Showing posts with label சிவ ஞான போதம். Show all posts
Showing posts with label சிவ ஞான போதம். Show all posts

Sunday, April 24, 2022

சிவ ஞான போதம் - மாயை

 சிவ ஞான போதம் - மாயை 


சைவ சித்தாந்ததின் அடிப்படை தத்துவம் என்பது பதி, பசு, பாசம் என்ற மூன்றில் தொடங்குகிறது என்று சிந்தித்தோம். 


இந்த மூன்றும் என்றும் உள்ளது. 


இதில் பசு என்ற உயிர், தோன்றும் பொழுதே ஆணவம் என்ற மலத்தில் சிக்கி இருக்கும் (தாயின் வயிற்றில் கருவைப் போல). ஆணவ மலத்தில் கட்டுண்டு செய்வது அறியாமல் திகைக்கும் உயிர்கள் அந்த இருளில் இருந்து வெளிப்பட நினைக்கும். குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வர நினைப்பது இல்ல. 


அந்த ஆசை தான் மூல கன்மம் என்று சொல்லப் படுகிறது. அனைத்து கர்மங்களுக்கும், வினைகளுக்கும் ஆதி காரணம் அந்த மூல கன்மம் (கர்மம் அல்லது வினை). 


அப்படி வெளிப்படத் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இறைவன் கன்மம், மாயை என்ற இரண்டை தோற்றுவிக்கிறான். 


இந்த மூன்றும் சேர்ந்து மும்மலம் என்று அறியப் படுகிறது. 


வினை செய்ய உடல் வேண்டும், உடலில் உறுப்புகள் வேண்டும்,  இருந்து செய்ய இடம் வேண்டும், செய்கின்ற அனுபவம் வேண்டும். இவற்றை தனு, கரண, புவன, போகம் என்று கூறுவார்கள் 


இவற்றையெல்லாம் இறைவன் மாயையில் இருந்து தோற்றுவிக்கிறான். 


என்ன இது மாயை, மாயை என்று எதற்கெடுத்தாலும் மாயை என்று சொன்னால் என்ன அர்த்தம். மாயை என்றால் என்ன? 


ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறோம். பார்க்க அழகாக இருக்கிறது. பிரமாண்டமாக இருக்கிறது. 


அந்தக் கட்டிடம் செங்கல், சிமெண்ட், கம்பி, மரம்,கண்ணாடி, போன்ற  வற்றால் செய்யப்பட்டது என்று தெரியும். 


ஒரு காரைப் பார்க்கிறோம். அது டையர், streering, பிரேக், என்ஜின், பெட்ரோல் tank, என்ற பல உதிரிப் பாங்களை சேர்த்து செய்யப்பட்டது என்று தெரியும் நமக்கு.


நம் உடம்பு கூட கை, கால், கண், என்ற உறுப்புகளின் தொகுதிதானே. 


உடம்பு ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அது ஒரு வசதி. அவ்வளவுதான். உடம்பு என்று ஒன்று கிடையாது. உறுப்புகள் என்றுதான் இருக்கிறது. "உடம்பில்" எதை தொட்டுக் காட்டினாலும், அந்தப் பகுதிக்கு பேர் இருக்கும் - நகம், முடி, தோல், விரல் என்று. உடம்பு என்று தனியே கிடையாது. 


சரி, இந்த உறுப்புகள் என்று தனியே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு உறுப்பும் திசுக்களின் தொகுதி. 


திசுக்குள் தனியாக இருர்க்கிறதா என்றால் இல்லை, அவை செல்களின் தொகுதி. 


சரி செல்களாவது தனியாக இருக்கிறதா என்றால் அது ஜீன், dna (மரபணு), சைட்டோ பிளாசம், செல் membrane என்ற தொகுதிகளால் ஆனது. 


இன்னும் உள்ளே போகலாம். 


என்ன புரிகிறது?


எந்த பெரிய உருவமும் பல சிறிய பாகங்களை உடையது.


எந்த சிறிய பாகமும் அதனினும் சிறிய கூறுகளை உடையது. 


இப்படியே சொல்லிக் கொண்டே போனால், மிக அடிப்படையானது என்பது மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது அல்லவா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_24.html


(click the above link to continue reading)



இன்று நமக்கு இருக்கும் அறிவியல் உபகரணங்கள் கொண்டு நாம் ஒரு நிலையை அடைந்து இருக்கிறோம். உபகரணங்கள் மேலும் சக்தி பெறும் போது இன்னும் உள்ளே போக முடியும். 


எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான ஒன்று மிக மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?


இந்த உலகம், பிரபஞ்சம், என்பதை இறைவன் மாயையில் இருந்து உருவாக்கினான் என்று பார்த்தோம். 


அப்படி என்றால் மாயை என்பது மிக மிக மிக நுண்ணிய என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? 


மாயைகாட்டு, அது எப்படி இருக்கும் என்று கேட்டால் அணுவுக்குள் இருக்கும் துகளை காட்டுவது மாதிரித்தான். காட்ட முடியாது. பார்க்க முடியாது. முழுவதுமாக உணரக் கூட முடியாது.


உள்ளே போகப் போக  அது போய்க் கொண்டே இருக்கும். 


அறிவுக்குள் அகப்படாத ஒன்று. 


இது ஒரு பக்கம். 


இதன் இன்னொரு பக்கம் என்ன என்றால்.....





