இல்லாத சொல் என்றால் என்ன ?

மற்றவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொல் என்று உரை எழுதுகிறார்  பரிமேலழகர்.


நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அது கேட்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில்   பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

யோசித்துப் பார்ப்போம்.

நாம் பேசுவதில் எத்தனை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று ?

அரட்டை, chat , "சும்மா தான் கூப்பிட்டேன்", whatsapp , facebook comments இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கிறது என்று சிந்திப்போம்.

அதே போல, மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது , இந்த பேச்சை கேட்பதால் நமக்கு என்ன பலன் என்று யோசிக்க வேண்டும்.

டிவி சீரியல்கள், விவாத மேடைகள், பட்டி மன்றங்கள், போன்றவற்றை கேட்கும் போது , சிந்திக்க வேண்டும்  இதனால் பயன் உண்டா என்று.

பயனுள்ளவற்றை பேச வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விஷயங்களை நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? அதற்கு நிறைய படிக்க வேண்டும், படித்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை நம் அனுபவத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

அப்போது நமது அறிவின் எல்லை விரியும். விரிந்த அறிவு பயன் உள்ள சொற்களை தரும்.

பேச்சை குறைப்போம்.

தேவை இல்லாதவற்றை கேட்பதை தவிர்ப்போம்.

நல்லதை படிப்போம், கேட்போம்.

நல்லவற்றை பேசுவோம்.

இது நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல. வீட்டில், மற்ற உறவுகளின் மத்தியில், அலுவலகத்தில், எல்லா இடத்திலும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏழு வார்த்தையில் எவ்வளவு  விஷயம்.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_18.html

Monday, October 16, 2017

திருக்குறள் - கூடா நட்பு

திருக்குறள் - கூடா நட்பு 


உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.

அந்த பட்டடை இருக்கிறதே, வெளியே இருந்து பார்க்க அது ஏதோ அந்த சூடான இரும்பை தங்குவது போல இருக்கும். ஆனால், உண்மையில், அந்த இரும்புப் பலகையால் தான் , அந்த சூடான இரும்புக்கு எல்லா அடியும்  விழுகிறது. அந்த பட்டடை இல்லாவிட்டால், சூடான இரும்பு துண்டுக்கு ஒரு அடியும் விழுந்திருக்காது.

அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

பாடல்

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்

சீரிடங் காணின் = சரியான இடம் வரும்போது.

எறிதற்குப் = விலக்குவதற்கு

பட்டடை = பட்டடை  போல

நேரா = மனதோடு ஒன்றாதவர்

நிரந்தவர் நட்பு = கூடியவர்கள் நட்பு.


அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் துன்பங்கள் எங்கிருந்து வந்தன என்று. 

உங்கள் வாழ்வில் யாரேனும் அது போன்ற நண்பர்கள் இருந்தால், அவர்களை  விட்டு விலகிச் செல்லுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_16.html


Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



Tuesday, October 10, 2017

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து 


எப்போதுமே நல்லதையே பேச வேண்டும். மங்களகரமான சொற்களையே பயன் படுத்த வேண்டும் என்று நம் முன்னவர்கள் ஒரு விதியாகவே செய்து வைத்து இருந்தார்கள்.

அமங்கல சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

சொற்களுக்கு வலிமை உண்டு. அவை சொன்னது போல பலித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நமது இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது.

சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. ஊரே திரண்டு வந்திருக்கிறது. எல்லோரும் மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பொருள்

விரையினர் = மணம் பொருந்திய பெண்கள். பெண்ணுக்கு ஒரு மணம் உண்டு.

இறைவன் திருவடிக்கு மணம் உண்டு என்கிறார் மணிவாசகர்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


மலரினர் = மலரினை கையில் கொண்டவர்கள்

விளங்கு மேனியர் = விளக்கு போல ஒளி விடும் மேனி உடைய பெண்கள்

உரையினர் = நன்கு தெளிவாக பேசுபவர்கள்

பாட்டினர் = இனிமையாக பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = சாய்ந்த கண்ணால் பார்ப்பவர்கள்

(சைட் அடிப்பவர்கள் என்று நாசூக்காக சொல்கிறார் இளங்கோ அடிகள்)

சாந்தினர் = சந்தனம் போன்ற சாந்தினை பூசியவர்கள்

புகையினர் = சாம்பிராணி போன்ற நறுமண புகை போட்டு கூந்தலையும், உடலையும்  மணமாக வைத்து இருப்பவர்கள்

தயங்கு கோதையர் = தயங்கி தயங்கி மென்மையாக நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = உயர்ந்து நிற்கும் இளமையான மார்பகங்களை உடையவர்கள்

இடித்த சுண்ணத்தர் = பௌடர் பூசி இருப்பவர்கள். சுண்ணம் என்றால் பொடி. வாசனைப் பொடி போட்டு இருப்பார்கள். அதைத்தான் நான் பௌடர் என்று சொன்னேன்.

