Sunday, April 29, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன் 



நம் நண்பர்களிடம் நம்மைப் பற்றி கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள். "...அவரா...அவர் இன்னது படித்து இருக்கிறார்..இங்கே வேலை செய்கிறார்...கல்யாணம் ஆகி ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் இருக்கிறார்கள்.." என்று நம்மைப் பற்றிச் சொல்லுவார்கள். நம் குணத்தைப் பற்றி என்ன சொல்லுவார்கள்?

உங்கள் நண்பர்கள் , உங்களைப் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருப்பார்கள் ? உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், உங்கள் கணவன்/மனைவி, உங்கள் பிள்ளைகள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ? கேட்டுப் பாருங்கள் ஒரு நாள். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.

இராவணனை விட்டு விலகி வந்த வீடணன், அமைச்சர்களோடு இராமனை காண வருகிறான். அப்போது, அங்கிருந்த வானரங்கள் எல்லாம், வீடணனை "அடி ,பிடி, கொல் " என்று கோபத்தோடு வந்தனர். அந்த சமயம், அனுமன் அனுப்பிய இரண்டு தூதர்கள் வீடணனிடம் "நீ யார்" என்று கேட்டனர். அதற்கு, வீடணனின் அமைச்சர் பதில் தருகிறான்

"சூரிய குலத்தில் தோன்றிய உலகின் நாயகனான இராமனின் பாதங்களை சரண் அடைந்து, உய்யும் வழி தேடி வந்திருக்கிறான். தகைமை வாய்ந்த மனதை உடையவன், நீதி தர்மம் இவற்றின் வழி நிற்பவன், ப்ரம்மாவின் பேரனின் மகன் " என்றான்.

அவ்வளவு உயர்வாக சொல்கிறான் வீடணனைப் பற்றி.

பாடல்

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன்-
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.

பொருள்

Saturday, April 28, 2018

நாலடியார் - பொறுமை

நாலடியார் - பொறுமை 


நமக்கு யாராவது தீங்கு செய்தால், உடனே அவருக்கு ஏதாவது தீங்கு செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. தீங்கு என்றால் பெரிய துன்பம் தர வேண்டும் என்று அல்ல. நாம் சொன்னதை எதிர்த்துச் சொன்னால், நாம் சொல்வதை மதிக்காவிட்டால், நம்மைப் பற்றி சில சமயம் உண்மை சொன்னால் கூட நமக்கு கோபம் வருகிறது.

இப்போது இல்லாவிட்டாலும், வேறு எப்போதாவது அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

அப்படி இல்லாமல், நமக்கு தீமை செய்தவர்களை, நமக்கு துன்பம் தந்தவர்களை பொறுத்துப் போவது என்பது மிகப் பெரிய நல்ல குணம்.

பொறுமை இல்லாமல் பல காரியங்களை செய்து விட்டு பின்னால் வருந்துவதை விட, கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எவ்வளவோ சிக்கல்களை தவிர்க்கலாம்.

பொறுமை பற்றி நாலடியார் சில கருத்துக்களை கூறுகிறது.

நாம் பொறுமையை கடை பிடிக்க வேண்டும் என்றால், அந்த பொறுமையை நாசம் செய்பவர்களிடம் இருந்து முதலில் விலக வேண்டும்.

சில பேர் இருக்கிறார்கள், நாம் ஒன்று சொன்னால், வேண்டம் என்றே குதர்க்கமாக ஒரு பதில் சொல்வார்கள். நாம் அதற்கு ஒரு பதில் சொல்வோம்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நாம் ஏதாவது சொல்லி விடுவோம்.

முட்டாள்களை விட்டு விலகி இருப்பது நலம். அந்த முட்டாள்கள் நாம் சொல்வதை சிதைத்து சொல்வார்கள். திரித்து சொல்வார்கள். அவர்களிடம் இருந்து எப்படியாவது விலகி விட வேண்டும்.

பாடல்


கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.


