Thursday, November 30, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி


108 திவ்ய தேசங்களை பற்றி பாடுவதற்கு முன்னால் , ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முந்தைய பிளாகில் அவர் இராமானுஜருக்கு வணக்கம் செய்ததை பார்த்தோம்.

அடுத்த பாடலில் கூரத்தாழ்வானுக்கு வணக்கம் சொல்கிறார்.


நாம் ஒரு புது இடத்துக்குப் போகிறோம். அங்கே முன்னே பின்னே போனதில்லை. போகும் இடத்துக்கு ஒரு வரைபடமும் (map ) இல்லை. பின் எப்படி போய்ச் சேர்வது.

தமிழில் ஒரு பழ மொழி உண்டு.

"வழி வாயில " என்று.

கேட்டு கேட்டு போக வேண்டியதுதான்.

யாரிடம் கேட்பது ? அந்த இடம் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

உள்ளூரிலேயே இந்தப் பாடு என்றால், வைகுந்தம் எப்படி போவது ? யாரிடம் கேட்பது ?

ஆச்சாரியர்களிடம் கேட்க வேண்டும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், "கூரத்தாழ்வான் அடியை கூடுவதற்கு காத்திருக்கிறேன் " என்று. அவன் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுந்தம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்

முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்
தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண்
கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ்வான சடம்போட்டு


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முக் காலமும் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்துக்கு
எக் காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
போர தாழ்வான சடம் போட்டு

பொருள்

முக் காலமும் = மூன்று காலமும்

இல்லா = இல்லாத

முகில் = மேகம் போன்ற

வண்ணன் = நிறம் கொண்ட

வைகுந்தத்துக்கு = வைகுண்டத்துக்கு

எக் காலம் = எந்த காலத்தில்

செல்வான் = செல்லுவது என்று

இருக்கின்றேன் = இருக்கிறேன்

தக்கார் = தகுதி உடையவர்கள்

எண் = எண்ணும்

கூரத்தாழ்வான் = கூரத்தாழ்வான்

அடியை = திருவடிகளை

கூடுதற்கு = சேர்வதற்கு

நாய் அடியேன் = நாய் போன்ற கீழ்மையான அடியேன்

போர = மிகவும்

தாழ்வான = கீழான

சடம் = இந்த உடலை

போட்டு = போட்டு விட்டு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

வைகுண்டம் ....வைகுண்டம் என்றால் என்ன ?

குண்டம் என்றால் குழி. யாக குண்டம் என்றால் யாகத்தில் வேள்வி செய்ய தோண்டப்பட்ட குழி.

சாலை ஒரே குண்டும் குழியும் இருக்கிறது என்று சொல்வதில்லையா.

உள்ளத்திலே பெரிய குழி எது ? நரகக் குழி.

"வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்"

என்பார் அபிராமி பட்டர்.


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

பாவம் செய்பவர்கள் சென்று அடையும் இடம் நரகக் குழி.

சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

வி என்றால் இல்லை என்று அர்த்தம்.

நாயகன் என்றால் தலைவன்.

தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

பாவம் செய்பவர்கள் செல்லும் இடம் குண்டம்.

பாவம் செய்யாதவர்கள் செல்லும் இடம் வி-குண்டம். வைகுண்டம். வி-குண்டம் என்பது வைகுண்டம் என்று ஆனது.

புண்ணியம் செய்தவர்கள், பாவம் இல்லாதவர்கள் இருக்கும் இடம் வைகுண்டம். 

வைகுண்டம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பாற்கடல்,

அரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற நடன மாந்தர்களின் நாட்டியம்,

பஜனை பாடல்கள்

என்று இதெல்லாம் இருக்குமா ?

பிள்ளை பெருமாள் ஐயங்கார் முக்கியமான ஒன்றை கூறுகிறார்.

அங்கே காலம் என்பது கிடையாது.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது கிடையாது.

"முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்" என்கிறார்.

காலம் இல்லை என்றால் வினை கிடையாது. நேற்று செய்ததன் பலன் இன்று வந்தது என்ற பேச்சு கிடையாது.

கால தத்துவத்தை தாண்டி நிற்கும் இடம் அது.

வயது ஆகாது.

பிறப்பு இறப்பு மூப்பு என்பபது கிடையாது.

காலத்தை வென்று இருப்பார் என்பார் அருணகிரிநாதர்.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

காலம் என்பது இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா ?

காலம் இல்லாத இடம் வைகுண்டம். சிந்தித்துப் பாருங்கள். காலம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று. 

