Thursday, May 17, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன் 


முன்னுரையாக கீழே உள்ள பதிவைப் படித்து விடுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

நீங்கள் ஆண் என்றால், உங்களுக்குள் இருக்கும்  பெண்ணையும்,
நீங்கள் பெண் என்றால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும்

அடையாளம் கண்டு சேர்வதே உண்மையான இறை தரிசனம் ஆகும்.

மேல் சொன்னப் பாடலில் , ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக வருவதைக் கூறினார்.

இங்கே, சேவலும் , பெண் கோழியும் கூடி குளிர்ந்து வருவதைக் கண்டதாகவும், அதுவே இறை தரிசனம் என்றும் கூறுகிறார்


பாடல்

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!


உரை
 

போழ் இளங்கண்ணியினானைப் = இளமையான பிறைச் சந்திரனை தலையில் அணிந்தவனை

 பூந்துகிலாளொடும் = பூக்கள் போன்ற மென்மையான ஆடை அணிந்த உமா தேவியோடும்


 பாடி = பாடி

“வாழியம், போற்றி! என்று ஏத்தி, = வாழ்க, சிறக்க என்று உயர்த்திப் பாடி

வட்டம் இட்டு ஆடா வருவேன் = சுற்றி சுற்றி ஆடி வருவேன்


ஆழிவலவன் = திருமால்

நின்று = நின்று

ஏத்தும் = போற்றும்

ஐயாறு அடைகின்றபோது, = திருவையாறு அடைகின்ற போது

கோழி =  சேவல்

பெடையொடும் = பெண் கோழியோடு

கூடிக்  = கூடி

குளிர்ந்து = உள்ளமும் உடலும் குளிர்ந்து

 வருவன கண்டேன் = வருவதைப் பார்த்தேன்

கண்டேன் = கண்டேன்

அவர் திருப்பாதம் = அந்தக் காட்சியில் நான் இறைவனின் பாதங்களைக் கண்டேன்

கண்டு = கண்ட போது

அறியாதன கண்டேன்! = இதுவரை காணாத காட்சியினை கண்டேன்

கூடிய பின் , குளிர்தல்.

அந்தக் குளிர்ச்சியில் இறைவனை காணலாம்.

நாவுக்கரசர் சொல்கிறார்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_17.html

Wednesday, May 16, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்


ஒவ்வொரு குழந்தையும் தாய் மற்றும் தந்தையின் கலப்பில் உருவாவதுதான். அப்படி பிறக்கும் குழந்தைகள் தாய் மற்றும் தந்தையின் குணங்களை கொண்டுதான் பிறக்கின்றன.

அதாவது, அது ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி அதனிடம் ஆண் மற்றும் பெண் குணம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

ஆண்  குழந்தை என்றால் அதனிடம் ஆண் குணம் மட்டுமே இருக்கும் என்றில்லை. பெண் குழந்தைக்கும் அதே விதிதான்.

வளரும் போது என்ன ஆகிறது என்றால், இந்த சமுதாயம் ஆண் குழந்தையிடம் சில குணங்களையும், பெண் குழந்தையிடம் வேறு சில குணங்களையும் வளர விடாமல் தடுக்கிறது.

ஆண் பிள்ளை என்றால் அழக் கூடாது. பொம்மை வைத்து விளையாடக் கூடாது. வீட்டுக்குளேயே இருக்கக் கூடாது என்றும்

பெண் குழந்தை என்றால் அழலாம், மென்மையாக இருக்க  வேண்டும், அதிராமல் நடக்க வேண்டும், விளக்கு வைத்தால் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்றும் சில விதிகளை வரையறுக்கிறது.

எனவே ஆண் சில குணங்களை வலுக் கட்டாயமாக அழுத்தி வைக்கிறான் . (Suppress). பெண்ணும் அப்படித்தான்.

இப்படி சில குணங்கள் அழுத்தி மழுங்கடிக்கப் பட்டதால் ஒவ்வொருவரும் குறை மனிதர்களாவே இருக்கிறோம்.

இந்தக் குறையை நிரப்ப ஒரு ஆண் , வேறொரு பெண்ணையும், ஒரு பெண் வேறொரு ஆணையும் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லது. பெரும்பாலான சமயம் கிடைப்பதில்லை. குறை நீடிக்கிறது.

ஒவ்வொரு ஆணுக்குளும் ஒரு பெண் உறங்கிக் கிடக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உறங்கிக் கிடக்கிறான்.

நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்குள் இருக்கும் பெண்ணை இனம் கண்டு ஒன்றாக இணைவதுதான் உச்ச கட்ட இன்பம் (orgasm). உங்களுக்குள் இருக்கும் பெண்ணை வெளியில் தேடாதீர்கள். உள்ளே தேடுங்கள்.

பெண்ணுக்கும் அப்படியே.

உண்மையான திருமணம் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆணுடனோ பெண்ணுடனோ நடப்பதுதான்.

அப்படி சக்தியும் சிவனும் ஒன்று சேரும் போது, அதி உயர் இன்பம் பிறக்கும். அதுவே இறை தரிசனம். நீங்கள் முழு மனிதராய் மாறுவது அப்போதுதான்.

மனிதன் இறைவனாய் மாறுவதும் அப்போதுதான்.

சரி, இதற்கும் தேவாரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

திரு நாவுக்கரசர் சொல்கிறார்


"காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்"

 காதல் கொண்ட பெண் யானையும், ஆண் யானையும் ஒன்றாக வருவதைக் கண்டேன். அதைக் கண்டவுடன் இறைவனின் திருவடியை கண்டேன். இது வரை கண்டு அறியாத ஒன்றைக் கண்டு கொண்டேன்  என்று.

ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவது என்னே பெரிய விஷயமா. யானைகள் ஒன்றாக வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

ஆணும் பெண்ணும் இணைவது, ஒரு சக்தியாக மாறுவது இறைக் காட்சி என்கிறார்.

சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி வகுக்கும்.  சிற்றின்பத்தை அறியாமல், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை அறியாமல், அதைக் கடக்காமல் பேரின்பத்தை அடையவே முடியாது.

என்பது வயதில் நாவுக்கரசர் சொல்கிறார். அனுபவ அறிவு.

பாடல்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

Wednesday, May 9, 2018

பட்டினத்தார் பாடல் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல் -  காதற்ற ஊசியும் வாராது காண் 


வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை. அவ்வளவு எளிய பாடல்.

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.

அறிவின் உச்சம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம் ?

"ஹா...இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா " என்று தோளை குலுக்கி விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

இருக்கிற செல்வத்தை எல்லாம் ஊருக்கு கொடுத்துவிட்டு வீதியில் நம்மால் நடக்க முடியுமா ? நடக்கிற காரியமா ?

பட்டினத்தார் நடந்தார்.

படித்தால், அது பாதிக்க வேண்டும். நம் வாழ்க்கை மாற வேண்டும்.  இல்லை என்றால்  படித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பயனும் இருக்காது.

வேதம், உபநிஷதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், என்று ஒன்றும் படிக்கவில்லை.

ஒரே ஒரு வரி.

கிளம்பி விட்டார்.

அறிவுள்ளவுனுக்கு ஒரு வரி போதும்.

அறிவில்லாதவன் எத்தனை ஆயிரம் வரிகள் படித்தாலும்,  இன்னும் என்ன இருக்கிறது  என்று அலைவானே தவிர, படித்தது எதையும் வாழ்வில் நடை முறை படுத்த மாட்டான்.

கழுதை தின்ற கீதை புத்தகம் மாதிரி.  கழுதையின் வயிற்றுக்குள் போனது கீதை. சிலரின் மண்டைக்குள் போகிறது. பாதிப்பு ஒன்றும் இல்லை.

எதற்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு வரி போதாதா ?

ஒண்ணும் கூட வராது என்றால், அதை ஏன் நாம் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று  கிளம்பி விட்டார்.

அவருக்கு மனைவி இருந்தாள் . அழகான பிள்ளை இருந்தான். அரசனுக்கு கடன் தரும் அளவு செல்வம் இருந்தது.

அத்தனையையும் அந்த ஒரு ஒரு வரி மாற்றிப் போட்டு விட்டது.

நாம் இந்தப் பாடலைப் படித்தால், "ஆஹா என்ன அழகான பாடல் " என்று இரசிப்போம் .

ஆனால், பட்டினத்தாரோ, என்னோடு வராத செல்வத்தை நான் ஏன் வாழ் நாள் எல்லாம்  தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன  செய்ய ? கொண்டு போக முடியாது. அனுபவிக்கவும் முடியாது. பின் எதற்கு என்று நினைத்தார்.

வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு வரி போதும், ஞானம் பெற.

எது உங்கள் வரி ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_9.html

Thursday, May 3, 2018

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?


வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. குளிர்ந்த காற்று அடிக்கிறது. மண் வாசம் எங்கிருந்தோ வருகிறது. மழை வரும் என்று நாம் யூகிக்கிறோம்.

தூரத்தில் , மலை மேல் புகை எழுகிறது. ஏதோ தீ பிடித்திருக்கிறது என்று நம்மால் அறிந்து  கொள்ள முடிகிறது. நேரில் பார்க்கவில்லை, இருந்தும் தீ இருக்கும் என்று அறிவு சொல்கிறது.

ஒருவன் கொலை செய்து விட்டான் என்று நீதி மன்றத்தில் அவனை நிறுத்தி இருக்கிறார்கள். கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ஆனால், கொலை செய்யப் பட்டவனுக்கும், இவனுக்கும் முன் விரோதம் இருந்து இருக்கிறது, இவன் கத்தி வாங்கி இருக்கிறான், கொலை செய்யப் பட்டவனின் வீட்டுக்குள் இவன் போனதை பார்த்த சாட்சி இருக்கிறது. பின் அவள் வெளியே வந்ததைப் பார்த்த சாட்சி இருக்கிறது. கொலை செய்யப் பட்டவனின் உடம்பில் உள்ள கத்தியில் இவன் கை  ரேகை இருக்கிறது. இவன் தான் கொலையாளி என்று நினைக்க இவ்வளவு ஆதாரங்கள் போதும். இருந்தும், கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.

அது  போல, கடவுளை நேரில் பார்த்த சாட்சி இல்லை. யாரும் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. படம், வீடியோ எதுவும் இல்லை. அவரும் நேரில் வந்து நம்மிடம் சொல்ல வில்லை.

இருந்தும்,

"எவ்வளவோ குறிகள் இருக்கின்றன, அடையாளங்கள் இருக்கின்றன, கோவில்கள் இருக்கின்றன,  வேதாகம நெறிகள் இருக்கின்றன, அவற்றில் சொல்லப் பட்ட நேர்மையான கருத்துக்கள் இருக்கின்றன, இவ்வளவு ஆயிரம் இருந்தும், சொன்னாலும், அறிவில்லாமல் , இவை அனைத்தும் உங்கள் மனதில் ஏறாமல் இருப்பது எவ்வாறு"

என்று திருநாவுக்கரசர் கேட்கிறார்.

பாடல்


குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.



பொருள்


குறிகளும் = சமயக் குறிகளும்

அடையாளமும் = அடையாளங்களும்

கோயிலும் = கோயிலும்

நெறிகளும் = வழி முறைகளும்

அவர் = இறைவன்

நின்றதோர் நேர்மையும் = இருப்பதற்கான நேர்மையான சாட்சியங்களும்

அறிய = அறிந்து கொள்ள

ஆயிரம் = ஆயிரக் கணக்கில்

ஆரணம் ஓதிலும் = வேதாகமங்கள் சொன்னாலும்

பொறியீ லீர் = பொறி என்றால் கருவி. இங்கே அறிவைக் குறிக்கும்.

மனம் = உங்கள் மனதில்

என் = ஏன்

கொல் = அசைச் சொல்

புகாததே = ஏன் அவை ஏறவில்லை , புகவில்லை

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை என்று கேட்கிறார்.

இத்தனையும் பொய்யாகவா இருக்கும் ?

சிந்திக்க வேண்டிய கேள்வி.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_3.html

Tuesday, May 1, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம் 


நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். சாதிக்க முடியும். இருந்தும் ஒன்றும் செய்யாமல் , ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏன்?

செய்யும் ஆர்வம் இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. உடலில் வலு இருக்கிறது. நன்றாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. இருந்தும், ஒன்றும் செய்வதில்லை.

படித்தோம், வேலைக்குப் போனோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவற்றைப் படிக்க வைத்தோம், அவர்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ...இவை எல்லாம் செய்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் வயதாகி விடுகிறது.

"இனி போட்டு என்னத்தச் செய்ய ..." என்று சோர்ந்து போய் விடுகிறோம்

நம்மை பெரிய காரியங்களைச் செய்ய விடமால் தடுப்பது எது?

நம் புலன்கள் தான். அவை தூண்டி விடும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்டு, அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் ஒன்றும் செய்யாமல் வாழ் நாள் எல்லாம் வீணடிக்கிறோம்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்கிறார் ....

