Showing posts with label சகலகலாவல்லி மாலை. Show all posts
Showing posts with label சகலகலாவல்லி மாலை. Show all posts

Sunday, October 13, 2019

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்


ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராய் இருந்த ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடலாம்.

அரசர்கள், ஆண்டியான கதைகள் ஏராளம்.

ஆனால், ஒரு காலத்தில் பெரிய அறிவாளியாக இருந்த ஒருவன் பின்னொரு காலத்தில் முட்டாளாக முடியாது.

"பாவம் ஒரு காலத்தில் Phd பட்டம் பெற்றவர்..இப்ப வெறும் sslc ஆகி விட்டார்" என்று இதுவரை நாம் யாரும் சொல்லக் கேட்டது இல்லை.

அறிவு, ஒருமுறை பெற்று விட்டால், அது நம்மை விட்டு போவது இல்லை. ஒரு காலத்திலும் அது சிதையாது.

செல்வம் சிதைந்து விடலாம். தொழில் தொடங்கினால், நட்டம் வந்து சேரலாம். அதனால் போட்ட முதலையும் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டி வரலாம். எவ்வளவோ பெரிய தொழில் அதிபர்கள், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பங்கு சந்தை சரிந்து போட்ட பணம் எல்லாம் போய் விடலாம்.

இன்றைய நிலையில் வங்கிகளில் போட்ட பணம் கூட பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை.

யாராவது தாங்கள் பெற்ற கல்வி காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி இருக்கிறார்களா?

குமா குருபரர் கூறுகிறார்

"சொல் திறமையும், பொறுமையுடன் கவனித்து பெறும் அறிவும் தந்து , கவி இயற்றும் நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய். இலக்குமியின் அருள் கூட (பொருள்) ஒரு காலத்தில் சிதைந்து போகலாம், ஆனால் நீ தரும் அறிவு என்ற செல்வம் ஒரு காலமும் சிதையாது, சகலகலாவல்லியே" என்று சரஸ்வதியை போற்றி பாடுகிறார்.


பாடல்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சீர் பிரித்த பின்

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பொருள்

சொல் விற்பனமும் = சொற்களை கையாள்வதில் திறமையும்

அவதானமும் = கவனமும்

கவி சொல்ல வல்ல = கவிதை சொல்ல வல்ல

நல் வித்தையும் = நல்ல வித்தையும்

தந்து = தந்து

அடிமை கொள்வாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்வாய்

நளின = அழகிய

ஆசனம் சேர் = ஆசனத்தில் இருக்கும் (செந்தாமரையில் இருக்கும்)

செல்விக்கு = செல்வத்துக்கு அதிபதியான இலக்குமிக்கு

அரிது = அரியதானது

என்று = என்று

ஒரு காலமும் சிதையாமை நல்கும் = ஒரு காலத்திலும் சிதையாமை நல்கும்

கல்விப்= கல்வி என்ற

பெரும் = பெரிய

செல்வப் பேறே  = செல்வதை பெரும் பேற்றை தருபவளே

சகலகலாவல்லியே = சகலகலாவல்லியே

சிதையாத செல்வத்தை தருவது இலக்குமிக்கு கடினம். செல்வம் சிதைந்தே தீரும்.

கல்வி அப்படி அல்ல.

எனவே தான், நம் கலாச்சாரத்தில் கல்விக்கு முதலிடம் தந்தார்கள்.

பணக்காரனை விட ஒரு கல்வியாளனுக்கு இந்த சமுதாயம் அதிக முக்கியத்துவம்  தந்தது, தருகிறது.


வெண் தாமரையில் இருக்கும் அவளை நாடுங்கள். சிதையாத கல்விச் செல்வம்  பெற்றிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_13.html

Monday, September 9, 2019

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும்

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும் 


கடந்த சில நாட்களாக பயனில் சொல்லாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பற்றி சிந்தித்தோம்.

சொல்லுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம். சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், சொல்லின் பெருமை தெரியாமல் நாம் அதை விரயப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிறு பிள்ளைக்கு வைரக் கல்லுக்கும், கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதது போல.

சொல் என்பது பல பரிமாணங்களை கொண்டது.

முதல் பரிமாணம், அதன் வரி வடிவம். ஒரு சொல் இந்த வடிவில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. சொல்லின் வரி வடிவம் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்த தமிழின் வரி வடிவம் வேறு, இப்போது இருக்கும் தமிழின் வரி வடிவம் வேறு.