திருப்பொற்சுண்ணம் என்று பத்து பாதல் எழுதி இருக்கிறார் மணிவாசகர்.

பொடி இடிக்கும் போது இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே பெண்கள் இடிப்பார்களாம்.

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

என்பது திருவாசகம்


சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும் மனதை பறி கொடுத்தேன் பாவியேன் என்பார் பாரதியார்


ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’

என்பது  பாரதி பாடிய குயில் பாட்டு


விளக்கினர் = மங்கள விளக்கை கையில் ஏந்திய பெண்கள்

கலத்தினர் = பால், நெய் , அரிசி போன்ற மங்கள பொருள்களை குடத்தில் ஏந்தி வரும் பெண்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர் = முளை குடம் கையில் ஏந்திய பெண்கள்

முகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்கள்

போதொடு = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தலை உடைய பெண்கள்

 பொலன் நறுங் கொடி அன்னார் = அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்கள் வாழ்த்துகிறார்கள். எப்படி ?

‘காதலற் பிரியாமல் = காதலர்கள் பிரியாமல்

கவவுக் கை ஞெகிழாமல் = பிடித்த கை விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீமை ஏதும் இன்றி

என ஏத்தி = என புகழ்ந்து, வாழ்த்தி

சில் மலர் கொடு தூவி = சிறந்த மலர்களைத் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகில் (வானுலகில்)

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்று

மங்கல நல் அமளி ஏற்றினார்- = மங்கலமான ஆரவாரமான திருமணச் சடங்கை செய்து முடித்தனர்.

திருமண வீட்டை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள்.

ஆனால், கூர்ந்து கவனித்தால் தெரியும், எவ்வளவு அமங்கலமான வாழ்த்து இது என்று.  நினைத்து எழுதவில்லை. வந்து விழுகிறது வார்த்தை.

என்ன அமங்கலம் ?

‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்’ 

இது என்ன வாழ்த்து ?

நீங்கள் ஒன்றாக இருங்கள் என்று சொல்லலாம். "பிரியாமல் இருங்கள்" என்று வாழ்த்தினார்கள். பிரிவு என்ற சொல் வந்து விழுகிறது.

"பிடித்த கை நெகிழ்ந்து விடாமல்" ...பின்னால் கோவலன் கண்ணகியை விட்டு விட்டு மாதவியிடம் போகப் போகிறான் என்று கட்டியம் கூறுவதைப் போல , ஒரு எச்சரிக்கை போல அமைகிறது இந்த வாழ்த்து.

", தீது அறுக!"


தீமை இல்லாமல்  இருங்கள் என்று வாழ்த்தினார்கள். நல்லா இருங்கள் என்று சொல்வது  ஒரு வழி. தீமை இல்லாமல் இருங்கள் என்று சொல்வது இன்னொரு வழி.

இது எப்படி இருக்கிறது என்றால்

"மண மக்களாகிய நீங்கள் வண்டியில் அடி படாமல், கை கால் உடைத்துக் கொள்ளாமல்,  எய்ட்ஸ் போன்ற நோய் வராமல்,  கடன் வாங்கி அல்லல் படாமல் , அற்ப ஆயுளில் மண்டையைப் போடாமல் " வாழுங்கள் என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அர்த்தம் என்னவோ நல்லதுதான். இருந்தும் வார்த்தைகள் மங்கல வார்த்தைகள் இல்லை.

கோவலன் கண்ணகி வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியும் தானே.

எனவே எப்போதும் நல்ல, உயர்ந்த சொற்களையே பேசி பழக வேண்டும். பிள்ளைகளுக்கும்  சொல்லித் தாருங்கள்.

கோபத்தில் திட்டினாலும் அமங்கல சொற்களை சொல்லவே கூடாது.