Saturday, April 9, 2022

சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்

 சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்


உலகில் தோன்றியது எல்லாம் மறையும். தோற்றம் உண்டு என்றால் முடிவு உண்டு என்பது உறுதி. தோன்றி மறையும் எதுவும் நிரந்தரமானவை அல்ல. நேற்று இல்லாமல் இருந்தது, ,இன்று இருக்கிறது,நாளை மறுபடியும் இல்லாமல் போகும். இப்படி நிரந்தரம் இல்லாதவற்றைப் பற்றி அறிந்து என்ன பலன் என்று அதை விட்டுவிட்டு அழிவு இல்லாத, நிரந்தரமானவற்றை தேடத் தொடங்கினார்கள். 


அழிவு இல்லாத பொருள் எது?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_9.html


(click the above link to continue reading)


தோற்றம் உண்டு என்றால் அழிவு உண்டு. எனவே, தோன்றாத ஒன்று அழிவு அடையாது. எனவே, தோற்றம் என்று ஒன்று இல்லாமல், எப்போதும் இருப்பவை எவை என்று ஆராய முற்பட்டபோது, மூன்று விடயங்கள் தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருப்பவை என்று கண்டு கொண்டார்கள். 


அவைதான் 


பதி, பசு, பாசம். 


இந்த மூன்றும் எப்போதும் இருப்பவை. தோன்றியவை அல்ல. எனவே அழியப் போவதும் இல்லை. 


இதில் பதி என்பது இறைவன். 


பசு என்பது உயிர்களைக் குறிக்கும். 


பாசம் என்றால் என்ன? பாசம் என்றால் கயிறு. பிணைப்பது. இது சற்று விரிவாக பார்க்க வேண்டிய ஒன்று. 


மூன்றும் நிரந்தரமானவை, தோற்றுவிக்கப்பட்டவை அல்ல என்று பார்த்தோம். 


உயிர்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை. என்று இறைவன் உண்டோ, அன்றே உயிர்களும் உண்டு. 


"என்று நீ, அன்று நான்" என்பார் தாயுமானவர். 


இந்த உயிர்கள் ஆணவம் என்ற மலத்தில், இருளில், அழுக்கில் அழுந்திக் கிடக்கும். என்ன செய்வது என்று அறியாமல், அசைவு இல்லாமல் கிடக்கும். தாயின் வயிற்றில் உள்ள குழந்தை போல என்பார்கள். குழந்தைக்கு உயிர் இருக்கிறது. உண்கிறது. சீரணிக்கிறது. வளர்கிறது. அசைகிறது. ஆனால், என்ன செய்கிறோம் என்று அறியாமல் இருளில் கிடக்கிறது அல்லவா, அது போல உயிர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும்.


இதை ஆன்மாவின் கேவல நிலை என்பார்கள்.  


எப்படி தாய் தன் கருவில் உள்ள குழந்தை மேல் கருணை கொண்டு அதற்கு வேண்டியதைச் செய்வாளோ, அது போல ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும் உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் சிலவற்றைப் படைத்து அந்த உயிர்களுக்கு தருகிறான். 


அவற்றை தனு, கரண, புவன, போகம் என்று சொல்லுவார்கள். 

தனு என்றால் உடம்பு. 


கரணம் என்றால் ஐந்து புலன்கள், மனம், சித்தம், அகங்காரம்  என்ற கருவிகள். 


புவனம் என்றால் பூமி, இடம். உடம்பும், கருவிகளும் இருந்தால் போதுமா? அவை செயல் பட ஒரு இடம் வேண்டும் அல்லவா? எங்கிருந்து செயல்படுவது? அப்படி அவை செயல் படும் இடத்துக்கு புவனம் என்று பெயர். 


நீங்கள் இங்கு பிறக்க வேண்டும், இங்கு வாழ வேண்டும் என்று நிர்ணயம் செய்பவன் இறைவன். 


உடம்பு இருக்கிறது. கருவிகள் இருக்கின்றன. அவை செயல் படும் இடமும் ஆயிற்று. அவை எதோடு செயல்படும்? எதை பெறும் , எதை அனுபவிக்கும்? 


அனுபவிக்கப் படும் பொருள்களுக்கு, அந்த அனுபவத்துக்கு போக்கியம் என்று பெயர். 


தனு - கரண - புவன - போக்கியம். 


இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இந்த தனு, கரண, புவன போக்கியயங்களை இறைவன் மாயையில் இருந்து உருவாக்குகிறான் என்று சொல்கிறார்கள். 


உயிர்கள் வந்து விட்டன. உடம்பு, கருவி, இடம், அனுபவிக்கும் பொருள் எல்லாம் வந்தாகி விட்டது. 


இதை உயிர்களின் சகல நிலை என்று சொல்லுவார்கள். 


இப்போது உயிர்கள் செயல்படத் தொடங்குகிறன. 


அனுபவம் வரத் தொடங்குகிறது. இன்பம், துன்பம் தெரிகிறது. நல்லது, கெட்டது தெரிகிறது. 


இந்த செயல்பாட்டை கர்மம் அல்லது கன்மம் என்று சொல்லுவார்கள். 


உயிர்கள் - ஆணவம் - மாயையில் இருந்து தோன்றிய கன்மம். 


இதுவரை பார்த்து விட்டோம். 


அனுபவங்கள் காரணமாக உயிர்கள் நல்லன, தீயனவற்றை செய்யத் தொடங்குகின்றன. அவற்றின் வினைகளுக்கு ஏற்ப இறைவன் அவைகளுக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தருகிறான். 


ஆணவம் - மூல மலம். 


கன்மம் - உயிர்கள் செய்வது.


