Saturday, January 13, 2018

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லும் இடத்து 

பொருள்

வலியார்முன் = தன்னை விட வலியார் முன்

தன்னை நினைக்க = தன்னை நினைத்துக் கொள்க

தான் = ஒருவன்

தன்னின் = தன்னை விட

மெலியார்மேல் = மெலியவர்களின் முன்

செல்லும் இடத்து = செல்லும் போது

எளிமையான குறள் .

தன்னை விட வலியவர்கள் முன் தான் எப்படி அஞ்சி ஒடுங்கி இருப்போம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும், எப்போது என்றால், தன்னை விட மெலியவர்கள் மேல் ஒருவன் செல்லும் போது .

சரி. அதனால் என்ன ? இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது ?

சில உதாரணங்கள் பார்ப்போம்.

புலால் உணவு உண்ணலாமா ? இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. உண்ணலாம் என்று ஒரு பக்கமும், தவறு என்று இன்னொரு பக்கமும் வாதம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு முடிவும் வந்தபாடில்லை.

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

ஒரு கடை வீதி வழியாக செல்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாமிச கடைகள் இருக்கின்றன.

அங்கே, சிறு பிள்ளைகளின் தலையை வெட்டி விற்பதற்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் சில கடைகளில் ஆண் மற்றும் பெண்ணின் உடலை , தலை இல்லாத உடலை தோலை உரித்து விட்டு, கம்பியில் தொங்க விட்டிருக்கிறார்கள். கீழே , கிலோ இன்ன விலை என்று எழுதி இருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். அந்த ஒரு நிலை எப்படி இருக்கும் ?

அப்படி நடக்காது. மனிதர்களை கொல்வதை சட்டம் அனுமதிக்காது.

ஒரு வேளை வேற்று கிரகத்தில் இருந்து சில ஜீவராசிகள் வந்து, அவை நம்மை விட பலமடங்கு புத்திசாலியாகவும், பல சாலியாகவும் இருந்து , இந்த பூமியை அவர்கள் அடிமை படுத்தி ஆளுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு மனித கறி பிடித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களை பிடித்து  , தோல் உரித்து , வெட்டி சமைத்து உண்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவர்களுக்குள் விவாதம் நடக்கலாம். மனித கறி தின்பது நல்லதா கெட்டதா என்று.

மனித கறியில் சில சத்துக்கள் இருக்கத்தானே வேண்டும். அவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது.

அவர்கள் மனிதரைகளை கொன்று தின்பது சரிதானா ?

அவர்கள் ஒரு நாள் நம்மை பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எந்த நேரமும் நம்மை வெட்டி சமைக்கலாம் என்ற நிலையில் நாம் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

எப்படி இருக்கும் ?

அப்படி ஒரு நிலை இல்லை. நம்மை விட வலியவர்கள் இல்லை என்பதால் நாம் நம்மை விட  வலிமை குறைந்த விலங்குகளை பாடாய் படுத்துகிறோம்.

அப்படி ஒரு வேற்று கிரக வாசிதான் இல்லையே . நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்வி வரலாம் ?

அதனால் தான் வள்ளுவர் சொல்லுகிறார்


"வலியார்முன் தன்னை நினைக்க" என்று.

நினைத்துப் பாருங்கள். அது நடக்க வேண்டும் என்று இல்லை. மனதில் நினைத்துப் பாருங்கள். கற்பனை செய்து பாருங்கள்.

இப்போது மீண்டும் , புலால் உண்ணலாமா என்று வாதம் பண்ணுவதன் முன்னம், ஒரு நிமிடம் நீங்கள் ஒரு கம்பியில் கட்டி தொங்க விட்டிருப்பதாக "நினைத்து" பாருங்கள். பின் விவாதம் பண்ணுங்கள்.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

காரில் சென்று கொண்டிருக்கிறோம். நிறுத்தத்தில் ஒரு பிச்சைக் காரன் பிச்சை கேட்கிறான். "வந்துருவானுக ...பிச்சை எடுக்கிறதுக்கு..." என்று எரிச்சலும், கோபமும் வருகிறது அல்லவா. அவன் நம்மை விட மெலிந்தவன். நாம் பிச்சை எடுக்க போக மாட்டோம். ஆனால், நமக்கும் ஒரு தேவை வரும். யார் வீட்டு வாசலிலாவது போய் நிற்க வேண்டி வரும். அவர்கள் நம்மை பார்த்து கோபமும் எரிச்சலும் பட்டு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால் நம் மனம் என்ன பாடு படும். எவ்வளவு வருந்துவோம்.

அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அலுவலகத்தில் கீழே உள்ளவன் ஒரு தவறு செய்தால், சொன்ன வேலையை நேரத்தில் முடிக்கவில்லை என்றால் அவன் மீது கோபம் வருகிறது. வாய்க்கு வந்தபடி திட்டுகிறோம். அவனை இழிவு படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். யோசிக்க வேண்டும். நம் மேலதிகாரி , நம்மை அப்படி செய்தால் நமக்கு எப்படி இருக்க வேண்டும்.

சில வீடுகளில், வேலைக்காரியை மனிதர்களாகவே மதிப்பதில்லை. நாம் அவ்வாறு நடத்தப்பட்டால் எப்படி நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.

சில வல்லரசுகள் , ஏனைய குட்டி நாடுகளை நசுக்குகின்றன. தன்னை விட பெரிய வல்லரசு வந்து தன்னை அப்படி நசுக்கினால் எப்படி இருக்கும் என்று "நினைத்துப்" பார்க வேண்டும்.

இப்படி நம்மை விட வலியவர்கள் மேல் நாம் எப்படி அஞ்சி ஒடுங்கி நிற்போம் என்று நினைத்துப் பார்த்தாலே, நம்மை விட மெலியவர்கள் மேல் அன்பும் அருளும் பிறக்கும்.

மெலியவர்கள் பிள்ளைகளாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், கீழே வேலை செய்யும் ஊழியராக இருக்கலாம், வாயில்லா பிராணிகளாக இருக்கலாம், நம்மிடம் கடன் வாங்கி விட்டு திருப்பித் தர முடியாத சிக்கலில் இருக்கும் ஒருவனாக இருக்கலாம் ... சின்ன நாடாக இருக்கலாம்...எதுவாக அல்லது யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

அவர்கள் மேல் அன்பும் அருளும் கொண்டு நடப்போம்.

குட்டி குறள் தானே. எளிமையான அர்த்தம் தானே...:)

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_13.html

Friday, January 12, 2018

கம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத

கம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத


ஒரு படைப்பு என்பது படைப்பாளியோடு முடிந்து போவது அல்ல. அதை இரசிக்கும் இரசிகனும் அந்த படைப்பில் ஈடு படுகிறான். அவன் அனுபவமும், அவனின் ஈடுபாடும் சேர்ந்துதான் ஒரு படைப்பை முழுமை செய்கிறது.

ஒரு கதையோ, காவியமோ, பாடலோ, படைப்பாளியோடு நின்றுவிட்டால், அதில் சுவாரசியம் இல்லை. அப்படி இருந்தால் அது ஒரு அறிவியல் கோட்பாடு, கணித சமன்பாடு போல ஆகி விடும். வாசிப்பவனின் மூளைக்கு வேலை இல்லை.  பித்தாகிரஸ் கோட்பாடு, நியூட்டனின் விதிகள் என்றால் அது தான். அதில் ஒன்றை கூட்டவோ குறைக்கவோ முடியாது.

இலக்கியம் என்பது அப்படி அல்ல.

படைப்பவனின் அறிவின் எல்லைக்கு தக்கவாறு அது விரிய வேண்டும். படிப்பவன் புது புது அர்த்தங்களை அதில் காண வேண்டும்.

படைப்பாளி ஒரு நோக்கில் தன் படைப்பை நகர்த்திக் கொண்டு சொல்லுவான். படைப்பின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. வாசகனின் அறிவுக்கும், அனுபவத்துக்கும் கொஞ்சம் இடம் தர வேண்டும். கவிஞன் சொல்லாமல் விட்டதை இரசிகன் இட்டு பூர்த்தி செய்யும் போது தானும் ஒரு படைப்பாளி என்ற இன்பத்தை இரசிகன் பெறுகிறான். எல்லாவற்றையும் ஒரு கவிஞனே செய்து விட்டால் , இரசிகனுக்கு வேலை இல்லை.

கம்ப இராமாயணத்தில் , காப்பிய போக்கில் , கம்பன் செல்லும் போது பல செய்திகளை  சொல்லாமல் விட்டு விடுகிறான். நாம் சிந்தித்து அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.

அது ஒரு சுவாரசியம்.

கணவன் மனைவிக்கு நடுவில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். நீ சரியா , நான் சரியா என்ற கேள்வி நித்தம் எழுந்து கொண்டுதான் இருக்கும். யாரவது ஒருவர் விட்டு கொடுத்துதான் போக வேண்டும். இரண்டு பேரும் நான் சொல்வதுதான் சரி என்று முரண்டிக் கொண்டிருந்தால் , இல்லறம் சிறக்காது. முறிந்து போகும்.