ஆனால், இந்த பூமியில் காலம் என்ற சிறையில் நாம் அகப்பட்டு இருக்கிறோம். 

"எக் காலம் செல்வான் இருக்கின்றேன் "

இந்த காலச் சிறையை விட்டு எப்போது செல்வது என்று இருக்கின்றேன் என்கிறார்.

இந்த உலகை விட்டு விட்டு வைகுண்டம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.

வைகுண்டம் போக வேண்டும் என்றால் கூரத்தாழ்வான் திருவடியை பற்ற வேண்டும்.

அப்படி என்று யார் சொன்னது ?

"தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு "

தக்கார் என்றால் தகுதியானவர், பெரியவர், சிறந்தவர் என்று பொருள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

என்பது குறள்.

பெரியவர்கள் எல்லோரும் எண்ணும் கூரத்தாழ்வான்.

குரு வணக்கம் முடிந்தது. நூலுக்குள் போவோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_30.html

Wednesday, November 29, 2017

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர்

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர் 


108 திவ்ய தேசங்களை பற்றி பிள்ளை பெருமாள் ஐயங்கார் அந்தாதி முறையில் பாடி அருளி இருக்கிறார்.

இறைவனைப் பாடலாம், அவன் பெருமைகளை பாடலாம். அவன் அடியார்களைப்  பாடலாம்.  அவன் கோவில் கொண்ட இடங்களைப் பற்றி பாட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ? எல்லா இடமும் ஒன்றுதானே.

ஒரு ஊரு, ஒரு கோவில், பக்கத்தில் ஒரு திருக்குளம் ....இதில் பாடுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்போம் .

பிள்ளை பெருமாள் ஐயங்கார் உருகி உருகி பாடி இருக்கிறார்.

அவ்வளவு அழகான எளிமையான பாடல்கள்.

இவற்றை படித்து அறிவதால் நமக்கு என்ன பலன் என்று கேட்டால் எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ?

இவற்றில் ஏதோ ஒரு அழகு, ஒரு வசீகரம், ஒரு ஊடாடும் இலயம் இருக்கிறது.

ரோஜா இதழின் மேல் இருக்கும் ஒரு பனித்துளியைப் போல, விரல் பிடிக்கும் குழந்தையின் ஸ்பரிசம் போல,  தனிமையில் நடக்கும் போது எங்கோ ஒலிக்கும் அந்த இனிய பழைய பாடல் போல...இந்த அந்தாதி மனதை வருடத்தான் செய்கிறது.

படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.


அந்தாதியை தொடங்குமுன், ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

நான்கு ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

அதில் , உடையவர் என்று போற்றப் படும் இராமானுஜர் மேல் பாடிய பாடலைப் பார்ப்போம்.


தித்திக்கும் பாடல்




வீட்டில் , பையன் வேகமாக ஓடி வருவான். வந்த வேகத்தில் நிலை தடுக்கி கீழே விழுவான்.

அம்மா "ஏம்பா பாத்து வரக் கூடாதா ? போன வாரம் தான இந்த மாதிரி ஓடி வந்து தடுக்கி விழுந்த...சரி சரி கால உதறு ...இனிமேலாவது பாத்து வா " என்று அன்போடு கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா ?


அந்த அன்போடு பிள்ளை பெருமாள் ஐயங்கார் நம்மிடம்  கூறுகிறார்.

இதற்கு முன் எத்தனை பிறவிகள் எடுத்து , பிறந்து இறந்து , பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் ஞாபகம் இல்லையா ? இனிமேலும் பிறவிகள் வேண்டாம் என்றால், ஒரு எளிய வழி இருக்கிறது.

எதிராஜன் என்ற இராமானுஜன் நாமத்தைச் சொல் என்கிறார்.



பாடல்

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி


பொருள் 


முன்னே = முன்பு

பிறந்திறந்து = பிறந்து இறந்து

மூதுலகிற் = மூதுலகில் , மூத்த இந்த உலகில், பழமையான இந்த உலகில்

பட்டவெல்லாம் = பட்ட துன்பமெல்லாம்

என்னே = எத்தனை எத்தனையோ

மறந்தனையோ = அவை அனைத்தையும் மறந்து விட்டாயா

வென்னெஞ்சே!- = என் நெஞ்சே. என் மனமே

சொன்னேன் = சொன்னேன்

இனி = இனிமேல் , இன்றிலிருந்து

எதிரா சன்மங்கள் = பிறவிகள் இனி மேல் வராது

ளின்றுமுதற் = இன்று முதல்

 பூதூர் = திருப்பூதுர்

முனியெதிரா சன் =முனி எதிராசன்

பேர் மொழி = பேரைச் சொல்


அதெப்படி, எதிராஜன் பேரைச் சொன்னால் பிறவி வராமல் போய் விடுமா ? என்று கேட்கலாம். 


