Pages

Sunday, January 17, 2016

இராமாயணம் - சீதையின் பிரிவு

இராமாயணம் - சீதையின் பிரிவு


கணவன் மனைவி பிரிவு எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தான். வேலை நிமித்தமாக கணவன் வெளியூர் போக வேண்டியது வரலாம், பிரசவத்துக்காக மனைவி அம்மா வீட்டுக்கு போக வேண்டி வரலாம், இப்படி ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி பிரிவு நிகழத்தான் செய்கிறது.

கணவனும் மனைவியும் ஏதோ காரணத்தால் பிரிந்தாலும், அவர்களுக்குள் உள்ள அன்பு பிரிந்து விடுவது இல்லை.

அவர்கள் பிரிந்து இருக்கும் போது , கணவன் , மனைவியைப் பற்றி என்ன நினைப்பான் ? மனைவி கணவனைப் பற்றி என்ன நினைப்பாள் ?

கணவனுக்கு, பொதுவாக, மனைவியின் அருக்காமை இழப்பு தான் பெரிதாகப் படுகிறது. அவளிடம் பெற்ற இன்பம் தான் பெரிய இழப்பாக படுகிறது. அவளின் உடல், அவளின் காதல், அவளின் பரிவு, இனிய குரல், அவள் ஸ்பரிசம் , அவள் வாசம், ...அவற்றின் இழப்புதான் கணவனுக்கு முன்னே வந்து நிற்கிறது.

மனைவிக்கு என்ன தோன்றுகிறது ? அவர் எப்படி சாப்பிட்டாரோ ? நேரத்துக்கு தூங்கினாரோ இல்லையோ?  மருந்தெல்லாம் வேளா வேளைக்கு சாப்பிட்டாரோ இல்லையோ என்று அவன் உடல் நிலை பற்றி கவலையாக இருக்கும்.

இது இன்று நேற்று நிகழும் கதை இல்லை. தொன்று தொட்டு வருவது.

சீதையை பிரிந்து இருக்கிறான் இராமன்.

இராமன் என்ன நினைக்கிறான், சீதை என்ன நினைக்கிறாள் என்று  பார்ப்போம்.

முதலில் இராமன்,


பிரிவுத் துயர் இராமனை  வாட்டுகிறது.

தேரின் மேலே உள்ள  பகுதி போன்ற இடுப்பை கொண்ட சீதையின் முகத்தைக் காணாமல் வாடினான். யார் முகத்தைப் பார்த்து அவன் ஆறுதல் அடைவான் ? நல்ல உணர்வுகள் எல்லாம் அழிந்து போய் விட்டது. மன்மதனுக்கு பல மலர்கனைகளை அள்ளித் தரும் கார்காலத்தை கண்டான். ;ஆனால், கொடுமையான பிரிவு துயருக்கு ஒரு கரை கண்டான் இல்லை.

பாடல்


தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்

தேரைக் கொண்ட = தேர் தட்டு போன்ற

பேர் = சிறந்த

அல்குலாள் = இடுப்பை உடைய (அல்குல் என்பதற்கு சரியான அர்த்தம் என்ன என்று தமிழ் அகராதியில் காண்க)

திருமுகம் காணான் = (சீதையின்) அழகிய முகத்தை காணாதவன்

ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? = வேறு யாரைப் பார்த்து உயிருக்கு நேர்ந்த துன்பத்தை ஆற்றுவான்

நல் உணர்வு அழிந்தான் = உணர்ச்சி அற்றுப் போனான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் = எண்ணிக்கை இல்லாத

பல் = பல

ஆயிரம் = ஆயிரம்

மலர்க் கணை  = மலர்கணைகளை

வகுத்த = எடுத்துக் கொடுத்த

காரைக் கண்டனன்; = கார் காலத்தை (மழைக் காலத்தை) கண்டான் (இராமன்)

வெந் துயர்க்கு = கொடுமையான துயரத்திற்கு

ஒரு கரை காணான் = ஒரு கரை காண மாட்டான்

கார் காலத்தில் மலர்கள் மலவர்து இயல்பு. அது கம்பனுக்கு எப்படி தோன்றுகிறது தெரியுமா ...

மன்மதனிடம் அந்த கார் காலம் சொல்கிறதாம் "இந்தா இந்த பூவெல்லாம் எடுத்து  அந்த இராமன் மேல மலர் அம்புகளாக தொடு " என்று ஒவ்வொரு பூவாக  எடுத்துக் கொடுப்பது போல அந்த மலர்கள் ஒவ்வொன்றாக மலர்ந்ததாம்.

அப்படிப்பட்ட கார்காலத்தைப் பார்த்தான், துன்பத்தின் கரையை  பார்க்கவில்லை.

சீதையை பிரிந்த இராமனுக்கு அவள் அழகுதான் கண்ணுக்கு முன் நிற்கிறது.

இராமனுக்கே அப்படி என்றால்....



2 comments:

  1. இந்தப் பாடலைப் படித்தால், இராமன் விரக தாபத்தில் வருந்துவது போல இருக்கிறது. மனைவியை பிரிந்தால், வேறு எதையும் தேடித் தவிக்கவில்லையா? விரகம் மட்டும்தானா?

    ReplyDelete
  2. இதுதான் இயல்பான எதார்த்த நிலை.
    பொதுவாக பிறன் மனை நோக்கா பேராண்மைக்கு அழகு.
    உணவு, உணர்வு, ...(தலைவன் தலைவியை பிரிய நேர்கிறது...ஆண்மகன் இலக்கணம், அகநானூறு பாடகள்களிலும் இதைக்காணலாம்

    ReplyDelete