சரி. யார் விட்டு கொடுப்பது ? எப்போது விட்டு கொடுப்பது ? எப்படி விட்டு கொடுப்பது ?

கம்பன் விடை சொல்கிறான். நேரடியாக சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறான். நாம் தான் அதை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

கணவன்தான் விட்டு கொடுக்க வேண்டும் என்கிறான் கம்பன். மனைவிக்காக விட்டு கொடுக்காதவன் , அரக்கன் போன்றவன் என்பது கம்பனின் முடிவு. எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், படுக்கை அறையில் மனைவியிடம் தான் பெரிய ஆள் என்று நினைக்காமல், அவளின் அன்புக்கு அடிபணிய வேண்டும். அவளின் ஆளுமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான்.

அங்கேயும் முறுக்கிக் கொண்டு இருப்பவன் , அரக்க குணம் கொண்டவன் என்கிறான்.

ஆண் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அது அவனை பண்படுத்தி , அன்புள்ளவனாக, நல்லவனாக மாற்றும்.



இராவணன் பெரிய பலசாலி. படித்தவன். வேதம் அறிந்தவன். இசையில் சிறந்த ஞானம் உள்ளவன். வீரன். எல்லாம் தான். இருந்தும் அவன் மனம் ஏன் இன்னொருவன் மனைவி மேல் போனது ? அந்த செயல் தான் அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. இவ்வளவு தெரிந்த அவன் ஏன் அப்படிதவறு செய்தான் ?

மனைவியிடம் ஒரு போதும் பணிந்து போவதில்லை. அந்த முரட்டு குணம், அவனை முறித்துப் போட்டது.


பாடல்

புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?

மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண் வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ.


பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை உடுத்திய சிவனும்

பொன்னாடை புனைந்தானும் = பட்டு ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும்  = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இவனை நலிவு படுத்த முடியாது

தேவரின் இங்கு யாவர் = அவர்களாலேயே முடியாது என்றால் வேறு எந்த தேவர்களால்

இனி நாட்டல் ஆவார்? = இதை நடத்த முடியும்

மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = நாளும் பெரிதாகிக் கொண்டே இருக்கும் தனங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள் ,

சேயரிக் கண் = சிவந்த கண்கள்

வென்றி மாதர் = பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட கூடலிலும்

வணங்காத = தலை வணங்காத

மகுட நிரை  = மகுடங்கள் நிறைத்த

வயங்க  = ஒளி வீசும்

மன்னோ.= மன்னவன்

மனைவியிடம் தனிமையில் இருக்கும் போதும் தலை வணங்கா தன்மையன். அந்த ஆணவம், அந்த இறுமாப்பு, அந்த வளைந்து கொடுக்காத தன்மை அவனை வீழ்த்தியது.


வள்ளியிடம் தனித்து இருக்கிறான் முருகன். அவள் மேல் காதல் பிறக்கிறது. பாவம், எனக்காக இவள் எவ்வளவு துன்பப் படுகிறாள் என்று கருணை பிறக்கிறது. அவளுடைய பாதங்களை மெல்ல வருடினானாம் முருகன்.

பாகு கனி மொழி, மாது குற மகள் , பாதம் வருடிய மணவாளா 

என்பார் அருணகிரிநாதர்.

முருகன் பெரிய ஆளாக இருக்கலாம். மனைவியோடு இருக்கும் போது , அவளை  தூக்கிப் பிடிக்க வேண்டும்.

அது தாம்பத்ய இரகசியம்.

இது , கம்பன் சொல்லாமல் சொன்ன பாடம்.

இப்படி நிறைய இருக்கிறது.

மேலும் பார்ப்போமா ?

Friday, December 29, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2



பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.

இது முதல் பாகத்தின் தொடர்ச்சி. 

இந்த ஊருக்கு ஆதனூர் என்று ஏன் பெயர் வந்தது ?

ஆ + தன்  + ஊர் = ஆ என்றால் பசு. பசுவின் ஊர் என்பதால், ஆதனூர்.


காமதேனு என்ற பசு, இந்தத் தலத்தில் இருந்து தவமிருந்து பெருமாளிடம் சரண் அடைந்ததால் இந்தத் தலம் திரு ஆதனூர் என்று அழைக்கப் படுகிறது. 