இப்போது வள்ளுவர் வந்தால், அவரால் நமது திருக்குறளை வாசிக்க முடியாது. வரி வடிவம் மாறி விட்டது.

அடுத்த பரிமாணம், அதன் ஒலி வடிவம். ஓசை வடிவம். ஒரு சொல்லை சொல்லும்போது உண்டாகும் ஓசை. தமிழைப் பொறுத்தவரை அது நிறைய மாறவில்லை.

மூன்றாவது பரிமாணம், அந்த ஒலி குறிப்பிடும் பொருள். ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு பொருள் பற்றியே  பிறக்கிறது.

நான்காவது பரிமாணம், அந்த ஒலியின் உணர்ச்சி வடிவம்.

உதாரணமாக, "அம்மா" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

அதன் வரி வடிவம், நாம் எழுதுவது.

அதன் ஒலி வடிவம், அது எழுப்பும் சப்தம்.

அதன் பொருள் வடிவம், அம்மா என்ற அந்தப் பெண்.

நான்காவதாக, அம்மா என்று சொல்லும் போது ஏற்படும் உணர்ச்சி.

ஒலி வந்து விட்டால், வரி வடிவத்தை விட்டு விடலாம்.

பொருள் வந்து விட்டால், ஒலியை விட்டு விடலாம்.

உணர்வு வந்துவிட்டால், பொருளை விட்டுவிடலாம்.

நாம் சொல்லும் சொற்கள் பொருள் உணர்த்தி நிற்கின்றன. உணர்வுகளை கொண்டு வரலாம்.

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், சொன்னால் சொன்ன படி நடக்கும் சக்தி சொல்லுக்கு உண்டு.

மந்திரம் என்பது என்ன?

மனதில் நினைப்பதை ஸ்திரமாக நமக்குத் தருவது மந்திரம்.

மந்திரங்களுக்கு அந்த வலிமை உண்டு.

உயர்ந்தவர்கள், சான்றோர்கள், கற்புடைய பெண்களுக்கு அந்த ஆற்றல் உண்டு.

நளாயினி, "சூரியனே உதிக்காதே" என்றாள். உதிக்கின்ற சூரியன் நின்றது என்று வரலாறு சொல்கிறது.

கம்ப இராமாயணத்தில், சீதை கூறுவாள்,  "இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன்" என்று.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள் 

சொல்லுக்கு அவ்வளவு வலிமை. சொல்லினால் இல்லை இல்லாத இந்த உலகம் அனைத்தையும்  சுட்டு பொசுக்கி விடுவேன் என்கிறாள்.

விவிலியம் (பைபிள்) சொல்கிறது

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  (யோவான் 1:1-18)

என்று.

முதலில் வார்த்தை இருந்தது. அதில் இருந்துதான் அனைத்தும் உண்டானது என்கிறது.

ஓம்
நாராயணாய நம
நமச்சிவாய நம

என்று மந்திரங்களை உச்சாடனம் செய்து பலன் பெற்றவர்கள் பலர்.


சகலகலாவல்லி மாலையில் , குமர குருபரர் சொல்லுவார்

"பாட்டும், பொருளும், அது பொருந்தும் பயனும் எனக்கு வரும்படி உன் கடைக்கண்ணால் அருள் செய்வாய் " என்று.


பாடல்


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் 
பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு
தொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்
வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகலகலா
வல்லியே. 



பொருள்


பாட்டும் = பாட்டு (ஒலி வடிவம்)

பொருளும் = பொருளும்

பொருளாற்  = அந்தப் பொருளுக்கு

பொருந்தும்  = பொருத்தமாய் இருக்கும்

பயனுமென்பாற்  = பயனும் என் பால்

கூட்டும் படி = சேரும்படி

நின் கடைக்கணல் = உன்னுடைய கடைக் கண்ணால்

காயுளங் கொண்டு = தாய் உள்ளம் கொண்டு

 தொண்டர்  = தொண்டர்கள்

தீட்டுங் = இயற்றும்

கலைத் = கலை நிறைந்த

தமிழ்த் = தமிழ்

தீம்பா லமுதந் தெளிக்கும் = சுவையான பால் அமுதம் தெளிக்கும்

வண்ணம்  =படி

காட்டும் = காட்டுகின்ற

வெள் ளோதிமப் பேடே = வெள்ளை நிறத்தில் உள்ள அன்னம் போன்றவளே

சகலகலா வல்லியே. = சகலகலா வல்லியே

பயன் தரும் சொல்லை சொல்ல எனக்கு அருள் புரிவாய்  என்கிறார்.