பல திருமண அழைப்பிதழ்களில் , தேவாரத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து போடுவார்கள். அதை கூட தவறு என்று சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள்.  அதில் ஒரு அமங்கல சொல் இருக்கிறது என்று அதை தவிர்க்கும் படி கூறுவார்கள்.

அது என்ன பாடல் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_10.html

Monday, October 9, 2017

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல்

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல் 


விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள். "என்னை யாராலும் கொல்ல முடியாது. இந்த பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுங்கள் " என்று அவன் சொல்கிறான்.

இராமனும், இலக்குவனும் வில்லை கையில் எடுக்கிறார்கள்.

விராதன், சண்டைக்கு தயாராகிறான். அவன் கையில் அகப்பட்ட சீதை , பூனை கையில் சிக்கிய கிளி போல தவிக்கிறாள்.

பாடல்

வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

பொருள்

வஞ்சகக் = வஞ்சகமான

கொடிய =கொடுமையான

பூசை = பூனை

நெடு வாயில் = பெரிய வாயில்

மறுகும் = சிக்கித் தவிக்கும்

பஞ்சரக் கிளி = கூண்டுக் கிளி

எனக் = போல

கதறு = கதறுகின்ற

பாவையை விடா = பெண்ணாகிய சீதையை விடாமல்

நெஞ்சு உளுக்கினன் என = நெஞ்சம் துணுக்குறவன் போல

சிறிது = கொஞ்ச நேரம்

நின்று =நின்று

நினையா = சிந்தித்தான்

அஞ்சனக் = கரிய

கிரி = மலை

அனான் = போன்ற

எதிர் = எதிரில் நிற்கும் இராமனை

அரக்கன் = அரக்கன்

அழலா = தீப்போல நோக்கினான்


இங்கே "நின்று நினையா " என்ற தொடரில் , நினையா என்றால் நினைக்க மாட்டாமல், அல்லது நினைக்காமல் என்று தான் பொருள் வர வேண்டும் அல்லவா ? எதிர்மறை பொருள் வர வேண்டும். ஓடாத சினிமா படம் என்று கூறுவது போல. 

ஆனால், "நின்று நினைத்து " என்ற பொருளில் வருகிறது. 

என்ன ஒரே குழப்பாக இருக்கிறதே ? நினையா என்றால் நினைத்து என்று எப்படி  பொருள் கொள்வது ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

பொதுவாக சொற்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். 

பெயர் சொல் 
வினைச் சொல் 

(இடைச் சொல், உரிச் சொல் என்று இருக்கின்றன. அவற்றை பின்னால் பார்ப்போம்).

இதில் வினைச் சொல் என்பது செயலை குறிக்கும் சொல். 

ஓடு, பாடு, நட , தூங்கு போன்றவை வினைச் சொல். வினையை குறிக்கும் சொல் வினைச் சொல். 

சரி தானே ? இதுவரை சிக்கல் இல்லையே ?

அடுத்த படிக்கு போவோம். 

இந்த வினைச் சொல் சில சமயம் முழுமையாக வராமல் , கொஞ்சம் குறைபட்டு நிற்கும். அதற்கு எச்சம் என்று பெயர். வினையில் குறைபட்டு இருப்பதால் அதை வினையெச்சம் என்போம். (பெயரில் குறைபட்டு நின்றால் அதற்கு பெயரெச்சம் என்று பெயர்).


அதற்கு என்ன உதாரணம் ?

நடந்து 

என்று சொன்னால் , அது முடியவில்லை. 

நடந்து சென்றான் 
வந்து நின்றான் 

நடந்து , வந்து என்பன வினையெச்சம். 

புரிகிறது அல்லவா ?

அது வினையெச்சமாகத்தான் இருக்க வேண்டுமா ? வேறு விதமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். முயன்று பாப்போம். 

நடந்து முருகன்.
வந்து மயில் 


சரியாக இல்லை அல்லவா ? ஏதோ நெருடுகிறது அல்லவா ? 

நடந்து என்பது ஒரு பெயரைக் கொண்டு முடியாது. ஒரு வினையைக் கொண்டுதான் முடியும்.  

எனவே வினையெச்சம்தான் என்று நாம் உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். 