மாயை - தனு கரண புவன போகங்கள் உண்டாகி உயிர்களை செயல் பட வைப்பது. 


இந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் சேர்த்து பாசம் என்று சொல்லுவார்கள். 


இந்த மூன்றும் உயிர்களைப் பிணிக்கும் கயிறு போன்றவை. 


பதி - இறைவன் 


பசு - உயிர்கள் 


பாசம் - ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்றும். 


உயிர்கள் அனுபவத்தால் நல்லது கெட்டதை அறிந்து, இறைவனை நோக்கிப் பயணப்படும். 


கன்மம், மாயை என்ற மலங்களினால் உயிர்கள் ஆணவம் என்ற மலத்தை தாண்டி இறைவனை அடையும். 


விரலில் மோதிரம் மாட்டிக் கொண்டு கழட்ட முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்த மோதிரம் இருக்கும் இடத்துக்கு சற்று முன்னால் ஒரு நூலை இறுக்கிச் சுற்ற வேண்டும். விரலின் பருமன் சற்று சுருங்கும். மோதிரத்தை மெல்ல மெல்ல நகர்த்தி கழட்டி விடலாம். அப்புறம் அந்த நூலையும் தளர்த்தி, தூக்கிக் போட்டு விடலாம். 


கன்மம், மாயை என்ற நூலைச் சுற்றி, ஆணவம் என்ற மோதிரத்தை கழட்டிய பின் நூலை தூக்கி எறிவது போல கன்மத்தையும், மாயையையும் தூர எறிந்து  விடலாம். 


இதைதான் மல பரிபாகம் என்பார்கள். அதை பின்னால் பார்ப்போம். 


பதி - இறைவன் என்றும் உள்ளவன். 


பசு - உயிர்கள் என்றும் உள்ளவை. 


பாசம் - ஆணவம், கன்மம், மாயை - என்றும் உள்ளவை. 


இதுதான் அடிப்படை சிந்தாந்தம். 


இந்த உலகம் எப்படி வந்தது? நாம் எப்படி வந்தோம்? என்ன செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? வாழ்வின் நோக்கம் என்ன என்று ஆழமாக விளக்கும் சித்தாந்தம்.


இது அடிப்படை சிந்தாந்தம். இதுவே இப்படி இருக்கிறது என்றால் மேலே போகப் போக எவ்வளவு இருக்கும். 


நூலோடு சேர்த்து அவற்றையும் அறிந்து கொள்வோம். 


அதை விட என்ன வேலை?





Thursday, April 7, 2022

சிவஞான போதம் - சித்தாந்தம்

 சிவஞான போதம்   - சித்தாந்தம் 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆத்ம விசாரம், ஒரு தேடல் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. .


இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன, இந்த பிறப்பின் நோக்கம் என்ன, இறப்புக்குப் பின் என்ன நிகழும், கடவுள் உண்டா, இல்லையா, மறு பிறப்பு உண்டா, இல்லையா , இந்த உலகம் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது, யார் தோற்றுவித்தார்கள் என்று பலப் பல கேள்விகள் நம்முள் எழும்.


பாவம், புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா? 


இதற்கெல்லாம் எங்கே சென்று விடை காண்பது? இதுவரை இந்தக் கேள்விகளுக்கு யாராவது விடை காண முயன்று இருக்கிறார்களா? அல்லது இனிமேல் தான் முயற்சி தொடங்க வேண்டுமா?


ஏதேதோ தத்துவங்கள் சொல்கிறார்கள். அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எதைப் படிப்பது, எதை நம்புவது, ,எது சரி, எது தவறு என்று நாம் குழம்புகிறோம்.


இந்த அறிவுத் தேடலுக்கு ஒரு முடிவு இருக்கிறதா? அல்லது தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?


நமக்கு முன் இந்த கேள்விகள் மட்டும் அல்ல, ,இவற்றைவிட ஆழமான கேள்விகளை கேட்டு அவற்றிற்கு விடையும் கண்டு இருக்கிறார்கள். இனி அதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு முழுமையாக அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


அதுதான் சிந்தாந்தம் என்பது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_7.html


(click the above link to continue reading)



சித்தத்தின் அந்தம். அல்லது முடிவு. 


அறிவின் எல்லையை தொட்டு, இது தான் உண்மை என்று அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


சைவ சித்தாந்தத்தின் விளக்கம் தான் விளக்கம் தான் சிவ ஞான போதம். போதம் என்றால் அறிவு. 


அது என்ன சைவ சித்தாந்தம்?


இயற்பியல் (physics) படிக்கப் போனால் electron, neutron, proton என்ற அடிப்படை அணுத் துகள்களைக் கொண்டு இந்த உலகை விளக்கம் செய்வார்கள். 


காரணம் என்ன? 


இந்த அணுத் துகள்கள் மாறி மாறி வருவதுதான் உலகம். உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அணுத் துகள்கள் மாறாது. 


நிலையில்லா இந்த உலகில் நிரந்தரமானது எது என்று சிந்தித்தார்கள். அதைப் பிடித்து விட்டால் இந்த உலகம் பிடிபட்டு விடும். 


அப்படி தேடி தேடி கடைசியில் மூன்று விடயங்கள் நிரந்தரமானவை என்று கண்டு கொண்டார்கள். அதுதான் அடிப்படைத் தத்துவம். அதைப்  புரிந்து கொண்டால், இந்த உலகைப் புரிந்து கொள்ள முடியும். 


அது என்ன மூன்று?


பதி, பசு, பாசம் 


என்ற மூன்று. இந்த மூன்றுதான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை. 