இங்குள்ள கோவிலில் கர்ப்ப கிரகத்தில் இரண்டு தூண்கள் உள்ளன.

இதே போல் இரண்டு தூண்கள் உள்ள ஒரே ஒரு இன்னொரு தலம் திருவரங்கம். இந்தத் தூண்களை மனத் தூண் என்கிறார்கள். இந்த தூண்களை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டால், நரகம் போக மாட்டோம் என்பது ஐதீகம்.

வைகுண்டத்திலும் இப்படி இரண்டு தூண்கள் இருக்கின்றதாம்.

பாடல் 

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!

என்பது குலசேகர ஆழ்வார் வாக்கு 

மன தூண் , ஒரு சிறப்பு. 



 “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
 முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”

 பெரிய திருமடல் 126 - 129 (2674)

என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பு. 

இவை எல்லாம் விட எனக்குப் பிடித்த சிறப்பு என்றால் , கீழே வருவதுதான் .....

திருமங்கை ஆழ்வார் , திருவரங்கனுக்கு மதில் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது பொருள் பற்றாக் குறை ஏற்பட்டது. அவர், பெருமாளிடம் வேண்டினார். அப்போது பெருமாள் கனவில், "கொள்ளிட கரைக்கு வா , பணம் தருகிறேன் " என்றார். திருமங்கையும் அங்கே சென்றார். அங்கே ஒரு ஆள் கையில் ஒரு வியாபாரி கையில் ஒரு காலி மரக்காலும் (பெரிய படி) எழுத்தாணியும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். "நீ யார்" என்று மங்கை வினவ, "உமக்கு பொருள் தரும்படி அழகிய மணவாளன் என்னை அனுப்பினார் " என்று கூறி காலி மரக்காலை திருமங்கையிடம் கொடுத்தார். 

"இது என்ன காலி மரக்காயாக இருக்கிறதே ..இதனால் என்ன பிரயோஜனம் " என்று கேட்டார். 

அதற்கு அந்த வியாபாரி , "இதில் பெருமாளே சரண் என்று மூன்று முறை சொல்லி இதில் கை விட்டால் நீர் நினைத்த பொருள் வரும். ஆனால், யார் முறையாக வேலை செய்தார்களோ அவர்களுக்குத் தான் பொருள் வரும். வேலை செய்யாமல் சோம்பித் தெரிந்தவர்களுக்கு வெறும் மணல் தான் வரும்  " என்று சொல்லி அதை கொடுத்தார். 

பெற்றுக் கொண்ட திருமங்கை எல்லோருக்கும் அதில் இருந்து கூலி கொடுத்தார். 

சிலருக்கு பொருளும், சிலருக்கு மண்ணும் வருவதைக் கண்ட மக்கள், இந்த வியாபாரி ஏதோ மந்திரவாதி என்று நினைத்து அவரை அடிக்க அவரை துரத்தினார்கள்.

பெருமாள் வேகமா சென்றார். மக்களும் துரத்தினார்கள். திருமங்கை ஒரு குதிரையின் மேல் ஏறி துரத்தினார். ஓடி வந்த பெருமாள் திரு ஆதனூர் கோவிலில் மறைந்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. 

இது அல்ல நான் சொல்ல வந்த சிறப்பு. 

அவ்வாறு ஓடி வரும் போது , 

ஆதனூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து ஓலை எழுதியதால் அந்த ஊருக்கு ஓலைப்பாடி என்று பெயர் வந்தது, 

பெருமாள் கம்பீரமாக விஜயம் செய்த ஊருக்கு விஜயமங்கை என்றும், 

அவர் ஓடும் போது மற்றவர்கள் எவ்வளவு தூரத்தில் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாராம், அந்த ஊர் "திரும்பூர்" என்றும், 

எங்கேடா ஆள் யாரையும் காணோம் என்று மயங்கி நின்ற ஊர் , மாஞ்சு போய் நின்ற ஊர் "மாஞ்சேரி " என்றும், 

மரக்காலில் கை வைத்த ஊருக்கு "வைகாவூர்" என்றும் , 

புகுந்த ஊருக்கு "பூங்குடி" என்றும், 

கடைசியில் சென்று அமர்ந்த ஊருக்கு "ஆதனூர் என்றும் 

பெயர் வந்தது என்பது வரலாற்று குறிப்பு. 

இந்த ஊர்கள் இன்றும் இதே பெயரில் வழங்கப் படுகிறது. 

இத்தனை ஊர்கள். ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? இந்த சிறப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

யோசித்துப் பாருங்கள்.

