Showing posts with label இரட்டை மணிமாலை. Show all posts
Showing posts with label இரட்டை மணிமாலை. Show all posts

Monday, September 5, 2016

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை 


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது.

சங்கரனை, சடை முடி கொண்டவனை, அந்த சடையில் பாம்பை அணிந்தவனை, நாம் ஆழ்ந்து விடாமல் காப்பவனை , நெஞ்சே, எப்போதும் வணங்கு என்பது பாடல்.

பாடல்

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 

பொருள்

சங்கரனைத் = இன்பம் தருபவனை

தாழ்ந்த சடையானை = பரந்து  விரிந்து கிடைக்கும் சடை முடியினைக் கொண்டவனை

அச்சடைமேற் = அந்த சடையின் மேல்

பொங்கரவம் = பொங்கு + அரவம் = சீறும் பாம்பினை

வைத்துகந்த = வைத்து + உகந்த = வைத்து மகிழ்ந்தவனை

புண்ணியனை = புண்ணியம் நிறைந்தவனை

அங்கொருநாள் = அங்கு ஒரு நாள்

ஆவாஎன்று = ஆ ஆ என்று

ஆழாமைக் = மூழ்கி விடாமல்

காப்பானை = காப்பவனை

எப்பொழுதும் = எப்பொழுதும்

ஓவாது = இடைவிடாமல்

நெஞ்சே உரை = மனமே சொல்

இவ்வளவுதானா ? இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது ?


"அங்கொருநாள்" - அது எந்த நாள் ?  கடைசி நாள், உயிர் உடலை விட்டு பிரியும் நாள். புலன்கள் தள்ளாடி, அறிவு மயங்கும் அந்த நாள்.

வாழ் நாள் எல்லாம், எப்போதும் ஒரு அவசரகதியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நல்ல விஷயங்களை எல்லாம் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி  வைக்கிறோம்.

பின்னாள் , எந்நாளோ ? அந்த நாள் வரும் போது எப்படி இருப்போமோ.

அன்று என்று எண்ணாது அறம் செய்க என்றார்  வள்ளுவர்.



"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"


பிறவியை பெரிய கடலுக்கு ஒப்பிட்டு சொன்னார்கள் நம் முன்னவர்கள்.

ஏன் ?

ஏன் ஒரு பெரிய நில பரப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லவில்லை ?

நிலத்தில் வழித் தடம் போட்டு விடலாம். ஒரு சாலை அமைத்து விடலாம்.  போகும் இடத்துக்கு ஒரு வழி அமைத்து, சாலையின் இருமருங்கிலும்  வழி காட்டி பலகைகள் வைத்து விடலாம்.

கடலில் அது முடியாது.

இப்படித்தான் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று இல்லை.

இருந்திருந்தால் இந்நேரம் எல்லோரும் அந்த வழியில் போய் இறைவனை  அடைந்திருக்க மாட்டோமா ?

உண்மை என்பது ஒவ்வொருவரும் , தனக்குத் தானே கண்டு கொள்ள  வேண்டிய ஒன்று.

மற்றவர் போன பாதையில் நாம் போக முடியாது.

பூஜைகளும், புனஸ்காரங்களும் , புத்தகங்களும், பிரசங்ககளும் வழி காட்ட  முடியாது. 

நம் வழியை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். 

கடலில் வழி கிடையாது. 

நீங்கள் போய் அடைந்தாலும், உங்கள் வழியை இன்னொருவர் உபயோகப் படுத்த  முடியாது. 

இரண்டாவது, தரையில் நடந்தால், கால் வலித்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்  கொள்ளலாம். கடலில் ஓய்வு எடுக்க முடியாது.   நீந்துவதை  நிறுத்தினால் மூழ்க வேண்டியதுதான். 

பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர். 

கால் சலித்து, கை சலித்து ஓயும் போது , அந்த சமயத்தில், நாம் மூழ்கி விடாமல் காப்பவன் இறைவன் என்கிறார்  அம்மையார். 

"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"

ஆழ்ந்து விடாமல் காப்பவன் இறைவன். 

பிறவி என்னும் பெருங்கடலில் நாம் தனியாக நீந்தவில்லை. 

கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

குடும்ப பாரம், சமுதாய பாரம், பயம், கோபம், காமம்  போன்ற பாரங்களை சேர்த்து கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

நாவுக்கரசர் சொன்னார் 

"கற்றுணை பூட்டி ஒரு கடலுள் பாய்ச்சினும் 
நற்றுணை ஆவது நமச்சிவாயவே " 

என்று.

ஒரு கல்லா, இரண்டு கல்லா...ஆயிரம் கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம்.


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

 என்பதும்,நாவுக்கரசர் வாக்கே. 

 சிந்திப்போம்.