இதைப் புரிந்து கொண்டால், மற்றது எளிது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


Wednesday, March 23, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் 


என்ன முதல் சூத்திரம் இன்னும் முடியவில்லையா என்று கேட்கிறீர்களா? 


எவ்வளவோ இருக்கிறது அதற்குள். 


இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ரொம்ப போர் அடித்தால் சொல்லுங்கள். நிறுத்திவிட்டு அடுத்த சூத்திரத்துக்கு போவோம். 


இந்த உலகம் எப்படி படைக்கப்பட்டது, யார் படைத்தார்கள், ஏன் படைக்கப் பட்டது அல்லது படைக்கப் படவே இல்லை, அதுவே அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் நம் முன்னவர்கள் மிக மிக ஆழமாக யோசித்து இருக்கிறார்கள். 


பல்வேறு கொள்கைகள், சிந்தாந்தங்கள், வாதங்கள் எல்லாம் இருக்கின்றன.  அவற்றின் சாரம் என்ன என்று மட்டும் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_23.html


(click the above link to continue reading)


முதல் வாதம். மண்ணில் இருந்து பானை வருகிறது. பானை தானே வருமா? யாரோ ஒருவர் அந்த மண்ணை எடுத்து குழைத்து, சக்கரத்தில் இட்டு சுழற்றி, அழகான பானை செய்ய வேண்டும் அல்லவா?  பானை செய்ய மண் வேண்டும். மண் இல்லாமல் குயவன் என்ன முயன்றாலும் பானை செய்ய முடியாது. வெறும் மண் மட்டும் பானையாக முடியாது.  ஒரு பொருள் உண்டாவதற்கு இரண்டு காரணம் வேண்டும் என்று சொல்கிறார்கள். 


முதலாவது உபாதான கரணம். மற்றொன்று நிமித்த காரணம். 


பானை உண்டாவதற்கு மண் உபாதான காரணம். குயவன் நிமித்த காரணம். இரண்டும் இல்லாமல் பானை உண்டாகாது. 


அது போல, இந்த உலகம் உண்டாக அணுக்கள் அல்லது அடிப்படையான பொருள் ஒன்று வேண்டும். அதைக் கொண்டு இந்த உலகை ஒருவர் (குயவன் மாதிரி) செய்ய வேண்டும்.  


இதற்கு ஆரம்ப வாதம் என்று பெயர். இதைஅசத் காரிய வாதம் என்றும் சொல்லுவார்கள். 


சத் என்றால் பொருள். அசத் என்றால் பொருள் இல்லாதது. மண்ணுக்குள் பானை இல்லை. இல்லாத பானையை மண்ணில் இருந்து குயவனார் கொண்டு வருவதைப் போல இல்லாத உலகை, இறைவன் அணுக்களைக் கொண்டு செய்தான் என்று ஒரு வாதம் இருக்கிறது. 


இது சரியல்ல என்று மற்றொரு வாதம் இருக்கிறது. 


அது என்ன என்பதை நாளை பார்ப்போம்.

Monday, March 21, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்


உலகம் மூவகை பொருள்களால் ஆனது (அவன், அவள், அது) என்று பார்த்தோம். 


அந்த மூன்றும் மூன்று தொழில்களைச் செய்கின்றன என்று பார்த்தோம் (தோன்றுதல், இருந்தல், அழிதல்). 


இப்போது சூத்திரத்துக்குள் நுழைவோம். 


பாடல் 


அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_21.html


(pl click the above link to continue reading)



அவன் அவள் அது  = அவன், அவள், அது 


எனும் அவை  = என்ற அந்த மூன்றும் 


மூ வினைமையின் = பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற மூன்று வினைகளில் இருக்கின்றன 


தோற்றிய = எப்படி தோற்றிவிக்கப்பட்டதோ 


திதியே = நிலைத்து நின்று 


ஒடுங்கி = பின் மறைந்து 


மலத்து உளதாம் = முதிவர்டையாத காரணத்தால் 


அந்தம் = முடிவே 


 ஆதி = தொடக்கம் 


என்மனார் புலவர் = என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் 


நாம் பிறந்தோம். அதில் சந்தேகம் இல்லை. 


நாமே பிறந்தோமா அல்லது ஒரு பெற்றோர் மூலம் பிறந்தோமா? 


ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறக்கிறோம். எதுவும் தானே தோன்றி விட முடியாது. 


ஒன்று தோன்றுகிறது என்றால், அது தோன்ற மற்றொன்று வேண்டும். 


இந்த உலகம் தோன்றி இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். இந்த உலகம் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ள முடியாது. 


"தோற்றிய திதியே" என்கிறது சிவ ஞான போதம். 


தோன்றிய அல்ல, தோற்றிய. 


இது பெரிய தத்துவ சிக்கல். 


ஒரு பானை இருக்கிறது என்றால், அதை செய்த குயவன் இருக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்கிறோம். 


பானை என்றால் குயவன், குயவன் என்றால் அவனுடைய பெற்றோர், ப் பின் அவர்களின் பெற்றோர் என்று போய்க் கொண்டே இருக்கும். 


எல்லாவற்றிற்கும் ஒரு மூல காரணம் இருக்க வேண்டுமே என்கிறார்.


அது தான் கடவுள் என்கிறது நம் பக்தி இலக்கியங்கள். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு கர்த்தா வேண்டும் என்றால், இறைவனைப் படைத்தவர் யார் என்ற கேள்வி வரும். 