இறைவன் நாத வடிவானவன் என்று நம் இலக்கியம் பேசும்.

இது பற்றி மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_92.html

Tuesday, August 6, 2019

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய்

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய் 


கொஞ்சம் ஆசை உள்ளவர்கள், இறைவனிடம், காசு பணம் கேட்பார்கள், வீடு வாசல், நகை, நட்டு, பிள்ளைக்கு வேலை, பெண்ணுக்கு வரன், உடல் நலம் என்று கேட்பார்கள்.

பேராசை கொண்டவர்கள், பெரிதாக கேட்பார்கள், சுவர்க்கம், இறைவன் திருவடி, வைகுண்டம், கைலாயம், மறு பிறப்பு இன்மை என்று பெரிதாக கேட்பார்கள்.

எல்லாம் ஆசைதானே. எதையாவது வேண்டும் என்று கேட்பது. கேட்கும் பொருள் தான் மாறுகிறதே தவிர, கேட்பது என்பது அப்படியே இருக்கிறது.

இதில் சுவர்க்கம் கேட்பவர்கள், பணம் மற்றும் புகழ் போன்றவற்றை கேட்பவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். என்ன, கடவுள் கிட்ட போய் இந்த மாதிரி அற்ப பொருள்களை கேட்கிறாயே என்று.

அஞ்சு பத்துனு கேட்காதே, ஆயிரம் இரண்டாயிரம்னு கேளு என்று ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு சொல்லித் தருகிறான்.  பெரிய பிச்சைகாரன், சின்ன பிச்சைக்காரன்.

இதுதானே நடக்கிறது.

ஞானிகள் தங்களுக்கு என்று எதையும் கேட்பது இல்லை.

குமர குருபரர், தனக்கு என்று வேண்டும் என்று ஒன்றும் கேட்கவில்லை. அப்படி ஒரு வேண்டுதல்.

எனக்கு நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார். சம்பளம் தா, பதவி உயர்வு தா, என்றெல்லாம்  கேட்கவில்லை.

நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார்.

எனக்கு பாட்டு எழுத வரும். எனவே, நிறைய நல்ல பாட்டுக்கள் எழுத அருள் செய் என்று வேண்டுகிறார். பாட்டின் மூலம் எனக்கு நிறைய பொன் கிடைக்க வேண்டும், ஆஸ்கார் விருது வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை.

மக்களுக்கு நல்ல பாட்டை தர அருள் புரிவாய் ...


பாடல்

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலாவல்லியே. 

பொருள் 

நாடும் = அனைவரும் விரும்பும்

பொருட்சுவை  = பொருள் சுவை

சொற்சுவை = சொல் சுவை

தோய்தர = தோய்த்துத் தர

நாற்கவியும் = நான்கு விதமான கவிதைகளும்

பாடும் = பாடுகின்ற

பணியிற் = வேலையில்

பணித்தருள் வாய் = என்னை பணித்து அருள் செய்வாய்

பங்க யாசனத்திற் = தாமரை மலராகிய ஆசனத்தில்

கூடும் = சேர்ந்து இருக்கும்

பசும்பொற் கொடியே = பசுமையான பொற் கொடி போன்றவளே

கனதனக் குன்று = தங்க மலை போன்ற மார்பும்

மைம்பாற் = ஐம்பால், ஐந்து விதமாக வகிடு எடுத்து செய்யும்

காடுஞ் = காடு போல் அடர்ந்த கூந்தலை

சுமக்குங் = சுமக்கும்

கரும்பே = கரும்பு போல தித்திப்பவளே

சகலகலாவல்லியே.  = அனைத்து கலைகளிலும் வல்லவளே

அறிஞர்கள் பிறருக்கு தங்கள் திறமையை கொடுக்கவே வரம் கேட்பார்கள்.

"ஆடும் மயில் வேல் அணி சேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய் 
தேடும் கய மா முகனை செருவில் 
சாடும் தனி யானைச் சகோதரனே "

என்பார் அருணகிரிநாதர்.

பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்பது அவர் வேண்டுதல்.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்ப நிலை தானே எய்திடும் பராபரமே 

என்பார் தாயுமானவ சுவாமிகள்

அடுத்த முறை வேண்டும் போது , அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டாமல் , எதை சிறப்பாக மற்றவர்களுக்கு செய்யலாம் என்று சிந்தித்து அதைக் கேட்டால் என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_6.html

Wednesday, July 10, 2019

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !


குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லி மாலை. சரஸ்வதியின் மேல் பாடியது.


அது போல

காசி இராஜா சபையில் குமரகுருபரர் இந்த பாடல்களை பாடினார். அந்த மன்னன், தமிழ் தெரியாதவன். ஆனால், அவனுக்கு  புரிந்தது. குமரகுருபரருக்கு நிறைய பொருளை பரிசாக அளித்தான். அவற்றைக் கொண்டு அவர், காசியில் மடம் காட்டினார். இன்றும் இருக்கிறது. போனால், தங்கிக் கொள்ளலாம்.

தமிழ் தெரியாத மன்னருக்கு எப்படி இது புரிந்தது ?

காதலர்கள், ஒருவரோடு ஒருவர் பார்வையாலேயே பேசிக் கொள்வதில்லையா.

தமிழ் தெரியாத மன்னனனுக்கே புரிந்தது. நமக்குப்  புரியாதா?

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

என்ன புரிகிறதா ?

என்னத்த புரிய? முதல்ல சரியா வாசிக்கவே முடியல. அப்புறம் அல்லவா புரிவதை பற்றி  யோசிக்க.

சீர் பிரிப்போம். சீர் பிரித்தால் புரியும்

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க  என்  வெள்ளை உள்ளத்து 
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து 
உண்டான் உறங்க  ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலாவல்லியே


இப்ப புரிஞ்சிருக்குமே?

குமர குருபரர் சொல்கிறார்

"ஏதாவது வேண்டும் என்றால் எந்தக் கடவுளை நாடுவது?  இந்த உலகை எல்லாம் படைத்து , அதை உண்டவன் திருமால். அவன் கிட்ட போகலாம் என்றான்  அவன் ஒரு பக்கம் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறான். தூங்குமூஞ்சி.

சரி, திருமால் வேண்டாம், சிவனிடம் போகலாம் என்றால், அவனோ பித்து பிடித்து சுடுகாட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். பித்தன்.

சரி, திருமாலும் வேண்டாம், பிரம்மனும் வேண்டாம்,  பிரம்மனிடம் போகலாம் என்றால், அவன் உன் அழகில் இலயித்து இருக்கிறான்.

இவர்களை நம்பி ஒரு பலனும் இல்லை. எனவே, தாயே, உன்னிடம் வந்து விட்டோம். என் மனதில் வந்து இருப்பாய் "

என்று வேண்டுகிறார்.

பொருள்

வெண் தாமரைக்கு = வெண்மையான தாமரைக்கு

அன்றி = அல்லாது

நின் = உன்னுடைய

பதம் = பாதங்களை

தாங்க = தாங்கிக் கொள்ள

 என்  வெள்ளை உள்ளத்து  = என் வெள்ளை உள்ளத்து

தண் = குளிர்ந்த

தாமரைக்கு  = தாமரைக்கு

தகாது கொலோ = பொருத்தம் இல்லையா ?

சகம் ஏழும் அளித்து  = ஏழு உலகையும் படைத்து

உண்டான் = உண்டு (உமிழ்ந்தவன்)

உறங்க = உறங்கிக் கொண்டு இருக்க

 ஒழித்தான் = அழிக்கும் கடவுளான சிவன்

 பித்தாக = பித்து பிடித்து அலைய

உண்டாக்கும் வண்ணம் = படைக்கும் கடவுளான பிரம்மன்

கண்டான் = உன்னைக் கண்டான். எப்படி தெரியுமா ?

சுவை கொள் கரும்பே = சுவை நிறைந்த கரும்பைப் போல

சகல கலாவல்லியே = அனைத்து கலைகளிலும் வல்லவளே


சிவனை பித்தன் என்று சொல்லியதற்கு யாரும் கோபிக்கக் கூடாது.

சுந்தரர் சொன்னது அது.

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?


சரஸ்வதி - வெண் தாமரையில் இருக்கிறாள்.

இலக்குமி - சிவந்த தாமரையில் இருக்கிறாள்.

என்ன காரணமாக இருக்கும்?

முதலில், ஏன் தாமரை ? பின் ஏன் அந்த நிறம் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_9.html