"செயற்கரிய செய்ய முடிந்த நம்மை , செய்ய விடாமல் மயக்கியவர் ஐந்து பேர் (புலன்கள்) . அவர்கள் மயக்கத்தில் மயங்கி, சிற்றின்பங்கள் பின் போய் அலைகிறாய் நெஞ்சே. அதை விட்டு விட்டு, சிவந்த கண்களை உடைய திருமால் இருக்கும் திரு விண்ணகரம் என்ற தலத்தை நாடு"

என்கிறார்.


பாடல்

செயற்கரியசெய்வோமைச்செய்யாமனெஞ்சே
மயக்குவாரைவர்வலியா - னயக்கலவி
சிந்திபுரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
னந்திபுரவிண்ணகரநாடு.

சீர் பிரித்த பின்

செயற்கு அரிய செய்வோமை செய்யாமல் என் நெஞ்சே 
மயக்குவார் ஐவர் வலியால் இனிய கலவி 
சிந்தி புரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மால் 
நந்தி புர விண்ணகரநாடு.

பொருள்

செயற்கு = செய்வதற்கு

அரிய = கடினமான

செய்வோமை = செய்யத் தகுந்த நம்மை

செய்யாமல் = செய்ய விடாமல்

என் நெஞ்சே = என் மனமே

மயக்குவார் ஐவர் = மயக்குவது இந்த ஐந்து புலன்கள்

வலியால் = வலிமையால்

இனிய = இன்பமான

கலவி = கலந்து அனுபவிப்பது

சிந்தி = சிந்திப்பாய்

புர = ஆட்சி செய்

விண்ணகரமென்பர் = விண்ணுலகை என்பார்

திருச்செங்கண்மால் = சிவந்த கண்களை உடைய திருமால் உறையும்

நந்தி புர விண்ணகரநாடு. = நந்திபுர விண்ணகரத்தை நாடு

இந்த புலன்கள் நம்மை ஆசை காட்டும். அதில் இன்பம், இதில் இன்பம். அதைச் செய்தால் , அந்த சொர்கமே தெரியும் என்றெல்லாம் நம்மை அலைக்கழிக்கும்.

அவற்றில் இருந்து மனதை திருப்பி நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்றால், நந்திபுர விண்ணகரத்தை நாடு என்கிறார்.

இந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு ?

பேயாழ்வார் சொல்கிறார்.

பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் போன்ற இடங்களில் இருந்த பின், இந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தில் வந்து இருந்தாராம்.

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.

                      (2342) மூன்றாந் திருவந்தாதி - 61

ஒப்பிலியப்பன். உப்பு இல்லாத அப்பன். மனைவி உப்பு இல்லாமல் சமைத்தால் கூட  அதை அன்போடு உண்ண வேண்டும் என்று குடும்ப பாடம் நடத்திய இடம்.

நம்மாழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி தந்தாராம் இந்தத் திருத்தலத்தில்

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

        -திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்


இந்தத் திருத் தலத்துக்கு என்று தனி சுப்ரபாதமே உண்டு.

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாதுறை பக்கம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post.html

Monday, April 30, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன் 


இராமனிடம் அடைக்கலம் என்று வந்த வீடணனை, இராமனின் மந்திரிகள் மறித்து அவனிடம் விவரம்  கேட்டனர். பின், வீடணனை   அங்கேயே நிறுத்தி விட்டு இராமனிடம் சென்று கூறுகிறார்கள் அந்த மந்திரிகள்.

"பின்னால் நடக்கப் போவதை நாங்கள் அறிய மாட்டோம். வந்திருப்பவன் பெயர் வீடணன். குளிர்ந்த மலர் போன்ற கைகளை உடையவன். நான்கு பேரோடு வந்திருக்கிறான். களவும் வஞ்சனையும் கொண்ட இலங்கை வேந்தனின் இளவல்"

என்றனர்.

பாடல்


விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான்.

பொருள்

விளைவினை  = வரப் போகின்ற வினைகளை

அறிந்திலம்; = அறிய மாட்டோம்

வீடணப் பெயர் = வந்திருப்பவன் பெயர் வீடணன்

நளிர் = குளிர்ந்த

மலர்க் = மலர் போன்ற

கையினன், = கைகளை உடையவன்

நால்வரோடு உடன் = நான்கு பேரோடு வந்திருக்கிறான்

களவு இயல் = களவை இயல்பாகக் கொண்ட

வஞ்சனை  = வஞ்சனையான

இலங்கை காவலற்கு = இலங்கை வேந்தனுக்கு

இளவல்,  = இளையவன்

நம் சேனையின்  = நமது சேனையின்

நடுவண் எய்தினான் = நடுவில் வந்து இருக்கிறான். .