கடலிலே போய் கொண்டிருக்கிறீர்கள். போகின்ற கப்பல் பாறையில் மோதி உடைந்து போகிறது. உங்களுக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வீர்கள் ?

அங்கே மிதக்கும் கட்டையை பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா ? அந்த கட்டை மிதந்து மிதந்து சென்று கரை சேரும் என்றால் , அதோடு சேர்ந்து நீங்களும் கரை சேர முடியும் அல்லவா ? நீச்சல் தெரியாவிட்டாலும், கட்டையை பிடித்துக் கொண்டால், கரை சேர்ந்து விடலாம். 

பிறவி என்ற பெருங்கடலை நம்மால் நீந்தி கடக்க முடியாது. 

பெரியவர்களின் வழி காட்டுதலாகிய தெப்பமே நம்மை கரை சேர்க்கும். 

எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். அதுவே பிறவி பெருங்கடலை கடக்க வழி. 

அடடா, இது தெரியாமல் இத்தனை நாள் வீணே பொழுதை கழித்து விட்டேனே என்று  வருத்தப் படாதீர்கள். 

பிள்ளை பெருமாள் சொல்கிறார், "இன்று முதல் எதிராஜன் பெயரை மொழி".

இத்தனை நாள் எப்படியோ போய்விட்டுப் போகட்டும். இன்றிலிருந்து தொடங்கு  என்கிறார். 

இன்னைக்கு விட்டுட்டு நாளை முதல் தொடங்கலாமா என்றால். இல்லை. இன்றிலிருந்து  தொடங்கினால், "ஜன்மங்கள் இனி எதிரில் வராது"

பிறவி பெரிய பிணி. இதை மற்றவர்கள் சொல்ல வேண்டாம். "நீயே எத்தனை முறை பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறாய் ...பட்ட பின்பும் அறிவு வரவில்லையா " என்று தன் மனதிடம் கேட்பதைப் போல நம்மிடம் சொல்கிறார். 


"சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி"

இப்போது தானே சொல்கிறார் , சொன்னேன் என்று இறந்த காலத்தை குறிக்கும் சொல்லால் கூறுகிறாரே என்றால், "நான் இப்போது மட்டும் சொல்லவில்லை, முன்பும் பல முறை கூறி இருக்கிறேன். நீ தான் கேட்காமல்  பல  பிறவிகள் எடுத்து துன்பப் படுகிறாய். இப்போதாவது கேள் " என்று கூறுவதைப் போல "சொன்னேன்" என்றார்.

இதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் எதிராஜனின் பேரைச் சொல். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறியும் ஆவல் வரும், பின் அவர் என்ன சொன்னார் என்று அறியும் ஆவல் வரும், பின் அவற்றை கடைபிடித்தால் என்ன என்று தோன்றும், கடை பிடிப்பாய் , உன் பிறவிப் பிணி போகும் ...எனவே எதிராஜன் பெயரைச் சொல்லி ஆரம்பி.

மற்றதெல்லாம் தானே நடக்கும்.


நமக்கு மறதி அதிகம். நடந்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது.  உள்ளுணர்வு கூர்மையாக இருந்தால் ஞாபகம் இருக்கும்.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் "

என்பார் மணிவாசகர்.

சடையவனே , தளர்ந்தேன் ,எம்பெருமான் என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கெஞ்சுவார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும் எழுத ஆசை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_29.html


Thursday, November 9, 2017

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இது என்ன காலம் இல்லாத காலத்தில் திருப்பாவை ? இது என்ன மார்கழி மாதமா ?

இல்லையில்லை.

ஆண்டாள் பாசுரங்களில் பல இடங்களில் "பறை" என்ற சொல் வருகிறது.

மேலே உள்ள பாடலில்

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

என்று வருகிறது.

இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.

உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் "  என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர்  எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில்  இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

இது கொஞ்சம் நெருடலாகவே இருந்து வந்தது எனக்கு.

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல  பொருள் இருந்தால் ,  அவற்றில்  சில வழக்கத்தில் இருந்து  போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில்  புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.

இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று  வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்


என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள். 

நாராயணனே
நமக்கே

ஏன் ?

இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று  பெயர்.

நாராயணன்  நமக்கு  பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர  .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட  உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை. 

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க  தேவையில்லை என்பது புலனாகும்.


நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று  இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான்  என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான்  செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப்  பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.

பறை என்ற சொல் வரும் பாசுரத் தொகுப்பு கீழே உள்ளது.



 1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)


மற்றவற்றையும் எழுத ஆசைதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_9.html


Monday, November 6, 2017

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ


இராமன், இலக்குவன், மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிச் சென்று விடுகிறான். விராதனை தடுத்து இராமனும், இலக்குவனும் போர் புரிகிறார்கள். கடைசியில் இராமன் காலால் உதைக்க, விராதன் தோற்று கீழே விழுகிறான். விழுந்தவன், சாப விமோச்சனம் பெற்று மீண்டும் கந்தர்வனாகிறான்.


 வானுலகம் செல்வதன் முன் சிலச் சொல்லி விட்டு செல்லுகிறான்.

பாடல்

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
     நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
     உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
     அறிந்து, பகர்வான்.

பொருள்


பொறியின் ஒன்றி = பொறி என்றால் கருவி. பொறி வைத்து பிடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. நாம் அறிவை இந்த பொறிகளால் பெறுகிறோம். பொறி என்றால் புலன்கள். கண், காது , மூக்கு போன்ற புலன்கள். இந்த புலன்களில் அறிவு ஒன்றி.


அயல்சென்று = வெளியில் சென்று

திரி = திரிந்து

புந்தி உணரா = புத்தி உணராமல்


நெறியின் ஒன்றி = நல்ல வழியில் ஒன்று பட்டு

நிலை நின்ற = நிலை பெற்ற

நினைவு உண்டதனினும் = நினைவு இருந்தாலும்

பிறிவு இல் அன்பு = பிரிதல் இல்லாத அன்பு , பக்தி

நனி  = மிகுந்த

பண்டு  = பழைய

உடைய பெற்றிதனினும் = உடமையாக பெற்றிருந்ததாலும்

அறிவு வந்து உதவ = அறிவும் வந்து உதவ

நம்பனை = தலைவனான இராமனை

அறிந்து = அறிந்து

பகர்வான் = சொல்லுவான்

அவனுக்கு முன்பு செய்த அன்பினாலும் (பக்தியாலும்), பழைய ஒழுக்கத்தாலும்  (நெறியின் ஒன்றி நிலை நின்ற ) அவனுக்கு அறிவு உதவி செய்தததால்  இராமனை அவன் அறிந்தான் என்கிறான் கம்பன்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் ....

முதலாவது, மிக மிக மோசமானவன் என்று நாம் நினைப்பவனுக்கு பின்னால் மிக உயர்ந்த  குணமுள்ளவன் ஒருவன் இருக்கிறான். சாப விமோசனம் அடைவதற்கு முன்னால் பெரிய கொடூர அரக்கனாக இருந்தவன் பின்னால் உயர்ந்த தேவனாக மாறுகிறான்.  யாருக்குத் தெரியும் , யாருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று ? இது விராதனுக்கு மட்டும் அல்ல , எல்லா கொடியவனுக்கு பின்னாலும் ஏதோ நல்லவன் மறைந்து கிடக்கிறான்.


இரண்டாவது, கெட்டவர்கள், கொடியவர்கள் "இனி நமக்கு விதித்தது இதுதான் போலும் என்று எண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த கொடியவனுக்கும் ஒரு சாப விமோச்சனம் இருக்கும். அந்த நம்பிக்கை வேண்டும். சாப விமோசனத்தை தேடி செல்ல வேண்டுமே அல்லால், மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த பாவிக்கும் ஒரு கடைந்தேற்றுதல் உண்டு .

மூன்றாவது, கெட்டவர்களுக்கும் சில சமயம் நல்லவர்கள் சாவகாசம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதை பெற்றுக் கொண்டு , பாவங்களில் இருந்து விடு பட முயற்சி செய்ய வேண்டும் . அதை விட்டு விட்டு அந்த  நல்லவர்களுக்கும் தீமை செய்ய முயற்சி செய்யக் கூடாது.

நான்காவது, மிக முக்கியமானது, இராமன் திருவடி பட்டதால் அவனுக்கு அறிவு உதவி  செய்ய அவன் சாப விமோச்சனம் பெற்றான். அதற்கு முக்கிய காரணம்  முன்பு செய்த இடையறாத அன்பும், நல்ல ஒழுக்கமும். யாருக்குத் தெரியும் பின்னாளில் நாம் என்னவாக ஆவோம் என்று. இப்போதே நல்ல ஒழுக்கத்தை கடை பிடித்தால் , பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் இது கை கொடுக்கும்.