பொருள்

கோதை யருவிக் = மாலை போல அருவி

(click here to continue reading)

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_71.html

குளிர் = குளிர்ந்து

வரை = மலை (யில் விழும்)

நன்னாட = நல்ல நாட்டை உடையவனே

பேதையோ டியாதும் = போதையோடு ஏதும்

உரையற்க = சொல்லாதே

பேதை = பேதை, அறிவிலி,முட்டாள்

உரைப்பிற் = ஏதாவது நல்லது சொன்னால்

சிதைந்துரைக்கும் = சிதைத்து உரைக்கும். மாற்றிச் சொல்லுவார்கள்.

வகையான் = வழி பார்த்து

வழுக்கிக் = மென்மையாக, (nice ஆகா)

கழிதலே நன்று = விட்டு  விலகி விடுவதே நல்லது .

முட்டாள்கள் எப்போதும் ஏதாவது வாதம்  செய்து கொண்டே  இருப்பார்கள். முன்னுக்கு பின்  முரணாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை விட்டு விலகுவது நலம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அடிக்கடி பொறுமை இழக்கச் செய்பவர்கள் யார்  யார் என்று. முடிந்தவரை அவர்களை விட்டு விலகி நில்லுங்கள்.




கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான் 



இலங்கையை விட்டு வீடணன் விலகி வந்து விட்டான்.

அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தான். அவர்களும் இராமனிடம் செல்வதுதான் முறை என்று சொன்னார்கள்.

"சரி, இரவில் செல்வது நன்றாக இருக்காது. விடிந்தபின் செல்வோம்" என்று கூறி, அவர்கள் எல்லோரும் ஒரு சோலையில் தங்கி இரவைக் கழித்தார்கள். இராமனும், மாலையில் கடற்கரை ஓரம் உலவி விட்டு இரவு வெகு நேரம் கழித்து பாசறை அடைகிறான்.

மறு நாள் பொழுது விடிகிறது.

இராமன் பாசறையில் மந்திரிகளோடு இருக்கிறான். அப்போது இராமனைக் காண வீடணன் வருகிறான்.


பாடல்

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான்-
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான்.


பொருள்

உறைவிடம் எய்தினான் = தங்கும் இடத்துக்குச் சென்றான் (இராமன்)

ஒருங்கு கேள்வியின் = ஒன்று பட்ட அறிவு சார்ந்த

துறை அறி = துறை என்றால் இடம், பகுதி, வழி என்று அர்த்தம். நூல்களின் வழி அறிந்த

துணைவரோடு = மந்திரிகளோடு

இருந்த சூழலில், = இருந்த சூழலில்

முறை படு தானையின் = முறையாக அங்கு இருந்த படையின்

மருங்கு முற்றினான்= அருகில் சென்றான்

அறை கழல் வீடணன் = சப்தம் எழுப்பும் கழல்களை அணிந்த வீடணன்

அயிர்ப்பு இல் சிந்தையான் = சந்தேகம் இல்லாத மனதை உடையவன்


முன்பே சொன்னேன். தீயவர்களுக்கு தீமையில் இருக்கும் உறுதி, நல்லவர்களுக்கு நல்லது செய்வதில் இருப்பதில்லை என்று.

வீடணன் வருகிறான். அவன் மனதில் எவ்வளவு  சந்தேகங்கள் இருக்கலாம்? ஒரு வேளை இராமன் ஏற்றுக் கொள்ளா விட்டால்? இராமன் தன்னை சந்தேகப் பட்டால் ? இராவணனும் இல்லை, இராமனும் இல்லை என்ற நிலை வந்து  விட்டால் என்ன செய்வது?

இராவணனை விட்டு விட்டு வந்து இருக்கக் கூடாதோ?

என்று இப்படி ஆயிரம் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், வீடணனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

"அயிர்ப்பு இல் சிந்தையான்"

என்கிறான் கம்பன்.  இராமன் மேல் அவ்வளவு நம்பிக்கை. தான் எடுத்த முடிவின் மேல் அவ்வளவு நம்பிக்கை.