அது வந்து, அப்படி அல்ல...இறைவன் தானே தோன்றினான் என்றால் பின் உலகமும் ஏன் தானே தோன்றி இருக்க முடியாது என்ற கேள்வி வரும். 


இந்தவாதத்திற்கு முடிவு இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சரி, தோற்றிவித்தவன் ஒருவன் வேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்.


எதில் இருந்து தோற்றி வைத்தான்? 


பானை செய்ய குயவன் வேண்டும். சரி. மண்ணும் வேண்டுமே. 


இந்த உலகை தோற்றுவிக்க மூலப் பொருள் வேண்டுமே (raw material) 


ஒன்றும் இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்ற முடியாது. 


எனவே எதில் இருந்தோ இவை தோன்றி இருக்கின்றன.


சரி, அதையும் ஏற்றுக் கொள்வோம். 


இறந்த பின், இவை எங்கே போகின்றன? எங்காவது போக வேண்டுமே. 


உள்ளது மறையாது, இல்லாதது தோன்றாது என்ற விதிப் படி இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து தொடங்கி ஏதோ ஒன்றில் முடிகிறது. 


இந்த தோற்றம், இருத்தல், மறைதல் என்ற மூன்றையும் செய்பவர் யார் என்ற கேள்வி வருகிறது அல்லவா?  


"அந்தம் ஆதி என்மனார் புலவர்"


எது முடிவோ, அதுவே தொடக்கம் என்று புலவர்கள் கூறுவார்கள் என்கிறது சிவ ஞான போதம். 


அது என்ன அர்த்தம்?


உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் கூறுவது என்ன என்றால் "அழிக்கும் கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம்" என்று கூறுகிறார்கள்.


அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சூத்திரம் என்ன சொல்கிறது 


"அந்தம் ஆதி".


எது முடிவோ, அதுவே தொடக்கம். 


இது ஒரு சுழற்ச்சி. மாறி மாறி வரும். 


அப்படி இல்லாமல் தோன்றுவது போலவும், இருப்பது போலவும், இறப்பது போலவும் தனித் தனியாகத் தெரிகிறதே என்றால் அதன் காரணம் "மலதுளாதம்" என்கிறது சூத்திரம். 


மலம் என்றால் குற்றம், மயக்கம், குழப்பம். 


அப்படித் தோன்ற காரணம் நம் அறிவின் குறை. சரியாக பார்காத பிழை என்கிறது சூத்திரம். 


இது இன்னும் விரியும். 




Saturday, March 19, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும் 


நமது பக்தி இலக்கியங்கள் எல்லாம் தோற்றம், இருத்தல், மறைதல் என்பது பற்றி பேசுகின்றன. 


பிரம்மா படைப்பு கடவுள், விஷ்ணு காக்கும் கடவுள், உருத்திரன் அழிக்கும் கடவுள் என்று பேசுகின்றன. 


இவை எல்லாம் ஒருவித மயக்கமே.


தோற்றமும், அழிவும், இருத்தலும் வேறு வேறு அல்ல. 


ஒரு பானை செய்கிறோம் என்றால் களிமண் அழியும், பானை உண்டாகும். களிமண்ணே இல்லாமல் பானை உருவாக்க முடியுமா?


தங்கத்தை உருக்கி, நகை செய்கிறோம்.. கட்டியாக இருந்த தங்கம் அழிந்து, ஆபரணமாக உள்ள தங்கம் வெளிப்படுகிறது. இதில் தோற்றம் என்ன, அழிவு என்ன. 


ஒரு அழிவில் ஒரு தோற்றம் உண்டாகிறது. ஒரே சமயத்தில். இன்று அழிவு ஒரு வாரம் கழித்து தோற்றம் என்று இல்லை. அழிவும் தோற்றமும் ஒரு செயல்தான்.


விதை அழிகிறது, செடி முளைக்கிறது. இன்று விதை அழிந்து அடுத்த மாதம் செடி முளைக்கும் என்று அல்ல. 


தோற்றம் தான் அழிவு. அழிவுதான் தோற்றம். ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. 


இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_68.html


(pl click the above link to continue reading)


ஆக்கம், காத்தல், அழிதல் என்பது முத்தொழில் அல்ல. அது ஒரே தொழில்தான். 


ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கும். வட்டத்தின் தொடக்கம் எது, முடிவு எது?  தொடங்கிய இடம் தான் முடியும் இடமும். முடியும் இடம் தான் தொடக்கமும். 


அடியும் முடியும் தெரிய முடியாது. சுத்தி சுத்தி வர வேண்டியது தான். 


மும்மூர்த்திகள் என்று சொல்வது ஒரு வசதிக்குத் தான். எல்லாம் ஒரு மூர்த்தி தான். இருப்பது ஒரு வேலைதான். 


நகை செய்யும் ஆசாரி தான் தங்கத்தையும் அழிக்கிறார். 


பெரிய மரத் துண்டு கிடக்கிறது. அதை வெட்டி, நறுக்கி, இழைத்து ஒரு மேஜை செய்கிறார் ஒரு தச்சர்.


மரத்தை வெட்டியது ஒருவர், மேஜையை செய்தவர் இன்னொருவரா? 


நான் உணவு உண்கிறோம். வளர்கிறோம். கல்யாணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். மறைந்து போகிறோம். நம்மை புதைத்து விடுகிறார்கள். நம் உடல் மக்கி, உரமாகி செடி கொடி மரமாகி, உணவாகிறது. 


இது ஒரு சுழற்ச்சி. அவ்வளவுதான். 


இதைத் தான் அறிவியல் Law of conservation of Mass என்கிறது. ஒரு பொருளை உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும். அவ்வளவுதான். 