ஐந்தாவது, அரக்கன் என்பவன் யார் ? புலன்கள் பின்னால் அறிவை செலுத்துபவன்.

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,

அறிவின் பின்னால் புலன்கள் சென்றால் அவன் மனிதன், தேவன். புலன்கள் பின்னால் அறிவு சென்றால் அவன் அரக்கன். அவ்வளவுதான்.

பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, சாப்பிட்டு விடுவது.

அழகான பெண்ணைக் கண்டால், உடனே தவறாக நினைப்பது, தவறான  செயல்களில் ஈடுபடுவது.

இதெல்லாம் அரக்க குணம்.

நாம் அரக்க குணங்களில் இருந்து மாறுபட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறிய மாதிரி, முடியும் போதெல்லாம் நல்லது செய்து வைப்போம் . என்றேனும் உதவும்.

விராதன் வதைப் படலத்தில் இப்படி பல ஆழ்ந்த கருத்துகள் உள்ள பாடல்கள் உள்ளன.

நேரம் இருப்பின், மூலத்தை படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post.html

Tuesday, October 31, 2017

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி

இராமாயணம் - விராதன் வதை - என்னையே நுகர்தி 


இராமன், இலக்குவன் மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனைத் துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் சென்று அவனோடு போர் புரிகிறார்கள்.

விராதனால் இராம இலக்குவனர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகிறாள்.

என்னால் தானே இந்த சண்டை என்று வருந்துகிறாள். தவிக்கிறாள். சொல்லி அழக்  கூட ஆள் யாரும் இல்லை. துணை இல்லை.

"தாயைப் போல கருணை உள்ள இராமனையும் இலக்குவனையும் விட்டு விடு, என்னை அனுபவித்துக் கொள் என்று அவன் காலில் விழுந்து கெஞ்சுகிறாள்"

பாடல்

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
     உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
     விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
     அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
     எழுந்து விழுவாள்.

பொருள்


பின்னை = அப்புறம்

ஏதும் = வேறு எந்த

உதவும் = உதவி செய்யும்

துணை பெறாள் = துணை ஒன்றையும் பெறாதவள்

உரை பெறாள் = ஆறுதல் உரை சொல்லக் கூட யாரும் இல்லாதவள்

மின்னை ஏய் = மின்னல் போன்ற

இடை = இடுப்பு

நுடங்கிட = வாட

விரைந்து தொடர்வாள் = வேகமாக அரக்கன் பின்னால் சென்று

‘அன்னையே அனைய = தாயைப் போன்ற

அன்பின் = அன்பு கொண்ட

அறவோர்கள்தமை விட்டு = அறவழியில் நடக்கும் இராம இலக்குவர்களை விட்டு விட்டு

என்னையே நுகர்தி’  = என்னை நுகர்ந்து கொள் , அனுபவித்துக் கொள்

என்றனள் = என்றாள்

எழுந்து விழுவாள் = எழுந்து பின் விழுவாள்

கொடுமையில் பெரிய கொடுமை, தண்டனையில் பெரிய தண்டனை பேசக் கூட  ஆள் இல்லாமல், துன்பம் வந்த போது ஆறுதல் சொல்லக் கூட ஆள் இல்லாமல் தனித்துப்  போவதுதான். பெரிய தவறு செய்தவர்களை தனிமைச் சிறையில் ஏன் அடைக்கிறார்கள். யாருமில்லாத தனிமை பெரிய தண்டனை. துன்பம்.

சீதை அவ்வாறு ஆகிப் போனாள்.

நட்பும், உறவும் தேவை. நாம் நன்றாக இருக்கும் போது அதன் தேவை, முக்கியத்துவம் புரியாது. நாம் நன்றாக இருக்கும் போது நாம் நட்பையும், உறவையும் உதாசீனப் படுத்தி விடுகிறோம். நமக்குத் தேவையான போது அது  கிடைக்காது.

எனவே, நன்றாக இருக்கும் போது நட்புக்கும், உறவுக்கும் நேரம் செலவிட வேண்டும்.