சரி, இந்த வினையச்ச சொற்களை எப்படி உருவாக்குவது ?  எப்படி இனம் கண்டு கொள்வது ? இந்த நடந்து, வந்து போல இன்னும் எவ்வளவோ சொற்கள் இருக்கும் அல்லவா ? இன்னமும் புது புது சொற்களை உண்டாக்க வேண்டி இருக்கலாம் . அதற்கு ஏதாவது விதி இருக்கிறதா ? 

இருக்கிறது. 

அதற்க்கு வாய்பாடுகள் என்று  பெயர். ஆங்கிலத்தில் சொல்வது என்றால் template என்று சொல்லலாம். என்ன செய்ய, தமிழை ஆங்கிலம் மூலம் கற்க வேண்டி இருக்கிறது. 

ஒரு சொல் இந்த மாதிரி இருந்தால் அது வினையெச்சம் என்று கூறலாம். அந்த  "இந்த மாதிரி" என்று சொல்கிறோம் அல்லவா அதற்கு வாய்பாடு என்று பெயர். 

அதற்கு முன்னால் , வினை என்றாலே அதற்கு ஒரு காலம் இருக்க வேண்டும் அல்லவா ? வினை எப்போது செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் அல்லவா ?

எனவே, நமக்கு இரண்டு தேவைகள் இருக்கிறது.

ஒன்று , வினையெச்சம் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும். 

இரண்டாவது, வினையெச்சத்தில் காலத்தை எப்படி அறிந்து கொள்வது ?

இதை எல்லாம் சிந்தித்து விடை எழுதி வைத்திருக்கிறார்கள். 

வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் பன்னிரண்டு.  

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் 

என்பது நன்னூல் சூத்திரம். 

ரொம்ப சலிப்பாக இருக்கிறதோ ? என்னடா இராமாயணம் சொல்லச் சொன்னால் இவன் நன்னூல் சொல்லி சலிப்பூட்டுகிறானே என்று தோன்றுகிறதா ?


Sunday, October 8, 2017

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன் 


பொதுவாகவே அரக்கர்கள் கடுமையாக தவம் செய்வார்கள். இறைவன் நேரில் வந்து "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். உடனே, அந்த அரக்கர்கள் , "சாகா வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். "பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. வேறு ஏதாவது கேள்" என்று இறைவன் சொல்வான். அரக்கர்களும் எப்படியெல்லாம் சாவை வெல்ல முடியும் என்று சிந்தித்து வரம் கேட்பார்கள். இறைவனும் கொடுத்து விடுவான்.

என்ன வரம் கேட்டாலும், கடைசியில் அவர்களுக்கு மரணம் வந்தே தீருகிறது.

ஆனால், இதற்கு விதி விலக்காக , விராதன் இருக்கிறான்.

"நான் முகன் தந்த வரத்தினால் என் உயிர் என்னை விட்டு போகவே போகாது. இந்த  உலகங்கள் அனைத்தும் எதிர்த்து வந்தாலும், ஒரு ஆயுதம் கூட இல்லாமல் அவற்றை வெல்லுவேன். உங்களுக்கு (இராம இலக்குவனர்களுக்கு) உயிர் பிச்சை தருகிறேன். இந்த பெண்ணை (சீதையை) என்னிடம் விட்டு விட்டு ஓடி விடுங்கள் "

என்கிறான்.

பாடல்

‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
     யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
     தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
     என்று புகல


பொருள்

‘ஆதி நான்முகன் = உயிர்களுக்கு எல்லாம் மூலமான  பிரமன்

வரத்தின் = வரத்தினால்

எனது ஆவி அகலேன் = என் உயிர் என்னை விட்டு போகாது. என்னை கொல்ல முடியாது

ஏதி யாவதும் இன்றி = காரணம் எதுவும் இன்றி. இங்கு படை அல்லது துணை எதுவும் இன்றி என்று கொள்ளலாம்.

உலகு யாவும் = உலகங்கள் யாவும்

இகலின் = சண்டைக்கு வந்தால்

சாதியாதனவும் இல்லை = அவற்றை வென்று முடிக்காமல் இருக்க மாட்டேன்

உயிர் தந்தனென் = உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்

அடா! = அடேய்

போதிர் = போய் விடுங்கள்

மாது இவளை உந்தி = மாது இவளை விட்டு விட்டு

இனிது = சந்தோஷமாக

என்று புகல = என்று கூறினான்

உயிர் பிழைத்தோம் என்று சந்தோஷமாக ஓடி விடுங்கள் என்கிறான்.