தோன்றுகிறது, இருக்கிறது, அழிகிறது என்று சொல்லுவதெல்லாம ஒரு மயக்கமே. 


மேஜை செய்யும் தச்சரை மரத்தை அழிப்பவர் என்று சொல்லலாமா? சொல்லலாம். அவர் தான் அழித்தார். 


தோட்டக்காரரை விதை அழிப்பவர் என்று சொல்லலாமா? விதையை அப்படியே வைத்துக் கொண்டு தோட்டம் போட முடியாது. விதை அழிய வேண்டும். 


எனவே, இந்த தோற்றம், இருத்தல், அழிவு என்பதெல்லாம் ஒரே செயலின் தொடர் வினைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். 




சரி, இதெல்லாம் எதுக்கு? சிவ ஞான போதம் எங்கே என்று கேட்கிறீர்களா?


வருகிறது. இது புரிந்தால் தான் சூத்திரம் புரியும். 


இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு சூத்திரத்துக்குள் நுழைவோம். 


சரியா?



Friday, March 18, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - உலகம் - பொருளும் செயலும்

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - உலகம் - பொருளும் செயலும் 


எந்த அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி என்றாலும் அது எடுத்துக் கொண்ட பொருளின் அடிப்படை என்ன என்று ஆராயும். 


உதாரணமாக,  இயற்பியல் (physics) என்ற அறிவியல் பகுதி பொருள்களின் செயல்பாடுகளைப் பற்றி ஆராயும் போது, இந்த உலகில் எத்தனையோ பொருள்கள் இருந்தாலும், அவை எல்லாம் அணு என்ற ஒன்றால் ஆனது என்று கண்டு சொன்னது. அணுவைப் புரிந்து கொண்டால் இந்த உலகைப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொருளாக ஆராய வேண்டியது இல்லை. அணுவை ஆராய்ந்தால் போதும். அதனுள் எல்லாம் அடக்கம். அதன் எல்லைகள் மேலும் விரிந்து அணு அல்ல அடிப்படை, ப்ரோட்டான், நியுட்ரான், எலெக்ட்ரான் என்ற நுண்ணிய துகள்கள்தான் அடிப்படை என்று ஆனது. பின் மேலும் விரிந்து  அடிப்படை துகள்கள் (fundamental particles) என்று போகிறது.  எது மூல காரணமோ அதைப் பிடித்து விட்டால், எல்லாம் புரிந்து விடும். 


உயிரியல் என்று சொல்லப்படும் அறிவியல் பிரிவு, உலகில் எத்தனையோ ஜீவ இராசிகள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை செல் (cell) என்று கண்டு தெளிந்தது. செல் பற்றி தெரிந்து கொண்டால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், தாவரங்களையும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை. 



உலகில் எத்தனையோ விதமான சக்திகள் இருந்தாலும், எல்லாம் அடிப்படையில் நான்கே நான்கு சக்திகள் தான். 


புவி ஈர்ப்பு விசை (gravitational force)


மின் காந்த விசை (electro magnetic force)


உயர் அணு விசை  (strong nuclear force)


தாழ் அணு விசை (weak nuclear force)


இந்த நான்கு விசைகளைத் தாண்டி இன்னொரு சக்தி கிடையாது. 


இப்படி ஒவ்வொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தான் எடுத்துக் கொண்ட இயலின் அடிப்படை என்ன என்று ஐந்து கொள்ள முற்படுகிறது. 



இப்போது சிவஞான போததிற்குள் வருவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_18.html

(pl click the above link to continue reading)


இந்த உலகம் எதனால் ஆனது என்ற கேள்விக்கு விடை காண முயல்கிறது சிவஞான போதம். 


இந்த உலகம் மூன்றே மூன்றால் ஆனது. அதற்கு வெளியில் எதுவும் இல்லை என்று முதலில் உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கி விடுகிறது. 



அந்த மூன்று சொற்கள் 


"அவன், அவள், அது"


இதற்கு வெளியில் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? எல்லாமே இந்த மூன்றனுள் அடக்கம். 


சரி, இந்த மூன்றும் எவ்வளவோ வேலை செய்கின்றன. என்னென்ன வேலைக்கள் செய்கின்றன? எத்தனை விதமான வேலைகள் இருக்கின்றன என்று ஆராய முற்பட்ட சிவஞான போதம் சொல்கிறது, அனைத்து உயிர்களும் மூன்றே மூன்று தொழிலைத் தான் செய்கின்றன. 


அந்த மூன்று தொழில்கள் 


"பிறத்தல், இருத்தல், இறத்தல் "


இதுவன்றி வேறு தொழில் இல்லை. 


மூன்று பொருள்கள், மூன்று செயல்கள்.


சரிதானே? 


இது புரிந்துவிட்டால், அனுமான பிரமாணம் கொண்டு மற்றவற்றை நிரூபிக்கலாம். 


இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய நிரூபணம் செய்ய முடியும் என்று நினைப்போம். 


மேலும் சிந்திப்போம். 





Wednesday, March 16, 2022

சிவ ஞான போதம் - நூல் அறிமுகம்

 சிவ ஞான போதம் - நூல் அறிமுகம் 


சைவ சமயத்தில் சாத்திரம் தந்த நால்வர், தோத்திரம் தந்த நால்வர் என்று நான்கு நான்கும் எட்டு பெரியவர்களை குறிப்பிடுவார்கள். 


தோத்திரம் தந்த நால்வர்கள் - அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர். 


