Wednesday, April 4, 2018

திருக்குறள் - துன்பத்துள் இன்பம்

திருக்குறள் - துன்பத்துள் இன்பம் 


துன்பத்தையே இன்பமாக கருதி விட்டால், பகைவரும் போற்றும் சிறப்பு உண்டாகும் என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி துன்பத்தையே , இன்பமாக கருதுவது ? அப்புறம் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் என்ன வேறுபாடு. இந்த வள்ளுவர்  எதையாவது சொல்கிறார். இதெல்லாம் நடை முறைக்கு சரிப் படாது என்று வழக்கம் போல நினைப்போம்.

சிந்திப்போம்.

ஒரு மாணவன் படிக்கிறான். படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஊர் சுத்தலாம். நண்பர்களோடு விளையாடலாம். அரட்டை அடிக்கலாம். சினிமாவுக்குப் போகலாம். இப்படி எவ்வளவோ சந்தோஷமான காரியங்களை விட்டு விட்டு, படிப்பது என்பது கடினமான செயல் தான். முதுகு வலிக்கும். கழுத்து வலிக்கும். தூக்கம் போகும். உடல் சோர்ந்து போகும்.  துன்பம் தரக் கூடியதுதான்.

ஆனால்,

அந்த படிப்பையே, "ஆஹா, எவ்வளவு பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. இதை எல்லாம் அறிந்து கொண்டால் எவ்வளவு நல்லது, மார்க் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இது எவ்வளவு பயனுள்ளது, எப்படியாவது இதை படித்து இதில் சிறந்து விளங்க வேண்டும்" என்று ஆர்வத்தோடு படிப்பது இன்னொரு  வகை.

அந்த துன்பத்தில் உள்ள இன்பத்தை அறிந்து கொண்டால், சந்தோஷப் பட்டால், அவனுக்கு எவ்வளவு பெரிய சிறப்பு உண்டாகும் ?

கண்ணில் பட்டதை எல்லாம் சுவைத்துப் பார்ப்பது சுகம் தான். இனிமை தான். அதை விடுத்து,  நேரத்துக்கு சாப்பிடுவது, நல்லதை மட்டும் சாப்பிடுவது. தேவையான அளவு சாப்பிடுவது என்று வரை முறை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் அது துன்பம் தான். ஆனால், அப்படி வரை முறையோடு உண்ணும் போது  "இதனால் நான் எடை கூட மாட்டேன், மெலிந்து அழகாக இருப்பேன்.  ஆரோக்கியமாக இருப்பேன். சுறு சுறுப்பாக இருப்பேன். இப்படி சாப்பாட்டில் கட்டுப் பாடோடு இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா " என்று அதையே சந்தோஷமாக செய்யப் பழகி விட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அலுவலகத்தில் ரொம்பவும் எதிர் பார்த்த பதவி உயர்வு வரவில்லை. ஏமாற்றம் தான்.  வருத்தம் தான். துன்பம் தான். அதையே துன்பமாக நினைக்காமல் "சரி, இந்த முறை தப்பி விட்டது. அடுத்த முறை விட மாட்டேன். நான் இன்னனது சாதிக்கப் போகிறேன். அதற்கப்புறம் எப்படி எனக்கு பதவி உயர்வு தர மாட்டேன் என்று சொல்லுவார்கள் என்று  பார்ப்போம் " என்று முனைந்து பல செயல்களை ஆர்வத்தோடு செய்தால் பதவி உயர்வு தானே வந்துவிட்டுப் போகிறது.

துன்பம் வரும் போது, அதை எதிர் கொள்ளும் வினைகளை எவன் ஒருவன் ஆர்வத்தோடு செய்கிறானோ, அவன் பகைவர்களும் போற்றும் பெருமையை அடைவான்.

ஒவ்வொரு துன்பமும் , பெரிய செயல்களை செய்ய நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று நினைத்து சந்தோஷமாக , வந்த துன்பத்தை முறியடிக்கும் செயல்களை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், பெரும் புகழ் கிடைக்கும்.