எவ்வளவோ படிக்கிறோம். படித்துக் கொண்டே இருக்கிறோம். ஒன்றிலிருந்து மற்றொன்றாக  அது கிளைத்துக் கொண்டே போகிறது. எது சரி, எது தவறு, எதை பின் பற்றுவது, என்று குழம்பித் தவிக்கிறோம். இந்த குழப்பத்தில் இருந்து  விடுபடுவதற்குள் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

படிப்பில் இருந்து ஒரு தெளிவு வர வேண்டும். மேற்செல்லும் பாதை தெரிய வேண்டும். அந்த அறிவைக் கையில் கொண்டு கரை ஏற வேண்டும்.

இராமனிடம் இருந்த அமைச்சர்கள்

"ஒருங்கு கேள்வியின் துறை அறி துணைவரோடு"

துறை அறிந்தவர்கள். 

ஆறு ஓடிக் கொண்டே இருக்கிறது. அதில் இறங்கி, நம் உடலை சுத்தம் செய்து கொள்ள, அதில் இருந்து தண்ணீர் முகந்து கொள்ள, ஒரு சிறிய இடம் செய்து வைத்து இருப்பார்கள். அதில் படி இருக்கும், பிடித்துக் கொள்ள கம்பி இருக்கும். தண்ணீரின் வேகம் இருக்காது. 

அதற்கு படித்துறை என்று பெயர். 

நேரடியாக ஆற்றில் குதித்தால் அடித்துக் கொண்டு போய் விடும். படித்துறை சுகமான  இடம். ஆற்றின் சுகம் அனைத்தும் கிடைக்கும். ஆபத்து இல்லாமல். 

இறைவனை நோக்கி செல்லுகின்ற அந்த உண்மைத் தேடலில் அங்கங்கு உள்ள  படித்துறைகள் தான் வெவ்வேறு சமயங்கள். 

"சைவத் துறை விளங்க " என்பார் சேக்கிழார். 


வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.


திருஞான  சம்பந்தர் அழுததற்கு ஒரு பாடல்!


சைவம் ஒரு துறை.  வைணவம் ஒரு துறை. நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் இறங்கி நீர் மொண்டு கொள்ளலாம். நீராடலாம். ஆற்றின் நீர் என்னவோ ஒன்று தான்.  துறை முக்கியம் அல்ல. ஆற்றின் நீர் முக்கியம். 

இராமனிடம் இருந்த அறிஞர்கள் "துறை அறிந்தவர்கள்". 

துறை அறியாவிட்டால், ஆற்றின் நீர் அடித்துக் கொண்டு போய் விடும். 

புத்தகங்களை படிப்பதன் மூலம்,  துறை அறிந்து, அதில் இறங்கி, உண்மையை தரிசித்துக் கொள்ள வேண்டும்.  ஆயுள் பூராவும் படித்துக் கொண்டே இருப்பேன் என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை. 

இரண்டு பாடங்கள் இந்தப் பாடலில். 

Thursday, April 26, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன் 


உள்ளுணர்வு என்று சொல்லுவார்கள்.

அறிவுக்கு அப்பாற்பட்டது அது. தர்க்கத்திற்கு அடங்கியது அல்ல. ஒருவரைப் பார்தவுடன் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று மனம் முடிவு செய்து விடும். அவரைப் பற்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது அல்ல. பார்த்த ஒரு கணத்தில் மனதில் அந்த எண்ணம் பிறந்து விடும்.

முதல் பார்வையில் காதல் என்பார்கள் (Love at first sight).

இந்த உள்ளுணர்வோடுதான் நாம் எல்லோரும் பிறக்கிறோம். இருந்தும் நாளடைவில் நமது கல்வி முறை, நமது சுற்றுப் புறம் இவற்றின் தாக்கத்தால் இந்த உள்ளுணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறோம்.