அது மட்டும் அல்ல, நாம் சுகமாக இருக்கும் போது வேறு யாருக்காவது நமது உதவி தேவைப் படலாம். ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு நம்பிக்கையான வார்த்தை தேவைப் படலாம். ஓடிச் சென்று உதவ வேண்டும். நேரம் இல்லை, எனக்கே ஆயிரம் பிரச்சனை இதில் ஊர் பிரச்சனையை நான் எங்கு போய் தீர்ப்பது  என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. ஆயிரம் பிரச்சனையில், ஆயிரத்து ஓராவது பிரச்சனையாக மற்றவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், நமக்கு ஒரு தேவை வரும்போது யாராவது உதவுவார்கள்.

"நுகர்தி " என்ற சொல்லுக்கு அனுபவித்தல் என்பது நேரடியான பொருளாக இருக்கலாம். உரை எழுதிய பெரியவர்கள், "என்னை வேண்டுமானால் தின்று கொள் , அவர்களை விட்டு விடு " என்று கூறுவதாக உரை எழுதி இருக்கிறார்கள்.  உங்கள் மனதுக்குப் பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்.


"‘அன்பின்அறவோர்கள் " என்கிறாள் இராம இலக்குவனர்களை.

ஏன் ?

அன்பிற்கும் இடத்தில் அறம் தானே இருக்கும்.


அறம் என்றால் என்ன என்று யாராலும் அறுதியிட்டு கூற முடியாது.

"ஈரில்  அறம்" என்பான் கம்பன். அறத்திற்கு இதுதான் எல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

"அறம் என்று ஒன்று உண்டு, அது அமரர்கும் அறிய ஒண்ணாதது "  என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார் , கந்த புராணத்தில்

தேவர்களாலும் அறிய முடியாதென்றால் நாம் எம் மாத்திரம் ? பின் அறியாத ஒன்றை எப்படி கடை பிடிப்பது ?

ரொம்ப சுலபம். அன்பிருந்தால் அறம் தானே வரும்.

"என்பிலதனை வெயில் போல் காயுமே அன்பிலதனை அறம் " என்பார் வள்ளுவர்.

எலும்பு இல்லாத புழுவை வெயில் எப்படி காய்ந்து கொல்கிறதோ அது போல அன்பில்லாதவனை அறம்  அழிக்கும் என்கிறார்.

அன்பிருந்தால் அறம் வரும்.


"அன்னையே அனைய அன்பின்"


அது என்ன அன்னை போன்ற அன்பு ?

நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு.

ஒரு பெண்ணுக்கு அவளின் அழகு மிகப் பெரிய சொத்து.

பிள்ளை பெறுவது என்றால் அழகு அழியும்.  உடலின் கட்டுக் கோப்பு தளரும். தூக்கம் போகும். எடை கூடும். உடல் பெருக்கும். அழகு கட்டாயம் குறையும். தன் அழகை குறைத்த தன் பிள்ளையின் மேல் அந்த தாய் கோபம் கொள்ள மாட்டாள். என் ராசா, என் ராசாத்தி என்று தன பிள்ளையை கொஞ்சுவாள். கொஞ்சுவது மட்டும் அல்ல, தன் உதிரத்தை பாலாக்கித் தருவாள்.

அது போல, தனக்கு துன்பம் செய்தவர்களையும் பொறுத்து அவர்களுக்கு நல்லது  செய்யும் அன்புள்ளம் கொண்டவர்கள் இராமனும் இலக்குவனும் என்று கூறுகிறார்கள்.

போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் பாடல் தான். இருந்தும் அதிலும் ஆயிரம்  அர்த்தங்கள் கம்பனில்.

நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும்.

அத்தனையும் வாழ்க்கைக்கு நலம் செய்யும் பாடல்கள்.  பாடங்கள்.

Sunday, October 29, 2017

திருக்குறள் - நன்மையின் நீக்கும்

திருக்குறள் - நன்மையின் நீக்கும் 


நல்லது வேண்டாமென்று யார் தான் சொல்லுவார்கள். மேலும் மேலும் நல்லதே வேண்டும் என்றுதானே எல்லோரும் விரும்புவார்கள்.

அதற்காகத்தானே இத்தனை பாடு படுகிறார்கள்.

செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், அதிகாரம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும் என்று எத்தனையோ நன்மைகளை வேண்டி பாடு படுகிறார்கள்.

இருந்தும், எல்லோருக்கும் நல்லவை கிடைத்து விடுவதில்லை. எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு கடுமையாக உழைத்தும் நன்மை என்பது சிலருக்கு எட்டா கனியாகவே இருக்கிறது.

ஏன் ?