உங்களுக்கு சகுனம், விதி இவற்றில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. தமிழில் எப்போதும் , எதையும் மங்களமாகவே சொல்ல வேண்டும் என்று ஒரு விதியே வைத்து இருக்கிறார்கள்.  அமங்கலமான சொற்களை விலக்க வேண்டும்  என்பது விதி.

ஏன் என்றால், வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்று நம்பினார்கள். நாம் என்ன சொல்கிறோமோ, அது நமது மனத்தில் பதிந்து அப்படியே நடக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

எனவே, எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும், மங்களமான சொற்களையே பேச வேண்டும் விதித்து வைத்திருந்தார்கள்.

இதை தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். 

(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)


இங்கே விராதன் சொல்வதை வேறு விதமாக பார்க்கலாம்.

"உயிர் போகாது என்று பிரமன் வரம் தந்திருக்கிறான். ஆனால், இப்போது இந்த பெண்ணை கடத்திக் கொண்டு போவதன் மூலம் என் உயிரை விடப் போகிறேன். நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிதாக வாழுங்கள் "

என்று அர்த்தம் சொல்லலாம்.



‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்"

பிரமன் வரத்தினால் , என்னை கொல்ல முடியாது

 உயிர்  தந்தனென் = என் உயிரை தரப் போகிறேன்


போதிர், மாது இவளை உந்தி, இனிது = இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிமையாக வாழுங்கள்

என்று புகல = என்று கூறினான்.

அவன் எதை நினைத்துச் சொன்னானோ தெரியாது. அவன், தெரியாமல் சொன்ன வார்த்தை கூட பலித்தது. உயிரை விட்டான்.


எனவே, மறந்தும், அமங்களமான சொற்களை பேசக் கூடாது. 

கோபம் வரும்போது, எரிச்சல் வரும்போது, வருத்தத்தில் அமங்களமான சொற்களை சொல்லாமல் இருப்பது நலம். 

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_8.html

Saturday, October 7, 2017

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி


விராதன் என்ற அரக்கன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவன் பின்னே, அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள்.

"டேய், அவளை எங்கே தூக்கிக் கொண்டு போகிறாய். நில் " என்று அவனை அதட்டிக் கொண்டு கையில் வில்லோடு அவனை துரத்துகிறார்கள்.

பாடல்

காளை மைந்தர் அது கண்டு,
    கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு
    தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர்,
    வஞ்சனை, “அடா!
மீள்தி; எங்கு அகல்தி? ‘‘ என்பது
    விளம்ப, அவனும்.

பொருள்


காளை மைந்தர் = காளை போன்ற வீரம் கொண்ட மைந்தர்களான இராமனும், இலக்குவனும்

அது கண்டு = சீதையை விராதன் தூக்கிச் செல்வதைக் கண்டு

கதம் வந்து கதுவத் = கோபம் வந்து பற்றிக் கொள்ள

தோளில் = தோளில்

வெம் சிலை = கொடுமையான வில்லை

இடம் கொடு = இடக் கையில் பிடித்துக் கொண்டு

தொடர்ந்து, = விராதனை தொடர்ந்து துரத்திக் கொண்டு போய்

சுடர் வாய் = சுடர் விட்டு பிரகாசிக்கும்

வாளி தங்கிய = அம்பை தங்கிய

வலங்கையவர் = வலக்கையில்

வஞ்சனை, = வஞ்சனையாக

“அடா! = அடேய்

மீள்தி; = திரும்பி வா

எங்கு அகல்தி?  - எங்கு அகன்று போகிறாய்

என்பது = என்று

விளம்ப, = கேட்க

அவனும் = அந்த விராதனும்

விதி.  வேறென்ன சொல்ல. சக்கரவர்த்தி திருமகனும், அவன் தம்பியும் காட்டில்  ஏதோ ஒரு அரக்கனை விரட்டிக் கொண்டு செல்ல வைத்தது. கட்டிய மனைவியை எவனோ ஒருவன் தூக்கிக் கொண்டு போகிறான் . அவன் பின்னால் விரட்டிக் கொண்டு செல்ல விதி.

நமக்கு துன்பம் வரும்போது இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இவர்கள் இப்படி அவனை விரட்டிக் கொண்டு போனபோது அவன் என்ன சொன்னான் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_7.html