எல்லாமே தர்க்கம் (logical reasoning ) பண்ணித்தான் அறிந்து கொள்கிறோம்.

இதயத்தில் இருந்து விலகி நாம் தலைக்குள் குடி போய் விட்டோம்.

இன்றும் கூட பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகமாக இருப்பதைக் காணலாம். கணவன் எங்காவது ஊர் சுற்றிவிட்டு வந்தால், வந்த ஒரு நொடியில் அவளுக்குத் தெரியும் இவன் எங்கோ ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறான் என்று. பிள்ளகைள் சொல்லும் பொய்களை ஒரு கணத்தில் தாய் கண்டு பிடித்துவிடுவாள்.

கணவன் முகத்திலோ பிள்ளைகள் முகத்திலோ கொஞ்சம் மாறுதல் இருந்தாலும்  போதும், அவர்கள் உடனே ஏதோ சரி இல்லை என்று கண்டு பிடித்து விடுவார்கள்.  அது பெண்மையின் குணம்.

வீடணன் சொல்கிறான்,

"இராமனை நான் முன்னப் பின்ன பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. அவன் மேல் இவ்வளவு அன்பு பிறக்கக் காரணம் என்ன என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. நெஞ்சம் உருகுகிறது. அவன் இந்த பொல்லாத பிறவியின் பகைவன் போலும் "

என்று


பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்


'முன்புறக் கண்டிலென் = முன்பு பார்த்தது இல்லை

கேள்வி முன்பு இலென் = கேள்விப் பட்டதும் இல்லை

அன்பு உறக் காரணம்  = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம்

அறியகிற்றிலேன் = அறிய  மாட்டேன்

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிர்கிறது

 நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அந்த இராமன்

புன் புறப் பிறவியின் = கீழான இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது

காதல் வயப்பட்ட யாரிடமாவது கேட்டுப் பாருங்கள் ..."உனக்கு ஏன் அந்தப்
பெண்ணை அல்லது ஆணை பிடித்து இருக்கிறது" என்று.

"ஏன்னா என்ன சொல்றது. பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்" என்பதுதான் பதிலாக இருக்கும்.

காரணம் எல்லாம் தெரியாது.

காதல், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.

நாளையே இறைவன் உங்கள் முன்னால் வந்து நின்றாலும் உங்களுக்கு நம்பிக்கை வராது. அவர் ஏதாவது magic செய்து கட்டினால் தான் நம்புவீர்கள். காரணம், உள்ளுணர்வு இறந்து விட்டது. எல்லாம் மூளையைப் பற்றி நடக்கிறது.

வீடணன் உருகுகிறான்.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் பாடியத்தைப் போல, "நெஞ்சம் உருகுகிறது" என்கிறான்.

இராமன் மேல் அன்பு பிறக்கிறது. அதற்கு காரணம் தெரியாமல் தவிக்கிறான். முன்னப் பின்ன தெரியாதவர்கள் மேல் இவ்வளவு காதலா ? அனுபவம் இருந்தால் எளிதாகப் புரியும்.

இந்தப் பிறவிச் சுழலை அழித்து ஒழிப்பவன் இந்த இராமன் என்கிறான்.

"புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்."

இந்த பிறவி என்ற பெரிய கடலை யார் நீந்திக் கரை சேர்வார்கள் என்றால், இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டவர்கள். மற்றவர்கள் கரை சேர மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் . நீந்தாதார் இறைவனடி சேராதார்

என்பது வள்ளுவம்.

வீடணன் , இராமனை சென்று அடைந்ததற்கு காரணம் அவனுக்கே தெரியாது. இராமனை அவன் பார்த்தது கூட கிடையாது. அவனைப் பற்றி வீடணனுக்கு ரொம்ப ஒண்ணும் தெரியாது.

ஏதோ ஒரு ஈர்ப்பு.  அவன் உள்ளுணர்வு சொல்கிறது. "அவனிடம் போ, அவன் இந்தப் பிறவிப் பிணியை மாற்றுவான் " என்று.