வள்ளுவர் சொல்கிறார், பயனற்ற பண்பில்லாத சொற்களை பேசுவதன் மூலம் ஒருவனை விட்டு நன்மைகள் நீங்கும் என்று.

பாடல்

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.


பொருள்

நயன் = நயமான, இனிமையான, அன்பான , அருளான

சாரா  = சார்பில்லாத

நன்மையின் = நன்மையில் இருந்து

நீக்கும்  = நீக்கிவிடும்

பயன்சாராப் = பயனொடு தொடர்பில்லாத

பண்பு இல் = பண்பில்லாத

சொல் =  சொற்களை

பல்லாரகத்து = பல்லார் + அகத்து = பலரிடத்தில்


விரிவாக பார்போம் .

"பயன் சாரா" என்றால் என்ன ?

நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் நம் பேச்சினால் அவருக்கு என்ன பயன்  விளையும் என்று யோசிக்க வேண்டும். பயன் என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார் பரிமேலழகர். இம்மை பயன் , மறுமை பயன் என்று. இந்த வாழ்கைக்காகவாவது அல்லது இறந்த பின் கிடைக்கும் முக்தி, வீடு பேறு  போன்றவற்றுக்காக பயன் தர வேண்டும்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது.

பேசக் கூடாது என்று சொல்வதன் மூலம், அது போன்ற சொற்களை கேட்கவும் கூடாது என்று புரிகிறது அல்லவா ?

"பண்பு இல் " என்றால் என்ன ?

பயன் தரும் சொற்களைக் கூட பண்போடு சொல்ல வேண்டும்.

பிள்ளைகளிடம் "நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது  செய்யலாம் . எனவே நல்லா படி" னு சொல்லலாம். "படிக்கலேனா பன்னி மேய்க்கத் தான் போற " என்றும் சொல்லலாம். இரண்டுமே நல்லா படி என்ற பயனுள்ள சொற்கள்தான். இருந்தும், இரண்டாவது கொஞ்சம் பண்பற்ற சொல்லாக இருக்கிறது அல்லவா  ? நல்லதே சொன்னாலும் , இனிமையாக , மற்றவர் மனம் புண் படாதபடி சொல்ல வேண்டும்.

"பல்லார் அகத்து" ...பலரிடம். இதே தொழிலாக அலைவது. யாரைப் பார்த்தாலும் லொட லொட என்று தேவையில்லாத சொற்களை பேசிக் கொண்டிருத்தல் .


"நீக்கும்" ...வேறு யாரும் வந்து கெடுதல் செய்ய வேண்டாம். இப்படி நயன் இல்லாத, பண்பில்லாத சொற்களை பேசிக் கொண்டிருந்தால், அதுவே நமக்குச் சேர  வேண்டிய நன்மைகளில் இருந்து நீக்கிவிடும்.

என் மனைவி/கணவன் என்னிடம் அன்பாக இல்லை, மேலதிகாரி எனக்கு பதவி உயர்வு  தரவில்லை, பிள்ளைகள் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்கள், மாமியார் / மருமகள் உறவு சரியாக இல்லை என்று வரும் பிரச்சனைகளுக்கு  மற்றவர் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அல்ல காரணம். நமது பயன் இல்லாத பண்பற்ற  சொற்கள்தான் காரணம். நமக்கு வர வேண்டிய நன்மைகளை அவை நம்மிடம் இருந்து  நீக்கி விடுகின்றன.

நீக்குதல் என்றால் முதலில் இருக்க வேண்டும். அதை நீக்க வேண்டும். நம்மிடம்  ஏற்கனவே உள்ள நன்மைகளை, செல்வங்களை, செல்வாக்கை பயனற்ற  பண்பில்லாத சொற்கள் நீக்கி விடும். நம்மை விட்டுப் போகச் செய்து விடும்.

உழைத்து சம்பாதித்த பணம், பேர், புகழ், உறவுகள் என்று அனைத்தையும் நீக்கி விடும்.


எதை நீக்கும் ?

நயன் சாரா நன்மையின் நீக்கும்

இனிமையான, அன்பான, அருள் நிறைந்த நன்மைகளை நீக்கிவிடும்.

பொருட் செல்வம் மட்டும் அல்ல. மற்ற அனைத்து நன்மைகளையும் நீக்கி விடும்.