பெருமாள் விரைவாக முன்னே செல்கிறார். அவர் பின்னே திருமங்கை குதிரையில் செல்கிறார். அவருக்குப் பின்னே மக்கள் அவரை தொடர்கிறார்கள்.

இறைவன் முடிவு செய்து விட்டான் திருமங்கைக்கு அருள் செய்வது என்று. அவன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது. திருமங்கைக்கு வியாபாரி போல  வந்தான்.

என்ன தத்துவம் , இறைவன் எந்த வடிவிலும் வருவான். எல்லா வடிவையும் இறையாக நினைத்து  போற்ற வேண்டும்.

வந்த இறைவன், கொஞ்சம் சோதனை செய்கிறான். ஓடுகிறான், எங்கே பக்தனுக்கு  ஆர்வம் இருக்கிறதா என்று காண. திருமங்கையும் விடாமல் துரத்துகிறார்.

அவர் பின்னால் மற்றவர்கள் செல்கிறார்கள். என்று அவர் இறைவனை அடைகிறாரோ, மற்றவர்களும் இறைவனை காண அவர் வழி செய்வார் என்று ஆச்சார்யா ஸம்ப்ரத்யாத்தை விளக்குகிறது.

சரி, இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

சுவாமி மலைக்கு பக்கத்தில், திரு புள்ள பூதக்குடிக்கு பக்கத்தில், நடந்தால் போய் விடும் தூரம் தான்.

கும்பகோணம் போய் விட்டால், புள்ள பூத கூடியும், திரு ஆதனூரும் தரிசனம் பண்ணலாம்.


மூலவர் கையில் மரக்காலோடு அளந்து கொடுக்கும் திருக்கோலம். பெயர் ஆண்டாளுக்கு ஐயன். இன்னொரு கையில் எழுத்தாணி.

சென்று வாருங்கள். பக்திக்காக இல்லாவிட்டாலும்,  ஒரு சரித்திர சம்பவம் நிகழ்ந்த இடம் என்றாவது  நினைத்துப்  போகலாம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_29.html


Thursday, December 28, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 1 


பக்திமானுக்கு என்ன இலக்கணம் ?

மூன்று வேளை குளிப்பது, இரண்டு வேளை பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது, வேத பாராயணம் செய்வது, நாள் கிழமை என்றால் விரதம் இருப்பது, பெரியவர்களை வணங்குவது...என்று நாம் ஒரு பட்டியல்  வைத்திருக்கிறோம். இவை எல்லாம் செய்தால் பக்த சிரோன்மணி என்று நமக்குள் ஒரு எண்ணம்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஒரு பட்டியல் தருகிறார்.  அது,

"துன்பம் நிறைந்த இந்த வாழ்க்கையில் இருக்க முயல மாட்டார்கள். பெண்கள் மேல் ஆசை கொண்டு அவர்கள் காம வலையில் விழ மாட்டார்கள். செல்வங்களுக்கு ஆசைப் பட மாட்டார்கள். நான், எனது என்று எண்ண மாட்டார்கள்..."

இப்படியெல்லாம் யார் இருப்பார்கள் ?

"குற்றமற்ற எந்தை அடியார் "

என்கிறார் அவர்.

பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.


செல்வத்தை சேர்க்க நாளும் பொழுதும் அலைகிறோம். சேர்த்த செல்வத்தில் வீடு , வாசல், நகை , நட்டு என்று வாங்கிப் போட்டு, அவை என் வீடு, என் நகை, என் சொத்து பெருமை படுகிறோம்.  இந்த உடம்பை அழகு செய்ய படாத பாடு படுகிறோம்.  இவற்றை எல்லாம் செய்து கொண்டு நாமும் இறைவன் அடியவர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம்.


ஒரு நாளாவது , செல்வம் வேண்டாம். போதும் என்று நினைக்கவாவது முடியுமா நம்மால். சேர்த்த செல்வம் நமது இல்லை என்று நினைக்க முடியுமா ?

நமக்கும் , உண்மையான அடியவர்களுக்கும் உள்ள தூரம் அதிகம் என்று அறிந்து கொண்டால் போதும்.

முழுவதும் முடியாவிட்டாலும், கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஆதனூர் எங்கே இருக்கிறது, இந்த ஊரின் சிறப்பு என்ன , ஆழ்வார்கள் யாராவது இந்த தலத்துக்கு மங்களாசானம் செய்திருக்கிறார்களா ? என்பனவற்றை அடுத்த பிளாகில் பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_28.html



Wednesday, December 27, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 2


பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

ஆணுக்குள்ள முரட்டுத் தனத்தை மென்மை படுத்தி , பண் படுத்தி எடுப்பதில்  பெண்ணின் பங்கு பெரியது. 

நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை தணிக்க இலக்குமி அவர் மடியில் அமர்ந்தாள். அவளை அணைத்தவுடன் , அவர் கோபம் தணிந்தது என்று பார்த்தோம். 

அது மட்டும் அல்ல. 

ஆணுக்குள் அடைந்து கிடக்கும் அன்பை, அருளை, கருணையை, ஒரு நெகிழ்வை  வெளி கொண்டுவரவும் பெண்ணின் அன்பு தேவைப் படுகிறது. 


உயிரைச் சுமந்து, உயிரை வளர்க்கும் பெண்ணில், அன்பும் கருணையும்  இயல்பாகவே அமைந்திருக்கிறது. 

அவளோடு சேரும் போது , ஆணுக்கும், அந்த குணங்கள் தானே வரும். 

திருமங்கை ஆழ்வார் , இறைவன் அன்பைத் தேடி தவித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருள் செய்ய வேண்டும் இலக்குமி , பெருமாளிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள் .  

இதை வைணவ சம்பிரதாயத்தில் புருஷார்த்தம் என்கிறாரகள்.  தந்தையின்  அருள் வேண்டும் என்றால், தாயின் மூலம் அதை எளிதாகப் பெறலாம்  என்பது அந்தத் தத்துவம். 

நம் வீட்டில் நடப்பது தானே. அப்பாவிடம் ஏதாவது என்றால் பிள்ளைகள்  அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொல்வது இல்லையா ? அது போலத் தான். 

திருமங்கை ஆழ்வாருக்கு அருள் செய்ய வேண்டும் என்று இலக்குமி சொன்னதும், சரி நீ போய்  திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்து இரு. நான் உன்னை அங்கே வந்து திருமணம் செய்து கொள்கிறேன். அந்த சமயத்தில் திருமங்கைக்கு அருள் செய்வோம் என்றார். 


அம்பாளை திருமணம் செய்து கொண்டு பெருமாள் வரும் வழியில், திருமங்கை மன்னன்  , அவர்கள் யார் என்று அறியாமல் , அவரக்ளை வழி மறித்து  பணம் பறிக்க முயன்றார். பெருமாள் அவரை தடுத்தாட்கொண்ட  அவருக்கு செவியில் மந்திர உபதேசம் செய்தார். 

உபதேசம் பெற்ற பின் திருமங்கை பாடிய பாடல் 

பிணியவிழு நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறுவண்டே
பணிகெழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
பணியறியேன் நீ சென்றென் பயலை நோயுரையாயே



இன்றும்  , திருமங்கை உபதேசம் பெற்ற நிகழ்வு ஒரு வைபவமாக கொண்டாடப் படுகிறது இந்த கோவிலில். 

திருமங்கை ஆழ்வார் , வழிப்பறி செய்து கொண்டிருந்தார். அவரை ஒரு சமயப் பெரியாராக, ஆழ்வாராக ஸ்ரீ வைஷ்ணவம் கொண்டாடுகிறது. 

நரசிம்ம மூர்த்தி, திருமகளை ஆலிங்கனம் செய்து அமைதி பெற்றதால் இந்தத் தலம் திருவாலி என்று பெயர் பெற்றது என்று பார்த்தோம். 


இங்கு பெருமாள் நரசிம்ம வடிவில் திருமகளோடு எழுந்து அருளி இருக்கிறார். 

இதையும் சேர்த்து , இந்த இடத்தை சுற்றி ஐந்து நரசிம்ம தலங்கள் உள்ளன.

அவை 

திருவாலி         - லட்சுமி நரசிம்மன் 
குறையலூர்    - உக்கிர நரசிம்மன் 
திருநகரி          - யோக நரசிம்மன் 
திருநகரி          - ஹிரண்ய நரசிம்மன் 
மங்கை மடம்      - வீர நரசிம்மன் 


இந்த கோவிலுக்கு எப்படி போவது ?

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. 3 km தொலைவுதான். 

திருவாலிக்குப் போனால், ஐந்து நரசிம்ம மூர்த்தியையும், பக்கத்தில் உள்ள திருநகரியும்  சேர்த்து தரிசித்துவிட்டு வரலாம். 

கோபமே வடிவான நரசிம்மம். கருணையே வடிவான திருமகள். அவளை அணைத்தபடி  அவன். 