பாடல்


இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு


பொருள்

இன்னாமை = துன்பம்

இன்பம் எனக்கொளின் = இன்பம் என்று கொண்டால்

ஆகும் = ஆகும்

தன் = தன்னுடைய

ஒன்னார் = பகைவர்

விழையும் = மிக விரும்பும் அல்லது பாராட்டும்

சிறப்பு = சிறப்பு

நமக்கு நெருங்கியவர்கள் நம்மை பாராட்டுவது பெரிய விஷயம் அல்ல. நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் கூட நம்மை பாராட்டுவார்கள் என்கிறார்  வள்ளுவர்.

உங்கள் துன்பம் என்ன இப்போது ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_4.html



Tuesday, April 3, 2018

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க 


வேலை கிடைத்து விட்டது, உடனே நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டி.

பிறந்த நாள் என்றால்  கொண்டாட்டம்.

பதவி உயர்வு என்றால்  பெரிய விருந்து.

என்று இன்பம் வந்தால் தலை கால் புரியாமல் கொண்டாடுவது. அதில் தப்பில்லை. நல்லது நடந்தால் மகிழ்ச்சி தானே.

அதே சமயம், retire ஆகி விட்டால், சோகம். வேலை போய் விட்டால் துக்கம்.

பதவி வந்த போது, ஏதோ தான் தான் பெரிதாக சாதித்து விட்டதாக இறுமாந்து இருந்தால், பதவி போகும் போது துக்கம் நெஞ்சை அடைக்கத்தான் செய்யும்.

சரி, அதற்காக வீட்டில் ஒரு நல்லது நடந்தால் அதை கொண்டாட வேண்டாமா என்றால், கொண்டாடுங்கள். அதில் நிதானம் வேண்டும்.

இன்பமும் துன்பமும் வாழ்வில் இயற்கையாக நிகழ்பவை. இன்பம் வந்த போது தையா தக்கா என்று குதித்தால் , துக்கம் தாள முடியாததாக இருக்கும்.

இன்று நல்ல விஷயம் நடந்திருக்கிறது.  நல்லது. சந்தோஷம் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.

அப்படி இருந்தால், துன்பம் வரும் போது, அது நமக்கு துன்பமாகத் தெரியாது.

பாடல்


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்


பொருள்

இன்பத்துள் = இன்பம் வந்த போது

இன்பம் விழையாதான் = இன்பம் அடையாதவன்

துன்பத்துள் = துன்பம் வந்த போது

துன்பம் உறுதல் இலன் = துன்பம் அடைய மாட்டான்

 விழைதல் என்றால் மிக விரும்புதல். அதீதமாக கொண்டாடுவது. பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது போல.

பதவி வரும். போகும்.

வேலை வரும். போகும்.

மதிப்பு வரும். போகும்.

இன்பத்துள் ரொம்பவும் தலை கால் புரியாமல் திளைத்து ஆடாமல் இருந்தால், துன்பம் வந்தாலும் அது பெரிதாகத் தெரியாது.

நம்மிடம் என்ன சிக்கல் என்றால், இன்பம் மட்டுமே வேண்டும். அது வந்த போதெல்லாம் கொண்டாட வேண்டும் . துன்பம் வரவே கூடாது என்று நினைக்கிறோம்.

அது யதார்த்தம் அல்ல. கற்பனை வாழ்க்கை.

இன்பத்தில் ரொம்பவும் ஆட்டம் போடாமல் இருந்தால், துன்பத்தில் ரொம்ப வருந்த  வேண்டி இருக்காது.

நிதானமாக இருக்கப் பழக வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post.html


Friday, March 30, 2018

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க



இன்பம் வரட்டாலும் போகட்டும், துன்பம் இல்லாமல் இருந்தால் சரி என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், துன்பம் இல்லாத ஆள் யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை.

துன்பம் எங்கிருந்து வருகிறது ? துன்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி எதிர் கொள்வது? என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

பாடல்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

பொருள்

இன்பம் விழையான் = இன்பத்தை விழையான்

இடும்பை = துன்பத்தை

இயல்பென்பான் = இயல்பானது என்பான்

துன்பம் உறுதல் இலன் = துன்பப் பட மாட்டான்


எல்லா துன்பத்துக்கும் காரணம் இன்பம் வேண்டும் என்று அலைவதுதான்.