நமக்குத் தோன்றும் உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அவயத்தின் மூலம்  வெளிப்படுகின்றன.

கோபம் வந்தால் பல்லைக் கடிப்போம் , கண் சிவக்கும்.

காமம் வந்தால், காது சிவக்கும், இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.

பயம் வந்தால் வயிற்றை என்னவோ செய்யும்.

பொறாமை வந்தால் வயிறு எரியும்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்

என்பார் வள்ளுவர்.

அந்தந்த உணர்ச்சிகள் சரியான படி வெளிப்படாவிட்டால், அவை சம்பந்தப் பட்ட  உடல் அவயங்களை அவை பாதிக்கும்.

"இதயமே வெடித்து விடும் போல இருக்கு" என்று சொல்வதில்லையா.

கள்ளத்தனமும், கயமையும் இருந்தால் உடல் விறைப்பாக இருக்கும். யார் எங்கே வருகிறார்கள் என்று கண் அலையும். இதயம் பட பட என அடித்துக் கொள்ளும். உடல் சூடாகும்.

வீடணன் கை , குளிர்ந்த மலர் போல மென்மையாக இருக்கிறதாம்.

வாள் , வேல் பிடித்து சண்டை போட்டு காய்த்துப் போன கை அல்ல.

மலர் போல மென்மையான கை.

குளிர்ந்த கை. கை குளிர்ந்து இருப்பதால், உடலும் குளிர்ந்து இருக்கும். மனதில் கோபம்,பயம் இல்லை.

அவ்வளவு பெரிய சேனைக்கு நடுவில் தைரியமாக , நாலே நாலு பேரோடு வந்திருக்கிறான்.

தான் செய்வது சரி என்பதில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. இராமனிடம் தூது விடவில்லை. நேரே வந்து  விட்டான்.  இறைவனுக்கும் நமக்கும் நடுவில் தரகர்கள் எதற்கு?

இறைவன் இவ்வளவு சமீபம் வந்த பின்னும், நடுவில் இன்னொரு தரகர் எதற்கு?

களவை இயல்பாகக் கொண்ட, வஞ்ச மனம் படைத்த இராவணனின் தம்பி.

குணம் என்பது குலத்தால் வருவது அல்ல. மூன்று சகோதரர்கள். இராவணன், வீடணன், கும்ப கர்ணன். குணத்தில் எவ்வளவு வேறுபாடு.

குலத்தால் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை என்று கம்பன் எடுத்துக் காட்டும் இடம்.

நான்கு வரியில் எத்தனை பாடம்.

படிக்கத்தான் நேரம் இல்லை.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_30.html

Sunday, April 29, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன் 



நம் நண்பர்களிடம் நம்மைப் பற்றி கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள். "...அவரா...அவர் இன்னது படித்து இருக்கிறார்..இங்கே வேலை செய்கிறார்...கல்யாணம் ஆகி ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் இருக்கிறார்கள்.." என்று நம்மைப் பற்றிச் சொல்லுவார்கள். நம் குணத்தைப் பற்றி என்ன சொல்லுவார்கள்?

உங்கள் நண்பர்கள் , உங்களைப் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருப்பார்கள் ? உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், உங்கள் கணவன்/மனைவி, உங்கள் பிள்ளைகள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ? கேட்டுப் பாருங்கள் ஒரு நாள். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.

இராவணனை விட்டு விலகி வந்த வீடணன், அமைச்சர்களோடு இராமனை காண வருகிறான். அப்போது, அங்கிருந்த வானரங்கள் எல்லாம், வீடணனை "அடி ,பிடி, கொல் " என்று கோபத்தோடு வந்தனர். அந்த சமயம், அனுமன் அனுப்பிய இரண்டு தூதர்கள் வீடணனிடம் "நீ யார்" என்று கேட்டனர். அதற்கு, வீடணனின் அமைச்சர் பதில் தருகிறான்

"சூரிய குலத்தில் தோன்றிய உலகின் நாயகனான இராமனின் பாதங்களை சரண் அடைந்து, உய்யும் வழி தேடி வந்திருக்கிறான். தகைமை வாய்ந்த மனதை உடையவன், நீதி தர்மம் இவற்றின் வழி நிற்பவன், ப்ரம்மாவின் பேரனின் மகன் " என்றான்.

அவ்வளவு உயர்வாக சொல்கிறான் வீடணனைப் பற்றி.

பாடல்

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன்-
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.

பொருள்