கோபமோ, வெறுப்போ, ஆங்காரமோ வந்தால் என்ன செய்ய வேண்டும் , தெரியும் தானே ? மனைவியை கட்டிப் பிடியுங்கள். எல்லாம் போய் விடும். சாந்தம் வரும். 

கணவன் கோபமாக இருக்கிறானா, முசுடா, முரடா...கவலையை விடுங்கள். அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிப் பிடியுங்கள். ஆனானப் பட்ட நரசிம்ம மூர்த்தியே கோபம் தணிந்து குளிர்ந்தார். இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். 

சிலிர்க்கவில்லை ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_27.html


Tuesday, December 26, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி - பாகம் 1

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாலி  - பாகம் 1


ஆண்கள் பொதுவாகவே கொஞ்சம் முரட்டுத் தனம் உள்ளவர்கள். காடுகளில் சென்று வேட்டையாடி, எதிரிகளோடு சண்டை போட்டு, வெள்ளம் தீ என்று இவற்றோடு முட்டி மோதி அவர்கள் குணமே போர் குணமாகி விட்டது. வேட்டையாடுதல், போர் எல்லாம் குறைந்து விட்டாலும், இரத்தத்தில் ஊறிய அந்த சண்டைக் குணம், ஒரு வேகம், ஒரு முரட்டுத் தனம் உள்ளே உறங்கியே கிடக்கிறது. எப்போது அது விழிக்கும் என்று அவனுக்கே தெரியாது.

முரட்டு ஆண்களை மென்மை படுத்துவது பெண்கள்தான். ஒரு பெண் வாழ்வில் வந்து விட்டால் போதும் , ஆணின் மனம் மென்மை அடையத் தொடங்குகிறது. கல்லும் கனியாகும்.

இரணியனை கொல்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் , அவனை கொன்ற பின்னும் , கோபம் தணியாமல் இருந்தார். நரசிம்மத்தின் கோபத்தை யார் தணிக்க முடியும்.

தேவர்கள் இலக்குமியை வேண்டினார்கள். அவள் வந்து, நரசிம்மத்தின் வலது தொடையில் அமர்ந்தாள். இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார். அவர் கோபம் மறைந்து விட்டது. திருவை (இலக்குமியை) ஆலிங்கனம் பண்ணிக் கொண்டதால் , இந்த இடம் திரு+ஆலி  , திருவாலி என்று அழைக்கப் படுகிறது.


மூச்சை அடக்கி, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, பூஜை, புனஸ்காரம் என்று அலைந்து திரியாமல் கடைத்தேற வழி வேண்டுமா, திருவாலியில் கோவில் கொண்டுள்ள அந்த பெருமானை சென்று சேருங்கள். நான் அப்படித்தான் உய்ந்தேன் என்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

பாடல் 


கழன்றுபோம்வாயுவினைக்கட்டாமறீர்த்த
முழன்றுபோயாடாமலுய்ந்தே - னழன்று
பொருவாலிகாலன்பரகாலன்போற்றுந்
திருவாலிமாயனையேசேர்ந்து.

சீர் பிரித்த பின்

கழன்று போகும் வாயுவினை கட்டாமல் தீர்த்த 
உழன்று போய் ஆடாமலும் உய்ந்தேன் - அழன்று 
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் 
திருவாலி மாயனையே சேர்ந்து.

பொருள்


கழன்று போகும் = உடலை விட்டு கழண்டு போகும்

வாயுவினை = மூச்சு காற்றை

கட்டாமல் = மூச்சை அடக்கி தியானம் செய்யாமல்

தீர்த்த  = தீர்த்தங்களை

உழன்று போய் = கஷ்டப்பட்டுப் போய்

ஆடாமலும் = நீராடாமலும்

உய்ந்தேன்  = உய்வடைந்தேன்

அழன்று = கோபம் கொண்டு

பொரு = போர் செய்த

வாலி  = வாலிக்கு

காலன் = எமனை போன்றவன்

பரகாலன் = திருமங்கை ஆழவார்

போற்றும் = போற்றும், வணங்கும்

திருவாலி = திருவாலி என்ற திருத் தலத்தில் உள்ள

மாயனையே சேர்ந்து = மாயவனான விஷ்ணுவைச் தேர்ந்து

இந்தத் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டது.

அவை என்ன ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/1_26.html



Monday, December 25, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்பேர்நகர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருப்பேர்நகர்



நமக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வேலை. காலை எழும் போதே இன்று என்னென்ன பிரச்சனைகளை சமாளிக்க  வேண்டும் என்ற எண்ணத்தோடேயே எழுந்திருக்கிறோம். பிள்ளைகள், அலுவலகம், சமையல் , , பயணம், நெருக்கடி, என்று ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன போராட்டமாகவே கழிகிறது.