சாத்திரம் தந்த நால்வர்கள் - மெய்கண்டத் தேவர், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார்.


இவர்களுள் மெய்கண்ட தேவர் அருளிய நூல் சிவ ஞான போதம். 


சிவஞான போதம் என்ற இந்த நூல் இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்களை உடையது.


இருப்பது    என்னவோ பன்னிரெண்டே சூத்திரங்கள். அதற்கு இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், இயலுக்கு மூன்று சூத்திரம் என்று பன்னிரண்டு சூத்திரங்கள். 


பொது அதிகாரம்

உண்மை அதிகாரம் 


என்று அதிகாரங்கள் உண்டு. 


பொது அதிகாரத்தில், பிரமாண இயல், இலக்கண இயல் என்று இரண்டு இயல்கள். 


உண்மை அதிகாரத்தில், சாதனை இயல், பயன் இயல் என்று இரண்டு இயல்கள் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_16.html


(click the above link to continue reading)


எதை  சொன்னாலும் அதற்கு ஒரு சான்று வேண்டும் அல்லவா? அது சரியா, தவறா என்று நிரூபணம் செய்ய வேண்டும் அல்லவா? சும்மா வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டுப் போக முடியுமா? நிரூபணம் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். 


இப்போதெல்லாம் அப்படி ஆகி விட்டது. கேட்டால், "அதெல்லாம் நம்பிக்கை பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது. நம்ப வேண்டும்" என்கிறார்கள். எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, "எல்லாம் ஒரு நம்பிக்கைதான்" என்று சொல்லி விட்டு நழுவி விட முடியாது. 


பிரமாணம் என்றால் நிறுவுதல். ஒரு எடுகோளை (hypothesis ) எடுத்துக் கொண்டு அதை நிறுவுவது. பொதுவாக பத்து பிரமாணங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அந்தப் பத்தையும் சுருக்கி மூன்று பிரமாணத்துக்குள் அடக்கி விடுகிறார்கள் நம் தர்க்க இயலார். 


காட்சிப் பிரமாணம்,


அனுமானப் பிரமாணம் 


ஆகமப் பிரமாணம் 


என்று மூன்று பிரமாணங்கள் உண்டு. 


ஒன்றை உண்மை என்று சொல்லுவதற்கு இவை பயன் படுகின்றன.


"அவன் அடித்ததை நான் கண்ணால் பார்த்தேன்" என்றால் அது காட்சிப் பிரமாணம். 


காட்சி என்றால் பார்ப்பது மட்டும் அல்ல. புலன்களால் அறியும் எல்லாமே காட்சிப் பிரமாணம் தான்.


பக்கத்து வீட்டில் நெய் விட்டு பொங்கல் செய்கிறார்கள். வாசம் இங்கே மூக்கை துளைக்கிறது. ம்ம்...நல்ல பொங்கல் வாசம் வருது" என்கிறோம். நேரில் பார்க்கவில்லை. வாசத்தை வைத்து "கண்டு" பிடிக்கிறோம். 


வெளியே ஒரு வண்டிச் சத்தம் கேட்கிறது. "...அப்பா வந்தாச்சு" என்று பிள்ளை ஓடுகிறது. அப்பா வந்ததை பார்க்கவில்லை. ஸ்கூட்டர் சப்தத்தை கொண்டு "கண்டு" பிடிக்கிறது. 


பிள்ளை அப்பாவின் முதுகில் ஏறிக் கொண்டு, கண்ணை மறைத்துக் கொண்டு, "யார் சொல்லு பார்ப்போம்" என்கிறது. தொடு உணர்ச்சியில் கண்டு கொள்ள முடிகிறது. 


எல்லாவற்றையும் புலன்களால் அரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 


புகை இருந்தால் தீ இருக்கும் என்று அனுமானித்து அறியலாம். 


காலையில் எழுந்து பார்க்கிறோம். சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. "இராத்திரி மழை பொழிந்திருக்கிறது" என்று அனுமானிக்கிறோம். மழை பெய்ததை பார்க்கவில்லை. இருந்தும் மழை பெய்த உண்மையை அறிந்து கொள்கிறோம். எப்படி? அனுமானம். 


இதற்கு அனுமான பிரமாணம் என்று பெயர். 


சிவ ஞான போதம் என்ற இந்த நூல், பொது அதிகாரத்தில் வரும் முதல் இயலான அனுமான இயலில், உண்மையை அனுமான பிரமாணம் கொண்டு நிறுவுகிறது. 


அப்படி என்ன உண்மைகளை அது நிறுவுகிறது என்பதை வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம். 


(புரிந்து கொள்ள எளிமையாக இருக்கிறதா? புரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமா?)



Sunday, March 13, 2022

சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம்

 சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம் 


சிவஞான போதம் என்ற நூல் மிக மிக சிறிய நூல். 


பன்னிரெண்டே சூத்திரங்கள் கொண்ட நூல். 


எழுதியவர் மெய்கண்ட தேவர். 


அந்த பன்னிரண்டு சூத்திரத்துக்குள் சைவ சமயத்தின் அத்தனை சாரத்தையும் அடக்கி விட்டார். 


படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். இவ்வளவு இருக்கா என்ற பிரமிப்பு வரும். 


இந்த நூலுக்கு எவ்வளவோ பேர் உரைகள், விரிவுரைகள், பொழிப்புரைகள் என்று எழுதி இருக்கிறார்கள். எழுதி முடியவில்லை. அவ்வளவு ஆழம் கொண்ட நூல். .


கடல் போல் விரிந்த சைவ சமய கோட்பாடுகளை பன்னிரண்டு சூத்திரத்துக்குள் அடக்குவது என்பது முடிகிற காரியமா? 



https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_0.html


(click the above link to continue reading)


நான் வாசித்தவரை, எனக்குத் தெரிதவரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


எனக்கு சைவ சமயம் பற்றி ஒன்றும் தெரியாது.  நான் செய்வது எல்லாம் இருக்கும் உரைகளை தொகுத்து, எளிமைப் படுத்துவது மட்டும் தான். 


ஆன்மீகத்துக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்மந்தம் கிடையாது. 


இது பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின், சைவ சமய பெரியவர் யாரையாவது அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நூலை எளிமையாக அறிமுகப் படுத்துவது ஒன்றுமட்டும் தான் என் வேலை. 


மெய்கண்டர் பற்றி பல சுவையான தகல்வகள் உள்ளன. அவற்றை நடுநடுவே பார்ப்போம்.


இனி, நேரே நூலுக்குள் நுழைவோம். 


முதல் சூத்திரம்.....





Thursday, May 21, 2020

சிவ ஞான போதம் - உலகின் தன்மை

சிவ ஞான போதம் - உலகின் தன்மை 


மெய்கண்ட தேவர் அருளியது சிவஞான போதம் என்ற நூல். பன்னிரண்டே சூத்திரங்கள். சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் உள்ளடக்கியது.

விளையாட்டாக சொல்லுவார்கள், அது சிவஞான போதம் அல்ல சிவஞான பூதம் என்று.

சிந்திக்க சிந்திக்க விரிந்து கொண்டே போகும். இந்த நூலுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.

சூத்திரம் என்னவோ மூன்று வரிகள் தான். உரைகள் விரிந்து கொண்டே போகும். உரைகளை படிப்பதற்கு முன்னால், சைவ சித்தாந்தத்தில் கொஞ்சம் பரிச்சயம் வேண்டும். இல்லை என்றால் தலையும் புரியாது காலும் புரியாது.

என்னால் முடிந்தவரை எளிய தமிழில் தர முயற்சிக்கிறேன்.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் மூன்றே மூன்று தொகுப்பில் அடக்கி விடலாம்.

மக்கள், கார், பஸ், மின்சாரம், கணனி, வீடு, மாடு, புகைவண்டி, பணம், தாவரங்கள், மலை, மேகம், காடு, கடல், கரை, நண்பன், மனைவி, உணவு..இப்படி உலகில் என்னென்ன இருக்கிறது இவை அனைத்தும் மூன்று தொகுதியில் அடங்கிவிடும். அதற்கு வெளியே ஒன்றும் இல்லை.

அவை என்ன மூன்று தொகுதி? எப்படி இந்த பிரபஞ்சம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்க முடியும்?

முடியும். அந்த சொற்கள்.

"அவன், அவள், அது"

அவ்வளவுதான் இந்த உலகம். எதை எடுத்தாலும் இந்த மூன்றுக்குள் இருந்தாக வேண்டும்.

சரி.  உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கியாகி விட்டது.

அதனால் என்ன இப்ப?

அடுத்தது, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

எந்த ஒன்றாக இருந்தாலும், அவற்றிற்கு மொத்தம் மூன்று வேலை தான் உண்டு.

அது கொரான வைரஸ் ஆக இருந்தாலும் சரி, சூரியன், சந்திரன், விண்மீன், நம்ம வீட்டு  டிவி, குளிர்சாதனப் பெட்டி , அடுப்பு, காய் கறி என்று எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் மூன்றே தொழில் தான் உண்டு.

அவை

தோன்றுதல், நிலைத்தல் , அழிதல்

உலகில் உள்ள எந்த ஒன்றும் இந்த மூன்று நிலைகளை அடைந்தே தீர வேண்டும்.

நான் தோன்றுகிறேன், இருக்கிறேன் ஆனால் அழிய விரும்பவில்லை என்று  யாரும், எதுவும் கூற முடியாது.   தோன்றியது, இருந்தே ஆக வேண்டும். இருந்தது அழிந்தே  ஆக வேண்டும். யாராலும் மாற்ற முடியாத விதி.

நான் பிறக்க மாட்டேன், ஆனால் இறக்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.

சரி, இறக்கிறேன், ஆனால் பிறக்க மாட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது.

தோன்றிய ஒன்று அழிந்தே ஆக வேண்டும்.

பிறப்பு இருந்தால் இறப்பு இருந்தே ஆக வேண்டும்.

இறப்பு வேண்டாம் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

இறைவன் பிறப்பது இல்லை. எனவே அவன் இறப்பதும் இல்லை.

செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்பார் அருணகிரி.

உயிர்களும், பொருள்களும் தோன்றி, இருந்து பின் மறைகின்றன.

ஒரு பொருள் தன்னைத்தானே தோற்றிக் கொள்ள முடியுமா?

என் பிள்ளைகள் தோன்ற நான்  ஒரு காரணம்.

என்னை நானே தோற்றிக் கொள்ள முடியுமா?

நான் தோன்ற என் பெற்றோர் வேண்டும் அல்லவா?

நான் இருக்கிறேன் என்றால், எனக்கு ஒரு பெற்றோர் இருக்க வேண்டும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

என்ன இப்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறதா?

யோசித்துக் கொண்டு இருங்கள்.  இது எல்லாம் முதல் சூத்திரத்துக்கு விரிவுரை.

மேலும் சிந்திக்க இருக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_72.html