அவன் செய்தது சரியா தவறா என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளாமல், நாம் செய்ய வேண்டியது என்ன என்று யோசிக்கலாமே ?

உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம், இதயம் சொல்வதைக் கேளுங்கள். அது ஒரு போதும் தவறு செய்யாது என்பது என் முடிவு.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_26.html

Wednesday, April 25, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும் 


தான் சொல்லியதை இராவணன் கேட்கவில்லை என்பதால் வீடணன் இலங்கையை விட்டு வெளியேறினான். இராம இலக்குவர்களை அடைய வேண்டும் என்பது அவன் எண்ணம். அவனுடைய அமைச்சர்களிடம் கேட்டான். அவர்களும் வீடணன் நினைப்பதே சரி என்றார்கள்.

வீடணன் அந்த அமைச்சர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்

"நல்லது சொன்னீர்கள். இராமனை சென்று சேராமல் இருந்தால் நாமும் அரக்கர்கள் ஆவோம். எல்லை இல்லாத பெரும் கருணை கொண்ட இராமனின் திருவடிகளை நாடி இந்த பிறவிப் பிணியை போக்குவோம் " என்று.


பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்


'நல்லது சொல்லினீர் = (அமைச்சர்களே) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு ஏதாவது

அல்லது செய்துமேல் = நல்லது அல்லாததைச் செய்தால்

அரக்கர் ஆதுமால் = அரக்கர்கள் ஆவோம் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் தாள் இணை = இராமனின் திருவடிகளை

புல்லுதும்; = அடைவோம்

புல்லி, = அடைந்து

இப் பிறவி போக்குதும். = இந்த பிறவிப் பிணையில் இருந்து விடு படுவோம்


மாத்திரையின் மேல் சர்க்கரை தடவி இருப்பார்கள். சர்க்கரையை மட்டும் நக்கிப் பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறது என்று மாத்திரையை விட்டு விடக் கூடாது.

கதை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும்.

அது சர்க்கரை போல.

அடியில் உள்ள கருத்து மருந்து போல. பிறவிப் பிணிக்கு மருந்து சொல்கிறான் கம்பன்.  பிணிகளில் பெரிய பிணி இந்தப் பிறவிப் பிணி.


இராமனை சென்று சேராவிட்டால் நாமும் அரக்கர்கள் ஆவோம் என்கிறான்.  அரக்கர் என்பது பிறப்பினால் அல்ல. செய்யும் செயல்களால். இராமனே நேரில் வந்திருக்கிறான். அப்போதும் அவனை சரண் அடையாவிட்டால் அது அரக்க குணம் என்று சொல்கிறான்.

இறைவனை அடைய வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிரார்கள். எப்படி அடைவது. என்னதான் தலை கீழாக நின்றாலும், இறைவன் இருக்கும் இடத்துக்கே போய் விட்டாலும், இறைவனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தது எல்லாம் நாம் பார்த்த சிலைகள், வீட்டில் உள்ள சில படங்கள். யாரும் இறைவனை நேரில் கண்டு வந்து இந்த சிலைகளையோ படங்களையோ உருவாக்கவில்லை.

எனவே இறைவன் இருக்கும் இடமும் நமக்குத் தெரியாது. அவன் உருவமும் நமக்குத் தெரியாது.

எனவே தான், இறை அவதாரம் எடுத்து நம்மிடம் வருகிறது. நமக்கு இறைவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியுமே. எனவே அவனே நம்மிடம் வருகிறான்.

நம் வினை. நேரில் இறையே வந்தாலும், நாம் அடையாளம் காண முடியாமல் அலைகிறோம்.

இராமனை மானுடன் என்று நினைத்துக் கேட்டான் இராவணன்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கேட்டான் துரியோதனன்

முருகனை பாலன் என்று சொல்லிக் கேட்டான் சூர பத்மன்.