அது சரி, இன்பம் வேண்டாமா? இன்பம் இல்லாத வாழ்கை ஒரு வாழ்கையா? பின் எதற்குத்தான் வாழ்வது? என்ற கேள்வி எழலாம்.

வள்ளுவர் சொற்களை தெரிந்து எடுத்து கையாள்கிறார்.


"இன்பம் விழையான்" என்றார். விழைதல் என்றால் மிக விரும்புதல் என்று பொருள்.

இன்பம் வேண்டும்தான். அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவுக்கு அதிகமாக இன்பம் வேண்டும்  என்று நினைப்பதால் துன்பம் வந்து சேர்கிறது.


நமது புராணங்களில் பார்த்தால் தெரியும்.

இந்த அரக்கர்கள் வரம் பெற்ற பின், அவர்களின் இன்பத் தேடல் அளவு கடந்து போகும்.  அகில உலகங்களையும் ஆள வேண்டும். சாகா வரம் வேண்டும், தேவர்கள்  தங்கள் காலடியில் விழ வேண்டும் என்றெல்லாம் விரும்புவார்கள். கடைசியில்  அடிபட்டு சாவார்கள்.

எந்த இன்பத்துக்கும் ஒரு அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி, வேறு எந்த இன்பமாக இருந்தாலும் சரி,  பேராசை படும் போது துன்பம் வந்து சேர்கிறது.

மேலும் மேலும் என்று அலையும் போது , துன்பம் வருகிறது.

மாம்பழம் நன்றாக இருக்கிறது என்று பத்து மாம்பழம் ஒன்றாகச் சாப்பிட்டால் ?

இன்பத்தின் மேல் அதிக நாட்டம்  துன்பத்துக்கு ஒரு காரணம்.

இன்னொன்று, துன்பத்தைக் கண்டு பயந்து ஓடுவது. என்னமோ துன்பமே வரக்கூடாது என்று நினைப்பது. வந்தால், அது உடனே ஓடி விட வேண்டும் என்று நினைப்பது.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.

தலை இருந்தால் தலைவலி வரும். மூக்கு என்று ஒன்று இருந்தால் அப்பப்ப சளி பிடிக்கும்.


உறவு என்று ஒன்று இருந்தால் உரசல் வரத்தான் செய்யும்.

இலாபம் வரும் போது , நட்டமும் வரும்.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.


துன்பம் வந்தால் அது ஏதோ வரக்கூடாதது வந்து விட்டது போல தையா தக்கா என்று குதிக்கக் கூடாது.

வராமல் இருந்து வந்தது. வந்த பின் போகும் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக, துன்பம் வந்தால் அப்படியே இருக்கச் சொல்லவில்லை. சரி, இதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொண்டு அதை நிவர்த்திக்க முயல  வேண்டுமே அல்லாமல், ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், கடவுளே உனக்கு கண் இல்லையா என்று புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால்

"துன்பம் உறுதல் இலன்" என்றார்.

உறுதல் என்றால் நிலைத்து நிற்றல், சேர்ந்து நிற்றல், உறுதியான என்று பொருள்.

அப்படி இருந்தால், துன்பம் வரும், ஆனால் வந்த துன்பம் நிலைத்து நிற்காது.

இப்போது இதன் மீதெல்லாம் உங்கள் ஆசை என்று பட்டியல் போடுங்கள். அதனால் வரும் துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.

தெளிவு  பிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/03/blog-post_30.html

Thursday, March 29, 2018

திருக்குறள் - உடம்பும் துன்பமும்

திருக்குறள் - உடம்பும் துன்பமும் 


எது இயற்கை ? இன்பமாக இருப்பதா ? துன்பப் படுவதா ? நம் உடலுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு விட்டால் உடனே நாம் பதறுகிறோம். என்னவோ உடலுக்கு துன்பமே வரக் கூடாது, இப்படி வந்து விட்டதே என்று.

அது நம் மன நிலை. அதை மாற்றி யோசிக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

இந்த உடம்பானது துன்பத்தின் இலக்கு.

துன்பம் என்பது இந்த உடம்பை குறி வைத்தே வரும். அது தான் இயற்கை. துன்பம் வரமால் இருந்தால் அதுதான் ஆச்சரியம்.

இயற்கையான ஒன்றுக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் பெரியவர்கள்.

காலையில் சூரியன் உதிக்கிறது. அதற்காக கவலைப் பட முடியுமா? மாலையில் மறைந்து விடும். ஐயோ, சூரியன் போய் விட்டதே என்று வருந்த முடியுமா ? அது இயற்கை. அது போல, உடம்புக்கு துன்பம் வருவது இயற்கை. அதையே பெரிதாக நினைத்துக் கொண்டு வேலை செய்யாமல் இருந்துவிடக் கூடாது.

சான்றோர், உடம்புக்கு வந்த துன்பத்தை இயற்கையான ஒன்று என்று நினைத்து அதனால் சோர்ந்து விட மாட்டார்கள்.


பாடல்

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

பொருள்

இலக்கம் = இலக்கு, குறி

உடம்புஇடும்பைக்கு = உடம்பானது துன்பத்துக்கு

என்று = என்று

கலக்கத்தைக் = கலக்கத்தை, சோர்வை,

கையாறாக் = கையில்

கொள்ளாதாம் = கொள்ள மாட்டார்கள்

மேல் = மேலோர், சான்றோர், பெரியோர்

உடம்புன்னா அப்படித்தான் இருக்கும். துன்பம் வரத்தான் செய்யும். அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.  வைத்தியம் பார்க்கலாம். மருந்து மாத்திரை சாப்பிடலாம். அது ஒரு பாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும். நாம் நம் வேலையை பார்ப்போம் என்று கிளம்பி விட வேண்டும்.


இன்னும் ஒரு படி மேலே போய் சிந்திப்போம்.

உடம்பு என்றால் கை கால் தலை மட்டும் அல்ல. உடம்பினுள் இருக்கும் மனமும் தான்.

உடல் துன்பப் படுவதைப் போல மனமும் சில சமயம் துன்பப் படும். துக்கம்  வரும். வருத்தம் வரும். மன அழுத்தம், மன சோர்வு, பட படப்பு என்று வரும்.

இவை எல்லாம் இயற்கையானவை என்று எண்ணி மேலே செல்ல வேண்டுமே அல்லாது சோர்ந்து அங்கேயே உட்கார்ந்து விடக் கூடாது.

ஆனால், இது சரி வரும் என்று தோன்றவில்லையே. உலகத்தில் எல்லோரும் உடலுக்கு ஒரு துன்பம் என்றால் அது இயற்கையானது என்று சும்மா இருப்பது இல்லையே. வள்ளுவர் சொல்லுவது சரிதானா என்று தோன்றும் நமக்கு.

வள்ளுவருக்கு அது தெரிந்திருக்கிறது.

எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

"கொள்ளாதாம் மேல்"

என்கிறார்.

மேலோர் அப்படித்தான் கொள்வார்கள். மற்றவர்கள் உடல் உபாதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்வார்கள்.

"கையறா " என்றால் செயலற்று என்று அர்த்தம். உடலுக்கு ஒரு துன்பம் வந்தால் அப்படியே செயலற்று இருந்து விடமாட்டார்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார் ?


துன்பம் வந்த போது , முடங்கிக் கிடந்தால், அந்தத் துன்பம் இன்னும் பெரிதாகுமே அன்றி குறையாது. நாள் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு இருக்கச் சொல்லும். வந்த துன்பத்துக்கு கண் காது மூக்கு வைத்து அதை பெரிதாக நினைக்கச் சொல்லும்.

நமக்கு யாரும் உதவி செய்யவில்லையே என்று எல்லோரையும் திட்டத் தோன்றும். ஒரு தன்னிரக்கம் வரும்.

எனவே, இவற்றையெல்லாம் மாற்றி , வந்த துன்பத்தைப் போக்க, அது இயற்கை தான் என்று எண்ணிக் கொண்டு எப்போதும் போல செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_29.html



Wednesday, March 28, 2018

திருக்குறள் - அற்றதும் பெற்றதும்

திருக்குறள் - அற்றதும் பெற்றதும் 


செல்வம் வந்த போது அதை நன்றாக பாதுகாக்கத் தெரியாதவர்கள் அதை இழந்த போது எதற்கு வருந்த வேண்டும் ?

பாடல்

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

பொருள்

அற்றேம்என்று  = இழந்தோம் என்று

அல்லற் படுபவோ = துன்பப் படுபவர்கள்

பெற்றேம்என்று  = அந்த செல்வத்தைப் பெற்ற போது

ஓம்புதல் = பாதுகாத்தல்

தேற்றா தவர் = செய்யாதவர்

.எல்லா உரைகளிலும் இவ்வளவுதான் இருக்கிறது. இதற்கு வள்ளுவர் மெனக்கெட்டு ஒரு குறள் எழுதுவாரா ?

ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அற்றேம் , பெற்றேம்  என்று சொல்லும் போது எதை என்று வள்ளுவர் சொல்லவில்லை.

செல்வத்தை என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள்.

நம்மிடம் ஆரோக்கியம் இருக்கும் போது அதைப் பற்றி நாம் கவலைப் படுவது  கிடையாது.  அதை இழந்து நோய் வாய்ப் படும் போது அப்படி செய்திருக்கலாமே, இப்படி செய்திருக்கலாமே என்று நொந்து என்ன பயன்.
மருத்துவர் எவ்வளவோ சொன்னார். கேக்காம கண்டதையும் உண்பது. அப்புறம், இரத்தத்தில் சர்க்கரை கூடிவிட்டது என்று அல்லல் படுவது. உடம்பு பருத்து விட்டதே என்று  வருந்துவது. நடந்தால் மூச்சு வாங்கும் . படி ஏறினால் மூச்சு வாங்கும். படுக்கப் போகும் போது பல் விளக்குவது கிடையாது. அப்புறம் பல் சொத்தை வந்து, பல்லை பிடுங்கச் சொன்னால் , வலிக்கிறதே என்று நோவது ஏன்.


நம்மிடம் நேரம் இருக்கும் போது அதை வெட்டித்தனமாக செலவழிப்பது. டிவி, Whatsapp , நண்பர்களோடு அரட்டை, ஊர் சுற்றுவது என்று நேரத்தை வீணடிப்பது. அப்புறம், வருந்துவது.  அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே என்று.

உறவும், நட்பும் நம்மிடம் இருக்கும் போது அவற்றை உதாசீனப் படுத்துவது. ஒவ்வொன்றாகப் போன பின், எனக்கென்று யாரும் இல்லையே என்று வருந்துவது.


நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை சரியான  படி  உபயோகப் படுத்துகிறோமா என்று அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சரியான படி உபயோகப் படுத்த வேண்டும்.

நல்லபடி உபயோகப் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, ஐயோ, சரியான படி உபயோகப் படுத்தவில்லையே என்று பின்னால்  புலம்பாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.

இருப்பதை நல்லபடி பயன்படுத்துங்கள்.  பின்னால் வரும் புலம்பலை அது தவிர்க்க உதவும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_28.html




Monday, March 26, 2018

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து 


துன்பம் இல்லாமல் இருந்தால் நல்லது.

ஆனால், அப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், ஏதோ நமக்கு மட்டும்தான் துன்பம்  வருகிறது.மற்றவர்கள் எல்லோரும் மிக மகழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அது தவறு. எல்லோருக்கும் ஏதோ ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் பார்க்கும் போது வேண்டுமானால் அவர்களுக்கு துன்பம் இல்லாமல் இருக்கலாம். முன்பு இருந்திருக்கலாம். இனி வரலாம். எனவே துன்பமே இல்லாத வாழ்க்கை என்பது இல்லவே இல்லை.

சரி, துன்பம் வருவதை தவிர்க்க முடியாது. வந்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

துவண்டு போகலாம். சலித்துக் கொள்ளலாம். அங்கலாய்க்கலாம். எல்லோரிடமும் சொல்லி கொஞ்சம் பரிதாபம் சேர்க்கலாம்.

இது எல்லாவற்றையும் விட இன்னொரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

துன்பத்திற்கே துன்பம் தரலாம்.

எப்படி ?

ஒரு பொதி மாடு இருக்கிறது. அதை வண்டியில் பூட்டி விடுகிறார்கள்.


வண்டியை இழுத்துக் கொண்டு போக வேண்டும். துன்பம் தான். பேசாமல் ஒரு இடத்தில் இருந்து வைக்கோலை தின்று கொண்டு, மரத்தடியில்  தூங்கிக் கொண்டிருந்தால் சுகம் தான்.

என்ன செய்வது ? வண்டியில் பூட்டி விட்டார்கள்.

ஐயோ, என்னை வண்டியில் பூட்டி விட்டார்களே, என்ன செய்வேன் என்று அந்த மாடு அழுது கொண்டு நிற்பதில்லை. அப்படியே நின்றாலும், யாரும் அதை விடப் போவது இல்லை. சாட்டையால் இரண்டு அடி கொடுத்து அதை நகர வைப்பார்கள்.

எனவே, அந்த மாடு , அந்த வண்டியை இழுத்துக் கொண்டு போகும்.

போகிற வழி எல்லாம், நல்ல இராஜ பாட்டை மாதிரி இருக்குமா ? சாலை சில இடங்களில்  வழ வழப்பாக இருக்கும். வண்டியை இழுப்பது எளிதாக இருக்கும். சில இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும். இழுக்க சிரமப் பட வேண்டும். சில சமயம் சேறும் சகதியுமாக இருக்கும். சக்கரம் சிக்கிக் கொள்ளும்.

ஐயோ, சாலை இப்படி இருக்கிறதே என்று மாடு நின்று விடுவதில்லை. இழுத்துக் கொண்டு போகும்.

அப்படி போகும் போது பார்த்தால் தெரியும், அந்த வண்டி நிலை குலையும். இந்தப் பக்கம்  சரியும். அந்தப் பக்கம் சரியும். கட்டு நெகிழும். சக்கரம் தேயும்.

கடைசியில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்.

சேர்ந்தபின், அதை வண்டியில் இருந்து கழட்டி விடுவார்கள்.

எப்படி எருது தன் மேல் பூட்டப்பட்ட வண்டியை எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு போய் , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கிறதோ, அது போல  துன்பம் வந்த காலத்து அதைக் கண்டு கலங்காமல் வினையாற்றுபவனை கண்டு துன்பமே துன்பப் பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


பொருள்

மடுத்தவாய் = தடை ஏற்படும் இடங்களில்

எல்லாம்  = எல்லாம்

பகடன்னான்  = எருது போன்றவன்

உற்ற = தனக்கு ஏற்பட்ட

இடுக்கண் = துன்பம்

இடர்ப்பாடு உடைத்து = துன்பம் உடையது

துன்பத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. நாம் பாட்டுக்கு நம் வேலையை, கடமையை செய்து கொண்டே போக வேண்டும். அப்படிச் செய்தால், துன்பம் தானே விலகும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_26.html

Saturday, March 24, 2018

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம்

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம் 


துன்பம் இல்லாத ஆள்  யார். பிரச்சனை இல்லாத வாழ்க்கை எது? எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை, ஒரு தடங்கல், ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பணப் பிரச்சனை, மனப் பிரச்சனை, ஆரோக்கியம், அலுவலகம், பிள்ளைகள், உறவு, நட்பு, என்று எங்கோ ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

சிலர் துன்பம் வந்தால் துவண்டு விடுவார்கள். சிலர், எனக்கு ஏன் மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள், சிலர் கொஞ்சம் போராடுவார்கள் அப்புறம் "இதற்கு மேல் நம்மால் முடியாது " என்று கையை உயர்த்தி விடுவார்கள்.

துன்பம் வந்தால் என்ன செய்வது ? எப்படித்தான் போராடுவது ?