"பல்லாரகத்து"  பலரிடம்.  இன்று whatsapp  , e mail போன்றவை வந்து விட்டன. ஒரே சமயத்தில்  பலரிடம் chat செய்ய முடியும். வள வள என்று தேவையில்லாத  chat களால் நமது நேரத்தை வீணடிப்பது மட்டும் அல்ல, மற்றவர்கள்  நேரத்தையும் நாம் வீணடிக்கிறோம். தேவை இல்லாத சொற்களால் பகை  வளரலாம். மனத்தாங்கல் வளரலாம்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

எல்லோரிடமும் தேவையற்ற பேச்சினால் நன்மை நீங்கி கெடுதலே விளையும்.

பேசும் முன், எழுதும் முன் யோசியுங்கள்.

இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்.

பயன் இருந்தாலும், அதை அன்பாக, இனிமையாக எப்படி சொல்வது என்று  சிந்தித்துச்  சொல்லுங்கள்.

அபப்டி ஒன்றும் இல்லை என்றால், மௌனம் சிறந்தது.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_29.html

Saturday, October 28, 2017

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம்

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம் 


நவீன மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். காய்ச்சல் உங்களுக்கு வந்தாலும் சரி, எனக்கு வந்தாலும் சரி, யாருக்கு வந்தாலும் ஒரே மருந்துதான். இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று வைத்திருக்கிறார்கள்.  நீங்களும் நானும் ஒன்றா ? என் உடல், என் உணவு, என் சூழ்நிலை, என் வேலை,  என்று எல்லாமே உங்களில் இருந்து மாறுபட்டது. எப்படி இரண்டு பேருக்கும் ஒரே மருந்து சரி வரும்.

இரண்டாவது, நவீன மருத்துவம் , நோய்களுக்குக் காரணம் நுண் கிருமிகள் (germs ) என்று நம்புகிறது. Germ Theory.  பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உண்டாக்குகின்றன என்பது நவீன மருத்துவத்தின் கோட்பாடு. அப்படி என்றால், அந்த கிருமிகள் தாக்கும் எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டுமே ? வருவது இல்லை. நோய்க்குக் காரணம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவத்தில் வழி இல்லை. அதாவது, நோய் எதிர்ப்பு இருந்தால் நோயே வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.  நவீன மருத்துவம் என்பது நோயை சரிப் படுத்துமே தவிர, நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாது.

மூன்றாவது, நோய் தடுப்பூசி என்று போடுகிறார்கள். அவை முதலில் நோயை உண்டுபண்ணும். அந்த நோயை நமது உடல் போராடி வென்றெடுக்கும். அப்படி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்குகிறார்கள். நோய் தடுப்பு என்பது , நோயை உண்டாக்குவது. இந்த தடுப்பூசிகளால் பல சிக்கல்கள் வருகின்றன  என்று மேல் நாடுகளில் சொல்கிறார்கள்.

நான்காவது, நவீன மருத்துவத்தில் , நோய்க்கு தரும் ஒவ்வொரு மருந்தும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Side effects என்று சொல்வார்கள். அதாவது , ஒரு நோயை குணப்படுத்த வேண்டும் என்றால், வேறு பல உபாதைகளுக்கு, நோய்களுக்கு உள்ளாக வேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.  தலை வலி போய் திருகு வலி வருவதுதான் மிச்சம்.

ஐந்தாவது, ஒரு நோய்க்கு ஒரு மருந்து உண்டு. ஒருவருக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் , அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தருவார்கள். இந்த மருந்துகள் உள்ளே சென்று அவை ஒன்றோடு ஒன்று கலந்து என்னென்ன செய்யும் என்று எளிதாக அறிய முடியாது. நோய் சரியாகவில்லை என்றால், மருந்தை மாத்தி கொடுப்பார்கள். அல்லது மருந்தின் அளவை கூட்டி  குறைத்து கொடுப்பார்கள். ஒரு ஊகம் தான்.

ஆறாவது , இன்று எல்லாமே இலாப நோக்கில் செல்வதால், தேவை இல்லாத சோதனைகள் (test ), தேவை இல்லாத அறுவை சிகிச்சை என்று நிகழ்கிறது. இவற்றினால் பணமும், உடல் நலக் குறைவும் உண்டாகிறது.


இப்படி , நவீன மருத்துவத்தில் பல குறைபாடுகள் உண்டு. நிறைகளும் உண்டு. இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

இருப்பினும், பல சமயங்களில் நாம் மருத்துவர்களை முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்காமல், நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு என்று சிந்திக்க வேண்டும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம்  என்று நம் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து நமக்கு நாமே சரியான கட்டுப்பாடுகள், வரைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் வந்தால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது.

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம் என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

துணையாவார் = துணை செய்பவர்

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும் நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்.