இதற்கு நடுவில் இறைவனை பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருக்கிறது.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்  சொல்கிறார்...காலையில் எழுந்தவுடன் இறைவனைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்கிறார். இன்னும் சொல்லப் போனால், எழுந்தவுடன் கூட அல்ல, எழும் போதே , இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே எழ வேண்டுமாம்.

தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை என்பார் வள்ளுவர்.

கணவனை எழுந்து தொழுவாள் என்று  சொல்லவில்லை. தொழுது எழுவாள். முதலில் தொழுவாள், பின் எழுவாள் என்று சொல்கிறார்.

அது போல "இறைவனை சிந்தித்து எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர் " என்கிறார்.

பாடல்

போமானையெய்துபொருமானைக்கொம்புபறித்
தாமானைமேய்த்துவந்தவம்மானைத் - தாமச்
செழுந்திருப்பேரானைச் சிறுகாலைச்சிந்தித்
தெழுந்திருப்பேற்குண்டோவிடர்.

சீர்பொ பிரித்த பின்

போமானை எய்து பெரும் ஆனை கொம்பு பறித்து 
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை - தாம 
செழு திரு பேரானை சிறுகாலை சிந்தித்து 
எழுந்திருப்போர்க்கு உண்டோ இடர் 

பொருள்


போமானை   = போ + மானை = போகின்ற மானை. மாரீசன் என்ற மானை
எய்து = அம்பால் எய்து
பெரும் ஆனை = குவாலய பீடம் என்ற பெரிய யானையை
கொம்பு = தந்தத்தை
பறித்து = உடைத்து
ஆம் ஆனை = பசு கூட்டங்களை
மேய்த்து = மேய்த்து
உவந்த = மகிழ்ச்சி கொண்ட

அம்மானை = அம்மானை

தாம = இடம், தலம்

செழு திரு பேரானை = செழுமையான திருப்பேர் என்ற தலத்தில் எழுதருளி இருக்கும் பெருமானை

சிறுகாலை = அதி காலை

சிந்தித்து = சிந்தித்து

எழுந்திருப்போர்க்கு = எழுந்திருப்போர்க்கு

உண்டோ இடர் = துன்பம் உண்டா ? (இல்லை)


சிறுகாலை ...அதிகாலை, ஐந்து நாழிகைக்கு முற்பட்ட நேரம். சாத்வீக குணம் மிகுந்து இருக்கும் நேரம் என்று சொல்கிறார்கள்.

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவிப்போம் என்கிறாள் ஆண்டாள்.


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


முதலில் அதி காலை எழ வேண்டும். 

இரண்டாவது, எழுந்திருக்கும் போதே இறைவனை சிந்தித்து எழ வேண்டும் .


இந்தக் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா ?

திருச்சிக்கு பக்கத்தில், லால்குடிக்கு அருகில் , 10 km தொலைவில் உள்ளது. டவுன் பஸ்ஸில்  போய் விடலாம். கோவில் வாசலில் பேருந்து நிற்கும். 

பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)

என்று நம்மாழவாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். 

ஒரு முறை உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் சாபத்தால் பலம் குன்றி இருந்தான். இலட்சம் பேருக்கு அன்ன தானம் அளித்தால் சாப விமோச்சனம் கிடைக்கும்  என்பதால், இந்தத் தலத்தில் வந்து தினமும் பலருக்கு அன்ன தானம் வழங்கி வந்தான். 

அப்படி இருக்கும் போது ஒரு நாள், பெருமாள் ஒரு கிழ அந்தணர் வடிவில் அன்ன தானம்  பெற வந்தார். ஒரே ஆள் அனைத்து அன்னத்தையும் உண்டு விட்டார்.  அதைக் கண்டு வியந்த மன்னன், "தங்களுக்கு மேலும் என்ன வேண்டும் " என்று கேட்டான். பெருமாள், ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டதாகவும் , ஒரு குடம் அப்பம் உண்ட பின், பசி அடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. 

இங்குள்ள பெருமாளின் பெயர் அப்ப குடத்தான்.

கையில் அப்ப குடத்துடன் காட்சி தருகிறார். 

திருச்சி பக்கம் போனால், சென்று வாருங்கள். லால்குடி, கல்லணைக்கு பக்கம்.  கோவிலடி என்று இந்த தலத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு.