Showing posts with label thiruvaanaikka akilaanda naayaki. Show all posts
Showing posts with label thiruvaanaikka akilaanda naayaki. Show all posts

Tuesday, March 19, 2019

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான் 


நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம். பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.

"நாம் தண்ணீரில் விழுந்து விட்டால், நீச்சல் தெரியாவிட்டால், மூன்று முறை மேலே வருவோம், அதற்குள் எப்படியாவது கரை ஏற முடியவில்லை என்றால், மூழ்கிவிடுவோம். நீர் மூன்று முறை தான் பிழை பொறுக்கும் என்று சொல்லுவார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் பொறுப்பாள்.

அகிலாண்ட நாயகியே, அளவற்ற பிழைகள் பொறுக்கும் உன்னை உடம்பில் பாதியில் வைத்தான். மூன்றே பிழைகள் பொறுக்கும் கங்கையை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறான். அவனை பித்தன் என்று சொல்லியது ஒன்றும் பிழை இல்லை "

என்று பாடுகிறார்.

தேன் சிந்தும் அந்தப் பாடல்


பாடல்


அளவறு பிழைகள் பொறுத்திடும் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன்; அதனால்
பிளவியல் மதியம் சூடிய பெருமான்
‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்!
களமர் மொய் கழனி சூழ் திரு ஆனைக்கா
அகிலாண்ட நாயகியே!

பொருள்

அளவறு = அளவற்ற

பிழைகள் = தவறுகளை

பொறுத்திடும் நின்னை = பொறுத்துக் கொள்ளும் உன்னை (உமா தேவி)

அணி = அழகிய

உருப் = உருவத்தில்

 பாதியில் வைத்துத் = பாதியில் வைத்து

தளர் பிழை = தளரும் பிழைகள்

மூன்றே பொறுப்பவள் தன்னைச் = மூன்று முறை மட்டும் பொறுப்பவளை

சடைமுடி வைத்தனன்;  = சடை முடியின் மேல் வைத்துக் கொள்கிறான்

அதனால் = அதனால்

பிளவியல் = பிளந்தது போல உள்ள

மதியம் சூடிய பெருமான் = நிலவை சூடிய பெருமான்

‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்! = பித்தன் என்று ஒரு பெயரைப் பெற்றான்

களமர் = களத்தில் வாழ்பவர்கள் (விவசாயிகள்)

மொய் = மொய்க்கும்

கழனி சூழ் = கழனிகள் சூழ்ந்திருக்கும்

திரு ஆனைக்கா = திருவானைக்காவில் இருக்கும்

அகிலாண்ட நாயகியே! = அகிலாண்ட நாயகியே


பிழை பொறுப்பது என்பது நல்ல குணம். அகிலாண்ட நாயகி அளவற்ற பிழைகளை பொறுப்பாளாம்.

நாம், நமக்கு வேண்டியவர்கள் செய்த சிறு பிழையையாவது பொறுப்போமே.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_19.html