Showing posts with label yaappilakkanam. Show all posts
Showing posts with label yaappilakkanam. Show all posts

Monday, May 30, 2022

யாப்பிலக்கணம் - எதுகை, மோனை

 யாப்பிலக்கணம் - எதுகை, மோனை 


ஒரு புலவருக்கு எது கை தவறினாலும் எதுகை தவறக் கூடாது என்பார்கள். 


எதுகை என்றால் என்ன?


ஒரு பாடலில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வந்தால் அது எதுகை. 


சில உதாரணங்கள் பார்ப்போம்:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


என்ற அபிராமி அந்தாதியில் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_30.html


(pl click the above link to continue  reading)


உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற 


என்று ஒவ்வொரு அடியிலும் முதல் சீரில் இரண்டாவது எழுத்து 'தி' என்று வருகிறது அல்லவா, அது எதுகை. 


ஒவ்வொரு அடியிலும் அது வருவதால், அது 'அடி எதுகை' எனப்படும். 


ஒவ்வொரு சீரிலும் வந்தால் அது சீர் எதுகை எனப்படும். அதில் பல வகை இருக்கிறது. 


முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்

முதல் சீர் ம் மற்றும் மூன்றாம் சீர்

முதல் மற்றும் நான்கு 


என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் இருக்கிறது. 


ஒரு பாடலில் ஒவ்வொரு சீரிலும் எதுகை வந்தால் அது முற்றெதுகை எனப்படும். 


மாறாக, இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல், மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தால் அதற்கு மோனை என்று பெயர். அது முதல் எழுத்தாக இருக்கலாம், மூன்றாம் எழுத்தாக இருக்கலாம்...எந்த எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


உதாரணமாக 


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


இதில் கற்க, கசடற, கற்பவை, கற்றபின் என்ற சீர்களில் 'க' என்ற முதல் எழுத்து ஒன்றி வருகிறது. எனவே அது மோனை. 


எதுகையைப் போலவே இதிலும் அடி மோனை, சீர் மோனை என்று உண்டு. 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


என்ற பாடலில் து என்ற முதல் எழுத்து ஒன்றி வருவதால் அது மோனை, 'ப்' என்ற இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதால் அது எதுகை. 


இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்து அளவோடு இருக்க வேண்டும். 


உதாரணமாக


ஆட்டம் 

பாட்டம் 


என்று வந்தால் அது எதுகை. 


ஆட்டம்

பட்டம்

என்று வந்தால் அது எதுகை இல்லை. 


ஒலியின் இனிமை குறைகிறது அல்லவா?


கூட்டம்,  வாட்டம் - எதுகை

கூட்டம், வட்டம் - எதுகை இல்லை 



எதுகை மோனை வரும் போது பாடலுக்கு ஒரு இசை நயம் வரும். கீழே உள்ள பாடலை படித்துப் பாருங்கள். ஒரு தாள இலயம் தெரிகிறது அல்லவா?




பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அஞ்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.



ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும் என்று இல்லை. 


ஒரு எழுத்துக்கு இன எழுத்தும் எதுகை மோனையாக வரலாம். 


அது என்ன இன எழுத்து என்று அடுத்த பதிவில் காணலாம். 


அதுவரை, நீங்கள் இரசித்த எதுகை மோனை உள்ள பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரசியமாக இருக்கும். 


சேர்ந்து படிப்போமே....அதுவும் ஒரு சுகம்தான். 


Monday, May 23, 2022

யாப்பிலக்கணம் - ஒரு அறிமுகம்

யாப்பிலக்கணம் - ஒரு அறிமுகம் 


கடந்த ஐந்து வருடங்களாக இந்த பதிவை எழுதி வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் இருந்து எனக்குப் பிடித்த பாடல்களை பகிர்ந்து வருகிறேன். 


பாடல்கள் என்று சொல்லும் போது, அந்தப் பாடல்களுக்கு பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது. 


ஐயோ, இலக்கணமா என்று பயப்படத் தேவையில்லை. தமிழ் இலக்கணம் என்பது மிக மிக சுகமானது, சுவையானது, சுவாரசியமானது. 


அட,இது இப்படியா என்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரவழைக்கும்.


நாம் இலக்கணத்தை சூத்திரம், நூற்பா என்று அணுகாமல், வேறு விதமாக அணுகுவோம். 


தமிழ் பாடல்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?  பாடல்கள் படிக்க சுகமாக இருக்கின்றன. ஆனால், மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. எப்படி அதை மனதில் நிறுத்துவது?


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_23.html


(pl click the above link to continue reading)


உதாரணமாக 


சொற்றுணை வேதியன்   சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி   பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர்   கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது   நமச்சி வாயவே. 


என்ற தேவார பாடலை எப்படி மனதில் இருத்திக் கொள்வது?


எப்படி என்று பார்ப்போம். 


நான்கு வரிகளிலும் உள்ள முதல் வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.


சொற்றுணை

பொற்றுணைத்

கற்றுணைப் 

நற்றுணை


இரண்டாவது எழுத்து 'ற்' என்று எல்லா வரியிலும் வரும். முதல் வரியில் முதல் சொல் தெரிந்தால் போதும், மற்ற வரிகளில் உள்ள முதல் சொல் எப்படி இருக்கும் என்று தெரியும். 


அது மட்டும் அல்ல, எந்த வரியில் முதல் சொல் தெரிந்தாலும் போதும், மற்ற வரிகளின் முதல் சொல் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 


அது மட்டும் போதுமா? அதை வைத்துக் கொண்டு எப்படி ஞாபகம் வைக்க முடியும்?


ஒவ்வொரு வரியிலும் முதல் சொல்லின் முதல் எழுத்தையும், மூன்றாம் எழுத்தின் முதல் எழுத்தையும் பாருங்கள் 


சொற்றுணை            -    சோதி 

பொற்றுணைத்            பொருந்தக் 

கற்றுணைப்            -     கடலிற் 

நற்றுணை                -     நமச்சி 

 

சொ - சோ 

பொ - பொ 

க - க 

ந - ந 


ஒத்து வருகிறதா?


சரி, இது மட்டும் போதுமா?


ஒவ்வொரு வரியையும் பாருங்கள். சரியாக நாலு வார்த்தைதான் இருக்கும்.  அதை சீர் என்று சொல்லுவார்கள். 


வரியை, அடி என்று சொல்லுவார்கள். 


நான்கு அடி, அடிக்கு நாலு சீர். 


இது ஒரு கட்டமைப்பு. 


இதில் மட்டும் தான் அப்படியா? எல்லா பாடல்களும் அப்படித்தான் இருக்குமா?


ஒரு பிரபந்த பாடலைப் பார்ப்போம். 


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.


ஒவ்வொரு அடியிலும், முதல் சீரின் இரண்டாவது எழுத்தைப் பாருங்கள் 


ஊர்

பார் 

கார்

ஆர் 


என்று வரும். 


முதல் சீரையும், மூன்றாவது சீரையும் பாருங்கள். அவற்றின் முதல் எழுத்துகள் என்ன?


ஊரில்லேன் - உறவு (ஊ, உ)

பாரில் - பற்றினேன் (பா, ப)

காரொளி - கண்ணனே (கா, க)

ஆரிடர் - அரங்கமா (ஆ, அ)


இங்கே ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள். ஒரு சின்ன மாற்றம். 


ஆனால், ஒரு அடியில் ஐந்து சீர் என்றால் எல்லா அடியிலும் ஐந்து சீர் இருக்க வேண்டும்.  ஒன்றில் ஐந்து, இன்னொன்றில் எட்டு, மூன்றாவது அடியில் மூணு சீர் என்றெல்லாம் இருக்காது. 


இப்படி ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது. 


இதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். 


யாக்குதல் என்றால் கட்டுதல். ஒரு பாடலை எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லும் இலக்கணம். 


இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர்? கை, கால், மூக்கு என்று வைத்து கட்டப்பட்டதால் இது யாக்கை. அப்படி கட்டப்பட்ட இந்த உடல் ஒரு நாள் சரிந்து விழும் என்பதால் சரீரம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு செய்யுளை எப்படி கட்டுவது? எதை எல்லாம் வைத்து கட்டுவது? 


இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். 


யாப்பிலக்கணம் தெரிந்து கொண்டால், கவிதையின் சுவை பன்மடங்கு கூடும். 


இசை ஞானம் எதுவும் இல்லாமலும் இசையை இரசிக்க முடியும். .


ஆனால், இராகம், தாளம், சுருதி, பாவம், சங்கதி, இலயம் என்று எல்லாம் தெரிந்தால் அதே இசையை நாம் இன்னும் பலமடங்கு இரசிக்க முடியும் அல்லவா?


கஷ்டம் இல்லமால் சுகமாக யாப்பிலக்கணம் படிப்போமா?