இறைவன் நேரில் வந்து உபதேசம் செய்தும் அவனை அறியமாட்டாமல் விட்டு விட்டார் மணிவாசகர். அந்த ஆதங்கத்தின் புலம்பல் தான் திருவாசகம்.

இராமன் நேரில் வந்த போது , அவன் இறைவன் என்று வீடணன் கண்டு கொண்டான். இராவணன் கண்டு கொள்ள வில்லை.

கண்டு கொண்ட வீடணனை வீபிஷண ஆழ்வார் என்று வைணவம் கொண்டாடுகிறது.

சீதையை தூக்கிச் சென்ற இராவணனின் தம்பி ஆழ்வார் !

காரணம், அவன் இறைவனை அறிந்தான்.

வீடணன் ஏன் இராமனிடம் சென்றான் ?

இலங்கை அரசு வேண்டியா ? புகழ் வேண்டியா ? உயிருக்கு பயந்தா ?

இல்லை, இந்த பிறவி சூழலில் இருந்து விடு பட.

"புல்லி இப் பிறவி போக்குதும்" என்றான்.

அரக்கப் பிறவி போய் ஆழ்வாராக அவதரித்தான்.

"எல்லையில் இல் பெருங் குணத்து "


இராமனுடைய நல்ல குணங்களுக்கு ஒரு எல்லை இல்லை. அது விரிந்து கொண்டே போகிறது என்கிறான்.

நல்லவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப் பிறவியைப் போக்க, அதுவே வழி. அது அல்லாத வழி எல்லாம் அரக்கர்கள் வழி.

வீடணன் செய்தது சரியா தவறா ?


http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_25.html

Tuesday, April 24, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென் 


தான் சொன்ன எதையும் இராவணன் கேட்கவில்லை என்றானபின், வீடணன் இல்லங்கையை விட்டு வெளியேறினான்.

அடுத்து என்ன செய்வது என்று அமைச்சர்களிடம் கேட்கிறான் வீடணன்.

இரண்டு விஷயங்களை கூறுகிறான் வீடணன்.

ஒன்று, அறத்தை தலையாகக் கொண்டவர்களிடம் நான் அன்பு கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது, புகழ் அல்லாத வாழ்வு எனக்கு வேண்டாம்

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள். என்று கேட்டான் வீடணன்.

மிக ஆழமான பொருள் கொண்ட பாடல். பார்ப்பதற்கு சாதாரண பாடல் போலத் தெரிந்தாலும், மிகுந்த அர்த்தம் உள்ள பாடல்.

பாடல்

அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்.

பொருள்


அறம்தலை = அறத்தை தலைமை பண்பாகக் கொண்டு

நின்றவர்க்கு = நின்றவர்களிடம் (இராம இலக்குவனர்களிடம்)

அன்பு பூண்டனென்; = அன்பு கொண்டேன்

மறந்தும் = மறந்தும் கூட

 நன் புகழ் அலால்  = நல்ல புகழ் அல்லாத

வாழ்வு வேண்டலென்; = வாழ்வை விரும்ப மாட்டேன்

"பிறந்த என் = என் உடன் பிறந்த இராவணன்

உறுதி நீ பிடிக்கலாய்" எனாத் = தான் கொண்டதைப் போல செய்யும் செயலில் நான் உறுதியாக இல்லை என்று சொன்ன பின்

துறந்தனென்; = அவனைத் துறந்து விட்டேன்

இனிச் செயல் சொல்லுவீர் ' = இனி செய்யும் செயல் என்ன சொல்லுங்கள்

என்றான்.  = என்றான்

தீயவர்களுக்கு தீமை மேல் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நல்லவை மேல் இருப்பது இல்லை.

கொஞ்சம் சிக்கல் வந்தாலும், நல்லவர்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒருவேளை நாம் செய்வது தவறோ என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடுகிறது.

ஆனால், தீயவர்களோ, தாங்கள் செய்யும் தீமையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

உலகில் மிகப் பெரிய சிக்கல் அது தான்.

இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்க ஒரு அதிகாரி முயற்சி செய்கிறார். அவரை மற்றவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். அவரை ஊர் ஊராக மாற்றல் செய்கிறார்கள். கொஞ்ச நாளில் அவருக்கு சந்தேகம் வந்து விடுகிறது...தான் செய்வது சரிதானா என்று. எதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்.  நாமும்  மற்றவர்கள் போல் இலஞ்சம் வாங்கினால் என்ன என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்.

இராவணன் சொல்கிறான் வீடணனைப் பார்த்து

"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்"

என் உடன் பிறந்த நீ, என்னைப் போல உறுதியாக இல்லை என்று. இராவணனுக்கு தான் செய்யும் தீமை மேல் அவ்வளவு உறுதி.

அந்த மாதிரி உறுதி தளரும் வாய்ப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும் ?

தீயவர்களின் சகவாசத்தை விட்டு விலகி விட வேண்டும். அவர்கள் கூடவே இருந்தால் , அவர்கள் நம் உறுதியை குலைத்து நம்மையும் அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள். எப்போதெலலாம் நமக்கு குழப்பம் வருகிறதோ, அப்போது உடனடியாகச் செய்ய வேண்டியது, தீயவர்களை விட்டு விலக வேண்டும்.

"துறந்தனென்"

என்றான்.

அது மட்டும் அல்ல, நல்லவர்கள் பக்கம் சேர வேண்டும்.

வீடணன் சொல்கிறான்

"அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;"

அறத்தை தலையாகக் கொண்டவர்கள் மேல் எனக்கு அன்பு பிறக்கிறது என்று.

அறத்தை யார் தலையாகக் கொள்வார்கள் ? நல்லவர்கள்.

நல்லவர்கள் பால் சேர வேண்டும்.


தீயவர்களை விட்டு விலகி, நல்லவர்கள் பால் ஏன் சேர வேண்டும் என்றால், அப்போதுதான்  "நன் புகழ் " கிடைக்கும். 

இராவணன் கூட இருந்து சண்டை போட்டு உயிர் விட்டாலும் புகழ் கிடைக்கும். அது தீமைக்கு துணை நின்ற புகழ். மாற்றான் மனைவியை கபடமாக  கவர்ந்து வந்த ஒருவனுக்கு துணை நின்றதால் வரும் புகழ் நல்ல புகழா ? 

நல்ல புகழ் இல்லாத வாழ்வை மறந்தும் விரும்ப மாட்டேன் என்கிறான். 

"மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்"

நல்ல புகழ் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்கிறான்.

உங்கள் வாழ்வில் சிக்கலோ, குழப்பமோ வந்தால் முதலில் ,

கெட்டவர்களை விட்டு விலகுங்கள் 
நல்லவர்கள் பால் சேருங்கள் 
எது நீண்ட நல்ல புகழைத் தருமோ அதைச் செய்யுங்கள் 

கெட்டவர்கள் என்றால் தீமை செய்பவர்கள் என்று அர்த்தம் அல்ல. நம் தன்னம்பிக்கையை குலைப்பவர்கள் , நம் மேல் சந்தேகம் கொள்பவர்கள், நம் மீது பொறாமை கொண்டவர்கள்  ...அப்படிப் போன்றவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். தீயவர்கள் தாங்கள் கொண்ட நோக்கத்தில் மிக உறுதியாக இருப்பார்கள். 

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பழமொழி. 

வீடணன் சரணாகதி அடைந்தது சரியா தவறா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 

அந்த சரணாகதியில் நமக்கு கம்பன் தரும் பாடம் என்ன என்று கண்டு, சரி என்றால் அதை கடை பிடிப்பதல்லவா நமக்கு நல்லது ?

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_24.html





Sunday, April 22, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இலங்கை நீங்குதல்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இலங்கை நீங்குதல் 


கம்ப இராமாயணத்தில் உள்ள நெருடலான பகுதிகளில் விபீஷண சரணாகதியும் ஒன்று.