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

பொருள்

இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை படுப்பர் = துன்பம் தருவார்கள்

இடும்பைக்கு = துன்பத்துக்கு

இடும்பை படாஅ தவர் = துன்பப் படாதவர்கள்

7 வார்த்தையில், 4 வார்த்தை இடும்பை.

இதற்கு என்ன அர்த்தம்.

துன்பம் வந்தபோது அதைக் கண்டு துன்பப் படாதவர்கள், அந்த துன்பத்துக்கே  துன்பம் தருவார்கள்.


புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கே. என்னதான் சொல்ல வருகிறார் வள்ளுவர் ?

துன்பம் என்று வந்து விட்டால், "ஆஹா, துன்பமே வந்து விட்டாயா...உனக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தேன். உன்னை என்ன செய்கிறேன் பார் " என்று  அந்த துன்பத்தை போட்டு துவட்டி எடுக்க வேண்டும்.

எப்படியெல்லாம் அந்த துன்பத்தை வருத்த முடியுமோ அப்படியெல்லாம் அதை வருத்த வேண்டும்.

சில உதாரணம் பார்ப்போம்.

பரீட்சை வருகிறது. அதை விட பெரிய துன்பம் என்ன இருக்க முடியும் மாணவர்களுக்கு ? அந்த துன்பத்தை எப்படி எதிர் கொள்வது ? "ஹேய் பரிட்சையே உன்னை என்ன செய்கிறேன் பார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பது. ஒரு அடி . Tuition க்கு போவது. இன்னொரு  அடி. முந்தைய வருட வினாத் தாள்களை எடுத்து அவற்றை செய்து பார்ப்பது. மற்றுமொரு அடி. நண்பர்களோடு படித்தவற்றை விவாதிப்பது" என்று பல விதங்களில் அந்த துன்பத்துக்கு அடி கொடுப்பது. அந்த துன்பம், "ஐயோ இவன் கிட்ட வந்து மாட்டிக் கொண்டோமே " என்று அடிபட்டு ஓடி விடும்.

வேலை கிடைக்கவில்லை. "வேலையின்மையே , என்னிடமா உன் வேலையை காட்டுகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று, வேலை தேடித் தரும் நிறுவனங்களில் (head hunting agency) எல்லாம் பதிவு செய்வது, தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் சொல்லி வைப்பது, செய்தித் தாள், வார, மாத பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களுக்கு பதில் போடுவது, online  portal களில் பதிவு செய்வது " என்று முடிந்த வழிகளில் எல்லாம் அந்த வேலையின்மை என்று  துன்பத்தை வாட்டி வதைக்க வேண்டும். அப்போது அது துன்பப் பட்டு விடும்.

ஆரோக்கிய குறைவு. கணவன் மனைவி உறவில் விரிசல். அலுவலகத்தில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எது என்றாலும் இது தான் வழி.

துன்பத்தை கண்டு ஓட க் கூடாது. துன்பமே வா, உனக்காச்சு எனக்காச்சு என்று அந்த துன்பத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

அந்த போராட்டமே ஒரு விளையாட்டாகப் போய் விடும்.

பணம் இல்லையா. எத்தனை வழிகளில் பணம் புரட்ட முடியும் என்று யோசிக்க வேண்டும். அத்தனை வழியிலும் முயற்சி செய்ய வேண்டும்.

அந்த முயற்சியில் , துன்பம் மறந்து போகும். முடிவில் துன்பம் , துன்பப் பட்டு ஓடி விடும்.

துன்பத்தைக் கண்டு , பயந்து, ஒடுங்கி நின்றால் அது நம்மை மேலும் பயமுறுத்தும். நாம் அதை விட பெரிய உருவம் எடுத்தால், அது நம்மை கண்டு பயந்து ஓடி விடும்.

உங்கள் துன்பங்களை , அடித்து விரட்டுங்கள். அவை வலியால் , உங்கள் பக்கமே தலை வைத்து படுக்கக் கூட அஞ்சி ஓடி விடும்.

என்ன சரிதானே ?

 
http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_24.html