வீடணன் செய்தது சரியா? சீதையை தூக்கி வந்த போதே, இராவணனை விட்டு விலகி இருந்தால் அவன் செய்த செய்கை நியாமானதாக இருக்கும். இராமன் படை எடுத்து வரும் வரை அமைதியாக இருந்து விட்டு, இராமன் வந்தவுடன், இராமன் பக்கம் போய் சேர்ந்தது சரியா ?

வீடணனைப் போலவே கும்பகர்ணனனுக்கும் , இராவணன் செய்ததில் உடன்பாடு இல்லை. அவனும் , இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்கவில்லை. அதற்காக கும்பகர்ணன் இராவணனை விட்டு விட்டுப் போய் விடவில்லை. இறுதி வரை அவனோடு இருந்து, அவனுக்காக போர் செய்து, உயிர் தியாகம் செய்தான்.

ஆனால், வீடணனோ, இராவணன் கூட இருந்து விட்டு, சண்டை என்று வந்த போது, எதிரியான  இராமன் பக்கம் சேர்ந்து விட்டான்.

இந்நாள் வரையிலும் அந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதை சரியா , தவறா என்ற கோணத்தில் ஆராயாமல், திறந்த மனத்துடன் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

காப்பியத்துக்குள் போவோம்.

வீடணன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராவணன் கேட்கவில்லை. "நான் எவ்வளவோ சொன்னேன். நீ உணரவில்லை.  என் பிழை பொறுப்பாய்" என்று இராவணனிடம் சொல்லி விட்டு வீடணன் இலங்கையை விட்டு அகன்றான்.

அங்கு ஆர்மபிக்கிறது இந்த சரணாகதிப் படலம்.

பாடல்



‘எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.

பொருள்

‘எத்துணை வகையினும் = எத்தனையோ வழிகளில்

உறுதி எய்தின = உனக்கு நல்லது செய்யக்கூடியவற்றை

ஒத்தன உணர்த்தினேன் = தேவையானவற்றைச் சொன்னேன்

உணர கிற்றிலை = நீ உணரவில்லை

அத்த! = தந்தை போன்றவனே

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே என்பார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

என் பிழை பொறுத்து அருளுவாய் = என் குற்றத்தை பொறுத்து அருள் செய்வாய்

எனா = என்று கூறி விட்டு

உத்தமன் = நல்லவனான வீடணன்

அந்நகர் ஒழியப் போயினான் = அந்த நகரமான இலங்கையை விட்டு விலகிப் போயினான் .

இது மேலோட்டமான பொருள். உட்பொருள் என்ன?

வீடணன் எவ்வளவோ விதங்களில் எடுத்துச் சொன்னான். இராவணன் கேட்கவில்லை.  தான் நினைத்துதான் சரி என்று அடம் பிடித்தான்.

வாழ்க்கை நமக்கு பல விதங்களில் நல்லதை நாளும் எடுத்துச் சொல்கிறது.  நாம் தான் கேட்பது இல்லை. நாம் நினைப்பதே சரி என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இருக்கிறோம்.  "நான் செய்வது, நினைப்பது எப்படி தவறாக இருக்க முடியும் "  என்று பலதடவை நினைக்கிறோம். மற்றவர்கள் சொல்வது சுத்தமாக தவறு என்று நினைக்கிறோம். அதுதான் அரக்க குணம்.

நல்லவர்கள் சொல்லிப் பார்ப்பார்கள். கேட்கவில்லை என்றால் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள்.

நல்லவர்களோடு நட்பு கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை ஏற்று நடக்க வேண்டும்.

பெரியாரைத் துணை கோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

பெரியவர்கள் சொல்வதை எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டு விட்டு, "இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற நாம் போன வழியிலேயே போய்க் கொண்டிருந்தால் இராவணனுக்கு நேர்ந்ததுதான் நமக்கும்  நேரும் என்பது முதல் பாடம்.

படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_22.html